பொருளடக்கம் பக்கம் செல்க


கல்கியின் அலை ஒசை
இரண்டாம் பாகம் - 'புயல்'

kalkiyin2 alai Ocai
Part-I1 (puyal)

In tamil script, TSCII format

கல்கியின் அலை ஒசை
இரண்டாம் பாகம் - 'புயல்'

உள்ளுறை -அத்தியாயங்கள்
2.001 டில்லிப் பிரயாணம் மின்பதிப்பு
2.002 ரயில்வே சந்திப்பு மின்பதிப்பு
2.003 துயரத்தின் வித்து மின்பதிப்பு
2.004 சாலை முனையில் மின்பதிப்பு
2.005 ஹரிபுரா காங்கிரஸ் மின்பதிப்பு
2.006 பாதிக் கல்யாணம் மின்பதிப்பு
2.007 லலிதாவின் கடிதம் மின்பதிப்பு
2.008 சீதாவின் பதில் மின்பதிப்பு
2.009 மல்லிகை மாடம் மின்பதிப்பு
2.010 பகற் கனவுமின்பதிப்பு
2.011 தாஜ்மகால் மின்பதிப்பு
2.012 சரித்திர நிபுணர் மின்பதிப்பு
2.013 ரஜினிபூர் ஏரி மின்பதிப்பு
2.014 ரஜினிபூர் ஏரி மின்பதிப்பு
2.015 புனர் ஜென்மம் மின்பதிப்பு
2.016 தேவபட்டணம் தேர்தல் மின்பதிப்பு
2.017 "லலிதா! பயமாயிருக்கிறது....!" மின்பதிப்பு
2.018 "யார் அங்கே?" மின்பதிப்பு
2.019 "ஹலோ போலீஸ்!" மின்பதிப்பு
2.020 பாரம் நீங்கிற்று மின்பதிப்பு
2.021 ரஜினிபூர் பைத்தியக்காரி மின்பதிப்பு
2.022 கதவு திறந்தது! மின்பதிப்பு
2.023 தாரிணியின் கதை மின்பதிப்பு
2.024 நல்ல மாமியார் மின்பதிப்பு
2.025 "சுட்டு விடுவேன்!" மின்பதிப்பு
2.026 பேச்சு யுத்தம் மின்பதிப்பு
2.027 பிரயாணக் காரணம் மின்பதிப்பு
2.028 கடல் பொங்கிற்று மின்பதிப்பு

கல்கியின் அலை ஒசை
இரண்டாம் பாகம் - 'புயல்'

முதல் அத்தியாயம் :
டில்லிப் பிரயாணம்

சென்னையிலிருந்து புறப்பட்டு நாற்பத்தெட்டு மணி நேரத்துக்கு அதிகமானபடியினால், உட்கார்ந்து உட்கார்ந்து சலித்துப் போன பிரயாணிகளைச் சுமக்க முடியாமல் சுமந்து கொண்டும் பெருமூச்சு விட்டுப் புகையையும் கரித்தூளையும் கக்கிக் கொண்டும் சில சமயம் வீல் என்ற சத்தமிட்டு அலறிக் கொண்டும் கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் என்னும் பெயரினால் பிரசித்தி பெற்ற நீராவித் தொடர் வண்டி தண்டவாளத்தின் மீது நீள நெடுகச் சென்றது. டில்லி ஸ்டேஷன் வருவதற்கு இன்னும் ஒரு மணி நேரந்தான் இருந்தது என்றாலும், அந்த ஒரு மணியும் ஒரு யுகமாக மேற்படி ரயிலில் பிரயாணம் செய்தவர்களுக்குத் தோன்றியது. அவர்கள் எல்லாரிலும் அதிகமாக மனத்தில் அவசரமும் பரபரப்பும் கொண்டிருந்த சீதாவுக்கோ பாக்கியிருந்த அந்த ஒரு மணியும் ஒரு பிரம்ம யுகமாகத் தோன்றியது. மனிதர்களுக்கு ஒரு சதுர்யுகம் பிரம்மதேவருக்கு ஒரு பகல் என்று கணக்கு. அப்படியென்றால் பிரம்ம யுகம் எவ்வளவு நீண்டது என்பதை நேயர்கள் கற்பனை செய்து கொள்ளலாம். அந்தக் கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் ரயிலில் இரண்டாம் வகுப்பு வண்டி ஒன்றில் சீதா பிரயாணம் செய்தாள். சீதாவின் மாமியார் காமாட்சி அம்மாளும் அதே வண்டியில் பக்கத்தில் இருந்தாள்.

காமாட்சி அம்மாளின் மடியைச் சிம்மாதனமாகக் கொண்டு வீற்றிருந்த இன்னொரு ஸ்ரீமதி யார்? அந்த ஸ்ரீமதியிடம் காமாட்சி அம்மாள் ஏன் அவ்வளவு பயபக்தி கொண்டிருக்கிறாள்? அவள் தன்னுடைய தோளிலும் கன்னத்திலும் 'பளீர் பளீர்' என்று அடிப்பதை எதற்காகப் பொறுத்துக் கொண்டிருக்கிறாள்? அப்புறம் நடப்பது இன்னும் விசித்திரமாயிருக்குது. காமாட்சி அம்மாளின் மடியில் வீற்றிருந்த ஸ்ரீமதியைச் சீதா கோபமாகப் பார்த்துப் பயமுறுத்துவதாகத் தன் மூக்கில் விரலை வைத்துக்கொண்டு, "வஸந்தி! இதோ பார்! பாட்டியை அடிக்காதே! தெரியுமா!" என்று அதட்டுகிறாள். உடனே சீதாவுக்கும் அந்த ஸ்ரீமதி இரண்டு அடி கொடுக்கிறாள். மாமியார், மருமகள் இருவரும் பலமாகச் சிரிக்கிறார்கள்! "லயிலின் கயவைத் தற! கயவைத் தறக்காத்தா அப்பித்தான் அய்ப்பேன்!" என்று ஸ்ரீமதி வஸந்தி மழலை மொழி பேசியதும் நமக்கு ஒருவாறு விஷயம் புரிகிறது. ஸ்ரீமதி வஸந்திதேவி, காமாட்சி அம்மாளின் கண்ணுக்குக் கண்ணான செல்லப் பேத்தி. சௌந்தரராகவனும் சீதாவும் பெற்றெடுத்த சீமந்த புத்திரி. இப்போது அவளுடைய பிராயம் இரண்டு வருஷம் ஆறு மாதம்.

பாட்டியையும் அம்மாவையும் வஸந்தி மாற்றி மாற்றி அடித்ததற்குக் காரணம் என்னவென்பதை நேயர்கள் அவளுடைய மழலைப் பேச்சிலிருந்து ஊகித்திருப்பார்கள். ரயிலில் பலகணி வழியாக குழந்தை வெளியே எட்டிப் பார்க்கிறாள் என்பதற்காகக் காமாட்சியம்மாள் பலகணிக் கதவை மூடியிருந்தாள். மூடிய கதவைத் திறக்கவேண்டும் என்பது வஸந்தியின் கட்சி. இரண்டு பக்கமும் ஜன்னல் வழியாகப் பார்க்க முடியாவிட்டால் ரயிலில் பிரயாணம் செய்வதின் உபயோகம்தான் என்ன என்பது வஸந்தியின் கேள்வி. இதற்குத் தக்க பதில் சொல்ல முடியாத காரணத்தினால் காமாட்சி அம்மாள் சீக்கிரத்திலேயே ஜன்னல் கதவைத் திறக்கும்படி நேர்ந்தது. கதவைத் திறந்ததும் வஸந்தி தன் சின்னஞ்சிறு கையின் பட்டுப் போன்ற மிருதுவான ஆள்காட்டி விரலை வெளியிலே சுட்டிக்காட்டி, "அம்மா! அது என்ன? பாத்தி அது என்ன?" என்று கேட்டாள். "அது ஒரு பழைய காலத்துக் கோட்டை!" என்றாள் சீதா. "கோத்தைன்னா என்ன?" என்று வஸந்தி கேட்டாள். "கோட்டைன்னா கோட்டைதான்! உனக்கு என்னால் பதில் சொல்ல முடியாது. சூரியா மாமாதான் வரவேணும்" என்றாள் சீதா. "சூரியா மாமாவைக் கூப்பிது அம்மா!" "இப்போது கூப்பிட்டால் அவருக்குக் காது கேட்காது. ரயில் நின்ற பிறகு வருவார் கொஞ்ச நேரம் சும்மா இரு!" "லயிலு நின்ன அப்பதம் எதுக்கம்மா வரணும்? லயிலு ஓதறபோதே மாமா வந்தா என்ன?" "ரயிலு ஓடுகிற போது வந்தால் உன் தலையில் ஒரு குட்டு!?" என்று சீதா குழந்தையின் தலையிலே ஒரு செல்லக் குட்டு குட்டினாள். "போ, அம்மா?" என்று சொல்லிவிட்டு வஸந்தி மறுபடியும் வெளியே பார்க்க ஆரம்பித்தாள்.

வஸந்தியைப் போலவே வெளியே நோக்கிக் கொண்டிருந்த காமாட்சி அம்மாள், "அதோ ஒரு கோட்டை! அங்கே ஒரு கோட்டை! எங்கே பார்த்தாலும் ஒரே கோட்டையாயிருக்கிறதே சீதா! இதையெல்லாம் யார் கட்டியதோ?" என்றாள். "பல ராஜாக்கள் கட்டியதாயிருக்கும், அம்மா! சுமார் ஆயிரம் வருஷம் டில்லிதான் இந்தியாவின் தலைநகரமா இருந்தது. ஆக்ராவிற்கும் டில்லிக்கும் நடுவில் இப்படித்தான் எங்கே பார்த்தாலும் இடிந்த கோட்டையாயிருக்கும்" என்றாள் சீதா. "நம்முடைய தென் தேசத்திலே யாத்திரை போனால் இரண்டு பக்கமும் ஒரே கோவிலாயிருக்கும். ஐந்து நிமிஷத்துக்கு ஒரு கோபுரம் தெரியும். சிதம்பரத்திலிருந்து திருச்சிராப்பள்ளி போகிற வரைக்கும் ஒரு தடவை நான் ஐந்நூறு கோபுரத்திற்கு மேலே எண்ணினேன். இந்தப் பக்கத்தில் கோயில் என்ற பேச்சே கிடையாது போலிருக்கிறது!" "இந்த வழியிலே மதுரை - பிருந்தாவனத்திலே மட்டும் கோவில் இருக்கிறது, அம்மா! பிருந்தாவனத்தில் இருக்கிற கோவில் நம்ம பக்கத்திலேயிருந்து வைஷ்ணவாள் வந்து கட்டியதாம். மற்றபடி இந்த வழியிலே கோயில் கிடையாதுதான். காசிப் பக்கம் போனால் ஏராளமான கோயில் இருக்குமாம்." "டில்லிப் பட்டணத்தில் கூடக் கோவில் கிடையாதா சீதா!"

"கிடையாது அம்மா! அவ்வளவு பெரிய பட்டணத்திலே ஒரு கோவிலைக் கூட நான் பார்க்கவில்லை; ரொம்ப காலமாய் டில்லியில் துருக்க ராஜ்யந்தான் நடந்தது. அதனாலே டில்லியில் எங்கே பார்த்தாலும் மசூதிகளாயிருக்கும். மசூதி இல்லாவிட்டால் துருக்க ராஜாவைப் புதைத்த சமாதி இருக்கும். நான் பார்த்த வரையில் டில்லியில் ஒரு கோவில்கூட என் கண்ணுக்குத் தட்டுப் படவில்லை. யாரோ பிர்லா என்கிற பணக்காரச் சீமான் புதிதாகக் கோயில் கட்டுகிறார் என்று சொன்னார்கள்." "தாஜ்மகால், தாஜ்மகால் என்று ஜபம் பண்ணுகிறாயே அதுவும் யாரோ ஒரு ராஜாவைப் புதைத்த இடந்தானோ?" உண்மையில் சீதாவின் மனம் அப்போது 'தாஜ்மகால்' ஜபம் செய்யவில்லை. ரயில் ஓடும் சமயம் சக்கரங்கள் உருண்டு உருண்டு போகும்போது அந்தச் சத்தத்திலிருந்து ஒருவித சுருதியும் தாளமும் ஏற்படுகின்றன அல்லவா? அந்தச் சுருதிக்கும் தாளத்துக்கும் இசையச் சீதாவின் மனது "டில்லி ஜங்ஷன்" "சௌந்தரராகவன்" என்றுதான் ஜபம் செய்து கொண்டிருந்தது. டில்லி ஜங்ஷன் பிளாட்பாரத்தில் தங்களுடைய வரவை எதிர்ப்பார்த்துக் கொண்டு தன் கணவன் காத்திருப்பான் என்பது அவளுக்குத் தெரிந்திருந்தது. நீண்ட காலமாகப் பிரிந்திருந்த கணவனைச் சந்திப்பதில் அவளுக்கு இருந்த அவசரத்தினாலே தான் ரயில் வெகு மெதுவாகப் போவதாய் அவளுக்குத் தோன்றியது.

இவ்விதம் மனம் சௌந்தரராகவனிடம் லயித்திருந்தாலும் மாமியாரின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டிய கடமையைக் கருதியே பதில் சொல்லி வந்தாள். "இல்லை, அம்மா! தாஜ்மகால் ராஜாவைப் புதைத்த இடமல்ல; ராணியைப் புதைத்த இடம். ஷாஜஹான் என்னும் டில்லி பாதுஷாவுக்கு மும்தாஜ்மகால் என்று ராணி இருந்தாள். அவளிடம் பாதுஷாவுக்கு ரொம்பஆசை. அவள் இறந்த பின் ஷாஜஹான் வேறு கலியாணம் செய்து கொள்ளவில்லை. அவளைப் புதைத்த இடத்தில் தாஜ்மகால் என்னும் அற்புதமான கட்டிடத்தைக் கட்டினான். முழுதும் வெள்ளைப் பளிங்குக் கல்லால் கட்டி அதில் பலவர்ணக் கற்களினால் சித்திரப் பூ வேலைகள் செய்வித்தான். உலகத்திலேயே அவ்வளவு அழகான கட்டிடம் வேறு கிடையவே கிடையாதாம்!" "நீ பார்க்கவில்லையா, சீதா!" "இன்னும் பார்க்கவில்லை முன்னே நான் இங்கே வந்திருந்தபோது முழுசாக மூன்று மாசம் கூட இருக்கவில்லையே? 'தாஜ்மகாலுக்குப் போகலாம், போகலாம்' என்று உங்கள் பிள்ளை சொல்லிக் கொண்டிருந்தார். அதற்குள் சீமைக்குப் போக உத்தரவு வந்து விட்டது!" "அதனால் என்ன சீதா? இனிமேல் டில்லியில் தானே இருக்கப் போகிறீர்கள்? எப்போது இஷ்டமோ, அப்போது போய்ப் பாருங்களேன்!" "அதென்ன 'போய்ப் பாருங்களேன்' என்று சொல்கிறீர்கள்? நீங்களுந்தான் எங்களோடு வரவேண்டும் எல்லாருமாய்ப் போய்ப் பார்த்தால் போகிறது!"

"எனக்கு என்னத்துக்கடி அம்மா, இதெல்லாம்? ஏதாவது கோவில் குளத்துக்குப் போனாலும் பிரயோஜனம் உண்டு. தாஜ்மகாலும் கீஜ்மகாலும் எனக்கு எதற்கு? நான் பார்த்து என்ன ஆகப் போகிறது?" "அப்படிச் சொல்லாதீர்கள்! போய்ப் பார்த்தால் அப்புறம் அதிசயப்படுவீர்கள். டில்லியில் கூட ஷாஜஹான் கட்டிய அரண்மனை இருக்கிறது. அதில் திவானிகாஸ் என்றும் திவானிஆம் என்றும் இரண்டு இடங்கள் இருக்கின்றன. அவற்றை இன்றைக்கெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கலாம். பதினாயிரம் கண்ணால் பார்த்தாலும் அலுக்காது ஓரிடத்தில் ஷாஜஹானுடைய அந்தப்புரமாம். அதில் ராணிகள் குளிப்பதற்காகப் பளிங்குக் கல்லாலேயே குளங்களும் வாய்க்கால்களும் அருவிகளும் கட்டியிருக்கிறார்கள். அடடா! அந்த அற்புதத்தை நேரில் பார்த்தால்தான் அதன் மகிமை தெரியும்." "அது எவ்வளவு மகிமையாயிருந்தாலும் சரி, எனக்கு வேண்டாம். டில்லியில் கோவில் இல்லாவிட்டால் போகட்டும்; இந்தக் கண்மணிதான் (வஸந்தியைக் காட்டி) எனக்கு சுவாமி, அம்மன், கோவில், குளம் எல்லாம் என்று நினைத்துக் கொள்கிறேன். ஆனால், சீதா! டில்லிப் பட்டணத்தில் எப்போதுமே துருக்க ராஜாக்கள்தான் ஆண்டார்களா? ஹிந்து ராஜாக்கள் எப்போதுமே ஆளவில்லையா?" "ஆயிரம் வருஷத்துக்கு முன்னால் டில்லியில் ஹிந்து ராஜாக்கள் இருந்தார்களாம்; பிரிதிவிராஜன் என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா?" "கேட்ட மாதிரி இருக்கிறது; அதற்கு மேல் ஒன்றும் ஞாபகம் இல்லை நீ சொல், சீதா! பொழுது போகட்டும்!"

"டில்லியில் பிரிதிவிராஜன் என்று ஒரு ராஜா இருந்தான். டில்லிக்குப் பக்கத்தில் இன்னொரு ராஜ்யத்தில் ஜயச்சந்திரன் என்ற ராஜா இருந்தான். ஜயச்சந்திரனுக்குச் சம்யுக்தை என்ற குமாரி இருந்தாள். ஜயச்சந்திரனுக்குப் பிரிதிவிராஜன் மீது ஜன்மப் பகை. ஆனால் ஜயச்சந்திரனுடைய குமாரி சம்யுக்தை பிரிதிவிராஜன் பேரில் காதல் கொண்டு அவனையே கலியாணம் செய்து கொள்ளுவதென்று தீர்மானித் திருந்தாள்..." "எப்படி அவளுக்குப் பிரிதிவிராஜன் பேரில் காதல் உண்டாயிற்று? அவர்கள் எப்போதாவது பார்த்துக் கொண்டதுண்டா?" "இல்லை, அம்மா! பிரிதிவிராஜனுடைய பராக்கிரமத்தையும் அழகையும் பற்றிச் சம்யுக்தை கேள்விப்பட்டிருந்தாள். நளனைப் பற்றிக் கேள்விப்பட்டுத் தமயந்தி காதல் கொண்டது போல் சம்யுக்தையும் பிரிதிவிராஜன் பேரில் காதல் கொண்டாள்." "நல்ல காதல்! அப்புறம்?" "அப்புறம் சம்யுக்தையின் கலியாணத்துக்காக ஜயச்சந்திரன் சுயம்வரம் வைத்தான். அதற்கு ஐம்பத்துநாலு தேசத்து ராஜாக்களையும் அழைத்தான். ஆனால் டில்லி பிரிதிவிராஜனை மட்டும் அழைக்கவில்லை. அழைக்காததோடு பிரிதிவிராஜனை அவமானப்படுத்துவதற்காக அவனைப்போல் ஒரு சிலை செய்து சுயம்வர மண்டபத்தின் வாசலில் காவல்காரனைப்போல் நிறுத்தி வைத்திருந்தான்!" "சேச்சே! என்ன கேவலமான காரியம்! அவனுக்கு ஏன் அப்படிப் புத்தி போயிற்று?"

"போதாத காலந்தான் நம்முடைய இந்திய தேசத்துக்கே போதாத காலம். அப்போது, சம்யுக்தை என்ன செய்தாள் தெரியுமா? கையில் மணமாலையுடன் ஒவ்வொரு ராஜாவாகப் பார்த்துக் கொண்டு வந்தாள். அவர்கள் கழுத்திலேயெல்லாம் மாலையைப் போடவில்லை. மண்டபத்தின் வாசலிலே பிரிதிவிராஜனுடைய சிலை வைத்திருந்ததை அவளுடைய தோழி அவளுக்குச் சொல்லியிருந்தாள். மண்டப வாசலண்டை வந்ததும் சட்டென்று அந்தச் சிலைக்குப் பக்கத்தில் போய்க் கையிலிருந்த சுயம்வர மாலையைச் சிலையின் கழுத்தில் போட்டாள்.." "சுத்த அசட்டுப் பெண்ணாயிருக்கிறாளே! சிலையின் கழுத்திலே மாலையைப் போட்டு என்ன பிரயோசனம்?" "என்ன பிரயோசனமா? கேளுங்கள்! சிலையின் கழுத்திலே மாலையைப் போட்டதும் அதற்கு அந்த க்ஷணமே உயிர் வந்துவிட்டது! சம்யுக்தையைக் கட்டித் தூக்கிக்கொண்டு போய்..." "சிலைக்காவது, உயிர்வரவாவது? ஏதோ நிஜமாக நடந்த கதை சொல்கிறாய் என்றல்லவா நினைத்தேன்? விக்கிரமாதித்தன் கதை மாதிரி இட்டுக் கட்டிக் கதை சொல்கிறாயாக்கும்!" "இல்லை, அம்மா! நிஜமாக நடந்த கதைத்தான்!" "நிஜமாக நடந்த கதை என்றால் உண்மையாகவே சிலைக்கு உயிர் வந்தது என்று அர்த்தமா?" "பின் என்ன அர்த்தம்?"

"அந்தச் சிலைக்குப் பின்னால் நிஜப் பிரிதிவிராஜன் ஒளிந்து கொண்டிருந்தான். சமயம் பார்த்துச் சம்யுக்தையைக் கொண்டு போவதற்காகவே அவன் வந்து காத்துக்கொண்டிருந்தான். உடனே அவன் சம்யுக்தையைத் தூக்கிப் பக்கத்திலே தயாராயிருந்த குதிரையின் மேலே வைத்துக்கொண்டு பறந்தான். நிசமாகப் பறந்தானா என்று கேட்காதீர்கள்! பறக்கிறது மாதிரி வேகமாகக் குதிரையை விட்டுக்கொண்டு போனான். அவனைப் பிடிப்பதற்காக ஜயச்சந்திரனும் அவனுடைய ஆட்களும் தொடர்ந்தார்கள் ஆனால் முடியவில்லை. பிரிதிவிராஜனுடைய வீரர்கள் குறுக்கிட்டு அவர்களைத் தடுத்து நிறுத்திவிட்டார்கள்...." "அப்புறம் பிரிதிவிராஜனும் சம்யுக்தையும் கலியாணம் செய்து கொண்டு ரதியும் மன்மதனும் போல் சந்தோஷமாயிருந்தார்களாக்கும்!" "அப்படி இருந்தால்தான் தேவலையே? இல்லவே இல்லை. அந்தக் காலத்தில் கோரிமுகம்மது என்ற துருக்க ராஜா வடக்கேயிருந்து படையெடுத்து வந்தான். டில்லி வரையில் வந்து விட்டான். அவனைப் பிரிதிவிராஜன் நன்றாகத் தோற்கடித்துத் திருப்பி அனுப்பினான். முதலில் இரண்டு மூன்று தடவை இப்படி நடந்தது. அதற்கப்புறம் சம்யுக்தையின் தகப்பன் ஜயச்சந்திரன் கோரிமுகம்மதுவுக்கு ஓலை அனுப்பினான். 'நீ மறுபடியும் படையெடுத்து வா! உனக்கு நான் உதவி செய்கிறேன்' என்று.கோரிமுகம்மது, ஜயச்சந்திரன் இரண்டு பேரும் சேர்ந்து பிரிதிவிராஜனுடன் யுத்தம் செய்தார்கள். பிரிதிவிராஜன் கடைசி வரையில் சண்டை போட்டு யுத்தகளத்தில் செத்து விழுந்தான்."

"ஐயோ! பாவம்! சம்யுக்தையின் கதி என்னவாயிற்றோ!" "சம்யுக்தை தீயில் குதித்துப் பிராணனை விட்டாள். அது முதல் டில்லியில் துருக்க ராஜ்யம் ஏற்பட்டது. சீக்கிரத்தில் ஜயச்சந்திரனும் ராஜ்யத்தை இழந்து துருக்க ராஜாவுக்கு அடிமையானான்." "என்ன விபரீதம்? இதற்குத்தான் பெரியவர்கள் சொல்கிறதைக் கேட்டு நடக்க வேண்டும் என்கிறது. சம்யுக்தை தகப்பனார் சொன்னபடி கேட்டிருந்தால் இப்படியெல்லாம் நடந்திராது அல்லவா?" "அழகாயிருக்கிறதே, நீங்கள் சொல்வது! அது எப்படி சம்யுக்தையின் பேரில் பழி போடுகிறீர்கள்? ஜயச்சந்திரன் செய்தது என்ன நியாயம்? மகளுடைய சம்மதப்படி அவளைக் கலியாணம் செய்து கொடுத்திருந்தால் என்ன? அது மட்டுமல்லாமல் சொந்த மாப்பிள்ளையின் பேரில் துவேஷத்தினால் அன்னிய ராஜாவோடு சேர்ந்தானே? அது எவ்வளவு பெரிய துரோகம்! என்னைக் கேட்டால், கலியாண விஷயத்தில் மட்டும் அப்பா அம்மா தலையிடுவது ரொம்பப் பிசகு என்று சொல்வேன். பெண்ணாயிருந்தாலும் சரி, பிள்ளையாயிருந்தாலும் சரி, அவர்களுக்குப் பிடித்திருப்பவர்களைக் கலியாணம் செய்து கொள்வதற்கு அப்பா அம்மா குறுக்கே நிற்கக் கூடாது. அப்படிக் குறுக்கே நிற்பவர்களைச் சுண்ணாம்புக் காளவாயில் போட்டு விடவேண்டும்!"

இந்த வார்த்தைகள் காமாட்சி அம்மாளுக்கு ஒரு பழைய ஞாபகத்தை உண்டாக்கின. அவளுடைய முகம் சுருங்கியது; இதைப் பார்த்த சீதா, "அம்மா! உங்களுக்கு தலை வலிக்கிறதா, என்ன?" என்று கேட்டாள். "இல்லை!" என்று சொன்னாள் காமாட்சி அம்மாள். பிறகு, "நீ சொல்கிறது அவ்வளவு சரியில்லை, சீதா! தாயார் தகப்பனார் சொல்கிறது எப்போதும் தப்பாயிராது! குழந்தைகளின் நன்மைக்காகத்தான் சொல்லுவார்கள். குழந்தைகள் சௌக்கியமாகவும் சந்தோஷமாகவும் இருக்க வேண்டும் என்று தானே தாயார் தகப்பனாருக்கு இருக்கும்? எல்லாரும் ஜயச்சந்திரனைப்போல் இருக்க மாட்டார்கள். குழந்தைகள் சௌக்கியமாயிருக்க வேண்டும் என்றுதான் பெற்றவர்கள் யோசனை செய்து சொல்வார்கள்!" என்றாள். "வாஸ்தவந்தான், அம்மா! எல்லாரும் ஜயச்சந்திரனைப் போல் இருப்பார்களா? இப்போது என்னுடைய கலியாணத்தையே எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் பிள்ளையின் இஷ்டம் போல் நீங்கள் விட்டதனால்தானே நடந்தது? இல்லாவிட்டால் நடந்திருக்குமா!" என்றாள் சீதா. மறுபடியும் காமாட்சி அம்மாளின் மனத்தில் சுருக்கென்று தைத்தது எனவே அவள் பேச்சை மாற்ற விரும்பினாள். "சூரியாவுக்கு இன்னும் கலியாணம் ஆகவில்லையே, சீதா! ஏன் ஆகவில்லை என்று உனக்கு ஏதாவது தெரியுமா? குற்றங்குறை ஏதேனும் உண்டோ ?" என்று கேட்டாள். "அதெல்லாம் ஒன்றும் இல்லை; சூரியாவுக்கு அப்படியொன்றும் வயதாகி விடவில்லையே? இருபது அல்லது இருபத்தொன்று தானிருக்கும். ஆனால் அவனிடம் கலியாணத்தைப் பற்றிப் பேச்சுக் கொடுத்தவர்களிடம், 'நான் கலியாணமே பண்ணிக் கொள்ளப் போவதில்லை' என்று சொல்லிக் கொண்டிருக்கிறான்."

"பசங்கள் எல்லாருமே கொஞ்ச காலம் அப்படித்தான் வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருப்பார்கள். கிட்டிமுட்டி வரும்போது சரி என்று சொல்லிவிடுவார்கள். சூரியா எது வரையில் படித்திருக்கிறான்?" "பி.ஏ. படித்துக்கொண்டிருந்தான்; இப்போது படிப்பை விட்டுவிட்டான்." "ஏன் விட்டுவிட்டான்? படிப்பு வரவில்லையா? சூரியாவைப் பார்த்தால் கொஞ்சம் அசடுப்போலத்தான் தோன்றுகிறது." "பார்ப்பதற்கு சூரியா அப்படித்தான் இருப்பான், ஆனால், உண்மையிலே ரொம்பக் கெட்டிக்காரன். என் கல்யாணம் நடந்ததே அவனால்தான் என்று சொல்லவேண்டும். உங்கள் பிள்ளை 'லலிதாவைப் பிடிக்கவில்லை; சீதாவைத்தான் பிடித்திருக்கிறது' என்று சொன்னதும் என் மாமாவும் மாமியும் மிக்க கோபம் அடைந்துவிட்டார்கள். அவர்களைச் சூரியாதான் சமாதானப்படுத்தினான்." "உன் மாமாவும் மாமியும் கோபித்துக்கொண்டால் கலியாணம் நின்று போய் விடுமா? கடவுள் யாருக்கு யார் என்று முடிபோட் டிருக்கிறாரோ அந்த மாதிரிதான் நடக்கும். அது இருக்கட்டும், சீதா! சூரியா ஏன் படிப்பை விட்டுவிட்டான்?"

"அவனுக்கு என்னவோ இங்கிலீஷ் படிப்புப் பிடிக்கவில்லையாம்! பி.ஏ. பாஸ் செய்துவிட்டால் அப்பாவும் அம்மாவும் ஏதாவது உத்தியோகம் பார்க்கும்படி வற்புறுத்துவார்களாம். யாராவது பெண்ணைக் கொடுக்கிறேன் என்று வந்து அவனைத் தொந்தரவு செய்வார்களாம்...." "பெண்ணைக் கொடுக்கிறேன் என்று வந்தால் அது ஒரு தொந்தரவா? நான் கூட என் தம்பி பெண்ணுக்குப் பார்க்கச் சொல்லலாம் என்றுதான் இவ்வளவு தூரம் சூரியாவைப்பற்றிக் கேட்கிறேன். உத்தியோகம் பார்க்காமல் அவன் வேறு என்ன செய்யப் போகிறானாம்." "இந்தப் பக்கத்தில் எங்கேயோ காங்கிரஸ் நடக்கிறதாம்; அதற்காக வருகிறானாம். ஆனால் திரும்பி ஊருக்குப் போகப் போவதில்லை யாம். டில்லியிலேயே தங்கியிருந்து பத்திரிகைகளுக்கு எழுதலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறானாம்." "ஓகோ! பத்திரிகைக்கு எழுதுவானா என்ன? அவ்வளவு கெட்டிக்காரனா? அப்படியென்றால் தேவலையே? சீதா! ராகவன் பத்திரிகைக்கு எழுதியதால்தான் அவனுக்குப் பெரிய உத்தியோகம் கிடைத்தது என்று உனக்குத் தெரியுமோ, இல்லையோ?" "உங்கள் பிள்ளையையும் இவனையும் ஒன்றாகச் சொல்லாதேயுங்கள். அவரைப்போல் இவனுக்குப் படிப்பு உண்டா? அவ்வளவு சாமர்த்தியந்தான் உண்டா? ஏதாவது காமாசோமா என்று தமிழ்ப் பத்திரிகைக்கு எழுதுவான்."

இந்தச் சமயத்தில் ரயில் 'வீல்' என்று சத்தமிட்டுக் கொண்டு கொஞ்சம் மெதுவாயிற்று. தூரத்தில் அநேக ஜனங்கள் ஏக காலத்தில் இரைச்சல் போடும் சத்தம் கேட்டது. சீதா ரயிலுக்கு வெளியில் எட்டிப் பார்த்தாள். "அம்மா! அம்மா! டில்லி ஸ்டேஷன் அதோ தெரிகிறது உங்கள் பிள்ளை ஸ்டேஷனுக்கு வந்திருப்பார்." "வந்திருக்கிறானோ அல்லது ஆபீஸில் அதிக வேலை என்று வேறு யாரையாவது அனுப்பி வைக்கிறானோ?" "அதெல்லாம் இல்லை; அவர் கட்டாயம் ஸ்டேஷனுக்கு வந்திருப்பார்" என்றாள் சீதா. இந்தச் சம்பாஷணையின் ஆரம்பத்திலேயே வஸந்தி தூங்கிப் போய்விட்டாள். குழந்தையைச் சீதா தட்டி எழுப்பி, "வஸந்தி வஸந்தி! டில்லி வந்துவிட்டது. அப்பா பிளாட்பாரத்தில் வந்திருப்பார், எழுந்திரு எழுந்திரு" என்றாள். காது செவிடுபடும்படியான பலவகை இயந்திரச் சத்தங்களுக்கும் மனிதரின் கூக்குரலுக்கும் மத்தியில் கிராண்ட்டிரங்க் எக்ஸ்பிரஸ் டில்லி ஸ்டேஷனுக்குள் பிரவேசித்தது.

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

இரண்டாம் அத்தியாயம்
ரயில்வே சந்திப்பு

டில்லி ரயில்வே நிலையத்துக்குள் கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் பிரவேசித்தபோது பக்கத்துப் பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்த நூற்றுக்கணக்கான ஜனங்களின் முகங்கள் சீதாவின் கண்களில் தோன்றி மறைந்தன. ஆனால், அவளுடைய கண்களிலோ, கவனத்திலோ அந்த முகங்கள் ஒரு கணமும் நிற்கவில்லை. ஒரே ஒரு சுந்தர முகத்தை, தன் உள்ளத்தில் உறைந்து ஆத்மாவுடன் கலந்த முகத்தை, சீதாவின் கண்கள் ஆர்வத்துடன் தேடின. அந்த முகம் தெரிந்ததும், "வஸந்தி அதோ அப்பா!" என்று சீதா கூச்சலிட்டது ரயில்வே ஸ்டேஷன் சத்தங்கள் அவ்வளவுக்கும் மேலாகக் 'கிறீச்' என்று கேட்டது. சௌந்தரராகவனைப் பார்த்த பிறகும் கூட இந்தச் சனியன் பிடித்த ரயில் எதற்காக மேலே நகருகிறது என்று சீதாவுக்குத் தெரியவில்லை. ராகவன் நின்ற இடத்துக்கு அப்பால் சுமார் முப்பது அடி தூரத்தில் சீதா இருந்த வண்டி போய் நின்றது. "வஸந்தி! அதோ பார், அப்பா வருகிறார்!" என்று குதூகலித்தாள் சீதா. "அப்பா எங்கே? காத்து அம்மா!" என்றாள் குழந்தை. கூட்டத்தில் இடிபடாமல் நாஸுக்காகப் புகுந்து விலகிக் கொண்டு சீதா இருந்த வண்டியை நோக்கி வந்து கொண்டிருந்த ராகவன் திடீரென்று பாதி வழியில் நின்றான்.

சீதா இருந்த வண்டிக்கு எதிர்ப்புறத்தில், பிளாட்பாரத்தின் மறுபக்கத்திலிருந்து, ஒரு ரயில் 'வீல்' என்று சத்தமிட்டுக் கொண்டு புறப்பட்டது. சௌந்தரராகவன் அந்த வண்டியை நோக்கினான். ஒரு கணம் அங்கேயே தயங்கி நின்றான். பிறகு சீதாவை நோக்கி வருவதற்குப் பதிலாக, எதிர்ப்புறத்தில் புறப்பட்டுக் கொண்டிருந்த வண்டியை நோக்கி அவசரமாகச் சென்றான். இந்தச் சமயம் அவன் கூட்டத்தையும் நெருக்கத்தையும் பொருட்படுத்தவில்லை. முட்டி மோதிக் கொண்டும் இடித்து பிடித்துக் கொண்டும் சென்றான். ராகவன் இலக்கு வைத்துப்போன ரயில் வண்டியில் பலகணிக்கு அருகில் இரண்டு பெண்கள் உட்கார்ந்திருந்தார்கள். அவர்களில் ஒருத்தியைப் பார்த்து ராகவன் ஏதோ கேட்டான். அவள் ஏதோ பதில் கூறினாள், இவன் திரும்ப ஏதோ சொன்னான். இதற்குள் ரயில் நகரத் தொடங்கியது. கடைசி கார்டு வண்டி போகிற வரையில் ராகவன் அங்கேயே நின்று போகும் ரயிலையும் பலகணிக்கு வெளியே தெரிந்த அந்தப் பெண்ணின் முகத்தையும் பார்த்துக் கொண்டு நின்றான். பிறகு, திரும்பி, சீதா இருந்த வண்டியை நோக்கி வந்தான்.

மேலே கூறிய நிகழ்ச்சியைச் சீதா கண் கொட்டாது ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டு நின்றாள். தன்னையும் குழந்தையையும் பார்த்த பிறகு சௌந்தரராகவன் நேரே தங்களிடம் வராமல் எதிர்ப்பக்கத்து ரயிலை நோக்கிப் போனது சீதாவுக்குச் சிறிது ஏமாற்றம் அளித்தது. இன்னொரு ரயிலில் இருந்த பெண்கள் யார் என்பது அவளுக்குத் தெரியாது. எனினும் தன்னைவிட அவர்களை முக்கியமாகக் கருதி ராகவன் அங்கே போய்ப் பேசியது சீதாவின் உள்ளத்தில் 'சுருக்' என்ற வேதனையை உண்டாக்கியது. மேற்சொன்னதெல்லாம் அவளுடைய உள்ளத்தின் ஒரு நிமிஷ நேரத்து அனுபவம் தான். ராகவன் அருகில் வந்ததும் மனது ஒரே குதூகலமடைந்தது. "வஸந்தி! அப்பா கிட்டப்போ!" என்று சொல்லிக்கொண்டே குழந்தையைப் பலகணி வழியாக வெளியே எடுத்து விட்டாள். குழந்தை தாவிக்கொண்டு அப்பாவிடம் சென்றது. ராகவனும் ஆசையோடு வாங்கிக் கொண்டான். ஆனாலும் அவனுடைய மனது குழந்தையிடம் லயிக்கவில்லை என்பதை அவன் முகம் காட்டியது.

பிளாட்பாரத்தில் நடந்த மேற்படி ஒரு நிமிஷ நாடகத்தைப் பற்றிக் காமாட்சி அம்மாளுக்கு ஒன்றும் தெரியாது. அவள் சாமான் வகையறாக்களைச் சரி பார்த்து வண்டியிலிருந்து இறக்குவதில் முனைந்திருந்தாள். "சீதா முதலில் நீ கீழே இறங்கு! சாமான்களை எல்லாம் இறக்கிய பிறகு நான் இறங்குகிறேன்!" என்றாள் காமாட்சி அம்மாள். சீதா வண்டியிலிருந்து இறங்கினாள், போர்ட்டர்களுக்குக் கட்டளை போட்டுக் கொண்டிருந்த சௌந்தரராகவனுக்குப் பக்கத்தில் போய் நின்றாள். அவனாக ஏதாவது சொல்லுவான், கேட்பான் என்று எதிர்பார்த்தாள். ஆனால் அவன் ஒன்றும் பேசுகிற வழியாகக் காணவில்லை. "நீங்கள் ஸ்டேஷனுக்கு வருவீர்களா, வரமாட்டீர்களா என்று நானும் அம்மாவும் பந்தயம் போட்டுக் கொண்டு வந்தோம்!" என்றாள் சீதா. ராகவன் காதில் அது விழுந்ததாகவே தோன்றவில்லை. அவன் மனம் வேறு எங்கேயோ சஞ்சரித்துக் கொண்டிருந்தது. "புறப்படுவதற்கு இரண்டு நாளைக்கு முன்பு வஸந்திக்கு உடம்பு சரியில்லை. புறப்பட முடியுமோ, என்னமோ என்று பயமாய்ப் போய்விட்டது!" என்றாள் சீதா. கொஞ்சம் ராகவனுடைய கவனம் திரும்பியது "வஸந்திக்கு என்ன உடம்பு?" என்று கேட்டான். "அஜீரணம் மாதிரி இருந்தது?" குழந்தைகளுக்கு அஜீரணமே வரக்கூடாது. குழந்தைகளுக்கு என்னவிதமாக உடம்பு வந்தாலும் அது வளர்ப்பவர்களுடைய தப்பிதந்தான்?" என்று ராகவன் கடுமையான குரலில் கூறினான்.

தான் ஆரம்பித்த பேச்சு பிசகாய்ப் போய்விட்டதென்பதை அறிந்து சீதா மௌனமானாள். சாமான்கள் இறக்கப்பட்ட பிறகு காமாட்சி அம்மாள் பெஞ்சுகளுக்கு அடியில் குனிந்து பார்த்துவிட்டு ரயிலிலிருந்து இறங்கினாள். ராகவனை அருகில் வந்து பார்த்து, "ஏண்டா அப்பா!" இப்படி இளைத்துப் போயிருக்கிறாயே?" என்றாள். "ஆமாம், அம்மா! இளைத்துத்தான் போய்விட்டேன். இத்தனை நாள் உங்களையெல்லாம் பார்க்காத கவலையினாலே தான்!" என்றான் ராகவன். இந்தச் சமயத்தில் அதே ரயிலில் வேறொரு வண்டியிலிருந்து இறங்கிய சூரியா அவர்கள் நிற்குமிடத்துக்குச் சமீபமாய் வந்து சேர்ந்தான். ராகவன் அவனை ஏறிட்டுப் பார்த்தான். ஆனால் ஒன்றும் பேசவில்லை போர்ட்டர்களைப் பார்த்துச் "சாமான்களை எடுங்கள்" என்றான். சூரியாவுடன் ராகவன் பேசாதது சீதாவுக்கு மனக் கஷ்டத்தை அளித்தது. சூரியாவைக் கடைக் கண்ணால் பார்த்தாள். அவன் முகத்தில் புன்னகை தவழ்ந்தது.

பிறகு மனத்தைத் தைரியப்படுத்திக்கொண்டு, "சூரியாவை உங்களுக்குத் தெரியுமோ, இல்லையோ?" என்று கேட்டாள். "எந்தச் சூரியாவை?" என்றான் சௌந்தரராகவன். "எந்தச் சூரியாவை என்கிறீர்கள்? லலிதாவின் அண்ணா சூரியாதான்!" "மாப்பிள்ளை! அடியோடு என்னை மறந்து விட்டீர்கள் போல் இருக்கிறது!" "ஓகோ! கலியாணத்தின்போது ஒரே கோபமாக இருந்தானே, அந்தப் பையனா? இங்கு எங்கே வந்தான்?" என்று ராகவன் கேட்டான். இதனால் சீதாவின் மனக் கஷ்டம் மேலும் அதிகமாயிற்று. நல்லவேளையாக அந்தச் சமயம் காமாட்சி அம்மாள் அவர்களுடைய பேச்சில் தலையிட்டாள். "வழி நெடுகச் சூரியாதான் எங்களுக்கு ஒத்தாசையாயிருந்து வந்தான்; அவன் வந்திராவிட்டால் எங்களுக்கு ரொம்பக் கஷ்டமாய்ப் போயிருக்கும்" என்றாள். "இந்த வண்டியிலேயே இவன் வந்தானா, என்ன? இறங்குகிறபோது நான் பார்க்கவில்லையே?" என்றான் ராகவன். "இல்லை, மாப்பிள்ளை ஸார்! நான் மூன்றாம் வகுப்பு வண்டியில் வந்தேன். அப்படி ஒன்றும் இவர்களுக்கு நான் பிரமாதமான ஒத்தாசை செய்துவிடவில்லை!" என்றான் சூரியா. "அதனால் பாதகமில்லை ஆனால் என்னை மட்டும் மாப்பிள்ளை சார் என்று கூப்பிடாமல் இருந்தால் சரி. கொஞ்சம் அநாகரிகமாகத் தோன்றுகிறது" என்றான் ராகவன். இதற்குள் போர்ட்டர்களின் தலையில் சாமான்கள் ஏறிவிட்டன. ராகவன் கையிலிருந்த குழந்தையைக் காமாட்சி அம்மாள் வாங்கிக் கொண்டாள். ராகவன் முன்னால் வழிகாட்டிச் செல்ல மற்றவர்கள் பின்தொடர்ந்து சென்றார்கள்.

"இதுதானா நமக்கு வாங்கியிருக்கிற மோட்டார் கார்?" என்று சீதா கேட்டாள். அவளுடைய குரலில் குதூகலம் தொனித்தது. அதற்கு ராகவன் பதில் சொல்லவில்லை. சாமான்களைக் காரில் ஏற்றியானதும் காமாட்சியம்மாளையும் சீதாவையும் குழந்தையுடன் பின் ஸீட்டில் உட்காரச் செய்தான். தான் முன் புறத்தில் டிரைவருடைய ஸீட்டில் உட்கார்ந்து கொண்டான். அவனுக்குப் பக்கத்து ஸீட் காலியாகத்தானிருந்தது. சூரியா விடைபெற்றுக் கொள்வதற்காக நின்றான். காலி இடத்தில் சூரியாவை ஏறிக்கொள்ளச் சொன்னால் என்ன என்று சீதாவுக்குத் தோன்றியது. ராகவன் சொல்வான் என்று எதிர்பார்த்தாள் அவன் சொல்லவில்லை. சீதா ஏமாற்றத்துடன் சூரியாவைப் பார்த்தாள். அவளுடைய மனோ நிலையைத் தெரிந்துகொண்ட சூரியா முகபாவத்தினால் தன் அனுதாபத்தைத் தெரிவித்து கொண்டான். வண்டி புறப்படலாயிற்று சீதா மெல்லிய குரலில், "அம்மா சூரியா உங்களிடம் சொல்லிக் கொள்கிறான் போலிருக்கிறது!" என்றாள். காமாட்சி அம்மாள், "ஏண்டாப்பா, சூரியா! போய் வருகிறாயா? ஊருக்குப் போவதற்குள்ளே ஒரு நாளைக்கு ஆத்துக்கு வந்துவிட்டுப் போ!" என்று சொன்னாள். "சீதாவுக்கு மாமியாரிடம் நன்றி உணர்ச்சி பொங்கியது. சூரியா, "ஆகட்டும், மாமி! அவசியம் வந்துவிட்டுப் போகிறேன். மாப்பிள்ளே! உங்களுடைய விலாசம் என்ன?" என்று கேட்டான்.

ராகவனுடைய குணம் ஒருவாறு சூரியாவுக்கு ஏற்கனவே தெரிந்துதான் இருந்தது. அதற்காக அத்தங்காளின் உறவை விட்டு விடுவதாக அவனுக்கு உத்தேசம் இல்லை, மாப்பிள்ளை தன்னை அழைக்காவிட்டால் அவர்களுடைய ஜாகையில் போய்ப் பார்த்து விடுகிறது என்று தீர்மானித்திருந்தான். "நம்பர் எட்டு, நாதிர்ஷா ரோடு?" என்று சொல்லிவிட்டு ராகவன் மோட்டாரை விட்டான். மோட்டார் போகத் தொடங்கியதும் சீதா மறுபடியும் உற்சாகம் கொண்டாள். "வஸந்தி பார்த்தாயா? அப்பா மோட்டார் ஓட்டுகிறார்!" என்றாள். "நானும் மோட்டார் ஓத்துவேன்!" என்றாள் வஸந்தி. சீதா கலகலவென்று சிரித்தாள், "கேட்டீர்களா அம்மா உங்கள் பேத்தியின் பேச்சை! இவளும் கார் ஓட்டுவாளாமே?" என்றாள். "ஓட்டினாலும் ஓட்டுவாள்; இவள் பெரியவளாகும் போது உலகத்திலேயே இன்னும் என்னவெல்லாம் அதிசயம் நடக்கப் போகிறதோ!" என்றாள் காமாட்சி அம்மாள். ராகவன் அப்போது பேச்சில் தலையிட்டு, "அம்மா! பொம்மனாட்டிகள் கார் ஓட்டுகிறது, வரப்போகிற அதிசயம் இல்லை! இப்போதே எத்தனையோ ஸ்திரீகள் கார் ஓட்டுகிறார்கள். அதனால் வீதிகளில் ஒரே அபாயமாய்ப் போய் விட்டது பெண்பிள்ளை ஓட்டுகிற மோட்டார் கார் வருகிறதென்றால் வீதி உடனே காலியாகி விடுகிறது! ஜனங்கள் அப்படிப் பயந்து நாலாபுறமும் ஓடி ஒதுங்குகிறார்கள்!" என்று சொன்னான்.

ராகவனுடைய நகைச்சுவையை ரசித்துச் சீதா சிரித்தாள். பழைய அனுபவத்திலிருந்து, ராகவனுடைய ஹாஸ்யத்தைப் புரிந்து கொண்டு சிரிக்காவிட்டால் அவனுக்கு கோபம் வரும் என்பதைச் சீதா அறிந்திருந்தாள். ஏதாவது புரியாவிட்டால் ராகவன் விளக்கிச் சொல்லமாட்டான். "உன்னிடம் வந்து சொல்லப் போனேனே?" என்று முடித்துவிடுவான். இதனால் அவன் பேச்சுப் புரிந்தாலும் புரியாவிட்டாலும் சீதா சமயோசிதம் பார்த்துச் சிரித்து விடுவது வழக்கம். சீதாவின் சிரிப்பு நிற்பதற்குள் 'டர்ர்ர்' என்ற சத்தத்துடன் கார் நின்றது. ராகவன் சட்டென்று பிரேக் போட்டு வண்டியை நிறுத்தினான். வயதான முஸ்லிம் ஸ்திரீ ஒருத்தி உயிர் தப்பினாள். இன்னும் அரை அங்குலம் வண்டி நகர்ந்திருந்தால் அந்த முஸ்லிம் ஸ்திரீயின் பேரில் வண்டி மோதி அவளைக் கீழே தள்ளி இருக்கும். முதலில் காமாட்சி அம்மாளுக்கும் சீதாவுக்கும் விஷயம் இன்னதென்று தெரியவில்லை. தெரிந்து கொண்டதும் அவர்களுக்கு அடி வயிற்றில் நெருப்புச் சுட்டது போலிருந்தது. "ஏம்மா, மோத்தார் நின்னுத்து?" என்று கேட்டாள் வஸந்தி. மறுபடியும் கார் போக ஆரம்பித்ததும் காமாட்சி அம்மாள், "ஏண்டாப்பா, மோட்டார் ஓட்டுவதற்கு டிரைவர் வைத்துக் கொள்ளவில்லையா? நீயே எதற்காக ஓட்ட வேண்டும்!" என்றாள். "டிரைவர் வைத்துக்கொண்டால், சம்பளம் கொடுக்க வேணுமே? மாதாமாதம் பணத்துக்கு எங்கே போகிறது? இந்த ஊரிலே டிரைவர்களுக்கு ரொம்பக் கிராக்கி!" என்றான் ராகவன்.

அப்போது சௌந்தரராகவனுக்கு மாதம் ஆயிரத்து இருநூறு ரூபாய் சம்பளம் என்பது அவன் தாயார், மனைவி இருவருக்கும் தெரியும். ஆகையால், 'பணத்துக்கு எங்கே போகிறது' என்று அவன் கேட்டது பரிகாசத்துக்காக என்றே நினைத்தார்கள்! சீதா சிரித்தாள். "எதற்காகச் சிரிக்கிறாய்! நான் சொல்கிறது வேடிக்கை என்று நினைத்தாயா?" என்றான் ராகவன். "ஆமாம்!" என்றாள் சீதா. "எதனால் வேடிக்கை என்று உனக்குத் தோன்றுகிறது?" என்று ராகவன் கேட்டான். "மாதம் ஆயிரத்து இருநூறு ரூபாய் சம்பளம் வருகிறது; டிரைவருக்குக் கொடுக்கப் பணம் இல்லையென்றால் யாராவது நம்புவார்களா? உங்கள் செல்வக் குமாரி வஸந்திகூட நம்பமாட்டாளே!" என்றாள் சீதா. "பெண்ணையும் உன்னைப் போலவே வளர்த்துக் கொண்டு வருகிறாயாக்கும்!" என்றான் ராகவன். அதற்கும் சீதா சிரித்துக்கொண்டே, "என் மாதிரி வளர்க்காமல் வேறு யார் மாதிரி வளர்க்க வேண்டுமாம்!" என்று கேட்டாள். இந்தச் சந்தர்ப்பத்தில் ராகவன் ஓட்டிய கார் தனக்கு இந்து முஸ்லீம் வேற்றுமைப் புத்தி கிடையாது என்று நிரூபித்தது. இப்போது ஒரு ஹிந்து ஸ்திரீ மீது அது ஏறப் பார்த்தது! நல்ல வேளையாக ஏறிவிடவில்லை. "ஏண்டாப்பா ராகவா! இன்னும் மோட்டார் நன்றாய் விடுவதற்கு நீ கற்றுக் கொள்ளவில்லை போலிருக்கிறதே! அதற்குள்ளே என்ன அவசரம்? நன்றாய்க் கற்றுக்கொள்ளுகிற வரையிலாவது டிரைவர் வைத்துக் கொள்ளக்கூடாதா?" என்றாள் காமாட்சி அம்மாள்.

"எனக்கு நன்றாய் மோட்டார் விடத் தெரியும் அம்மா! ஆனால் இன்றைக்கு மனது கொஞ்சம் குழம்பியிருக்கிறது அதனால்..." "இன்றைக்கு மனது எதற்காகக் குழம்ப வேண்டும்?" "செத்துப் போனதாக நாம் நினைத்துக் கொண்டிருந்த ஒருவர் திடீரென்று உயிரோடு வந்து நின்றால், மனக் குழப்பம் ஏற்படாதா? அதிலும் தான் தானில்லை என்று சாதிக்கப் பார்த்தால்?...." "என்ன சொல்கிறாய், ராகவா! எனக்கு அப்படி ஒன்றும் உடம்பு அதிகமில்லையே? நாலு நாளைக்கு இன்புளூயன்ஸா சுரமாயிருந்தது! அவ்வளவுதான். ஏண்டி சீதா! நீ ஏதாவது எனக்கு உடம்பு ரொம்ப அதிகமாயிருந்தது என்று கடிதம் எழுதிவிட்டாயோ!" "உங்களுடைய உடம்பைப்பற்றி நான் எழுதவே இல்லையே?" என்றாள் சீதா. "நானும் உங்களைச் சொல்லவில்லை, அம்மா! உங்களுக்கு உடம்பு அசௌக்கியமாயிருந்த விஷயமே எனக்கு இது வரைக்கும் தெரியாது வேறொருவரைப்பற்றிச் சொன்னேன்." "அப்படி யார் செத்துப் பிழைத்து உயிரோடு வந்தது?" "ரயில்வே ஸ்டேஷனில் நீங்கள் பார்க்கவில்லையா?" "நான் பார்க்கவில்லையே? எந்த ரயில்வே ஸ்டேஷனில்?" "டில்லி ஸ்டேஷனில்தான் உங்கள் வண்டி வந்து நின்றதும் எதிர்ப்புறத்தில் ஒரு வண்டி புறப்பட்டது அதிலே பார்க்கவில்லையா?" "நான் ஒன்றும் பார்க்கவில்லை அதில் யார் போனது?" "அப்புறம் சொல்கிறேன்" என்றான் ராகவன்.

காமாட்சி அம்மாள் எதிர்ப்புறத்து ரயிலைப் பார்க்கவில்லைதான்; ஆனால் சீதா பார்த்துக்கொண்டிருந்தாள். ராகவன் ஓடிப்போய் யாரோ ஒருத்தியிடம் இரண்டு வார்த்தை பேசியதையும், அதற்குள்ளே வண்டி போய் விட்டதையும் ராகவன் ஒரு மாதிரி முகத்துடன் திரும்பி வந்ததையும் சீதா பார்த்துத் தன் மனதில் பதிய வைத்துக்கொண்டிருந்தாள். "அந்த ரயிலில் போனது யார் என்று கேளுங்கள், அம்மா!" என்று மாமியாரைத் தூண்டினாள்.இதற்குள் மூன்றாவது தடவையாக மோட்டார் வண்டி நின்றது. சடக்கென்று நின்றபடியால் மறுபடியும் மாமியாருக்கும் மருமகளுக்கும் பயம் உண்டாயிற்று. "என்ன? என்ன?" என்றார்கள். "ஒன்றும் இல்லை; வீடு வந்துவிட்டது!" என்றான் ராகவன். சீதா வீட்டைப் பார்த்தாள்; அழகான சின்னஞ்சிறு பங்களா. முன்புறத்திலும் இரு பக்கங்களிலும் பூஞ்செடிகள் இளமரங்கள். சீதாவின் உள்ளத்தில் இன்பம் பொங்கித் ததும்பியது. "வஸந்தி! உன் வீட்டைப் பாரடி, எவ்வளவு அழகாயிருக்கிறது?" என்றாள். "இது அப்பா கத்திய வீதா, அம்மா? நம்பளுக்காகக் கத்தியிருக்காளா?" என்றாள் வஸந்தி.

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

மூன்றாம் அத்தியாயம்
துயரத்தின் வித்து

கலியாணம் நடந்த உடனேயே சௌந்தரராகவன் சீதாவைத் தன்னுடன் புதுடில்லிக்கு அழைத்துப் போனான். இங்கிலீஷ் ஹோட்டல் ஒன்றில் தற்காலிகமாக அவர்கள் தங்கினார்கள். ஒரு மாத காலம் கந்தர்வலோகத்தில் சஞ்சாரம் செய்து காண்டிருந்தார்கள். புதுடில்லியின் அழகான சாலைகளிலும் சதுக்கங்களிலும் பழைய டில்லியின் இடிந்த கோட்டைகளிலும் இடியாத அரண்மனைகள், மசூதிகளிலும் அவர்கள் கைகோத்துக் கொண்டு உலாவி வந்தார்கள். இம்மாதிரி சில வருஷங்களுக்கு முன்னால் இன்னொரு பெண்ணுடன் கைகோத்துக்கொண்டு இதே இடங்களில் உலாவியது பற்றி ராகவனுக்கு அவ்வப்போது நினைவு வருவதுண்டு. ஆனால் அந்த நினைவை அலட்சியமாக உதறி எறிந்து விட்டுப் பக்கத்தில் நின்ற தன் தர்மபத்தினி சீதாவின் கரத்தை ராகவன் கெட்டியாகப் பிடித்துக்கொள்வான். பிறகு ராகவன் இங்கிலாந்துக்கு அவசரமாகப் புறப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அதன் பேரில் சீதாவைச் சென்னைக்கு அழைத்து வந்து தன் பெற்றோர்களிடம் விட்டான். தானும் சில நாள் தங்கியிருந்து, சீதாவுக்கு ஆயிரம் விதமாகத் தேறுதல் கூறினான். அச்சமயம் சீமைக்குப் போவதால் தன்னுடைய உத்தியோக வாழ்க்கைக்கு ரொம்ப அனுகூலம் ஏற்படும் என்றும், அப்படிப்பட்ட அருமையான சந்தர்ப்பம் மறுபடி கிடைப்பது அரிது என்றும், அதை நழுவவிடுதல் மிக்க அறிவீனமாகும் என்றும் எடுத்துச் சொன்னான்.

மனதாரத் தெரிந்தெடுத்து ஆசையுடன் மணந்து கொண்ட மனைவியை அவ்வளவு சீக்கிரம் பிரிந்து செல்வதில் தனக்கு மட்டும் வருத்தமில்லையா என்று கேட்டான். வாழ்க்கையில் தன்னுடைய முன்னேற்றத்திற்கு அவள் குறுக்கே நிற்கலாமா என்றான். அடுத்த தடவை தான் வெளிநாட்டுக்குப் பிரயாணமாகும்போது அவளையும் அவசியம் அழைத்துப் போவதாக உறுதிமொழி கூறினான். சீதாவுக்கு ஒரு பக்கத்தில் தன்னுடைய இதய நாயகனை இவ்வளவு சீக்கிரத்தில் பிரிய வேண்டியிருக்கிறதே என்று துக்கம் துக்கமாய் வந்தது. இன்னொரு பக்கத்தில் ராகவன் சீமைக்குப் போவது பற்றிப் பெருமையாகவும் இருந்தது. அழுது கொண்டே சிரித்தாள், சிரித்துக் கொண்டே அழுதாள். ஒரு நிமிஷம் 'போகவேகூடாது' என்று பிடிவாதம் பிடித்தாள். அடுத்த நிமிஷம், "கட்டாயம் போக வேண்டும்" என்று வற்புறுத்தினாள். கடைசியாக விடை கொடுத்து அனுப்பினாள். ராகவன் திரும்பி வருவதற்கு பதினைந்து மாதத்துக்கு மேலாயிற்று. அதற்குள் சீதாவின் வாழ்க்கையில் சில முக்கிய நிகழ்ச்சிகள் நேர்ந்தன. அவளுடைய அருமைத் தாயார் பம்பாய் ராஜம்மாள் தன் ஒரே மகளுக்கு நல்ல இடத்தில் மணம் செய்து கொடுத்தோம் என்ற மனத்திருப்தியுடன் இந்த மண்ணுலகை நீத்துச் சென்றாள். தன்னுடைய புருஷர் துரைசாமி அய்யரின் மடியின் மீது தலையை வைத்துக்கொண்டு கடைசி மூச்சை விடும் பாக்கியம் அவளுக்குக் கிடைத்தது. அதோடு அவள் பெரிதும் ஆசை வைத்திருந்த அகண்ட காவேரிக் கரையில் அவளுடைய உடல் தகனமாகும் பேறும் கிடைத்தது.

தாயார் இறந்து பல தினங்கள் வரையில் சீதா கண்ணீரும் கம்பலையுமாயிருந்தாள். மாமியார் எத்தனை ஆறுதல் சொல்லியும் அவளுடைய துக்கம் தீரவில்லை. மாமனார் பகவத் கீதையிலிருந்து எவ்வளவு சுலோகங்கள் சொல்லி வியாக்யானம் செய்து காட்டியும் அவளுடைய மனம் நிம்மதியடையவில்லை. இப்பேர்ப்பட்ட துக்கம் தனக்கு நேர்ந்த சமயத்தில் தன் அருமைக் கணவர் பக்கத்தில் இல்லாமற் போனது அவளுடைய துயரத்தை அதிகமாக்கியது. உண்மையான அன்பு, சினேகம் இவற்றின் பெருமை அதுதான் அல்லவா? அன்புடையவர்களிடமும் சிநேகிதர் களிடமும் துக்கத்தைப் பகிர்ந்து கொண்டால் துக்கம் குறைந்து சீக்கிரத்திலேயே மனச்சாந்தி ஏற்படுகிறது. அன்புள்ளோரிடம் சந்தோஷத்தைப் பகிர்ந்துகொண்டால் அந்தச் சந்தோஷம் பொங்கிப் பெருகுகிறது. சீதாவுக்கு நேர்ந்த பெருந்துக்கத்தை அவளுடன் பகிர்ந்து கொள்ளச் சௌந்தரராகவன் அருகில் இல்லை.இதனால் அவளுடைய துக்கம் வெகு காலம் நீடித்திருந்தது.சீதாவின் வாழ்க்கையில் இன்னொரு முக்கிய சம்பவம் - சந்தோஷமான சம்பவம் - நேர்ந்த பிற்பாடுதான், அந்தத் துக்கம் மறைந்தது.

சீதா தன் உயிருக்கே நேர்ந்த அபாயத்திலிருந்து கடவுள் அருளால் பிழைத்து எழுந்து தான் பெற்ற செல்வக் கண்மணியைப் பார்த்த பிறகு மற்றதெல்லாம் அவளுக்கு மறந்தே போய்விட்டது. தாயாரை நினைத்துக்கொண்டு துக்கப்படுவதற்கு இனிமேல் அவளுக்கு நேரம் ஏது? அதோடு கூடக் காமாட்சி அம்மாளும் மற்றும் அக்கம் பக்கத்து மூதாட்டிகளும், "உன் அம்மாவே உன் வயிற்றில் பெண்ணாய் வந்து பிறந்து விட்டாள்!" என்று அடிக்கடி சொன்னதனால் சீதாவுக்கு அத்தகைய நம்பிக்கை ஏற்பட்டுவிட்டது. தன் குழந்தையின் முகத்தைப் பார்ப்பதில் உண்டான ஆனந்தத்தில் தன்னைப் பெற்ற தாயின் முகத்தை மறந்தாள். சீமைக்குப் போயிருக்கும் கணவன் திரும்பி வந்ததும் குழந்தையை அவரிடம் காட்டி ஆச்சரியக் கடலில் மூழ்கச் செய்யும் நேரத்தை எண்ணி எண்ணி உள்ளமும் உடலும் பூரித்தாள். சீமைக்குப் பயணமாகும்போது ராகவன் சீதாவைக் கான்வெண்ட் ஸ்கூலுக்கு அனுப்பச் சொல்லிப் பெற்றோர்களிடமும் ஏற்பாடு செய்துவிட்டுப் போனான். அதன்படி சீதா கான்வெண்ட் ஸ்கூலுக்குப் போகவில்லை என்று அறிந்ததும் அவன் மிக்க கோபம் கொண்டு கடிதம் எழுதினான். அந்தக் கடிதத்துக்குப் பதிலாக அவனுடைய தகப்பனார், "உன்னுடைய சீமந்தக் கலியாணத்துக்கு அடுத்த மாதம் முகூர்த்தம் வைத்திருக்கிறது; உடனே புறப்பட்டு வந்து சேரவும்" என்று எழுதினார்.

சீதா கான்வெண்ட் ஸ்கூலுக்குப் போகாத காரணம் இப்போது ராகவனுக்குப் புலனாயிற்று. அதனால் அவன் சந்தோஷமடைந் தானா, அதிருப்தி கொண்டானா என்று சொல்ல முடியாது. பதில் கடிதத்தில் பரிகாசமாக, சீமந்தக் கலியாணத்தை ஆறு மாதம் தள்ளி வைத்துக் கொள்ளவும்; தள்ளி வைக்க முடியாவிட்டால் பர்த்தி வைத்து நடத்தி விடவும்!" என்று எழுதியிருந்தான். சீதாவுக்கு இந்தக் கடிதம் அளவில்லாத கோபத்தை அளித்தது. ராகவனுடைய கடிதங்களை விலைமதிப்பில்லாத பொக்கிஷத்தைப் போல் போற்றிப் பத்திரப்படுத்தும் வழக்கமுடைய சீதா மேற்படி கடிதத்தைச் சுக்கலாகக் கிழித்தெறிந்தாள். ராகவன் அவ்வாறு பரிகாசமாகப் பதில் எழுதியது பற்றி மாமியாரிடம் புகாரும் சொன்னாள். மாமியாரும் மருமகளும் வெகு ஒற்றுமையாகவும் அன்யோன்னியமாகவும் இருந்து வந்தார்கள். "மருமகள் மெச்சிய மாமியார் இல்லை" என்னும் பழமொழி அவர்கள் விஷயத்தில் பொய்யாயிற்று. "அம்மா! உங்களிடம் இருந்து குடித்தனம் செய்ய முடியாதென்று என் 'ஓர்ப்படி' பிறந்த வீட்டோ டு போய் விட்டாளாமே? அவள் எவ்வளவு பெரிய ராட்சஸியா இருக்க வேண்டும்?" என்றாள். அக்கம் பக்கத்து வீடுகளில் தன் மாமியார் தன்னை அன்புடன் நடத்துவது பற்றிப் பெருமையுடன் சொல்லிக் கொண்டாள். காமாட்சியம்மாளின் மனோரதம் நிறைவேறி விட்டது. அந்த அம்மாள் பத்மாபுரத்தின் வீதிகளில் கம்பீரமாகப் பெருமிதத்துடன் தலை நிமிர்ந்து நடக்கத் தொடங்கினாள்.

சௌந்தரராகவன் சீமையிலிருந்து திரும்பி வந்தான். வஸந்தியைப் பார்த்து அகமகிழ்ந்து முகமலர்ந்தான். சீதா கான்வெண்ட் ஸ்கூலுக்குப் போகாததினால் ஏற்பட்ட கோபத்தையும் மறந்தான். புதுடில்லியில் ஜாகை கிடைத்ததும் கடிதம் எழுதி அவர்களைத் தருவித்துக் கொள்வதாகச் சொல்லி விட்டுப் போனான். நல்ல ஜாகை கிடைப்பதற்கு இத்தனை காலம் ஆகிவிட்டது. சீதா புதுடில்லிக்கு வந்து சேர்ந்து ஒரு வாரம் ஆயிற்று; அந்த ஏழு நாளும் புது ஜாகை போடும் ஏற்பாடுகளில் எல்லாரும் முனைந் திருந்தார்கள். இந்த நாற்காலியை எடுத்து அந்த அறையில் போடுவது, அந்த அலமாரியைத் தூக்கி இந்த அறைக்குக் கொண்டு வருவது, கட்டில்களை மாற்றி மாற்றிப் போடுவது, சமையல் வேலைகளுக்கு ஏற்பாடு செய்வது, அம்மிக் குழவியும் கல்லுரலும் சம்பாதிப்பது, கிராமபோனும் ரேடியோவும் வைப்பது ஆகிய காரியங்களில் சதா ஈடுபட்டிருந்தார்கள். சாயங்காலம் வந்ததும் சீதா முன்போல அதாவது கலியாணம் ஆனவுடனே வந்திருந்த நாட்களைப்போல் ராகவனுடன் வெளியில் உலாவச் செல்ல வேண்டுமென்று ஆசைப்படுவாள். காரியம் அதிகமாக இருந்தபடியால் அந்த ஆசையை அடக்கிக் கொள்வாள்.

ஒரு வாரத்திற்குப் பிறகு ஒரு நாள் காலை ராகவனைப் பார்த்து, "இன்று சாயங்காலம் சீக்கிரம் ஆபீஸிலிருந்து வந்து விடுங்கள். வெளியில் எங்கேயாவது அழைத்துப் போங்கள்!" என்றாள் சீதா. "நான் அழைத்துப் போவது என்ன? உனக்கு இஷ்டமான போது இஷ்டமான இடத்துக்குப் போய் வருவதுதானே!" என்றான் ராகவன். "அழகாயிருக்கிறது; நான் மட்டும் தனியாகப் போவதாக்கும்?" "போனால் என்ன? உன்னை யாராவது வழிப்பறி செய்து கொண்டு போய் விடுவார்களா? இங்கே இன்னும் பிரிட்டிஷ் ராஜ்யம் நடக்கிறது; காங்கிரஸ் ராஜ்யம் பூராவும் வந்து விடவில்லை!" என்றான் ராகவன். "என்னை ஒருவரும் கொண்டுபோய் விடமாட்டார்கள்; வாஸ்தவந்தான். ஆனாலும் தனியாகத்தான் போக வேண்டும் என்றால், நான் போகவே மாட்டேன்." "தனியாகப் போக வேண்டாம்; உன் மாமியாரையும் கூட அழைத்துக் கொண்டு போயேன்?" "மாமியாரை நான் கூட அழைத்துக் கொண்டு போவதற்கு உங்களுடைய அனுமதி வேண்டுமாக்கும்!" என்று சீதா பொய்க் கோபம் வருவித்துக் கொண்டு சொன்னாள். "சரி; சரி! கோபித்துக்கொள்ளாதே! இன்று சாயங்காலம் சீக்கிரம் வந்து உன்னை 'வாக்கிங்'க்கு அழைத்துப் போகிறேன்," என்று சொல்லிவிட்டு ராகவன் சென்றான். அவ்விதமே அன்று மாலை சீக்கிரமாக ராகவன் திரும்பி வந்தான். சீதாவைப் பார்த்து "மோட்டாரில் 'வாக்கிங்' போகலாமா? அல்லது கால்நடையாகப் போகலாமா?" என்று கேட்டான்.

வழக்கப்படி சீதா ராகவனுடைய ஹாஸ்யத்துக்காகச் சிரித்துவிட்டு, "மோட்டாரில் 'வாக்கிங்' எப்படிப் போவது? நடந்தே போகலாம்!" என்றாள். காமாட்சியம்மாள் தான் 'வாக்கிங்' வரவில்லையென்றும் குழந்தையைப் பார்த்துக் கொள்வதாகவும் கூறினாள்; சீதா விரும்பியதும் இதுதான். ஆகையால் ராகவனுடன் உல்லாசமாக கிளம்பினாள். இருவரும் கன்னாட் சர்க்கிளுக்கு வந்து ஒரு தடவை சுற்றிப் பார்த்துவிட்டு 'இந்தியா கேட்'டை நோக்கிச் சென்றார்கள். இந்தியா கேட்டுக்குப் பக்கத்தில் உள்ள செயற்கை நீர் ஓடைகளில் ஒன்றுக்கு அருகில் பச்சைப் பசும்புல் தரையில் உட்கார்ந்தார்கள். அப்போது சூரியன் அஸ்தமித்து இருள் சூழ்ந்து வரும் சமயம். நானா திசைகளிலும் வரிசை வரிசையாக வானத்து நட்சத்திரங்களுடன் போட்டியிட்டுக் கொண்டு இந்தியத் தலைநகரின் மின்சார தீபங்கள் பிரகாசித்தன. "கந்தர்வலோகம் என்று சொல்கிறார்களே! அந்த கந்தர்வலோகம் இதைவிடவா அழகாயிருக்கும்?" என்றாள் சீதா. "நான் கந்தர்வலோகத்துக்குப் போனதில்லை; அதனால் இரண்டையும் ஒப்பிட்டுச் சொல்லத் தெரியவில்லை" என்றான் ராகவன். சீதா சிரித்துக்கொண்டே நானும் கந்தர்வலோகத்துக்குப் போனதில்லை; ஆனால் கந்தர்வலோகத்தைப் பற்றிப் பாரதியார் 'ஞான ரதம்' என்ற புத்தகத்தில் வர்ணித்திருப்பதைப் படித்திருக்கிறேன். புதுடில்லியைவிடக் கந்தர்வலோகம் அவ்வளவு ஒன்றும் ஒசத்தியில்லையென்று எனக்குத் தோன்றுகிறது!" என்றாள். "நான் 'ஞான ரத'த்தில் ஏறினதில்லை; அதனால் அபிப்பிராயம் சொல்ல முடியாது" என்றான் ராகவன்.

ஞான ரதம் வெறும் கற்பனை ரதம். ஆனால் நீங்கள் வான ரதத்தில் ஏறி ஆகாசத்தில் பறந்திருக்கிறீர்கள். ஞான ரதத்தைப் போல் கந்தர்வலோகமும் கற்பனை லோகந்தான். நீங்களோ லண்டன், பாரிஸ் முதலிய உண்மை நகரங்களுக்கெல்லாம் போயிருக்கிறீர்கள். ஏன்னா? புதுடில்லியைவிட லண்டனும் பாரிஸும் அழகுதானே?" என்று சீதா கேட்டாள். "ஏன்னா என்று இனிமேல் என்னை அழைப்பதில்லை என்று நீ சபதம் செய்தால் உன் கேள்விக்குப் பதில் சொல்கிறேன்" என்றான் ராகவன். "ஆகட்டும்; இனிமேல் 'ஏன்னா' என்கவில்லை; 'ஏன் ஸார்?' என்கிறேன். லண்டன் அழகா, டில்லி அழகா? ஏன் ஸார்?" என்றாள் சீதா. "லண்டன் ஒரு விதத்தில் அழகு; டில்லி இன்னொரு விதத்தில் அழகு" என்றான் ராகவன். சீதாவுடன் பேசிக் கொண்டிருந்தபோது ராகவனுடைய கண்கள் அங்குமிங்கும் சுழன்று பார்த்துக்கொண்டிருந்தன. ஒரு சமயம் சாலையோடு இரண்டு பெண்கள் நடந்து போனார்கள். சாய்ந்து படுத்திருந்த ராகவன் சட்டென்று எழுந்து உட்கார்ந்து அவர்களை உற்றுப் பார்த்தான்; மறுபடியும் புல் தரையில் சாய்ந்து கொண்டான். டில்லி ரயில்வே ஸ்டேஷனில் நடந்த சம்பவம் சீதாவுக்கு ஞாபகம் வந்தது. "ஏன் ஸார்! அன்றைக்கு ரயில்வே ஸ்டேஷனில் யாரோ ஒருத்தியைப் பார்த்துப் பேசினீர்களே? அவள் யார்? என்று சீதா கேட்டாள். "அவள் யாராயிருந்தால் உனக்கென்ன?" என்று ராகவன் கேட்ட குரலில் கடுமை தொனித்தது.

"யார் என்று சொன்னால் என்ன!" "சொல்ல முடியாது." "ஏன் சொல்ல முடியாது?" "எனக்கு இந்த ஊரில் எத்தனையோ பேரைத் தெரியும். அவர்களையெல்லாம் யார் யார் என்று உனக்குச் சொல்லிக் கொண்டிருக்க முடியுமா?" "உங்களுக்குத் தெரிந்தவர்களை எல்லாம் எனக்கும் தெரிந்திருக்க வேண்டியதுதானே?" "உனக்குத் தெரிய வேண்டிய விஷயங்கள் தெரிந்தால் போதும். ஊரில் உள்ளவர்களை எல்லாம் தெரிந்திருக்க வேண்டியதில்லை." பொங்கி வந்த கோபத்தைச் சீதா அடக்கிக் கொண்டாள். சற்று நேரம் இருவரும் மௌனமாயிருந்தார்கள். "ஏன் ஸார்? அவள் யார் என்று சொல்லமாட்டீர்களா!" மௌனம். "நம்ம பக்கத்து மனுஷியா? இந்த ஊர்க்காரியா?" மௌனம். "என்னோடு ஏன் பேசப் போகிறீர்கள்? இதற்குத்தான் 'வாக்கிங்' அழைத்து வந்தீர்களாக்கும்?" என்று கூறிய சீதாவின் கண்களில் கண்ணீர் ததும்பியது. இதற்குத்தான் அழைத்துவர மாட்டேன் என்று சொன்னேன். பெண்களின் சுபாவத்தைக் காட்ட ஆரம்பித்துவிட்டாயல்லவா? சனியன்!" என்று சொல்லிக் கொண்டே ராகவன் பசும்புல் தரையிலிருந்து எழுந்தான். "நான் ஒன்றும் சனியன் இல்லை" என்று சீதா கூறி இன்னும் முணுமுணுத்தாள். சீதாவின் குற்றமற்ற இளம் உள்ளத்தில் துன்பத்தின் வித்து விதைத்தாகிவிட்டது. அது முளைத்து வளர்ந்து மரமாகி என்னென்ன பலன்களைத் தரப் போகிறதோ, யார் கண்டது?

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

நான்காம் அத்தியாயம்
சாலை முனையில்

உலாவச் சென்று திரும்பி வந்த அன்றிரவு சீதா வெகு நேரம் தூங்கவில்லை. புதுடில்லியில் புதுக் குடித்தனம் போட்ட பிறகு முதன் முதலாகத் தன் பிரிய நாயகன் தன்னை உலாவ அழைத்துச் சென்ற தினத்தில், தான் அசட்டுத்தனமாக நடந்து கொண்டு அவனுக்கு எரிச்சல் உண்டாக்கியதை நினைத்து நினைத்து வருந்தினாள். இருந்தாலும் அவர் எதற்காக, 'அவள் யார் என்பதைச் சொல்ல மறுக்க வேண்டும் என்ற எண்ணம் ஊசியினால் நெஞ்சைக் குத்துவதுபோல் திரும்பத் திரும்ப வந்து கொண்டிருந்தது. சென்னை பத்மாபுரத்தில் மாமனார் வீட்டில் வசித்த போது, சில கோள் - சொல்லிப் பெண்கள் ராகவனுடைய பழைய காதலைப் பற்றி ஊரில் ஏற்பட்டிருந்த வதந்தியை அவளிடம் பிரஸ்தாபித்தார்கள். அப்போது அவள் அதை நம்பவில்லை. பொறாமையினால் சொல்கிறார்கள் என்றே எண்ணினாள். அந்த வம்புப் பேச்சு இப்போது ஞாபகத்துக்கு வந்தது. 'ரயிலில் பார்த்த பெண் அவள்தானோ, என்னமோ? தினம் தினம் ஆபீஸுக்குப் போகிறதாகச் சொல்லி விட்டுப் போகிறாரே, அவளைப் பார்க்கத்தான் போகிறாரோ என்னமோ?' என்று தோன்றியது. "என்ன மூடத்தனம்? அவள்தான் எங்கேயோ போய்விட்டாளே?

மேலும், ரயிலில் அவளைப் பார்த்துவிட்டு இவர் அதிசயப்பட்டதிலிருந்து அவ்வளவு பழக்கப்பட்டவளாகவே தோன்றவில்லை. அப்படி இருக்க நாமாக மனத்தை ஏன் புண்படுத்திக் கொள்கிறோம்? 'பெண் புத்தி பேதைமை' என்று சொல்லுவது வாஸ்தவந்தான்!" என்று தன்னைத் தானே கண்டித்துக் கொண்டாள். "லலிதாவைப் பார்க்க வந்த இடத்தில் அவளைப் பிடிக்கவில்லை என்று சொல்லி என்னை வலியக் காதலித்து மணந்து கொண்டாரே; அப்படி என்னை ஆட்கொள்ள வந்த உத்தம புருஷரைப் பற்றி வீண் சந்தேகம் கொள்வது எவ்வளவு பிசகு? கூடவே கூடாது!" என்று தனக்குதானே புத்தி சொல்லிக் கொண்டாள். இனிமேல் அன்று சாயங்காலம் நடந்தது போல் நடப்பதற்கே இடங்கொடுக்கக் கூடாது என்றும், அவருக்குப் பிடிக்காத விஷயங்களைப் பற்றிக் கேட்கவே கூடாது என்றும் சங்கல்பம் செய்து கொண்டாள். இவ்வளவு திடமான தீர்மானத்துக்கு வந்த பிறகும், "ஏதோ நான் தெரியாத்தனமாகக் கேட்டு விட்டதாகவே இருக்கட்டும்; 'அவள் யார்' என்று சொல்லியிருந்தால் என்ன? எதற்காக மறுக்க வேண்டும்?" என்ற நினைவு தோன்றி வேதனை செய்தது.

இந்த வேதனை நிறைந்த சிந்தனையெல்லாம் மறுநாள் பொழுது விடிந்ததும், தூக்கத்தில் கண்ட துர்சொப்பனம் விழித் தெழுந்ததும் மங்கி மறைவது போல், சீதாவின் மனத்திலிருந்து மறையத் தொடங்கியது. ராகவனுக்குக் காலை காப்பி கொண்டு கொடுத்த போது அவன் அவளைப் பார்த்துச் செய்த புன்னகையில் அடியோடு மறைந்துவிட்டது. வழக்கம்போல் ராகவன் ஆபீஸுக்கு புறப்பட்டபோது சீதா வஸந்தியைத் தூக்கிக்கொண்டு வந்தாள். ராகவன் அவளைக் கையில் வாங்கிக் கொண்டு கொஞ்சினான். தோளில் சாத்திக் கொண்டு தட்டிக் கொடுத்தான்; கன்னத்தை மெதுவாகக் கிள்ளினான். "வஸந்தி! என்னோடு நீ ஆபீஸுக்கு வருகிறாயா?" என்று கேட்டான். "வதேன் அப்பா! இப்பவே வதேன்!" என்றாள் வஸந்தி. "சரிதான்; உன்னை அழைத்துக் கொண்டு போனால் நான் வேலை செய்தாற் போலத்தான்!" என்றான். சமையல் அறையிலிருந்து வந்த காமாட்சி அம்மாள், "வஸந்திக்கும் வயதாகும்போது உன்னைத் தோற்கடித்து விடுவாள், பார்! உன்னைவிடப் பெரிய உத்தியோகம் பார்ப்பாள்!" என்றாள். "அதைப் பற்றிச் சந்தேகம் என்ன? அவளுடைய அம்மா யார்? சீதாவுக்குப் பிறந்த பெண் சோடையாகப் போய் விடுவாளா?" என்றான் ராகவன். சீதாவுக்குப் பெருமை தாங்கவில்லை.

"நான் என்ன அவ்வளவு கெட்டிக்காரியா? வஸந்தி முழுக்க முழுக்க என் மாமியாரைக் கொண்டிருக்கிறாள். அதனால்தான் இவ்வளவு சமர்த்தாயிருக்கிறாள். நீங்கள் வேணுமானால் இரண்டு பேருடைய முகத்தையும் ஒத்திட்டுப் பாருங்கள்!" என்றாள் சீதா. காமாட்சி அம்மாளுடைய சந்தோஷத்தைச் சொல்லி முடியாது. "ஆகக் கூடி உங்கள் இரண்டு பேருக்குள்ளேயே வஸந்தியின் சமர்த்தைப் பங்கு போட்டுக் கொள்ளப் பார்க்கிறீர்கள். எனக்குக் கொஞ்சம் கூடக் 'கிரெடிட்' கொடுக்க நீங்கள் தயாராயில்லை!" என்று ராகவன் சொல்லி வஸந்தியை அம்மாவிடம் ஒப்புவித்து விட்டு ஆபீஸுக்குப் புறப்பட்டான். மேலும் ஒரு வாரம் சென்றது ராகவனாகத் தன்னை 'வாக்கிங்' போக மறுபடி அழைப்பான் என்று சீதா எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் அதைப்பற்றிப் பிரஸ்தாபிக் கிறதாகக் காணப்படவில்லை. ஆகையால் சீதாவே அந்தப் பேச்சை எடுக்க வேண்டியதாயிற்று. "வெளியே போய் அதிக நாளாயிற்றே? இன்றைக்குப் போகலாமா?" என்று சீதா கேட்டாள். "போகலாம் ஆனால் நீ அன்றைக்குக் கேட்டது போல் அசட்டுத்தனமான கேள்வி ஒன்றும் கேட்கக் கூடாது. கேட்கிறதில்லை என்று ஒப்புக்கொண்டால் போகலாம்!" என்றான் ராகவன்.

"நான் கேட்கவில்லை; அப்படி ஏதாவது நான் தப்பித் தவறிக் கேட்டாலும் நீங்கள் கோபித்துக் கொள்ளாமல் பதில் சொல்லுங்களேன்!" என்றாள் சீதா. "அதெல்லாம் முடியாது நீ அசட்டுத்தனமாக ஏதாவது கேட்டால் எனக்குக் கோபந்தான் வரும்! அதைவிட வெளியே போகாமலிருப்பதே நல்லது" என்றான் ராகவன். "நான் ஒன்றும் கேட்கவில்லை; ஊமையைப் போல் இருக்கவேண்டும் என்றாலும் இருக்கிறேன்" என்றாள் சீதா. "பார்த்தாயா இங்கேயே ஆரம்பித்து விட்டாயே? நான் வரவில்லை!" என்றான் ராகவன். சீதா பயந்துவிட்டாள்; "நான் சாதாரணமாகத்தான் சொன்னேன் கோபித்துக் கொண்டு சொல்லவில்லை வாருங்கள், போகலாம்" என்றாள். இன்றைக்கு வேறொரு பக்கம் போனார்கள்; போகும்போது பேச்சு அதிகமில்லை. தப்பாக ஏதாவது பேசிவிடக் கூடாது என்று சீதா சர்வ ஜாக்கிரதையாக இருந்தாள். ராகவனும் அக்கம் பக்கம் அதிகமாகப் பார்க்கவில்லை. சீதா தான் எதிரில் வந்த ஸ்திரீகளை எல்லாம் உற்றுப் பார்த்துக்கொண்டு போனாள். பச்சைப் புல் வட்டம் ஒன்று வந்தது; அதன் இடையிடையே அழகிய பூஞ்செடிப் புதர்கள் சில இருந்தன. "நடந்தது போதும்; இங்கே கொஞ்ச நேரம் உட்கார்ந்திருந்துவிட்டுத் திரும்பலாம்" என்றாள் சீதா.

பசும்புல் வட்டத்தைச் சுற்றிச் சில பெஞ்சிகள் போடப்பட்டிருந்தன. அவற்றில் சிலர் உட்கார்ந்திருந்தார்கள்; ராகவனும் சீதாவும் ஒரு பூஞ்செடிப் புதரின் அருகில் அமர்ந்தனர். பெஞ்சிகளில் ஒன்றில் ஒரு பார்ஸி கனவானும் அவர் மனைவியும் உட்கார்ந்திருந்தார்கள். அவர்களுடைய இரு குழந்தைகளும் புல் தரையில் ஓடியாடுவதைப் பார்த்து அவர்கள் மகிழ்ந்து கொண்டிருந்தார்கள்! "வஸந்தியையும் அழைத்துக்கொண்டு வந்திருக்கலாம் இங்கே ஓடி விளையாடுவாள்!" என்றாள் சீதா. "இவ்வளவு தூரம் அவளால் நடக்க முடியுமா? அல்லது அவளைத் தூக்கிக் கொண்டுதான் வர முடியுமா? காரிலேதான் அழைத்துக் கொண்டு வரவேண்டும்!" என்றான் ராகவன். "ஆமாம்" என்றாள் சீதா; சற்றுப் பொறுத்து, "அம்மாவையும் குழந்தையையும் அழைத்துப்போய் டில்லி அதிசயங்களை எல்லாம் காட்ட வேண்டாமா?" என்று கேட்டாள். "காட்ட வேண்டியதுதான் ஆனால் வஸந்திக்கு இந்த வயதில் ஒன்றும் தெரியாது. அம்மாவுக்கு ஊர் சுற்றுவதில் ஆசை கிடையாது. 'கோயில் இல்லை, குளம் இல்லை, மசூதியையும் மண்ணாங்கட்டியையும் பார்த்து எனக்கு என்ன ஆக வேண்டும்?' என்கிறாள். ஆனாலும் நாளைக்கு ஞாயிற்றுக்கிழமையாதலால் குதுப்மினாருக்கும் கோட்டைக்கும் உங்கள் எல்லாரையும் அழைத்துப் போகலாமென்று எண்ணிக் கொண்டிருக்கிறேன்" என்றான் ராகவன்.

இதைக் கேட்ட சீதா, வீட்டிலிருந்து புறப்படும்போது ஏற்பட்ட மனச் சோர்வு நீங்கிக் குதூகலமடைந்தாள். "ஆமாம், தாஜ்மகாலுக்கு எப்போது போகிறது? முதல் முதல் நாம் இங்கு வந்தபோதே அழைத்துப் போவதாகச் சொன்னீர்கள். அதற்குள் சீமைப் பிரயாணம் வந்துவிட்டது; ஞாபகம் இருக்கிறதா?" என்றாள் சீதா. "ஞாபகம் இல்லாமல் என்ன? அதைப் பற்றியும் யோசித்துக் கொண்டுதானிருக்கிறேன். தாஜ்மகாலுக்குப் போவதாயிருந்தால் பௌர்ணமியன்று போகவேண்டும். அப்போதுதான் அதன் அழகை நன்றாய் அனுபவிக்கலாம்!" என்றான் ராகவன். "நிலா வெளிச்சத்தில் தாஜ்மகாலைப் பார்த்தால் தேவலோகத்து மேனகையின் மாளிகை மாதிரி இருக்கும் என்று ஒரு தடவை சொல்லியிருக்கிறீர்கள்." "ஆமாம்; பகலிலே தாஜ்மகாலைப் பார்த்தால் பளிங்குக்கல் மாளிகையாகத் தோன்றும்; நிலா வெளிச்சத்தில் பார்த்தால் பூரண சந்திரனுடைய கிரணங்களைக் கொண்டே கட்டியதாகத் தோன்றும்!" "ஏன், ஸார் அடுத்த பௌர்ணமியன்று போய் வரலாமே? என்ன சொல்கிறீர்கள்!" "பார்க்கலாம்!" "அம்மாவையும் வஸந்தியையும் அழைத்துக்கொண்டு தானே போக வேண்டும்?" இதற்கு ராகவன் பதில் சொல்லவில்லை. அவனுடைய மனது வேறு எங்கேயோ அதற்குள் போய்விட்டதாக தோன்றியது.

சூரியாஸ்தமனமாகி இருள் சூழ்ந்து வந்தது. புதுடில்லிக்குச் சோபை அளித்த ஆயிரக்கணக்கான மின்சாரத் தீபங்கள் ஒளிரத் தொடங்கின. நாலாபுறத்திலும் பச்சைப் பசும் மரங்களின் இடையிடையே அந்த மின்சார தீபங்கள் ஒளிர்ந்தது அற்புதமான காட்சியாயிருந்தது. அப்போது பனிக்காலம் முடியும் சமயம். இலேசாகப் பனி விழத் தொடங்கியது. சீதாவின் உள்ளம் அச்சமயம் குளிர்ந்திருந்ததுபோல் உடம்புக்குக் குளிர்ந்தது. இருவரும் பசும்புல் தரையிலிருந்து எழுந்து வீடு நோக்கி நடந்தார்கள். திரும்பி வரும்போது தூரம் அதிகமாயிருப்பது போலத் தோன்றியது. கிட்டத்தட்ட வீட்டுக்குச் சமீபம் வந்துவிட்டார்கள். வீட்டுச் சாலைக்குத் திரும்ப வேண்டிய இடத்தில் சாலை ஓரத்து மேடையில் அவர்கள் வந்து கொண்டிருந்தார்கள். முதலில் வந்த சீதா திடுக்கிட்டு மிரண்டு ஒரு கணம் நின்றாள்; ஒரு அடி பின் வாங்கினாள். இதன் காரணம் அவளுக்கு எதிரில் ஒரு பெரிய மரத்தோரமாகக் கையில் பிடித்த கத்தியுடன் ஒரு ஸ்திரீ நின்று கொண்டிருந்ததுதான். இலேசான பனிப்படலம் சல்லாத் திரையைப் போல் அந்த ஸ்திரீயை மூடியிருந்தது.

சாலை ஓரத்து தீபஸ்தம்பத்தில் லாந்தர் போல் கூடு அமைந்து விளங்கிய மின்சார விளக்கின் பரந்த ஒளி பனிப்படலத்தின் வழியாகப் புகுந்து அந்த ஸ்திரீயின் வெளிறிய முகத்தை மங்கலாக எடுத்துக் காட்டியது. நாடக மேடைகளில் சில சமயம் மெல்லிய வெள்ளைச் சல்லாவினால் மூடிய ஆவி உருவங்களைக் கொண்டு வந்து காட்டுகிறார்களே, அதைப் போல் அந்த ஸ்திரீயின் உருவம் காட்சி அளித்தது. கையில் கத்தி பிடித்த பெண் உருவத்தைக் கண்டதும் சீதா தயங்கிப் பின்வாங்கினாள். பின்னால் அடி எடுத்து வைத்த அதே நேரத்தில் அந்த ஸ்திரீயை முன்னால் ஒரு சமயம் பார்த்திருப்பதாகச் சீதாவுக்கு நினைவு வந்தது. ஈனமான மெலிந்த 'ஓ' என்ற சப்தம் ஒன்று அவள் வாயிலிருந்து வந்தது. பின்னால் வந்த ராகவன் சீதாவைக் கையினால் தாங்கிக்கொண்டு, "என்ன?" என்றான். 'அதோ' என்று கையைக் காட்டினாள் சீதா. ராகவன் பார்த்த போது அந்தப் பெண் உருவம் விரைவாக நகர்ந்து கொண்டிருந்தது. அரை நிமிஷத்துக்குள் இருளிலும் பனியிலும் மறைந்துவிட்டது.இந்தச் சம்பவம் எந்தவிதமான உணர்ச்சியையோ கிளர்ச்சியையோ ராகவன் மனதில் உண்டாக்கவில்லை. "அசடே! புதுடில்லிச் சாலையில் எத்தனையோ பேர் வருவார்கள்; போவார்கள், நீ எதற்காகப் பயப்படுகிறாய்?" என்றான் ராகவன். "நான் பயப்படவில்லை" என்றாள்; ஆயினும் அவளுடைய உள்ளத்தில் இன்னதென்று சொல்லமுடியாத பீதி குடிகொண்டு விட்டது. அந்தப் பீதியினால் அப்போது அவளால் ஒன்றும் பேச முடியவில்லை. இராத்திரி படுக்கப் போகும் சமயத்தில் ராகவனிடம் சாவகாசமாக அந்த ஸ்திரீயைப் பற்றிய விவரங்களைச் சொல்ல வேண்டும் என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டாள்.

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

ஐந்தாம் அத்தியாயம்
ஹரிபுரா காங்கிரஸ்

ராகவனும் சீதாவும், வீட்டு வாசலுக்கு வந்தபோது உள்ளே கலகலவென்று குழந்தையின் சிரிப்புச் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. வீட்டுக்குள் சென்றதும் சூரியா வஸந்திக்கு விளையாட்டுக் காட்டிச் சிரிக்கப் பண்ணிக் கொண்டிருப்பதைப் பார்த்தார்கள். "ஓகோ! அம்மாஞ்சியா? எப்போது வந்தாய்?" என்று சீதா குதூகலத்தொனியில் கேட்டாள். "வந்து அரைமணியாச்சு, அத்தங்கா! நீங்கள் திரும்பி வருவதற்கு ரொம்ப நாழிகையாகுமோ என்னமோ என்று எண்ணிக் கொண்டிருந்தேன். மாப்பிள்ளை, ஸார்! வஸந்தி உங்கள் பேரில் குறை சொல்கிறாள்! பாட்டியை ஒண்டியாக விட்டு விட்டு நீங்கள் எங்கேயோ தொலைந்து போய் விட்டீர் களாம்! பாட்டியைப் பார்த்துக் கொள்வதற்காக வஸந்தி வீட்டிலேயே இருக்கிறாளாம்! எப்படி இருக்கிறது கதை!" என்றான் சூரியா. ராகவனுக்குக் குபீர் என்று சிரிப்பு வந்து விட்டது. வஸந்தியைத் தூக்கிக் கொண்டு, "துஷ்டப் பெண்ணே! அப்படியா நீ சொன்னாய்?" என்று பொய்க் கோபத்துடன் கேட்டான். "அப்பதித்தான் சொன்னேன்! பின்னே என்னை ஏன் ஆத்திலே வித்துத்துப் போனே?" என்றாள் வஸந்தி. "அம்மாஞ்சி! காங்கிரஸ் எப்படி நடந்தது?" என்று சீதா கேட்டாள். "பிரமாதமாக நடந்தது!" என்றான் சூரியா.

"உன் அம்மாஞ்சி போயிருக்கிறபோது பிரமாதமாக நடக்காமல் பின் எப்படி நடக்கும்?" என்றான் ராகவன். "காங்கிரஸ் நடந்ததைப்பற்றிக் கதை கதையாகச் சூரியா சொல்கிறான். முதல்லே எல்லோரும் உட்கார்ந்து சாப்பிடுங்கள்; சமையல் ஆறிப்போகிறது. சாவகாசமாக உட்கார்ந்து கதையைக் கேட்கலாம்!" என்றாள் காமாட்சி அம்மாள். சாப்பிட்டு விட்டு உட்காரும் ஹாலுக்கு வந்த பிறகு சூரியா ஸ்ரீ சுபாஷ்சந்திரபோஸின் தலைமையில் நடந்த ஹரிபுர காங்கிரஸ் விமரிசைகளை வர்ணித்தான். ராகவன் கூட வழக்கமான அலட்சியமோ வெறுப்போ காட்டாமால் சுவாரஸ்யமாகக் கேட்டுக் கொண்டு வந்தான். கதையை முடித்துவிட்டுச் சூரியா, "எல்லாம் நன்றாய்த்தான் நடந்தது, ஆனால் எங்களுக்கு மட்டும் அவ்வளவு திருப்தி இல்லை!" என்றான். "எங்களுக்கு மட்டும், என்றால், என்ன அர்த்தம்? நாங்கள் என்பது யார்?" என்று ராகவன் கேட்டான். "சோஷலிஸ்ட் பார்ட்டியைச் சொல்கிறேன் நான் அந்தப் பார்ட்டியைச் சேர்ந்தவன்" என்றான் சூரியா. "சோஷலிஸ்ட் பார்ட்டி என்றால் என்ன?" என்று சீதா கேட்டாள். சூரியா பதில் சொல்வதற்குள் ராகவன், "சோஷலிஸ்ட் பார்ட்டி என்றால் பணக்காரன், ஏழை, புத்திசாலி, மடையன் நல்லவன், கெட்டவன், மனிதன், மாடு எல்லாவற்றையும் சரி மட்டமாக்கிச் சமுத்திரத்தில் அமுக்கிவிடுவது என்று அர்த்தம்!" என்றான். "அத்தங்கா! நீ பயந்துபோய் விடாதே! மாப்பிள்ளை தமாஷுக்காகச் சொல்கிறார்?" என்றான் சூரியா. "போகட்டும்; காங்கிரஸில் இப்போது மகாத்மா காந்தியின் செல்வாக்கு எப்படியிருக்கிறது?" என்று ராகவன் கேட்டான். "மகாத்மாவின் செல்வாக்குக்கு என்ன குறைவு?

அவருடைய செல்வாக்கினால் தானே எங்கேயோ ஒரு மூலையில் உள்ள கிராமத்தில் இந்த வருஷம் காங்கிரஸ் இவ்வளவு சிறப்பாக நடந்தது!" "காந்தியின் போக்கிலேயே விட்டால் இந்திய தேசத்தில் ஆண்டிப் பரதேசிகள்தான் மிஞ்சுவார்கள். எல்லாரும் கையில் கப்பறையை எடுக்க வேண்டியதுதான். ஆனால் பிச்சை போட யாரும் இருக்க மாட்டார்கள். காந்தியின் செல்வாக்கு இருக்கிற வரையில் இந்தியா ஒரு நாளும் உருப்பட போவதில்லை" என்று ராகவன் கோபமாகப் பேசினான். "வேண்டாமடா, ராகவா! காந்தியைப் பற்றி நீ இப்படியெல்லாம் பேசாதே! காந்தியை மகான் என்றும் அவதார புருஷர் என்றும் ஜனங்கள் சொல்கிறார்களே?" என்றாள் காமாட்சி அம்மாள். "ஜனங்கள் சொல்வதற்கென்ன? குருட்டுத்தனமாக எதை வேணுமானாலும் சொல்வார்கள்! மகாத்மாவின் செல்வாக்கைப் பற்றி உன் அபிப்பிராயம் என்ன?" என்று ராகவன் கேட்டான். "மகாத்மாவைப்பற்றி உங்களைப்போல் நான் நினைக்கவில்லை. அவர் மகான்! இந்திய தேசம் எவ்வளவோ அவரால் நன்மை அடைந்திருக்கிறது. ஆனாலும் சில விஷயங்களில் அவருடன் மாறுபடுகிறோம். உதாரணமாக, சுதேச மன்னர்களின் விஷயத்தில் மகாத்மா மிக்க பிற்போக்காக இருக்கிறார். அவர்களைப் பற்றிக் காங்கிரஸில் பேசவே கூடாது என்கிறார். நாங்களோ சுதேச மன்னர்கள் எல்லோரையும் அடியோடு ஒழித்துக் கட்ட வேண்டும் என்றும் சொல்லுகிறோம்" என்றான் சூரியா.

"தயவு செய்து நீங்கள் இரண்டு பேரும் மகாத்மா காந்தியைப் பற்றி ஒன்றும் பேசாதீர்கள் எனக்குக் கேட்க கஷ்டமா யிருக்கிறது. 'மகாத்மா காந்திதான் தெய்வம்' என்று என் அம்மா சொல்லி இருக்கிறாள். அதற்கு விரோதமாக யார் என்ன சொன்னாலும் நான் கேட்க மாட்டேன்" என்றாள் சீதா. "நீயும் கூட அரசியல் விஷயத்தைப் பற்றிப் பேச வந்து விட்டாயா?" என்றான் ராகவன். "அத்தங்கா! மகாத்மா காந்தி தெய்வமாகவே இருக்கட்டும். தெய்வத்திடம் வரம் கேட்பது உண்டல்லவா? அந்த மாதிரிதான் நாங்களும் மகாத்மாவிடம் கோரிக்கை செய்கிறோம்" என்றான் சூரியா. "தெய்வம் என்று ஒப்புக்கொண்டால் அப்புறம் வரம் கேட்பது என்ன? எந்தச் சமயம் கொடுக்க வேண்டும் என்று தெய்வத்துக்குத் தெரியாதா? நாம் கேட்டுத்தானா தெய்வம் கொடுக்க வேண்டும்?" என்றாள் சீதா. இந்தக் கேள்வி ராகவனுக்கு வியப்பையளித்தது."சூரியா! உனக்கும் உன் அத்தங்காவுக்கும்தான் சரி. அவளுடைய கேள்விக்குப் பதில் சொல்லு, பார்க்கலாம்!" என்றான்."அத்தங்காளின் சாமர்த்தியம் எங்களுக் கெல்லாம் அப்போதே தெரியுமே! அதனாலேதான் லலிதா 'அத்தங்கா அத்தங்கா' என்று உயிரை விட்டுக்கொண்டிருக்கிறாள். இராத்திரி தூக்கத்திலே கூட அத்தங்காளைப் பற்றி உளறுகிறாளாம்!" என்றான் சூரியா.

இதிலிருந்து ராஜம்பேட்டையிலும் தேவபட்டணத்திலும் உள்ள பந்து ஜனங்களைப்பற்றி பேச்சு ஏற்பட்டுச் சிறிது நேரம் நடந்தது. "சூரியா! ஹரிபுராவுக்கு நீ பம்பாய் வழியாகப் போயிருக்கலாமே? டில்லி வழியாக வந்தது தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவது போல் அல்லவா இருக்கிறது?" என்று ராகவன் கேட்டான். "உங்கள் தாயாரிடம் நான் வடக்கே போகப் போவதாகச் சொன்னேன். 'எங்களை டில்லியில் கொண்டு விட்டு விட்டுப் போயேன்' என்று சொன்னார் அதனால்தான் வந்தேன்!" "நான் என்னத்தைக் கண்டேன்? வடக்கே என்றால் டில்லிக்குப் பக்கத்திலே இருக்கும் என்று நினைத்தேன்!" என்றாள் காமாட்சி அம்மாள். "இங்கே உள்ளவர்களும் அப்படித்தான் மதராஸ்காரன் என்றால் இராமேஸ்வரத்தைப் பற்றி விசாரிப்பார்கள். சென்னை மாகாணம் முழுவதும் இராமேசுவரத்துக்குப் பத்து மைல் சுற்றளவில் இருப்பதாக இவர்களுக்கு எண்ணம்!" என்றான் ராகவன். "ராமேஸ்வரம் என்றதும் ஞாபகம் வருகிறது. ஏண்டா, அப்பா ராகவா! என்னைக் காசிக்கு எப்போ அழைத்துக் கொண்டு போகிறாய்?" என்று காமாட்சியம்மாள் கேட்டாள். "ஆகட்டும், ஆகட்டும் மெள்ள மெள்ளப் பார்க்கலாம். முதலில் டில்லியைப் பார்த்து வைப்போம். நாளைக்கு உங்களை எல்லாம் அழைத்துப் போய் டில்லி நகரத்தைச் சுற்றி காட்டலாம் என்று எண்ணி யிருக்கிறேன்." "சூரியா! நீ டில்லியைச் சுற்றிப் பார்த்திருக்கிறாயா?" என்று சீதா கேட்டாள். "இன்னும் பார்க்கவில்லை, நாளைக்குத்தான் சுற்றிப் பார்க்கலாமென்று திட்டம் போட்டிருக்கிறேன்." "பழம் நழுவி வாயில் விழுந்தது போலாயிற்று. எங்களுடன் நீயும் வந்து சேர்ந்துகொள்! பேச்சாவது சுவாரஸ்யமாயிருக்கும்!" என்றான் ராகவன்.

அன்றிரவு சீதா ஒரே உற்சாகமாக இருந்தாள். சூரியாவிடம் ராகவனுக்கு இருந்த அலட்சிய பாவமும் வெறுப்பும் நீங்கி அவனுடன் சுமுகமாகப் பேசியதையும் அவனை டில்லி சுற்றிப் பார்க்க வரும்படி அழைத்ததையும் நினைத்து நினைத்து மகிழ்ந்தாள். தூங்குவதற்கு முன்னால் அவள், சாலை முனையில் பார்த்த ஸ்திரீயைப் பற்றி ராகவனிடம் சொல்லவேண்டும் என்று உத்தேசித்தாள். ஆகையால், "இன்றைக்கு ஒரு பொம்மனாட்டியைப் பார்த்தோமே!..." என்று ஆரம்பித்தாள். "மறுபடியும் உன் பொம்மனாட்டி கதையை ஆரம்பித்து விட்டாயா?" என்றான் ராகவன். அப்போது சீதாவின் மனத்தில் இருந்த ஸ்திரீ வேறு; ராகவன் எண்ணிக்கொண்ட ஸ்திரீ வேறு. ஆனாலும் ராகவன் அவ்விதம் வெடுக்கென்று பேசியதும் சீதா சிறிது தயங்கி தனக்குள் சிந்தித்துப் பார்த்தாள். 'சந்தோஷமா இருக்கிற சமயத்தில் வேண்டாத விஷயத்தைப் பற்றிப் பேசித் தொந்தரவை விலைக்கு வாங்கிக் கொள்வானேன்?' என்று எண்ணிப் பேசாமல் இருந்துவிட்டாள். எனினும் அவளுடைய மனதிலிருந்து கையில் கத்தியுடன் சாலை முனையில் நின்ற ஸ்திரீயின் தோற்றத்தை அடியோடு அகற்ற முடியவில்லை.

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

ஆறாம் அத்தியாயம்
பாதிக் கல்யாணம்

"வெள்ளைக்காரன் ரொம்பக் கெட்டிக்காரன் என்றல்லவா இத்தனை நாள் எண்ணிக் கொண்டிருந்தேன்? அவனிடத்தில் அசட்டுத்தனம் இருக்கிறது! இல்லாவிட்டால் எங்கே பார்த்தாலும் பாழும் கோட்டையும், மயானமும் மசூதியுமாயிருக்கும் இந்த ஊருக்குத் தலைநகரத்தைக் கொண்டு வருவானா? சிவனே என்று கல்கத்தாவிலேயே இருக்கக் கூடாதோ?" இவ்விதம் டில்லியைச் சுற்றிப் பார்த்துவிட்டு வந்து வீட்டுக்குள் பிரவேசிக்கும் போது காமாட்சி அம்மாள் தன்னுடைய அபிப்பிராயத்தைத் தெரிவித்தாள். "என்ன, அம்மா, இப்படிச் சொல்கிறீர்களே? செங்கோட்டையிலே பார்த்தோமே ஷாஜஹானின் அரண்மனை? அது ஒன்று போதாதோ? என்ன அழகு! என்ன அழகு! இந்த டில்லி அரண்மனையே இவ்வளவு அழகாயிருக்கிறதே! இன்னும் ஆக்ரா அரண்மனையும் தாஜ்மகாலும் எப்படியிருக்குமோ?" என்றாள் சீதா. "எனக்கு மோத்தாகார் வாந்தாம்! தோங்கா வந்திதான் வேணும். சூரியா மாமா! என்னை நேத்திக்குத் தோங்காவிலே ஏத்திந்து போதயா?" என்றாள் வஸந்தி. ஹிந்தி பாஷையில் உள்ளது போல், வஸந்தியின் மழலை மொழியிலும் நேற்றும் நாளையும் ஒன்றாக இருந்தன. "ஆகட்டும் வஸந்தி! உன்னை டோ ங்கா வண்டியில் நேற்றைக்கும் ஏற்றிக்கொண்டு போகிறேன்; நாளைக்கும் ஏற்றிக்கொண்டு போகிறேன்!" என்றான் சூரியா.

எல்லோரும் வீட்டுக்குள் பிரவேசித்து ஹாலில் போட்டிருந்த சோபாக்களில் உட்கார்ந்தார்கள். "இங்கிலீஷ்காரன் ஏதோ தெரியாத்தனமாய் டில்லிக்கு வந்து விட்டான். இங்கிலீஷ்காரனை விரட்டி விட்டுச் சுயராஜ்யம் ஆளவேண்டும் என்று சொல்லும் சூரியா கூட இந்த ஊருக்கே வந்து சேர்ந்திருக்கானே, அம்மா! இந்த வேடிக்கைக்கு என்ன சொல்லுகிறது?" என்றான் ராகவன். "இங்கிலீஷ்காரனை விரட்டுகிறதற்கு வேறு எங்கே போகிறது. அவன் இருக்கிற இடத்துக்குத்தானே வரவேண்டும்?" என்று சூரியா கேட்டான். "அப்படியென்றால் நீ அதற்காகத்தான் டில்லிக்கு வந்திருக்கிறாய் என்று சொல்லு; இங்கிலீஷ்காரனை விரட்டிஅடிக்கப் போவது நிச்சயந்தானாக்கும்!" என்றான் ராகவன். "நாம்தான் இன்றைக்குப் பார்த்து விட்டு வந்தோமே; கோரிமுகம்மது காலத்திலிருந்து எத்தனை ராஜ்யங்கள் இந்த டில்லியில் இருந்திருக்கின்றன? அவை எல்லாம் போனது போல் இங்கிலீஷ் ராஜ்யமும் போக வேண் டியது தானே? இங்கிலீஷ்காரன் மட்டும் இங்கே சாசுவதமா இருக்கப் போகிறானோ?" என்றான் சூரியா. "யார் கண்டது இந்தப் பாழடைந்த பட்டணத்திலேதான் இருக்க வேண்டும் என்பது இங்கிலீஷ்காரனுடைய தலைவிதியாயிருந்தால்?" என்றாள் காமாட்சி அம்மாள்.

"ஏன், அம்மா! இப்படி டில்லியைப் பற்றிக் குறை சொல்கிறீர்களே? பிரிதிவிராஜனுடைய கோயிலும் அரண்மனையும் இருந்த இடம் எவ்வளவு நன்றாயிருந்தது? எனக்கு அந்த இடத்தை விட்டு வருகிறதற்கு மனதே இல்லை!" "சிவ சிவா! கோயிலை இடித்து மசூதி கட்டியிருக்கிறது! அதைப் பார்க்கிறதற்கு என்னை வேறே அழைத்துக்கொண்டு போய் விட்டீர்கள். இந்த ஊரைப் பார்த்த பாவம் காசிக்குப் போய்க் கங்கையிலே ஸ்நானம் பண்ணினால்தான் தீரும்!" என்றாள் காமாட்சி அம்மாள். "இந்த ஊரில் யமுனை இருக்கிறதே, மாமி! யமுனையும் புண்ணிய நதிதானே? யமுனையில் ஸ்நானம் செய்தால் பாவம் போய்விடாதோ?" என்றான் சூரியா. "அதென்னமோ, இந்த ஊரில் யமுனை, யமுனையாகவே எனக்குத் தோன்றவில்லை. பாகவதத்திலே சொல்லியிருக்கிற யமுனை நதி இதுதான் என்றா சொல்கிறாய்?" "சாக்ஷாத் அந்த யமுனையேதான் இது; பின்னே எப்படியிருக்கும் என்று எதிர்பார்த்தீர்கள்? யமுனைக் கரையில் கடம்ப மரத்தின் கீழே நின்று கிருஷ்ண பகவான் புல்லாங்குழல் வாசித்துக் கொண்டிருப்பார் என்று நினைத்தீர்களோ? அது துவாபரயுகம், இது கலியுகம்" என்றான் ராகவன்.

"கலியுகம் என்றுதான் நன்றாய்த் தெரிகிறதே! அடாடா! உன் தகப்பனார் பாகவதம் தசமஸ்கந்தத்திலிருந்து படித்துக் காட்டி அர்த்தம் சொல்வார். யமுனையில் கிருஷ்ண பகவானும் கோபிகா ஸ்திரீகளும் நம் கண் முன்னால் நிற்பதுபோல் இருக்கும். கிருஷ்ணனும் கோபிகைகளும் வேண்டாம். கிருஷ்ணன் மேய்த்த பசு மாட்டைக் கூடக் காணோமே. மந்தை மந்தையாய் எருமை மாடு யமுனையில் விழுந்து கிடக்கிறதே?" "கிருஷ்ணன் பசு மாடு மட்டுந்தான் மேய்த்தாரோ, எருமை மாடும் சேர்த்து மேய்த்தாரோ! நமக்கு எப்படி நிச்சயமாய்த் தெரியும்?" என்று ராகவன் சொன்னான். "கிருஷ்ணன் ஒருநாளும் எருமை மாடு மேய்த்திருக்க மாட்டார். பசு மாடு தான் மேய்த்திருப்பார்? பாகவதத்தில் சொல்லியிருப்பதெல்லாம் பொய்யா இருக்குமா!" "ஒருவேளை பாகவதத்தில் வரும் கிருஷ்ண பகவான் பசு மாடு மேய்த்திருக்கலாம். ஆனால் இப்போதெல்லாம் சினிமாக்களில் வரும் கிருஷ்ண பரமாத்மாக்கள் எருமை மேய்க்கத்தான் லாயக்கானவர்கள்!"

"சினிமாவும் கினிமாவும் நான் என்னத்தைக் கண்டேன்?.. அது எப்படியாவது இருக்கட்டும் என்னைக் காசிக்கு எப்போது அழைத்துக் கொண்டு போகிறாய், ராகவா!" "காசிக்குப் போனால் இதைவிட அதிகமாய்க் குறை சொல்லுவீர்கள்! கங்கை நதி கூடப் பார்க்கிறதற்கு ஒரு மாதிரியாகவே இருக்கும்? நம்ம காவேரி தீரத்தைப்போல் இரண்டு பக்கமும் ஒரே சோலையாயிருக்கும் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள்!" "ஏன் ஸார்! காசிக்குப் போவது இருக்கட்டும்! ஆக்ராவுக்கு எப்போது போகிறது?" என்று சீதா கேட்டாள். "ஆக்ராவைப் பார்க்காவிட்டால் நீ தூங்கமாட்டாய் போலிருக்கிறது. வருகிற பௌர்ணமியன்று போகலாம். சூரியா! நீயும் வருகிறாய் அல்லவா!" என்றான் ராகவன். "கட்டாயம் வருகிறேன் எங்கே நீங்கள் என்னைக் கூப்பிடாமல் இருந்து விடுவீர்களோ என்று என்னுடைய நெஞ்சு திக், திக் என்று அடித்துக் கொண்டிருக்கிறது!" என்றான் சூரியா. அன்று டில்லியைப் பார்க்கச் சூரியாவையும் அழைத்துக் கொண்டு சென்றது ராகவனுக்குச் சில விஷயங்களில் மிகவும் சௌகரியமாயிருந்தது. சீதா தன்னையே எல்லாக் கேள்விகளும் கேட்பதற்குப் பதிலாக மாற்றி மாற்றிச் சூரியாவையும் சில கேள்வி கேட்டாள். மிக உற்சாகமாகச் சூரியா பதில் சொல்லிக் கொண்டு வந்தான். வேடிக்கை பார்க்கப் போகும் இடங்களில் ஸ்திரீகளுடன் பேசுவதற்கும் அவர்களுடைய கேள்விகளுக்குப் பதில் சொல்லுவதற்கும் ஒரு தனிப் பொறுமையும் சாமர்த்தியமும் வேண்டும். ராகவனுக்கு அந்த ஆற்றல் இல்லை; சூரியாவுக்கு இருந்தது. இது ராகவனுக்கு மிகவும் சௌகரியமாயிற்று.

பழைய அரண்மனையையோ, மசூதியையோ, கோட்டையையோ, பார்க்கப் போனால், ராகவன் ஓரிடத்தில் உட்கார்ந்து கொண்டு, "நீங்கள் போய்ச் சுற்றிப் பார்த்துவிட்டு வாருங்கள்!" என்று சொல்லிவிடுவான். அவர்கள் சுற்றிப் பார்த்துக் கொண்டிருக்கையில் இவன் தன்னுடைய தனிப்பட்ட சிந்தனைகளில் மனதை ஈடுபடுத்திக் கொண்டிருப்பான். அப்படித் தனிப்படச் சிந்தனை செய்வதற்கு என்ன இருந்தது என்று கேட்டால், ஆம், ஒரு விஷயம் இருக்கத்தான் இருந்தது. அந்த இடங்களுக்கெல்லாம் முன்னொரு சமயம் யாரை அழைத்துக் கொண்டு வந்து பார்த்தானோ, அந்தப் பெண்ணைப் பற்றிய சிந்தனைதான்! அன்றைக்கு டில்லி ரயில்வே நிலையத் தில் தான் பார்த்தவள் தாரிணியா, இல்லையா? இல்லையென்றால், அவ்வளவு தத்ரூபமாகத் தாரிணியைப் போலவே எப்படி உருவம் பெற்றிருக்க முடியும்? இரண்டு பெண்களுக்குள் அவ்வளவு அபூர்வமான உருவ ஒற்றுமை இருக்க முடியுமா? தாரிணியாக இருந்தால், அவள் இறந்த செய்தி பொய்யாகத் தானே இருக்க வேண்டும்? தாரிணியாகவே இருக்கட்டும், அல்லது அவளைப் போல அபூர்வ உருவ ஒற்றுமையுள்ளவளாக இருக்கட்டும். அந்தப் பெண்ணை மறுபடியும் ஒரு தடவை சந்தித்து விசாரித்து உண்மையைத் தெரிந்து கொண்டாலன்றித் தனக்கு மனநிம்மதி ஏற்படாது என்று ராகவனுக்குத் தோன்றியது. ஆனால் அவளை எப்படிச் சந்திப்பது? எங்கேயென்று தேடுவது? ஆக்ரா பக்கம் போகும் பாசஞ்சர் ரயிலிலேதான் அவள் ஏறியிருந்தாள் என்பது ராகவனுடைய நினைவில் இருந்தது. ஒருவேளை ஆக்ராவிலேயே அவள் இருந்தாலும் இருக்கலாம். அல்லது ஆக்ரா போகும் போது வழியில் எங்கேயாவது அவளைச் சந்திக்கலாம். யார் கண்டது? உலகத்தில் இதைக்காட்டிலும் அதிசயமான எத்தனையோ சம்பவங்கள் நடந்திருக்கவில்லையா? இம்மாதிரியான பற்பல நோக்கங்களுடனே ராகவன் அடுத்த பௌர்ணமியன்று ஆக்ராவுக்குப் போவதென்று திட்டம் போட்டான்.

சூரியா வருகிறதாகச் சொன்னதும், "நீங்களும் வருகிறீர்களா அம்மா?" என்று ராகவன் கேட்க, "போதும்! போதும்! இன்றைக்குப் பார்த்தது ஏழு ஜன்மத்துக்குப் போதும்! பிருந்தாவனம், வடமதுரை, காசி இப்படிப் புண்ணிய க்ஷேத்திரங்களுக்குப் போவதானால் சொல்லு! வருகிறேன். பாழும் கோட்டையையும், இடிந்த மசூதியையும் பார்க்கப் போவதாயிருந்தால் நான் வரவில்லை! குழந்தையைப் பார்த்துக்கொண்டு வீட்டிலேயே இருக்கிறேன்" என்றாள் காமாட்சி அம்மாள். "ரொம்ப சரி! நானும் அம்மாதிரிதான் எண்ணினேன். இந்தத் தடவை நாங்கள் ஆக்ராவுக்குப் போய்விட்டுத் திரும்பி விடுகிறோம். அப்புறம் ஒரு தடவை சூரியாவையும் உங்களையும் சேர்த்து க்ஷேத்திர யாத்திரைக்கு அனுப்பி விடுகிறேன். ஏன், சூரியா! என்ன சொல்லுகிறாய்? அம்மாவை அழைத்துக் கொண்டு போய் வருகிறாயா?" என்று ராகவன் கேட்டான். "அதற்கென்ன ஆட்சேபணை? இந்தியாவின் புராதன க்ஷேத்திரங்களைப் பார்க்க வேண்டுமென்று ஆசை எனக்கும் இருக்கிறது. மாமியைப் போல் பக்தியுள்ளவர்களை அழைத்துப் போகக் கொடுத்து வைக்க வேண்டாமா?" என்று சொல்லி விட்டுச் சூரியா புறப்பட்டான். அவன் போன பிறகு, "ராகவா! சூரியா தங்கமான பிள்ளை, எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது; என் தங்கை பெண் அம்புஜத்துக்கு இரண்டு வருஷமாய் வரன் தேடிக் கொண்டிருக்கிறார்களே? நம்ம சூரியாவுக்குக் கொடுத்தால் என்ன?" என்றாள் காமாட்சி அம்மாள். "கொடுத்தால் என்ன? திவ்யமாகக் கொடுக்கலாம். நீங்கள் எப்போது தீர்மானித்து விட்டீர்களோ, அப்போது பாதி கலியாணம் நடந்தது போலத்தான்! சூரியா சம்மதித்தால் பாக்கிப் பாதி கலியாணம் செய்துவிடலாம்."

"எல்லாம் தானே சம்மதித்துவிடுகிறான்; அம்புஜத்துக்கு என்ன குறைச்சல்? கொஞ்சம் கறுப்பாயிருந்தாலும் முகத்தில் நல்ல களை. சூரியாதான் காங்கிரசில் சேர்ந்தவனாயிற்றே! அவன் அப்படியெல்லாம் ஒன்றும் தகராறு பண்ணமாட்டான்." "சூரியா சம்மதித் தால் எனக்கு ஒரு ஆட்சேபமும் இல்லை. நான் குறுக்கே நிற்கவில்லை தாராளமாக அம்புஜத்தைச் சூரியாவுக்குக் கலியாணம் பண்ணி வையுங்கள்!" "நம்ம சீதாவும் கொஞ்சம் என்னுடன் சேர்ந்து சொன்னால் சூரியா சம்மதித்து விடுவான்" என்றாள் காமாட்சி அம்மாள். "அதென்னவோ, அம்மா! சூரியாவுக்குக் கலியாணப் பேச்சு அவ்வளவு பிடிக்கவில்லைபோல் தோன்றுகிறது. சூரியாவின் அம்மா யாரோ ஒரு பெண்ணை அவனுக்குப் பார்த்திருந்தாளாம். அது பிடிக்காமல் தான் சூரியா வீட்டில் சண்டை போட்டுக் கொண்டு வெளியே கிளம்பிவிட்டான் என்று பிரஸ்தாபம். என்னைக் கேட்டால், கலியாண விஷயத்தை மட்டும் அவரவர்களுக்கே விட்டு விடுவது நல்லது என்பேன். தாயார் தகப்பனார் தலையிடவே கூடாது. இஷ்டப் பட்டவர்களைக் கலியாணம் செய்து கொள்வதற்குத் தடை செய்யவும் கூடாது; இஷ்டப்படாதவர்களைக் கலியாணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தவும் கூடாது. அப்படி வற்புறுத்துகிற தாயார் தகப்பனாரைச் சுண்ணாம்புக் காளவாயில் போட்டு விட வேண்டும்!" என்று சீதா ஆத்திரமாகப் பேசினாள். இவ்விதம் சீதா கூறியது இது இரண்டாவது தடவை. அதைக் கேட்டு காமாட்சி அம்மாளின் முகம் சுருங்குவதை ராகவன் கவனித்தான்.

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

ஏழாம்அத்தியாயம்
லலிதாவின் கடிதம்

"என் உயிருக்குயிரான தோழி சீதாவுக்கு லலிதா எழுதிக் கொண்டது. நீ டில்லிக்குப் போய்ச் சேர்ந்ததும் எழுதிய கடிதத்தைப் பெற்று அளவில்லாத மகிழ்ச்சி அடைந்தேன். அத்தனை தூரம் போன பிறகும் நீ என்னை மறந்து விடாமல் கடிதம் எழுதியிருக்கிறபடியால் நீதான் என்னுடைய உண்மையான பிராண சிநேகிதி என்பதில் சந்தேகம் என்ன? நாம் இரண்டு பேரும் உயிரோடிருக்கும் வரையில் நம்முடைய சிநேகம் இப்படியே இருந்து வரவேண்டுமென்று கடவுளைப் பிரார்த்திக்கிறேன். புதிய இடத்தில் புதுக் குடித்தனம் போட்டதில் உனக்கு வேலை அதிகமாயிருக்கும். ஆகையினால் தான் அவ்வளவு கொஞ்சமாக எழுதிவிட்டாய் என்று நினைக்கிறேன்! வார்த்தைகளை எண்ணிப் பார்த்தேன், மொத்தம் முப்பத்தாறு வார்த்தைகள் இருந்தன. இவ்வளவு கொஞ்சமாக நீ இதற்கு முன் எப்போதும் எழுதியதில்லை. புதுக் குடித்தனம் போடும் வேலையெல்லாம் தீர்ந்ததும் நீ எப்போதும் போல் விவரமாகக் கடிதம் எழுத வேண்டும் ஏழெட்டுப் பக்கத்துக்கு குறையக் கூடாது. நான் ராஜம்பேட்டையிலிருந்து இந்தக் கடிதத்தை எழுதுவது உனக்கு ஒருவேளை அதிக ஆச்சரியமாயிருக்கும்; ஒருவேளை ஆச்சரியமாயிராது. ஆனால் நீ கொஞ்சமாவது ஆச்சரியப்படுவாய் என்று நம்புகிறேன். நான் இங்கே எதற்காக வந்தேன் என்று தெரிந்தால் கட்டாயம் ஆச்சரியப்பட்டே தீர்வாய்.

சீதா! நான் சொல்லாமலே காரணத்தைக் கண்டுபிடி, பார்க்கலாம். கண்டுபிடிக்க முடியவில்லையா? ஒரு 'க்ளூ' கொடுக்கிறேன். என்னுடைய கை ஒவ்வொன்றிலும் இப்போது அரை மணங்கு பளுவுள்ள வளையல்கள் ஏறியிருக்கின்றன. முழங்கை வரையில் வளையல் மயந்தான்! இப்போது காரணம் தெரிகிறதா, சீதா! எனக்கு வளைகாப்புக் கல்யாணம் நடந்து நாலு நாள் ஆகிறது. வளை காப்புக்காகத் தான் இந்த ஊருக்கு வந்தேன். அடுத்த மாதம் சீமந்தம் வைத்திருக்கிறது. அதற்குள் தேவபட்டணத்துக்குத் திரும்பிப் போக வேண்டும். சீமந்தக் கலியாணம் புக்ககத்தில்தான் நடக்க வேண்டுமென்று உனக்குத் தெரியுமோ, இல்லையோ? என் அம்மா இப்போதுதான் உண்மையான சந்தோஷம் அடைந்திருக்கிறாள். நடுவிலே ரொம்பவும் என்னைத் திட்டிக் கொண்டும் குறைபட்டுக் கொண்டும் இருந்தாள். 'உடன் எடுத்த பெண்கள் எல்லாரும் கையில் இரண்டு வயதுக் குழந்தையுடன் இருக்கிறார்கள்; நீ இப்படி மரமாயிருக்கிறாயே, ஜடமே!' என்று ஓயாமல் பிடுங்கி எடுத்துக் கொண்டிருந்தாள். 'குழந்தை பிறப்பதும் பிறக்காததும் கடவுளுடைய செயல் அல்லவா?' என்று நான் எவ்வளவு எடுத்துச் சொல்லியும் அம்மாவின் மனது சமாதானம் அடையவில்லை.

இப்போதுதான் அவளுடைய மனக் குறை தீர்ந்து சந்தோஷமாயிருக்கிறாள்; என்னைத் திட்டாமலும் இருக்கிறாள். திட்டு வதற்குப் பதிலாக 'இந்தப் பெண் பெற்றுப் பிழைக்க வேண்டுமே? பிரசவத்துக்கு இங்கே அனுப்புவார்களோ, அனுப்ப மாட்டார்களோ, தெரியவில்லையே! அம்பிகே! பராசக்தி!' என்று ஓயாமல் புலம்பிக் கொண்டிருக்கிறாள். ஓயாத புலம்பலாயிருந்தாலும் சந்தோஷமான புலம்பல் தான். சீதா! உனக்கு வளைகாப்பு, சீமந்தம் நடைபெறவில்லை என்பது எனக்கு ஞாபகம் வருகிறது. உன் அகத்துக்காரர் சீமந்தத்துக்காகச் சீமையிலிருந்து வர முடியாது என்று சொல்லி விட்டதாக எழுதியிருந்தாயல்லவா? உன் அகத்துக்காரர் அவ்விதம் எழுதியது ஒரு விதத்தில் நன்மையாக முடிந்தது. அதுவரையில் என் அம்மாவின் மனதில் உன் பேரில் கொஞ்சம் கோபம் இருக்கத் தான் இருந்தது. என்னைப் பார்ப்பதற்கு என்று வந்தவர் உன்னைக் கலியாணம் செய்து கொண்டது பற்றித்தான் கோபம். ஆனால் உனக்குச் சீமந்தம் நடக்கவில்லை என்ற செய்தியை அறிந்ததும் அம்மாவுக்கு உன் பேரில் இருந்த கோபம் மாறிவிட்டது. 'அந்தப் பெண் சீதா இங்கே நல்ல வேளையாக இருந்தாளோ, அப்பேர்ப்பட்ட மாப்பிள்ளை எனக்கு வாய்க்காமல் பிழைத்தேனோ!' என்று உற்சாகத்துடன் அடிக்கடி சொல்லிக் கொண்டிருக்கிறாள்.

ஆனால் என் அம்மாவைப் போல் நானும் நினைப்பதாக நீ எண்ணிக் கொள்ளாதே! ஒருநாளும் இல்லை. 'வளைகாப்பு நடக்காவிட்டால் என்ன, சீமந்தமும் நடக்காவிட்டால்தான் என்ன? உன் கணவர் உன்னிடம் வைத்திருக்கும் அன்புக்கு ஈடு ஏது, இணை ஏது? புருஷனுடைய அன்பும் ஆதரவும் முக்கியமா? வளைகாப்பும் சீமந்தமும் முக்கியமா? சாஸ்திரம் என்பார்கள்; சம்பிரதாயம் என்பார்கள். சாஸ்திரமாவது, மண்ணாங்கட்டியாவது? வெள்ளைக்காரர்களும், கிறிஸ்தவர்களும் சீமந்தமா பண்ணிக் கொள்கிறார்கள்! அவர்களுடைய குழந்தைகள் நன்றாயில்லையா?' என்று சூரியா ஒரு சமயம் சொன்னான். அவன் சொன்னதை நானும் ஆமோதித்தேன். என்னுடைய அபிப்பிராயத்தில், கணவனுடைய அன்புக்கு மிஞ்சிய பாக்கியம் இந்த உலகத்தில் ஒன்றுமேயில்லை. இந்த விஷயத்தில் நீ மிக்க பாக்கியசாலி நான் அவ்வளவு பாக்கியம் செய்யவில்லை.

இவ்விதம் நான் எழுதியதிலிருந்து என் கணவர் பேரில் நான் புகார் கூறுவதாக எண்ணாதே! இவர் என்னிடம் வைத்திருக்கும் ஆசைக்கும் அன்புக்கும் அளவே கிடையாது. ஆனாலும் ஒரு விஷயத்தைச் சொல்லத்தான் வேண்டியிருக்கிறது. என் குறையை உன்னிடம் சொல்லாமல் வேறு யாரிடம் சொல்வேன்? என் ஆருயிர்த் தோழி! இத்தனை நாள் சொல்லாததை, எழுதாததை இன்று தெரியப்படுத்துகிறேன். எவ்வளவோ இவர் என் பேரில் ஆசையுள்ளவராயிருந்தும் பல விஷயங்களில் அம்மாவுக்குப் பிள்ளையா யிருக்கிறார்! அம்மா இட்ட கோட்டை இவர் தாண்டுவதில்லை. மற்ற காரியங்களில் அம்மாவிடம் பக்தியோடு இருக்கட்டும், நான் வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் தாலி கட்டிய மனைவி விஷயத்திலே கூடவா அப்படி இருக்கிறது? அம்மா உத்தரவு கொடுத்தால் தான் என்னை எங்கேயாவது அழைத்துப் போவார். இதைப் பற்றி நான் எப்போதாவது குறை தெரிவித்துக் கொண்டால், 'உன்னிடம் எனக்குள்ள அந்தரங்க அன்பு உனக்குத் தெரியாதா? அம்மா இஷ்டப்படி நடக்காவிட்டால் வீட்டில் வீண் கலகம் ஏற்படும். பொறுத்தார் பூமி ஆள்வார்!' என்று உபதேசம் செய்கிறார்.

என் மாமியாரின் குணத்தைப்பற்றி முன்னமே குறிப்பாக எழுதியிருக்கிறேன், சீதா! கலியாணத்தின் போது எவ்வளவு பரம சாதுவாயிருந்தாள்! அப்புறம் சீக்கிரத்தில் தன்னுடைய சொரூபத்தைக் காட்டி விட்டாள். கலியாணத்தின்போது சீர்வகையறா சரியாகச் செய்யவில்லையென்று இரண்டு வருஷம் சாந்திக் கலியாணம் பண்ணாமலே வைத்திருந்தாள். அப்பா சரணாகதி என்று அவள் காலில் விழுந்து அவள் இஷ்டப்படியெல்லாம் சீர் செய்ய ஒப்புக்கொண்ட பிறகுதான் சம்மதம் கொடுத்தாள். சாந்திக் கலியாணத்தின் போது அவளுடைய இஷ்டப்படியெல்லாம் சீர் செய்த பிறகாவது சந்தோஷம் அடைந்தாளா? அதுவும் இல்லை. இத்தனை நாள் ஒருவரிடமும் சொல்லாததை உன்னிடம் இப்போது சொல்கிறேன் சீதா! என் மாமியார் ரொம்பப் பொல்லாதவள், ராட்சஸியேதான்! என்னை அவள் படுத்திவைக்கிற பாட்டுக்கு அளவேயில்லை. ஓயாமல் ஒழியாமல் என் மேல் புகார் செய்து கொண்டிருப்பதே அவளுக்கு வேலை. நான் எது செய்தாலும் அவளுக்குப் பிசகாகப்படுகிறது. ஒரு காரியத்தைச் செய்யவில்லை என்றால் ஏன் செய்யவில்லை என்று கேட்கிறாள். 'சுயபுத்தி வேண்டாமா? எதுவும் ஒருவர் சொல்லித் தான் செய்ய வேண்டுமா?' என்கிறாள். நானாக ஏதாவது செய்து விட்டாலோ, 'உன்னை யார் செய்யச் சொன்னது? நான் ஒருத்தி இருக்கிறேனே கேட்கக் கூடாதா?' என்கிறாள். தொட்டதற்கெல்லாம் எரிந்து விழுகிறாள், வேண்டாம் என்கிற நாட்டுப்பெண் கை பட்டால் குற்றம் கால் பட்டால் குற்றம் ஒன்றும் படாமலிருந்தாலும் குற்றம் என்பதாக இருக்கிறது.

என்னுடைய நாத்தனார் ஒருத்தியைக் கொடுத்திருக்கிற இடத்தில் அவள் அவ்வளவாகச் சுகப்படவில்லையாம்; அவளை ரொம்பக் கஷ்டப்படுத்துகிறாளாம். அதற்கு நான் என்னடி செய்வேன்? அந்தக் கோபத்தை எல்லாம் என் பேரில் காட்டுகிறாள் என் மாமியார்! நன்றாயிருக்கிறதல்லவா? இவர் இருக்கிறாரே, இவரைப்பற்றி என்ன சொல்வது என்றே எனக்குத் தெரியவில்லை. என் பேரில் ரொம்ப ஆசையாகத்தானிருக்கிறார். ஆனால் ஆசை மட்டும் இருந்து என்ன பிரயோசனம். 'அம்மாவுக்கு இது பிடிக்காது; அம்மாவுக்கு அது வருத்தம் தரும்' என்று ஓயாமல் சொல்லிக் கொண்டிருக்கிறாரே தவிர, ஏதடா, இவளும் ஒரு மனுஷிதானே என்று நினைத்துப் பார்ப்பதேயில்லை! தாயார் தகப்பனாரை விட்டு, அண்ணன் தம்பிகளை விட்டு, பிறந்த ஊரையும் வீட்டையும் தெரிந்த மனுஷாள் எல்லாரையும் விட்டுத் தம்மையே கதியென்று நம்பி வந்தவளாயிற்றே என்று ஒரு தடவையாவது எண்ணிப் பார்த்திருப்பார் என்று தோன்றவில்லை. தேவபட்டணத்தில் இத்தனை நாள் இருந்தேனே? ஒரு நாளைக்கு என்னை இவர் ஒரு சினிமா பார்க்க அழைத்துப் போனதில்லை. ஒருநாள் சாயங்காலம் என்னை இந்த ஊர் நந்தவனத்துக்கு அழைத்துப் போனதில்லை. பழைய காலத்து மனுஷர்களாயிருந்தால் கோயில் குளம் தேர் திருநாளுக்காவது அழைத்துப் போவார்களே? அதுவும் இல்லை. கொஞ்சம் நாளைக்கு முன்னால் பண்டித ஜவஹர்லால் நேரு இந்த ஊருக்கு வந்திருந்தார். அவருடைய பிரசங்கத்தைக் கேட்க ஊரெல்லாம் திரண்டு போனார்கள். நானும் வருகிறேன் என்று ஆனமட்டும் சொன்னேன்.

'அம்மா கோபித்துக் கொள்வாள்' என்று சொல்லிவிட்டுப் போய் விட்டார். எதற்கு எடுத்தாலும் 'அம்மா, அம்மா, அம்மா' தான்! எனக்கு ஒரு நாள் கோபமாயிருந்தது. 'எத்தனை நாள் இப்படி என்னை ஜெயிலில் வைத்திருக்கப் போகிறீர்கள்?' என்று கேட்டு விட்டேன். வழக்கம் போல் புன்சிரிப்புச் சிரித்துவிட்டு, 'கொஞ்சம் நாள் பொறுத்துக் கொண்டிரு. நாம் தனிக் குடித்தனம் போய் விடுவோம்; அப்புறம் நீ வைத்ததுதான் சட்டம். இரண்டு பேரும் கைகோத்துக் கொண்டு தினம் தினம் தெருவில் ஊர்கோலம் போவோம்' என்று சொன்னார்.உண்மையாகத்தான் சொன்னாரா பரிகாசத்துக்குச் சொன்னாரா என்று யோசித்து யோசித்துப் பார்க்கிறேன் நிச்சயம் தெரியவில்லை. இவர் தனிக் குடித்தனம் போவார் என்ற நம்பிக்கை எனக்கு உண்டாகவில்லை. ஒவ்வொரு சமயம் இவருக்கு என்னத்துக்கு இந்த வக்கீல் வேலை என்று தோன்றுகிறது. எங்கேயாவது தூர தேசத்தில், பம்பாய் - கல்கத்தா - டில்லியில், ஏதாவது ஒரு உத்தியோகம் சம்பாதித்துக் கொள்ளக்கூடாதா என்று தோன்றுகிறது. நல்ல சமயம் பார்த்துச் சொல்லலாம் என்று இருக்கிறேன். என்னுடைய அதிர்ஷ்டம் எப்படியிருக்கிறதோ?

சீதா! நீ பாக்கியசாலி! எல்லா விஷயத்திலும் என்னுடைய நிலைமைக்கு நேர்மாறாயிருக்கிறது உன்னுடைய நிலைமை. உன் மாமனாரும் மாமியாரும் உன்னைத் தாங்குகிறார்கள். தரையில் உன் கால் படக்கூடாது என்று அவ்வளவு அன்பாய் இருக்கிறார்கள். கணவரோ இந்தியாவின் தலைநகரத்தில் உத்தியோகம் பார்க்கிறார். கலியாணம் ஆன உடனேயே டில்லிக்கு அழைத்துப் போனாரே! இப்போது கேட்க வேண்டுமா! எல்லா இடங்களுக்கும் உன்னை அழைத்துப் போவார். தினம் தினம் சினிமாவுக்குப் போவீர்கள். ஏதோ நீயாவது இப்படிச் சந்தோஷமாயிருக்கக் கொடுத்து வைத்திருக்கிறாயே என்பதை எண்ணித்தான் இப்போதெல்லாம் நான் சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கிறேன். இந்த ராஜம்பேட்டைக்கு வந்தது முதல் எனக்கு உன்னுடைய ஞாபகமே வந்து கொண்டி ருக்கிறது. தினம் தினம் தபால் ரன்னர் 'ஜிங் ஜிங்' என்று மணி அடித்துக் கொண்டு வருகிற சத்தத்தைக் கேட்டதும், பம்பாயிலிருந்து உன் கடிதத்தை எதிர்பார்த்து நான் தபாலாபீஸுக்கு ஓடிய காலம் நினைவுக்கு வருகிறது.

குளத்தங்கரைக்குப் போனால், படிக்கட்டுகளில் உட்கார்ந்து நாம் மனோராஜ்யம் செய்ததெல்லாம் நினைவுக்கு வருகிறது. நீ சொன்ன கதையெல்லாம் ஞாபகம் வருகிறது. லைலா மஜ்னூன், அனார்க்கலி, ரோமியோ ஜூலியட், சகுந்தலை, சம்யுக்தை முதலியவர்கள் எதிரில் வந்து நிற்கிறார்கள், அடியே! காதல் காதல் என்று சொல்வதெல்லாம் உண்மையிலும் உண்டா? அல்லது கதைகளிலே மட்டுந்தானா? இத்தனை நாளும் இந்தியாவின் சக்ரவர்த்தியாயிருந்த எட்டாவது எட்வர்ட் ராஜா யாரோ ஒரு பெண்ணின் காதலுக்காக ராஜ்யத்தைத் துறந்து விட்டாராமே? இது உண்மையா, சீதா! இப்படியெல்லாம் நடக்கக்கூடும் என்று என்னால் நம்ப முடியவில்லையே? நேற்று அம்மாவும் நானும் சுண்டுவும் வண்டி கட்டிக் கொண்டு காவேரிக்குக் குளிப்பதற்குப் போயிருந்தோம். போகும் போதும் வரும்போதும் உன்னுடைய நினைவாகவே இருந்தது. வழியில் மதகடியில் தபால்கார பாலகிருஷ்ணனுடன் சூரியா குத்துச் சண்டை போட்டுக் கொண்டிருந்த காட்சி அப்படியே எதிரில் நடப்பது போல் இருந்தது. சீதா! சூரியா உங்களுடன் டில்லிக்கு வந்ததையும், வழியில் உங்களுக்கு ஒத்தாசையாக இருந்ததையும் உன் கடிதத்திலிருந்து அறிந்து மிகவும் சந்தோஷம் அடைந்தேன். ஒருவேளை டில்லியிலேயே சூரியா தங்கிவிடலாம் என்று அவன் சொன்னதாக எழுதியிருக்கிறாய். ஏனென்றால், நீ அவனைக் கவனித்துக் கொள்வாய் என்கிற நம்பிக்கை எனக்கு உண்டு. சூரியா, ஏன் திடீரென்று படிப்பை விட்டுவிட்டான்? ஏன் இப்படி உலகத்தையே வெறுத்தவன் போலப் பேசுகிறான் என்று கேட்டிருந்தாய். அப்போது எனக்குத் தெரியவில்லை. இந்தத் தடவை ராஜம்பேட்டைக்கு வந்தபோது தான் தெரிந்தது.

என் மூத்த தமையன் கங்காதரன் இருக்கிறானே, அவனை உனக்கு அதிகமாகத் தெரியாது. ஒரே ஒரு தடவை நம்முடைய கலியாணத்தின் போது மட்டுந்தான் நீ பார்த்திருக்கிறாய். கங்காதரனை எனக்கு எப்போதுமே பிடிக்காது; முரட்டுக் குணம். அவனால் நம்முடைய கலியாணத்தின் போது ஒரு பெரிய சங்கடம் நேர்வதற்கு இருந்ததாம். குடியானத் தெரு ஆள் ஒருவனை, சொன்ன உடனே ஏதோ ஒரு வேலையைச் செய்யவில்லை என்பதற்காகக் கங்காதரன் அடித்து விட்டானாம். குடியானத் தெரு ஆட்கள் கட்டுப்பாடு பண்ண ஆரம்பித்து விட்டார்களாம். இதைத் தெரிந்து கொண்டு சூரியா குடியானத் தெருவுக்குப் போய் அண்ணாவுக்குப் பதிலாக மன்னிப்புக் கேட்டுக் கொண்டானாம். இதன் பேரில் குடியான ஆட்கள் சமாதானம் அடைந்தார்களாம். அடுத்த கோடை லீவுக்கு இரண்டு பேரும் ஊருக்கு வந்திருந்தபோது கங்காதரன் சூரியாவைச் சண்டைப் பிடித்தானாம். 'எனக்காக உன்னை யாரடா மன்னிப்புக் கேட்டுக் கொள்ளச் சொன்னது?' என்று. சூரியா ஏதோ பதில் சொன்னானாம்.அதற்குப் பதிலாக அண்ணா அவனை அடித்தானாம். சூரியா அடியைப் பொருத்துக் கொண்டு பொறுமையாயிருந்தானாம்.

இப்படிச் சூரியா இருந்தும் கங்காதரனுடைய கோபம் தீரவில்லை, மனஸ்தாபம் முற்றிக் கொண்டிருந்தது. போன வருஷம் சூரியா இங்கே வந்திருந்தபோது ஏதோ மனைக்கட்டுத் தகராறில் சூரியா குடியானவர்கள் கட்சி பேசினானாம். மறுபடியும் கங்காதரன் சூரியாவை அடித்து விட்டானாம். அக்கிரகாரத்தில் எல்லாரும் கங்காதரன் கட்சியாம். இதனால் சூரியா மனக்கசப்பு அடைந்து 'உங்கள் சொத்துக்களை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்; எனக்குப் பங்கு வேண்டாம்' என்று சொல்லிவிட்டுக் கிளம்பி விட்டானாம். குடும்பத்துப் பணம் வேண்டாம் என்பதற்காகவே படிப்பையும் விட்டு விட்டானாம். இந்த விவரமெல்லாம் இந்தத் தடவை ராஜம்பேட்டைக்கு வந்த போதுதான் எனக்கு நன்றாய்த் தெரிந்தது. ஏனெனில், அம்மாவும் அப்பாவும் ஓயாமல் சூரியாவைப் பற்றிப் பேசி வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். சில சமயம் 'உன்னால் தான் வந்தது' 'உன்னால் தான் வந்தது' என்று சண்டை பிடித்துக் கொள்கிறார்கள்.

"சீதா! எனக்குச் சூரியாவைப் பற்றி நினைக்க நினைக்க வருத்தமாயிருக்கிறது. சூரியா ரொம்ப நல்ல பிள்ளையடி! என்னிடம் அவனுக்கு எவ்வளவு ஆசை தெரியுமா! என்னிடம் மட்டும் என்ன? உன்னிடத்தில் கூட அவனுக்கு எவ்வளவு அபிமானம் உண்டு. டில்லியில் இருக்கும் வரையில் அவனை நீ கவனித்துக்கொள். வேளா வேளைக்குச் சாப்பிடச் சொல். சூரியாவை மட்டும் நீ கொஞ்சம் கவனித்துக் கொண்டால் என் அம்மா கூட உன் பேரில் ரொம்ப சந்தோஷப்படுவாள்? இந்தக் கடிதம் ரொம்ப ரொம்ப நீளமாய்ப் போய் விட்டது. இது நான் மூன்று நாளாய் எழுதி இன்றைக்கு முடிக்கிறேன். என் மனத்திற்குள் வெகு நாளாய் வைத்திருந்ததை எல்லாம் கொட்டிவிட்டேன். புக்ககத்தில் இருக்கும்போது இவ்வளவு நீளம் கடிதம் எழுத எனக்கு அவகாசம் ஏது? மேலும் அங்கே இருக்கும் போது இதையெல்லாம் கடிதத்தில் எழுதவும் முடியாது. யாராவது பார்த்துவிடுவார்களோ என்று பயமாயிருக்கும். ஏதாவது நான் அசட்டுத்தனமாக எழுதியிருந்தாலும் மன்னித்துக்கொள். இந்த உலகத்தில் என்னுடைய அருமைத் தோழி நீ ஒருத்தித்தான். என் மனதில் உள்ள குறையைச் சொல்லாமல் வேறு யாரிடம் சொல்வேன்? சீக்கிரம் விவரமாகப் பதில் எழுது. இப்படிக்கு, சதா உன் நினைவாகவேயிருக்கும் அன்பார்ந்த சிநேகிதி, லலிதா.

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

எட்டாம் அத்தியாயம்
சீதாவின் பதில்

லலிதாவின் கடிதம் சீதாவின் உள்ளத்தில் பலவித உணர்ச்சிகளை உண்டாக்கியது. லலிதாவின் புக்கக வாழ்க்கையைக் குறித்து அனுதாபம் ஏற்பட்டது. அதே சமயத்தில் லலிதாவின் நிலையுடன் தன்னுடைய நிலைமையை ஒப்பிட்டுப் பார்த்தபோது அவளுடைய அந்தரங்கத்தில் ஒருவித மகிழ்ச்சியும் உண்டாயிற்று. "என்னதான் இருந்தாலும் இவள் இவ்வளவு குறை சொல்லிப் புலம்பக் கூடாது!" என்று ஒரு பக்கத்தில் தோன்றியது. உடனே, "பாவம்! வேறு யாரிடத்தில் சொல்லிக் கொள்வாள்? அவள் அம்மாவோ பெரும் பைத்தியம்!" என்ற எண்ணமும் தோன்றியது. "அம்மம்மா! எத்தனை நீளம் கடிதம் எழுதுகிறாள். ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டியதை ஒன்பது வார்த்தைகளில் சொல் கிறாளே?" என்று அலுத்துக்கொண்டாள். கடைசியாக ஒருவாறு கடிதத்தைப் படித்து முடித்த பிறகு பின்வரும் பதிலை எழுதினாள்."என் பிரியமுள்ள தோழி லலிதாவுக்கு; உன்னுடைய கடிதம் கிடைத்தது. அதைப் படித்தபோது கொஞ்சம் வருத்தம் உண்டாயிற்று. உன் பேரில் கோபமாயும் இருந்தது. இவ்வளவு விஷயங் களையும் உன் மனதிற்குள் இத்தனை நாளும் மூடி வைத்துக் கொண்டிருந்தாயல்லவா? இதுதானா உண்மையான சிநேகிதத்துக்கு இலட்சணம்? போனது போகட்டும்; இனிமேல் இன்பமோ, துன்பமோ, சுகமோ, துக்கமோ, எதுவாயிருந்தாலும் உடனுக்குடனே எனக்கு நீ விஸ்தாரமாகக் கடிதம் எழுதி விட வேண்டும். ஒருவருக்கொருவர் சிநேகிதமாயிருப்பது பின் எதற்காக? சுக துக்கங்களைப் பகிர்ந்து அனுபவிப்பதற்குத் தானல்லவா?

காதல் என்பது கதைகளிலே மட்டும் அல்ல; இந்த உலகத்திலும் உண்டு என்பது நிச்சயம். அதற்கு என்னுடைய வாழ்க்கையே அத்தாட்சி! அடியே! லலிதா! உண்மையில் நான் பாக்கியசாலிதானடி; ஆனால் இந்தப் பாக்கியம் ஒருவிதத்தில் உன்னால் தான் எனக்குக் கிடைத்தது என்பதை ஒருநாளும் மறக்க மாட்டேன். எனக்குப் பதிலாக இன்றைக்கு நீ இங்கே இந்த அழகான புதுடில்லி பங்களாவில் இருந்திருக்கலாம் என்பதை நினைக்கும் போது என்னமோ பண்ணுகிறது. உனக்கு எப்படி நான் நன்றி செலுத்துவேன்! என்னுடைய சமாசாரம் இருக்கட்டும், உன்னுடைய புக்ககத்து வாழ்க்கையைப் பற்றி நீ எழுதியிருப்பதைப் படித்து வருத்தம் அடைந்தேன். உலகம் எவ்வளவோ முன்னேற்ற மடைந்திருக்கும்போது நாகரிகம் இவ்வளவாகப் பரவியிருக்கும் காலத்தில் உன் புக்ககத்து மனிதர்களைப் போன்றவர்களும் இருப்பது எனக்கு ஆச்சரியமாயிருக்கிறது! உன்னைச் சிறையில் போட்டு அடைத்து வைத்திருப்பதுபோல் அல்லவா வைத்திருக்கிறார்கள் என்று தெரிகிறது? அதை நினைத்தால் எனக்கு அசாத்தியக் கோபம் வருகிறதடி. ஆனால் ஒரு விஷயம் உன் கணவன் பட்டாபிராமன் உன்னைச் சினிமாவுக்கு அழைத்துப் போகாததினாலேயே அவனுக்கு உன்பேரில் அபிமானம் இல்லை என்று நினைத்து விடாதே! இது பட்டிக்காட்டுப் பெண்கள் பேசுகிற பேச்சு. புருஷர்களுக்கு எத்தனையோ சௌகரிய அசௌகரியங்கள் இருக்கும். அதையெல்லாம் கவனித்து நாம்தான் நல்ல மாதிரி நடந்து கொள்ளவேண்டும். நம்முடைய புருஷன் வேறொரு பெண்ணிடம் பேசிவிட்டால் அதனால் குடி முழுகிப் போய்விட்டது என்று நாம் நினைத்துக் கொள்ளக்கூடாது; நாகரிகமே தெரியாத படிப்பற்ற ஸ்திரீகள்தான் அப்படியெல்லாம் சந்தேகப்படுவார்கள்.

உன் மாமியாரைப்பற்றி நீ எழுதியிருப்பதையும் நான் முழுதும் ஒப்புக்கொண்டு விட முடியாது. எல்லாம் நாம் நடந்து கொள்வதைப் பொறுத்தது. பிறந்தகத்தை விட்டுப் புக்ககத்துக்குப் போனால் அப்புறம் பிறந்தகத்துப் பாசமே இருக்கக்கூடாது. மாமனார் மாமியார்தான் தாயார் தகப்பனார் என்று எண்ணி நடந்து கொள்ள வேண்டும். என்னுடைய 'ஓர்ப்படி' மாமியாரிடம் இருந்து குடித்தனம் செய்ய முடியாது என்று நினைத்துத் தான் பிறந்த வீட்டுக்குப் புருஷனையும் அழைத்துக் கொண்டு போய் விட்டாள். ஆனால் நான் எப்படியிருக்கிறேன், பார்! என் மாமியார் என்னிடம் வைத்திருக்கும் அபிமானத்துக்கு அளவே கிடையாது. 'பெற்ற பெண் கூட இவ்வளவு பிரியமாயிருக்க மாட்டாள்' என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருக்கிறார். நீயும் உன் தாயார் தகப்பனாரை அடியோடு மறந்துவிட்டு மாமியாரும் மாமனாருந்தான் பெற்ற தாயும் தகப்பனும் என்று நினைத்து நடந்து கொள்ளு, அப்போது அவர்கள் எப்படி மாறிவிடுகிறார்கள், பார்! சூரியா காங்கிரஸுக்குப் போய்விட்டுத் திரும்பி வந்து விட்டான். லலிதா! மிகவும் சந்தோஷமான ஒரு செய்தி. என் அகத்துக்காரருக்குச் சூரியாவை ரொம்பவும் பிடித்துப் போய் விட்டது. இருவரும் அன்னியோன்னிய சிநேகிதர்களாகி விட்டார்கள். ஓயாமல் காங்கிரஸைப்பற்றியும் இங்கிலீஷ் சர்க்காரைப்பற்றியும் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். பேச ஆரம்பித்து விட்டால் பேச்சின் சுவாரஸ்யத்தில் சாப்பாட்டைக் கூட மறந்து விடுகிறார்கள். சில சமயம் நான் ஒருத்தி இருப்பதைக் கூட மறந்து விடுகிறார்களடி! எப்படியிருக்கிறது வேடிக்கை!

சென்ற ஞாயிற்றுக்கிழமை எல்லாருமாக இந்த டில்லியிலுள்ள குதுப்மினார் கோட்டை, ஜந்தர் மந்தர் முதலிய இடங்களுக்குப் போய் எல்லாவற்றையும் பார்த்துவிட்டு வந்தோம். சூரியாவும் எங்களுடன் வந்ததுதான் மிகவும் சந்தோஷமாயிருந்தது. நாளைய இரவு நாங்கள் ஆக்ராவுக்குப் புறப்படப் போகிறோம். சூரியாவும் எங்களுடன் வருகிறான் ஆனால் என் மாமியார் வரவில்லை. குழந்தையைப் பார்த்துக்கொண்டு வீட்டில் இருப்பதாகச் சொல்லிவிட்டார். உலகத்தில் ஒன்பது மகா அதிசயங்களில் ஒன்றாகிய தாஜ்மகால் ஆக்ராவில்தான் இருக்கிறது. நீ சரித்திரப் புத்தகத்தில் படித்திருக்கிறாய் அல்லவா? ஷாஜஹான் சக்கரவர்த்தி தன்னுடைய பட்டத்து ராணி மும்தாஜின் ஞாபகார்த்தமாகக் கட்டிய அற்புதக் கட்டிடம் தாஜ்மஹால், முக்கியமாக, அதைப் பார்த்துவிட்டு வரத்தான் நாங்கள் போகிறோம். ஆக்ராவிலிருந்து ஓர் இரவு ரயில் பிரயாணம் செய்தால் ரஜினிபூர் என்று ஒரு ஊர் இருக்கிறதாம், அது ஒரு சுதேச ராஜாவின் ஊராம். அங்கே ஒரு விஸ்தாரமான ஏரியும் ஏரியின் நடுவில் ஒரு அழகான நீராழி மண்டபமும் உண்டாம். ஏரிக்கரை ஓரத்தில் ஆயிரம் பதினாயிரக்கணக்கில் வெள்ளை வெளேர் என்ற நிறமுடைய கொக்குகள் வந்து மந்தை மந்தையாக உட்கார்ந்து விட்டு, அவ்வளவும் சேர்ந்தாற்போல் பறந்து போகுமாம். அதைப் போன்ற அழகான காட்சி உலகத்திலேயே கிடையாதாம். ஆக்ராவிலிருந்து அங்கேயும் போய் வரலாமென்று இவர் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

ஆனால் சூரியா ஆக்ராவிலிருந்து திரும்பி வந்துவிட வேண்டுமென்றும் ஏதோ ஒரு கூட்டம் தனக்கு இருக்கிறதென்றும் சொல்லிக் கொண்டிருக்கிறான். "கூட்டமும் ஆச்சு! மண்ணாங்கட்டியும் ஆச்சு!" என்று இவர் நேற்றைக்கு சூரியாவுடன் சண்டை பிடித்தார்.சூரியாவை நான் கவனமாகப் பார்த்துக் கொள்கிறேன், லலிதா! அவனைப்பற்றி நீ கொஞ்சமும் கவலைப்பட வேண்டாம். சூரியா நம்மிருவருக்கும் செய்திருக்கிற உதவிக்கு நான் அவனுக்கு எவ்வளவு செய்தாலும் தகும். நல்ல சமயம் பார்த்து இவரிடம் சொல்லி அவனுக்கு ஒரு உத்தியோகம் பண்ணி வைக்கச் செய்யலாமென்று எண்ணியிருக்கிறேன். என்னுடைய மாமியாருடைய தங்கை பெண் ஒருத்திக்கு வரன் தேடிக் கொண்டிருக்கிறார்களாம். சூரியாவுக்குப்பண்ணிக் கொள்ளலாம் என்று மாமியார் சொல்கிறார். அந்த மாதிரி நடந்தால் எனக்கு எவ்வளவோ சந்தோஷமாயிருக்கும். சூரியா இங்கேயே குடியும் குடித்தனமுமாய்த் தங்கிவிட்டால் எவ்வளவு நன்றாயிருக்கும்? அப்போது நீ கூடச் சில சமயம் இங்கே வந்து விட்டுப் போவாய் அல்லவா?

பம்பாயில் உன்னை எல்லா இடங்களுக்கும் அழைத்துக் கொண்டு போய்க் காட்டிய நினைவு எனக்கு வருகிறது. டில்லியிலும் பார்க்க வேண்டிய இடங்களுக்கெல்லாம் உன்னை அழைத்துக்கொண்டு போய்க் காட்டுவது எனக்கு எவ்வளவு சந்தோஷமாயிருக்கும் தெரியுமா? இதோ இவர், 'வெளியில் உலாவப் போவதற்கு நேரமாகி விட்டது' என்று அவசரப்படுத்துகிறார். ஆகையால் இந்தக் கடிதத்தை இங்கேயே நிறுத்திக் கொள்கிறேன். ஆக்ராவிலிருந்து திரும்பி வந்த பிறகு மறுபடியும் விவரமான கடிதம் எழுதுகிறேன். இப்படிக்கு, உன் பிரிய சிநேகிதி, சீதா. - குறிப்பு: நான் டில்லிக்கு வந்த அன்று ரயில்வே ஸ்டேஷனில் ஒரு சிறு சம்பவம் நடந்தது. அதைப்பற்றி என்னமோ ஏதோ என்று எனக்கு ரொம்பவும் கவலையாயிருந்தது. ஆனால் கவலைக்குச் சிறிதும் இடம் இல்லையென்று இப்போது நிச்சயமாகிவிட்டது. என்னுடைய அசட்டுத்தனமான சந்தேகத்தைப் பற்றி மறுமுறை நாம் நேரில் சந்திக்கும்போது சொல்கிறேன். அதைக் கேட்டால் நீ விழுந்து விழுந்து சிரிப்பாய் - சீதா."

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

ஒன்பதாம் அத்தியாயம்
மல்லிகை மாடம்

ரயில் வண்டி ஆக்ராவை நெருங்கிக் கொண்டிருந்த போது சூரியாவுக்கும் ராகவனுக்கும் விவகாரம் முற்றி அவர்களுடைய குரல் ரயிலின் சத்தத்தையும் மிஞ்சிக் கேட்டது. "காங்கிரஸை வரவர மிதவாதம் பற்றிக் கொண்டு வருகிறது. மாகாணங்களில் காங்கிரஸ் மந்திரி சபைகள் ஏற்பட்டதினால் என்ன மாறுதலைக் கண்டோ ம்? ஒன்றுமில்லை! கவர்னர் முதல் கிராம முனிசீப் வரையில் முன்போலவே அதிகாரம் செலுத்தி வருகிறார்கள். போலீஸ் கெடுபிடியும் முன்போலவே தான் இருக்கிறது!" என்று சொன்னான் சூரியா. "அது மட்டுமா? ரயில் முன் போலவே ஓடிக்கொண்டிருக்கிறது. தபால்கள் முன் போலவே டெலிவரி ஆகிக்கொண்டிருக்கின்றன. மாஜிஸ்ட்ரேட்டுகள் முன் போலவே திருடர்களை தண்டித்து வருகிறார்கள் - இப்படியெல்லாம் புகார் செய்வாய் போலிருக்கிறதே! நல்ல சோஷலிஸ்ட் நீ பின்னே என்னதான் செய்யவேண்டும் என்கிறாய்? கவர்னர் முதல் கிராம முனிசீப் வரையில் போலீஸ்காரர்கள் உள்பட எல்லா உத்தியோகங்களையும் அதிகாரங்களையும் சட்ட திட்டங்களையும் ஒழித்து விட வேண்டும் என்கிறாயா? ஒழித்துவிட்டால் அரசாங்கம் எப்படி நடக்கும்! அரசாங்கமே வேண்டாம் என்கிறாயா?" என்றான் ராகவன்.

"அரசாங்கமே வேண்டாம் என்று நான் சொல்லவில்லை. அரசாங்கம் என்றால், இங்கிலீஷ்காரர்கள் ஏற்படுத்தியிருக்கும் ஐ.சி.எஸ். அரசாங்கந்தான் என்பது உங்களுடைய எண்ணம். இங்கிலீஷ்காரர்கள் வருவதற்கு முன்னால் நம்முடைய தேசத்தில் அரசாங்கமே கிடையாதா?" "ஏன் கிடையாது? பேஷாக உண்டு! இங்கிலீஷ்காரர்கள் வருவதற்கு முன்னால் நம் தேசத்தில் அங்க, வங்க, கலிங்க, குக்குட, கர்நாடக, மராட்ட முதலிய ஐம்பத்தாறு ராஜாங்கங்கள் இருந்தன; ராஜாக்களும் இருந்தார்கள். சுல்தான்களும், பாதுஷாக்களும் கூட இருந்தார்கள், அவரவர்கள் இஷ்டமே சட்டமாக அரசாட்சி நடத்தினார்கள். அத்தகைய ராஜாக்களின் ஆட்சிக்கு நாம் திரும்பிப் போகவேண்டும் என்கிறாயா? நீதான் சுதேச சமஸ்தானங்களையே ஒழித்துவிட வேண்டும் என்கிறாயே!" "ஆம்; சுதேச ராஜ்யங்களையெல்லாம் ஒழித்துவிட வேண்டியதுதான். அந்தப் பழைய ஹைதர் காலத்து ஆட்சிக்கோ பேஷ்வா காலத்து ஆட்சிக்கோ போகவேண்டும் என்று நான் சொல்லவில்லை. பழைய ஆட்சி வேண்டாம் என்றால், புதிய ஆட்சி என்பது இங்கிலீஷ்காரர்கள் ஏற்படுத்தியிருக்கும் ஐ.சி.எஸ். ஆட்சிதானா? உலகத்தில் வேறு தேசங்கள் இல்லையா? அந்தந்த தேசங்களில் அரசாங்கம் நடக்கவில்லையா?

"நடக்கிறது, அப்பனே நடக்கிறது; ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சி நடக்கிறது. இத்தாலியில் முஸோலினி ஆட்சியும் நடக்கிறது. இங்கிலாந்திலிருந்து திரும்பும்போது ஜெர்மனிக்கும் இத்தாலிக்கும் நான் போய்விட்டு வந்தேன். கல்விக்கும் நாகரிகத்துக்கும் பெயர் போன ஐரோப்பாவில் நடக்கும் அரசாங்க முறைகளைப் பார்த்தால் ஆங்கில ஆட்சி முறை எவ்வளவு மேலானது என்று உனக்குத் தெரியும். அங்கே எல்லாம் ஜனநாயகம் என்பது மருந்துக்கும் கிடையாது. சுதந்திரம் என்ற பேச்சையே எடுக்கக்கூடாது..." "அதைப்பற்றி நமக்கென்ன கவலை? ஹிட்லரும் முசோலினியும் எவ்வளவு பொல்லாதவர்களாயிருந்த போதிலும் அவரவர்களுடைய நாட்டுக்குள்ளேதான் இருக்கிறார்கள்? இங்கிலீஷ்காரர்களைப் போல உலகத்தையே கட்டியாள அவர்கள் ஆசைப்படவில்லையே? பிற நாடுகளையெல்லாம் தங்களுடைய கொடுங்கோல் ஆட்சிக்கு உள்ளாக்கவில்லையே..." "உனக்கு எப்படித் தெரியும்? அவர்களும் சந்தர்ப்பம் கிடைத்தால் தங்கள் சொரூபத்தைக் காட்டுவார்கள். இங்கிலீஷ்காரர்களை விட எவ்வளவோ பொல்லாதவர்களாயிருப்பார்கள். சீனாவில் ஜப்பான் செய்கிற அநியாயத்தைப் பார்!"

"இங்கிலீஷ்காரர்களுடைய கொட்டத்தை அடக்கக்கூடிய கீழ்நாடு ஜப்பான் ஒன்றுதான். சீனாவில் ஜப்பான் அக்கிரமம் செய்வதாகச் சொல்லுகிறதெல்லாம் இங்கிலீஷ்காரர்கள் செய்யும் பிரசாரந்தானே? உண்மை நமக்கு எப்படித் தெரியும்? என்னைக் கேட்டால் இங்கிலீஷ்காரர்களின் அரசாட்சியைக் காட்டிலும் வேறு எந்த அரசாட்சியும் மேல் என்று சொல்லுவேன். இங்கிலீஷ் ஆட்சி ஒரு தேசத்தின் ஆத்மாவையே அழித்துவிடுகிறது. தேச மக்களுக்குள் பிரிவையும் பிளவையும் உண்டாக்குகிறது..." "சூரியா! நன்றாகச் சொன்னாய்? நமது தேசத்தில் ஏற்கனவேயுள்ள பிளவுகளையும் பிரிவுகளையும் விடவா இங்கிலீஷ் ஆட்சியால் அதிகம் உண்டாகிவிட்டது?" "இங்கிலீஷ்காரர்கள் தலையிடாமலிருந்தால் நம்மிடையேயிருந்த பிளவுகளும் பிரிவுகளும் இதற்குள் தீர்ந்து போயிருக்கும்!" "சரித்திரத்தையே பொய் என்று நீ சாதிக்கப் பார்க்கிறாய்! உன்னோடு எப்படி விவாதம் செய்வது?" என்று அலுத்துக் கொண்டான் ராகவன். இந்தச் சமயத்தில், "போதும் உங்கள் பேச்சு! சண்டையை நிறுத்துங்கள்; ஆக்ரா ஸ்டேஷன் வந்துவிட்டது!" என்றாள் சீதா.

"நேபிள்ஸ் நகரத்தைப் பார்த்துவிட்டுச் செத்துப் போகவும்!" என்று மேனாட்டில் ஒரு வசனம் வழங்குகிறது."ஆக்ராவைப் பார்க்கும் வரையில் உயிரோடிருக்கவும்!" என்று இந்தியாவில் பிறந்தவர்களுக்கு நாம் சொல்லுகிறோம். இந்திய தேசத்தின் மத்திய கால மகோந்நதத்தையும் கலை வளத்தையும் அறிந்துகொள்ள விரும்புவோர் ஆக்ரா நகரைப் பார்க்கவேண்டும். மனிதனுடைய உள்ளமானது கற்பனை செய்யக்கூடிய இன்பமயமான சொர்க்க பூமியும் கந்தர்வ லோகமும் எப்படியிருக்குமென்று தெரிந்து கொள்ள விரும்புவோர் ஆக்ராவை அவசியம் பார்க்கவேண்டும். அக்பர் சக்கரவர்த்தி மொகலாய சாம்ராஜ்யத்தின் தலைநகரை டில்லியிலிருந்து ஆக்ராவுக்கு மாற்றி, ஆக்ராவுக்கு உயர்வையளித்தார். அக்பரின் பேரன் ஷாஜஹான் சக்கரவர்த்தி, ஆக்ராவின் சொப்பனபுரியைப் போன்ற பற்பல பளிங்கு மாளிகைகளும் தாஜ்மகாலையும் கட்டி ஆக்ரா நகரை உலக சரித்திரத்தில் என்றும் நிலை பெறக்கூடிய அமரபுரியாக்கினார். ஆக்ராவுக்கு போகிறவர்கள் சாதாரணமாக முதலில் அந்நகரின் பழைய கோட்டையிலுள்ள அரண்மனைகளைப் பார்க்கப் போவார். பார்த்து வியந்து, "இதைக் காட்டிலும் அதிகமான அற்புதம் என்ன இருக்கபோகிறது!" என்று எண்ணிக்கொண்டு தாஜ்மகாலைப் பார்க்கச் செல்வார்கள். தாஜ்மகாலைப் பார்த்ததும் அதிசயிக்கும் சக்தியையுங்கூட இழந்து பிரமித்து நிற்பார்கள்.

அந்த முறையைப் பின்பற்றி ராகவனும் சீதாவும் சூரியாவும் முதலில் ஆக்ரா கோட்டைக்குப் போனார்கள். கோட்டைச் சுவரின் உயரத்தையும், நேற்றுதான் கட்டியது போல் புத்தம் புதியதாக விளங்கிய அதன் தோற்றத்தையும் கண்டு வியந்தார்கள். கோட்டை வாசலின் கம்பீரமான அமைப்பைப் பார்த்து அதிசயித்தார்கள். பிறகு உள்ளே பிரவேசித்து திவானி ஆம் என்னும் பொது ஜனசபா மண்டபத்தை நோக்கிச் செல்கையில் பக்கத்தில் காணப்பட்ட ரோஜா மலர்த் தோட்டத்தைச் சீதா பார்த்தாள்; உடனே அந்தப் பக்கம் ஓடினாள். சில நிமிஷத்துக்கெல்லாம் திரும்பி வந்து, "ஏன், ஸார்! அனார்க்கலி இங்கேதான் புஷ்பம் விற்றுக் கொண்டிருந்திருப்பாள்; சலீம் இங்கேதான் அவளைச் சந்தித்திருப்பான்; இல்லையா? இருவரும் எந்தச் சுரங்க வழியாக யமுனைக் கரைக்குப் போனார்களோ!" என்றாள். "அனார்க்கலியின் ஞாபகம் இன்னும் உன்னை விட வில்லையா?" என்று நகைத்தான் ராகவன். "அதெப்படி அனார்க்கலியை நான் மறக்க முடியும்? அனார்க்கலி புஷ்பம் விற்ற இடத்தைப் பார்ப்பதற்காகத்தானே நான் முக்கியமாக இங்கு வந்தேன்?" என்றாள் சீதா. "அனார்க்கலி என்றால் யார்!" என்று சூரியா கேட்டான். "அதுகூடத் தெரியாதா உனக்கு? அனார்க்கலி கதையை நீ வாசித்ததே இல்லையா?" என்றாள் சீதா. "வாசித்ததில்லை, அத்தங்கா! எனக்குக் கதையும் நாவலும் அவ்வளவாகப் பிடிக்காதே!" என்றான் சூரியா.

"நம்ம சூரியாவுக்கு நாவலும் கதைகளும் படிக்க நேரம் ஏது? காரல்மார்க்ஸைக் கட்டிக்கொண்டு அழுவதற்குத்தான் அவனுக்குப் பொழுது சரியாயிருக்குமே?" என்று எகத்தாளம் செய்தான் ராகவன். "அம்மாஞ்சு! நான் சொல்கிறேன், தெரிந்துகொள்! அனார்க்கலி என்றால் மாதுளை மொக்கு என்று அர்த்தம். இளவரசன் சலீம் அவளுக்குக் கொடுத்த பெயர் அது!..." "சலீம் என்பது யார்?" "அது கூடவா தெரியாது? ஜஹாங்கீர் சிம்மாசனம் ஏறுவதற்கு முன்னால் அவன் பெயர் சலீம்..." "சீதாவை என்னமோ என்று நினைக்காதே, சூரியா! மொகலாயர் சரித்திரத்தில் அவள் பெரிய எக்ஸ்பர்ட்! ஜதுநாத் சர்க்காருக்கும் வின்சென்ட் ஸ்மித்துக்கும் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் சீதாவினிடம் தான் அவர்கள் கேட்க வருவது வழக்கம்." "இவர் இப்படித்தான் பரிகாசம் பண்ணுவார், அம்மாஞ்சி! நான் சொல்கிறதைக் கேட்டுக் கொள். ஜஹாங்கீர் சிறுபிள்ளையா இருக்கும்போது அவனை வளர்த்த தாய் ஒருத்தி இருந்தாள். அவளுக்கு ஒரு பெண் இருந்தாள், அந்தப் பெண்ணின் அழகைப் பார்த்துவிட்டு சலீம் அவளுக்கு 'மாதுளை மொக்கு' என்று பெயரிட்டு அழைத்தான். அவளையே கலியாணம் செய்து கொள்வதாகவும் வாக்களித்திருந்தான்..." இப்படிக் கதை சொல்லிக் கொண்டே அவர்கள் திவானிகாஸ் என்னும் அழகிய பளிங்குக்கல் சபா மண்டபத்தை அடைந்தார்கள். மண்டபத்தின் அழகிய தூண்களையும் மேல் விதானத்தையும் விதவிதமான சித்திர வேலைப்பாடுகளையும் கண்டு அதிசயித்தார்கள்.

பிறகு அரண்மனையின் அந்தப்புரத்துக்குச் சென்றார்கள். அங்கே ஷாஜஹானின் புதல்விகள் ரோஷனாராவும் ஜஹானாராவும் வசித்த இடங்களைப் பார்த்தார்கள்; கண்ணாடி மகாலைப் பார்த்தார்கள். பிறகு அந்தப்புரத்து ராணிகளும் சேடிகளும் ஜலக்ரீடை செய்வதற்காக அமைந்த பளிங்குக்கல் குளங்களைப் பார்த்தார்கள். அந்த நாளில் ராணிகளின் தூபுரங்களோடும் சிலம்புகளோடும் போட்டி இட்டுக்கொண்டு சலசலவென்ற சத்தத்துடன் தெளிந்த நீர் ஓடிக்கொண்டிருந்த பளிங்குக்கல் ஓடைகளைப் பார்த்தார்கள். "அடாடா? இந்த அரண்மனை அந்தப்புரத்தில் ராணிகளும் ராஜகுமாரிகளும் வசித்துக் கொண்டிருந்த காலத்தில் எப்படியிருந் திருக்கும்?" என்றாள் சீதா. "எப்படியிருந்திருக்கும்? இங்கே வசித்தவர்களுக்கு நரகமாக இருந்திருக்கும்; சிறைச்சாலையாக இருந் திருக்கும். கூண்டில் அடைக்கப்பட்ட கிளிக்குத் தான் வசிக்கும் கூண்டைப் பார்த்தால் என்ன தோன்றும்? தங்கத்தினால் செய்து ரத்தினங்கள் இழைத்த கூண்டாயிருந்தாலும், கிளிக்கு அதன் கூண்டு சிறைச்சாலை தானே?" என்றான் சூரியா. "பலே சூரியா! அத்தங்காளுக்குச் சரியான அம்மாஞ்சி நீதான்!" என்றான் ராகவன். "நீங்கள் இரண்டு பேருமாய்ச் சேர்ந்துகொண்டு எனக்கு அசட்டுப் பட்டம் கட்டப் பார்க்கிறீர்கள். இந்த மாதிரி சலவைக்கல் அரண்மனையைச் சிறைச்சாலை என்று சொன்னால் அது உண்மை யாகிவிடுமா? இந்த மாதிரி ஒரு சிறைச்சாலை கட்டி அதில் இருக்கச் சொன்னால் யார்தான் இருக்கமாட்டேன் என்பார்கள்? என்னை இருக்கும்படி சொன்னால் இருந்து விடுவேன்!" என்றாள் சீதா.

"சீதா! இந்த அரண்மனைகளைப் பார்த்து அவ்வளவு மயங்கிவிடாதே! இவற்றைக் கட்டிய பாதுஷாக்களும் ராஜாக்களும் இருந்த காலத்தில் இந்த நாட்டில் எந்த ஸ்திரீயும் பத்திரமாயிருக்க முடியவில்லை. அரசனுடைய கண்பார்வைக்கு எந்தப் பெண்ணாவது ஆளாகிவிட்டால், ஒன்று அவள் உயிரை இழக்க வேண்டும்; அல்லது கற்பை இழக்க வேண்டும் என்ற நிலைமையாயிருந்தது. ஏதோ கடவுள் அருளால் இங்கிலீஷ் அரசாங்கம் இந்திய தேசத்திற்கு வந்தது" என்றான் ராகவன். "அதை நான் ஒப்புக்கொள்ளவே மாட்டேன். இங்கிலீஷ் ஆட்சி வந்ததினால் என்ன ஆகிவிட்டது? இன்றைக்கும் இங்கிலீஷ் மேலதிகாரத்திற்கு உட்பட்ட சுதேச சமஸ்தானங்களில் மகாராஜாக்கள் என்னவெல்லாம் அக்கிரமம் பண்ணுகிறார்கள்." "உங்கள் சண்டையை மறுபடியும் ஆரம்பித்துவிடாதீர்கள். நீங்கள் சொல்லுவது ஒன்றும் சரியில்லை. நானும் கொஞ்சம் சரித்திரம் படித்துத் தெரிந்து கொண்டிருக்கிறேன். சிவாஜி மகாராஜாவின் முன்னால் முஸ்லிம் ஜாகீர்தாரின் பெண்ணைக் கொண்டுபோய் நிறுத்தியதும் என்ன சொன்னார்? 'அம்மணி! என்னுடைய தாயார் உன்னைப்போல் அழகாயிருந்தால் நானும் எத்தனையோ அழகாயிருந்திருப்பேனே?' என்று சொல்லி விட்டு அந்தப் பெண்ணைச் சகல மரியாதைகளுடன் தகப்பனாரிடம் சேர்ப்பித்துவிடவில்லையா? இந்த அரண்மனையைக் கட்டிய ஷாஜஹானையே பாருங்கள். மும்தாஜ் பீகத்தைக் கலியாணம் செய்துகொண்ட பிறகு இன்னொரு ஸ்திரீயை அவன் கண்ணெடுத்துப் பார்த்தானா? மும்தாஜ் செத்த பிறகு கூட அவளை ஷாஜஹான் மறக்கவில்லையே? அவளுக்காக எத்தனை கோடி ரூபாய் செலவு செய்து தாஜ்மகாலைக் கட்டினான்? அதோ பாருங்கள்!" என்றாள் சீதா.

அப்போது அவர்கள், மல்லிகை மாடம் என்று பெயர் பெற்ற அரண்மனைப் பகுதியின் மேல் தாழ்வாரத்தின் வழியாகப் போய்க் கொண்டிருந்தார்கள். அங்கிருந்து பார்த்தால் யமுனை நதிக்கு அக்கரையில் தாஜ்மகாலின் அற்புதத் தோற்றம் காணப்படும். மூன்று பேருமே சிறிது நேரம் வரையில் அந்தக் காட்சிக்குத் தங்கள் உள்ளத்தைப் பறி கொடுத்தவர்களாய்ப் பார்த்துக் கொண்டே நின்றார்கள். பிறகு சீதா, "நீங்கள் இரண்டு பேருமாகச் சேர்ந்து என்னைப் பைத்தியமாக்கப் பார்க்கிறீர்களே? ஷாஜஹான் சக்கரவர்த்தி எப்பேர்ப்பட்டவன் என்று தாஜ்மகாலைப் பார்த்தால் தெரியவில்லையா? எவ்வளவு சிரமம் எடுத்து, எவ்வளவு பிரயத்தனம் பண்ணி, எவ்வளவு செலவு செய்து, தாஜ்மகாலை ஷாஜஹான் கட்டியிருக்க வேண்டும்? மும்தாஜிடம் அவருக்கு எவ்வளவு ஆசை, எவ்வளவு காதல் இருந்திருக்க வேண்டும்? தாஜ்மகாலைக் கட்டியது மட்டுமா? கட்டிய பிறகும் ஆயுள் முடியும் வரையில் தினம் தினம் தாஜ்மகாலைப் பார்த்துக் கொண்டேயிருந்து கடைசியில் செத்துப் போனானாம். அவன் தாஜ்மகாலைப் பார்த்துக் கொண்டேயிருந்தது இந்த மல்லிகை மாடத்திலிருந்து தான் போலிருக்கிறது!" "ஆமாம், சீதா! உன்னுடைய ஊகம் உண்மைதான். இந்த இடத்தில் இருந்தபடியேதான் ஷாஜஹான் தாஜ்மகாலைப் பார்த்துக் கொண்டே செத்துப் போனான்!" என்றான் ராகவன். "ஏன் தெரியுமா, அத்தங்கா! நான் படித்த சரித்திரத்தைச் சொல்லுகிறேன். ஷாஜஹான் அரசாங்கப் பொக்கிஷத்தை இப்படியெல்லாம் வீண் விரயம் செய்தது, அவனுடைய மகன் ஔரங்கசீப்புக்குப் பிடிக்கவில்லையாம். தகப்பனாரைச் சிறைப்படுத்தி இந்தக் கோட்டையிலே அடைத்து வைத்து, 'நீங்கள் உங்களுடைய அருமை மனைவியின் ஞாபகமாகக் கட்டிய கட்டிடத்தைச் சதா சர்வ காலமும் பார்த்துக் கொண்டே இருங்கள்!" என்று சொல்லி விட்டானாம். ஷாஜஹான் இங்கேயே இருந்து தாஜ்மகாலைப் பார்த்துப் பார்த்துப் பெருமூச்சு விட்டுக்கொண்டே இறந்தானாம்!" என்றான் சூரியா.

"ஷாஜஹானுக்குச் சரியான தண்டனைதான். நான் ஔரங்கசீப்பாயிருந்தாலும் அப்படித்தான் செய்திருப்பேன்!" என்றான் ராகவன். "அப்படியெல்லாம் சொல்லாதீர்கள்! இப்பேர்ப்பட்ட அற்புதமான காட்சிகளைப் பார்த்துவிட்டு இந்த மாதிரி பேசுகிறீர்களே! உங்களுக்கெல்லாம் கண் எங்கே போயிற்று?" என்றாள் சீதா. உண்மையில் அந்தச் சமயம் ராகவன், சூரியா இருவருடைய கண்களும் தூரத்தில் தெரிந்த தாஜ்மகாலையோ அல்லது பக்கத்திலே இருந்த அற்புதமான பளிங்குக்கல் சித்திரங்களையோ பார்க்கவில்லை. அந்த மல்லிகை மாடத்தின் தாழ்வாரத்தின் வழியாக எதிர்ப்புறமிருந்து வந்து கொண்டிருந்தவர்களின் மீது அவர்களுடைய பார்வை போயிருந்தது. மூன்று பேர் வந்து கொண்டிருந்தார்கள், இருவர் ஸ்திரீகள்; ஒருவர் ஆடவர். கராச்சி காங்கிரஸின் போது விமான கூடத்தில் ராகவன் பார்த்த பெண்கள்தான் அவர்கள் இருவரும். ஒருத்தி தாரிணி; இன்னொருத்தி அவளுடைய சிநேகிதி. ராகவன் செயலற்று நின்றான், தாரிணியின் முகத்திலிருந்து அவனுடைய கண்கள் அப்பால் இப்பால் நகரவில்லை. வேறு யாரையும் எதையும் அவனால் பார்க்க முடியவில்லை. எங்கே இருக்கிறோம், யாருடன் வந்திருக்கிறோம் என்பதையெல்லாம் அவனுடைய உள்ளம் மறந்து விட்டது. எதிரில் தாரிணி வருகிறாள் என்கிற ஒரு நினைவுதான் அவனுடைய மனதில் நிலை பெற்றிருந்தது.

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

பத்தாம் அத்தியாயம்
பகற் கனவு

ஒரு நிமிஷ நேரம் இந்தப் பூமண்டலம் மட்டுமின்றி ஈரேழு பதினாலு உலகங்களும் ஸ்தம்பித்து நின்றன. சப்தமயமான பிரபஞ்சத்தில் மிக மெல்லிய இலை அசையும் சத்தம் கூடக் கேளாத நிசப்தம் குடிகொண்டிருந்தது. வாயுபகவானும் தன்னுடைய இயற்கையான சலனத்தை மறந்து நின்றுவிட்டதாகத் தோன்றியது. பிறகு எங்கேயோ அதலபாதாளத்திலிருந்து பேசுவது போலச் சௌந்தரராகவனுடைய குரல் கேட்டது. "நான் காண்பது உண்மையா? அல்லது கனவு காண்கிறேனோ?" என்றான். "தாஜ்மகாலைச் சொல்கிறீர்களா? ஆம்; அதைக் 'காதல் கனவு' என்றும் 'பளிங்குக்கல் சொப்பனம்' என்றும் கவிகள் வர்ணித்திருக்கிறார்கள். ஆனாலும் இங்கு நின்று பார்க்கும் போது தாஜ்மகால் என்பது வெறும் கனவல்லவென்றும் நிஜக் கட்டிடந்தான் என்றும் தோன்றுகிறது!" இந்தப் பதிலைத் தாரிணி கூறினாள். இடையில் தாரிணியின் தோழி நிருபமா தலையிட்டு, "இவர் மிஸ்டர் ராகவன் அல்லவா? என்ன அதிசயமான சந்திப்பு?" என்றாள். "ஆம்; அந்தத் துரதிர்ஷ்டசாலி நான் தான்!" என்றான் ராகவன் நிருபமாவைப் பார்த்து. "ஆகா! இவ்வளவு அடக்கம் உங்களுக்கு எப்போது வந்தது? உங்கள் பின்னால் நிற்கும் பெண் யார்?" என்று நிருபமா கேட்கவும் ராகவனுடைய முகம் கொஞ்சம் சுருங்கியது. "அவரிடம் அதைக் கேட்பானேன்? உன்னால் ஊகிக்க முடியவில்லையா, நிருபமா? அவருடைய அருமை மனைவியாகத் தான் இருக்க வேண்டும்!" என்று தாரிணி கூறினாள். "இது உண்மைதானா?" என்று நிருபமா பிடிவாதமாகக் கேட்டாள். "உண்மைதான்!" என்று ராகவன் மென்று விழுங்கினான்.

"ஹா ஹா! எவ்வளவு அழகான பெண்! இப்படிப்பட்டவளைக் கலியாணம் செய்து கொண்டும் உம்மை துரதிர்ஷ்டசாலி என்று சொல்லிக் கொள்கிறீரே! நல்ல வேடிக்கை இது" என்று கூறி நகைத்துவிட்டு, "அதோ பின்னால் வருகிற இளைஞர் யார்?" என்று கேட்டாள் நிருபமா. "என்னுடைய மனைவியின் பந்து" என்று ராகவன் முணுமுணுத்தான். "எனக்குக் கூடத் தெரிந்த முகமாய்த் தோன்றுகிறது. சமீபத்தில் எங்கேயோ பார்த்திருக்கிறேன்" என்றாள் தாரிணி. "இந்தப் பையனை நீ எப்படிப் பார்த்திருக்க முடியும்? வேறு யாரையோ பார்த்துவிட்டுத் தவறாகச் சொல்கிறாய்!" என்றான் சௌந்தரராகவன். இதற்குள் சூரியா கொஞ்சம் முன்னால் வந்து, "இவர் சொல்வது பிசகில்லை, ஹரிபுரா காங்கிரஸில் இவரை நான் பார்த்தேன்" என்று சொல்லிவிட்டு, தாரிணியை நோக்கி, "நீங்கள் சோஷலிஸ்ட் கட்சிக் கூட்டத்துக்கு வந்திருந்தீர்கள் அல்லவா?" என்றான். ஹரிபுரா காங்கிரஸ் என்றதும் எட்டு வருஷத்துக்கு முன்னால் நடந்த கராச்சி காங்கிரஸ் ராகவனுடைய ஞாபகத்துக்கு வந்தது. கராச்சி விமானக்கூடமும் அங்கே முதன் முதலில் தான் தாரிணியைச் சந்தித்த சந்தர்ப்பமும் நினைவுக்கு வந்தன. இதற்கிடையில் தாரிணியின் மதுரமான குரல், "ஆம்; சோஷலிஸ்ட் கூட்டத்துக்கு நான் வந்திருந்தேன். அங்கே நீங்கள் பிரமாதமான பிரசங்கம் ஒன்று செய்தீர்கள். அதை இன்னும் என்னால் மறக்க முடியவில்லை!" என்று கூறியது கனவிலே கேட்பது போல் ராகவன் காதில் விழுந்தது.

சற்று அவன் நிதானித்துத் தாரிணி சூரியாவைப் பற்றித்தான் அவ்விதம் சொல்கிறாள் என்பதை அறிந்து கொண்டான். தன்னுடைய எழுத்துத் திறமையைக் குறித்துத் தாரிணி ஒரு சமயம் பாராட்டிப் பேசியது அவனுக்கு நினைவு வந்தது."ஓகோ! சூரியா அவ்வளவு பெரிய அதிகப்பிரசங்கி என்று எனக்குத் தெரியாதே?" என்றான்."அதிகப்பிரசங்கம் ஒன்றும் இவர் செய்யவில்லை.சுருக்கமாகத் தான் பேசினார்; பேசிய வரையில் அற்புதமாய்ப் பேசினார்" என்றாள் தாரிணி."ஏழை பணக்காரன் எல்லாம் ஒன்றாகி விடவேண்டும்; சர்க்கார் உத்தியோகஸ்தர்களின் சம்பளத்தைக் குறைக்க வேண்டும்; சுதேச ராஜாக்களை ஒழித்து விட வேண்டும் என்றெல்லாம் வெளுத்துக் கட்டினானாக்கும்!இப்படியெல்லாம் தீவிரமாகப் பேசுவதில் கஷ்டம் ஒன்றும் இல்லை.யார் வேணுமானாலும் இப்படி தடபுடலாய்ப் பேசலாம்!" என்றார் ராகவன். நிருபமா மறுபடியும் குறுக்கிட்டு, "தயவு செய்து கொஞ்சம் உங்கள் விவாதத்தை நிறுத்தி ஒரு நிமிஷம் இடைவெளி கொடுங்கள். என்னுடைய கணவரை உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறேன். இவர்தான் மிஸ்டர் வேணி பிரசாத் பி.ஏ.,எல்.எல்.பி.; இந்த ஊரில் பிரபல வக்கீல்; ஆனால் பிராக்டிஸ் மட்டும் கிடையாது! இப்போதைக்கு இவருடைய மனைவியின் சிநேகிதர்களை வீட்டுக்கு அழைத்து உபசரிப்பது தான் இவருக்கு முக்கிய வேலை. தாரிணி எங்கள் வீட்டில்தான் தங்கியிருக்கிறாள். நீங்களும் வந்து தங்கினால் இவருக்கு மிக்க சந்தோஷமாயிருக்கும். எங்களால் முடிந்த சௌகரியம் செய்து கொடுப்போம். ஆக்ராவில் எத்தனை நாள் தங்கியிருப்பதாக உங்களுடைய உத்தேசம்?" என்று சௌந்தரராகவனைப் பார்த்து நிருபமா கேட்டாள்.

"இன்றைக்கும் நாளைக்கும்தான்; தங்களுடைய அன்பார்ந்த அழைப்புக்காக வந்தனம். ஆனால் இன்னொரு சமயம் வருகிறோம். பொய் சொல்லுகிறவர்களுடன் சேர்ந்து ஒரே வீட்டில் இருக்க எனக்கு இஷ்டமில்லை." "அது என்ன? யார் பொய் சொன்னது?" என்று நிருபமா கேட்டாள். "உங்களுடைய தோழிதான், நீங்களே கேளுங்கள்; இவள் இறந்து போய்விட்டதாகக் கடிதம் எழுதியது உண்டா இல்லையா என்று?" தாரிணி புன்னகை புரிந்து, "நான் இறந்து போய் விட்டதாக நானே எப்படி எழுதியிருக்க முடியும்?" என்றாள். "நீ எழுதாவிட்டால் வேறு யாரையோ கொண்டு எழுதச் சொல்லியிருக்கிறாய்!" "நான் இறந்து போனது என்னமோ உண்மையான செய்திதான்!" "அப்படியானால் இப்போது இங்கே எப்படி இருக்கிறாய்?" "இறந்து போனவள் மீண்டும் பிழைத்தெழுந்தேன்." "எதற்காக?" என்று ராகவன் கடுமையாகக் கேட்டான். "இறந்து போன பிறகு தங்களுக்கு நான் கொடுக்க வேண்டிய இரண்டாயிரம் ரூபாயைப் பற்றி நினைவு வந்தது. அதை நினைத்து நினைத்து நீங்கள் இராத் தூக்கம் இல்லாமல் தவிப்பீர்களே என்று எண்ணி மறுபடியும் பிழைத்து எழுந்து வந்தேன்."

"பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்லவேண்டும். நீ ஒரே அண்டப் புளுகாய்ப் புளுகுகிறாய். அன்றைக்கு டில்லி ஸ்டேஷனில் பார்த்த போது, 'நான் தாரிணி இல்லை' என்று சொன்னாயே? அந்தப் பொய் எதற்காகச் சொன்னாய்?" "அப்படி நான் சொல்லவில்லையே? 'பழைய தாரிணி நான் இல்லை'யென்று தான் சொன்னேன். மேலே சொல்வதற்குள் ரயில் நகர்ந்துவிட்டது." "ஆகா! முன்னைப் போலவே எதற்கும் காரணம் சொல்லிச் சமாளித்துக் கொள்கிறாய்" என்றான் ராகவன். "நான் எல்லா விஷயங்களிலும் முன்னைப் போலவேதான் மாறாமல் இருக்கிறேன். மற்றவர்களும் அப்படியிருந்தால் இந்த மாதிரி பேச்சுக்கே இடமிராது போனால் போகட்டும். உங்களை மறுபடியும் எங்கே சந்திப்பது? பணத்தைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் அல்லவா!" "அதற்கு அவசரம் ஒன்றுமில்லை; மெதுவாய் வாங்கிக் கொள்கிறேன். ஆனால் உங்களை மறுபடியும் நான் சந்திக்க வேண்டும், தாஜ்மகால் பார்த்தாகிவிட்டதா?" "சாயங்காலம் மஞ்சள் வெளியில் பார்த்துவிட்டு இரவு பூரண சந்திரனுடைய நிலவிலும் பார்க்கலாம் என்று உத்தேசம்." "நாங்களும் அந்த நேரத்திற்குத்தான் வருவதாக இருக்கிறோம். பாக்கி விஷயம் அங்கே பேசிக் கொள்ளலாம்." "இதற்குள் இரண்டு கோஷ்டியும் பிரிந்து வெவ்வேறு வழி போக வேண்டிய இடம் வந்தது; விடை பெற்றுக் கொண்டு பிரிந்தார்கள்.

தாரிணி முதலியவர்கள் போனதும் இத்தனை நேரமும் ஒரு வார்த்தைக்கூடப் பேசாமல் மௌனமாயிருந்த சீதா, "ஏன்னா! இந்த ஸ்திரீ யார்?" என்று கேட்டாள். "உன் அம்மாஞ்சியைக் கேட்டுத் தெரிந்துகொள்!" என்றான் ராகவன். "அம்மாஞ்சியைக் கேட்பானேன்? நீங்கள்தான் சொல்லுங்களேன்! உங்களுக்குத் தெரியாதா!" "பேஷாகத் தெரியும்! உன்னைப்போல் அவளும் ஒரு ஸ்திரீ தான்!" "ஸ்திரீதான் என்று எனக்கும் தெரிந்தது. ஆனால் உருவத்திலே தான் ஸ்திரீயே தவிர, நடவடிக்கை எல்லாம் ஆண்பிள்ளை மாதிரி! புருஷனாய்ப் பிறந்திருக்க வேண்டியவள்; தவறிப் பெண்ணாய்ப் பிறந்து விட்டாள் போலிருக்கிறது." "நீ சொல்வது ரொம்ப சரி; ஆகவே அந்தப் பெண்ணாய்ப் பிறந்த புருஷனோடு நான் பேசுவதினால் உனக்கு மனக்கஷ்டம் ஏற்படாதல்லவா?" "மனக் கஷ்டமா? எனக்கு எதற்காக மனக் கஷ்டம்? அசல் பெண்ணாய்ப் பிறந்தவளோடு நீங்கள் பேசினால்தான் எனக்கு என்ன வந்தது? என்னைச் சுத்தப் பட்டிக்காடு என்று நினைத்துக் கொண்டீர்களா? நானும் பம்பாய் நகரத்தில் பிறந்து வளர்ந்தவள்தான்." "அந்த மகத்தான விஷயத்தை மறந்து போய்விட்டேன் தயவுசெய்து மன்னிக்க வேணும். "

"ஆனால் என்னிடம் எதையும் மறைத்துப் பேசினால் மட்டும் எனக்குப் பிடிக்காது. டில்லி ரயில்வே ஸ்டேஷனில் நீங்கள் ஓடிப் போய் பேசினவள் இவள்தான்? அதை எதற்காக மறைக்க வேண்டும்?" "பார்த்தாயா? சூரியா, உன் அத்தங்காளின் சமர்த்தை? இவளிடம் பயந்துகொண்டு நான் எதையோ மறைத்தேனாம்! நம்ம பக்கத்துப் பெண்களிடம் இதுதான் ஒரு பெரும் சங்கடம் வெறும் சந்தேகப் பிராணிகள்?" "நான் ஒன்றும் சந்தேகப் பிராணி இல்லை. 'ரயில்வே ஸ்டேஷனில் பார்த்துப் பேசியவள் யார்?' என்று நான் கேட்டதற்குத் 'தெரியாது' என்று ஏன் மெழுகி மறைத்தீர்கள்?" "மெழுகவும் இல்லை; மறைக்கவும் இல்லை தெரிந்தவளாக்கும் என்று போய்ப் பேசினேன். அவள் இல்லை என்று சாதித்தாள்; அப்படியிருக்க, 'யார்? யார்?' என்று நீ துளைத்தால் நான் என்ன பதில் சொல்வது? இப்போது அவளும் நானும் பேசிக் கொண்டிருந்தோமே? அதிலிருந்து உனக்கு விஷயம் தெரியவில்லையா?" "ஏதோ இங்கிலீஷில் பேசிக் கொண்டிருந்தீர்கள்! என்ன பேசினீர்கள் என்று நான் கண்டேனா? அவ்வளவு இங்கிலீஷ் எனக்குத் தெரியாது." "தெரியாவிட்டால் வாயை மூடிக்கொண்டு சும்மா இரு."

"இப்படி எரிந்து விழத்தான் உங்களுக்குத் தெரியும்; அன்பாக ஒரு வார்த்தை சொல்லத் தெரியாது." இதையெல்லாம் கேட்டுக்கொண்டு பின்னால் சூரியா வந்து கொண்டிருந்தான். பாரதியாரின் பாடலில், "தெள்ளிய தேனில் ஓர் சிறிது நஞ்சையும் சேர்த்தபின் தேனாமா?" என்ற வரிகள் அவனுடைய நினைவுக்கு வந்தன. அடடா! இவர்களுடைய இன்பமயமான இல்வாழ்க்கையில் இந்த ஒரு துளி விஷம் கலந்து விட்டதாகவல்லவா காணப்படுகிறது? என்று மனதிற்குள் பச்சாதாபப்பட்டான். "அத்தங்கா! நீ அந்தப் பெண்ணைப் பற்றிச் சொன்னது கொஞ்சமும் சரியல்ல; உத்தமமான தேச சேவகி அவள். ஹரிபுரா காங்கிரஸில் அவள் ஓடி ஓடித் தொண்டு செய்ததைப் பார்த்திருந்தாயானால் அவளுடைய குண மேன்மை உனக்குத் தெரிந்திருக்கும். அவள் 'பானி சாஹியே;' (தண்ணீர் வேண்டுமா?) என்று கேட்கும் வார்த்தையின் இனிமையினாலேயே தாகம் தணிந்துவிடும். அவளைப் பற்றி நீ ஒன்றும் தவறாக எண்ணிக் கொள்ளாதே!" என்று ஒரு குட்டிப் பிரசங்கம் செய்தான் சூரியா. "நீ பெரிய அதிகப்பிரசங்கி என்று தாரிணி சொன்னது சரிதான்? ஒரே வர்ணிப்பாய் வர்ணிக்கிறாயே!" என்றான் ராகவன். அதற்குப் பிறகு ஆக்ரா கோட்டையில் பாக்கியிருந்த கட்டிடங்களை அவர்கள் சுற்றிப் பார்த்தார்கள். ஆனால் முன்னைப் போல் அவ்வளவு உற்சாகம் யாருக்கும் இல்லை. "நடந்து நடந்து எனக்குக் காலை வலிக்கிறது; ஓட்டலுக்குப் போகலாமா?" என்றாள் சீதா. "ஆமாம்; பளிங்குக் கல்லாலேயே எல்லாக் கட்டிடங்களும் கட்டியிருப்பதால் ஒன்றைப் போலவே இன்னொன்று இருக்கிறது. ஒரு வித்தியாசமும் இல்லை; திரும்பிப் போக வேண்டியதுதான். சாயங்காலம் தாஜ்மகால் வேறே பார்க்க வேண்டும் அல்லவா?" என்றான் ராகவன். "தாஜ்மகாலைப் பற்றியும் இப்படித்தான் சொல்வீர்களோ, என்னமோ? அதுவும் பளிங்குக் கல்லால் கட்டியதுதானே?" என்று சொன்னான் சூரியா.

"ஆஹா! அது வேறு விஷயம்; தாஜ்மகால் கட்டிடமே இல்லை. அது உயிருள்ள தெய்வீக சிற்ப வடிவம்; இந்தியாவில் மொகலாயர் காலத்தில் ஏற்பட்ட மறுமலர்ச்சியின் ஜீவ பிம்பம்; ரதியும் மன்மதனும் பவனி வரும் வெண்மலர் விமானம்; சந்திர கிரணங்களையும் மந்தமாருதத்தையும் வானவில்லின் வர்ணங்களையும் காதல் இன்பத்தையும் குழைத்து எழுதிய உயிர்ச் சித்திரம்; ஒரு தடவை பார்த்தவர்களின் உள்ளத்திலிருந்து என்றென்றும் அகலாத சௌந்தர்ய மோகினி. தாஜ்மகாலை பார்க்காத ஜன்மம் மனித ஜன்மமேயல்ல!" என்று ராகவன் சொல்மாரி பொழிந்தான். மூவரும் ஆக்ராவில் தாங்கள் தங்கியிருந்த ஓட்டலுக்குச் சென்றார்கள். சாப்பிட்டுவிட்டுச் சிரமபரிகாரம் செய்து கொண்டார்கள். சீதா பட்டுப் பூச்சியின் பலவர்ண இறகுகள் போல் பிரகாசித்த உடைகள் அணிந்திருந்தாள். சிலந்திப் பூச்சியின் கூண்டைப் போல் தோன்றிய மெல்லிய சல்லாத் துணியைத் தலை பாதி மறையும்படியாகப் போர்த்திக் கொண்டிருந்தாள். விலை மதிக்க முடியாத முத்து மாலைகளையும் ரத்தின ஹாரங்களையும் அணிந்திருந்தாள். பாதங்களையும் விரல் நகங்களையும் செம்பஞ்சுக் குழம்பினால் அலங்கரித்து அழகு படுத்திக் கொண்டு இருந்தாள்.

வெண்ணிலாவின் நிறத்தையொத்த பளிங்குக் கல்லினால் கட்டி, பலவர்ண இரத்தினக் கற்களினால் சித்திர வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருந்த அரண்மனையின் மண்டபங்களிலும் மாடங்களிலும் அங்குமிங்கும் நடமாடினாள். ஆங்காங்கு, பளிங்குக் கல் வாய்க்கால்களில் சலசலவென்று ஓடிய நீரோடையைப் பார்த்து மகிழ்ந்தாள். சிற்சில இடங்களில் நீரோடையில் சிறு குளங்கள் அமைந்திருந்தன. அந்தக் குளங்களில் அன்று மலர்ந்த குமுதங்களும் தாமரைகளும் செங்கழுநீர்ப் பூக்களும் கொடிகளுடனும் இலைகளுடனும் காணப்பட்டன. இன்னும் சில குளங்களில் அன்று பூத்த ரோஜா மலர்களைக் கொட்டியிருந்தார்கள். புஷ்பங்களின் வாசனையோடு, ராணி நூர்ஜஹான் கண்டுபிடித்து உலகத்துக்கு அளித்த ரோஜா அத்தரின் வாசனையும் அகிற்புகை வாசனையும் கலந்து பரிமளித்தன. குளங்களின் ஓரமாக நின்று, மலர்ந்து மிதந்த புஷ்பங்களைச் சில சமயம் சீதா உற்றுப் பார்த்தாள். சில சமயம் ஸ்படிகம் போன்ற தண்ணீரில் தன்னுடைய பொன் மேனியின் அழகைக் கண்ட ஆனந்தத்தினால் அவளுடைய தேகமெல்லாம் சிலிர்த்தது. திடீரென்று அவளைச் சுற்றிப் பல பணிப் பெண்கள் நின்றார்கள். எங்கிருந்து வந்தார்களோ தெரியாது எல்லாரும் அழகிகள்தான். படமெடுத்து ஆடி அவ்வப்போது சீரும் நாக சர்ப்பத்தின் அழகை அவர்களுடைய அழகு ஒத்திருந்தது.

நாகப் பாம்பு தன் நீண்ட நாவை நீட்டுவது போல் அந்தப் பணிப் பெண்கள் எல்லாரும் சீதாவை நோக்கித் தங்கள் ஆட்காட்டி விரலைச் சுட்டிக் காட்டினார்கள், நெருப்புத் தழலைப் போல் அவர்களுடைய கண்கள் பிரகாசித்தன. "இவள்தான்!" இவள்தான்!" என்று சொல்லி ஏககாலத்தில் எல்லாரும் சீறினார்கள். "வா! எங்களுடன் வா!" என்று சீதாவை அழைத்தார்கள். அவர்களுடைய அழைப்பை மறுக்க முடியாமல் சீதா அவர்களுடன் சென்றாள். விசாலமான பளிங்குக் கல் மண்டபம் ஒன்றில், தோகை விரித்த மயிலைப் போல் பின்புறச் சாய்வு அமைந்த ரத்தின சகிதமான சிம்மாசனத்தில் மொகலாய மன்னனின் பட்ட மகிஷி அமர்ந்திருந்தாள். "ஆஹா! அந்த மாதரசியின் கர்வந்தான் என்ன? சீதாவை, "வா!" என்று கூட அழைக்கவில்லை; உட்காரவும் சொல்லவில்லை. "இந்த அசட்டுப் பைத்தியக்காரி யார்? எதற்காக இவளை இவ்விடம் கொண்டு வந்தீர்கள்?" என்று பணிப் பெண்களைப் பார்த்துச் சக்ரவர்த்தினி கேட்டாள். "மஹாராணி! இவள்தான் நம் இளவரசரின் காதலைக் கவர்ந்த காதகி? ராஜபுத்திர மங்கை சீதா!" என்று ஒரு பணிப்பெண் கூறினாள். "ஓகோ! அப்படியா? இவளுக்குத் தக்க தண்டனை விதிப்போம். இன்று நள்ளிரவு வரையில் இவள் உயிரோடு இருக்கட்டும்!" என்று அரசியின் ஆக்ஞை பிறந்தது.

அந்தி மாலையில் அரண்மனை உத்தியான வனத்தில் சீதா அங்குமிங்கும் அலைந்தாள். ரோஜா மலர்களையும் மல்லிகைப் பூக்களையும் பறித்து முகர்ந்தாள். அவளுடைய மனதில் கவலை குடிகொண்டிருந்த போதிலும் இளவரசர் வந்து தன்னைக் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையும் இருந்தது. இளவரசருடைய முகத்தோற்றத்தை எண்ணிப் பார்த்தபோது மொகலாய உடை தரித்த சௌந்தரராகவனுடைய வடிவமும் முகமும் சீதாவின் அகக்கண் முன்னால் வந்தன. மாலை மயங்கி இருளான போது அவளுடைய உள்ளத்தில் திகில் தோன்றியது. அதிதுரிதமாக நள்ளிரவு நெருங்கி வந்தது. அரண்மனையை ஜோதிமயமாகச் செய்து கொண்டிருந்த தீபங்கள் ஒவ்வொன்றாக அணைக்கப்பட்டன. பிறகு சீதா இருளும் தானும் தனிமையுமாக ஆனாள். சலவைக்கல் சுவரில் அமைந்திருந்த சித்திரப் பலகணி வழியாகச் சந்திரனுடைய கிரணம் ஒன்று உள்ளே புகுந்து சீதாவின் கன்னத்தைத் தொட்டுத் தன்னுடைய மனமார்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொண்டது. திடீரென்று அறைக்கு வெளியே பேச்சுக் குரல் கேட்டது. "அடியே! தூங்கிவிட்டாள் போலிருக்கிறதடி!" "இன்னும் சற்று நேரத்துக்கெல்லாம் ஒரே தூக்கமாய்த் தூங்க வேண்டியவள் தானே!" "எனக்கு என்னமோ இவளை ஒரேயடியாக் கொன்று விடுவதில் விருப்பமில்லை. அனார்க்கலியைச் சிறையில் அடைத்ததுபோல் இவளையும் அடைத்துவிட்டால், தானே பைத்தியம் பிடித்துப் புலம்பிச் சாகிறாள்!" "எல்லாவற்றுக்கும் மகாராணியைக் கேட்டுக் கொண்டு வருவோம், வாருங்கள்!"

பேச்சுக் குரல்கள் நின்று மௌனம் குடிகொண்டது. உடல் நடுக்கத்துடன் சீதா எழுந்தாள்; இனி அங்கே ஒரு கணம் தாமதிப்பது ஆபத்தாகிவிடும். உடனே கிளம்பி எப்படியாவது இந்த அந்தப்புரச் சிறைச்சாலையிலிருந்து தப்பித்து ஓடிப் போக வேண்டும். இளவரசர் இங்கு வந்து தன்னைத் தப்புவிப்பார் என்று நினைப்பது மதியீனம். தான் இங்கு இருப்பதே அவருக்குத் தெரியாதே. பின் எப்படிக் காப்பாற்றுவார்?' 'டில்லியிலேயே இருக்கவும், ஆக்ராவுக்கு வரவேண்டாம்' என்று இளவரசர் சொன்னதைக் கேட்காமல் அல்லவா வந்து விட்டோ ம். இருள் சூழ்ந்த அந்தப்புரத்தின் தாழ்வாரங்கள் வழியாகச் சீதா தட்டுத்தடுமாறி நடந்து சென்றாள். கையினால் சுவர்களைத் தடவிக் கதவு உள்ள இடத்தைத் தேடிக் கொண்டே சென்றாள். ஆங்காங்குப் பலகணிகளின் வழியாக வந்த நிலா வெளிச்சம் அவளுக்கு ஒருவாறு வழிகாட்டிக் கொண்டிருந்தது. பல இடங்களில் சுவரைக் கதவு என்று எண்ணி ஏமாந்தாள். கதவு தட்டுப்பட்டாலும் அதைத் திறக்க முடியாமல் ஏமாற்றமடைந்தாள். ஒரு யுகம் போலத் தோன்றிய ஒரு நாழிகை நேரம் இப்படி அலைந்து திரிந்த பிறகு கடைசியில் ஒரு கதவு அவள் கையை வைத்ததும் திறந்தது. நெஞ்சம் படபடவென்று அடித்துக் கொள்ள, வாசற் படியைத் தாண்டினாள். வெளியே வந்ததும் தன் எதிரே பிரம்மாண்டமான கோர ராட்சஸ உருவம் ஒன்று நிற்பதைக் கண்டு திகைத்து நின்றாள். அந்த உருவம் யார் என்பதை அவள் அறிவாள். ஆணும் இல்லாத பெண்ணும் இல்லாத அலி அவன். அதோடு செவிட்டு ஊமை; காது கேளாது, பேசவும் முடியாது. ஆனால் அவன் கண் பார்வை தீட்சண்யமானது.

தன்னுடைய கடமை என்னவென்பதும் அவனுக்கு நன்றாய்த் தெரியும். அந்தப்புரத்திலிருந்து வெளியே போகிறவர்களைத் தடுப்பது அவனுடைய முதற்கடமை. மீறிப் போக யத்தனிப்பவர்களைக் கொஞ்சமும் தாட்சண்யம் பாராமல் கண்ட துண்டமாக வெட்டுவதற்காக அவன் கத்தி வைத்திருந்தான். கத்திக்கு இரையாகாமல் தப்பி ஓடுகிறவர்களைக் குத்திக் கொல்வதற்காக ஈட்டியும் வைத்திருந்தான். இவனைப் போல் பல அலிகள் மொகலாய பாதுஷாவின் அந்தப்புரத்தைப் பாதுகாத்து வந்தார்கள். இவற்றையெல்லாம் நன்கறிந்திருந்த சீதா நடுநடுங்கினாள். அந்த அலியோ ஒரு வார்த்தையும் பேசாமல் அவளை உற்றுப் பார்த்து விழித்தான். அவ்வளவுதான்; சீதா பீதியினால் தன்னை மறந்து விட்டாள். "சூரியா! சூரியா!" என்று கதறினாள். தன்னைக் காப்பாற்றுவதற்காகத் தன் அம்மாஞ்சி சூரியா அந்தக் கோட்டைக்குப் பக்கத்தில் எங்கேயோ ஒளிந்திருக்கிறான் என்பது அவளுக்குத் தெரிந்திருந்தது. அதனாலேதான், "சூரியா!" என்று அவள் கதறினாள்.

சீதாவின் கதறலுக்கு ஒரு பதில் குரல் வந்தது. "இங்கே சூரியா இல்லை; நான் இருக்கிறேன்; வருகிறேன்!" என்று அந்தக் குரல் சொல்லிற்று. அது யாருடைய குரல் என்று சீதா அதிசயப்பட்டுக் கொண்டிருக்கையில் வெண்ணிலவு பிரகாசித்த நிலா முற்றத்துக்கு அப்பால் இருள் சூழ்ந்திருந்த மண்டபத்திலிருந்து ஓர் உருவம் வெளிப்பட்டு வந்தது. கொஞ்ச தூரம் வந்ததும் அது யாருடைய உருவம் என்பது சீதாவுக்குத் தெரிந்து போயிற்று. அன்றொரு நாள் தன் தாயார் நோயாய்ப் படுத்திருந்தபோது அவளைப் பார்க்க வந்து பணமும் நகையும் கொடுத்து விட்டுப் போன ஸ்திரீதான். புதுடில்லிச் சாலை முனையில் கையில் கத்தியுடன் மரத்தில் சாய்ந்து நின்று கொண்டிருந்தாளே, அவள்தான்! அந்த ஸ்திரீ இப்போதும் அக்கத்தியைக் கையில் பிடித்திருந்தாள். நிலா வெளிச்சத்தில் கத்தியில் சுடர் விளிம்பு தழல் கீற்றைப்போல் பிரகாசித்தது. அந்த ஸ்திரீ யார்? அவள் எதற்காக வருகிறாள்? அலியைக் கொன்று தன்னைக் காப்பாற்ற வருகிறாளோ? அல்லது அந்தப்புரத்திலிருந்து தப்ப முயன்றதாகத் தன்னையே கொன்று விடுவதற்குத்தானோ?... "அத்தங்கா! அத்தங்கா! இது என்ன தூங்கிக்கொண்டே பேசுகிறாய்? எழுந்திரு!" என்றான் சூரியா. சீதா கண் விழித்தாள்; பட்டப்பகலில் தான் தூங்கியது மட்டுமல்லாமல், பயங்கரமான கனவு கண்டு பிதற்றியும் இருக்க வேண்டும் என்று தெரிந்து வெட்கினாள். வெட்கத்தை மறைப்பதற்காக, "நான் ஒன்றும் பிதற்றவில்லையே, சூரியா! இவர் எங்கே போனார்?" என்று கேட்டாள். "டோ ங்கா கொண்டு வருவதற்காக வாசலுக்குப் போனார். எழுந்திரு, சீக்கிரம்! தாஜ்மகாலுக்குப் புறப்பட வேண்டாமா? மணி நாலு அடித்துவிட்டதே!" என்றான் சூரியா.

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

பதினொன்றாம் அத்தியாயம்
தாஜ்மகால்

புது மணம் புரிந்த மங்கை தன்னுடைய காதலன் அருகில் நெருங்கி வரும்போது ஆசையும் நாணமும் கலந்த தோற்றத்துடன் நிற்பது போலத் தங்க நிலாவில் தாஜ்மகால் என்னும் மோகினி நின்றாள். தும்பைப் பூவையொத்த வெண்மையும் மென்மையும் பொருந்திய டாக்கா மஸ்லினைக் கொண்டு மேனியை மட்டுமின்றி முகத்தையும் முக்கால் பங்கு மறைத்துக் கொண்டு அந்தப் புவன மோகினி சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள். அவளை நாலு புறமும் காவல்கள் புரியும் தோழிப் பெண்களைப் போல் நெடிதுயர்ந்த ஸ்தம்பக் கோபுரங்கள் நாலு மூலையிலும் நிமிர்ந்து நின்றன. உலகம் தோன்றிய நாள் தொட்டுக் காதலர்களுக்கு வேதனை தருவதையே தொழிலாகக் கொண்ட பூரண சந்திரன் தனது கர்ம பலனை இந்தத் தாஜ்மகால் மோகினியிடம் அனுபவித்தான். தன்னுடைய ஆயிரமாயிரம் தங்கக் கரங்களினால் அந்த இணையில்லா அழகியைத் தழுவ ஆசைகொண்டு எவ்வளவோ முயன்றான். எனினும் தூய்மையே உருவெடுத்த அந்த நங்கையின் மேனியை அவனுடைய கரங்கள் தொட முடியாமல் அப்பால் நழுவி விழுந்தன. ஒருவேளை நாணம் காரணமாகத் தன்னைப் புறக்கணிக்கிறாளோ என்று எண்ணி இருள் நிழலைத் தன் உதவிக்கு அழைத்தான். ஆனால் நிழல் அந்தக் கற்பரசியின் மேனிக்கு ஒரு கவசமாகிக் காமுகனுடைய கரங்களை அப்பால் நிற்கச் செய்தது.

சந்திரனுக்குக் காதல் வேதனை பொறுக்க முடியாமற் போயிற்று. "தாஜ்மகால் மோகினியினால் நிராகரிக்கப்பட்ட பிறகு இந்த ஜன்மம் என்னத்திற்கு?" என்று நிராசை அடைந்தான். அவள் கண்ணுக்கெதிரே தன் உயிரை விட்டுவிட எண்ணி அங்கிருந்த அழகிய நீர் ஓடையில் தலை குப்புற விழுந்தான். அப்போதுதான் அந்த வெண்மலர் மேனியினாளுக்கு மனதில் இரக்கம் உண்டாயிற்று. சந்திரனைக் கரையேற்றத் தானும் ஓடையில் குதித்தாள்! பளிங்குக் கல் ஓடையில் ஸ்படிகம் போலத் தெளிந்திருந்த நீரில் தங்கச் சந்திரனும் தாஜ்மகால் மோகினியும் ஒருவரையொருவர் கட்டித் தழுவிக் கொள்வதாகக் காதலர் உலகத்தில் மெய்மறந்து சஞ்சரித்துக் கொண்டிருந்த சீதாவின் கற்பனைக் கண்களுக்குத் தோன்றியது. ஆஹா! எத்தனை காலமாக இந்தத் தாஜ்மகாலைப் பார்ப்பதற்கு அவள் ஆவல் கொண்டிருந்தாள்! எத்தனை முறை மானசீக யாத்திரை செய்து இங்கே அவள் வந்திருக்கிறாள்! அந்தக் கனவெல்லாம் இன்றைய தினம் உண்மையாகிவிட்டது. சீதாவின் வாழ்க்கையில் இது ஒரு மகத்தான நன்னாள் என்பதில் சந்தேகம் என்ன?

தாஜ்மகாலின் முன் வாசலில் பிரவேசித்த பிறகு பிரதான கட்டிடம் வரையில் உள்ள நிலா முற்றம் ஏறக்குறைய இரண்டாயிரம் அடி நீளமும் ஆயிரம் அடி அகலமும் உள்ளது. இந்த நிலா முற்றத்தில் குறுக்கும் நெடுக்குமாக நீலோத்பலம் மலர்ந்த நீரோடைகள் பல இருக்கின்றன. வெள்ளைப் பளிங்குக் கல் ஓடைகளில் நீல வர்ண ஜாலமும் நீலோத்பலமும் நீல வானத்தின் பிரதிபலிப்பும் நட்சத்திரங்களின் கிலுகிலுப்பும் வர்ணிக்க முடியாத சௌந்தர்யக் காட்சியாகத் திகழ்கின்றன. கட்டிடத்தை நெருங்கும்போது நீர் ஓடைகளில் தாஜ்மகாலின் பிரதிபிம்பத்தையும் காணலாம். பௌர்ணமியன்று பூரண சந்திரனுடைய பிரதிபிம்பமும் ஓடை நீரில் ஜொலித்துக் கொண்டிருக்கும் என்று சொல்லவா வேண்டும்? "தங்க நிலாவின் ஒளியில், வெள்ளிப் பளிங்குக் கல் தரையில், நீல ஓடைக் கரையில், சீதா, ராகவன், சூரியா, தாரிணி, நிருபமா, அவளுடைய கணவர் வேணிப்பிரஸாத் ஆகியவர்கள் உட்கார்ந்திருந்தார்கள். மாலை நேரமெல்லாம் அவர்கள் தாஜ்மகாலைச் சுற்றிச் சுற்றிப் பார்த்தார்கள். உள்ளே சென்று ஷாஜஹான் - மும்தாஜ் சமாதிகளைப் பார்த்தார்கள். சமாதிகளைச் சுற்றிலும் சலவைக் கல்லில் அமைந்திருந்த அதி அற்புதமான சித்திர விசித்திர வேலைகளைப் பார்த்தார்கள். தூர தூர தேசங்களிலிருந்து தருவித்துப் பதித்திருந்த இரத்தினக் கற்களினாலான புஷ்ப ஹாரங்களைப் பார்த்தார்கள். நாலு மூலையிலும் நூற்றறுபது அடி உயரம் நிமிர்ந்து நின்ற காவல் கோபுரங்களிலே அவர்கள் போட்டி போட்டுக் கொண்டு ஏறி உச்சியிலிருந்து நாலாபுறமும் பார்த்து மகிழ்ந்தார்கள். யமுனை நதியில் இறங்கிக் களித்தார்கள்.அங்குமிங்கும் ஓடியாடினார்கள்; ஓடியவர்களைத் துரத்திப் பிடித்தார்கள். கலகலவென்று சிரித்தார்கள் விளையாட்டாக ஒருவரையொருவர் அடித்தார்கள்.

இப்படியெல்லாம் குதூகலமாக மாலை நேரத்தைக் கழித்த பிறகு எல்லாரும் ஓரளவு உடல் சோர்ந்து ஓடைக் கரையில் உட்கார்ந்தார்கள். இரவு சுமார் ஒன்பது மணி இருக்கும்; புற உலகமெங்கும் அமைதி நிலவியது. ஆனால் நம்முடைய நண்பர்கள் எல்லாருடைய உள்ளத்திலும் அமைதி நிலவியது என்று சொல்ல முடியாது. சீதா, ராகவன், தாரிணி, சூரியா ஆகிய ஒவ்வொரு வருடைய உள்ளமும் வெவ்வேறு காரணத்தினால் கொந்தளித்துக் கொண்டிருந்தது. "மனித ஜன்மம் எடுத்துத் தாஜ்மகாலைப் பார்க்காமலிருப்பதில் என்ன பயன்? அப்படிப்பட்ட ஜன்மமும் ஒரு ஜன்மமா?" என்று சீதா பேச்சைத் தொடங்கினாள். "அதுவும், பகலில் பார்த்தால் மட்டும் போதாது. இந்த மாதிரி பௌர்ணமி நிலவிலே பார்க்க வேண்டும்" என்றான் ராகவன். "பார்த்துவிட்டு உடனே உயிரை விட்டுவிட வேண்டும்; அப்புறம் உயிர் என்னத்திற்கு?" என்றான் சூரியா. அவன் பரிகாசமாகச் சொல்கிறான் என்பதைத் தெரிந்து கொண்ட சீதா, "ஆமாம், அம்மாஞ்சி! தாஜ்மகாலைப் பார்த்த பிறகு உயிரோடிருப்பது அவசியமில்லைதான்!" என்றாள்.

"தீப ஒளியைப் பார்க்கிற விட்டில் பூச்சி அப்படித்தான் எண்ணிக் கொள்கிறது!" என்றான் சூரியா. "என்னைப் பொறுத்த வரையில், இந்த மாதிரி ஒரு கட்டிடம் என்னைப் புதைக்குமிடத்துக்கு மேலே கட்டுவதாயிருந்தால், நான் இங்கேயே இந்த நிமிஷமே உயிரை விடத் தயார்!" என்றாள் நிருபமா. "அப்படி ஏதாவது செய்து வைக்காதே! இப்போதெல்லாம் உயிரோடிருப்பவர்கள் வசிப்பதற்கு வீடு கட்டுவதே கஷ்டமாயிருக்கிறது. செத்துப் போனவர்களுக்கு எப்படிக் கட்டிடம் கட்ட முடியும்? நிச்சயமாக என்னால் முடியாது?" என்றார் நிருபமாவின் கணவர் வேணிபிரஸாத். "மிஸ்டர் பிரஸாத்! தங்களுடைய மனைவிதான் இம்மாதிரி முதன் முதலில் சொன்னார் என்பதில்லை. இதற்கு முன் இங்கு வந்து பார்த்த ஸ்திரீகள் வெள்ளைக்கார துரைசானிமார்கள் உள்பட இம்மாதிரியே சொல்லியிருக்கிறார்கள். ஆனால் சிறிதும் யோசனை யின்றித்தான் சொல்லியிருக்கிறார்கள். செத்துப் போன பிறகு உடம்பைச் சுடுகாட்டில் வைத்து எரித்தால் என்ன? அல்லது அதைப் புதைத்துத் தாஜ்மகால் போன்ற ஒரு கட்டிடத்தை அதன் மேலே கட்டினால் என்ன? இறந்தவர்களுக்கு எப்படிச் செய்தாலும் ஒன்றுதான்!" என்று சூரியா சொன்னான்.

"சரியான பேச்சு! என்னுடைய கட்சியும் அதுதான். செத்துப் போன ஷாஜஹானுடைய ராணிக்கு இந்த தாஜ்மகால் கட்டிடத்தினால் யாதொரு பயனும் இல்லை. ஆனால் நம்மைப் போல் உயிரோடிருப்பவர்கள் எத்தனையோ பேர் இந்த அற்புதக் காட்சியைப் பார்த்து அனுபவிக்க முடிகிறது. உமர்கய்யாமின் கவிதை இந்த மாதிரி இடத்துக்குத்தான் பொருந்தும். "தங்குவதற்கு தாஜ்மகால்; ஒரு கூஜா திராட்சை ரசம்; ஒரு கவிதைப் புத்தகம்; என்னருகிலே நீ; இதைக்காட்டிலும் வேறு சொர்க்கமும் உண்டோ ?" என்று கூறி சௌந்தரராகவன் தாரிணியை உற்று நோக்கினான். "இத்தகைய மனோரதம் உங்களுக்கும் வேணிபிரஸாத்துக்கும் நிறைவேற இடம் உண்டு. ஆனால் தாரிணியையும் மிஸ்டர் சூரியாவையும் போன்றவர்கள் என்ன செய்வது?" என்று நிருபமா சொன்னாள். "அவரவர்களுக்கும் ஒரு நாள் கலியாணம் நடந்து விடுகிறது. சூரியா விஷயத்தில் கலியாணத்தைப் பற்றி கவலையே இல்லை. அவன் சம்மதிக்க வேண்டியதுதான்! மணப்பெண் தயாராகக் காத்துக் கொண்டிருக்கிறாள்!" என்றாள் சீதா. "அத்தங்கா! உனக்கு எப்போதும் காதலும் கலியாணமும் தான் நினைவு. காதலைத் தவிர உலகத்தில் வேறொன்றும் கிடையாதா?" என்றான் சூரியா.

"சந்தேகம் என்ன? காதலைக் காட்டிலும் உலகத்தில் முக்கியமானது ஒன்றுமில்லைதான். கவிதைகள், காவியங்கள், எல்லாம் காதலை அடிப்படையாகக் கொண்டுதானே புனைகிறார்கள்! காதல் இல்லாவிட்டால் வால்மீகியின் ராமாயணம் ஏது? காளிதாஸனின் சாகுந்தலம் ஏது? ஷேக்ஸ்பியரின் நாடகம் ஏது? மற்றும் இந்த நாளில் நவீன ஆசிரியர்கள் நவ நவமாக எழுதி வெளியிடும் அற்புதமான நாவல்களைத்தான் அவர்கள் எப்படி எழுத முடியும்" என்றான் ராகவன். "ஆகா! உங்கள் நாவல்களைக் கொண்டு போய் குப்பையிலே போடுங்கள். வேறு ஒன்றும் விஷயம் இல்லாதவர்கள் காதற் கதைகள் எழுதுகிறார்கள், வேலையற்ற வீணர்களே காதற் கவிதைகள் புனைகிறார்கள்!" என்று சூரியா சொன்னான். நிமிஷத்துக்கு நிமிஷம் அவனுடைய உள்ளத்தில் ஆவேசமும் அவன் குரலில் ஆத்திரமும் பெருகிக் கொண்டிருந்தன. "பின்னே எல்லோரும் காரல்மார்க்ஸைப் போலவே எழுத வேண்டும் என்கிறாயாக்கும்!" என்று சௌந்தரராகவன் கேலியாகக் கேட்டான். "எல்லாரும் காரல்மார்க்ஸைப் போல் எழுத வேண்டாம்; டால்ஸ்டாயைப் போல் எழுதட்டுமே? காந்தி மகானைப் போல் எழுதட்டுமே? ஜவாஹர்லால் நேருவைப் போல் எழுதட்டுமே? பெர்னாட்ஷாவைப் போல் எழுதட்டுமே?" "அம்மாஞ்சி! பாரதியாரைப் போல் எழுதலாமா, கூடாதா? பாரதியார் காதலைப்பற்றி என்ன சொல்லியிருக்கிறார்? நினைவிருக்கிறதா?" என்றாள் சீதா.

"பாரதியார் என்ன சொல்லியிருந்தால் இப்போது என்ன? அவர் சொன்னதெல்லாம் சரி என்று நான் ஒப்புக்கொள்ளவில்லையே? பாரதியாருக்கு அறிவு தெளிந்திருந்த போது தேசத்தின் சுதந்திரத்தைப் பாடினார். கொஞ்சம் மயக்கமாயிருந்தபோது காதலைப்பற்றிப் பாடினார்!" என்றான் சூரியா. "இவர் பேசுவதைப் பார்த்தால் ஏதோ காதலில் ஏமாற்றமடைந்தவர் போலத் தோன்றுகிறது!" என்று தாரிணி கூறிப் புன்னகை புரிந்தபோது அவளுடைய முல்லைப் பற்கள், நிலா வெளிச்சத்தின் முகத்தைப்போல் பிரகாசித்தன. அவளுடைய முகபாவத்தில் அனுதாபம் காணப்பட்டது. "அப்படியெல்லாம் ஒன்றுமில்லை" என்று சொல்லி சூரியா வெட்கத்தினால் தலையைக் குனிந்து கொண்டான். "சூரியா இப்படித்தான் ஏதாவது ஏட்டிக்குப் போட்டியாகச் சொல்வான், அவனுடைய போக்கே ஒரு தனி. சீதா! பாரதியார் காதலைப்பற்றி என்ன சொல்லியிருக்கிறார்? அதைச் சொல்லு? நாங்கள் கேட்கிறோம்" என்றான் ராகவன். "அன்பு வாழ்கென்று அமைதியில் ஆடுவோம்! ஆசைக் காதலைக் கைகொட்டி வாழ்த்துவோம்!" என்று மெல்லிய பொய்க் குரலில் பாடிக் காட்டினாள் சீதா. "அந்தப் பாட்டை முழுவதும் நன்றாகப் பாடுங்கள்! கேட்க விருப்பமாயிருக்கிறது" என்றாள் தாரிணி. "ஆம்; பாடுவதற்கேற்ற சமயம் இது; இவ்வளவு நேரம் வீண் பேச்சில் போய்விட்டது. சங்கோஜப்படாமல் குரலை நன்றாக விட்டுப் பாடுங்கள்!" என்றாள் நிருபமா. "சீதா, ராகவனுடைய முகத்தைப் பார்த்தாள். "அபஸ்வரமில்லாமல் பாடுவதாயிருந்தால் பாடு" என்றான் ராகவன். ராகவனுடைய பதில் சீதாவுக்குக் கோபத்தை ஊட்டியது. ஆயினும் சமாளித்துக்கொண்டு, "அபஸ்வரமோ; ஸுஸ்வரமோ, எனக்குத் தெரிந்தபடிதானே பாடமுடியும்?" என்றாள்.

"எங்களுக்கு ஸுஸ்வரமும் தெரியாது; அபஸ்வரமும் தெரியாது. எல்லா ஸ்வரமும் எங்களுக்கு ஒன்றுதான் தைரியமாகப் பாடுங்கள்!" என்றாள் நிருபமா. பிறகு ராகவனைப் பார்த்து, "உங்களுக்குப் பிடிக்காவிட்டால் காதை அடைத்துக் கொள்ளுங்கள்!" என்றாள். "பெண்மை வாழ்கென்று கூத்திடுவோமடா! பெண்மை வெல்கென்று கூத்திடுவோமடா!" என்ற பாட்டைச் சீதா பாடினாள். பாடும்போது எல்லாரும் சீதாவின் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ராகவன் மட்டும் தாரிணியின் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான். பாட்டு முடிந்ததும், தாரிணியும் நிருபமாவும் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டார்கள். நிருபமாவுக்கும் அவளுடைய கணவனுக்கும் தாரிணி, பாட்டின் கருத்தை விளக்கினாள். ராகவன், "இது என்ன பாட்டு, டா, டூ, என்று? எனக்கு ஒன்றும் அவ்வளவாகப் பிடிக்கவில்லை" என்றான். இந்தப் பாட்டில் நல்ல கருத்துக்கள் பல இருக்கின்றன. ஆனால் காதலைப்பற்றி இவ்வளவு பிரமாதப்படுத்த வேண்டாம். "காற்றிலேறி அவ்விண்ணையும் சாடுவோம் காதற் பெண்கள் கடைக்கண் பணியிலே!" என்பதெல்லாம் மிகைப்படுத்துவதில் சேர்ந்தது. காதற் பெண்கள் கடைக்கண்ணால் பணித்தால் என்ன வேணுமானாலும் செய்து விடலாமாக்கும்! சுத்த அபத்தம்! இந்த மாதிரிக் காரியம் செய்தவர்களால்தான் இந்திய தேசம் அடிமைப்பட்டுப் பாழாய்ப் போயிற்று, பிருதிவிராஜனைப் போல? அத்தங்கா! பாரதியாரின் தேசிய கீதம் ஒன்று பாடு!" என்றான் சூரியா.

"எனக்குத் தேசீய கீதம் ஒன்றும் தெரியாது. பாடினாலும் அபஸ்வரமாயிருக்கும் டா, டூ என்று கர்ண கடூரமாயிருக்கும்!" என்றாள் சீதா. "தாரிணி உனக்கு ஹிந்துஸ்தானியில் ஒரு தேசீய கீதம் தெரியுமே? அதைப் பாடு!" என்றான் ராகவன். "ஆமாம், தாரிணி! 'ஸாரே ஜஹான்ஸே அச்சா' என்ற கீதம் உனக்குத் தெரியுமே? அதைப் பாடு, கராச்சியிலிருந்து பம்பாய்க்கு கப்பலில் போனபோது கடைசியாக நீ பாடிக் கேட்டது, அப்புறம் கேட்கவே இல்லை" என்றாள் நிருபமா. தாரிணி பாடினாள்; இரவு நேரத்தில் சப்தம் செய்யும் பட்சிகளும் வண்டுகளும் காற்றும் கூட அடங்கி நின்றன. பூரண சந்திரன் தாஜ்மகால் மோகினியை ஒரு கணம் மறந்து தாரிணியின் கீதத்தில் கவனம் செலுத்தினான். நட்சத்திரங்கள் கண் கொட்டுவதைக் கூட நிறுத்தி ஆர்வத்தோடு கேட்டன. நிலா வெளிச்சத்தில் புகைப்படம் எடுக்க முயன்று கொண்டிருந்த ஒரு வெள்ளைக்காரரும் அவருடைய துரைசானியும் கூடத் தங்கள் காமிராவை மூடிவிட்டுக் காது கொடுத்துக் கேட்டனர். பாடி முடித்ததும் நிருபமாவும் அவளுடைய கணவரும், "அச்சா! பஹூத் அச்சா!" என்றார்கள். "பலே பேஷ்!" என்றான் சூரியா. "பாடினால் இப்படிப் பாடவேண்டும்; இல்லாவிட்டால் சும்மா இருக்க வேண்டும்" என்றான் ராகவன். சீதாவின் உள்ளம் புண்பட்டது என்பதைச் சூரியா கவனித்தான். அவளைப் பார்த்து, "அத்தங்கா! நீ கூட இந்தப் பாட்டைக் கற்றுக் கொள்ளலாம். இதன் அர்த்தம் என்ன தெரியுமா? 'உலகில் எல்லாத் தேசங்களிலும் சிறந்தது நம்முடைய ஹிந்துஸ்தானம்' என்பது முதல் வரியின் கருத்து" என்றான்.

"அதற்குக் கூடச் சந்தேகமா? உலகத்திலெல்லாம் மிகச் சிறந்த தேசம் நம் இந்திய தேசம் தான். அதை நிரூபிக்க இந்தத் தாஜ்மகால் ஒன்று போதுமே!" என்றாள் சீதா. "நீ சொல்வது தப்பு; இந்தியாவின் மகிமை தாஜ்மகாலில் ஏற்படவில்லை. இமயமலையினாலும் கங்கை நதியினாலும் புத்தராலும் அசோகராலும் சிவாஜியினாலும் ஜான்ஸிராணியினாலும் இந்தியாவுக்கு மகிமை ஏற்பட்டது" என்றான் சூரியா. "இமயமலையும் கங்கை நதியையும் போல் வேறு தேசங்களில் மலையும் நதியும் இருக்கின்றன. ஆனால் தாஜ்மகாலைப் போன்ற ஒரு கட்டிடம் கிடையாது. ஆகையால் இந்தியா தாஜ்மகாலினாலே தான் பெருமையடைந்திருக்கிறது" என்று சொன்னான் ராகவன். "இந்தப் பெருமை இந்தியாவுக்கு வேண்டாம் என்று நான் நினைக்கிறேன்" என்றான் சூரியா. "உலகத்தின் ஒன்பதாவது அதிசயம் உனக்கு மட்டும் அதிசயமில்லை யாக்கும்!" என்றான் ராகவன். "மிஸ்டர் சூரியாவுக்கு அதிசயமில்லாவிட்டால் உலகம் அஸ்தமித்துவிடாது. இந்த தாஜ்மகால் கட்டிடத்தினால் இந்தியாவின் மகிமை விளங்குகிறது; சலனமில்லாத காதலின் பெருமையும் இதன் முலம் வெளியாகிறது!" என்றார் பிரஸாத். "ஆ! நீங்கள் கூடக் காதலைப் புகழ ஆரம்பித்து விட்டீர்களா!" என்று சூரியா அருவருப்பு நிறைந்த குரலில் கேட்டான்.

"நீங்கள் ஏன் காதல் என்றால் கரிக்கிறீர்கள்? இந்தத் தெய்வீக அழகு வாய்ந்த தாஜ்மகால் ஷாஜஹானுடைய காதலிலிருந்து தானே உற்பவித்தது?" என்று நிருபமா கூறினாள். "அம்மணி! தயவு செய்து கேளுங்கள், ஷாஜஹானுடைய காதலிலிருந்து இந்தத் தாஜ்மகால் கட்டிடம் பிறக்கவில்லை. பாதுஷா ஷாஜஹானுடைய கொடுங்கோன்மையிலிருந்து பிறந்தது. அந்தக் கொடுங்கோன்மை அவனுடைய மகன் ஔரங்கசீப்புக்கே பொறுக்கவில்லை. அதற்காக அவன் தன்சொந்தத் தகப்பனைச் சிறையில் அடைத்து வைத்தான்." "ஆ! ஔரங்கசீப் கலை உணர்ச்சி என்பது அறவே இல்லாதவன். அவன் கொடுங்கோலன் என்பது சரித்திரப் பிரசித்தமானது. ஷாஜஹான் எப்படிக் கொடுங்கோலனாவான்? அவன் ரொம்ப நல்லவன் என்று சரித்திரம் சொல்கிறதே!" "ஆமாம்; ரொம்ப ரொம்ப நல்லவன் ஆனால் அந்த ஒரு நல்லவனுடைய தற்பெருமைக்காக எத்தனை ஜனங்கள் கஷ்டப்பட வேண்டியிருந்தது தெரியுமா? இந்தத் தாஜ்மகாலைக் கட்டி முடிக்க இருபது வருஷம் ஆயிற்று என்று உங்களுக்குத் தெரியுமா? இருபதாயிரம் தொழிலாளர்கள் நெற்றி வியர்வை நிலத்தில் விழ இரவு பகல் பாடுபட்டார்கள் என்று தெரியுமா? மக்களைக் கசக்கிப் பிழிந்து வசூலித்த வரிப் பணத்தில் கோடானு கோடி ரூபாய் செலவழிந்தது என்பது தெரியுமா? ஒரு தனி மனிதனுடைய தற்பெருமைக்காக இருக்கட்டும்; அல்லது அவனுடைய அதிசயமான காதலுக்காகவே இருக்கட்டும்; இருபதினாயிரம் பேர் இருபது வருஷம் உழைத்து உழைத்து உயிர் விட வேண்டுமா? இதை ஒருநாளும் நான் ஒப்புக்கொள்ள முடியாது. எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் என்ன செய்வேன் தெரியுமா?" என்று ஆங்காரத்துடன் கூறிச் சூரியா மூச்சு விடுவதற்காக நிறுத்தினான். "உமக்கு அதிகாரம் இருந்தால் என்ன செய்வீர்?' என்று தாரிணி புன்னகை புரிந்த வண்ணம் கேட்டாள்.

அன்று மாலை தாஜ்மகால் வாசலில் இருந்த விளையாட்டுச் சாமான் கடையில் சீதா ஒரு பளிங்குக் கல் 'மாடல்' தாஜ்மகாலை வாங்கியிருந்தாள். அது சூரியாவின் பக்கத்தில் இருந்தது. சூரியா அதைக் கையில் எடுத்துக் கொண்டான். "ஆயிரம் பதினாயிரம் மக்களைக் கொடுமைப்படுத்தி ஒரு மூட அரசன் தன்னுடைய தற்பெருமைக்காகக் கட்டிய இந்த தாஜ்மகாலை, எனக்கு அதிகார மிருந்தால், இந்த நிமிஷமே இடித்துத் தள்ளிச் சுக்குநூறாக்குவேன்!" என்று இரைந்து கத்தியவண்ணம், கையில் எடுத்திருந்த தாஜ்மகால் பொம்மையை வீசி எறிந்தான். எறிந்த தாஜ்மகால் பொம்மை தாரிணியை நோக்கிச் சென்றது. அவளுடைய தலையிலோ முகத்திலோ அது விழப் போகிறது என்ற பயத்தினால், பார்த்திருந்தவர்கள் எல்லாரும், ஆஹா!" என்றார்கள். தாரிணியும் திடுக்கிட்டுச் சிறிது தலையைப் பின்வாங்கிக் கொண்டாள். நல்லவேளையாக, எறியப்பட்ட தாஜ்மகால் தாரிணியின் மேல் விழாமல் பக்கத்தில் விழுந்தது. விழுந்த வேகத்தில் சுக்குநூறாயிற்று. உடைந்த பகுதி ஒன்று எகிரிக் கிளம்பிச் சென்று தாரிணியின் நெற்றியில் தாக்கியது. முன் கூந்தலுக்குக் கீழே காயம் பட்டு இரத்தம் கசியத் தொடங்கியது. தாரிணியின் தந்த நிற நெற்றியிலிருந்து கசிந்த இரத்தத் துளியை வெண்ணிலவின் கிரணம் தழுவி அதை ஜோதி மயமான நாகரத்தினம் போலத் திகழச் செய்தது.

தாஜ்மகால் தாரிணியின் மேல் விழாமல் கீழே விழுந்ததினால் பயம் நீங்கப் பெற்றவர்களை இந்த விபரீதம் மீண்டும் திடுக்கிடச் செய்தது. சூரியாவைத் தவிர மற்றவர்கள், "ஆஹா!" என்று சத்தமிட்டுக்கொண்டு தாரிணியைச் சூழ்ந்து கொண்டார்கள். முதலில் அவளை அணுகிச் சென்று நெற்றியில் கையை வைத்து இரத்தத்தை நிறுத்த முயன்றவன் ராகவன்தான். நிருபமா பலாத்காரமாக அவனுடைய கையை அப்புறப்படுத்திவிட்டுத் தன்னுடைய கைக்குட்டையினால் காயம்பட்ட இடத்தில் கட்டினாள். மற்றவர்களைப் போலவே கவலையுடன் தாரிணியின் அருகில் சென்ற சீதா, ராகவனுடைய செய்கையைப் பார்த்து நெஞ்சினிலே அம்பு பாய்ந்தவளைப் போன்ற வேதனை அடைந்தாள். சிறிது நேரம் தாரிணியைச் சுற்றி ஒரே அல்லோலகல்லோலமாயிருந்தது. சிறிது நேரத்திற்குப் பிறகு அமைதி ஏற்பட்டது. எல்லாரும் அவரவர்களுடைய இடத்தில் உட்கார்ந்தார்கள். வேணிப் பிரஸாத் ராகவனைப் பார்த்து, "உங்கள் சிநேகிதர் மிக்க முரடர் போலிருக்கிறதே?" என்றார். "சுத்த இடியட்! செய்ததற்காக மன்னிப்புக் கூடக் கேட்டுக் கொள்ளாமல் தூரத்திலேயே உட்கார்ந்திருக்கிறான்!" என்றான் ராகவன். "இந்தச் சின்ன விஷயத்துக்கு இவ்வளவு எதற்காக தடபுடல் செய்கிறீர்கள்?" என்றாள் தாரிணி. "நல்லவேளை, நெற்றில் பட்டதோடு போயிற்று! ஒருவேளை கண்ணிலே பட்டிருந்தால் என்ன ஆகும்?" என்றான் ராகவன். "அதுதான் படவில்லையே? பின் எதற்காக இந்தப் பேச்சு! நீங்கள் எல்லாரும் சும்மா இருந்தாலே எனக்குப் பெரிய உதவியாயிருக்கும்!" என்று தாரிணி கூறினாள்.

சீதா மௌனமாயிருந்தாள்; அவளுடைய உள்ளத்தில் ஒரு பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டிருந்தது. ஒரு சிறு கடுகத்தினை காயம் நெற்றியில் ஏற்பட்டதற்கு இவ்வளவு உபசாரமா, இவ்வளவு தடபுடலா என்று ஒரு கணம் நினைத்தாள். "இவளுக்கு நன்றாக வேண்டும்! காயம் இன்னும் கொஞ்சம் பெரிதாகப் பட்டிருக்கக் கூடாதா?" என்று மறுகணம் நினைத்தாள். "இந்தக் காயம் நமக்குப் பட்டிருக் கக்கூடாதா? நம்மையும் இப்படி எல்லாரும் சூழ்ந்து உபசாரம் செய்வார்கள் அல்லவா?" என்ற எண்ணமும் ஒரு பக்கத்தில் இருந்தது. "பாவம்! சூரியா என்ன செய்வான்? தவறிப் பட்டதற்கு அவன் பேரில் இவ்வளவு எரிந்து விழுகிறார்களே?" என்று அனுதாபப்பட்டாள். "இந்த உலகத்திலேயே நம்மிடம் உண்மையான அபிமானம் உள்ளவன் சூரியா ஒருவன் தான். முன்னேயெல்லாம் அவனை நாம் கண்டபடி பரிகாசம் செய்து அவமானப்படுத்தினோமே?" என்று தன்னைத் தானே நொந்து கொண்டாள். தன்னுடைய அனுதாபத்தைப் பார்வையின் மூலம் தெரியப்படுத்த எண்ணிச் சூரியாவை அடிக்கடி நோக்கினாள். ஆனால் அவனோ ஆகாசத்தைப் பார்த்துக் கொண்டு ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியிருந்தான். தாஜ்மகால் நொறுங்கித் தாரிணிக்குக் காயம் பட்ட சம்பவத்துக்குப் பிறகு பேச்சு ஒன்றும் அவ்வளவாகச் சுவாரஸ்யப் படவில்லை. "போதும் தாஜ்மகால் பார்த்த இலட்சணம்; ஓட்டலுக்குத் திரும்பிப் போகலாமே?" என்றாள் சீதா. "சரி" என்று சொல்லி எல்லாரும் உடனே எழுந்தார்கள். ஓட்டலுக்குச் சென்றதும் சூரியா தன் சாமான்களை எடுத்துக்கொண்டு அவசரமாக டில்லிக்குப் போகவேண்டும் என்று சொல்லிவிட்டு ரயில்வே ஸ்டேஷனுக்குப் புறப்பட்டான்.

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

பன்னிரண்டாம் அத்தியாயம்
சரித்திர நிபுணர்

"ஸ்ரீமதி தாரிணி தேவி அவர்களுக்கு; இன்று தாஜ்மகாலில் என்னால் தங்களுக்கு நேர்ந்த இன்னலைக் குறித்து வருந்துகிறேன். தங்கள் நெற்றியில் காயப்படுத்தி இரத்தம் வருவிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு அணுவளவும் இருந்ததில்லை. அத்தகைய சந்தேகம் தாங்களும் கொண்டிருக்க மாட்டீர்கள். பேசும்போது உணர்ச்சி வேகத்தினால் தூண்டப்பட்டுக் கையிலிருந்த தாஜ்மகால் பொம்மையை வீசி எறிந்தேன். அது சுக்குநூறாயிற்று; இதைப் பற்றி நான் வருந்தவில்லை. அசல் தாஜ்மகாலும் ஏதேனும் ஒரு காரணத்தினால் இம்மாதிரி நொறுங்கிப் போயிருந்தாலும் அதற்காக நான் சிறிதும் வருத்தப்பட்டிருக்க மாட்டேன். யாரோ ஒரு மௌடீகக் கிழவனுடைய கையில் இந்தப் பெரிய தேசம் ஒரு காலத்தில் சிக்கிக் கொண்டிருந்தது. வயோதிகத்தினால் அறிவு மங்கி வந்த நாளில், அந்த அரசன் காதல் என்னும் மூடப்பிரமை காரணமாக ஒரு பெரிய பொம்மை செய்தான். செத்துப்போன தன்னுடைய காதலியின் ஆத்ம திருப்திக்காக என்றெண்ணிக் கோடி கோடி ரூபாய்ச் செலவிட்டு அந்தப் பொம்மையைச் செய்தான். இதைத் தான் 'தாஜ்மகால்' என்னும் உலக மகா அதிசயங்களில் ஒன்று என்பதாக அறிவற்ற சிந்தனா சக்தியில்லாத, மனித மந்தைகள் ஆச்சர்யத் துடன் பார்க்கின்றன; வியந்து கொக்கரிக்கின்றன! இது என்னுடைய உறுதியான அபிப்பிராயம்.

ஆனால் எப்போதோ இருந்து இறந்துபோன கிழவன் ஷாஜஹான் தாஜ்மகால் கட்டியதற்கு நீங்கள் என்ன செய்வீர்கள்? உங்கள் பேரில் எனக்குக் கோபம் கிடையாது. கோபம் காரணமாக வேண்டுமென்று அந்தப் பொம்மைத் தாஜ்மகாலை நான் எறியவில்லை. அதன் துகள் தங்கள் நெற்றியில் பட்டுக் காயமாகும் என்றாவது, இரத்தம் வரும் என்றாவது கொஞ்சம் கூட எதிர் பார்க்கவில்லை. இப்படி எதிர்பாராமல் நேர்ந்த காரியத்திற்காக மறுபடியும் தங்கள் மன்னிப்பைக் கோருகிறேன். ஆனால் இந்தக் கடிதத்தை முடிப்பதற்கு முன் இன்னொரு விஷயம் சொல்லத்தான் வேண்டும். தங்களைக் காயப்படுத்த விரும்பவில்லையென்று சொன்னேனல்லவா? ஆனால் தங்களுடைய நெற்றியில் ஒரு சிறு காயம் பட்டுவிட்டதற்காக அப்படித் தங்களைச் சூழ்ந்து கொண்டு, 'ஆ ஹூ' என்று ஆர்ப்பாட்டம் செய்தார்களே, அவர்களை எல்லாம் தலையில் இரண்டு குட்டுக் குட்டிக் கன்னத்திலும் இரண்டு அறை கொடுக்க வேண்டுமென்று எனக்குத் தோன்றியது! என் கையில் பிரம்பு இருந்தால் தலைக்கு நாலு அடி முதுகில் கொடுத்து இழுத்து அப்பால் விட்டிருப்பேன். அறிவற்ற நிர்மூடர்கள்! ஒரு சின்ன விஷயத்துக்கு எத்தனை கூச்சல்? எத்தனை குழப்பம்? எவ்வளவு ஆர்ப்பாட்டம்? பாரத தேசம் சுதந்திரம் பெறுவதற்குள்ளே இந்த நாட்டு மக்கள் எவ்வளவோ மகத்தான கஷ்டங்களைச் சகித்தாக வேண்டும்; லட்சக் கணக்கான ஜனங்கள் உயிரைப் பலி கொடுத்தாக வேண்டும்; கண்ணைத் திறந்து கொண்டு நெருப்பிலே குதித்தாக வேண்டும். சுதந்திரமடைந் திருக்கும் வெளி நாடுகளைப் பாருங்கள்!

நாட்டைப் பாதுகாப்பதற்காகப் போர் புரிந்து எத்தனை பேர் கையிழந்தும், காலிழந்தும் கண்ணிழந்தும் அங்கஹீனர்களாக வாழ்நாள் முழுவதும் காலம் கழிக்கிறார்கள். முகமெல்லாம் பயங்கரமான காயங்களின் அடையாளங்களுடன் எத்தனை பேர் உயிர் வாழ்கிறார்கள்? இந்த நாட்டில் நாமோ ஒரு நெற்றிக் காயத்திற்காக ஒரு துளி ரத்தம் வந்துவிட்டதற்காக இவ்வளவு தடபுடல் படுத்துகிறோம்! இப்படிப்பட்ட கோழைகளையும் பயங்கொள்ளிகளையும் 'ஹிஸ்டீரியா' நோயாளிகளையும் வைத்துக்கொண்டு இந்தப் பாரததேசம் எப்படித்தான் சுதந்திரம் அடையப் போகிறதோ ஆண்டவனுக்குத்தான் தெரியும். இந்த வீரபூமியில் நம்முடைய முன்னோர்கள் இப்படியெல்லாம் இருக்கவில்லை. வீர இராஜபுத்திர நாட்டுக்கு நாளை நீங்கள் போவீர்கள். அங்கே எத்தகைய வீர புருஷர்களும் வீர வனிதைகளும் ஒரு காலத்தில் வாழ்ந்தார்கள்! 'கோட்டை விழுந்து விட்டது; எதிரிகள் உள்ளே புகுந்து விட்டார்கள்!" என்று கேட்டதும், தயாராக வளர்த்து வைத்திருந்த பெருந்தீயில் நூற்றுக்கணக்கான நாரீமணிகள் விழுந்து உயிரை விட்ட நாடல்லவா இது! ராணாடங்கிராமசிங் என்று ஒரு மகாவீரன் இருந்தான். அவனுடைய தேகத்தில் போர்க்களத்திலே பெற்ற தொண்ணூற்றாறு காயங்களின் வடுக்கள் இருந்தனவாம்! முத்துக்களும் ரத்தினங்களும் பதித்த ஆபரணங்களைக் காட்டிலும் அந்தக் காயங்களின் வடுக்களையே சிறந்த பூஷணமாக அந்த மகாவீரன் கருதினானாம். அப்படிப்பட்ட வீரர்கள் வாழ்ந்த தேசத்தில் இன்றைக்கு ஒரு சிறு காயம் நம்மையெல்லாம் நிலை கலங்கச் செய்துவிடுகிறது. பெண்களை மட்டுமல்ல; புருஷர் களைக்கூட 'ஹிஸ்டீரியா' வுக்கு உள்ளாக்கி விடுகிறது! இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்; எங்கள் நாட்டுக் கவி 'நெஞ்சு பொறுக்குதில்லையே!' என்று ஒரு பாடல் பாடியிருக்கிறார். அந்தப் பாரதியார் பாடல் சீதாவுக்குத் தெரியும்; பாடச் சொல்லிக் கேளுங்கள். இங்ஙனம், சூரியா.

இந்தக் கடிதத்தை ஆக்ராவிலிருந்து ரஜினிப்பூருக்குச் சென்று கொண்டிருந்த ரயிலில் வைத்துத் தாரிணி படித்துக் கொண்டிருந்தாள். ஒரு தடவை படித்து இரண்டாந் தடவையும் படித்து விட்டு அந்தக் கடிதத்தைத் தன்னுடைய கைப் பெட்டிக்குள் வைத்துப் பூட்டினாள். இதைப் பார்த்த ராகவன், "கடிதத்தை இவ்வளவு பத்திரமாய் வைத்துப் பூட்டுகிறீர்களே? அது என்ன காதல் கடிதமா?" என்று கேட்டான். "பிதற்றல்!" என்றாள் தாரிணி; ராகவனுடைய கேள்வியைப் பற்றி மேற்கண்ட அபிப்பிராயத்தை அவள் தெரிவித்தாள். ஆனால் ராகவன் அதைத் தெரிந்து கொள்ளாததுபோல், "பிதற்றலைப் பெட்டியில் வைத்துப் பூட்டுவானேன்!" என்றான். அன்று காலையில் தாரிணியும் அவள் தோழியும் வந்து ரயில் ஏறியபோது எற்கெனவே வண்டியில் ராகவனும் சீதாவும் மட்டும் ஏறியிருப்பதைக் கவனித்தார்கள். தாரிணியின் மனதில் ஒரு சந்தேகம் உதித்தது "சூரியா எங்கே?" என்றாள். "அவன் வரவில்லை டில்லிக்குப் புறப்பட்டுப் போய்விட்டான்!" என்றான் ராகவன். "நேற்றிரவுச் சம்பவத்துக்காக அவரைச் சண்டை பிடித்துத் துரத்தி விட்டீர்களா, என்ன!" என்று தாரிணி கேட்டாள். "நாங்கள் ஒன்றும் சண்டை பிடிக்கவில்லை. அவனுக்கே அவமானமாயிருந்தது போலிருக்கிறது. பிடிவாதமாய்ப் புறப்பட்டுப் போய்விட்டான்!" என்றான் ராகவன். சீதா தன்னுடைய அம்மாஞ்சியின் கௌரவத்தைப் பாதுகாக்க வேண்டி, " அவனுக்கு ஏதோ அவசர ஜோலியாம். ஆக்ராவுக்கு மட்டும் வருவதாகத்தான் முன்னே சொல்லியிருந்தான். உங்களுக்கு ஒரு மன்னிப்புக் கடிதம் கூட கொடுத்திருக்கிறான்?" என்று கூறினாள். பிறகு தன் கணவனைப் பார்த்து, "கடிதத்தை அவரிடம் கொடுங்களேன்!" என்றாள். "வண்டி புறப்படட்டும்; இப்போது என்ன அவசரம் அந்தக் கடிதத்திற்கு?" என்றான் ராகவன். தாரிணி, "மன்னிப்பாவது, கடிதமாவது? ஒரு சின்ன விஷயத்துக்காக நீங்கள் எல்லோருமாகச் சேர்ந்து அவரைச் சண்டை பிடித்துத் துரத்திவிட்டீர்கள். எனக்கு ரொம்ப வருத்தமாயிருக்கிறது" என்றாள்.

இது சீதாவுக்குத் திருப்தியாயிருந்தது, ஆனால் ராகவன் கோபமாக, "சின்ன விஷயமா அது! நெற்றியில் பட்டதுபோல் கண்ணில் பட்டிருந்தால் என்ன ஆகியிருக்கும்? இருந்தாலும், மனிதராய்ப் பிறந்தவர்கள் இவ்வளவு மிருகத்தனமாக நடந்து கொள்ளக்கூடாது?" என்றான். அவனுடைய அபிப்பிராயத்தை நிருபமா ஆதரித்து, "ஆமாம்; அந்தப் பையன் சுத்தப் பட்டிக் காடாகத்தான் நடந்து கொண்டான்!" என்றாள். "பட்டணங்களில் உள்ளவர்கள் ரொம்ப நாகரிகமாக நடந்து கொள்வதாக உங்களுடைய எண்ணம் போலிருக்கிறது. பட்டணங்களில் வசிப்பவர்கள் எப்படிச் சில சமயம் புலி கரடிகளாகவும், பேய் பிசாசுகளாகவும் மாறு கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியாது!" என்றாள் தாரிணி. வண்டி புறப்பட்டுச் சற்று நேரத்துக்கெல்லாம், "அந்தக் கடிதம் எங்கே?" என்று தாரிணி கேட்டாள். "ஏது? ஏது? அதைப் பார்க்காவிட்டால் உங்களுக்கு மன நிம்மதி ஏற்படாது போலிருக்கிறது!" என்று சொல்லிக் கொண்டே ராகவன் கடிதத்தை எடுத்துக் கொடுத்தான். "அது என்ன காதல் கடிதமா?" என்று ராகவன் கேலியாகப் பேசியபோது, அவர்கள் எல்லாருக்கும் கடிதத்தை முழுவதும் படித்துக் காட்டிவிட வேண்டும் என்று தாரிணிக்குத் தோன்றியது. மறுகணமே அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டாள். அந்தக் கடிதத்தில் அடங்கியுள்ள விஷயங்களை இவர்கள் புரிந்து கொள்ளவே மாட்டார்கள். மேலும் ஏதாவது பரிகாசமாகப் பேசுவார்கள். இவ்விதம் எண்ணிச் சீதாவைப் பார்த்து, "நீங்கள் மறுபடியும் உங்கள் அம்மாஞ்சியைப் பார்க்கும் போது, 'இவ்வளவு நீளமான மன்னிப்புக் கடிதத்துக்கு அவசியமே இல்லை' என்று நான் சொன்னதாக அவரிடம் தெரியப்படுத்துங்கள்! என்றாள்.

ஆயிரம் ஆண்டுகளாக வீர புருஷர்களின் இரத்தமும் தீர மாதரசிகளின் கண்ணீரும் சிந்திப் புனிதமான இராஜபுத்திர நாட்டுக்குள் அவர்கள் ஏறியிருந்த ரயில் வண்டி பிரவேசித்தது. கண்ணுக்கெட்டிய தூரம் வறண்ட பூமி; அல்லது மொட்டைப் பாறைகள்; ஆங்காங்கே இடிந்த கோட்டைச் சுவர்கள்; சிதைந்த மண்டபங்கள்; பாழடைந்த மசூதிகள்; பசுமை என்பதையே பார்க்க முடியவில்லை அடர்த்தியான காடுகள் இல்லை; பச்சைக் கம்பளம் விரித்தாற் போன்ற நெல் வயல்கள் இல்லை; பொன்னிறம் கொண்ட கோதுமைப் பயிர்களும் இல்லை; சிற்சில இடங்களில் தானாக மண்டிய முட்புதர்கள் மட்டும் காணப்பட்டன. "நாம் போகிற வழி நெடுகிலும் இப்படித்தான் இருக்குமா?" என்று சீதா கேட்டாள். "இல்லை; ரஜினிபூர் சேர்ந்துவிட்டால் வேறு விதமாயிருக்கும். ஆனால் அங்கே போய்ச் சேருகிற வரையில் இந்த லட்சணந்தான். 'சுதந்திரம், சுதந்திரம்' என்று அடித்துக் கொள்ளுகிறார்களே; இராஜபுத்திர வீரர்கள் அந்த நாளில் சுதந்திரத்துக்காகப் போரிட்டதன் பலன்தான் இது! இராஜஸ்தானத்தில் பெரும் பகுதி பாலைவனமாகப் போய்விட்டது!" என்று ராகவன் சொன்னான். "இராஜபுத்திரர்கள் சுதந்திரத்துக்காகப் போரிட்டதனால் இராஜஸ்தானம் பாலைவனமாகவில்லை. ஒருவருக்கொருவர் சகோதரச் சண்டையிட்டதினால் இப்படியாயிற்று.

அண்ணன் சுதந்திரத்துக்காகச் சண்டை போட்டால் தம்பி எதிராளியோடு சேர்ந்து கொண்டான். எத்தனை ராஜபுத்திரர்கள் மொகலாயர்களுக்கு அடிமையாகி ஏவல் செய்து வாழ்ந்தார்கள்! இந்திய தேசம் நாசம் அடைந்தது சகோதரச் சண்டையினால்தான். இதில் வேடிக்கை என்னவென்றால், இவற்றை எல்லாம் சரித்திரத்தில் படித்திருந்தும் நமக்குப் புத்தி வந்தபாடில்லை. இன்னமும் சகோதரச் சண்டைகள் போட்டுக் கொண்டுதானிருக்கிறோம்" என்றாள் தாரிணி. "அம்மணி! நீங்கள் என்ன பெரிய சரித்திர நிபுணரைப் போல் பேசுகிறீர்களே!" என்று ராகவன் பரிகாசக் குரலில் கேட்டான். "என்ன சொன்னீர்கள்?" என்று சொல்லிவிட்டு நிருபமா இடியிடி என்று சிரித்தாள். அவளுடைய சிரிப்பின் காரணம் என்னவென்று விளங்காமல் ராகவன் திகைத்தான். "எதற்காகச் சிரிக்கிறீர்கள்?" என்றான். "என்ன சொன்னீர்கள்? 'பெரிய சரித்திர நிபுணரைப் போல்' என்றா? 'போல்' என்று சொன்னதற்காகத்தான் சிரித்தேன்" என்றாள் நிருபமா. "அப்படிப் 'போல்' என்ற வார்த்தையில் நகைச்சுவை என்ன இருக்கிறது? எனக்கு விளங்கவில்லையே?" "உங்களுக்கு விஷயம் தெரியாதென்று இப்போதுதான் எனக்குத் தெரிகிறது. தாரிணியைப் பழைய தேச சேவிகை தாரிணி என்றே நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் போலிருக்கிறது. பீஹார் பூகம்பத்துக்குப் பிறகு அவள் காலேஜில் சேர்ந்து படித்துப் பட்டம் பெற்று இப்போது யூனிவர்சிடி உதவிச் சம்பளம் பெற்றுச் சரித்திர ஆராய்ச்சி செய்து வருகிறாள். இது உங்களுக்குத் தெரியுமென்று எண்ணியிருந்தேன். பின்னே எதற்காக என்னையும் இழுத்துக்கொண்டு ஊர் ஊராக அலைகிறாள் என்று நினைத்தீர்கள்? தற்போது இராஜஸ்தானத்துச் சரித்திரத்தில் விசேஷ ஆராய்ச்சி நடைபெறுகிறது!"

நிருபமா இவ்விதம் சொன்னதும் ராகவனுடைய உள்ளம் ஒரே ஒரு நிமிஷத்தில் என்னவெல்லாமோ கற்பனை செய்யத் தொடங்கியது. ஆச்சரியத்தில் மூழ்கிப் போனான். ஆஹா! படிப்பின் மேல் உள்ள ஆசையினால் அல்லவா இவள் கலியாணத்தை வெறுத்திருக்கிறாள்? இந்த உண்மையை நம்மிடம் முன்னமேயே தெரிவித்திருக்கக் கூடாதா? தெரிவித்திருந்தால் இவளுடைய படிப்புக்கு நாம் குறுக்கே நின்றிருப்போமா? என்று அவன் மனம் எண்ணமிட்டது. தாரிணி பி.ஏ. பட்டம் பெற்றுச் சரித்திர ஆராய்ச்சி செய்து வருகிறாள் என்னும் செய்தியைச் சொல்லிவிட்டு நிருபமா படுத்துத் தூங்கிப் போனாள். தாரிணியிடம் அவளுடைய காலேஜ் வாழ்க்கையைப் பற்றி ராகவன் பல கேள்விகள் கேட்டான். அவளோ பாரா முகத்துடன் ஏனோதானோவென்று பதில் சொல்லி வந்தாள். சற்று நேரத்துக்கெல்லாம் ராகவனும் தூங்கிவிட்டான். பிறகு தாரிணி சீதாவின் அருகில் நெருங்கி உட்கார்ந்து கொண்டு, "உங்கள் அம்மாஞ்சி சூரியாவைப் பற்றிச் சொல்லுங்கள், அவர் எப்போதுமே இப்படித்தான் படபடப்பாயிருப்பாரா? என்று கேட்டாள். முந்தைய சம்பாஷைணையின் போதெல்லாம் சீதாவுக்கு நிமிஷத்துக்கு நிமிஷம் கோபம் வளர்ந்து வந்தது. முதல் நாள் தாரிணியைச் சந்தித்தது முதல், நிருபமா - தாரிணி சம்பாஷணைகளைக் கேட்டதிலிருந்தும் தன்னுடைய சொந்த ஊகத்தினாலும் அவள் பல விஷயங்களைத் தெரிந்து கொண்டிருந்தாள். ராகவனும் தாரிணியும் பழைய சிநேகிதர்கள் என்பது நிச்சயம். பத்மாபுரத்தில் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் பேசிய வம்புப் பேச்சுகளில் ஏதோ உண்மை இருக்கத்தான் வேண்டும். ராகவனுக்குத் தாரிணியின் மேல் இன்னும் அபிமானம் இருந்தது என்பதும் ஸ்பஷ்டமாய்த் தெரிந்தது. தான் இருக்கும்போது இதையெல்லாம் அவர்கள் காட்டிக் கொள்ளாததை நினைத்து நெஞ்சம் கொதித்தது. சீச்சீ! என்ன வெட்கங்கெட்ட ஸ்திரீ இவள்!

நம்மை எதற்காக இப்படித் தொடர்ந்து வருகிறாள்? வேறு எங்கேயாவது போய்த் தொலைவதுதானே? சூரியாவும் நிருபமாவின் கணவனும் இந்தக் கோஷ்டியில் சேர்ந்து கூட்டமாக இருந்தபோது ஒரு மாதிரி கலகலப்பாக இருந்தது. இப்போது அவர்களும் இல்லை; அதனால் கலகலப்பும் இல்லை. இந்த மாதிரி நேரும் என்று தெரிந்திருந்தால், இந்தப் பிரயாணத்துக்கு வரவில்லையென்றே சொல்லியிருக்கலாம். இப்பொழுதுதான் என்ன 'அவள் வந்தால் நான் வரவில்லை; அவளையே அழைத்துக்கொண்டு போங்கள். நான் டில்லிக்குத் திரும்பிப் போகிறேன்!' என்று கண்டிப்பாகச் சொல்லி விட வேண்டியதுதான்... இவ்விதம் எண்ணி எண்ணிப் பலமுறை பேசுவதற்குச் சீதாவின் உதடுகள் துடித்தன.ஆனால் வாயிலிருந்து வார்த்தைகள் வரவில்லை. அப்படிச் சொன்னால் அதன் பலன் என்ன ஆகுமோ என்று உள்ளத்தின் ஒரு பகுதி அஞ்சியது.இத்தகைய மனோநிலையில் சீதா இருந்த போது தாரிணி அவளிடம் நெருங்கி உட்கார்ந்து, "சூரியாவைப் பற்றி சொல்லுங்கள்" என்றதும் சீதாவுக்கு ஆத்திரம் பொத்துக் கொண்டு வந்தது. "சூரியாவைப்பற்றி இப்போது என்ன விசாரணை வேண்டிக் கிடக்கிறது? என்னைப் போல் அவனும் ஓர் அசடு; அனாதை!" என்றாள். "சகோதரி! ஏன் இவ்வளவு வெறுப்பாகப் பேசுகிறாய்? என் நெற்றியில் காயப்படுத்தி விட்டதற்காகச் சூரியா ரொம்பவும் மனம் நொந்து எழுதியிருக்கிறார், உத்தம குணம் படைத்தவர். ஆனால் கொஞ்சம் படபடப்புக்காரர் என்று தோன்றுகிறது. காயம் சரியாய்ப் போய் விட்டது. என்னைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம் என்று உன்னிடம் சொல்லியனுப்ப விரும்பினேன். உனக்கு அவரைப் பற்றிப் பேச இஷ்டமில்லை யென்றால் வேண்டாம்!" என்றாள் தாரிணி.

இதைக் கேட்டதும் சீதாவின் மனம் மாறிவிட்டது. "இல்லை, இல்லை எனக்கு வெறுப்பு ஒன்றுமே இல்லை. சூரியா உத்தமமான பிள்ளைதான், அவ்வளவு ஒன்றும் படபடப்பாக அவன் பேசுவதும் கிடையாது. என் மாமா குடும்பத்திலேயே சூரியாதான் நிதானத்துக்கும் பொறுமைக்கும் பெயர் போனவன். நேற்று அவன் படபடப்பாகப் பேசியதும் தாஜ்மகால் பொம்மையை வீசி எறிந்து உடைத்ததும் எனக்கே ஆச்சரியமாயிருந்தது. பாவம்! அவனுக்கு என்ன மனக் கஷ்டமோ? மொத்தத்தில் அதிர்ஷ்டக் கட்டை; இல்லாவிட்டால் இப்படிவந்து திண்டாடுவானேன்? படித்துப் பாஸ் செய்து எவ்வளவோ நல்ல நிலைமைக்கு வந்திருக்கலாம்!" என்றாள். "அதிர்ஷ்டக்கட்டை என்று எதனால் சொல்கிறாய்?" என்று தாரிணி கேட்க, சீதா கொஞ்சம் கொஞ்சமாகச் சூரியாவின் கதையைச் சொன்னாள். அவனுடைய தகப்பனார், தமையன், அம்மா, தங்கை ஆகியவர்களைப் பற்றி சொன்னாள். தமையனோடும் ஊராரோடும் அவனுக்கு நேர்ந்த தகராறுகளைப் பற்றியும் விரிவாகச் சொன்னாள். ஆனால் தன்னுடைய பிறப்பு, வளர்ப்பு, கலியாணம் இவற்றைக் குறித்து மட்டும் எதுவும் சொல்லவில்லை.

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

பதின்மூன்றாம் அத்தியாயம்
ரஜினிபூர் ஏரி

ரஜினிபூர் சமஸ்தானத்தின் திவான் ஸர்.கே.கே. ஆதிவராகாச்சாரியாருக்குப் புத்தி கூர்மையுள்ள வாலிபர்களிடம் பொதுவாக அபிமானம் உண்டு. சௌந்தரராகவன் இங்கிலாந்துக்குப் பிரயாணம் செய்தபோது கப்பலில் அவரைச் சந்தித்துப் பழக்கம் செய்து கொண்டான். ராகவனுடைய புத்தி கூர்மையும் சாதுர்யமான சம்பாஷணையும் திவான் ஆதிவராகாச்சாரியாரின் மனதைப் பெரிதும் கவர்ந்தன. அதோடு புதுடில்லி செகரட்டேரியட்டில் உத்தியோகம் பார்ப்பவர்களில் எத்தனை பேரைத் தெரிந்திருக்கிறதோ அவ்வளவுக்குப் புருஷார்த்தம் கைகூடுவது எளிதாகும் என்ற நம்பிக்கையும் ஸர் ஆதிவராகாச்சாரியாருக்கு இருந்தது. அவருக்குச் சந்தான பாக்கியத்தைப் பகவான் பரிபூரணமாக அளித்திருந்தார். பெரிய உத்தியோக பதவிகளை வகிக்கத் தகுந்தவர்களாக அவருக்குப் புதல்வர்களும் மாப்பிள்ளைகளும் பலர் இருந்தார்கள். இங்கிலாந்திலிருந்து திரும்பி வந்ததும் ரஜினிபூருக்கு ஒரு தடவை வரவேண்டும் என்றும், வரும்போது மனைவியையும் அழைத்து வரவேண்டும் என்றும் ஆதிவராகாச்சாரியார் சௌந்தரராகவனிடம் சொல்லியிருந்தார். அந்த அழைப்புக்கு இணங்க இப்போது சௌந்தரராகவன் சீதாவுடன் திவான் மாளிகைக்குச் சென்றான். தாரிணியும் அவளுடைய தோழியும் வேறு ஜாகைக்குச் சென்றார்கள். துரதிர்ஷ்டவசமாக அச்சமயத்தில் திவான் ஆதிவராகாச்சாரியார் முக்கியமான ராஜாங்கக் காரியமாக வெளியூருக்குப் போயிருந்தார். எனினும் ராகவனுடைய தந்தியைப் பார்த்து விட்டு அவனையும் அவனுடைய மனைவி யையும் கவனித்துக் கொள்ளும்படியாகத் தம்முடைய புதல்விகளிடம் சொல்லிவிட்டுப் போயிருந்தார். அவர்கள் அவ்விதமே ராகவ னையும் சீதாவையும் வரவேற்றார்கள்.

ஆதிவராகாச்சாரியின் புதல்விகளான பாமா, தாமா இருவரும் இங்கிலாந்து சென்று திரும்பியவர்கள், ஆங்கில நாகரிகத்தில் முழுகியவர்கள். ஒருத்தி ஒல்லியாயும் உயரமாயும் இருந்தாள். இன்னொருத்தி குட்டையாயும் பருமனாயுமிருந்தாள். இரண்டு பேரும் தலை மயிரை 'பாப்' செய்து கொண்டிருந்தார்கள். இருவரும் உதட்டில் சிவப்புப் பசை தடவிக் கொண்டுதான் வெளியில் புறப்படுவார்கள். எப்பொழுதும் இங்கிலீஷில்தான் பேசுவார்கள். அதுவும், ஆங்கில நாவலாசிரியர் வோட் ஹவுஸின் கதாபாத்திரங்கள் பேசுகிற இங்கிலீஷ் நடையைக் கையாண்டு பேசுவார்கள். பியானோ வாத்தியத்தில் இங்கிலீஷ் சங்கீதம் வாசிக்கவும், "பால் ரூம் டான்ஸ்" ஆடவும் கற்றுக் கொண்டு திறமையும் பெற்றிருந்தார்கள். அப்படிப்பட்டவர்களிடையே அகப்பட்டுக் கொண்டு சீதா ரொம்பவும் விழித்தாள். அவர்கள் சீதாவிடம் முதலில் இங்கிலீஷில் ஏதாவது கேட்பார்கள். சீதா ஒன்றும் புரியாமல் திகைப்பதைக் கண்டு தட்டுத் தடுமாறித் தமிழில் அதையே சொல்வார்கள். அவர்கள் இங்கிலீஷ்காரி களைப்போல் ஆங்கில வார்த்தைகளை உச்சரித்துப் பேசியபடியால் சீதாவுக்குத் தெரிந்திருந்த கொஞ்சம் நஞ்சம் இங்கிலீஷும் அங்கே பயன்படவில்லை. ஆகையால் குளத்துத் தண்ணீரிலிருந்து எடுத்துக் கொதிக்கின்ற சட்டுவத்தில் போடப்பட்ட மீனைப் போல் சீதா அவர்களிடம் அகப்பட்டுக் கொண்டு தத்தளித்தாள்.

சீதாவுடன் பழகினதைக் காட்டிலும் ராகவனுடன் அவர்கள் சரளமாகப் பேசிப் பழகினார்கள். ராகவனும் அவர்களுடன் உற்சாகமாகப் பேசினான். அவன் அப்போது வீசிய நகைச்சுவைத் துணுக்குகளையும் ஹாஸ்ய சிலேடைகளையும் கேட்டு அவர்கள் இடி இடி என்று சிரித்தார்கள். இதெல்லாம் சீதாவுக்கு ஓரளவு அருவருப்பாயிருந்தாலும் அவளுக்குக் கோபமோ ஆத்திரமோ ஏற்படவில்லை. அந்தப் பெண்கள் இருவரும் அவ்வளவு அழகாயில்லை என்பதுதான் இதற்குக் காரணமோ அல்லது அவர்கள் விஷயத்தில் ராகவனுக்குக் கொஞ்சமும் மதிப்புக் கிடையாது என்பது சீதாவின் உள்மனதுக்குத் தெரிந்ததோ, நாம் சொல்ல முடியாது. இடையிடையே சந்தர்ப்பம் கிடைத்த போதெல்லாம் ராகவன் சீதாவிடம் தனியாக அந்தப் பெண்களின் அவலட்சணத்தைப் பற்றியும் குரங்கு சேஷ்டைகளைப் பற்றியும் சொல்லி வந்தான். "ஆனாலும் இவர்களிடம் நீ கற்றுக் கொள்ள வேண்டியது நிரம்ப இருக்கிறது. புதுடில்லியில் சமூக வாழ்க்கை நடத்துவதற்குச் சிற்சில நடை உடை பாவனைகள் அவசியம்!" என்று ஒரு தடவை ராகவன் சொன்னான். "இவர்களிடம் நான் என்ன கற்றுக்கொள்ள வேண்டுமாம்? உதட்டில் சிவப்புப் பசை தடவிக் கொள்ளவா?" என்று சொல்லி விட்டுச் சீதா சிரித்தாள். "ஆமாம்; அதுகூடத்தான் கற்றுக் கொள்ள வேண்டும். 'லிப்ஸ்டிக்' உபயோகிப்பதில் பிசகு என்ன இருக்கிறது?

நம்முடைய நாட்டில் வெற்றிலை போட்டுக் கொள்ளவில்லையா? அதனால் உதடு சிவப்பதில்லையா? கதாநாயகிகளின் உதடுகளைப் பவழத்துக்கும் கோவைப் பழத்துக்கும் மாதுளை மொட்டுக்கும் ஒப்பிட்டுக் கவிகள் வர்ணித்தால் மட்டும் 'ஆஹா' என்று பிரமாதப்படுத்து கிறோமே?" என்றான் ராகவன். "அதெல்லாம் இயற்கையாக இருக்க வேண்டும்" என்றாள் சீதா. "இயற்கை யாவது, மண்ணாங்கட்டியாவது? இயற்கையாக இருந்தால் ஆப்பிரிக்கா தேசத்துக் காட்டுமிராண்டிகளைப் போல் இருக்க வேண்டி யதுதான். வகிடு எடுத்துத் தலை வாரிக் கொள்வதும், நெற்றியில் பொட்டு இட்டுக் கொள்வதும், கண்ணுக்கு மை தீட்டிக் கொள்வதும், கைக்கு மருதாணி இட்டுக் கொள்வதும் இயற்கையா? காதிலும் மூக்கிலும் தொளையிட்டு நகை போட்டுக் கொள்வதுதான் இயற்கையா? எல்லாவித அழகும் அலங்காரமும் செயற்கையில் சேர்ந்ததுதான்!" என்று ராகவன் அடித்துப் பேசியபோது சீதாவினால் பதில் ஒன்றும் சொல்ல முடியவில்லை. ஏதாவது சொல்லவேண்டுமே என்பதற்காக "அலங்காரத்துக்கும் ஒரு அளவு வேண்டும். தாரிணியைப் பாருங்கள்; அவளும் இங்கிலீஷ் படித்துப் பட்டம் பெற்றவள்தானே? அவள் 'லிப்ஸ்டிக்' தடவிக் கொள்கிறாளா?" என்று சொல்லி வைத்தாள். "சில பேருக்குப் பிறவியிலேயே அழகு உண்டு; அவர்கள் ஒரு அலங்காரமும் செய்து கொள்ளாவிட்டாலும் நன்றா யிருப்பார்கள். அந்த மாதிரி எல்லாரும் இருக்க முடியுமா? புலியைப் பார்த்துப் பூனை சூடு போட்டுக் கொண்டது போலாகும்!" என்று சொன்னான் சௌந்தரராகவன். சீதாவுக்குத் தாரிணியின் பேச்சை எதற்காக எடுத்தோம் என்று இருந்தது.

இந்தியாவில் உள்ள சுதேச சமஸ்தானங்களின் தலைநகரங்களுக்குள்ளே ரஜினிபூர் மிக அழகான ஒரு பட்டணம். மறுநாள் முழுவதும் ராகவனும் சீதாவும் அந்தப் பட்டணத்தைச் சுற்றிப் பார்ப்பதில் கழித்தார்கள். ரஜினிபூர் ராஜாவின் பழைய அரண்மனை, புதிய அரண்மனை, வஸந்தோத்ஸவம் கொண்டாடும் பளிங்கு மாளிகை, நந்தவனங்கள், பிராணிக் காட்சிச் சாலைகள், பட்டணத்துக்குச் சற்றுத் தூரத்திலிருந்த பழைய கோட்டை, கொத்தளங்கள் எல்லாவற்றையும் பார்த்துக் களித்தார்கள். ஆனால் ஒரு இடத்திலாவது அதிக நேரம் அவர்கள் நிற்கவில்லை. எந்த இடத்திற்குச் சென்றாலும் ராகவன் நெருப்பில் காலை வைத்து விட்டவன்போல் அவசரப்பட்டான். ஒன்றுவிடாமல் எல்லாவற்றையும் பார்த்துவிட வேண்டும் என்ற ஆர்வத்தினால் சீதாவும் ராகவனுடைய அவசரத்திற்கேற்ப அங்கங்கே பார்க்க வேண்டியதைச் சட்டென்று பார்த்து விட்டுக் கிளம்பினாள். திவானுடைய பங்களாவுக்குச் சாயங்காலம் திரும்பி வந்து கொண்டிருந்தபோது, "அவர்கள் இரண்டு பேரையும் இன்றைக்கெல்லாம் காணவேயில்லையே?" என்றாள் சீதா. இப்படிச் சொல்லிவிட்டு ஏன் சொன்னோம் என்று உதடுகளைக் கடித்துக் கொண்டாள். "அதைப் பற்றித்தான் நானும் யோசித்துக் கொண்டிருக்கிறேன். இன்றைக்கு டெலிபோன் பண்ணுவதாகச் சொன்னார்கள்; பண்ணவில்லை!" என்றான் ராகவன். இவ்விதம் சொல்லி இரண்டு நிமிஷத்துக்கெல்லாம் ராகவன் திவானுடைய டிரைவரிடம், "டஹரோ!" என்று கத்தினான். யாரும் தன்னை இவ்விதம் அதட்டிப் பேசி அறியாத அந்த மோட்டார் டிரைவர் சடக்கென்று பிரேக்கைப் போட்டு வண்டியை நிறுத்தியபோது, ணசீதாவைத் தூக்கிப் போட்டுவிட்டது. விஷயம் என்னவென்று பார்த்ததில், பக்கத்தில் ஒரு வீட்டுக்கு அருகில் டங்கா வண்டியிலிருந்து தாரிணியும் நிருபமாவும் இறங்கிக் கொண்டிருந்தார்கள்.

ராகவன் தாரிணியைப் பார்த்து, "இதென்ன நீங்கள் இப்படி ஏமாற்றிவிட்டீர்கள்?' என்று கடுமையான குரலில் கேட்டான். "ஏமாற்றுவது என்ன? உங்களுடன் ஊர் சுற்றப் போனால் ஒன்றுமே பார்க்க முடியாது. விவாதம் செய்வதற்குத்தான் சரியாயிருக்கும். அதனால்தான் நாங்கள் இருவரும் தனியாகப் போய் வந்தோம்" என்றாள் தாரிணி. "நாளைக்கும் இப்படிச் செய்வதாகத்தான் உத்தேசமா?" என்று ராகவன் கேட்டான். "நாளைக்கு ஏரிக்குப் போவதாயிருந்தால் நாங்களும் வருகிறோம். இங்கே வந்து எங்களை அழைத்துக் கொண்டு போக முடியுமா?" என்றாள் தாரிணி. "பேஷாக முடியும் ஆனால் இன்று மாதிரி ஏமாற்றி விடாதீர்கள்; எனக்கு ரொம்பக் கோபம் வரும்!" என்றான். ராகவன் அன்றைக் கெல்லாம் ஏன் அவ்வளவு பரபரப்பாக இருந்தான் என்னும் விஷயம் சீதாவுக்கு இப்போது நன்கு விளங்கியது. அன்றிரவு அவள் சேர்ந்தாற்போல் அரை மணிக்கு மேல் தூங்கவில்லை. காலையில் படுக்கையைவிட்டு எழுந்திருந்த போது தலையை ஒரே கனமாய்க் கனத்தது. இரண்டு பொட்டுக்களிலும் சம்மட்டியால் அடிப்பதுபோல் வலித்துக் கொண்டிருந்தது. "நான் இன்றைக்கு ஏரி பார்க்க வரவில்லை. டில்லிக்கே திரும்பிப் போய் விட்டாலும் நல்லதுதான்!" என்று ராகவனிடம் சொன்னாள்.

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

பதிநான்காம் அத்தியாயம்
ரஜினிபூர் ஏரி

அன்று பிற்பகலில் ராகவன் சீதாவைப் பார்த்து, "அப்படியானால், உனக்கு நிஜமாகவே தலையை வலிக்கிறதா?" என்று கேட்டான். "பின்னே பொய்யாகவா தலைவலிக்கும்? இது என்ன கேள்வி?" என்றாள் சீதா. "சரி நான் போய்வருகிறேன்!" என்று ராகவன் கிளம்பினான். "எங்கே போகிறீர்கள்?" என்று கேட்டாள் சீதா. "புறப்படுகிறபோது, 'எங்கே போகிறீர்கள்?' என்று கேட்கக் கூடாது என்று உனக்குத் தெரியாதா? வேறு எங்கே போவேன்? ஏரிக்குத்தான்!" "என்னை விட்டுவிட்டுத் தனியாகவா போவீர்கள்?" "தனியாக என்ன? தாரிணியும் அவளுடைய தோழியும் தான் வருவதாகச் சொல்லியிருக்கிறார்களே?" "என்னை இங்கே ஒண்டியாக விட்டுவிட்டு அவர்களை மட்டும் அழைத்துக்கொண்டு போவீர்களா?" "இங்கே நீ ஒண்டியாக இருப்பானேன்? இது என்ன காடா? வீடுதானே? தாமாவும் பாமாவும் உன்னைப் பார்த்துக் கொள்வார்கள்." "அவர்களோடு என்னால் பேசிக் கொண்டிருக்க முடியாது." "அப்படியானால் பேசாமல் படுக்கையில் படுத்துக் கொண்டிரு." "எப்படியாவது நீங்கள் போய்த்தான் தீரவேண்டும்?" "போய்த்தான் தீரவேண்டும்; போட்ட திட்டத்தை உன்னுடைய தலைவலிக்காக மாற்ற முடியாது?" "நான் செத்துப் போனால் அப்போதாவது போட்ட திட்டத்தை மாற்றுவீர்களா?" "செத்துப் போய்ப் பார்! அப்போது தெரிகிறது!"

சீதாவுக்கு அழுகையும் ஆத்திரமுமாக வந்தது. ஆயினும் அப்போது ராகவனோடு தகராறு செய்வதில் பயனில்லை என்று உணர்ந்தாள். "பெண் ஜென்மம் எடுத்தாகிவிட்டது, தலைவலி என்று சொன்னால் என்ன பிரயோஜனம்? இங்கே தனியாகக் கிடந்து சாவதைக் காட்டிலும் உங்களுடன் வந்தே பிராணனை விடுகிறேன்!" என்று சொன்னாள். "விடுகிற பிராணனைச் சீக்கிரமாக விட்டுத் தொலைக்கலாம் புறப்படு உடனே" என்றான் ராகவன். காரில் போகும்போது இருவரும் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. சீதா மட்டும் அடிக்கடி கைக்குட்டையால் தன் கண்களைத் துடைத்துக் கொண்டிருந்தாள். தாரிணியும் நிருபமாவும் இறங்கியிருந்த ஜாகையின் வாசலில் வண்டி நின்றது. மேல் மாடியின் முகப்பில் நிருபமா வந்து நின்று கையைத் தட்டி அழைத்து "கொஞ்சம் இப்படி வந்து உட்காருங்கள்; தாரிணிக்கு இன்னும் பத்து நிமிஷம் ஆகும்" என்று சொன்னாள். "நான் வரவில்லை காரிலேயே இருக்கிறேன். எப்போதாவது நான் புறப்பட ஒரு நிமிஷம் தாமதமானால் பிரமாத கோபம் வந்துவிடும் இப்போது மட்டும்?" என்றாள்."ஏதாவது உளறிக்கொண்டிராதே! தெரியுமா?" என்று ராகவன் கோபமாகச் சொல்லிவிட்டுக் காரிலிருந்து இறங்கி வீட்டுக்குள் சென்றான்.

சீதாவுக்கு காரில் உட்கார்ந்திருந்த ஒவ்வொரு நிமிஷமும் ஒரு யுகமாக இருந்தது. அத்தகைய பல நிமிஷங்களுக்குப் பிறகு மேலே கலகலவென்று சிரிப்புச் சத்தம் கேட்டது. அந்தச் சிரிப்புச் சத்தம் சீதாவின் நெஞ்சில் நெருப்பை மூட்டியது. தலையைச் சிறிது காருக்கு வெளியே நீட்டி மேலே அண்ணாந்து பார்த்தாள். சிறிது நேரம் வரையில் பேச்சுச் சத்தமும் சிரிப்புச் சத்தமும் கேட்டதே தவிர கண்ணுக்கு ஒன்றும் தெரியவில்லை. சட்டென்று பலகணிக்கருகே ஒரு காட்சி தென்பட்டது. ராகவன் ஏதோ ஒரு கவரை கையில் பிடித்துக்கொண்டு தாரிணியிடம் அதைக் கொடுக்கப் போனான். அவள் அதைப் பெற்றுக் கொள்ள மறுத்தாள். ராகவன் சட்டென்று அவளுடைய கரத்தைப் பிடித்துப் பலாத்காரமாக அந்தக் கவரைத் திணிக்க முயன்றான். அப்புறமும் அதைப் பெற்றுக் கொள்ளாமல் தாரிணி தன்னை விடுவித்துக் கொண்டு ஓடினாள். ராகவன் அவளைத் தொடர்ந்து பின்னால் ஓடினான். அரை நிமிஷ நேரமே நீடித்திருந்த இந்தக் காட்சி சீதாவின் உள்ளமாகிய காமிராவில் படமாகப் பதிந்துவிட்டது. சிறிது நேரம் சிந்தனா சக்தியையே இழந்திருந்தாள். பின்னர் ஏதேதோ சந்தேகங்கள் உதித்து மனதை அரிக்கத் தொடங்கின. உடம்பெல்லாம் விடவிடவென்று நடுங்கும்படியாக மனதில் ஆத்திரம் பொங்கியது. சிறிது நேரத்துக்கெல்லாம் ராகவனும் தாரிணியும் மட்டும் கீழிறங்கி வந்தார்கள். தாரிணியைப் பின்னால் சீதாவுக்குப் பக்கத்தில் உட்கார வைத்துவிட்டு ராகவன் காரின் முன்புறத்தில் அமர்ந்தான். நிருபமா பின்னால் வருவாள் என்று சீதா நினைத்தாள். ஆனால் அவள் வராமலே கார் புறப்பட்டதைக் கண்டதும் துணுக்குற்றாள். அதைப்பற்றி விசாரிக்க விரும்பினாலும் பேசுவதற்கு நா எழவில்லை.

தாரிணி சீதாவின் முகத் தோற்றத்தைப் பார்த்துவிட்டு, "ஏன் இப்படி ஒரு மாதிரியாயிருக்கிறாய், சீதா! உடம்பு ஏதாவது சரிப்படவில்லையா, என்ன?" என்று கேட்டாள். "ஆமாம்; காலையிலிருந்து தலைவலி!" என்று சீதா முணுமுணுத்தாள். "அடடா! ரொம்பத் தலைவலி போலிருக்கிறதே! குரல் கூட எப்படியோ ஆகிவிட்டதே! இதோடு வெளியில் புறப்படாவிட்டால் என்ன? நாளைக்குப் போயிருக்கலாமே? ஏரி எங்கே ஓடியா போகிறது!" என்று தாரிணி கூறியது சீதாவின் மனதில் எரிகிற தீயில் எண்ணெய் விட்டது போன்ற பலனை அளித்தது. "வரவில்லையென்று சொன்னால் கேட்டால்தானே!" என்றாள். சற்றுப் பொறுத்துத் தாரிணி, "உடம்பு சரியில்லையென்று தான் நிருபமா கூட வராமல் நின்றுவிட்டாள். இப்போது கூட மோசம் போய் விடவில்லை, திரும்பிப் போய்விடலாம்! என்ன, மிஸ்டர் ராகவன்!" என்றாள். அதற்கு ராகவன், "அவ்வளவு ஒன்றும் அவளுக்குப் பிரமாதமான தலைவலி இல்லை. ஏரியில் படகிலே போனால் தலைவலி தீர்ந்து விடும்!" என்றான். நீல வானத்திலிருந்து ஒரு பெரும் பகுதியை எடுத்துப் பூமியில் வைத்தது போலிருந்தது ரஜினிபூர் ஏரி. அதன் இரு பக்கங்களில் இரண்டு மலைத் தொடர்கள் சொர்க்கத்தைப் பாதுகாக்கும் மதில் சுவர்களைப் போல் உயர்ந்து நின்றன. மற்ற இரு புறங்களில் பசுமையான மரங்கள் அழகிய நீல வர்ணச் சித்திரத்துக்குப் பச்சை வர்ணச் சட்டங்கள் போட்டது போல் நின்றன. அங்கே நள்ளிரவின் நிசப்தம் நிலவியது. வைகறையில் சலனமற்ற சாந்தம் குடிகொண்டிருந்தது. மாலை நேரத்தில் மனோகரம் பரவி இருந்தது.

அந்த விஸ்தாரமான நீல நிற நீர்ப்பரப்பைப் பார்த்தால் ஞானிகள் எங்கும் நிறைந்த பரம்பொருளைத் தங்களுக்குள்ளே காணும்போது அடையும் ஆனந்தத்தைப் பாமர ஜனங்களும் அடைவார்கள். காதலர்கள் தங்களுடைய காதலிகளின் கண்களுக்குள்ளே தங்கள் பிரதி பிம்பத்தைக் காணும்போது அடையும் களிப்பை அந்த ஏரி நீரில் தங்கள் உருவத்தைப் பார்க்கும் எவரும் பெறுவார்கள். முதன் முதலில் பெற்றெடுத்த குழந்தையின் இதழ்களில் இலேசாக அரும்பும் புன்னகையைப் பார்க்கும்போது அன்னைக்கு உண்டாகும் மகிழ்ச்சி, அந்த ஏரி நீரின் சிற்றலைகள் விரியும் காட்சியைப் பார்க்கும் அனைவருக்கும் உண்டாகும். தும்பை மலரைப் போல் வெண்ணிறத்துடன் விளங்கிய ஆயிரக்கணக்கான பறவைகள் அந்த ஏரி நீரின் மீது கூட்டம் கூட்டமாகப் பறந்து செல்லும் காட்சியை ஒரு முறை பார்த்தவர்கள் என்றென்றைக்கும் மறக்க மாட்டார்கள். அத்தகைய ஏரிக்கரையில் வந்து ராகவன், சீதா, தாரிணி மூவரும் காரிலிருந்து இறங்கினார்கள். ஏரியின் காட்சியைப் பார்த்துவிட்டுத் தாரிணி, "ஆகா! என்ன அழகு! என்ன அழகு! நானும் இயற்கைக் காட்சிகள் எவ்வளவோ பார்த்திருக்கிறேன் இந்த மாதிரி பார்த்ததில்லை!" என்றாள். "அதனால்தான் உங்கள் இரண்டு பேரையும் இவ்வளவு வற்புறுத்தி அழைத்து வந்தேன். ஸ்விட்ஸர்லாந்தில் உலகப் பிரசித்தமான ஏரிகளை இதன் காலிலே கட்டி அடிக்க வேண்டும். ஆயினும் இதைப் பார்ப்பதற்கு உங்கள் இருவரையும் அழைத்து வருவதற்குள் என் பிராணனில் பாதி போய் விட்டது!" என்றான் ராகவன்.

சீதா மட்டும் ஒன்றும் சொல்லாமல் ஏரியை நோக்கிக் கொண்டிருந்தாள். அவள் முகத்திலிருந்த கடுகடுப்பைப் பார்த்து விட்டுத் தாரிணி, "ஏரி என்னமோ அழகாய்த்தானிருக்கிறது, ஆனால் இரண்டு பேராக வந்திருந்தால் இன்னும் நன்றாக இதைப் பார்த்து அனுபவிக்கலாம் அல்லது நாலு பேராக வந்திருக்க வேண்டும்!" என்று கூறினாள். அவள் மனதில் நினைத்துச் சொன்னது சீதாவும் ராகவனும் மட்டும் வந்திருக்கலாம் என்று. ஆனால் சீதா அதைத் தப்பர்த்தம் செய்து கொண்டு, "நான் வரவில்லை என்று ஆனமட்டும் சொன்னேன்; கேட்டால் தானே?' என்று முணுமுணுத்துவிட்டு ஏரிக்கரையை நோக்கி விடுவிடு என்று நடந்தாள். கரை ஓரமிருந்த மரத்தின் அடியில் உட்கார்ந்து ஏரியைப் பார்க்கலானாள். ஆனால் அவளுடைய கண்கள் ஏரியைப் பார்த்தனவே தவிர, மனது வேறு எங்கேயோ சஞ்சரித்துக் கொண்டிருந்தது. ஏரியின் குளிர்ந்த நீரில் அளாவிக் கொண்டு வந்து உலாவிய காற்று அவளுடைய உடம்பெல்லாம் அக்கினி ஜுவாலையை மூட்டியது. அவள் விடுவிடு என்று நடந்து போனதைக் கவனித்த தாரிணி, ராகவனைப் பார்த்து, "உங்கள் மனைவி என்ன இன்றைக்கு இப்படி இருக்கிறாளே? இது தலைவலி மட்டும் அல்ல; உள்ளக் கோளாறும் ஏதோ இருக்கும் போலிருக்கிறது" என்று சொன்னாள். "இந்த மாதிரி செய்வாள் என்று தெரிந்திருந்தால் அவளை அழைத்து வந்திருக்கவே மாட்டேன்" என்றான் ராகவன். "பெண்களின் மனதை அறியும் சக்தி உங்களுக்கு இல்லவே இல்லையென்று தெரிகிறது. உங்கள் மனைவிக்கு உங்களுடன் தனியாக வந்து உல்லாசமாக இருந்து விட்டுப் போக வேண்டும் என்று எண்ணம்!"

"அவளைத் தனியாக அழைத்துக்கொண்டு வந்து என்ன செய்கிறது? அவளோடு எந்த விஷயத்தைப்பற்றிப் பேசுகிறது? எங்களிரு வருக்கும் பொதுவான விஷயம் எதுவும் இல்லை. அவளுடைய பேச்சு என் மனதில் ஏறவே ஏறாது. நான் பேசுகிற விஷயம் அவளுக்குப் புரியாது." "அது யாருடைய தப்பு அவளை நீங்கள் படிப்பித்து உங்கள் நிலைக்குக் கொண்டு வந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் உங்களுடன் சமதையான படிப்பில்லாதவளை மணம் செய்து கொண்டிருக்கக் கூடாது. அப்போது தப்புச் செய்து விட்டு இப்போது இப்படிப் பேசுவதில் என்ன பயன்?" "தப்பு என் பேரில் இல்லை, தாரிணி! உங்கள் பேரில்தான் உங்களால் வந்த வினைதான் இதெல்லாம்!" "வெகு அழகு! இப்படியெல்லாம் பேசாதீர்கள், உங்கள் மனைவி உட்கார்ந்திருக்கும் இடத்துக்கு நாமும் போகலாம் வாருங்கள்! இல்லாவிட்டால் அவளுடைய கோளாறு இன்னும் அதிகமாகிவிடும்." "அதிகமானால் ஆகட்டும்; அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை" என்றான் ராகவன். ஆயினும் தாரிணி போகத் தொடங்கியதும் அவளைப் பின்பற்றி அவனும் போனான். இருவரும் ஏரி ஓரம் சென்று சீதாவின் பக்கத்தில் உட்கார்ந்தார்கள். ஏரிக்கரையில் படகு ஒன்றும் இல்லை. ஆனால் ஏரியில் சில படகுகள் மிதந்து சென்று கொண்டிருந்தன. அவை ஏரியின் நடுவில் இருந்த சோலை சூழ்ந்த ஒரு சிறு தீவை நோக்கிப் போய்க் கொண்டிருந்தன. அந்தத் தீவின் உயரமான மரங்களின் மத்தியில் ஒரு பெரிய மாளிகை காணப்பட்டது. "அந்த மாளிகை யாருடையது?" என்று தாரிணி கேட்டாள்.

"சரித்திர நிபுணராகிய தங்களுக்கு இது தெரியாதா, என்ன? பழைய சரித்திரத்தைத்தான் ஆராய்வீர்கள் போலிருக்கிறது. இந்த சமஸ்தான ராஜாவின் அரண்மனைதான் இது. காலம் சென்ற பெரிய ராஜா உயிரோடிருந்தபோது இந்த மாளிகையில் அடிக்கடி வசிப்பாராம். அவருடைய உல்லாசக் கேளிக்கைகள் எல்லாம் இதிலேதான் நடக்குமாம்! உங்களுக்குத் தெரியுமோ, இல்லையோ? ஐந்தாறு வருஷத்துக்கு முன்னால் இந்த நாட்டின் ராஜாவைக் கொல்வதற்குப் பம்பாயில் ஒரு முயற்சி நடந்தது, கொல்ல முயற்சித்தவள் ஒரு ஸ்திரீ. பத்திரிகைகளிலே கூட பிரமாதப்பட்டது ஆனால் அந்த முயற்சி பலிக்கவில்லை. கொலை செய்ய முயற்சித்த ஸ்திரீ இரண்டு வருடம் கடுங்காவல் தண்டனை அடைந்ததுதான் லாபம். கத்திக் காயம் கூடப் படாமல் அப்போது ராஜா தப்பிவிட்டார். இரண்டு வருஷத்துக்கு முன்பு அதிகக் குடி காரணமாகச் செத்தொழிந்தார்." "இப்போதுள்ள ராஜா யார்? அவருடைய குணம் எப்படி?' என்று தாரிணி கேட்டாள். "இப்போதுள்ள ராஜா சிறு பையன், டேராடூனில் படிக்கிறான். நாம் இறங்கியிருக் கிறோமே, அந்த வீட்டில் வசிக்கும் திவான் ஆதிவராகாச்சாரியார்தான் இப்போது ராஜ்ய நிர்வாகம் செய்து வருகிறார். "அப்படியானால், இப்போது ராஜ்யம் நன்றாக நடந்து வருகிறதாக்கும்." "ஏதோ சுமாராய் நடந்து வருகிறது ஆனால் பழைய ராஜாவின் துர்மந்திரியாயிருந்த விநாயகராவ் மதோங்கர் இன்னும் உயிரோடிருக்கிறான். அரண்மனையிலும் சரி, சமஸ்தானத்திலும் சரி, அவனுடைய அட்டூழியங்கள் அதிகம். திவானும் அவன் விஷயத்தில் கொஞ்சம் ஜாக்கிரதையாயிருந்து வருகிறார். இல்லா விட்டால், ஏதாவது இல்லாதது பொல்லாததைக் கிளப்பி விட்டுத் திவானுடைய வேலைக்கே உலை வைத்து விடுவான்!"

ஆரம்பத்தில் வேறு கவனமாக இருந்த சீதா, பம்பாயில் ரஜினிபூர் ராஜாவைக் கொல்லும் முயற்சி நடந்ததைப் பற்றிக் காதில் விழுந்ததும், அவர்களுடைய பேச்சில் கவனம் செலுத்தலானாள். ராகவன் மதோங்கரைப் பற்றிச் சொல்லி முடித்ததும், "பம்பாயில் இந்த ஊர் ராஜாவைக் குத்திக் கொல்ல முயற்சித்த ஸ்திரீ யார்?" என்று கேட்டாள். "ஓகோ! நீ கூடக் கவனித்துக் கொண்டிருக்கிறாயா? அந்த ஸ்திரீ யாரோ தெரியாது. சிலர் அவளை ஹிந்து ஸ்திரீ என்றார்கள். சிலர் அவளை முஸ்லீம் ஸ்திரீ என்றார்கள். ஒரு சிலர் அவளைத் தென்னாட்டைச் சேர்ந்தவள் என்றும் சொன்னார்கள். யாராயிருந்தால் என்ன? பெரிய ராட்சஸியாயிருக்க வேண்டும்! பட்டப்பகலில் கொலை செய்ய முயற்சிப்பதற்கு அவளுக்கு எத்தனை தைரியம் இருந்திருக்க வேண்டும்?" என்றான் ராகவன். "புருஷர்கள் மட்டும் என்ன அக்கிரமம் வேண்டுமானாலும் செய்யலாம்; ஸ்திரீகள் அதற்குப் பழிவாங்க முயற்சிப்பதுதான் பிசகோ?" என்றாள் சீதா. "ஏது ஏது? கொலைகாரிக்கு ரொம்பப் பரிந்து பேசுகிறாயே? இப்படிப் பேச எங்கே கற்றுக் கொண்டாய்?" என்றான் ராகவன். தாரிணி குறுக்கிட்டு, "அந்த ஸ்திரீ பிறகு என்ன ஆனாளாம், தெரியுமா?" என்று கேட்டாள். இத்தனை நேரம் மௌனமாயிருந்த அவளுடைய குரலில் இப்போது அதிசயமான மாறுதல் காணப்பட்டது. முன்னே சீதாவின் குரல் நடுங்கியது போல் இப்போது தாரிணியின் குரலும் நடுங்கிற்று. ஆனால் ராகவன் அதைக் கவனியாமல், "யாருக்குத் தெரியும்? இரண்டு வருஷம் சிறையில் இருந்து விட்டு வெளிவந்த பிறகு எங்கே போய்க் கெட்டலைகிறாளோ? அதைப்பற்றி நமக்கென்ன கவலை!" என்றான்.

சீதாவின் மனதில் பம்பாயை விட்டுத் தான் ராஜம்பேட்டைக்குப் புறப்படுவதற்குச் சில நாள் முன்பு கையில் கத்தியுடனேயே ஒரு ஸ்திரீ வந்திருந்த சம்பவமும், ரயில் ஏறும்போது பத்திரிகையில் படித்தறிந்த விஷயமும், அப்போது தன் மனதில் ஏற்பட்ட சந்தேகமும் இப்போது டில்லிக்கு வந்த பிறகு அன்றொரு நாள் சாலை முனைக்கு அதே ஸ்திரீயைக் கையில் கத்தியுடன் பார்த்த விஷயமும் நினைவுக்கு வந்தன. அதையெல்லாம் பற்றிப் பிரஸ்தாபியாமல் வாயை மூடிக்கொண்டிருந்தாள். அவளுடைய மனம் ஸ்திரீ வைத்திருந்த கத்தியின் மேல் அடிக்கடி சென்றது. அவள் இந்த ஊர் ராஜாவைக் குத்திக் கொல்ல முயன்றதற்குத் தக்க காரணம் இருந்திருக்க வேண்டும். என்ன அக்கிரமம் செய்தானோ, என்னமோ? ஆனால் புருஷர்கள் மட்டுந்தானா அக்கிரமம் செய்கிறார்கள்? ஸ்திரீகளுந்தான் செய்கிறார்கள். உதாரணமாக இந்தத் தாரிணியைப் போன்ற வெட்கங்கெட்ட ஸ்திரீயைப் பற்றி என்ன சொல்வது? இப்படிப்பட்டவர்களைக் குத்திக் கொன்றால் கூடப் பாதகம் இல்லை. தன்னிடம் மட்டும் இப்போது ஒரு கத்தியிருந்தால்?...

தன்னுடைய எண்ணம் எவ்வளவு பயங்கரமான காரியத்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்த சீதா திடுக்கிட்டுத் தாரிணியின் முகத்தை நோக்கினாள். அவளுடைய நெற்றியிலிருந்த இரத்தக் காயம் கண்ணில் பட்டது. ஆகா; நல்ல வேலை செய்தான் சூரியா! அவன் மட்டும் இப்போது இங்கிருந்தால் எவ்வளவு நன்றாய் இருக்கும்? தன்னை விட்டு ஒரு நிமிஷ நேரமும் அகலாமல் உற்சாகமாகப் பேசிக் கொண்டிருப்பான் அல்லவா? அவன் இங்கே இருந்தால், இவர்கள் இருவரையும் நாம் இலட்சியம் செய்ய வேண்டியதேயில்லையே! இந்தச் சமயத்தில் படகு ஒன்று கரையை அணுகியது. படகில் ஏறிக்கொண்டு வந்தவர்கள் கரையில் இறங்கினார்கள். "இந்தப் படகை அமர்த்தட்டுமா? ஏரியில் போய் வரலாமா?" என்று ராகவன் கேட்டான். தாரிணி, "நான் தயார்; போகலாம் ஆனால் உங்களுடைய மனைவி என்ன சொல்கிறாளோ?" என்றாள். "அவளும் தானே வருகிறாள் அப்படி அவள் வர இஷ்டப்படாவிட்டால் இங்கேயே கரையில் இருக்கட்டும்; நாம் இருவரும் போய் வரலாம்." இப்படிச் சொல்லிவிட்டு ராகவன் வாடகைப் படகு அமர்த்திக் கொண்டு வருவதற்காகச் சென்றான். ராகவன் அப்பாலே சென்றதும், தாரிணி சீதாவைப் பார்த்து, "சீதா! உனக்கு ஏதாவது என் பேரில் கோபமா? ஒரு மாதிரியாயிருக்கிறாயே?" என்று கேட்டாள். "ஒரு மாதிரி என்ன, ஒருமாதிரி, எப்போதும் இந்த இலட்சணந்தான்!" என்று சீதா முணுமுணுத்தாள். "மறுபடியும் கோபமாகவே பேசுகிறாயே! நான் உன்னோடு சிநேகமாயிருக்க விரும்புகிறேன் சீதா" என்றாள் தாரிணி. "எதற்காக? நீயும் நானும் முன்பின் பார்த்தது கூட இல்லையே?" என்று சீதா சொன்னாள்.

இதற்குப் பதில் சொல்ல முடியாமல் தாரிணி திகைத்துப் போனாள். சற்றுப் பொறுத்து, "சீதா! உன் கழுத்தில் ஒரு ரத்தின ஹாரம் போட்டிருக்கிறாயே? அது ஏது?" என்று தாரிணி கேட்டாள். சீதா திடுக்கிட்டாள் அவள் மனதில் என்னவெல்லாமோ உருத்தெரியாத சந்தேகங்கள் உதித்தன. இந்தப் பாதகி எந்த விதத்திலாவது நம்மைக் கெடுத்து விடுவது என்று தீர்மானித்திருக்கிறாள் போலிருக்கிறது. ஒருவேளை நம் பேரில் திருட்டுக் குற்றம் சாட்டப்போகிறாளோ, என்னவோ? ஐயோ?! இந்த நேரத்தில் சூரியா இங்கு இல்லாமற் போய்விட்டானே! தாரிணி மறுபடியும், "சீதா! நான் கேட்டது உன் காதில் விழவில்லையா? கழுத்தில் ஒரு ரத்ன ஹாரம் போட்டுக் கொண்டிருக்கிறாயே அது ஏது என்று கேட்டேன்!" என்றாள். "என்! அம்மா எனக்குக் கொடுத்தாள்! நீ எதற்காகக் கேட்கிறாய்? ஒருவேளை நான் அதைத் திருடிவிட்டேன் என்று உனக்கு எண்ணமோ?" என்றாள் சீதா. "ஐயோ! என்ன கொடூரமாகப் பேசுகிறாய்? அந்த ரத்தின ஹாரம் ரொம்ப அழகாயும் வேலைப்பாடாயும் இருக்கிறபடியால், எங்கே செய்தது என்று தெரிந்து கொள்வதற்காகக் கேட்டேன் . அதற்கு ஏன் இத்தனை கோபப்படுகிறாய்?" "எனக்கு ஒன்றும் கோபமில்லை?" "கோபமில்லையென்றால் சரி, உன் அம்மாவுக்கு எந்த ஊர் சீதா! உன் பிறந்தகம் எங்கே?" "அதையெல்லாம் பற்றி இப்போது ஒன்றும் என்னைக் கேட்க வேண்டாம் என் மனது சரியில்லை." "அது ரொம்ப நன்றாய்த் தெரிகிறது!" என்றாள் தாரிணி.

ராகவன் வாடகைக்குப் படகு அமர்த்திக்கொண்டு வந்து சேர்ந்தான். "சீக்கிரம் படகில் ஏறுங்கள் ஏற்கெனவே நேரம் ரொம்ப ஆகிவிட்டது?" என்றான். "அவசியம் படகில் ஏறத்தான் வேண்டுமா? பேசாமல் திரும்பிப் போய்விடலாமே" என்றாள் தாரிணி. "அழகாயிருக்கிறது! இந்தப் படகோட்டியுடன் எவ்வளவோ வாதாடிப் படகு கொண்டு வந்திருக்கிறேன். நீங்கள் இப்போது தகராறு செய்யாதீர்கள் சீதா எழுந்திரு! சீக்கிரம் வந்து படகில் ஏறிக்கொள்." சீதா எழுந்து வந்தாள் அவளுடைய கையைப் பிடித்துப் படகிற்குள்ளே ஏற்றி விட்டான் ராகவன். பிறகு தாரிணி தயக்கத்துடன் வந்து தானாகவே படகில் ஏற முயன்றாள்! அது சாத்தியப்படவில்லை படகு நகர்ந்து நகர்ந்து சென்று கொண்டிருந்தது. "சொன்னால் கேட்கிறீர்களா? இங்கே கையைக் கொடுங்கள்!" என்று கூறி ராகவன் தாரிணியின் கையையும் பிடித்துப் படகிற்குள் ஏற்றிக்கொண்டான். தாரிணி சீதாவின் பக்கத்தில் போய் உட்கார்ந்து கொண்டாள். ராகவன் அவர்களுக்கு எதிரேயிருந்த படகுச் சட்டத்தின் மீது உட்கார்ந்தான். படகு நகரத் தொடங்கியது. இதற்கிடையில் திடீரென்று வானம் கருத்து மேக மண்டலங்கள் திரளுவதையும், காற்று பலமாக அடிக்கத் தொடங்கியிருப்பதையும் அவர்கள் யாரும் கவனிக்கவில்லை. ஏரிக்கரைக்கு அவர்கள் வந்த சமயம் ஏரியின் நீர்ப்பரப்பில் கடற்கரை மணலில் தோன்றுவது போன்ற பூ அலைகள் எழுந்து சத்தமின்றி விரிந்து பரவி மீண்டும் ஜலத்திரளில் மௌனமாகக் கலந்து கொண்டிருந்தன. இவர்கள் ஏறிய படகு புறப்பட்ட சமயத்திலோ அலைகள் ஒரு அடி உயரம் எழும்பி விழுந்தன. ஆங்காங்கு அலைகளின் நுனியில் வெண்ணுரை காணவும் ஆரம்பித்திருந்தது. அலை அடிக்கும் ஓசை 'கும்' என்று கேட்கத் தொடங்கியது.

ஏரிக்கரையிலிருந்து அதன் நடுவில் இருந்த சோலைத் தீவு சுமார் இரண்டு பர்லாங் தூரம் இருக்கும். தீவை நோக்கிப் படகு போகலாயிற்று. அரை பர்லாங் தூரம் போவதற்குள் காற்றின் வலிவு அதிகமாகி விட்டது. அலைகள் திரைத்தெழுந்து நுரை பொங்கி ஒரு கஜம் உயரம் வரையில் எழுந்து விழுந்து அலைகளின் சத்தம் 'ஹோ!' என்ற பெரும் ஓசையாகிவிட்டது. படகு அப்படியும் இப்படியும் பலமாக ஆடி எழுந்து விழுந்தது. படகுக்காரன் அவனுடைய பாஷையில் ஏதோ சொன்னான். "தாரிணி, இதென்ன? காற்று இவ்வளவு பலமாகி விட்டதே! திரும்பிப் போய்விடலாமா!" என்றாள். "முன் வைத்த காலைப் பின் வைக்க முடியாது. உயிருக்கு அவ்வளவு பயப்பட வேண்டுமா!" என்றான் ராகவன். சீதா நாலா பக்கமும் திரும்பிப் திரும்பிப் பார்த்துத் திருதிருவென்று விழித்தாள். திடீரென்று, "ஐயோ! அம்மா! எனக்குப் பயமாயிருக்கிறதே!" என்று கூச்சலிட்டுவிட்டு விம்மத் தொடங்கினாள். ராகவன் மிகக் கடுமையான குரலில், "சீதா இது என்ன மடத்தனம்? அழுகையை உடனே நிறுத்துகிறாயா, இல்லையா?" என்றான். சீதாவின் வெறி இன்னும் அதிகமாயிற்று. "ஐயோ அம்மா! நீ சொன்னது சரியாய்ப் போய்விட்டதே; அலையில் விழுந்து நான் சாகப் போகிறேனே!" என்று அலறினாள்.

இந்த எதிர்பாரா நிலைமை ராகவனைக் கலங்க அடித்துவிட்டது. அவன் பெரும் மனக் குழப்பத்துடன் தாரிணியை நோக்கிப் பரிதாபமாகப் பார்த்தான். "இந்தச் சனியன்களையெல்லாம் இதற்குத்தான் வெளியில் அழைத்துக்கொண்டு புறப்படக் கூடாது என்கிறது. நீங்கள் கொஞ்சம் சமாதானப்படுத்திப் பாருங்களேன்!" என்றான். "மிஸ்டர் ராகவன்! சமாதானப்படுத்திப் பயனில்லை. உங்கள் மனைவிக்கு 'ஹிஸ்டீரியா' மாதிரி இருக்கிறது. படகுக்காரனை உடனே கரைக்குத் திருப்பச் சொல்லுங்கள் வேறு வழியில்லை!" என்றாள். ராகவனும் படகுக்காரனை இரைந்து கூப்பிட்டு, "கரைக்குத் திருப்பு!" என்று உத்தரவிட்டான். படகுக்காரன் "குச் டர் நஹி, சாகிப்!" என்றான். "எப்படியிருந்தாலும், சரி! கரைக்கு உடனே படகைத் திருப்பு!" என்று ராகவன் கத்தினான். "படகுக்காரன் திருப்பமாட்டான்; அவனுக்கு யாரோ சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள்!" என்று கூறிவிட்டு, சீதா மேலும் விம்மினாள். "ஏதாவது பிதற்றாதே, சீதா! வாயை மூடு!" என்று ராகவன் அதட்டிவிட்டு, படகுக்காரனை மறுபடியும் பார்த்து, "திருப்பு உடனே! திருப்பு கிறாயா, இல்லையா?" என்று கத்தினான். "டீக், ஸாகிப் டீக்!" என்றான் படகுக்காரன்.

உண்மையென்னவென்றால், படகுக்காரன் படகைத் திருப்பத்தான் பார்த்தான். ஆனால், காற்றினாலும் அலையினாலும் அது அவ்வளவு சுலபமாயில்லை. படகுக்காரன் எவ்வளவு பலமாகக் கழியைப் போட்டாலும், படகு சுற்றிச் சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருந்தது. இதற்குள் சீதாவின் விம்மல் சத்தம் அதிகமாயிற்று. இடையிடையே, "அம்மா! அம்மா! நீ சொன்னது சரியாய்ப் போயிற்று!" என்று அலறிக் கொண்டிருந்தாள். அவளுடைய கைகள் வெடவெடவென்று நடுங்கிக்கொண்டிருந்தன. இதைப் பார்த்த தாரிணி, "மிஸ்டர் ராகவன்! 'ஹிஸ்டீரியா' அதிகமாகிக் கொண்டிருக்கிறது. நீங்களும் இங்கே பக்கத்தில் வந்து உட்கார்ந்து கையைப் பிடித்துக் கொள்ளுங்கள்!" என்று சொல்லி விட்டுச் சீதாவின் ஒரு கையைத் தான் கெட்டியாகப் பிடித்தாள். தாரிணி பிடித்த கையைச் சீதா பலமாக உதறி விடுவித்துக் கொண்டு ஒரு துள்ளு துள்ளிப் படகில் எழுந்து நின்றாள். படகு பேயாட்டம் டிக்கொண்டிருந்தது. "ஓகோ! எனக்கு 'ஹிஸ்டீரியா' என்று சொல்லி ஜலத்தில் தள்ளிவிடப் பார்க்கிறாயோ? எனக்கு ஒன்றும் 'ஹிஸ்டீரியா' இல்லை! நான் விழமாட்டேன்!" என்று கூவினாள். "சீக்கிரம்! இவளை வந்து உடனே பிடித்துக் கொள்ளுங்கள்!" என்று தாரிணி கத்தினாள்.

ராகவன் எழுந்து சீதாவை நெருங்கி வருவதற்கு ஒரு அடி எடுத்து வைத்தான். அந்தச் சமயத்தில் படகை ஒரு பெரும் அலை மோதியது. படகு ஒரே ஆட்டமாகத் தலை குப்புறக் கவிழ்ந்து விடும்போல் ஆடியது. ராகவன் படகுக்குள்ளே கால் தடுமாறி விழுந்தான். சீதா, "வீல்!" என்று கத்திக்கொண்டு தண்ணீரில் விழுந்தாள். தாரிணி, "ஐயோ! கடவுளே!" என்று அலறினாள். படகுக்காரன் தன்னுடைய பாஷையில் ஏதோ உளறிக் கொட்டிக் கொண்டிருந்தான். கவிழ்ந்து விடும் போலிருந்த படகு எழுந்து நிமிர்ந்தது. தண்ணீரில் மூழ்கிய சீதா மேலே வந்து கொண்டிருந்தாள். நிமிர்ந்த படகு சீதாவை விட்டு அகன்று போய்க் காண்டிருந்தது. சீதா ஒரு தடவை தலையைத் தண்ணீருக்கு மேலே தூக்கி, "அம்மா!" என்று அலறினாள். அந்த அலறல் சத்தம் காற்றின் பேரொலிக்கும் அலைகளின் பெரும் ஓசைக்கும் மேலே கேட்டது. தாரிணி ராகவன் இவர்களுடைய நெஞ்சில் ஈட்டி பாய்வது போல் அந்த அபயக்குரல் பாய்ந்தது. தாரிணி, "என்ன சும்மா நிற்கிறீர்களே! தண்ணீரில் குதித்து அவளைக் காப்பாற்றுங்கள்!" என்று கூவினாள்.

படகிற்குள் தடுமாறி விழுந்த ராகவன் அப்போதுதான் சமாளித்து எழுந்தான். "ஐயோ! எனக்கு நீந்தத் தெரியாதே!" என்று சொல்லி விட்டுச் சீதாவின் தலை தெரிந்த இடத்தைப் பார்த்துக்கொண்டு நின்றான். ராகவனுடைய அந்தரங்கத்தில் அப்போது ஒரு கணம் ஒரு பயங்கரமான எண்ணம் உதயமாயிற்று. "ஒருவேளை இதுதான் விதி போல் இருக்கிறது. சீதா இறந்து போனால்... மேலே அந்த பயங்கர நினைவுக்கு இடங்கொடுக்க விரும்பாமல் "படகுக்காரா! அடே படகுக்காரா..." என்று ராகவன் கூவினான். முழுகிக் கொண்டிருந்தவளின் பக்கத்தில் படகைக் கொண்டு போகும்படி சொல்ல அவன் உத்தேசித்திருந்தான். ஆனால், அதற்குள்ளே தாரிணி படகிலிருந்து தண்ணீரில் குதித்துச் சீதா முழுகிக் கொண்டிருந்த இடத்தை நோக்கி வெகு லாவகமாக நீந்திப் போய்க் காண்டிருந்தாள்! அந்த அதிசயத்தைப் பார்ப்பதற்காக வருணனும் வாயுவும் அமைதியாக நின்றார்கள்.

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

பதினைந்தாம் அத்தியாயம்
புனர் ஜென்ம

'ஹோ' என்ற பேரோசை கேட்டுக் கொண்டிருந்தது. சிறிது நேரம் வரையில் அந்த ஓசையைத் தவிர வேறு சத்தம் எதுவும் கேட்கவில்லை. வேறு நினைவு ஏதும் ஏற்படவில்லை. அது என்ன சத்தமாயிருக்கும், என்று சீதா யோசித்தாள். நெடு நேரம் வரை அதே யோசனையாயிருந்தாள்.சட்டென்று நினைவு வந்தது, அம்மா அடிக்கடி எச்சரிக்கை செய்திருந்த அலை ஓசையாகத்தான் இருக்கவேண்டும். ஆம், ஆம்; அலை ஓசைதான்! காதே அடைத்துப் போனது போலக் கேட்கிறது. இந்தச் சத்தம் கேட்கத் தொடங்கியது எப்போதிருந்து? எப்போதிருந்து? எப்போதிருந்து - இதோ நினைவு வருகிறது! தண்ணீரில் மூழ்கியதிலிருந்து; தண்ணீரில் முழுகி மூச்சு முட்டிப் போனதிலிருந்து. மூச்சு முட்டும் தருணத்தில், 'தண்ணீருக்கும் மேலே இருந்தபோது இவ்வளவு சத்தம் இல்லையே? தண்ணீருக்குள் இவ்வளவு அதிக சத்தமாயிருக்கிறதே?' என்று எண்ணியது இப்போது சீதாவுக்கு நினைவு வந்தது. அதைத் தொடர்ந்து, 'சரி, இனி பிழைக்கப் போவதில்லை' என்று எண்ணியதும், 'அம்மா! உன் பேச்சைக் கேட்காமல் போனேனே?' என்று வருத்தப்பட்டதும் நினைவுக்கு வந்தன. அந்த ஆபத்தான தருணத்தில் கையில் ஏதோ ஒன்று தட்டுப்பட்டது. பிறகு, அப்படித் தட்டுப்பட்டதும் ஒரு கைதான் என்று தெரிந்தது. அது யாருடைய கை? வளையல் அணிந்திருந்தபடியால் ஒரு ஸ்திரீயின் கை தான் அது! அந்த ஸ்திரீ யார்? ஆபத்துக் காலத்தில் தன்னை வந்து காப்பாற்றுவதாகச் சொல்லி இப்படியெல்லாம் எண்ணமிட்டது வரையில், சீதாவுக்கு இப்போது நினைவுக்கு வந்தது, கண்ணை மட்டும்தான் திறக்க முடியவில்லை. ஒரே இருட்டாயும் வெளிச்சமாயுமிருக்கிறது. ஆம், இருட்டாயுமிருக்கிறது; வெளிச்சமாயுமிருக்கிறது. இருட்டில் வெளிச்சமாயிருக்கிறது; வெளிச்சத்தில் இருட்டாயிருக்கிறது. ஆனால் கண்ணைத் திறந்து பார்க்க முடியவில்லை. எவ்வளவு முயற்சி செய்தாலும் கண் இமைகளைத் திறக்க முடியவில்லை....

ஏதோ குரல் கேட்கிறதே, அது என்ன? யார் குரல்? யார் என்ன சொல்கிறார்கள் இந்த நாசமாய்ப் போன அலைச் சத்தம் மட்டும் அடங்கினால்?.. அலைச் சத்தம் கொஞ்சம் இப்போது குறைந்துதானிருக்கிறது! யாரோ இரண்டு பேர் பேசுகிறார்கள்; என்ன பேசுகிறார்கள்? கண் தெரியாவிட்டாலும் நல்லவேளையாகக் காது கேட்கிறது; கவனித்துக் கேட்கலாம். "உங்கள் மனைவிக்கு நினைவு வந்து கொண்டிருக்கிறது. கண்ணிமைகள் கொஞ்சம் அசைகின்றன. சீக்கிரத்தில் கண்ணை விழித்துக் கொள்வாள்." "இன்றைக்குச் சீதாவுக்குப் புனர் ஜென்மம்தான். உன்னாலேதான் சீதா பிழைத்தாள் நீதான் அவளுக்கு இரண்டாவது தாயார்!" "சீதா தாயில்லாப் பெண் என்று கேள்விப்பட்டேன் அது உண்மையா?" "தாய் இல்லாமல் பெண் எப்படி வருவாள்? இராமாயண சீதையைப்போல் பூமியிலிருந்தே வந்து விடவில்லை. தாயார் வயிற்றில்தான் பிறந்தாள் ஆனால் இப்போது அவளுக்குத் தாய் உயிரோடில்லை. இனிமேல் நீதான் அவளுக்குத் தாயார்." "அப்படியே ஆகட்டும் சீதாவுக்கு நான் தாயார் என்றால், நீங்கள் எனக்கு மாப்பிள்ளையாக வேண்டும். அழகான மாப்பிள்ளை நீங்கள்! கட்டிய மனைவி தண்ணீரில் முழுகிக் கொண்டிருக்கையில், படகிலிருந்து இறங்காமலிருந்த மாப்பிள்ளை!" "அதற்கு நீதான் காரணம்! பலாத்காரமாக இரண்டாயிரம் ரூபாய் பணத்தை என்னிடம் கொடுத்துவிட்டாய்! அதைச் சட்டைப் பையில் வைத்துக்கொண்டு எப்படித் தண்ணீரில் திடீரென்று குதிக்க முடியும்? அந்த முட்டாள் படகுக்காரன் உளறியதை நீ புரிந்து கொள்ளவில்லை போலிருக்கிறது. இந்த ஏரியில் எங்கேயும் கழுத்துக்கு மேல் தண்ணீர் கிடையாதாம், சீதா தற்கொலை செய்து கொள்ள எண்ணியிருந்தால் கூடச் சாத்தியமாகியிராது."

"போதும், நிறுத்துங்கள்! சீதாவுக்குப் பிரக்ஞை வந்து கொண்டிருக்கிறது. சீக்கிரம் உங்களுடைய மடியில் எடுத்துப் போட்டுக் கொள்ளுங்கள். அவளுக்கு நல்ல நினைவு வரும் போது, என்னுடைய மடியில் அவள் படுத்திருப்பதையும், உங்களுடைய உடுப்புக் கூட நனையாமல் இருப்பதையும் பார்த்தால் ஒரு நாளும் உங்களை மன்னிக்க மாட்டாள்!" "உனக்குத் தெரியாது, தாரிணி! உனக்குத் தெரியாது. எங்கள் ஊர்ப் பெண்களுக்கு எவ்வளவு தூரம் மன்னிக்கும் சக்தி உண்டு என்பது உனக்குத் தெரியாது!" மேலே கண்ட சம்பாஷணையில் எல்லா விவரங்களும் சீதாவின் மனதில் பதியவில்லை, சில சில வார்த்தைகள்தான் பதிந்தன. ஆனால் அவற்றிலிருந்து தான் முழுகுவதற்கு முன் நடந்த சம்பவங்கள் எல்லாம் நன்றாக நினைவுக்கு வந்துவிட்டன. ஏரியில் விழுந்து தத்தளித்து முழுகிக் கொண்டிருந்த தன்னைக் காப்பாற்றியது தாரிணி என்பதைத் தெரிந்து கொண்டாள். தான் அப்போது தாரிணியின் மடியில் படுத்திருப்பதையும் உணர்ந்தாள். ராகவன் 'மன்னிக்கும் சக்தி'யைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த போது தாரிணி தன்னை அலுங்காமல் எடுத்து ராகவன் மடியில் போட்டதையும் அவள் உணர்ச்சியினால் அறிந்தாள்.

"சீதா! சீதா!" என்று கூப்பிட்டுக்கொண்டே ராகவன் அவளுடைய கண்ணிமைகளைத் தொட்டான், உடனே கண்கள் திறந்து கொண்டன. திறந்த கண்கள் ராகவனுடைய முகத்தை உற்று நோக்கின. அந்தக் கண்களின் மூலமாகச் சீதா என்ன செய்தி கூறினாளோ நமக்குத் தெரியாது. "ஆம்; நீ எவ்வளவு கிராதகராயிருந்தாலும் உம்மை மன்னிக்கும் சக்தி என்னிடம் இருக்கிறது!" என்றுதான் சொன்னாளோ, அல்லது, "என்னுடைய மன்னிக்கும் சக்திக்கும் ஒரு வரம்பு உண்டு" என்று எச்சரிக்கை தான் செய்தாளோ, நாம் அறியோம். "சீதா! நான் யார் தெரிகிறதா, நன்றாகப் பார்த்துச் சொல்!" என்றான் ராகவன். சீதா ஈனஸ்வரத்தில், "தெரியாமல் என்ன? தாங்கள் மிஸ்டர் சௌந்தரராகவன் எம்.ஏ." என்றாள். "பலே! பலே! அப்படிச் சொல்லு!" அதோ உன் எதிரில் இருக்கிறது யார் தெரிகிறதா? சொல் பார்க்கலாம்." "தெரியாமல் என்ன? என் அம்மாவை எனக்குத் தெரியாமல் இருக்குமா!" "இதைக் கேட்ட ராகவன் சிறிது திடுக்கிட்டான். தானும் தாரிணியும் சற்று முன் பேசியது அவள் காதில் விழுந்ததா என்ன? மூளை கலங்கிப் போய்விட்டதா? சீதா ராகவனுடைய மடியிலிருந்து சட்டென்று எழுந்தாள். அவள் என்ன செய்யப் போகிறாள் என்று மற்ற இருவரும் யோசிப்பதற்கு முன்பு தாரிணிக்கும் நமஸ்காரம் செய்துவிட்டு அவளுடைய கைகளைப் பிடித்துக் கொண்டாள். "நீங்கள் என் உயிரைக் காப்பாற்றினீர்கள்; எனக்கு இது புனர் ஜன்மம். இந்தப் புது ஜன்மத்துக்கு நீங்கள்தான் என் அம்மா!" என்றாள்.

தாரிணி அதை மறுக்க எண்ணி, "சீதா! நீ தவறு செய்கிறாய்! உன்னைக் கப்பாற்றியது நான் அல்ல; உன்னுடைய கணவர்..." என்பதற்குள், சீதா, "எல்லாம் எனக்குத் தெரியும்; அவருடைய உலர்ந்த உடுப்பையும் உங்களுடைய ஈரப்புடவையையும் பார்த்தாலே தெரியவில்லையா?" என்றாள். இதற்குள், ராகவன் குறுக்கிட்டு, "இல்லை சீதா? தாரிணி சொல்கிறது பொய், நீ ஊகித்ததுதான் உண்மை. தாரிணிதான் உன்னைக் காப்பாற்றினாள். எனக்கு நீந்தத் தெரியாது என்பது தான் உனக்குத் தெரியுமே! உன்னை நான் தனியாக அழைத்து வந்திருந்தால் நம்முடைய கதி அதோகதிதான். அடுத்த தடவை உன்னைப் படகில் ஏற்றி அழைத்துப் போவதற்குள்ளே நீந்தக் கற்றுக் கொண்டு விடுகிறேன்!" என்றான். "எனக்காக நீந்தக் கற்றுக் கொள்ள வேண்டாம்; நான் இனிமேல் தண்ணீருக்குச் சமீபத்தில் கூடப் போகப் போவதில்லை" என்று கூறினாள் சீதா. சீதாவின் உள்ளத்தில் என்றுமில்லாத ஆனந்தம் பொங்கிக் கொண்டிருந்தது. அந்த ஆனந்தம் அவளுடைய உடம்பின் நரம்பின் ஒவ்வொரு அணுவிலும் வெளியாகிக் கொண்டிருந்தது. யமலோகத்தின் வாசலிலிருந்து தான் திரும்பி வந்த விஷயத்தை அவள் நன்கு உணர்ந்தாள். கொஞ்சம் தாமதித்திருந்தால் உயிர் போயிருக்கும். இது தனக்குப் புனர் ஜன்மம்; மறுபிறப்பு, தான் இன்னும் ஜீவித்திருப்பது உண்மை. எதிரே தோன்றிய நீல நிற ஏரி, பசுந்தளிர் விருட்சம், வெண்ணிறப் பறவைகள் இவையெல்லாம் உண்மை. தூரத்தில் இருண்டு வந்த இடத்தில் வானம் குனிந்து பூமியைத் தழுவுவதும் உண்மை.

தான் ராகவனுடைய மடியில் படுத்திருப்பதும் உண்மை. எதிரே ஈரப் புடவையுடனும் கருணை நிறைந்த முகத்துடனும் தாரிணி உட்கார்ந்திருப்பதும் உண்மை. படகும் உண்மை; மோட்டார் காரும் உண்மை. புதுடில்லி பங்களாவில் மாமியாரிடம் விட்டு வந்திருக்கும் தன் அருமைக் கண்மணியும் உண்மை. ஆகா! இந்த உலகம் எவ்வளவு ஆனந்த மயமானது? உயிரோடு வாழ்வது எவ்வளவு இன்பகரமானது? இந்த வாழ்க்கையைத் துன்பமயமாக்கிக் கொள்வது போல் மூடத்தனம் வேறு உண்டா? மூன்று பேரும் அன்றிரவு திவானுடைய வீட்டுக்குப் போனபோது வெளியூருக்குப் போயிருந்த திவான் வந்து சேர்ந்திருந்தார். ஏரியில் நடந்த சம்பவத்தைக் கேள்விப்பட்டு அவரும் அவருடைய குமாரிகளும் மிக்க கவலைக்கும் பரபரப்புக்கும் உள்ளானார்கள். தாரிணியின் தைரியத்தைப் பெரிதும் பாராட்டினார்கள். தாரிணியைத் திவானுக்குப் பெரிதும் பிடித்துப் போய்விட்டது. அவள் தன் தோழியையும் அழைத்துக் கொண்டு அங்கு வந்து விட வேண்டும் என்றும், எல்லாரும் தன் வீட்டில் இரண்டு நாள் தங்கிவிட்டுத்தான் போக வேண்டும் என்றும் சொன்னார். அதை அவருடைய குமாரிகளும் ஆமோதித்தார்கள் சீதாவோ மிகவும் வற்புறுத்தினாள். ஆகவே, தாரிணியும் நிருபமாவும் திவானுடைய வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள். திவான் வீடு அந்த இரண்டு நாளும் ஒரே கலகலப்பாயிருந்தது. அந்த இரண்டு நாளைக்கு சீதாவும் தாரிணியும் இணை பிரியாத அத்தியந்த சிநேகிதிகள் ஆகிவிட்டார்கள். ராகவன் இதைப் பார்த்து மிக்க மகிழ்ச்சி அடைந்தான். சீதாவின் மனதில் ஏற்பட்டிருந்த களங்கம் அடியோடு நீங்கி விட்டதாகக் காணப்பட்டது.

டில்லிக்குப் போவதற்கு முதல் நாள் தாரிணியும் சீதாவும் தனியாக இருக்க நேர்ந்தபோது, "சீதா! அன்றைக்கு உன்னிடம் ஒரு விஷயம் கேட்டேன். அதற்கு நீ சரியாகப் பதில் சொல்லவில்லை. நீ கழுத்தில் அணிந்திருக்கும் ரத்தின ஹாரத்தைப் பற்றித்தான். இப்போதாவது அதைப்பற்றிச் சொல்லலாமா?" என்றாள் தாரிணி. "அக்கா! அன்றைக்கு எனக்கு ஏதோ பைத்தியம்தான் பிடித்திருக்க வேண்டும். யாரைப் பார்த்தாலும் அகாரணமாகக் கோபம் வந்தது. நீங்கள் கூடப் படகில் 'ஹிஸ்டீரியா' என்று சொல்லிக் கொண்டிருந்தீர்கள். உண்மையில் எனக்கு 'ஹிஸ்டீரியா' தானோ என்னமோ? இல்லாவிட்டால் உங்கள் பேரில் எனக்கு எதற்கு அப்படிக் கோபம் வரவேண்டும்? நினைத்துப் பார்த்தால் வெட்கமாயிருக்கிறது!" என்றாள் சீதா. "அதைப்பற்றி நினைக்க வேண்டாம், சீதா! காரணம் எதுவாயிருந்தாலும் ஏரியில் அதற்கு ஒரு முழுக்குப் போட்டு விட்டாய்! அடியோடு பழைய கதையெல்லாம் மறந்துவிடு!" என்றாள் தாரிணி. "ஆகட்டும்; மறந்துவிடப் பார்க்கிறேன். நான் அணிந்திருக்கும் ரத்தின ஹாரத்தைப்பற்றி நானே சொல்ல வேண்டும் என்று நினைத்திருந்தேன். இந்த ஊருக்கு வந்ததிலிருந்து அதுவே நினைவாக இருக்கிறது." "அது என்ன? இந்த ஊருக்கும் உன்னுடைய ரத்தின ஹாரத்துக்கும் என்ன சம்பந்தம், சீதா!" "நேரான சம்பந்தமில்லைதான் ஆனாலும் ஒன்றுக்கொன்று தொடர்பாக ஞாபகம் வந்து கொண்டிருந்தது; சொல்கிறேன், கேளுங்கள்!"

இந்த முகவுரையுடன் சீதா ரத்தின ஹாரம் தனக்குக் கிடைத்த கதையைச் சொல்லத் தொடங்கினாள். தன்னுடைய தாயார் நோய்ப்பட்டுப் படுத்த படுக்கையாயிருந்தபோது முகமூடி அணிந்த அந்த ஸ்திரீ திடுதிடுவென்று மச்சுப்படி ஏறி வந்தது. தாயாரிடம் இந்த ரத்தின ஹாரத்தையும் இரண்டாயிரம் ரூபாய் பணத்தையும் கொடுத்துத் தன்னுடைய கலியாணத்துக்காக என்று சொன்னது, கத்தியை மறந்து வைத்துவிட்டுப் போனது, திரும்பி வந்து கத்தியை எடுத்துக் கொண்டு தன்னைக் கட்டி முத்தமிட்டுப் போனது ஆகிய எல்லா விவரங்களையும் சொன்னாள். பிறகு தானும் அம்மாவும் கிட்டாவய்யருடன் கிராமத்துக்குப் புறப்பட்டபோது ரயில்வே ஸ்டேஷனில் பத்திரிகைச் சிறுவர்கள் கூறியதையும், பத்திரிகையில் வெளியாகியிருந்த செய்தியைப் படித்தவுடன் தனக்கு உண்டான சந்தேகத்தையும் பற்றிக் கூறினாள். "அக்கா! பம்பாயில் ரஜினிபூர் ராஜாவைக் கொல்ல முயற்சித்த ஸ்திரீ எனக்கு இந்த ரத்தின ஹாரத்தைக் கொடுத்தவள் தானோ என்கிற சந்தேகம் என் மனதில் அப்போதே உதித்தது. இந்த ஊருக்கு நாம் வந்து சேர்ந்தது முதல் அந்த ஸ்திரீயைப் பற்றிய நினைவு அடிக்கடி வந்துகொண்டிருந்தது. அதற்கேற்றாற்போல் இவரும் ஏரிக்கரையில் அந்தச் சம்பவத்தைப் பற்றிப் பேச்சு எடுத்தார். அக்கா! உங்களுக்கு அதைப்பற்றி என்ன தோன்றுகிறது?" என்றாள் சீதா.

"உன்னுடைய சந்தேகத்தில் உண்மை இருக்கலாம். ஆனாலும் நீ யாரிடமும் இதைப்பற்றிச் சொல்லாமலிருப்பதே நல்லது. உன் கணவரிடம் இதைப்பற்றி எப்போதாவது சொல்லியிருக்கிறாயா?" என்றாள் தாரிணி. "சொல்லவில்லை சொன்னால் அவர் காது கொடுத்துக் கேட்கமாட்டார்" என்றாள் சீதா. "சொல்லாமலிருப்பதே நல்லது; புருஷர்களுடைய மனப் போக்கு விசித்திரமானது. ஒரு சமயம் அலட்சியமாய் விட்டாலும் விடுவார். இன்னொரு சமயம் 'இந்த ரத்தின மாலை என்னத்திற்கு?' என்று எடுத்து ஏரியில் எறிந்தாலும் எறிந்து விடுவார்." "அந்தப் பயத்தினாலேதான் நானும் அவரிடம் சொல்லவில்லை." "உன் தாயார் கொடுத்த சீதனத்தை நீ பத்திரமாய்க் காப்பாற்ற வேண்டும் . உன் தாயார் பெயர் என்ன, சீதா?" சீதாவின் தாயார், தகப்பனார் பெயர் முதலிய விவரங்களைக் கேட்டுத் தாரிணி தெரிந்து கொண்டாள். பிறகு, "உன் அப்பா இப்போது எங்கே இருக்கிறார்? அவர் உன்னைப் பார்க்க வருவதுண்டா?" என்று கேட்டாள். "அப்பா என்னை வந்து பார்த்து எத்தனையோ நாளாயிற்று. அம்மா செத்துப் போய்விட்டாள், அப்பா உயிரோடிருக்கிறாரோ, இல்லையோ, தெரியாது. கடிதம் கூட வெகு நாளாய் வரவில்லை. அக்கா! நான் அனாதை, தேவ பட்டணத்தில் என் மாமா பெண் லலிதா இருக்கிறாள். என் அருமைத் தோழி, இப்போது நீங்கள் கிடைத்திருக்கிறீர்கள். உங்கள் இருவரையும் தவிர எனக்கு வேண்டியவர்களே கிடையாது."

சற்றுப் பொறுத்துத் தாரிணி, "சீதா! ரத்தின மாலை கொடுத்த அந்த ஸ்திரீ யார் என்று உன் தாயார் உன்னிடம் எதுவும் சொல்லவில்லையா?" என்று கேட்டாள். "இல்லை; ஒருவேளை அம்மாவுக்கும் அது தெரிந்திராது தெரிந்திருந்தாலும் என்னிடம் சொல்லவில்லை." "சீதா! அந்த ஸ்திரீயை அப்புறம் நீ பார்த்ததேயில்லையே? "ஒரு தடவை பார்த்திருக்கிறேன்." "எங்கே? எப்போது?" சீதா புதுடில்லியில் தான் குடியிருந்த வீட்டுக்குத் திரும்பவும் நாற்சந்தில் ஒரு நாள் கத்தியும் கையுமாக அந்த ஸ்திரீயைப் பார்த்தது பற்றிச் சொன்னாள். "அடாடா! அவளைப் பார்க்க வேண்டும் என்று நான் எவ்வளவோ தேடிக் கொண்டிருக்கிறேன். ஆனால் அவள் என் கண்ணில் படவில்லை." "அப்படியா, அக்கா! அவளை எதற்காக நீங்கள் தேட வேண்டும்? உங்களுக்கு அவளைத் தெரியுமா என்ன?" "தெரியும், சீதா!" "எப்படித் தெரியும்?" "அவள் என் தாயார்!" ஒரே ஆச்சரியக் கடலில் மூழ்கிப் போனாள் சீதா. தாரிணியை வெறிக்கப் பார்த்தாள். "இப்போது தெரிகிறது உண்மை! தங்களுடைய முகஜாடை எங்கேயோ பார்த்த ஞாபகத்தை உண்டு பண்ணிக் கொண்டிருந்தது எதனால் என்று இப்போது தெரிகிறது" என்றாள். "சீதா! நீ நினைப்பது தவறு; அந்த ஸ்திரீ என்னுடைய சொந்தத் தாயார் அல்ல; என்னை வளர்த்த தாயார். என்னுடைய சொந்தத் தாயாரும் தகப்பனும் யார் என்பதும் இன்று வரையில் எனக்குத் தெரியாது. அதைக் கேட்டுத் தெரிந்து கொள்வதற்காகத் தான் ரஸியாபேகத்தை நான் தேடிக்கொண்டிருக்கிறேன்." "அவள் பெயர் ரஸியாபேகமா? அவள் முஸ்லிம் ஸ்திரீயா?"

"ஆம்; என்னை வளர்த்தவள் முஸ்லிம் ஸ்திரீதான். நாலு வருஷத்துக்கு முன்னால் நான் பீஹாருக்குப் போயிருந்தேன். அங்குப் பூகம்ப விபத்துக்கு உள்ளானவர்களுக்குத் தொண்டு செய்வதற்காக. அந்தச் சமயம் ரஸியாபேகம் ரஜினிபூர் ராஜாவைக் கொல்ல முயற்சித்ததற்காக இரண்டு வருஷம் சிறைக்குப் போய்விட்டாள். விடுதலையடைந்த பிறகு எவ்வளவோ தேடியும் பார்க்க முடிய வில்லை. சீதா! நான் எப்பேர்ப்பட்ட துர்ப்பாக்கியசாலி என்று தெரிந்து கொண்டாயல்லவா?" சீதாவின் கண்களில் நீர் ததும்ப, "அக்கா! அந்த ஸ்திரீயை மறுபடியும் நான் பார்த்தால் அவசியம் உங்களுக்குத் தகவல் தெரிவிக்கிறேன்" என்றாள். "அதோடு நான் அவளை அவசியம் பார்க்க வேண்டும் என்று சொல்லு. அப்படிப் பார்க்க முடியாவிட்டால் நான் என்னுடைய உயிரை விட்டுவிடத் தீர்மானித்திருப்பதாகவும் சொல்லு!" "அக்கா! அப்படியெல்லாம் நீங்கள் தீர்மானிக்கக்கூடாது. உங்களைத்தான் நான் முழுவதும் நம்பியிருக்கிறேன்" என்றாள் சீதா.

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

பதினாறாம் அத்தியாயம்
தேவபட்டணம் தேர்தல்

"என் உயிருக்குயிரான அருமைத் தோழி சீதாவுக்கு, உன்னுடைய அன்பான கடிதம் கிடைத்தது. நீங்கள் எல்லாரும் தாஜ்மகாலுக்குப் போனது பற்றியும் ஆக்ரா கோட்டையில் பார்த்த அதிசயங்களைப் பற்றியும் விவரமாக எழுதியிருந்ததைப் படித்து அளவில்லாத சந்தோஷம் அடைந்தேன், ரொம்ப ரொம்ப வந்தனம். அதையெல்லாம் படித்தபோது எனக்கு உங்களுடன் வந்து எல்லாக் காட்சிகளையும் பார்த்தது மாதிரியே இருந்தது. உங்களுடன் வந்து நேரில் பார்க்கக் கொடுத்து வைக்கவில்லையே என்று வருத்தமாயும் இருந்தது. அந்தப் பாக்கியம் எனக்கு எப்போது கிடைக்குமோ, தெரியவில்லை! இந்த ஜன்மத்தில் கிடைக்கும் என்றே தோன்றவில்லை. இவரிடம் நீங்கள் எல்லாரும் தாஜ்மகால் பார்த்தது பற்றிச் சொல்லி, "எப்போதாவது நாமும் போய் வரலாமா?" என்று கேட்டேன். வழக்கம் போல் தூக்கி எறிந்து பேசிவிட்டார். "நம்முடைய தமிழ்நாட்டில் பார்க்கவேண்டியது எவ்வளவோ இருக்கிறது. தஞ்சாவூர்ப் பெரிய கோவிலைப் பார்க்கவில்லை; மாமல்லபுரத்துக் கற்கோயில்களைப் பார்க்கவில்லை. தாஜ்மகால் பார்க்காததுதான் குறையாய்ப் போய்விட்டதாக்கும்!" என்றார். இவரிடம் ஏன் சொன்னோம் என்று ஆகிவிட்டது. எங்கள் பேச்சை ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்த என் மாமியார் வேறே ஆரம்பித்துவிட்டாள். 'ஏதோ காசி ராமேசுவரம் போகவேண்டும் என்று ஆசைப் படுவார்கள்; கேட்டதுண்டு. அந்த மாதிரி புண்ணிய ஸ்தலங்களுக்குப் போனால் போகிற கதிக்காவது பிரயோஜனமாக இருக்கும். துருக்க ராஜாக்கள் கட்டி வைத்த சமாதிகளைப் பார்க்க வேண்டுமென்று யாராவது ஆசைப்படுவார்களா? இந்தக் காலத்துப் பெண் களுடைய புத்தி ஏன்தான் ப்படியெல்லாம் போகிறதோ, தெரியவில்லை!" என்று ஒரு நாளெல்லாம் எனக்கு மண்டகப்படி செய்து கொண்டி ருந்தாள்! வெறும் வாயை மெல்லுகிறவளுக்கு ஒரு பிடி அவல் கிடைத்ததுபோல் ஆயிற்று.

வளைகாப்புக் கலியாணத்துக்குப் பிறகு நான் இங்கே வந்ததிலிருந்து என்னுடைய நிலைமை முன்னைவிட ரொம்ப மோசமாயிருக்கிறதடி, சீதா! நான் என்னவென்று சொல்வேன்? ஒரு விஷயத்தைக் கேள்! எங்கள் வீட்டுக்கு எதிர் வீட்டில் தாமோதரன்பிள்ளை என்று ஒருவர் இருக்கிறார் அவரும் வக்கீல்தான். என் மாமனாரும் அவரும் வெகு காலம் ரொம்ப சிநேகிதமாயிருந்தார்களாம். தாமோதரம்பிள்ளையின் மகனுக்கு அமரநாத் என்று பெயர். அமரநாத்துக்கும் இவருக்கும் ரொம்ப சிநேகிதம் . நம்ம சூரியா இங்கே படித்தபோது மூன்று பேரும் சேர்ந்தாற்போலேயே இருப்பார்களாம். அமரநாத்துக்கு இரண்டு வருஷத்துக்கு முன்னால் கலியாணம் நடந்தது. பெண், திருநெல்வேலிப் பெண்; அவளுடைய தகப்பனார் டிபுடி கலெக்டராம். நம் இரண்டு பேரையும்விட அதிகமாகப் படித்தவள். படித்திருக்கிறோம் என்ற கர்வம் கொஞ்சம் கூடக் கிடையாது. அவளுடைய கலியாணத்தின் போதே எனக்கும் அவளுக்கும் பழக்கம் ஏற்பட்டது. ஒரு வருஷத்துக்கு முன்னால் அவள் இந்த ஊருக்கு வந்ததிலிருந்து அவள் எனக்கு சிநேகிதியானாள். உன்னைப் போன்ற பிராண சிநேகிதியில்லாவிட்டாலும் பேச்சுத் துணைக்குச் சௌகரியமாயிருந்தது. வெளியில் எங்கும் போகாமல் வீட்டிலேயே அடைந்து கிடந்த எனக்கு, சித்ராவின் சிநேகிதம் ஆறுதலா யிருந்தது. தினசரி நானாவது அவள் வீட்டுக்குப் போவேன் அல்லது அவளாவது எங்கள் வீட்டுக்கு வருவாள். இம்மாதிரி நாங்கள் சிநேகமானது எங்கள் அகத்துக்காரர்களுக்கும் ரொம்பச் சந்தோஷமாயிருந்தது.

சீதா! அதெல்லாம் இப்போது பழங்கதையாகப் போய் விட்டது. இப்போது நாங்கள் ஒருவர் வீட்டுக்கு ஒருவர் போவதில்லை. ஒருவரை யொருவர் பார்ப்பதுமில்லை; பேசுவதுமில்லை காரணம் என்ன தெரியுமா? நான் ராஜம்பேட்டைக்குப் போயிருந்தபோது இந்த ஊரில் முனிசிபாலிடி எலெக்ஷன் வந்ததாம். அந்த எலெக்ஷனில் எதிர் வீட்டுத் தாமோதரன்பிள்ளை நின்றாராம். என் மாமனாருடைய இன்னொரு சிநேகிதரான ராஜாராம்அய்யர் என்பவரும் நின்றாராம். என் மாமனார் ராஜாராமய்யருக்காக வேலை செய்தாராம். ஏதோ ஒரு கூட்டத்தில் தாமோதரன்பிள்ளையை 'வெள்ளைக்காரனுக்கு வால் பிடிக்கிறவன்' என்று சொன்னாராம். அதற்காகத் தாமோதரன்பிள்ளை இவரைப் 'பாப்பாரப் புத்தியைக் காட்டி விட்டான்!' என்று திட்டிவிட்டாராம். இதிலிருந்து சண்டை முற்றிவிட்டது. இப்போது இரண்டு குடும்பத்துக்கும் பேச்சு வார்த்தையுமில்லை; போக்குவரத்துமில்லை. முப்பது வருஷமாகச் சிநேகிதர்களாக இருந்தவர்கள் இப்போது 'குத்து வெட்டு' என்கிற நிலைமைக்கு வந்து விட்டார்கள். அடியே! சீதா! வயதானால் புத்தி கெட்டுப் போய் விடுமோடி! முனிசிபாலிடி என்றால், குப்பைத் தொட்டி கூட்டுகிற சமாசாரமாம்! தோட்டிகளை வைத்துத் தெருக் கூட்டும் வேலையைச் சரியாய்ச் செய்வதற்குதான் முனிசிபாலிடியாம்! சம்பளம் கிடையாதாம்! இந்தக் குப்பை கூட்டுகிற பதவிக்காக இப்படி இவர்கள் சண்டை போட்டுக்கொள்ள வேண்டுமா என்று ஆச்சரியமாயிருக்கிறது. இதன் காரணமாக எனக்கு இங்கே கிடைத்திருந்த ஒரு சிநேகிதியையும் இழந்துவிட்டேன். சற்று நேரம் எதிர் வீட்டுக்கு போய்ப் பேசிக் கொண்டிருப்பதும் போய்விட்டது. வீடு அசல் சிறைச்சாலை ஆகிவிட்டது.

என்னுடைய கதை இருக்கட்டும், சீதா! நீ ரஜினிபூருக்குப் போனது பற்றிச் சுருக்கமாக எழுதியிருந்தாய். ஏரியில் விழுந்து ஆபத்தில்லாமல் எழுந்ததாக எழுதியிருந்தாய். ஏதோ தமாஷ் என்று நானும் எண்ணினேன். ஆனால் சூரியா எழுதியிருந்த கடிதத்திலிருந்து உண்மை தெரிந்தது. பெரிய கண்டத்திலிருந்து நீ தப்பிப் பிழைத்தாயாமே? அதென்னடி, உன் அகத்துக்காரர் படகிலேயே இருந்து விட்டார்; யாரோ தாரிணி என்று ஒருத்தியாம், அவளும் உங்களோடு படகில் வந்தாளாம். அவள்தான் ஏரியில் குதித்து உன்னைக் காப்பாற்றினாளாமே? அவள் மட்டும் இருந்திராவிட்டால் உன்னுடைய கதி என்ன ஆகியிருக்கும்? என்னுடைய கதிதான் என்ன ஆகியிருக்கும்? ஏதோ ஒரு சமயம் எனக்கு நல்ல காலம் பிறக்கும். உன்னோடு கொஞ்ச நாள் தங்கியிருக்கலாம், டில்லி - ஆக்ரா எல்லாம் பார்க்கலாம் என்று ஆசைப்பட்டுக் கொண்டிருக்கிறேன். நீ இப்படியெல்லாம் உன்னை அபாயத்துக்கு உட்படுத்திக் கொள்வது நன்றாயில்லை. உன் அகத்துக்காரரை நான் எபோதாவது பார்க்க நேர்ந்தால், அவரை நன்றாகத் திட்டுவது என்று எண்ணிக் கொண்டிருக்கிறேன். ஆண் பிள்ளைக்கு நீந்தத் தெரிய வேண்டாமா? நீந்தத் தெரியாவிட்டாலும் அப்படியா பார்த்துக் கொண்டு படகிலேயே உட்கார்ந்திருப்பது! இவரிடம் நேற்றுச் சொன்னபோது ரொம்பவும் வருத்தப்பட்டார். உன் அகத்துக்காரர் பேரில் கோபமும் பட்டார். "அவனும் ஒரு ஆண் பிள்ளையா?" என்றும் கேட்டு விட்டார். இவர் பேரில் எனக்கு எவ்வளவோ குறை இருக்கிறது. ஆனாலும் அந்த மாதிரி ஆபத்தான நிலைமையில் இவர் சும்மாயிருந்திருக்க மாட்டார் என்பது நிச்சயம்.

சென்ற வருஷம் இந்த ஊர்க் காவேரி வெள்ளத்தில் ஒரு சிறு பெண் முழுகிச் செத்துப் போக இருந்தாளாம். இவர் தைரியமாகக் காவேரியில் குதித்து நீந்திப் போய் அவளைக் கரை சேர்த்து உயிர் பிழைக்கச் செய்தாராம். இது விஷயத்தைப்பற்றி இந்தத் தேவபட்டணம் முழுவதும் சென்ற வருஷத்தில் பெருமையாகப் பேசிக் கொண்டார்கள். உன்னுடைய அகத்துக்காரர் அப்படி நடந்து கொண்டதைப் பற்றி எனக்கு உண்மையாகவே கோபமாயிருக்கிறது, சீதா! சூரியாவைக் கூட நான் நன்றாகத் திட்டிக் கடிதம் எழுதியிருக்கிறேன். உங்களோடு ஆக்ராவுக்கு வந்தவன் ரஜினிபூருக்கு வராமல் எதற்காகத் திரும்பி வரவேண்டும்? அப்படி என்ன தலை போகிற காரியம் அவனுக்கு? இனிமேல் அப்படியெல்லாம் செய்யக்கூடாது என்றும், உன்னைப் பத்திரமாய்ப் பார்த்துக் கொள்ளவேண்டும் என்று எழுதியிருக்கிறேன். சீதா! நீயும் அவனைக் கொஞ்சம் கவனித்துக்கொள். சூரியாவை நினைத்தால் எனக்குப் பரிதாபமாயிருக்கிறது. ஊரை விட்டு, நாட்டை விட்டு, வீடு வாசலை விட்டு, டில்லிப் பட்டணத்துக்குப் போய், நல்ல சாப்பாடு கூடக் கிடைக்காமல் திண்டாடிக் கொண்டிருக்கிறான். ஒரு அதிசயத்தைக் கேள்! என்னிடம் ஏதாவது பணம் இருந்தால் அனுப்பும்படி எழுதியிருக்கிறான். அல்லது என் கணவரிடம் கேட்டு வாங்கியாவது அனுப்பும்படி எழுதியிருக்கிறான். பணம் வேண்டும் என்று வீட்டுக்கு எழுதவும் மாட்டானாம்; அப்பா பணம் அனுப்பினால் பெற்றுக் கொள்ளவும் மாட்டானாம். இந்த மாதிரிப் பிள்ளை எங்கேயாவது உண்டா? கொஞ்சம் சூரியாவை எனக்காகப் பார்த்துக் கொள்.

குழந்தை வஸந்தி நாளொரு மேனியும் பொழுதொருவண்ணமுமாக வளர்ந்து வருகிறாள் என்று நம்புகிறேன். சமர்த்தாகப் பேசி விளையாடிக் கொண்டிருக்கிறாளா? வஸந்தி பிள்ளைக் குழந்தையாகப் பிறந்திருந்து எனக்குப் பிறப்பது பெண்ணாக இருக்கக்கூடாதா என்று அடிக்கடி எனக்குத் தோன்றுகிறது. எதற்காக என்று சொல்ல வேண்டுமா? புதிரை நீயே அவிழ்த்துக் கொள். இப்படிக்கு, உன் பிராணசகி லலிதா. மேற்கண்ட கடிதத்தைச் சீதா படித்துவிட்டுக் கடிகாரத்தைப் பார்த்தாள் இரவு மணி 8.30 ஆகியிருந்தது. இன்னும் அவர் ஏன் வரவில்லை? தானும் குழந்தையும் வீட்டில் தனியாக இருக்கிற நாளாகப் பார்த்துத்தானா அவரும் வழக்கத்தைவிட நேரம் கழித்து வீட்டுக்கு வரவேண்டும்? ஆம்; அன்று சீதாவும் குழந்தையும் தன்னந்தனியாக அந்தப் புதுடில்லி வீட்டில் இருந்தார்கள். இதன் காரணம் என்னவென்பதை அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

பதினேழாம் அத்தியாயம்
"லலிதா! பயமாயிருக்கிறது....!"

,dd>ஜூன் மாத ஆரம்பத்தில் புதுடில்லியில் வெப்பநிலை 110 டிகிரிக்கு வந்திருந்தது. பகலில் வெளியில் கிளம்பியவர்கள் சுண்ணாம்புக் காளவாயில் தங்களைப் போட்டு விட்டதுபோல் தவித்தார்கள். இரவில் வீட்டில் இருந்தவர்கள் செங்கல் சூளையில் போட்டவர்களைப்போல் வெந்தார்கள். பகலிலும் சரி, இரவிலும் சரி, காற்று அடித்தால் நெருப்பாக அடித்தது. எந்தப் பொருளைத் தொட்டாலும் தணலைப்போல் சுட்டது. விளாமிச்ச வேர் தட்டிகளில் விடப்பட்ட ஜலம் கீழே சொட்டும்போது வெந்நீராக மாறிச் சொட்டியது!" புதுடில்லியில் வீற்றிருந்து இந்திய தேசத்தின் மீது செங்கோல் செலுத்தி வந்த வைஸ்ராய்ப் பிரபுவும், அதிகார வர்க்கக் கணங்களில் பெரும்பாலோரும் மூளைக் கொதிப்புக்கு அஞ்சிச் சிம்லா மலையுச்சிக்குப் போய்விட்டார்கள். சௌந்தரராகவனும் சீதாவுங்கூடச் சிம்லாவுக்குப் போவதாக இருந்தது. காமாட்சியம்மாள் தனக்கு மலைவாசம் ஒத்துவராது என்று சொல்லிக் கொண்டி ருந்தாள். இந்தச் சமயத்தில் ஊரிலிருந்து அவளுடைய தமையன் குமாரிக்குக் கலியாணம் என்று கடிதம் வந்தது. ஊருக்குப் போய் ஒரு மாதத்துக்குள் வருவதாகச் சொல்லி விட்டுக் காமாட்சி அம்மாள் போய் விட்டாள். ஆனால் எதிர்பாராத ஏதோ முக்கியமான வேலை வந்து விட்டபடியால் ராகவன் அந்த வருஷம் சிம்லாவுக்குப் போக முடியவில்லை. "நீ மட்டும் குழந்தையை அழைத்துக் கொண்டு போய் வருகிறாயா? எத்தனையோ ஸ்திரீகள் தனியாகப் போகிறார்கள்; பயம் ஒன்றுமில்லை" என்று ராகவன் சொன்னான். "அதெல்லாம் முடியாது! நீங்கள் வராமல் எனக்கு மட்டும் தனியாக மலைவாசம் என்ன வந்தது? போக மாட்டேன்!" என்று சீதா கண்டிப்பாகச் சொல்லிவிட்டாள்.

,dd>ராகவனும் சீதாவும் மலைவாசம் வேண்டாமென்று டில்லியில் இருந்துவிடத் தயாராயிருந்தாலும், அவர்கள் வீட்டு வேலைக்காரன் அப்படியிருக்கச் சம்மதிக்கவில்லை. அவன் நேபாள தேசத்திலிருந்து வந்தவன். "இந்த உஷ்ணத்தை என்னால் சகிக்க முடியாது!" என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தவன், ஒரு நாள் திடீரென்று சொல்லிக் கொள்ளாமலேயே நடையைக் கட்டிவிட்டான். வீட்டு வேலைக்காரிக்குக் கூட அன்றைக்கு என்னமோ பைத்தியம் பிடித்துவிட்டது. "மூன்று நாள் லீவு வேண்டும்" என்று எஜமானியைக் கேட்டாள். "முடியாது" என்று சீதா சொன்னாள். "அப்படியானால் உங்கள் வேலை வேண்டாம்!" என்று சொல்லிவிட்டுப் போய் விட்டாள். ஆகவேதான் சீதா குழந்தையுடன் அன்று மாலை வீட்டில் தனியாக இருந்தாள். எட்டு மணி வரையில் வஸந்தி, "அப்பா எப்ப வதுவா?" என்று கேட்டுக் கொண்டிருந்து விட்டுத் தூங்கிப் போய் விட்டாள். குழந்தை தூங்கிய பிறகு சீதா தனிமையை அதிகமாக உணரத் தொடங்கினாள். அன்றைக்கு ராகவன் ஆபீசுக்குக் கிளம்பியபோது, "இன்றைக்கு எப்படியாவது சூரியா இருக்குமிடத்தைக் கண்டுபிடித்து அவனை அழைத்துக்கொண்டு வந்து சேருகிறேன்!" என்று சொல்லிவிட்டுப் போனான். அதனாலேதான் இன்னும் வரவில்லையோ என்னமோ? சூரியாவைத் தேடிக் கொண்டிருக்கிறாரோ, என்னமோ? சூரியா மட்டும் இன்றைக்கு வரட்டும்; அவனுக்குச் சொல்லிக் கொடுக்கிறேன்! லலிதாவுக்கு என்னவெல்லாம் எழுதியிருக்கிறான்? ரஜினிபூர் ஏரி சம்பவத்தைப் பற்றி இவன் எதற்காக எழுத வேண்டும்? அப்படியே இவன் எழுதினாலும் அவள் வேறே தன் அகத்துக்காரரிடம் சொல்லியிருக்கிறாள்! அவர்கள் எல்லாரும் இவரைப் பற்றித்தான் என்ன நினைத்துக் கொள்ளுவார்கள்....

,dd>என்ன வேணுமானாலும் நினைத்துக் கொள்ளட்டும். அந்தப் பட்டிக்காட்டு ஜன்மங்கள் என்ன நினைத்துக் கொண்டால் இங்கே யாருக்கு என்ன? இருந்தாலும் லலிதாவுக்கு ஒரு கடிதம் எழுதி வைக்கலாம். பார்க்கப் போனால் அவளைத் தவிர நமக்குத்தான் யாரிருக்கிறார்கள்! தாரிணியின் சிநேகிதத்தைப் பற்றிப் பிரமாதமாக நினைத்தோமே? டில்லிக்கு வந்த பிறகு அவள் ஒரு தடவையாவது வந்து எட்டிக் கூடப் பார்க்கவில்லை. லலிதாவாயிருந்தால் இப்படியிருப்பாளா? எப்படியும் பழைய சிநேகிதத்துக்கு இணையாகாது. புது சிநேகிதமெல்லாம் ரயில் சிநேகிதம் மாதிரிதான். இந்த முடிவுக்கு வந்த சீதா லலிதாவுக்குப் பதில் எழுதத் தொடங்கினாள். "என் உயிருக்குயிரான லலிதா! உன்னுடைய விவரமான கடிதம் கிடைத்தது, ரொம்பவும் சந்தோஷம் அடைந்தேன். தேவபட்டிணத்தில் நடந்த குப்பைத்தொட்டி எலெக்ஷனைப் பற்றி எழுதியிருந்தது ரொம்ப வேடிக்கையாயிருந்தது. அதனால் உன்னுடைய சிநேகிதியை நீ இழந்துவிட்டதையும் கவனித்தேன். உனக்கு நன்றாக வேணும், லலிதா! நான் ஒருத்தி உன் பிராண சிநேகிதி இருக்கும்போது வேறொரு சிநேகிதம் நீ எவ்வாறு செய்து கொள்ளலாம்? ஆகையினால்தான் கடவுள் உன்னை இந்த விதமாகத் தண்டித்திருக்கிறார்.

,dd>ஆனால் நானும் இங்கே சில புதிய சிநேகிதங்கள் செய்து கொண்டிருக்கிறேன் என்பதை உனக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். ரஜினிபுரத்துத் திவான் குமாரிகளைப் பற்றி முன் கடிதத்தில் எழுதியிருக்கிறேன் அல்லவா? அவர்கள் மூன்று வாரத்துக்கு முன்னால் இங்கே வந்திருந்தார்கள். எங்கள் வீட்டுக்கும் வந்தார்கள். எல்லோருமாக வைஸ்ராய் அரண்மனையில் நடந்த 'கார்டன் பார்ட்டி'க்குப் போயிருந்தோம். அம்மம்மா! அதைப்பற்றி நான் என்னவென்று சொல்வது? அரபிக் கதைகளில் நாம் படித்திருக்கும் அற்புதக் காட்சிகளையும் சினிமாக்களில் பார்த்திருக்கும் அதிசயக் காட்சிகளையும் மிஞ்சிவிட்டது. வைஸ்ராய் தோட்டத்தின் அழகைச் சொல்வேனா? அங்கேயிருந்த புஷ்பச் செடிகளையும் அலங்கார விருட்சங்களையும் வர்ணிப்பேனா? மரங்களுக்குள்ளேயும் செடிக்களுக் குள்ளேயும் மறைத்துக் கண் கூசாதபடி விளக்குப் போட்டிருந்த அதிசயத்தைச் சொல்வேனா? அங்கே வந்திருந்த சீமான்களையும் சீமாட்டிகளையும் அவர்களுடைய அலங்கார உடைகளையும் ஆபரணங்களையும் வர்ணிப்பேனா? லலிதா! வெள்ளைக்கார ஸ்திரீகள் பளபளவென்று ஜொலித்த கறுப்பு உடைகளை அணிந்து வந்திருந்தார்கள். நம்முடைய நாட்டு ஸ்திரீகள் பலர் நம்முடைய நாட்டு வழக்கப்படி பல வர்ணச் சேலைகளை உடுத்திக்கொண்டு வந்திருந்தார்கள். ஒவ்வொரு புடவையும் ஒவ்வொரு மோஸ்தர். அவர்கள் அணிந்து கொண்டிருந்த ஆபரணங்களும் அப்படியே, எல்லாம் ஒரே ஜொலிப்புத்தான் எனக்குத் திக்பிரமை யாயிருந்தது. ஆனால் திவானுடைய பெண்கள் பாமாவும் தாமாவும் இந்த மாதிரி 'பார்ட்டி'களுக்குப் பல தடவை போய்ப் பழக்கப்பட்டவர்களாதலால் அவர்களுக்குச் சகஜமாயிருந்தது. அஙகே வந்திருந்தவர்களில் அநேகம்பேரை அவர்களுக்குத் தெரிந்திருந்தது.

,dd>என்னைப் பலருக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்கள். வெள்ளைக்காரர்களுக்கு நம்மைப் புதிதாக அறிமுகப்படுத்தியதும் அவர்கள் உடனே, 'ஹவ் டு யூ டு' என்று கேட்கும் அழகு ஒன்றே போதும்! லலிதா, வெள்ளைக்காரர்களைப் பற்றி அவர்கள் அப்படி, இப்படி என்று ஓயாமல் தூஷித்துக் கொண்டிருப்பதனால் என்ன பிரயோசனம்? அவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது எவ்வளவோ இருக்கிறது. முக்கியமாக, ஒருவருக்கொருவர் மரியாதையாக எப்படி நடந்து கொள்வது என்பதை வெள்ளைக் காரர்களிடமிருந்து தான் நாம் கற்றுக்கொள்ள வேண்டும். தேவப்பட்டணம் தேர்தலைப் பற்றி நீ எழுதியிருந்தாயே? இங்கிலீஷ்காரர்களின் தேசத்திலுந்தான் தேர்தல் நடக்கிறது. தேர்தல் முடிந்துவிட்டால், ஜயித்தவர்களைத் தோற்றவர்கள் தான் முதல் முதலில் பாராட்டுவார்களாம். நம்முடைய ஊரில் தேர்தலில் எதிர்க் கட்சியில் இருந்து விட்டால் அப்புறம் ஜன்ம சத்துருக்களைப் போல் நடந்து கொள்கிறார்கள் என்ன மூடத்தனம்! நவநாகரிகத்தின் அலங்காரங்களைப் பற்றிக் குறை சொல்லி உனக்கு முன்னே எழுதியிருந்தேன் அல்லவா? அந்த விஷயத்தில் கூட என்னுடைய அபிப்பிராயத்தை மாற்றிக் கொண்டிருக்கிறேன். வைஸ்ராய் மாளிகையில் நடந்த பார்ட்டியில் பார்த்தபோதுதான், 'லிப் - ஸ்டிக்' போட்டுக் கொள்வதிலும் ஒரு அழகு இருக்கிறது என்று எனக்குத் தெரிந்தது. இவர் கூட அடிக்கடி 'ரோமாபுரியில் இருக்கும் போது ரோமர்கள் செய்வது போலச் செய்ய வேண்டும்' என்ற இங்கிலீஷ் பழமொழியை எடுத்துச் சொல்வார். நானும் புதுடில்லியில் இருக்கும்போது புதுடில்லிக்காரர்களைப் போலத் தான் நடந்து கொள்ளவேண்டும் என்று தீர்மானித்துவிட்டேன். நம்முடைய பட்டிக்காட்டு வழக்கந்தான் சரியான வழக்கம் என்று சொல்லிக் கொண்டிருந்தால் யார் கேட்பார்கள்? நீ தான் சொல்லேன்! நம்முடைய பாட்டிகள் முகத்தில் ஒரு வீசை மஞ்சளை அரைத்துப் பூசிக் கொண்டிருந்தார்கள்.

,dd>அப்படிச் செய்து கொள்ள நமக்கு இப்போதெல்லாம் பிடிக்கிறதா!.... சூரியா உனக்கு என்னவெல்லாமோ எழுதியிருக்கிறான் என்று தோன்றுகிறது அதையெல்லாம் நீ நம்ப வேண்டாம். சூரியா இங்கே வந்தால் அவனைச் சண்டை பிடிக்கலாம் என்று இருக்கிறேன். அவன் பார்க்காத விஷயத்தைப் பற்றி யாரோ சொன்னதை வைத்துக் கொண்டு எதற்காக எழுதுகிறான்? அவனுக்கு யார் சொல்லியிருக்கக்கூடும் என்றும் தெரியவில்லை. ஒருவேளை, தாரிணி என்கிறவளைப்பற்றி எழுதியிருந்தானே, அவள்தான் ஏதாவது சொன்னாளோ, என்னமோ? அப்புறம் யோசித்துப் பார்க்க பார்க்க, அவள் பேரில் எனக்குச் சந்தேகம் உதிக்கிறது. அவள் விஷயம் எல்லாமே மர்மமாயிருக்கிறது. டில்லிக்கு வந்த பிறகு ஒரு தடவை கூட அவள் என்னை வந்து பார்க்கவில்லை. அதற்குப் பதிலாகச் சூரியாவைப் பார்த்துப் பொய்யும் புளுகும் சொல்லி வைத்திருக்கிறாள். நான் ஏரித் தண்ணீரில் விழுந்து முழுகும்போது என் அகத்துக்காரர் பார்த்துக்கொண்டு சும்மா இருப்பாரா? அது சுத்தப்பொய். அந்த ஏரியில் எங்கேயும் கழுத்துக்கு மேலே ஆழம் இல்லை என்று படகுக்காரன் சொன்னானாம். அதனாலேதான் இவர் கவலையின்றிப் படகிலிருந்தபடியே என்னை எடுத்து விடலாம் என்று இருந்தார். அதற்குள்ளே இந்தத் தாரிணி என்கிறவள் தனக்கு நீந்தத் தெரிகிற பெருமையைக் காட்டுவதற்காகத் தண்ணீரில் குதித்து விட்டாள். என்ன இருந்தாலும் புருஷர்கள் செய்ய வேண்டிய காரியத்தை ஸ்திரீகள் செய்தால் அவ்வளவு நன்றாயில்லைத்தான்! இந்த மாதிரி முந்திரிக் கொட்டை ஜன்மங்களும் உலகத்தில் இருக்கின்றன என்ன செய்யலாம்.

,dd>நான் ஜலத்தில் மூழ்கி மூர்ச்சை போட்டு விட்டேன் என்பது உண்மைதான். ஆனால் அதற்குக் காரணம் அலை பாதி; பயம் பாதி. அலை மோதித் தலைக்கு மேலே போனபோது முழுகிப் போய்விட்டதாகவே எண்ணிக் கொண்டு விட்டேன். லலிதா இப்போதெல்லாம் எனக்கு அடிக்கடி பயமாயிருக்கிறதடி! காரணமில்லாமலே திடீர் திடீர் என்று பயம் உண்டாகிறது. ஏதாவது வியாதிதானோ என்னமோ தெரியவில்லை. ராஜம்பேட்டைப் பட்டிக்காட்டிலே யென்றால், 'சங்காதோஷம்' என்றும், 'பேய் பிசாசு' என்றும் ஏதாவது கதை கட்டி விடுவார்கள். பாட்டிமார்கள் 'பில்லி சூனியம்' என்றும், 'ஏவல் வினை' என்றும் கதை கட்டி விடுவார்கள். அதிலெல்லாம் எனக்கு நம்பிக்கை கிடையாது. ஆகையினால்தான் ஏதாவது வியாதியாயிருக்குமோ என்று பயப்படுகிறேன்.... இப்போது கூட பார்! திடீரென்று என் நெஞ்சு படபடவென்று அடித்துக் கொள்கிறது! கை நடுங்குகிறது... ஜன்னலுக்கு வெளியே செடிகளின் சலசலப்புச் சத்தம் கேட்டால் எதற்காக நான் பயப்பட வேண்டும்?... வீட்டில் ஒருவரும் இல்லாவிட்டால் தான் என்ன? அடுத்த பங்களாவில் ஜனங்கள் இருக்கிறார்கள். ஒரு கூப்பாடு போட்டால் உடனே வந்து விடுவார்கள்.... அப்படியிருக்க, என்னுடைய பயத்துக்குக் கொஞ்சம் கூடக் காரணமேயில்லை!..." இந்த இடத்தில் சீதா கடிதத்தை நிறுத்தினாள். பயத்துக்குக் காரணமே இல்லை என்பது உண்மைதானா? லவலேசமும் காற்று அடிக்கவில்லையே? காற்றே இல்லாதபோது செடிகள் எப்படிச் சலசலக்கும்? ஜன்னல் வழியாகப் பார்க்கக்கூடாது என்ற மனத்தின் உறுதியை மீறி அவளுடைய கண்கள் ஜன்னல் வழியாக வெளியே பார்த்தன.

,dd>பார்த்த நேரம் ஒரு வினாடிதான். உடனே கண்கள் இந்தப் பக்கம் திரும்பின வெளியே பார்த்த அந்த ஒரு வினாடி நேரத்தில் செடிகளின் மறைவில் ஒரு முக்காடு அணிந்த உருவம் போவது போலக் காணப்பட்டது. அது வெறும் பிரமையா? அல்லது உண்மையா? பிரமையோ, உண்மையோ, சீதாவின் நாக்கு பயத்தினால் தொண்டைக்குள்ளே போய்விட்டது போலத் தோன்றியது. கூச்சல் போட விரும்பினாள் ஆனால் சத்தம் வெளியில் வரவில்லை. கால்களும் கைகளும் நடுங்கின. பற்கள் ஒரு நிமிஷம் கிட்டிப் போயிருந்தன. அடுத்த நிமிஷம் கடகடவென்று அடித்துக் கொண்டன. பயப்பிராந்தி நீங்கிப் பழைய நிலைமை அடைவதற்கு ஐந்து நிமிஷம் ஆயிற்று. சீ இதென்ன பைத்தியக்காரத்தனம்! இது என்ன வீண் பயம்? இவ்விதம் எண்ணி லலிதாவுக்கு எழுதிய கடிதத்தைப் பூர்த்தி செய்யும் பொருட்டு மறுபடியும் எழுத முயன்றாள். ஆனால் என்ன எழுதுவதென்று தோன்றவில்லை. விஷயம் ஒன்றும் மனதிற்கு வரவில்லை. அதற்குப்பதிலாக, "வாசற் கதவையும் கொல்லைக் கதவையும் தாளிட்டோ மா?" என்ற எண்ணம் தோன்றியது. வேலைக்காரி கோபித்துக் கொண்டு போனவள் ஒருவேளை பங்களாவில் கொல்லைக் கதவை கூடத் தாள் போட்டிருக்கமாட்டாள். ஆனால் ஒரு நாளும் இல்லாத பயம் இன்றைக்கு மட்டும் என்ன வந்தது? பயம் ஒன்றும் இல்லாவிட்டாலும் வாசற் கதவையும் கொல்லைக் கதவையும் தாளிட்டு வைப்பதே நல்லது. அதனால் கெடுதல் ஒன்றும் இல்லையல்லவா?...

,dd>இவ்வாறு முடிவு செய்து சீதா தைரியமாக எழுந்து சென்று வாசற்பக்கம் வந்தாள். சந்தடியே இல்லாதிருந்த சாலையின் இரு புறமும் உற்றுப் பார்த்தாள். கார் ஒன்றும் வரக் காணோம். கதவைத் தாளிட்டுக் கொண்டு உள்ளே வந்தாள். கொல்லைக் கதவையும் பார்த்து, ஒருவேளை திறந்திருந்தால் தாளிட்டு விட வேண்டியதுதான். இப்படி நினைத்துக் கொல்லைப் பக்கம் அடிஎடுத்து வைத்தபோது ஆ! அது என்ன சத்தம்? துப்பாக்கிச் சத்தம் இல்லை; இடி இடிக்கும் சத்தம் இல்லை; புலி உறுமும் சத்தம் இல்லை; பாம்பு சீறும் சத்தமும் இல்லை; குழாயிலிருந்து ஜலம் விழும் சர்வ சாதாரணமான சத்தம் தான்! அந்தச் சத்தம் ஸ்நான அறையி லிருந்து வந்து கொண்டிருந்தது! மறுபடியும் சீதாவின் நாக்கு அவளுடைய தொண்டைக்குள்ளே மடங்கிச் சென்று அடைத்துக் கொண்டது. அவளுடைய கால்கள் மேலே ஒரு அடியும் எடுத்து வைக்க முடியாமல் நின்ற இடத்திலேயே வேரூன்றி நின்றன. தனக்குத் தெரியாமல் வீட்டுக்குள் யாரோ புகுந்து கொல்லைப்புறத்து ஸ்நானஅறைக்குள் சென்றிருக்க வேண்டும்; தண்ணீர்க் குழாயைத் திறந்து விட்டிருக்க வேண்டும் அது யாராயிருக்கும்?

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


பதினெட்டாம் அத்தியாயம்
"யார் அங்கே?"

சீதாவுக்குத் திடீரென்று தைரியம் பிறந்தது. சீ! குழாயிலிருந்து தண்ணீர் விழுந்தால் அதற்காகப் பயப்படுவதா? ஒருவேளை தானே குழாயைத் திறந்துவிட்டு மறதியாக மூடாமல் வந்திருக்கலாம். ஆபீஸ் அறையில் கடிதம் எழுதிக் கொண்டிருந்த போது அதைக் கவனியாமல் இருந்திருக்கலாம். இப்போது ஆபீஸ் அறையை விட்டு வெளியே வந்ததும் சத்தம் கேட்கிறது. இந்தச் சின்ன விஷயத் துக்கு இவ்வளவு பயமா? சீதா தன்னுடைய அசட்டுத்தனத்தை நினைத்துத் தானே புன்னகை புரிந்து கொண்டாள். குழாயை நிறுத்திவிட்டுக் கொல்லைப்புறக் கதவையும் பார்த்துவிட்டு வரலாம் என்று எண்ணிக்கொண்டு நடந்தாள். நாலடி வைப்பதற்குள்ளே குழாய்த் தண்ணீரின் ஓசை நின்றது. அப்போது திடீரென்று ஏற்பட்ட நிசப்தம் சீதாவை முன்னைக் காட்டிலும் பன்மடங்கு பயங்கரத்தில் ஆழ்த்திற்று. குழாயிலிருந்து தண்ணீர் விழும் ஓசை நின்றது என்றால், அதன் பொருள் என்ன? திறந்திருந்த குழாயை யாரோ திருகி மூடியிருக்க வேண்டும்! மூடியது யார்? ஜன்னல் வழியாகப் பார்த்தபோது செடிகளுக்குள்ளே புகுந்து சென்ற முக்காடிட்ட உருவம் சீதாவுக்கு நினைவு வந்தது. யாரோ கொல்லைப்புறமாக வந்து வீட்டுக்குள் நுழைந்து ஸ்தான அறைக்குள்ளே புகுந்திருக்க வேண்டும் அது யாராயிருக்கும்?

"யாராயிருந்தால்தான் என்ன? எதற்காக இப்படிப் பயப்படுகிறோம்?" என்று எண்ணிச் சீதா மறுபடியும் தன்னைத் தானே தைரியப்படுத்திக் கொண்டாள். ஒருவேளை வீட்டு வேலைக்காரிக்குப் புத்தி வந்து திரும்பி வந்தாலும் வந்திருக்கலாம். வாசல் வழியாக வர வெட்கப்பட்டுக் கொண்டு கொல்லைப்புறமாக வந்திருக்கலாம். ஆம்; அப்படித்தான் இருக்கவேண்டும்! இதற்காகவா இவ்வளவு பயப்பட்டோ ம்! நின்றிருந்த குழாய் மறுபடியும் தண்ணீரைக் கொட்ட ஆரம்பித்தது. சந்தேகத்தையும் கலக்கத்தையும் அதற்கு மேல் சீதாவினால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. யாராயிருந்தாலும் சரி போய்ப் பார்த்தே தீருவது என உறுதி கொண்டாள். தடுமாறிய கால்களைப் பலவந்தமாக இழுத்துக்கொண்டு ஸ்நான அறைக்குப் பக்கமாக வந்து சேர்ந்தாள்; கதவு சாத்தியிருந்தது. ஆனால் உட்புறம் தாளிடவில்லை என்று தெரிந்தது. நடுங்கிய கையினால் கதவை இலேசாகத் தட்டினாள். உள்ளே குழாய்ச் சத்தம் மறுபடியும் நின்றது. அந்த நிசப்தத்தில் சீதா, "யார் அங்கே?" என்று கேட்டாள், கேட்டவள் சீதா தான்; ஆனால் அவளுக்கே அந்தக் குரல் தன்னுடைய தாகத் தெரியவில்லை! ஸ்நான அறைக்கு உள்ளே காலடிச் சத்தம் கேட்டது. ஒவ்வொரு தடவை கேட்ட காலடி சத்தத்துக்கும் ஒன்பது தடவை சீதாவின் நெஞ்சு அடித்துக்கொண்டது.

ஒன்று, இரண்டு, மூன்று, நாலு, ஐந்து,; கதவு உட்பக்கமிருந்து திறந்து கொண்டது. திறந்த வாசற்படியருகில் ஒரு உருவம் நின்றது! அது தன் கையில் ஒரு கத்தி வைத்துக் கொண்டிருந்தது. இது என்ன பேயா, பிசாசா? அல்லது மனித ஜன்மந்தானா? இதன் முகத்தில் உள்ளவை கண்களா? அல்லது ஜொலிக்கும் கொள்ளிகளா? அல்லது சிகப்பு வர்ண எலெக்ட்ரிக் பல்புகளா? இந்த உருவத்தை எங்கேயோ பார்த்திருக்கிறோமே? எங்கே எங்கே? எப்போது? ஐயோ! இது என்ன? தலையை ஏன் இப்படிச் சுற்றுகிறது. ஒன்றும் புரியவில்லையே! மூளை குழம்புகிறது என்பது இது தானோ? இங்கே வந்து நாம் நின்று எத்தனை நேரம் ஆயிற்று? இந்த உருவத்தைப் பார்க்கத் தொடங்கி எத்தனை நேரம் ஆயிற்று? ஒரு வருஷம் இருக்குமோ? ஆயிரம் வருஷம் இருக்குமோ? இந்த உருவம் ஏன் இப்படியே நின்று கொண்டிருக்கிறது? ஏன் தன்னுடைய கொள்ளிக் கண்களால் நம்மை உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறது? ஐயோ! மயக்கமாய் வருகிறதே! இல்லை; மயக்கம் வரவில்லை அறிவு தெளிவாய்த்தானிருக்கிறது. கண்ணும் நன்றாய்த் தெரிகிறது. அதோ அந்த உருவம் புன்னகை புரிகிறதே! பேய் பிசாசு புன்னகை புரியுமா? அதோ வாயைத் திறந்து பேசுகிறதே! "சீதா! நான் யார் என்று தெரிகிறதா? ஞாபகம் வருகிறதா?" இந்த வார்த்தைகள் காதில் விழுந்ததும் சீதாவுக்கு எல்லாம் ஞாபகம் வந்துவிட்டது, சீ! இவள் பேயுமில்லை; பிசாசுமில்லை பம்பாயில் தன் தாயார் படுத்த படுக்கையாயிருந்த சமயம் மர்மமாக வந்து ரத்தின மாலையும் இரண்டாயிரம் ரூபாயும் கொடுத்துவிட்டுப் போன ஸ்திரீதான் இவள்! மனப்பிராந்தியினால் எப்படி யெல்லாமோ தோன்றிவிட்டது.

இவளை மறுபடி எங்கோ பார்த்தோமே? அது எங்கே?... இதோ ஞாபகம் வருகிறது இரண்டு மாதத்துக்கு முன்னால் இந்தச் சாலை திரும்பும் முடுக்கில் மரத்தின் பின்னால் கையில் கத்தியுடன் இவள் நின்றதைப் பார்த்தோம். யாரிடமோ இவளைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோமே? ஆம்; தாரிணியிடம் பேசிக் கொண்டிருந்தோம். தாரிணி இவளுடைய வளர்ப்பு மகள் இவள் பெயர் ரஸியாபேகம். "சீதா! ஏன் இப்படி விழித்துக் கொண்டு நிற்கிறாய்? என்னைத் தெரிகிறதா, இல்லையா?" சீதா மிக முயன்று வாயைத் திறந்து இரகசியம் பேசும் குரலில், "தெரிகிறது!" என்றாள். "தெரிகிறது! நான் யார்?" சீதா சிறிது யோசித்துத் தன்னுடைய கழுத்தில் அணிந்திருந்த இரத்தின மாலையைத் தொட்டு, "இதைக் கொடுத்தவள்!" என்றாள். "நீ நல்ல பெண்; ஞாபகம் வைத்துக் கொண்டிருக்கிறாய். வீட்டில் நீ மட்டும் தனியே இருக்கிறாயா? வேறு யாரும் இல்லையா?" என்று அந்த ஸ்திரீ கேட்டாள். இந்தக் கேள்வி சீதாவின் காதில் விழவில்லை. ஏனெனில் அவளுடைய கண்ணும் கவனமும் அதற்குள் வேறொரு பொருளிடத்தில் சென்று விட்டன. அந்த ஸ்திரீயின் இடுப்பிலிருந்து தொங்கிய கைக்குட்டைதான் அந்தப் பொருள். அந்த வெள்ளைக் கைக்குட்டையில் ஒரு பாதி செக்கச் செவேலென்று இருந்தது. அதைச் சீதா பார்த்து மிரள விழித்துக் கொண்டே, "ஐயோ! இரத்தம், இரத்தம்!" என்று அலறினாள். திடீரென்று அவளுக்கு எப்படியோ விம்மலும் அழுகையும் கலந்து வந்தன. ரஸியாபேகம் இரண்டு அடி எடுத்து முன்னால் வைத்துச் சீதாவை நெருங்கி வந்தாள். அவளுடைய ஒரு தோளைப் பிடித்து "இதோ பார், சீதா! நீ சமர்த்தாயிருப்பாய் என்று நினைத்தேன். எல்லாப் பெண்களையும் போல் மூடத்தனமாய்த் தானிருக்கிறாய். நீ அழுது கூச்சல் போட்டு, இப்படி ஏதாவது பண்ணினாயோ, என்ன செய்வேன் தெரியுமா?

சற்று முன்னால் சாலையில் ஒரு பைத்தியம் பிடித்த நாயை இந்தக் கத்தியினால் குத்திக் கொன்றேன். அது மாதிரி உன்னையும் கொன்றுவிடுவேன்!" என்றாள். சீதாவின் விம்மல் உடனே நின்றது இன்னமும் அந்தக் கைக்குட்டையைப் பார்த்துக் கொண்டு, "அது நாயின் இரத்தமா?" என்றாள். "ஆமாம்; உன்னை இது ரொம்பப் பயப்படுத்துகிறது போலிருக்கிறது! கொஞ்சம் இரு! குழாயில் அலம்பிக் கொண்டு வருகிறேன்." இவ்விதம் சொல்லிவிட்டு அந்த ஸ்திரீ குழாயடிக்குப் போய்த் தண்ணீரைத் திறந்துவிட்டுக் கைக்குட்டையை நனைத்துக் கசக்கினாள் ஆனால் கறை போகிற வழியாயில்லை. "இதை நெருப்பிலே போட்டுக் கொளுத்த வேண்டியதுதான்!" என்று சொல்லிக் கீழே எறிந்துவிட்டுத் திரும்பி வந்தாள். சீதாவின் மனது இதற்குள் வேலை செய்து கொண்டே இருந்தது. இவள் நாயைக் கொன்றதாகச் சொன்னது உண்மைதானா? நாயைக் கொன்றிருந்தால், எதற்காகக் கொல்லைப்புறமாக வந்தாள்? நாம் இங்கே இருப்பது தெரிந்து வந்தாளா? தற்செயலாக வந்தாளா? திடீரென்று அவர் இப்போது வந்து விட்டால் என்ன செய்வது?...அதற்குள் இவளை எப்படியாவது நல்ல வார்த்தைச் சொல்லிப் போகச் சொல்லிவிட வேண்டும்! இல்லாவிட்டால் என்ன ஆகுமோ? கடவுளே! எதற்காக இந்த வீட்டுக்கு வந்து சேர்ந்தாள்? வேறு எங்கேயாவது போயிருக்கக் கூடாதா? அதற்குள் அந்த ஸ்திரீ சீதாவை நெருங்கி வந்து, "வீட்டில் நீ மட்டும் தனியாக இருக்கிறாயா? வேறு யாரும் இல்லையா?" என்று மறுபடியும் கேட்டாள். "இப்போது தனியாகத்தான் இருக்கிறேன் ஆனால் அவர் சீக்கிரத்தில் வந்துவிடுவார். சாயங்காலமே வந்திருக்க வேண்டும் எதனாலோ இன்று இன்னும் வரவில்லை." "ஊர்லே எந்தப் பெண் பிள்ளையைச் சுற்றிக்கொண்டு அலைகிறானோ? யார் கண்டது? அயோக்கியன்!"

இந்த வார்த்தைகள் சீதாவின் இருதயத்தை ஊசியால் குத்துவதுபோல தைத்தன. பயங்கரமான பல சந்தேகங்கள் உதித்தன. "என்ன சொல்லுகிறீர்கள்? உங்களுக்கு ஏதாவது தெரியுமா?" என்று நடுங்கிய குரலில் கேட்டாள். "அசடே! எனக்கு உன் புருஷனைப்பற்றி என்னமாய்த் தெரியும்? புருஷர்கள் எல்லோருமே அயோக்கியர்கள் என்று என் எண்ணம். அதனால் பொதுப்படையாகச் சொன்னேனே தவிர உன்னுடைய புருஷர்களைப் பற்றிக் குறிப்பாகச் சொல்லவில்லை. உன் அபிப்பிராயம் என்ன? உன் புருஷன் எப்படி?" "எப்படி என்றால் நான் என்னத்தைச் சொல்வது? மொத்தத்தில் நல்லவர்தான் ஆனால் கொஞ்சம் முன்கோபக்காரர். இந்த நிலையில் உங்களைப் பார்த்தால் ஏதாவது தொந்தரவாய் முடியலாம். அவர் வருவதற்குள் நீங்கள்..." என்று சீதா தயங்கினாள். "நீ சொல்வது எனக்குத் தெரிகிறது. உன் புருஷன் வருவதற்குள் நான் போய்விட்டால் நல்லது என்கிறாய். அப்படித்தானே? நல்ல புண்ணியவதி நீ! எனக்கு ஒருவேளை சாப்பாடு போடக்கூட உனக்கு மனதில்லை!" "ஐயோ! அப்படிச் சொல்லாதீர்கள்; என் கலியாணத்துக்கு நீங்கள் செய்த உதவியைப் பற்றி எத்தனையோ தடவை எண்ணிப்பார்த்துக்கொண்டி ருக்கிறேன். ஒருவேளை சாப்பாடுதானா பெரிது? அவர் வந்துவிட்டால் யார், இன்னார் என்று தெரிவிக்கும்படி நேருமே என்று யோசித்தேன் பேஷாகச் சாப்பிட்டு விட்டுப் போங்கள்."

"சீதா! எனக்குச் சாப்பாடு வேண்டாம். எத்தனையோ வருஷத்துக்குப் பிறகு இன்றைக்குத்தான் எனது மனது குளிர்ந்து வயிறும் நிறைந்திருக்கிறது. ஆனால் இன்று ராத்திரி நான் எங்கேயும் போக முடியாது. உடம்பு களைப்பாயிருக்கிறது, நன்றாகத் தூங்கிப் பல நாளாயிற்று. இன்று ராத்திரி இங்கே படுத்துத் தூங்கிவிட்டுத்தான் போக வேண்டும். யார், இன்னார் என்று உன் புருஷனுக்குச் சொல்ல வேண்டியதில்லை. நான் இருப்பதே தெரிய வேண்டியதில்லை. இந்த வீட்டு மாடியில் அறை இருக்கிறதா?" "அதுதானே இல்லை? இந்தப் புது டில்லியில் சர்க்கார் உத்தியோகஸ்தர்களுக்குக் கட்டிக் கொடுத்திருக்கும் வீடுகளெல்லாம் மாடியில்லாத வீடுகள்!" அந்த ஸ்திரீ சுற்று முற்றும் பார்த்தாள். ஸ்நான அறைக்கு எதிர்ப்புறம் இருந்த அறையைச் சுட்டிக்காட்டி, "அந்த அறையில் என்ன இருக்கிறது?" என்று கேட்டாள். "விறகு, கரி, தட்டுமுட்டுச் சாமான்கள்" என்றாள் சீதா. அறையை அந்த ஸ்திரீ திறந்து பார்த்துவிட்டு, "சரி இதில் நான் படுத்துக் கொள்கிறேன். ஒருவருக்கும் தெரிய வேண்டாம்; வெளிக் கதவை நீ பூட்டிக்கொண்டு விடு!" என்றாள். "இதில் எப்படிப் படுத்துக் கொள்வீர்கள்? காற்றே வராதே? சாமான்களைக் கன்னாபின்னாவென்று போட்டிருக்கிறதே!" "பாதகமில்லை, சீதா! இதைக் காட்டிலும் எவ்வளவோ கேவலமான இடங்களில் நான் இருந்திருக்கிறேன்."

இதைக் கேட்ட சீதாவின் மனம் இளகிற்று அந்த ஸ்திரீயின் வரலாறு எப்படியிருக்கும் என்று தான் கற்பனை செய்து கொண்டதெல்லாம் நினைவு வந்தது. வாழ்க்கையில் ரொம்பவும் கஷ்டங்களை அனுபவித்தவள் என்பதில் சந்தேகமில்லை. அந்தக் கஷ்டங்கள் அவளுக்கு ரஜினிபூர் ராஜாவினால் நேர்ந்திருக்க வேண்டும் என்பது நிச்சயம். ஆனால் அவை என்ன மாதிரிக் கஷ்டங்கள்? அவளிடமே கேட்டுத் தெரிந்து கொள்ள ஆசையுண்டாயிற்று. அதற்கு இப்போது அவகாசம் இல்லை. எந்த நிமிஷத்திலும் தன் கணவர் திரும்பி வந்து விடலாம். வந்தால் பைத்தியக் காரியைப்போல் தோன்றும் இவளைக் கட்டாயம் விரட்டி அடித்து விடுவார். "இதோ ஒரு ஜமக்காளமும் தலையணையுமாவது கொண்டு வந்து கொடுக்கிறேன்" என்று சொல்லிவிட்டுச் சீதா விடுவிடு என்று உள்ளே போனாள். ஜமக்காளமும் தலையணையும் எடுத்துக் கொண்டு வந்தாள். இத்தனை நேரமும் அவளுடைய உள் மனது "எதையோ மறந்துவிட்டோ ம் முக்கியமான விஷயம் அதை ஞாபகப்படுத்திக்கொள்ள வேண்டும்" என்று சொல்லிக் கொண்டேயிருந்தது. அது இப்போது நினைவு வந்தது. மறந்து போய் நினைவு வந்த விஷயம் தாரிணியின் கோரிக்கைதான்.

ஜமக்காளத்தையும் தலையணையையும் கொண்டு வந்து கொடுத்துவிட்டு, "நிச்சயமாகச் சாப்பாடு வேண்டாமா? பூரியும் சப்பாத்தியும் இங்கேயே கொண்டு வந்து கொடுக்கிறேனே; நீங்கள் சாவகாசமாகப் பசித்தபோது சாப்பிட்டுக் கொள்ளலாம்" என்றாள் சீதா. "வேண்டாம், வேண்டாம் இன்று என்ன கிழமை? செவ்வாய்க்கிழமைதானே?" "ஆமாம்". "செவ்வாய் இரவு நான் சாப்பிடும் வழக்கம் இல்லை அப்படி விரதம். இன்றைக்கு நிச்சயமாய்ச் சாப்பிடமாட்டேன். இனிமேல் நீ போய் உன் காரியத்தைப் பார். உன் புருஷன் தினம் காலையில் எத்தனை மணிக்கு எழுந்திருப்பான்?" "சாதாரணமாய் ஏழு மணிக்குத்தான்; நான் ஆறு மணிக்கே விழித்துக் கொண்டு விடுவேன்." "அப்படியானால் நீ எழுந்ததும் வந்து கதவைத் திறந்து விட்டுவிடு." "நான் வருவதற்காக நீங்கள் காத்திருக்க வேண்டியதில்லை. இந்த அறைக்கு இன்னொரு கதவு இருக்கிறது, அது கொல்லைப்புறம் திறக்கும். இராத்திரி தாள் போட்டுக்கொள்ளுங்கள். காலையில் இஷ்டமானபோது எழுந்து போகலாம்." "ரொம்ப நல்லதாய்ப் போயிற்று; உனக்கு எத்தனை குழந்தை?" "ஒரே ஒரு குழந்தைத்தான்! வயது மூன்று ஆகப்போகிறது. வசந்தி என்று பெயர்; இப்போதுதான் கால் மணிக்கு முன்னால் தூங்கினாள்."

"வசந்தி சௌக்கியமாயிருக்கட்டும்; புருஷர்களின் கொடுமைக்கு உள்ளாகாமல் இருக்கட்டும்." "நீங்கள் ரொம்பக் கஷ்டப்பட் டிருப்பீர்கள் போலிருக்கிறது." "அதைப்பற்றிச் சொல்ல இப்போது நேரமில்லை நீ போய் உன் காரியத்தைப் பார்!" "உங்களிடம் ஒரு விஷயம் கேட்கவேண்டும்." "சீக்கிரம் கேள்; ரொம்ப அலுப்பாயிருக்கிறது." "உங்கள் பெயர் என்ன?" "என் பெயர் எதுவாயிருந்தால் என்ன இப்போது?" "நீங்கள் சொல்லா விட்டால் எனக்குத் தெரியாதா?" "தெரிந்தால் சொல்லேன்." "ரஸியா பேகம்!" வியப்புடனும் கோபத்துடனும் அந்த ஸ்திரீ சீதாவைப் பார்த்து "உனக்கு யார் சொன்னது?" என்று கேட்டாள். "அதை அப்புறம் சொல்கிறேன் உங்கள் பெயர் ரஸியாபேகமா, இல்லையா?" என்றாள் சீதா. "உண்டு இல்லை, இரண்டும்; என்னுடைய பெயர் ரமாமணி. ஒரு காரியத்துக்காகச் சில காலம் ரஸியாபேகம் என்று மாறு பெயர் வைத்துக் கொண்டேன். அதை யாரோ உனக்குச் சொல்லியிருக்கிறார்கள். சொல்லியது யாராக இருக்கும்? ஒருவேளை அந்த அசட்டுப் பிராமணர்தானா?"

எந்த அசட்டுப் பிராமணரைக் குறிப்பிடுகிறாள் என்று சீதாவுக்குத் தெரியவில்லை. சட்டென்று, "வேறு யாரும் இல்லை உங்கள் குமாரி தாரிணிதான் சொன்னாள்" என்றாள். சீதா எதிர்பார்த்தது போலவே அவள் பதில் அந்த ஸ்திரீயைத் தூக்கிவாரிப் போட்டது. சற்று நேரம் சீதாவை உற்றுப் பார்த்துவிட்டு, "நிஜமாகவா? தாரிணியா சொன்னாள்?" என்று கேட்டாள். "ஆமாம்; தாரிணிதான்." "அவளை எங்கே பார்த்தாய்? எப்போது?" "கொஞ்ச நாளைக்கு முன்பு ஆக்ராவுக்கு போயிருந்தோம் அப்போது சந்தித்தோம்." "அப்புறம்?" "ஆக்ராவிலிருந்து ரஜினிபூருக்குச் சென்றோம்.." அந்த ஸ்திரீயின் உள்ளத்தில் ஏதேனும் கொந்தளிப்பு ஏற்பட்டிருந்தால், அதை அவள் முகம் சற்றும் காட்டவில்லை. மரத்தினால் செய்த முகம்போல் ஆகிவிட்டது. சீதா மேலும் சொன்னாள்; "ரஜினிபூரில் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தோம். தாரிணியை அவளுடைய தாய் தகப்பன் யார் என்று கேட்டேன். அப்போது தன்னை வளர்த்தவள் என்பதாக உங்களைப் பற்றிச் சொன்னாள். அவள் சொன்னதிலிருந்தும் எனக்குத் தெரிந்ததைக் கொண்டும் நீங்களாய்த்தானிருக்கும் என்று ஊகித்துக் கொண்டேன்." "நீயும் தாரிணியும் ரொம்ப சிநேகமாகிவிட்டீர்களா?" என்று ரமாமணி என்கிற ரஸியாபேகம் கேட்டாள்.

"சிநேகமாகாமல் எப்படியிருக்க முடியும்? படகிலிருந்து நான் ஏரியில் விழுந்து விட்டேன். தாரிணிதான் உடனே தண்ணீரில் குதித்து நீந்தி வந்து என்னைக் காப்பாற்றினாள்." ரஸியாபேகத்தின் முகத்தில் சிறிது மலர்ச்சி காணப்பட்டது. "என் மகளே மகள்!" என்று குதூகலமாகக் கூறினாள். "மகளிடம் இவ்வளவு பிரியம் வைத்திருக்கிறீர்களே? ஆனால் சந்தித்து வருஷக் கணக்கு ஆயிற்றாமே? உங்களைக் கண்டால் உடனே தனக்குத் தெரிவிக்கும்படி சொல்லியிருக்கிறாள்." "தாரிணி இப்போது எங்கே இருக்கிறாள் தெரியுமா?" "இந்த ஊரிலேதான் இருப்பதாகச் சொன்னாள், விலாசம் கூடத் தந்திருக்கிறாள். நாளைக் காலையில் சொல்லி அனுப்பட்டுமா? நீங்கள் இங்கேயே நாளைக்கும் இருந்து தாரிணியைப் பார்த்து விட்டுப் போகலாமே? என் அகத்துக்காரரிடம் எல்லா விவரங்களையும் சொல்லி விட்டால் போகிறது!" ரஸியாபேகம் ஜமக்காளத்தையும் தலையணையையும் கீழே போட்டுவிட்டு, "சீதா! எங்கே! என் கை மேலே உன் கையை வை!" என்று அதட்டும் குரலில் கூறினாள். சீதா அவ்விதமே செய்தாள்.

"நான் இன்று இரவு இங்கு வந்ததைப்பற்றி தாரிணியிடமாவது உன் புருஷனிடமாவது நீ சொல்லவே கூடாது. எந்தக் காரணத்தைக் கொண்டும் என்னைப்பற்றிப் பிரஸ்தாபிக்கவே கூடாது. அப்படி என் கையில் அடித்துச் சத்தியம் செய்து கொடு. இல்லாவிட்டால் பைத்தியம் பிடித்த நாயைக் கொன்றதுபோல் உன்னை இந்த நிமிஷமே கொன்று போட்டுவிடுவேன்" என்று கூறி ரஸியாபேகம் இடுப்பில் சொருகியிருந்த கத்தியை இடது கையினால் எடுத்துத் தூக்கிக் காட்டினாள். சற்று முன்னால் சிறிது அமைதியடைந்திருந்த அவளுடைய முகத்தில் மறுபடியும் கொலை வெறி கூத்தாடியது. சீதா மிரண்டு போய் அப்படியே சத்தியம் செய்து கொடுத்தாள். இந்த வெறி பிடித்த ஸ்திரீயிடம் எதற்காக இவ்வளவு பேச்சுக் கொடுத்தோம் என்று தோன்றியது. அந்தச் சமயத்தில் வாசலில் 'பாம்' 'பாம்' என்று மோட்டாரின் சத்தம் கேட்டது. அது அந்த வீட்டு மோட்டார்க் குழலின் சத்தந்தான். "அவர் வந்துவிட்டார்; நீங்கள் சீக்கிரம் அறைக்கு உள்ளே போங்கள்!" என்றாள் சீதா. "ஜாக்கிரதை! ஞாபக மறதியாகக் கூட என்னைப்பற்றிப் பேச்சு எடுக்காதே!" என்று சொல்லிக் கொண்டே ரஸியாபேகம் சாமான் அறைக்குள்ளே பிரவேசித்தாள். சீதா அறைக் கதவை இழுத்துப் பூட்டிவிட்டுப் பெருமூச்சு விட்டாள். பிறகு வாசற் கதவைத் திறக்க விரைந்து சென்றாள்.

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

பத்தொன்பதாம் அத்தியாயம்
"ஹலோ போலீஸ்!"

வாசற்கதவைத் திறந்ததும் சீதாவுக்கு மேலும் அதிசயமும் திகைப்பும் உண்டாகும் காட்சி தென்பட்டது. வாசலருகில் அவர்கள் வீட்டு கார் வந்து நின்றது. அதன் முன் சீட்டில் மூன்று பேர் உட்கார்ந்திருந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவராகக் கீழே இறங்கினார்கள். இறங்கியவர்கள் சௌந்தரராகவனும் தாரிணியும் சூரியாவும். இந்த மூன்று பேரும் முன் ஸீட்டில் நெருக்கியடித்துக் கொண்டு உட்கார்ந்து வந்திருக்கிறார்கள் என்னும் விஷயம் சீதாவின் மனத்திரையில் புகைப்படத்தைப் போல் பதிந்தது. உடனே, காரின் பின் பகுதிக்குச் சீதாவின் கவனம் சென்றது. அதில் ஏதோ ஒரு நீள வாட்டமான மூட்டை கிடந்தது அது மூட்டைதானா? அல்லது...? ஏற்கனவே கலக்கமடைந்திருந்த சீதாவின் உள்ளம் பதைபதைத்தது; உடம்பு நடுங்கிற்று. வந்தவர்களை வரவேற்க வேண்டும் என்கிற கடமை சீதாவுக்கு ஞாபகம் வந்தது. அவர்கள் வாசற்படியை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். அவர்களுடைய முகங்களை வீதி விளக்கின் மங்கிய வெளிச்சத்தில் சீதா பார்த்தாள். ஏன் இவர்கள் இப்படி இருக்கிறார்கள்? எதற்காக முகங்களை இப்படி வைத்துக் கொண்டிருக்கிறார்கள்? எதையோ பறிகொடுத்தவர்களைப் போல்.. இல்லை, இழவு வீட்டுக்கு வருகிறவர்களைப் போல் வருகிறார்களே! ஏன்? "கொஞ்சம் நகர்ந்து வழி விடு! ஏன் வாசற்படியில் நிற்கிறாய்?" என்று கேட்டுக் கொண்டே ராகவன் முதலில் வந்தான். அவனுடைய குரல் சீதாவுக்கு விசித்திரமாகத் தொனித்தது. அது வழக்கமான கோபக் குரல் இல்லை; அருவருப்பும் அவசரமும் கலந்த குரல். வரும்போதே எதற்காக எரிந்து விழுந்து கொண்டு வருகிறார்?

சீதா சற்று ஒதுங்கி நின்றாள்; அடுத்தாற்போல் தாரிணி வந்தாள், அவளிடம் ஏதாவது பேசி வரவேற்க வேண்டும் என்று சீதா நினைத்தாள். ஆனால் அவளுடைய முகத்தோற்றம் வரவேற்புச் சொல்வதற்கு உகந்ததாக இல்லை. மேலும் தாரிணி சம்பந்தமான இரண்டு எண்ணங்கள் சீதாவின் மனதில் அலை மோதிக் கொண்டு கிடந்தன. ஒன்று அவளுடைய தாயார் அல்லது வளர்ப்புத் தாயார் அந்த வீட்டின் பின்பக்கத்து அறையொன்றில் அப்போது இருக்கிறாள் என்பது. இரண்டாவது எண்ணம், காரின் முன் பகுதியில் ராகவனுக்கும் சூரியாவுக்கும் மத்தியில் வெட்கமில்லாமல் உட்கார்ந்து கொண்டு தாரிணி வந்தாள் என்பது. இத்தகைய மனோ நிலையில் தாரிணியை என்ன சொல்லி வரவேற்பது என்று சீதா யோசிப்பதற்குள் தாரிணி அவளைத் தாண்டி விரைவாக உள்ளே போய்விட்டாள். அப்புறம் சூரியா வந்தான் சீதாவுக்கு அவனிடம் பேசுவதில் தடங்கல் ஒன்றும் இருக்கவில்லை. "அம்மாஞ்சி! இது என்ன எல்லோரும் எங்கேயிருந்து வருகிறீர்கள்? எதற்காக இப்படி முகத்தைப் பயங்கரமாக வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? ஏதோ கொலை செய்துவிட்டு வருகிறவர்களைப் போல் வருகிறீர்களே?" என்றாள். கொலை என்ற வார்த்தையைக் கேட்டதும் சூரியா திடுக்கிட்டுச் சீதாவை ஏறிட்டுப் பார்த்தான். அடங்கிய குரலில், "ஒரு பயங்கரமான விஷயம், அத்தங்கா! முதலில் உள்ளே போவோம். பிறகு எல்லாம் சாவகாசமாகச் சொல்லுகிறேன்" என்றான்.

மறுபடியும், "நாங்கள்தான் இப்படி வந்திருக்கிறோம் என்றால் உன்னுடைய முகம் ஏன் இப்படியிருக்கிறது? உனக்கு உடம்பு ஒன்றுமில்லையே?" என்று கேட்டான். "எனக்கா? உடம்பு ஒன்றுமில்லை ஆனால் மனதுதான் சரியாயில்லை. இவர் என்னைத் தனியாக விட்டுவிட்டுப் போய் இத்தனை நேரம் கழித்துத் திரும்பி வந்தால் என்ன செய்கிறது? சூரியா! இத்தனை நாளாக நீ ஏன் இந்தப் பக்கமே எட்டிப் பார்க்கவில்லை...? இந்த மனுஷியை எங்கே கண்டுபிடித்தீர்கள்?" "தாரிணியைக் கேட்கிறாயா, சீதா! அவள் என்னைப் பார்ப்பதற்காக என் அறைக்கு வந்திருந்தாள். அந்தச் சமயம் ராகவனும் வந்தார், தாரிணி உன்னைப் பார்க்க வேண்டும் என்று சொன்னாள். மூன்று பேருமாகப் புறப்பட்டு வந்தோம்." "மூன்று பேரும் வந்த இலட்சணத்தைத்தான் பார்த்தேனே! இவளுக்கு, தான் பெண்ணாய் பிறந்தவள் என்பதே நினைவிராது போலிருக்கிறது?" என்றாள் சீதா. சூரியா வியப்புடன் சீதாவைப் பார்த்தான். "அத்தங்கா! ஒரு பயங்கரமான சம்பவம் நடந்திருக்கிறது. உள்ளே வா, சாவகாசமாகச் சொல்லுகிறேன்!" என்றான்.

சீதாவும் சூரியாவும் 'டிராயிங் ரூம்' என்று வழங்கிய வீட்டின் பிரதான அறைக்குச் சென்றபோது, அங்கே ராகவன் டெலிபோனுக்குப் பக்கத்தில் ரிஸீவரைக் கையில் எடுத்துக் கொண்டு நின்றான். தாரிணி ஒரு சோபாவில் உட்கார்ந்திருந்தாள். அவளுடன் ஏதாவது பேசலாம் என்று நினைப்பதற்குள், "சீதா! குழந்தை என்ன செய்கிறாள்? தூங்கிப் போய்விட்டாளா?" என்று ராகவன் பதட்டத்துடன் கேட்டான். இந்தச் சமயத்தில் ஆபீஸ் அறைக்குள்ளிருந்து, "அப்பா! அப்பா" என்று குழந்தையின் குரல் கேட்டது. "இத்தனை நேரம் தூங்கிக் கொண்டிருந்தாள். உங்கள் குரலைக் கேட்டு விழித்திருக்கிறாள். தூக்கத்திலே கூட அப்பா ஞாபகந்தான் குழந்தைக்கு!" என்றாள் சீதா. "சரி, சரி! உன் பெருமையை அப்புறம் அடித்துக்கொள்ளலாம். உடனே போய் அவளை மறுபடியும் தூங்கப் பண்ணு, அப்பா இதோ வந்து விடுவார் என்று சொல்லு. அவள் இப்போது இங்கே வரக்கூடாது தெரிகிறதா? போ, சீக்கிரம்!" ராகவனுடைய குரலிலிருந்தும் பதட்டத்திலிருந்தும் ஏதோ ரொம்ப முக்கியமான விஷயந்தான் என்று சீதா அறிந்தாள்; அவனுடைய சொற்படி ஆபீஸ் அறைக்குள் சென்றாள். "அப்பா வந்துத்தாரா, அம்மா!" என்று வஸந்தி கேட்டாள்.

"வந்துட்டார், வஸந்தி! உன் பக்கத்திலேதான் வந்து படுத்துக்கொள்வார் நீ தூங்கு!" என்று சீதா குழந்தையின் முதுகைத் தட்டினாள். "அப்பா கோவமா வந்திருக்காரா, அம்மா!" என்று குழந்தை கேட்டாள். அவ்வளவு மனக் குழப்பத்துக்கிடையிலும் வஸந்தியின் கேள்வி சீதாவுக்குச் சிரிப்பை உண்டாக்கிற்று. "அதெல்லாம் ஒன்றுமில்லை, வஸந்தி! இன்னும் யாரோ வந்திருக்கிறார்கள் அவர்களுடன் பேசிக் கொண்டிருக்கிறார். நீ பாட்டுக்கு நிம்மதியாகத் தூங்கு!" என்றாள். ஒரு நிமிஷத்துக்குள் குழந்தை தூங்கிப் போய்விட்டாள். சீதா திரும்ப முன் அறைக்கு வந்தாள். ஒருவேளை மூன்று பேரும் சாப்பிடாமல் வந்திருப்பார்களோ, என்னமோ, எல்லாருக்கும் எப்படி சாப்பாடு தயாரிப்பது? இந்தச் சமயம் பார்த்து வேலைக்காரன், வேலைக்காரி இரண்டு பேரும் போய் விட்டார்களே? என்று எண்ணமிட்டுக் கொண்டு வந்தாள். அப்போது ராகவன் டெலிபோனில் பேசிக் கொண்டிருந்தான். "ஹலோ! போலீஸ் ஸ்டேஷன்? அங்கே யார்? நான் பி.எல்.எஸ். ராகவன் பேசுகிறது. இவ்விடத்தில் ஒரு 'ஆக்ஸிடெண்ட்' இல்லை, கார் ஆக்ஸிடெண்ட் இல்லை ஒருவேளை கொலையாக இருக்கலாம் என்று.... ஆமாம், 'மர்டர்' என்று சந்தேகமாயிருக்கிறது... உடனே யாரையாவது அனுப்பவேணும்... தாங்க்ஸ்!" டிராயிங் ரூம் வாசற்படியில் நின்றபடி சீதா இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தாள்.

டெலிபோன் பேச்சு முடிந்ததும் அறைக்குள் வந்தாள். யாரும் அவளிடம் எதுவும் பேசுகிற வழியாகக் காணவில்லை. ஒருவரும் அவளுடைய முகத்தை ஏறிட்டுப் பார்க்கவும் இல்லை. கனவிலே நடக்கிறவளைப்போல் நடந்து போய்த் தாரிணியின் பக்கத்தில் உட்கார்ந்தாள். தாரிணியின் தாயார் அந்த வீட்டின் பின்கட்டில் அப்போது இருப்பது, அவள் கையில் கத்தியுடன் வந்தது, இரத்தம் தோய்ந்த கைக்குட்டையை அலம்பியது எல்லாம் அவளுக்கு நினைவு வந்தன. ஏதாவது பேசாவிட்டால் பைத்தியம் பிடித்துவிடும் போலத் தோன்றியது. "அக்கா! இது என்ன சமாசாரம்? எதற்காகப் போலீஸைக் கூப்பிடுகிறார்?" என்று சீதா கேட்டது கீச்சுக் குரலில் 'கிறீச்' என்று ஒலித்தது. அப்போதும் தாரிணி ஒன்றும் பதில் சொல்லவில்லை. அவள் பிரமை பிடித்தவள் போலக் காணப்பட்டாள். ராகவன் குறுக்கிட்டு, "சீதா! சற்று நேரம் வாயை மூடிக் கொண்டிரு! எல்லாம் தானே தெரியும். இந்தச் சமயம் 'ஹிஸ்டீரியா; வரவழைத்துக் கொள்ளாதே! அப்படி ஏதாவது ரகளை செய்தாயோ, நானே இன்றைக்கு ஒரு கொலை செய்தாலும் செய்து விடுவேன்!" என்று கூறினான், சீதா நடுநடுங்கினாள். ராகவன் சூரியாவைப் பார்த்து, "வா! சூரியா! நாம் வாசலில் போய் நிற்போம்! போலீஸ்காரர்கள் வந்துவிடுவார்கள்!" என்றான்.

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

இருபதாம் அத்தியாயம்
பாரம் நீங்கிற்று

புருஷர்கள் இருவரும் வெளியேறியவுடனே சீதா தாரிணியின் அருகில் வந்து, "அக்கா! இது என்ன! இவர் டெலிபோனில் என்னவெல்லாமோ பயங்கரமாகப் பேசினாரே? என்ன விஷயம்? எதற்குப் போலீஸைக் கூப்பிட்டார்?" என்று கேட்டாள். "ஆம் பயங்கரமான விஷயந்தான்!" என்றாள் தாரிணி. "என்ன பயங்கரமான விஷயம்? சீக்கிரம் சொல்லுங்களேன்!" "அதை என்னத்துக்குக் கேட்கிறாய், சீதா? நீ தெரிந்து கொள்ளாமலிருப்பதே நல்லது, உனக்கு தெரிந்து என்ன ஆகப்போகிறது!" "அவரைப் போலவே நீங்களும் பேசுகிறீர்களே? எனக்கு ஏன் தெரியக்கூடாது? உங்களுக்கெல்லாம் தெரிந்திருப்பது எனக்குத் தெரிந்தால் என்ன? நீங்கள் மறைக்கப் பார்ப்பதினாலேதான் எனக்கு மனக்கலக்கம் அதிகமாகிறது" என்றாள் சீதா. "நீ சொல்வது சரி உனக்குத் தெரிந்திருக்க வேண்டியதுதான். நான் சொல்லாவிடில் உனக்குத் தெரியாமலே இருந்துவிடுமா? ஆனால் அதைப்பற்றிச் சொல்வதற்கு எனக்கு அருவருப்பாயிருக்கிறது அதனால்தான் தயங்கினேன்." "அப்படியானால் வேண்டாம்! அவர் உள்ளே வரட்டும் அவரிடமே கேட்டுக் கொள்கிறேன்." "வேண்டாம் நானே சொல்லி விடுகிறேன். நாங்கள் மூன்று பேரும் வந்து கொண்டிருந்தோம். வழியில் உங்கள் வீட்டுக்கு வரும் இந்தச் சாலை பிரியும் முடுக்கில்..."

தாரிணி மறுபடியும் தயங்கினாள் அவள் உடம்பு வெடவெடவென்று நடுங்கிற்று. "அக்கா! நீங்கள் ரொம்ப தைரியசாலியாயிற்றே! ஏன் இப்படிப் பயப்படுகிறீர்கள்." "ஆம்! சீதா எனக்குப் பயமாய்த்தானிருக்கிறது. இதற்கு முன்னால் நான் இப்படிப் பயப்பட்ட தேயில்லை. பீஹார் பூகம்பத்தின்போது எவ்வளவோ சொல்ல முடியாத பயங்கரங்களையெல்லாம் பார்த்தேன். அப்போது கூட நான் பயப்படவில்லை. இன்றைக்கு... இதோ பார்! என் கை எப்படி நடுங்குகிறது?" அப்போதுதான் தாரிணியின் கைகளை உற்றுப் பார்த்த சீதா, "ஐயோ! இரத்தம் போலிருக்கிறதே!" என்று பீதி நிறைந்த குரலில் கூறினாள். "சத்தம் போடாதே!... ஆமாம்; இரத்தந்தான். பின்னே என்ன நினைத்தாய்? விரலில் 'க்யூடெக்ஸ்' பூசிக்கொண்டிருப்பதாக நினைத்தாயா? உனக்கு அந்த மாதிரி நாகரிகமெல்லாம் இப்போது பழக்கமாகி வருகிறதென்று கேள்விப்பட்டேன்..." "யார் சொன்னார்கள்." "யார் சொன்னால் என்ன? தாமாவும் பாமாவும் சொன்னார்கள். அதற்கு என்ன இப்போது! அவர்களையாவது உன்னையாவது நான் குறை சொல்லப் பாவதில்லை." "ரொம்ப வந்தனம் இன்றைக்கு நடந்ததைச் சொல்லுங்கள். மூன்று பேரும் காரில் வந்து கொண்டிருந்தீர்கள் அப்புறம்?" அப்புறம் நடந்ததைத் தாரிணி தட்டுத் தடுமாறிச் சொல்லி முடித்தாள் அதன் விவரமாவது:

மூன்று பேரும் காரில் வந்துகொண்டிருந்தார்கள். அந்த வீடு இருந்த சாலையின் திருப்பத்தில் ராகவன் திடீரென்று பிரேக் போட்டு வண்டியை நிறுத்தினான். தாரிணியும் சூரியாவும் ஒரே சமயத்தில் 'என்ன? என்ன?" என்று கேட்டார்கள். ராகவன் பதில் சொல்லாமல் வண்டியிலிருந்து இறங்கினான். மற்ற இருவரும் இறங்கினார்கள். சாலையில் வண்டியை வழிமறித்துக் கொண்டு ஏதோ கிடந்தது. கொஞ்சம் நெருங்கிப் போய்ப் பார்த்ததும் அது ஒரு மனிதனுடைய உடல் என்று தெரிய வந்தது. "யாரோ குடித்துவிட்டுச் சாலையில் விழுந்து கிடக்கிறான் சனியன் பிடித்தவன்!" என்றான் ராகவன். வண்டி மோதி அவனைத் தள்ளியிருக்கலாம் என்ற எண்ணம் தாரிணியின் மனதில் உதித்தது. பேச்சின் சுவாரஸ்யத்தில் சாலையில் குறுக்கே போனவனைக் கவனியாமல் ராகவன் காரை விட்டிருக்க வேண்டும் என்று அவள் நினைத்தாள். சூரியாவுக்கும் அதே சந்தேகம் தோன்றியது. "வண்டி மோதித் தள்ளிவிட்டதோ, என்னமோ?" என்று பயந்துகொண்டே சொன்னான் சூரியா. "நான்ஸென்ஸ், வண்டி மோதவும் இல்லை, ஒன்றுமில்லை" என்று ராகவன் கண்டிப்பாகக் கூறினான்.

மோதித் தள்ளியிராவிட்டாலும் ஒருவேளை படுத்திருந்தவன் மேல் ஏறியிருக்கலாமல்லவா? சமீபத்தில் போய்ப் பார்க்கலாம்" என்றான் சூரியா. "ஆமாம், பார்க்கத்தான் வேண்டும்" என்று தாரிணியும் சொன்னாள். "பேசாமல் வண்டியை ஒதுக்கி ஓட்டிக்கொண்டு போய் விடலாம் வண்டியில் ஏறுங்கள்!" என்றான் ராகவன். சூரியாவும் தாரிணியும் அதைக் கேட்காமல் விழுந்து கிடந்தவனின் கிட்டப் போய்ப் பார்த்தார்கள். உடுத்தியிருந்த உடுப்பிலிருந்து யாரோ பெரிய மனுஷன் என்று தோன்றியது. சூரியா மூக்கில் விரலை வைத்துப் பார்த்து விட்டு, "மூச்சு வருகிறது! உயிர் இருக்கிறது" என்றான். மோட்டாரின் முன் சக்கரம் அந்த மனிதனைத் தொட்டுக் கொண்டிருப்பதைத் தாரிணி கவனித்தாள். மோட்டார் மோதித்தான் அந்த மனுஷன் மூர்ச்சையடைந்து கிடக்கிறான் என்று உறுதியாக நம்பினான். "வண்டியில் ஏறுங்கள்; நாம் போகலாம்!" என்றான் ராகவன். தாரிணி, "நன்றாயிருக்கிறது! நடு ரோட்டில் ஒரு மனிதனை மோதித் தள்ளிவிட்டு நாம்பாட்டுக்குப் போய்விடுகிறதா? காரில் ஏற்றிக்கொண்டு உடனே ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போக வேண்டும்" என்றாள். சூரியாவும் அதை ஆமோதித்தான். "அப்படியானால் பரோபகாரிகளான நீங்களே தூக்கிக் காரின் பின் ஸீட்டில் போடுங்கள் என்னால் முடியாது" என்று ராகவன் சொன்னான்.

"பேஷாக நானே தூக்குகிறேன்" என்று சொல்லிவிட்டுத் தாரிணி தலைப்புறம் பிடித்துத் தூக்கினாள்; சூரியா இடுப்பைப் பிடித்துத் தூக்கினான். தூக்கும்போது தாரிணி அந்த மனிதனுடைய கழுத்தின் அடியில் ஒரு கையைக் கொடுத்தாள் அந்தக் கை ஈரமாயிற்று. தரையிலிருந்து தூக்கியதும், விழுந்து கிடந்தவனுடைய தலைக்குக் கீழே இரத்தம் குட்டையாகத் தேங்கியிருந்தது தெரிந்தது. அப்படியும் தாரிணியின் மன உறுதி குன்றவில்லை. கை நடுக்கத்தைச் சமாளித்துக்கொண்டாள். இரண்டு பேருமாகத் தூக்கிக் கொண்டு வந்து காரின் பின் ஸீட்டில் போட்டார்கள். தரையில் இரத்தம் தேங்கி நின்றதை ராகவன் பார்த்துவிட்டு, "இது என்ன ஆபத்து?" என்றான். "எல்லாம் நம்மால் வந்த ஆபத்துதானே? ஆஸ்பத்திரிக்கு வண்டியை விடுங்கள்" என்றாள் தாரிணி. "ரொம்ப சரி; சீக்கிரம் ஏறித்தொலையுங்கள்!" என்றான் ராகவன். இரண்டு பேரும் அவசரமாக முன் ஸீட்டில் ஏறிக் கொண்டார்கள். ராகவன் வண்டியை ஓட்டத் தொடங்கியதும், "நீங்கள் இரண்டு பேரும் சுத்த முட்டாள்கள். உங்களை நான் தேடி வந்ததே தப்பு" என்றான். "ஆமாம்; தப்புத்தான்! உங்களை யார் வரச்சொன்னது?" என்று தாரிணி கேட்டாள். "அதன் பலன் கை மேல் கிடைத்துவிட்டது. என்னைக் கொலைக் கேஸில் மாட்டி வைத்து விட்டீர்கள். இந்த வண்டி அந்த மனிதன் மீது படவேயில்லை. அப்படிப் பட்டிருந்தால் அந்த மாதிரி இரத்தம் தேங்கியிராது.

யாரோ அவனைக் குத்திப் போட்டுவிட்டுப் போயிருக்கிறார்கள். அனாவசியமாக இதில் என்னை மாட்டி வைத்து விட்டீர்கள். என்னை மாத்திரம் என்ன? உங்களைக் கூடத்தான்!" இப்படி ராகவன் சொன்னதைக் கேட்டதும் அதில் உண்மையிருக்க வேண்டும் என்று தாரிணிக்குத் தோன்றிவிட்டது. தானும் சூரியாவும் செய்தது பிசகுதானோ என்று ஐயம் உண்டாயிற்று. அப்போது சூரியா, "மாப்பிள்ளை? நீங்கள் சொல்வது உண்மையாயிருந்தால், நமக்கு என்ன பயம்? நம் பேரில் இந்தக் கொலைக் குற்றத்தைச் சாட்ட முடியாதல்லவா?" என்றான். "அது வேறே வேணுமா? கொலைக் கேஸில் சாட்சியாக இழுக்கப்படுவது போதாதா? பத்திரிகைகளிலே நம் பெயர்கள் அடிபடுவது போதாதா?" என்றான் ராகவன். "போனது போகட்டும்; இப்போது என்ன செய்யலாம்? அதைப்பற்றி யோசியுங்கள்?" என்று தாரிணி சமாதானமாகப் பேசினாள். "எனக்கு யோசிக்கும் சக்தியேயில்லை, நீங்கள்தானே யோசனை சொல்லுங்கள்! வண்டியை எங்கே விடட்டும்?" என்றான் ராகவன். "ஆஸ்பத்திரிக்கு நேரே போகலாம்; அல்லது போலீஸ் ஸ்டேஷனுக்குப் போகலாம்" என்றான் சூரியா. அதைத் தாரிணி ஆமோதித்தாள். "இரண்டு இடத்துக்கும் சேர்ந்தாற்போல் போக முடியாதல்லவா?

முதலில் எந்த இடத்துக்குப் போவது?" என்று ராகவன் கேட்டான். இதற்குப் பதில் சொல்ல அவர்களுக்குத் தெரியவில்லை. இரண்டு பேரும் மௌனம் சாதித்தார்கள். "எனக்குக் கை நடுங்குகிறது இனிமேல் வண்டி ஓட்டினால் எங்கேயாவது மரத்தில் மோதிவிடுவேன். நேரே வீட்டுக்கு வண்டியை விடுகிறேன். அங்கிருந்து டெலிபோனில் பேசிக் கொள்ளலாம்" என்றான் ராகவன். தாரிணிக்கு உடனே சீதாவின் நினைவு உண்டாயிற்று. இந்த விஷயத்தையெல்லாம் அவள் அறிந்தால் எத்தனை மனக் குழப்பம் அடைவாள்? ஏற்கெனவே அவளுக்குக் கொஞ்சம் 'ஹிஸ்டீரியா' உண்டு. இதனால் அதிகமாகிவிட்டால் என்ன செய்கிறது? ஆகையால் ராகவனிடம் வீட்டுக்கு ஓட்ட வேண்டாம் என்று வேண்டிக்கொள்ள நினைத்தாள். அதற்குள்ளே கார் நின்றுவிட்டது. அதாவது ராகவன் வீட்டு வாசலுக்கு வண்டி வந்தாகிவிட்டது. மேற்கூறிய விவரத்தை அடங்காத ஆவலுடனும் கவலையுடனும் பயங்கர உணர்ச்சியுடனும் கேட்டுக் கொண்டிருந்த சீதா, "அக்கா! இது என்ன விபரீதம்? இவருக்கு ஏதாவது அபாயம் நேருமோ? ஒருவேளை போலீஸார் இவரை அரெஸ்டு செய்து விடுவார்களோ?" என்று நடுங்கிக் கொண்டு கேட்டாள். "பயப்படாதே, சீதா! அப்படி ஒன்றும் நேர்ந்து விடாது. இந்தப் புது டில்லி போலீஸ்காரர்கள் கூட அவ்வளவு மூடத்தனமாக நடந்து கொள்ள மாட்டார்கள்! மேலும், உன் கணவர் பெரிய உத்தியோகஸ்தர்; செல்வாக்கு அதிகம் உள்ளவர். அவரை யாரும் கைது செய்ய முடியாது. ஒருவேளை வாக்குமூலம் கொடுப்பதற்காகப் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் வரும்படி நேரிடலாம் மற்றபடி ஒன்றும் நேராது" என்றாள் தாரிணி.

இதைக் கேட்டதும் சீதாவின் மனதிலிருந்த பெரும் பாரம் நீங்கிற்று. வேறு விஷயங்களைப்பற்றிச் சிந்திக்க முடிந்தது. அந்த நேரத்தில் அதே வீட்டுக் கொல்லைப்புறத்துத் தட்டுமுட்டு சாமான் அறையில் தாரிணியின் தாயார் இருந்தாள் என்பது பளிச்சென்று நினைவுக்கு வந்தது. ஆனால் அதைப் பற்றி தாரிணியிடம் சொல்ல முடியாதபடி தன் வாயைக் கட்டிப் போட்டி ருக்கிறாளே அந்த ரஸியாபேகம்? அவளுக்குக் கொடுத்த வாக்குறுதியை மீறலாமா! ரஸியாபேகம் இரத்தம் தோய்ந்த கத்தியைக் குழாயில் அலம்பிய காட்சி சீதாவின் கண் முன்னால் வந்தது. அவளுக்கும் இப்போது தாரிணி விவரித்த சம்பவத்திற்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டா? ஏன் இருக்கக்கூடாது? அப்படியானால் தான் இருக்க இடங்கொடுத்து மறைத்து வைத்திருப்பது ஒரு கொலைகாரியையா? தான் செய்தது சரியா? இது தன் கணவருக்குத் தெரிந்தால் என்ன சொல்வார்? சீதாவுக்குச் சட்டென்று காரின் பின் ஸீட்டில் தான் பார்த்த மூட்டை போன்ற வஸ்து ஞாபகம் வந்தது. "அக்கா! காரில் மூட்டை மாதிரி ஒன்று கிடந்ததே? அது...? என்று தயங்கினாள். "ஆமாம், சீதா! அது மூட்டையில்லை; சாலையிலிருந்து நாங்கள் எடுத்துப் போட்ட மனிதன்! ஆனால் அதைப் பற்றியே ஏன் பேசிக் கொண்டிருக்க வேண்டும்? வேறு விஷயம் ஏதாவது பேசலாம்!" என்றாள் தாரிணி.

மூன்று பேரும் காரின் முன்ஸீட்டில் உட்கார்ந்து வந்த காரணம் இப்போது சீதாவுக்குப் புலப்பட்டது. அதிலிருந்து வேறு விஷயத்துக்கு மனம் பாய்ந்தது. "அக்கா! நீங்கள் மூன்று பேரும் இன்றைக்கு எப்படி ஒன்றாய்ச் சேர்ந்தீர்கள்?" என்று கேட்டாள். "சூரியாவின் அறைக்கு நான் போயிருந்தேன். சூரியாவைத் தேடிக்கொண்டு உன் கணவரும் வந்து சேர்ந்தார். எல்லோருமாக உன்னைப் பார்ப்பதற்காகப் புறப்பட்டு வந்தோம். வருகிற வழியிலேதான் இப்படி ஆயிற்று" என்றாள் தாரிணி. "சூரியாவைப் பார்க்கப் பாயிருந் தீர்களா? என்னைப் பார்க்க ஒருதடவை கூட வரவில்லையே? என்னை அடியோடு மறந்து விட்டீர்களா?" "மறக்கவில்லை, சீதா! வரலாம் என்றுதான் இருந்தேன். ஆனால் உன் கணவர் என்ன எண்ணிக் கொள்வாரோ என்று பயமாயிருந்தது; சூரியாவுக்கும் அதுதான் தயக்கம்." இதைக் கேட்டபோது சீதாவுக்கு எரிச்சலாயிருந்தது. இவர்கள் இரண்டு பேரும் இப்போது ஒன்றாய்ப் போய் விட்டார்கள் போலிருக்கிறது; நாம்தான் தனியாகப் போய் விட்டோ ம்! சூரியாவுக்கு நம்மைக் காட்டிலும் இவளிடத்தில் என்ன சிநேகம் வந்தது?

இப்படி நினைத்துச் சீதா, "இவரிடம் எதற்காக நீங்கள் பயப்பட வேண்டும்? உங்களைக் கடித்து விழுங்கி விடுவாரா? இவர்தான் எப்போதும் உங்கள் தியானமாயிருக்கிறாரே? சூரியாவுக்கு இவ்வளவு வஞ்சனை உண்டு என்று இதுவரையில் எனக்குத் தெரியாது!" என்றாள். தாரிணி சீதாவை சிறிது உற்றுப் பார்த்துவிட்டு, "ஏன் இப்படிச் சொல்கிறாய்? உன் அம்மாஞ்சியைப் போல் சூதுவாது இல்லாத சாதுவை நான் பார்த்ததேயில்லை!" என்றாள். "ஆமாம்! சூரியா சாதுவாகத்தான் இருந்தான். கொஞ்ச நாளாகச் சூதுவாது வந்திருக்கிறது. ஆக்ராவிலிருந்து திரும்பியதற்குப் பிறகு நீங்கள் இன்றைக்குத்தான் அவனை முதல் தடவை பார்த்தீர்களா?" "இல்லை, சீதா! திரும்பி வந்தவுடனேயே சூரியாவை நான் போய்ப் பார்த்தேன். என்னை நெற்றியில் காயப்படுத்தியது பற்றி அவர் வருத்தப்பட்டுக் கடிதம் எழுதியிருந்தார் அல்லவா? அதற்குச் சமாதானம் சொல்லலாம் என்று போனேன்" என்றாள் தாரிணி. "அப்படித்தான் நினைத்தேன்" என்றாள் சீதா. "எப்படி நினைத்தாய்?" "நீங்கள் சூரியாவைப் பார்த்திருப்பீர்கள் என்று நினைத்தேன். பார்த்தது மட்டுமல்ல; ரஜினிபூரில் நடந்தது பற்றியும் அவனிடம் சொல்லியிருக்கிறீர்கள்.

அவன் எங்கள் ஊருக்குக் கடிதம் எழுதியிருக்கிறான். அக்கா! நீங்கள் ரொம்பப் படித்தவர்; எல்லாம் தெரிந்தவர். இருந்தாலும் இவரைப் பற்றிச் சூரியாவிடம் நீங்கள் அவ்வளவு கேவலமாகச் சொல்லியிருக்கக் கூடாது" என்றாள் சீதா. "ஐயோ! இது என்ன வீண் பழி? நான் என்ன உன் புருஷனைப் பற்றிக் கேவலமாகச் சொன்னேன்?" "நான் ஏரியில் மூழ்கிக் கொண்டிருந்தபோது அவர் வேடிக்கை பார்த்துக் கொண்டு படகிலேயே இருந்தார் என்று சொன்னீர்கள். இதைக் காட்டிலும் வேறு என்ன சொல்ல வேண்டும்?" தாரிணி சிறிது நேரம் மௌனமாக இருந்துவிட்டு, "ஆமாம் அப்படி நான் சொன்னது மெய் தான். புருஷர்களுடைய சுயநலத்தைப்பற்றி எங்களுக்குள் விவாதம் நடந்தது. அப்போது ரஜினிபூரில் நடந்ததுப்பற்றிச் சொன்னேன். அது உண்மைதானே, சீதா! உண்மையை எதற்காக மறைக்க வேண்டும்?" என்றாள். சீதா சிறிது வேகமான குரலில், "என்னுடைய கொள்கை அதுவல்ல. உண்மையாயிருந்தாலும் ஒருவருடைய குற்றத்தை ஒருவர் சொல்லிக் கொண்டிருக்கக்கூடாது. மூடி மறைத்துக் கொண்டுதான் போகவேண்டும்! இல்லாவிட்டால் இந்த உலகத்தில் வாழ்க்கையே நடத்த முடியாது!" என்று சொன்னாள்.

தாரிணி மிக்க வியப்புடன் சீதாவைப் பார்த்தாள். படிப்பும் உலக அனுபவமும் அதிகம் இல்லாத இந்தச் சிறு பெண் அவ்வளவு முக்கிய விஷயத்தை எப்படிக் கண்டுபிடித்துச் சொன்னாள் என்று தாரிணிக்கு அதிசயமாயிருந்தது. அதோடு, ஒருவேளை உள் அர்த்தம் வைத்துப் பேசுகிறாளோ என்று ஐயமும் உண்டாயிற்று. ஏதாவது சமாதானமாகப் பதில் சொல்லவேண்டும் என்று தாரிணி எண்ணுவதற்குள், வாசலில் 'தட், தட், தட்' என்று மோட்டார் சைக்கிள் வரும் சத்தம் கேட்டது. "போலீஸார் வந்துவிட்டார்கள்" என்றாள் தாரிணி. இருவரும் மற்ற விஷயங்களை எல்லாம் மறந்து, வாசலில் என்ன நடக்கப் போகிறதோ என்று கவலையுடன் சிந்திக்கத் தொடங்கினார்கள்.

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

இருபத்தொன்றாம் அத்தியாயம்
ரஜினிபூர் பைத்தியக்காரி

போலீஸார் வந்த பிறகு சற்று நேரம் வாசலிலேயே பேசிக் கொண்டிருந்தார்கள். சில நிமிஷங்களுக்கெல்லாம் ராகவனும் ஒரு போலீஸ் உத்தியோகஸ்தரும் உள்ளே வந்தார்கள். ராகவன் தாரிணியைச் சுட்டிக்காட்டி, "இந்தப் பெண்மணிதான் " என்று சொன்னான். "முகத்தைப் பார்த்தாலே தெரிகிறது, ரொம்பவும் பயந்து போயிருக்கிறார். பயப்படக் காரணம் இல்லையென்று நான் சொல்லவில்லை. இருந்தாலும்.. கையிலே இரத்தக் கறையைக் கூட இன்னும் கழுவவில்லை போலிருக்கிறதே!" என்று போலீஸ் அதிகாரி கூறினார். "கழுவலாமோ, கூடாதோ என்று சந்தேகமாயிருந்தது. நீங்கள் வருவதற்குத்தான் காத்திருந்தேன்" என்றாள் தாரிணி. "குரல் எப்படி நடுங்குகிறது பார்த்தீர்களா? இந்தப் பெண்மணியை உத்தேசித்துத்தான் போலீஸ் ஸ்டேஷனுக்கு நேரே கார் ஓட்டிக்கொண்டு வரவில்லை. எப்படியாவது இவருடைய பெயரைச் சம்பந்தப்படுத்தாமல் இருந்தால் நல்லது." "என்னால் முடிந்த வரையில் பார்க்கிறேன். இவருடைய விலாசம் தெரியுமல்லவா? ஒருவேளை இவருடைய சாட்சியம் அவசியம் தேவையாயிருந்தால்...?" "தேவையாயிருந்தால், எப்போது சொன்னாலும் நானே அழைத்துக் கொண்டு வருகிறேன். ஆனால் அதற்குத் தேவையில்லாமல் பார்த்துக்கொண்டால் நல்லது." "பார்க்கலாம்! நீ ஒன்றும் பயப்படாதே, அம்மா! போய்க் கைகளைச் சுத்தமாய் அலம்பிக்கொள். இந்த மாதிரிக் காரியங்களில் ஸ்திரீகள் தலையிடவே கூடாது. இது உனக்கு ஒரு பாடமாயிருக்கட்டும் இந்தச் சம்பவத்தைப்பற்றி யாரிடமும் பேசாதே! உனக்குத் தெரியும் என்பதாகவே காட்டிக் கொள்ளாதே!"

இவ்விதம் தாரிணியைப் பார்த்துச் சொல்லிவிட்டுப் போலீஸ் அதிகாரி ராகவனைப் பார்த்து, "நாம் போகலாம் வாருங்கள்! இப்போதே ஒருவேளை, 'டூலேட்' ஆகிப் போயிருக்கலாம்!" என்று சொன்னார். "சீதா! நான் போய் வருகிறேன் தாரிணி இன்றைக்கு இங்கேயே இருக்கட்டும்!" என்றான். போலீஸ் உத்தியோகஸ்தர் தாரிணியிடம் பேசியதும் சீதாவுக்கு அரை குறையாகத்தான் புரிந்தது. தாரிணியை மட்டும் காப்பாற்றிவிட்டுத் தன்னுடைய கணவன் ஏதோ ஆபத்துக்கு உட்படப் போவதாக அவளுக்குத் தோன்றியது. "எங்கே போகப் போகிறீர்கள்? நானும் உங்களுடன் வருகிறேன்!" என்று நடுங்கிய குரலில் கூறினாள். போலீஸ் உத்தியோகஸ்தர் இதற்குள் அவளுடைய பயத்துக்குக் காரணத்தைத் தெரிந்து கொண்டார். "இவர்தான் உங்கள் மனைவியா...? பயப்பட வேண்டாம் அம்மா! உன் புருஷனைக் கைது செய்து கொண்டு போகவில்லை. போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து ஒரு வாக்குமூலம் எழுதி வைக்க வேண்டும் அவ்வளவுதான். அரை மணி நேரத்தில் திரும்பி வந்து விடுவார்!" என்றார். அது உண்மைதானா என்று அறிந்துகொள்ள வேண்டிச் சீதா ராகவனுடைய முகத்தைப் பார்த்தாள். அவன் சிறிது முக மலர்ச்சியுடனேயே, "ஆமாம், சீதா! எனக்கு ஆபத்து ஒன்றும் இல்லை. நானும் சூரியாவும் அரை மணியில் திரும்பி வந்து விடுவோம். தாரிணி! சீதாவிடம் எல்லாம் சொல்லிவிடு. அவள் வீண் பீதி அடைந்திருக்கிறாள்!" என்று சொல்லிப் போலீஸ் அதிகாரியைத் தொடர்ந்தான்.

சில நிமிஷத்துக்கெல்லாம் வாசலிலிருந்து மோட்டாரும் மோட்டார் சைக்கிளும் புறப்பட்டுச் சென்றன. சீதா வாசற் கதவைத் தாளிட்டுக் கொண்டு வந்தாள். "இனிமேல் நான் இந்தக் காரில் ஏறவே மாட்டேன். என் குழந்தையையும் ஏறவிடமாட்டேன். காரை உடனே விற்றுவிட்டு வேறு வாங்க வேண்டியதுதான்" என்றாள். "ஆமாம்; இந்தக் காரில் என்னை ஏறச் சொன்னால் கூட இனிமேல் ஏறமாட்டேன். நீ இவ்வளவு தைரியமாயிருப்பதே எனக்கு ஆச்சரியமாயிருக்கிறது!" என்றாள் தாரிணி. "என் மாமியார் இந்தச் சமயம் இங்கே இருந்திருந்தால் ஒரே ரகளையாகப் போயிருக்கும். அவருக்கு வேறே வைத்தியம் செய்யும்படி ஆகியிருக்கும். நல்லவேளையாகக் குழந்தை வஸந்தியும் தூங்கிப் போய்விட்டாள்." "சீதா! உன் குழந்தையைப் பார்க்க எனக்கு ஆவலாயிருக்கிறது. முதலில் கைகளைக் கழுவிக் கொள்கிறேன். கை அலம்புவது மட்டும் என்ன? ஸ்நானமே செய்தாலும் நல்லது தான். குழாய்த் தண்ணீரில் ஸ்நானம் செய்தால் மட்டும் போதாது. கங்கைக்குப் போய் ஸ்நானம் செய்ய வேண்டும்!" என்று சொன்னாள். "இப்போதைக்குக் குழாயில் ஸ்நானம் செய்து வையுங்கள். கங்கா ஸ்நானம் பிறகு பார்த்துக் கொள்ளலாம்!" என்று சீதா சொல்லி, வீட்டின் முன்புறத்தில் இருந்த ஸ்நான அறைக்கு அழைத்துச் சென்றாள். வீட்டின் பின்பக்கம் போவதற்கே அவளுக்குத் தைரியம் வரவில்லை.

ராகவனும் சூரியாவும் திரும்பி வந்தபோது சீதாவும் தாரிணியும் சமையலறையில் ரொட்டி தயாரித்துக் கொண்டிருந்ததைப் பார்த்தார்கள். அவர்களுக்கு இந்தக் காட்சி மிகவும் சந்தோஷம் அளித்தது. "பசியே இல்லை" என்று அவர்கள் சத்தியம் செய்துவிட்டு, "நீங்கள் இவ்வளவு கஷ்டப்பட்டு ரொட்டி தயாரித்திருப்பதால் கொஞ்சம் சாப்பிடுகிறோம்" என்றார்கள். தாரிணி குளித்திருப்பதைப் பார்த்துவிட்டு அவர்களும் குளித்து வரச் சென்றார்கள். சூரியா கொல்லைப் பக்கத்து ஸ்நான அறைக்குப் போய் ஸ்நானம் செய்துவிட்டு வந்தான். "அத்தங்கா, ஸ்நான அறைக்கு எதிரே ஒரு அறை பூட்டிக் கிடக்கிறதே? அதில் என்ன இருக்கிறது? ஏதோ சத்தம் கேட்டது?" என்றான். சீதா முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு, "பெருச்சாளி ஓடியிருக்கும்" என்றாள். "இல்லை; உள்ளேயிருந்து யாரோ கதவைத் தட்டுவது போலிருந்தது" என்றான் சூரியா. "ஒருவேளை பூனை பிராண்டியிருக்கும்" என்றாள் சீதா. "தாரிணி! ஸ்நான அறையில் உங்கள் கைக்குட்டையைப் போட்டுவிட்டு வந்தீர்கள் போலிருக்கிறது, ஒரே இரத்தக் கறையாயிருந்தது! அதை நான் நன்றாக அலம்பி உலர்த்தினேன்?" என்று சொன்னான் சூரியா. "இல்லையே! நான் போடவில்லையே!" என்று சொல்லித் தாரிணி சீதாவின் முகத்தைப் பார்த்தாள். சீதாவும் தாரிணியின் முகத்தைப் பார்த்தாள். "ஞாபக மறதியாய்ச் சொல்கிறீர்கள்?" என்றான் சூரியா. சீதா பேச்சை மாற்ற விரும்பி, "இந்தக் காரை விற்றுவிட வேண்டும்; தெரியுமா? இனிமேல் நான் இந்தக் காரில் ஏற மாட்டேன்" என்றாள். "நான் அப்போதே தீர்மானித்துவிட்டேன். நாளைக்கு முதல் காரியம் காரை விற்கப் போகிறேன்.. இரண்டாவது, ரிவால்வர் லைசென்ஸ் வாங்கப் போகிறேன். காலம் எப்படிக் கெட்டுப் போய்விட்டது! சாலையோடு போகிறவனைக் குத்திக் கொல்வது என்றால்?...அதுவும் இந்தப் புது டில்லியில்?" என்றான் ராகவன்.

பிறகு எல்லோரும் வட்டமான மேஜையைச் சுற்றிச் சாப்பிடுவதற்கு உட்கார்ந்தார்கள். "சீதா! உன் அம்மாஞ்சி இருக்கிறானே? அவன் மகா தைரியசாலி. காரிலே இருந்தபோது அவனுக்குக் கைகால் நடுங்கிக் கொண்டிருந்தது. கீழே இறங்கியதும் பேச்சுப் பிரமாதம்!" என்றான் ராகவன். "நான் பயப்பட்டேன் என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனாலும் உங்களைப்போல் தெருவில் ஒருவன் மரண காயம் பட்டுக் கிடக்கும்போது 'நமக்கென்ன' என்று போகமாட்டேன்?" என்றான் சூரியா. "போதும், போதும், இந்தப் பேச்சு! வேறு ஏதாவது பேசுங்கள்!" என்றாள் சீதா. "வேறு என்ன பேசுவது? நீதான் பேசேன்!" என்றான் ராகவன். "இவர்கள் இரண்டு பேரும் இத்தனை நாளாக ஏன் நம்முடைய வீட்டை எட்டிக் கூடப் பார்க்கவில்லை என்று கேளுங்கள்." "எனக்கு ரொம்ப வேலை இருந்தது அத்தங்கா! மன்னித்துக் கொள்! இனிமேல் அடிக்கடி வந்து கொண்டிருக்கிறேன். மாப்பிள்ளைக்கு ஆட்சேபம் இல்லாவிட்டால்...?" "நீ வருவதில் எனக்கு என்ன ஆட்சேபம் இருக்க முடியும் சூரியா! நொண்டிச் சாக்குச் சொல்கிறாயா?" "அப்படிக் கேளுங்கள் நன்றாய்! சூரியா! நீ வருவதில் மாப்பிள்ளைக்கு எதற்காக ஆட்சேபம்? வேலையாம் வேலை! இந்த அக்காவைப் பார்க்கப் போவதற்கு மட்டும் வேலை ஒழிந்ததோ?"

"அத்தங்கா! இவரும் நானும் ஒரே கட்சியைச் சேர்ந்தவர்கள். ஆகையால் வேலை நிமித்தமாகவே நாங்கள் அடிக்கடி சந்திக்க வேண்டியிருக்கிறது." "அது என்ன கட்சியோ காட்சியோ எனக்குத் தெரியாது. நீங்கள் இரண்டு பேரும் இனிமேலாவது இங்கே அடிக்கடி வந்து கொண்டிருந்தால் எனக்குத் திருப்தியாயிருக்கும். "நான் வந்திருப்பேன், சீதா! உண்மைக் காரணத்தை இப்போது சொல்லி விடுகிறேன். உன் மாமியாருக்குப் பயந்து கொண்டுதான் வரவில்லை?" என்று தாரிணி கூறினாள். "என் மாமியாரைக் கண்டு, எதற்காக நீங்கள் பயப்பட வேண்டும்? நானே பயப்படுவதில்லையே? அவரைப் பற்றிச் சூரியா ஏதாவது இல்லாததும் பொல்லாததும் சொல்லியிருக்கிறான் போலிருக்கிறது! என் மாமியாரைப் போன்ற நல்ல மாமியாரே இந்தப் பூவுலகத்திலேயே காண முடியாது. பெற்ற பெண்ணுக்கு மேலாக என்னிடம் பிரியமாயிருக்கிறார்!" அந்தச் சமயம் சீதாவிடம் ராகவனுடைய அன்பு பூரணமடைந்தது. அன்பு மட்டுமா நன்றியுங்கூடத்தான். 'இப்போது என்ன சொல்கிறாய்?' என்ற பாவனையாகத் தாரிணியை ராகவன் பார்த்தான்; தாரிணியும் ராகவனைப் பார்த்தாள். அவர்கள் கண்களின் மூலமாகப் பேசிக்கொண்டதைச் சீதா கவனிக்கவில்லை. கவனித்திருந்தாலும் அந்த நயன பாஷையின் பொருள் அவளுக்கு விளங்கியிராது. சாப்பிட்டு முடிந்து எல்லோரும் முன் அறைக்கு வந்ததற்கும் டெலிபோன் மணி அடித்ததற்கும் சரியாயிருந்தது. ராகவன் ரிஸீவரை எடுத்துக்கொண்டு பேசினான்.

"ஓகோ? உயிர் போய்விட்டதா? அடடா...'கத்திக் காயத்தினால் மரணம்' என்று டாக்டர் சர்டிபிகேட் கொடுத்திருக்கிறாரா! ரொம்ப சரி! யார்? வினாயகராவ் மதோங்கரா...உலகத்துக்கு ஒரு நஷ்டமுமில்லை!... ஆனாலும் கொலை, கொலைதானே? யாராயிருக்கும்? ஏதாவது ஊகம்.... ரஜினிபூர் பைத்தியக்காரியா?... கேள்விப்பட்டதில்லையே?... சரி சரி நான் பார்த்துக் கொள்கிறேன், ரொம்ப வந்தனம்!" டெலிபோன் ரிஸீவரை ராகவன் வைத்ததும் ஏககாலத்தில் மூன்று பேரும் "என்ன, என்ன?" என்று பரபரப்புடன் கேட்டார்கள். "அந்த விஷயமாகத்தான் சீதா பேசவே கூடாது என்கிறாளே?" "பரவாயில்லை; சொல்லுங்கள் சாப்பிடும்போது அந்தப் பேச்சு வேண்டாம் என்று சொன்னேன்" என்றாள் சீதா. "அப்படியானால் கேட்டுக்கொள் ஆஸ்பத்திரியில் நாங்கள் கொண்டு போய்விட்ட அரைமணிக்குள் உயிர் போய்விட்டதாம், கத்திக்குத்தினால் சாவு என்று டாக்டர் சர்டிபிகேட் கொடுத்திருக்கிறாராம். கொலையுண்டு செத்துப் போனவனின் பெயர் விநாயகராவ் மதோங்கர். ரஜினிபூரில், பழைய ரஜினிபூர் மகாராஜாவின் துர்மந்திரி என்று சொன்னேனே, அவன்தான். கொஞ்ச நாளாக இந்த ஊரில் இருந்தானாம். கிளப்பில் ரொம்பப் பேருக்கு அவனைத் தெரியுமாம்; குடித்துவிட்டு ரகளை செய்வானாம். ரஜினிபூர் பைத்தியக்காரி என்று பெயர் பெற்ற ஸ்திரீ அவனைச் சில நாளாக அடிக்கடி தொடர்ந்து போய் கொண்டிருந்தாளாம். போலீஸில் கூட மதோங்கர் புகார் செய்திருந்தானாம்.

ஏற்கெனவே ரஜினிபூர் மகாராஜாவைக் கொல்ல முயற்சித்தவளாம். இவனைக் கொன்றவளும் அவளாய்த்தான் இருக்கும் என்று ஊகிக்கப்படுகிறதாம். போதுமா? எத்தனையோ துப்பறியும் கதைகள் படித்திருக்கிறோம். அவற்றையெல்லாம் இந்த உண்மைச் சம்பவம் தோற்கடித்து விடுகிறதா, இல்லையா? ஏன் எல்லோரும் இப்படி மௌனம் சாதிக்கிறீர்கள்? சீதா, உனக்கு துப்பறியும் கதைகள் ரொம்பப் பிடிக்குமோ?" ரஜினிபூர் பைத்தியக்காரி என்றதும் சீதாவும் தாரிணியும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள். இரண்டு பேருடைய பார்வையும் பயங்கரத்தையும் பரிதாபத்தையும் வெளியிட்டன. சீதாவைக் கூப்பிட்டு ராகவன் குறிப்பாகக் கேட்டதும், "இந்த மாதிரி விஷயமெல்லாம் கதையோடு இருந்தால் நன்றாயிருக்கும்! உண்மையில் நடக்கக் கூடாது!" என்றாள். "எனக்கு என்ன தோன்றுகிறது தெரியுமா? ரஜினிபூர் பைத்தியக்காரியைப் போல் இன்னும் பலர் தோன்ற வேண்டும். அப்போதுதான் நம் நாட்டுச் சுதேச ராஜாக்களுக்கும் அவர்களுடைய துர்மந்திரிகளுக்கும் புத்தி வரும்!" என்றான் சூரியா. "சுதேச ராஜாக்களிடம் உனக்கு என்னடா அப்பா, அவ்வளவு கோபம்?" என்றான் ராகவன்.

அவர்களுக்குள் விவாதம் நடந்தபோது சீதாவின் மனமெல்லாம் கொல்லைப்புறத்துப் பூட்டிய அறையிலே இருந்தது. 'ரஜினிபூர் பைத்தியக்காரி' என்பவள் அந்த வீட்டிலேயே அப்போது இருக்கிறாள்! தான் அதை அங்குள்ளவர்கள் யாரிடமாவது சொல்ல வேண்டுமோ? சொன்னால் என்ன விபரீதம் வருமோ? சொல்லாவிட்டால் என்ன விபரீதம் நேருமோ? தாரிணியின் சொந்தத் தாயாரோ அல்லது வளர்ப்புத் தாயாரோ அவள்! தன் தாயார் கொலைகாரி என்பது தாரிணிக்குத் தெரிந்தால் எப்படியிருக்கும்? ஒருவேளை தெரிந்தேயிருக்குமோ? அவளைப் பார்த்துத் தன் பெற்றோர்கள் யார் என்பதைத் தாரிணி தெரிந்து கொள்ள விரும்பினாள் அல்லவா? அதற்கு இனிமேல் சந்தர்ப்பம் கிடைக்குமா? தாரிணியின் தாயார், உண்மையில் அந்தப் பைத்தியக்காரிதான்! இப்படிப்பட்ட காரியம் செய்ய உத்தேசித்திருந்தபடியினால் தாரிணியின் மனம் நோகாமலிருக்கும் பொருட்டு வளர்ப்புத் தாயார் என்று பொய் சொல்லி யிருப்பாள்.... சட்டென்று இன்னொரு விஷயம் சீதாவுக்கு ஞாபகம் வந்தது. அந்தப் பைத்தியக்காரி தன்னிடமும் தன் தாயாரிடமும் எதற்காக அவ்வளவு அபிமானம் காட்டினாள்? எதற்காகத் தனக்கு ரத்தின ஹாரமும் பணமும் கொடுத்தாள்? இதன் காரணத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்னும் ஆசை சீதாவின் மனதில் மற்ற எல்லா எண்ணங்களையும் அடக்கிக் கொண்டு மேலெழுந்தது. அதோடு அந்தக் கொலைகாரி அளித்த ரத்தின மாலையை இனிமேல் அணிந்துகொள்ளக் கூடாது என்ற எண்ணமும் உதித்தது.

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

இருபத்திரண்டாம் அத்தியாயம்
கதவு திறந்தது!

நள்ளிரவு பன்னிரண்டு மணி அடித்தது சீதா 'ஒன்று இரண்டு, மூன்று' என்று எண்ணி வந்தாள். பன்னிரண்டு அடித்ததும், "சரி, இன்னும் ஒரு மணி நேரம் இருக்கிறது; அது வரையில் தூங்காமலிருக்க வேண்டும்!" என்று எண்ணிக் கொண்டாள். ஆனால் அப்படியொன்றும் தூங்கிப் போய் விடுவோம் என்கிற பயம் கிடையாது அன்றிரவு நிகழ்ந்த சம்பவங்களுக்குப் பிறகு அவ்வளவு சுலபமாகத் தூக்கம் வந்து விடுமா என்ன? வராதுதான். அன்றிரவு தூங்கினால் பயங்கரமான சொப்பனங்கள் காணுவோமோ, என்னவோ? இராத்திரி பூராவும் தூங்காமல் இருந்து விட்டாலும் நல்லதுதான். ஆனால் அது மாதிரியே மற்றவர்களும் தூங்காமலிருந்தால் என்னத்தைச் செய்வது? அவர்களுக்கும் தூக்கம் வருவது கஷ்டமாகத்தான் இருக்கும். அடுத்த அறையில் படுத்திருக்கும் இவரும் அம்மாஞ்சியும் இன்னும் ஏதோ பேசுகிறார்கள். பன்னிரண்டு மணிக்கு மேலே பேச்சு என்ன வந்தது? பேசாமல் தூங்கக் கூடாதோ?... இதோ பக்கத்தில் படுத்திருக்கும் தாரிணியும் தூக்கம் வராமல் படுக்கையில் புரளுகிறாள்.

நினைக்க நினைக்க ஆச்சரியமாயிருக்கிறது. இப்படியெல்லாம் கதைகளில் நடக்கும் என்று படித்திருக்கிறோம். உண்மை யிலேயே நடக்குமென்று யார் நினைத்தார்கள்! மகள் இங்கே படுத்திருப்பது தெரியாமல், தாயார் கொல்லைப்புறத்து அறையில் படுத்திருக்கிறாள். தாயார் இதே வீட்டில் இருப்பது தெரியாமல் மகள் தூங்குகிறாள். ஒருவேளை தெரிந்து விட்டால்?... அதுவும் தாயார் கையில் இரத்தக் கரையுள்ள கத்தியுடன் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறாள் என்று மகளுக்குத் தெரிந்தால்? இதெல்லாம் தனக்கு தெரிந்திருக்கும்போது சொல்லாமல் வைத்திருப்பது சரியா? ஆனால் எப்படிச் சொல்ல முடியும்? தன்னுடைய புருஷன் மட்டும் தனியாக இருந்தாலும் சொல்லலாம். மற்ற இருவர் இருக்கும்போது எப்படிச் சொல்வது? அவள் தான் கொலைகாரி என்பது என்ன நிச்சயம்? காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்ததுபோல் இருக்கலாமல்லவா? பைத்தியம் பிடித்த நாயைக் கொன்றதாக அவள் சொன்னது ஏன் உண்மையாயிருக்கக்கூடாது?... ஆனால் எதற்காக அப்படி இரகசியமாக அவள் வந்திருக்க வேண்டும்? தன்னை எப்படி பயப்படுத்திவிட்டாள்?...

அடாடா! லலிதாவுக்கு எழுதிய கடிதத்தை ஆபீஸ் அறை மேஜை மேலேயே வைத்திருக்கிறோமே? எடுத்து வைக்க மறந்து விட்டோ மே? அதை யாரும் பார்த்திருக்க மாட்டார்கள். பார்த்தால் இவர்தான் பார்க்க வேண்டும். ஆனால் என்னுடைய கடிதங் களையோ, எனக்கு வரும் கடிதங்களையோ இவர் பார்ப்பதேயில்லை! எவ்வளவு உயர்ந்த குணம்? தவறிக் கண்ணிலே பட்டிருந் தாலும், 'லலிதா' என்ற பெயரைப் பார்த்ததும் மேலே படிக்க மாட்டார். அதை நினைத்தால் வேடிக்கையாகத்தானிருக்கிறது. இவரை லலிதா கல்யாணம் செய்து கொண்டு இந்த வீட்டில் இப்போது குடித்தனம் பண்ண வேண்டியது. அவள் இருக்கவேண்டிய இடத்தில் நாம் இருக்கிறோம். அதற்கு என்ன செய்யலாம்? அவரவர்களுக்குக் கடவுள் விதித்திருக்கிறபடிதானே நடக்கும்...? இதென்ன? கண்ணை இப்படிச் சுற்றிக் கொண்டு வருகிறதே? தூங்கக் கூடாது; இன்றைக்குத் தூங்கக் கூடாது... 'டிணிங்', 'டிணிங்' இரண்டு மணி அடித்ததைக் கேட்டுச் சீதா விழித்துக் கொண்டாள். கடவுளே! தூங்கிப் போய் விட்டோ ம் போலிருக்கிறதே! இரண்டு மணி தான் ஆயிற்றா? சுவரில் மாட்டியிருந்த கடிகாரத்தைச் சீதா பார்த்தாள். இரவு நேரத்துக்கென்று போட்டிருந்த மிக மங்கலான சிவப்பு பல்பின் வெளிச்சத்தில் கடிகாரம் இரண்டு மணி காட்டுவது தெரிந்தது.

இவ்வளவுதானே? இப்போது கூட அந்த அறைக்குப் போகலாம் ஆனால் தடபுடல் செய்யக்கூடாது. சத்தமில்லாமல் எழுந்திருக்க வேண்டும். அடுத்த அறையில் புருஷர்களும் இந்த அறையில் தாரிணியும் நன்றாகத் தூங்குகிறார்களா என்று தெரிந்துகொள்ள வேண்டும். அது என்ன சத்தம்? கதவு திறக்கிற சத்தம் போலிருக்கிறதே! இந்த நேரத்தில் எந்தக் கதவு திறக்கிறது? ஒருவேளை... இல்லை, இல்லை; அடுத்த வீட்டுக் கதவாயிருக்கும்; அல்லது சத்தம் கேட்டதே வெறும் பிரமையாயிருக்கும். இருந்தாலும் சற்றுப் பொறுத்து எழுந்திருக்கலாம், மறுபடியும் தூங்கிவிட கூடாது. இதோ தாரிணி படுக்கையில், ஒருக்களித்துப் படுத்துக் கொண்டு நன்றாய்த் தூங்குகிறாள். தூங்கட்டும்; அதுதான் நமக்கு வேண்டியது. ஐயோ! இது என்ன? அதோ அந்த நிலைக்கண்ணாடியில் மங்கலாகத் தெரியும் உருவம்! பயங்கரமாயிருக்கிறதே? முகத்திலே தாடி! தலையிலே துருக்கிக் குல்லா! கண்களில் நெருப்புத் தணல்... சீதாவின் உடம்பில் ஒரு நிமிஷம் இரத்த ஓட்டம் அடியோடு நின்று போயிற்று. கை கால் வெலவெலத்து அசைவற்றுப் போயின. ஆகா! இந்த உருவத்தை இப்போது காணவில்லை! ஏதோ ஒரு கை மட்டும் இருட்டிலிருந்து தனியாக வெளிப்பட்டு அந்த உருவத்தைத் தொட்டு அழைத்துக் கொண்டு போன மாதிரி தோன்றியது. எப்படியோ, அந்த உருவம் போய்விட்டது! சீச்சீ! எல்லாம் வெறும் பிரமை!

சீதா படுக்கையில் எழுந்து உட்கார்ந்தாள். கண்களைத் துடைத்துக் கொண்டு எதிர்ச் சுவரில் பதிந்திருந்த நிலைக்கண்ணாடி யிலே பார்த்தாள். திரும்பி, திறந்த ஜன்னலையும் பார்த்தாள்; ஒன்றுமேயில்லை வெறும் பிரமைதான்! அடுத்த அறையில் சத்தமேயில்லை நன்றாகத் தூங்குகிறார்கள். தாரிணியும் தூங்குகிறாள் இதுதான் சமயம், ரஸியாபேகத்தைப் பார்ப்பதற்கு. அவளுக்கு எச்சரிக்கை செய்து விட வேண்டியது அவசியம். பொழுது விடிந்த பிறகு அவள் இங்கே இருக்கக் கூடாது. தலையணையின் அடியில் சீதா, கையை விட்டுத் துழாவி அங்கேயிருந்த சாவியை எடுத்துக்கொண்டாள் சிறிது கூடச் சத்தம் செய்யாமல் படுக்கையிலிருந்து எழுந்தாள். எதிர்ப்பக்கச் சுவரில் ஒரு கதவு இருந்தது. அந்த வழியாகச் சென்றாள் இவரும் சூரியாவும் படுத்திருக்கும் அறை இருக்கிறது. வலது பக்கம் இருந்த வாசற்படி வழியாகப் போனால் சாப்பாட்டு அறைக்குள் போய் அங்கிருந்து கொல்லைப் பக்கம் போகலாம் யாருக்கும் தெரியாது... வலது பக்கத்துச் சுவரண்டை சென்று அங்கிருந்த கதவைச் சத்தமில்லாமல் திறந்தாள். ஜாக்கிரதைக்கு ஒரு தடவை திரும்பிப் பார்த்தாள். தாரிணி தூங்கிக் கொண்டுதானிருக்கிறாள் ரொம்ப நல்லதாய்ப் போயிற்று.

தன்னுடைய காலடிச் சத்தம் தன் காதுக்குக் கூடக் கேளாதபடி சீதா மெள்ள மெள்ள அடி எடுத்து வைத்து நடந்து போனாள். கடைசியாக அந்தத் தட்டுமுட்டுச் சாமான் அறை வந்ததும் இருட்டில் கையினால் தடவிப் பூட்டு இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்தாள். சாவியைப் பூட்டுக்குள் செலுத்தப் பார்த்தாள். எவ்வளவு முயன்றும் முடியவில்லை. இது என்ன சங்கடம்? விளக்குப் போட்டுத்தான் ஆகவேண்டும் போலிருக்கிறது. போட்டால் என்ன? இங்கே யார் வரப் போகிறார்கள்? வெளிச்சம் கொஞ்சம் இருந்தால்தான் நல்லது. இருட்டில் திடீரென்று கதவு திறந்ததும், அந்த ஸ்திரீ.. ரஜினிபூர் பைத்தியக்காரி... அலறிக்கொண்டு எழுந்தால்? அவள் கையில் கத்திவேறே இருக்கிறது! கையினால் தேடி மின்சார விளக்கின் ஸ்விச் இருக்குமிடத்தைக் கண்டுபிடித்து விளக்கைப் போட்டாள்... அது என்ன சத்தம்? யாரோ நடக்கும் காலடிச் சத்தம் மாதிரி கேட்டதே!.. ஒருவேளை அந்த ஸ்திரீ அறையின் உள்ளே எழுந்து நடமாடுகிறாள் போலிருக்கிறது. அதுவும் நல்லதுதான்; அவளைத் தொட்டு எழுப்ப வேண்டிய அவசியமில்லை. இருட்டில் பூட்டைத் திறக்கச் செய்த முயற்சியில் தான் செய்த தவறு சீதாவுக்குத் தெரிந்தது. பூட்டின் முன் பக்கத்தில் சாவியைப் போடுவதற்குப் பதிலாகப் பின்புறத்தில் போட முயன்றிருக்கிறாள். அது எப்படித் திறக்கும்? அதை நினைத்த போது சீதாவுக்குச் சிரிப்புக் கூட வந்தது.

இதோ பூட்டுத் திறந்தது! கதவும் திறந்தது! சீதா மெதுவாக உள்ளே ஒரு காலை வைத்து எட்டிப் பார்த்தாள். இது என்ன! அறைக்குள்ளே யாரும் இல்லையே! ஒருவரும் நடமாடவில்லையே! ஒரு சத்தமும் கேட்கவில்லையே! இன்னொரு காலையும் உள்ளே வைத்து நாலுபுறமும் நன்றாகப் பார்த்தாள் அறை காலியாக இருந்தது. இது என்ன விந்தை! முன்னிரவில் நடந்ததெல்லாம் உண்மையில் கனவில் நடந்ததோ? அந்த ஸ்திரீ ஸ்நான அறைக்குள் இருந்தது, அப்புறம் இந்த அறைக்குள் சென்றது. வெளிப்பக்கம் கதவைப் பூட்டச் சொன்னது எல்லாம் தன்னுடைய மனப்பிராந்தியா? இல்லவே இல்லை, எல்லாம் உண்மையாக நடந்தவைதான். பின்னே, அந்த ஸ்திரீ எப்படி அங்கிருந்து மாயமாய் மறைந்து போனாள்? அப்போது அந்த அறையிலிருந்து பின் பக்கம் திறந்த கதவு சீதாவின் கண்ணில் பட்டது. அந்தக் கதவின் தாழ்ப்பாள் அகற்றப்பட்டிருந்தது; சீதாவுக்கு உண்மை புலனாயிற்று. அந்தக் கதவைத் திறந்துகொண்டு அவள் வெளியே போயிருக்கிறாள். போலீஸ்காரர்கள் வந்து தடபுடல் செய்தது ரஸியாபேகத்தின் காதில் பட்டிருக்க வேண்டும். சந்தடி அடங்கியதும் புறப்பட்டிருக்கிறாள். தான் தெரிந்து கொள்ள விரும்பியதை அவளிடம் தெரிந்து கொள்ள முடியாமற் போய்விட்டது! ஆயினும் பாதகமில்லை. எப்படியாவது அவள் அந்த வீட்டிலிருந்து பத்திரமாய்ப் போய்ச் சேர்ந்தாளே, அதுவே போதும்! இனிமேல் இங்கு எப்படிப்போனாலும் சரிதான், அதையெல்லாம் தெரிந்து கொண்டு நமக்கு என்ன ஆகவேண்டும். இவரும் குழந்தை வஸந்தியும் நன்றாயிருந்து, வாழ்க்கை நிம்மதியாக நடந்தால், அதுவே போதும். இன்றைக்கு அனுபவித்தது போன்ற பயங்கரங்கள் இனிமேல் வேண்டவே வேண்டாம்.

இப்படி எண்ணிக்கொண்டே சீதா அறைக்கு வெளியில் வந்து முன்போலக் கதவைப் பூட்டத் தொடங்கினாள். திடீரென்று ஓர் உணர்ச்சி... தான் செய்யும் காரியத்தை இரண்டு கண்கள் உற்றுப் பார்ப்பது போன்ற பிரமை ஏற்பட்டது. திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள் சாப்பாட்டு அறையின் வாசற்படியண்டை தாரிணி நின்று கொண்டிருந்தாள். காரணமில்லாத பீதியுடன் சீதா சிறிது நேரம் தாரிணியை வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்தாள். கையிலே இருந்த சாவியினால் பூட்டைப் பூட்டுவதற்குக் கூடச் சக்தி இல்லாமல் நின்றாள். இதைப் பார்த்த தாரிணி புன்னகை பூத்த முகத்துடன் அவள் அருகில் நெருங்கி வந்து, "சீதா எதற்காகப் பயப்படுகிறாய்? நீ யாரைப் பார்ப்பதற்காக வந்தாயோ, அவளைப் பார்க்கத்தான் நானும் வந்தேன். அவள் விஷயத்தில் உன்னைக் காட்டிலும் எனக்கு அதிகமான சிரத்தை இருக்கக் கூடியது இயற்கை அல்லவா?" என்றாள். வியப்பினால் விரிந்த கண்களினால் சீதா தாரிணியைப் பார்த்து, "உங்களுக்கு எப்படித் தெரியும்?" என்று கேட்டாள். "ஊகித்துத்தான் தெரிந்து கொண்டேன், சீதா! உன்னுடைய நடை உடை பாவனைகள், பேச்சுக்கள் எல்லாம் என் மனதில் ஒருவாறு சந்தேகத்தை உண்டாக்கின. ஸ்நான அறையில் என்னுடைய கைக்குட்டை இருந்ததாகச் சூரியா சொன்னதும் சந்தேகம் உறுதிப்பட்டது. அப்புறம்..." என்று தாரிணி தயங்கினாள். "அப்புறம் என்ன, அக்கா?"

"செய்யக்கூடாத ஒரு காரியம் செய்தேன், சீதா! அதற்காக நீ என்னை மன்னிக்க வேண்டும். உன்னுடைய குழந்தையைப் பார்ப்பதற்காக உன் கணவருடைய ஆபீஸ் அறைக்குள் போயிருந்தேனல்லவா? அப்போது மேஜையில் நீ பாதி எழுதி வைத்திருந்த கடிதம் கண்ணில் பட்டது. என்னை அறியாத ஒரு ஆவலினால் அதைப் படித்தேன்; அந்தக் கடிதத்தின் கடைசியில்..." "அக்கா! இதுதானா உங்களுக்குத் தெரிந்த இலட்சணம்? பிறத்தியார் கடிதத்தைப் படிக்கலாமா? இவர் கூட என் கடிதங்களைப் படிக்கிற தில்லையே?" "அதற்காகத் தான் முதலிலேயே மன்னிப்புக் கேட்டுக் கொண்டேனே, சீதா!" என்று இரக்கமான குரலில் கூறினாள் தாரிணி. "போனால் போகட்டும், நான் எழுந்து வந்தது உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் தூங்கவில்லையா?" "எனக்கு எப்படித் தூக்கம் வரும், சீதா! இவ்வளவு பயங்கரமான சம்பவங்கள் நடந்திருக்கும் போது? நீ என்னைத் தூங்கப் பண்ணுவதில் அதிக சிரத்தை காட்டினாய். நான் தூங்கிய பிறகு ஏதோ நீ செய்யப் போகிறாய் என்று எதிர்பார்த்தேன். ஆகையால் தூங்குகிறதுபோலப் பாசாங்கு செய்தேன். நீயே தூங்கிப் போய்விட்டதாகத் தெரிந்ததும் ஏமாற்றமடைந்தேன். ஆனால் கடிகாரம் மணி இரண்டு அடித்து உன்னை எழுப்பி விட்டது.

நீ எழுந்து சாவியை எடுத்துக்கொண்டு மெள்ள நடந்து வந்தாய். நானும் பின்னால் உனக்குத் தெரியாதபடி வந்தேன். சட்டென்று நீ விளக்குப் போட்டதும் ஒருவேளை என்னைப் பார்த்து விடுவாயோ என்று பயந்து போனேன். ஆனால் நீ பார்க்கவில்லை கதவைத் திறந்து கொண்டு அந்த அறைக்குள் போனாய். யாரையோ தேடி ஏமாற்றமடைந்தாய் ஆனால் நான் ஏமாற்றமடையவில்லை..." "நீங்கள் ஏன் ஏமாற்றமடையவில்லை? இங்கே ஒருவரும் இல்லையென்று உங்களுக்கு எப்படித் தெரியும்?" "மணி இரண்டு அடித்து உன்னை எழுப்புவதற்குச் சற்று முன்னால் தோட்டத்தின் வழியாக யாரோ போனதைப் பார்த்தேன்! சீதா இந்த அறையில் இருந்தது ஒருவரா, இருவரா?" "ஒருவர்தான்! நீங்கள் ரஸியாபேகம் என்று சொன்னீர்களே, இந்த அம்மாள்தான் இங்கே இருந்தாள். ஒருவரா, இரண்டு பேரா என்று எதற்காகக் கேட்டீர்கள்?" "இரண்டு பேர் போனதை நான் பார்த்தேன், சீதா! வேறு ஒருவர் வந்து ரஸியாபேகத்தை அழைத்துப் போயிருக்க வேண்டும்." சீதாவுக்குத் தான் நிலைக்கண்ணாடியில் கண்ட காட்சி நினைவுக்கு வந்ததும் பரபரப்புடன், "அக்கா! அந்த இன்னொருவர் யார்?" என்று கேட்டாள். "எனக்குத் தெரியாது தாடியும் துருக்கிக் குல்லாவும் செக்கச் செவந்த கண்களும் உள்ள முகம் ஒன்றைப் பார்த்தேன். யோசித்துப் பார்க்கும்போது எங்கேயோ, எப்போதோ பார்த்த முகமாகத் தோன்றுகிறது" என்றாள் தாரிணி. "எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது" என்று சீதா கூறினாள். "உனக்கும் தோன்றுகிறதா? நீ பார்த்தாயா, என்ன?"

"மணி இரண்டு அடித்துக் கண்ணை விழித்ததும், எதிரில் நிலைக்கண்ணாடியில் ஒரு முகம் தோன்றியது உடனே அது மறைந்து விட்டது. ஒருவேளை மனப்பிராந்தியாயிருக்கலாம் என்று நினைத்தேன். நீங்கள் சொல்வதிலிருந்து அது நிஜ முகம் என்று ஏற்படுகிறது." "அம்மா மட்டும் போவதைப் பார்த்திருந்தால், என்னால் பொறுக்க முடிந்திராது! 'அம்மா!' என்று கத்தியிருப்பேன்? பின்னோடு இன்னொருவரும் இருந்தபடியால், பேசாதிருந்தேன்." "அந்த ஸ்திரீ உண்மையில் உங்கள் தாயார்தானா? என்னால் நம்பவே முடியவில்லையே!... நாம் எதற்காக இங்கேயே நின்று கொண்டு பேசவேண்டும்? குழந்தை விழித்துக் கொண்டு அழுதாலும் அழுவாள். புருஷர்கள் விழித்துக்கொண்டால் நமக்கு என்னமோ நேர்ந்துவிட்டது என்று காபரா அடைவார்கள். உள்ளே போய்ப்படுத்துக் கொண் டே பேசலாம். எனக்கு இனிமேல் தூக்கமே வராது. உங்களைப் பற்றிய எல்லா விவரமும் சொல்லிவிட வேண்டும்!" என்றாள் சீதா.

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

இருபத்து மூன்றாம் அத்தியாயம்
தாரிணியின் கதை

இருவரும் அவரவர்களுடைய படுக்கையில் உட்கார்ந்திருந்தார்கள். தாரிணி கேட்டுக் கொண்டபடி அன்று முன்னிரவில் நடந்ததையெல்லாம் சீதா தனக்குத் தெரிந்த வரையில் சொல்லியாகி விட்டது. இப்போது தாரிணியின் முறை வந்திருந்தது. தாரிணி ஒரு நெடிய பெருமூச்சு விட்டு விட்டுச் சொன்னதாவது:- பழைய காலத்துக் கதைகளில் தங்களுடைய கதைகளைத் தாங்களே சொல்லும் கதாநாயகிகள், 'நான் பிறந்த கதையைச் சொல்லவா? வளர்ந்த கதையைச் சொல்லவா?' என்று ஆரம்பிப்பது வழக்கம். ஆனால் பிறந்த கதையை நான் சொல்ல முடியாது. அதைத் தெரிந்து கொள்வதற்காகத்தான் ரஸியாபேகத்தைத் தேடிக் கொண்டிருக்கிறேன். கடைசியாக, அவளைக் கண்டுபிடித்து விட்டதாக எண்ணிய சமயத்தில் கை நழுவிப் போய் விட்டாள் அதுவும் நல்லதுதான். இப்பேர்ப்பட்ட பயங்கரச் சம்பவம் நடந்திருக்கும் சமயத்தில் நான் என்ன கேட்க முடியும்! அவள்தான் என்னத்தைச் சொல்ல முடியும்!" "அவள் உண்மையில் முஸ்லிம் ஸ்திரீதானா? அக்கா! அவளுடைய உண்மைப் பெயர் ரஸியாபேகம்தானா?" என்று சீதா கேட்டாள்.