பொருளடக்கம் பக்கம் செல்க


campantar tEvAram 1 part I
(verses 1-721)
(in tamil script, unicode format)

திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
தேவாரப் பதிகங்கள்
முதல் திருமுறை - முதல் பகுதி
பாடல்கள் (1 - 721)

திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
தேவாரப் பதிகங்கள்
முதல் திருமுறை - முதல் பகுதி


திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
தேவாரப் பதிகங்கள்
முதல் திருமுறை - முதல் பகுதி

1.1 திருப்பிரமபுரம்

பண் - நட்டபாடை

1 தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதிசூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர் கள்வன்
ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்த அருள்செய்த
பீடுடையபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.
1.1.1
2 முற்றலாமையிள நாகமோடேன முளைக்கொம் பவைபூண்டு
வற்றலோடுகலனாப் பலிதேர்ந்தென துள்ளங் கவர்கள்வன்
கற்றல்கேட்டலுடை யார்பெரியார்கழல் கையால் தொழுதேத்தப்
பெற்றமூர்ந்தபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.
1.1.2
3 நீர்பரந்தநிமிர் புன்சடைமேலோர் நிலாவெண் மதிசூடி
ஏர்பரந்தஇன வெள்வளைசோரஎன் னுள்ளங்கவர் கள்வன்
ஊர்பரந்தவுல கின்முதலாகிய வோரூரிது வென்னப்
பேர்பரந்தபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.
1.1.3
4 விண்மகிழ்ந்தமதி லெய்ததுமன்றி விளங்குதலை யோட்டில்
உண்மகிழ்ந்துபலி தேரியவந்தென துள்ளங்கவர் கள்வன்
மண்மகிழ்ந்தஅரவம் மலர்க்கொன்றை மலிந்தவரை மார்பிற்
பெண்மகிழ்ந்தபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.
1.1.4
5 ஒருமைபெண்மையுடை யன்சடையன்விடை யூருமிவ னென்ன
அருமையாகவுரை செய்யவமர்ந்தென துள்ளங்கவர் கள்வன்
கருமைபெற்றகடல் கொள்ளமிதந்ததோர் காலமிது வென்னப்
பெருமைபெற்றபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.
1.1.5
6 மறைகலந்தவொலி பாடலொடாடல ராகிமழு வேந்தி
இறைகலந்தவின வெள்வளைசோரவென் னுள்ளங்கவர் கள்வன்
கறைகலந்தகடி யார்பொழில்நீடுயர் சோலைக்கதிர் சிந்தப்
பிறைகலந்தபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.
1.1.6
7 சடைமுயங்குபுன லன்அனலன்எரி வீசிச்சதிர் வெய்த
உடைமுயங்கும் அரவோடுழிதந்தென துள்ளங்கவர் கள்வன்
கடல்முயங்குகழி சூழ்குளிர்கானலம் பொன்னஞ்சிற கன்னம்
பெடைமுயங்குபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.
1.1.7
8 வியரிலங்குவரை யுந்தியதோள்களை வீரம்விளை வித்த
உயரிலங்கையரை யன்வலிசெற்றென துள்ளங்கவர் கள்வன்
துயரிலங்குமுல கில்பலவூழிகள் தோன்றும்பொழு தெல்லாம்
பெயரிலங்குபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.
1.1.8
9 தாணுதல்செய்திறை காணியமாலொடு தண்டாமரை யானும்
நீணுதல்செய்தொழி யந்நிமிர்ந்தானென துள்ளங்கவர் கள்வன்
வாணுதல்செய்மக ளிர்முதலாகிய வையத்தவ ரேத்தப்
பேணுதல்செய்பிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.
1.1.9
10 புத்தரோடுபொறி யில்சமணும்புறங் கூறநெறி நில்லா
ஒத்தசொல்லவுல கம்பலிதேர்ந்தென துள்ளங்கவர் கள்வன்
மத்தயானைமறு கவ்வுரிபோர்த்ததோர் மாயமிது வென்னப்
பித்தர்போலும்பிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.
1.1.10
11 அருநெறியமறை வல்லமுனியகன் பொய்கையலர் மேய
பெருநெறியபிர மாபுரமேவிய பெம்மானிவன் றன்னை
ஒருநெறியமனம் வைத்துணர்ஞானசம் பந்தன்னுரை செய்த
திருநெறியதமிழ் வல்லவர்தொல்வினை தீர்த லெளிதாமே.
1.1.11

திருப்பிரமபுர மென்பது சீர்காழி. இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பிரமபுரீசர்; தேவியார் - திருநிலைநாயகி.
திருத்தோணியில் வீற்றிருப்பவர் தோணியப்பர்.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


1.2 திருப்புகலூர்

பண் - நட்டபாடை

12 குறிகலந்தஇசை பாடலினான்நசை யாலிவ்வுல கெல்லாம்
நெறிகலந்ததொரு நீர்மையனாயெரு தேறும்பலி பேணி
முறிகலந்ததொரு தோலரைமேலுடை யானிடம்மொய்ம் மலரின்
பொறிகலந்தபொழில் சூழ்ந்தயலேபுய லாரும்புக லூரே.
1.2.1
13 காதிலங்குகுழை யன்னிழைசேர்திரு மார்பன்னொரு பாகம்
மாதிலங்குதிரு மேனியினான்கரு மானின்னுரி யாடை
மீதிலங்கவணிந் தானிமையோர்தொழ மேவும்மிடஞ் சோலைப்
போதிலங்குநசை யால்வரிவண்டிசை பாடும்புக லூரே.
1.2.2
14 பண்ணிலாவுமறை பாடலினானிறை சேரும்வளை யங்கைப்
பெண்ணிலாவவுடை யான்பெரியார்கழ லென்றுந்தொழு தேத்த
உண்ணிலாவியவர் சிந்தையுள்நீங்கா வொருவற்கிட மென்பர்
மண்ணிலாவும்அடி யார்குடிமைத்தொழில் மல்கும்புக லூரே.
1.2.3
15 நீரின்மல்குசடை யன்விடையன்னடை யார்தம்அரண் மூன்றுஞ்
சீரின்மல்குமலை யேசிலையாக முனிந்தன்றுல குய்யக்(*)
காரின்மல்குகடல் நஞ்சமதுண்ட கடவுள்ளிட மென்பர்
ஊரின்மல்கிவளர் செம்மையினாலுயர் வெய்தும்புக லூரே.
(*) முனிந்தானுலகுய்ய என்றும் பாடம்.
1.2.4
16 செய்யமேனிவெளி யபொடிப்பூசுவர் சேரும்மடி யார்மேல்
பையநின்றவினை பாற்றுவர்போற்றிசைத் தென்றும்பணி வாரை
மெய்யநின்றபெரு மானுறையும்மிட மென்பரருள் பேணிப்
பொய்யிலாதமனத் தார்பிரியாதுபொ ருந்தும்புக லூரே.
1.2.5
17 கழலினோசைசிலம் பின்னொலியோசை கலிக்கப்பயில் கானிற்
குழலினோசைகுறட் பாரிடம்போற்றக் குனித்தாரிட மென்பர்
விழவினோசையடி யார்மிடைவுற்று விரும்பிப்பொலிந் தெங்கும்
முழவினோசைமுந் நீரயர்வெய்த முழங்கும்புக லூரே.
1.2.6
17 வெள்ளமார்ந்துமிளிர் செஞ்சடைதன்மேல் விளங்கும்மதி சூடி
உள்ளமார்ந்தஅடி யார்தொழுதேத்த உகக்கும்அருள் தந்தெங்
கள்ளமார்ந்துகழி யப்பழிதீர்த்த கடவுட்கிட மென்பர்
புள்ளையார்ந்தவய லின்விளைவால்வளம் மல்கும்புக லூரே.
1.2.7
18 தென்னிலங்கையரை யன்வரைபற்றி யெடுத்தான்முடி திண்டோ ள்
தன்னிலங்குவிர லால்நெரிவித்திசை கேட்டன்றருள் செய்த
மின்னிலங்குசடை யான்மடமாதொடு மேவும்மிட மென்பர்
பொன்னிலங்குமணி மாளிகைமேல்மதி தோயும்புக லூரே.
1.2.8
19 நாகம்வைத்தமுடி யானடிகைதொழு தேத்தும்மடி யார்கள்
ஆகம்வைத்தபெரு மான்பிரமன்னொடு மாலுந்தொழு தேத்த
ஏகம்வைத்தஎரி யாய்மிகவோங்கிய எம்மானிடம் போலும்
போகம்வைத்தபொழி லின்நிழலான்மது வாரும்புக லூரே.
1.2.9
20 செய்தவத்தர்மிகு தேரர்கள்சாக்கியர் செப்பிற்பொரு ளல்லாக்
கைதவத்தர்மொழி யைத்தவிர்வார்கள் கடவுள்ளிடம் போலுங்
கொய்துபத்தர்மல ரும்புனலுங்கொடு தூவித்துதி செய்து
மெய்தவத்தின்முயல் வாருயர்வானக மெய்தும்புக லூரே.
1.2.10
21 புற்றில்வாழும்அர வம்மரையார்த்தவன் மேவும்புக லூரைக்
கற்றுநல்லவவர் காழியுள்ஞானசம் பந்தன்தமிழ் மாலை
பற்றியென்றுமிசை பாடியமாந்தர் பரமன்னடி சேர்ந்து
குற்றமின்றிக்குறை பாடொழியாப்புக ழோங்கிப்பொலி வாரே.
1.2.11

காவிரி தென்கரைத் தலம்.
சுவாமிபெயர் - அக்கினீசுவரர்; தேவியார் - கருந்தார்க்குழலியம்மை

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

1.3 திருவலிதாயம்

பண் - நட்டபாடை

23 பத்தரோடுபல ரும்பொலியம்மலர் அங்கைப்புனல் தூவி
ஒத்தசொல்லிஉல கத்தவர்தாம்தொழு தேத்தஉயர் சென்னி
மத்தம்வைத்தபெரு மான்பிரியாதுறை கின்றவலி தாயஞ்
சித்தம்வைத்தஅடி யாரவர்மேல்அடை யாமற்றிடர் நோயே.
1.3.1
24 படையிலங்குகரம் எட்டுடையான்படி றாகக்கன லேந்திக்
கடையிலங்குமனை யில்பலிகொண்டுணுங் கள்வன்னுறை கோயில்
மடையிலங்குபொழி லின்நிழல்வாய்மது வீசும்வலி தாயம்
அடையநின்றஅடி யார்க்கடையாவினை அல்லல்துயர் தானே.
1.3.2
25 ஐயனொய்யன்னணி யன்பிணியில்லவ ரென்றுந்தொழு தேத்தச்
செய்யன்வெய்யபடை யேந்தவல்லான்திரு மாதோடுறை கோயில்
வையம்வந்துபணி யப்பிணிதீர்த்துயர் கின்றவலி தாயம்
உய்யும்வண்ணந்நினை மின்நினைந்தால்வினை தீருந்நல மாமே.
1.3.3
26 ஒற்றையேறதுடை யான்நடமாடியோர் பூதப்படை சூழப்
புற்றின்நாகம்அரை யார்த்துழல்கின்றஎம் பெம்மான்மட வாளோ
டுற்றகோயிலுல கத்தொளிமல்கிட உள்கும்வலி தாயம்
பற்றிவாழும்மது வேசரணாவது பாடும்மடி யார்க்கே.
1.3.4
27 புந்தியொன்றிநினை வார்வினையாயின தீரப்பொரு ளாய
அந்தியன்னதொரு பேரொளியானமர் கோயில்அய லெங்கும்
மந்திவந்துகடு வன்னொடுகூடி வணங்கும்வலி தாயஞ்
சிந்தியாதஅவர் தம்மடும்வெந்துயர் தீர்தலெளி தன்றே.
1.3.5
28 ஊனியன்றதலை யிற்பலிகொண்டுல கத்துள்ளவ ரேத்தக்
கானியன்றகரி யின்உரிபோர்த்துழல் கள்வன்சடை தன்மேல்
வானியன்றபிறை வைத்தஎம்மாதி மகிழும்வலி தாயம்
தேனியன்றநறு மாமலர்கொண்டுநின் றேத்தத்தெளி வாமே.
1.3.6
29 கண்ணிறைந்தவிழி யின்னழலால்வரு காமனுயிர் வீட்டிப்
பெண்ணிறைந்தஒரு பால்மகிழ்வெய்திய பெம்மானுறை கோயில்
மண்ணிறைந்தபுகழ் கொண்டடியார்கள் வணங்கும்வலி தாயத்
துண்ணிறைந்தபெரு மான்கழலேத்தநம் உண்மைக்கதி யாமே.
1.3.7
30 கடலின்நஞ்சமமு துண்டிமையோர்தொழு தேத்தநட மாடி
அடலிலங்கையரை யன்வலிசெற்றருள் அம்மானமர் கோயில்
மடலிலங்குகமு கின்பலவின்மது விம்மும்வலி தாயம்
உடலிலங்குமுயிர் உள்ளளவுந்தொழ உள்ளத்துயர் போமே.
1.3.8
31 பெரியமேருவரை யேசிலையாமலை வுற்றாரெயில் மூன்றும்
எரியவெய்தவொரு வன்னிருவர்க்கறி வொண்ணாவடி வாகும்
எரியதாகியுற வோங்கியவன்வலி தாயந்தொழு தேத்த
உரியராகவுடை யார்பெரியாரென உள்கும்முல கோரே.
1.3.9
32 ஆசியாரமொழி யாரமண்சாக்கிய ரல்லாதவர் கூடி
ஏசியீரமில ராய்மொழிசெய்தவர் சொல்லைப்பொரு ளென்னேல்
வாசிதீரவடி யார்க்கருள்செய்து வளர்ந்தான்வலி தாயம்
பேசுமார்வமுடை யாரடியாரெனப் பேணும்பெரி யோரே.
1.3.10
33 வண்டுவைகும்மணம் மல்கியசோலை வளரும்வலி தாயத்
தண்டவாணனடி யுள்குதலாலருள் மாலைத்தமி ழாகக்
கண்டல்வைகுகடல் காழியுள்ஞானசம் பந்தன்தமிழ் பத்துங்
கொண்டுவைகியிசை பாடவல்லார்குளிர் வானத்துயர் வாரே.
1.3.11

இத்தலம் தொண்டைநாட்டில் பாடியென வழங்கப்பட்டிருக்கின்றது.
சுவாமிபெயர் - வலிதாயநாதர்,
தேவியார் - தாயம்மை

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


1.4 திருப்புகலியும் - திருவீழிமிழலையும்

வினாவுரை

பண் - நட்டபாடை

34 மைம்மரு பூங்குழல் கற்றைதுற்ற
வாணுதல் மான்விழி மங்கையோடும்
பொய்ம்மொழி யாமறை யோர்களேத்தப்
புகலி நிலாவிய புண்ணியனே
எம்மிறை யேயிமை யாதமுக்கண்
ஈசவென்நேச விதென்கொல் சொல்லாய்
மெய்ம்மொழி நான்மறை யோர்மிழலை
விண்ணிழி கோயில் விரும்பியதே.
1.4.1
35 கழன்மல்கு பந்தொடம் மானைமுற்றில்
கற்றவர் சிற்றிடைக் கன்னிமார்கள்
பொழின்மல்கு கிள்ளையைச் சொற்பயிற்றும்
புகலி நிலாவிய புண்ணியனே
எழின்மல ரோன்சிர மேந்தியுண்டோ ர்
இன்புறு செல்வமி தென்கொல்சொல்லாய்
மிழலையுள் வேதிய ரேத்திவாழ்த்த
விண்ணிழி கோயில் விரும்பியதே.
1.4.2
36 கன்னிய ராடல் கலந்துமிக்க
கந்துக வாடை கலந்துதுங்கப்
பொன்னியல் மாடம் நெருங்குசெல்வப்
புகலி நிலாவிய புண்ணியனே
இன்னிசை யாழ்மொழி யாளோர்பாகத்
தெம்மிறையேயிது வென்கொல் சொல்லாய்
மின்னியல் நுண்ணிடை யார்மிழலை
விண்ணிழி கோயில் விரும்பியதே.
1.4.3
37 நாகப ணந்திகழ் அல்குல்மல்கும்
நன்னுதல் மான்விழி மங்கையோடும்
பூகவ ளம்பொழில் சூழ்ந்தஅந்தண்
புகலிநி லாவிய புண்ணியனே
ஏகபெ ருந்தகை யாயபெம்மான்
எம்மிறையேயிது வென்கொல் சொல்லாய்
மேகமு ரிஞ்செயில் சூழ்மிழலை
விண்ணிழி கோயில் விரும்பியதே.
1.4.4
38 சந்தள றேறுத டங்கொள்கொங்கைத்
தையலோடுந் தளராத வாய்மைப்
புந்தியி னான்மறை யோர்களேத்தும்
புகலி நிலாவிய புண்ணியனே
எந்தமை யாளுடை ஈசஎம்மான்
எம்மிறை யேயிது வென்கொல்சொல்லாய்
வெந்தவெண் ணீறணி வார்மிழலை
விண்ணிழி கோயில் விரும்பியதே.
1.4.5
39 சங்கொலி இப்பிசு றாமகரந்
தாங்கி நிரந்து தரங்கம்மேன்மேற்
பொங்கொலி நீர்சுமந் தோங்குசெம்மைப்
புகலி நிலாவிய புண்ணியனே
எங்கள்பி ரானிமை யோர்கள்பெம்மான்
எம்மிறையேயிது வென்கொல் சொல்லாய்
வெங்கதிர் தோய்பொழில் சூழ்மிழலை
விண்ணிழி கோயில் விரும்பியதே.
1.4.6
40 காமனெ ரிப்பிழம் பாகநோக்கிக்
காம்பன தோளியொ டுங்கலந்து
பூமரு நான்முகன் போல்வரேத்தப்
புகலி நிலாவிய புண்ணியனே
ஈமவ னத்தெரி யாட்டுகந்த
எம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்
வீமரு தண்பொழில் சூழ்மிழலை
விண்ணிழி கோயில் விரும்பியதே.
1.4.7
41 இலங்கையர் வேந்தெழில் வாய்த்ததிண்டோ ள்
இற்றல றவ்விர லொற்றியைந்து
புலங்களைக் கட்டவர் போற்றஅந்தண்
புகலி நிலாவிய புண்ணியனே
இலங்கெரி யேந்திநின் றெல்லியாடும்
எம்மிறை யேயிது வென்கொல்சொல்லாய்
விலங்கலொண் மாளிகை சூழ்மிழலை
விண்ணிழி கோயில் விரும்பியதே.
1.4.8
42 செறிமுள ரித்தவி சேறியாறுஞ்
செற்றதில் வீற்றிருந் தானும்மற்றைப்
பொறியர வத்தணை யானுங்காணாப்
புகலி நிலாவிய புண்ணியனே
எறிமழு வோடிள மான்கையின்றி
இருந்தபி ரானிது வென்கொல்சொல்லாய்
வெறிகமழ் பூம்பொழில் சூழ்மிழலை
விண்ணிழி கோயில் விரும்பியதே.
1.4.9
43 பத்தர்க ணம்பணிந் தேத்தவாய்த்த
பான்மைய தன்றியும் பல்சமணும்
புத்தரும் நின்றலர் தூற்றஅந்தண்
புகலி நிலாவிய புண்ணியனே
எத்தவத் தோர்க்குமி லக்காய்நின்ற
எம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்
வித்தகர் வாழ்பொழில் சூழ்மிழலை
விண்ணிழி கோயில் விரும்பியதே.
1.4.10
44 விண்ணிழி கோயில் விரும்பிமேவும்
வித்தக மென்கொலி தென்றுசொல்லிப்
புண்ணிய னைப்புக லிந்நிலாவு
பூங்கொடி யோடிருந் தானைப்போற்றி
நண்ணிய கீர்த்தி நலங்கொள்கேள்வி
நான்மறை ஞானசம் பந்தன்சொன்ன
பண்ணியல் பாடல்வல் லார்களிந்தப்
பாரொடு விண்பரி பாலகரே.
1.4.11

இவ்விரண்டும் சோழநாட்டிலுள்ளவை. புகலி என்பது சீகாழிக்கொருபெயர்
வீழிமிழலையில் சுவாமிபெயர் - வீழியழகர், தேவியார் - சுந்தரகுசாம்பிகை

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


1.5 திருக்காட்டுப்பள்ளி

பண் - நட்டபாடை

45 செய்யரு கேபுனல் பாயஓங்கிச்
செங்கயல் பாயச் சிலமலர்த்தேன்
கையரு கேகனி வாழையீன்று
கானலெலாங் கமழ் காட்டுப்பள்ளிப்
பையரு கேயழல் வாயவைவாய்ப்
பாம்பணை யான்பணைத் தோளிபாகம்
மெய்யரு கேயுடை யானையுள்கி
விண்டவ ரேறுவர் மேலுலகே.
1.5.1
45 * இப்பதிகத்தில் 2-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.1.5.2
46 திரைகளெல் லாமல ருஞ்சுமந்து
செழுமணி முத்தொடு பொன்வரன்றிக்
கரைகளெல் லாமணி சேர்ந்துரிஞ்சிக்
காவிரி கால்பொரு காட்டுப்பள்ளி
உரைகளெல் லாமுணர் வெய்திநல்ல
உத்தம ராயுயர்ந் தாருலகில்
அரவமெல் லாமரை யார்த்தசெல்வர்க்
காட்செய அல்லல் அறுக்கலாமே.
1.5.3
47 தோலுடை யான்வண்ணப் போர்வையினான்
சுண்ணவெண் ணீறுது தைந்திலங்கு
நூலுடை யானிமை யோர்பெருமான்
நுண்ணறி வால்வழி பாடுசெய்யுங்
காலுடை யான்கரி தாயகண்டன்
காதலிக் கப்படுங் காட்டுப்பள்ளி
மேலுடை யானிமை யாதமுக்கண்
மின்னிடை யாளொடும் வேண்டினானே.
1.5.4
48 சலசல சந்தகி லோடும்உந்திச்
சந்தன மேகரை சார்த்தியெங்கும்
பலபல வாய்த்தலை யார்த்துமண்டி
பாய்ந்திழி காவிரிப் பாங்கரின்வாய்
கலகல நின்றதி ருங்கழலான்
காதலிக் கப்படுங் காட்டுப்பள்ளிச்
சொலவல தொண்டர்க ளேத்தநின்ற
சூலம்வல் லான்கழல் சொல்லுவோமே.
1.5.5
49 தளையவிழ் தண்ணிற நீலம்நெய்தல்
தாமரை செங்கழு நீருமெல்லாங்
களையவி ழுங்குழ லார்கடியக்
காதலிக் கப்படுங் காட்டுப்பள்ளித்
துளைபயி லுங்குழல் யாழ்முரல
துன்னிய இன்னிசை யால்துதைந்த
அளைபயில் பாம்பரை யார்த்தசெல்வர்க்
காட்செய அல்லல் அறுக்கலாமே.
1.5.6
50 முடிகையி னாற்றொடும் மோட்டுழவர்
முன்கைத் தருக்கைக் கரும்பின்கட்டிக்
கடிகையி னாலெறி காட்டுப்பள்ளி
காதல்செய் தான்கரி தாயகண்டன்
பொடியணி மேனியி னானையுள்கிப்
போதொடு நீர்சுமந் தேத்திமுன்னின்
றடிகையி னாற்றொழ வல்லதொண்டர்
அருவினை யைத்துரந் தாட்செய்வாரே.
1.5.7
51 பிறையுடை யான்பெரி யோர்கள்பெம்மான்
பெய்கழல் நாடொறும் பேணியேத்த
மறையுடை யான்மழு வாளுடையான்
வார்தரு மால்கடல் நஞ்சமுண்ட
கறையுடை யான்கன லாடுகண்ணாற்
காமனைக் காய்ந்தவன் காட்டுப்பள்ளிக்
குறையுடை யான்குறட் பூதச்செல்வன்
குரைகழ லேகைகள் கூப்பினோமே.
1.5.8
52 செற்றவர் தம்அர ணம்மவற்றைச்
செவ்வழல் வாயெரி யூட்டிநின்றுங்
கற்றவர் தாந்தொழு தேத்தநின்றான்
காதலிக் கப்படுங் காட்டுப்பள்ளி
உற்றவர் தாமுணர் வெய்திநல்ல
உம்பருள் ளார்தொழு தேத்தநின்ற
பெற்றம ரும்பெரு மானையல்லால்
பேசுவதும் மற்றோர் பேச்சிலோமே.
1.5.9
53 ஒண்டுவ ரார்துகி லாடைமெய்போர்த்
துச்சிகொ ளாமையுண் டேயுரைக்குங்
குண்டர்க ளோடரைக் கூறையில்லார்
கூறுவ தாங்குண மல்லகண்டீர்
அண்டம றையவன் மாலுங்காணா
ஆதியி னானுறை காட்டுப்பள்ளி
வண்டம ரும்மலர்க் கொன்றைமாலை
வார்சடை யான்கழல் வாழ்த்துவோமே.
1.5.10
54 பொன்னியல் தாமரை நீலம்நெய்தல்
போதுக ளாற்பொலி வெய்துபொய்கைக்
கன்னியர் தாங்குடை காட்டுப்பள்ளிக்
காதல னைக்கடற் காழியர்கோன்
துன்னிய இன்னிசை யாற்றுதைந்து
சொல்லிய ஞானசம் பந்தன்நல்ல
தன்னிசை யாற்சொன்ன மாலைபத்துந்
தாங்கவல் லார்புகழ் தாங்குவாரே.
1.5.11

இதுவுஞ் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - ஆரணியச்சுந்தரர், தேவியார் - அகிலாண்டநாயகியம்மை

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


1.6 திருமருகலும் - திருச்செங்காட்டங்குடியும்

வினாவுரை

பண் - நட்டபாடை

55 அங்கமும் வேதமும் ஓதுநாவர்
அந்தணர் நாளும் அடிபரவ
மங்குல் மதிதவழ் மாடவீதி
மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
செங்கய லார்புனற் செல்வமல்கு
சீர்கொள் செங்காட்டங் குடியதனுள்
கங்குல் விளங்கெரி யேந்தியாடுங்
கணபதி யீச்சரங் காமுறவே.
1.6.1
56 நெய்தவழ் மூவெரி காவலோம்பும்
நேர்புரி நூன்மறை யாளரேத்த
மைதவழ் மாட மலிந்தவீதி
மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
செய்தவ நான்மறை யோர்களேத்துஞ்
சீர்கொள் செங்காட்டங் குடியதனுள்
கைதவழ் கூரெரி யேந்தியாடுங்
கணபதி யீச்சரங் காமுறவே.
1.6.2
57 தோலொடு நூலிழை சேர்ந்தமார்பர்
தொகுமறை யோர்கள் வளர்த்தசெந்தீ
மால்புகை போய்விம்மு மாடவீதி
மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
சேல்புல்கு தண்வயல் சோலைசூழ்ந்த
சீர்கொள் செங்காட்டங் குடியதனுள்
கால்புல்கு பைங்கழ லார்க்கஆடுங்
கணபதி யீச்சரங் காமுறவே.
1.6.3
58 நாமரு கேள்வியர் வேள்வியோவா
நான்மறை யோர்வழி பாடுசெய்ய
மாமரு வும்மணிக் கோயில்மேய
மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
தேமரு பூம்பொழிற் சோலைசூழ்ந்த
சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்
காமரு சீர்மகிழ்ந் தெல்லியாடுங்
கணபதி யீச்சரங் காமுறவே.
1.6.4
59 பாடல் முழவும் விழவும்ஓவாப்
பன்மறை யோரவர் தாம்பரவ
மாட நெடுங்கொடி விண்தடவும்
மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
சேடக மாமலர்ச் சோலைசூழ்ந்த
சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்
காடக மேயிட மாகஆடுங்
கணபதி யீச்சரங் காமுறவே.
1.6.5
60 புனையழ லோம்புகை அந்தணாளர்
பொன்னடி நாடொறும் போற்றிசைப்ப
மனைகெழு மாட மலிந்தவீதி
மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
சினைகெழு தண்வயல் சோலைசூழ்ந்த
சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்
கனைவளர் கூரெரி ஏந்தியாடுங்
கணபதி யீச்சரங் காமுறவே.
1.6.6
60 * இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.1.6.7
61 பூண்டங்கு மார்பின் இலங்கைவேந்தன்
பொன்னெடுந் தோள்வரை யாலடர்த்து
மாண்டங்கு நூன்மறை யோர்பரவ
மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
சேண்டங்கு மாமலர்ச் சோலைசூழ்ந்த
சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்
காண்டங்கு தோள்பெயர்த் தெல்லியாடுங்
கணபதி யீச்சரங் காமுறவே.
1.6.8
62 அந்தமும் ஆதியும் நான்முகனும்
அரவணை யானும் அறிவரிய
மந்திர வேதங்க ளோதுநாவர்
மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
செந்தமி ழோர்கள் பரவியேத்துஞ்
சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்
கந்தம் அகிற்புகை யேகமழுங்
கணபதி யீச்சரங் காமுறவே.
1.6.9
63 இலைமரு தேயழ காகநாளும்
இடுதுவர்க் காயொடு சுக்குத்தின்னும்
நிலையமண் டேரரை நீங்கிநின்று
நீதரல் லார்தொழும் மாமருகல்
மலைமகள் தோள்புணர் வாயருளாய்
மாசில்செங் காட்டங் குடியதனுள்
கலைமல்கு தோலுடுத் தெல்லியாடுங்
கணபதி யீச்சரங் காமுறவே.
1.6.10
64 நாலுங் குலைக்கமு கோங்குகாழி
ஞானசம் பந்தன் நலந்திகழும்
மாலின் மதிதவழ் மாடமோங்கும்
மருகலின் மற்றதன் மேல்மொழிந்த
சேலுங் கயலுந் திளைத்தகண்ணார்
சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்
சூலம்வல் லான்கழ லேத்துபாடல்
சொல்லவல் லார்வினை யில்லையாமே.
1.6.11

இவைகளுஞ் சோழநாட்டிலுள்ளவை.
திருமருகலில் சுவாமிபெயர் - மாணிக்கவண்ணர்; தேவியார் - வண்டுவார்குழலி
திருச்செங்காட்டங்குடியில் சுவாமிபெயர் - கணபதீசுவரர்,
தேவியார் - திருக்குழல்நாயகி.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

1.7 திருநள்ளாறும் - திருஆலவாயும்

வினாவுரை

பண் - நட்டபாடை

65 பாடக மெல்லடிப் பாவையோடும்
படுபிணக் காடிடம் பற்றிநின்று
நாடக மாடுநள் ளாறுடைய
நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்
சூடக முன்கை மடந்தைமார்கள்
துணைவரொ டுந்தொழு தேத்திவாழ்த்த
ஆடக மாடம் நெருங்குகூடல்
ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.
1.7.1
66 திங்களம் போதுஞ் செழும்புனலுஞ்
செஞ்சடை மாட்டயல் வைத்துகந்து
நங்கள் மகிழுநள் ளாறுடைய
நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்
பொங்கிள மென்முலை யார்களோடும்
புனமயி லாட நிலாமுளைக்கும்
அங்கள கச்சுதை மாடக்கூடல்
ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.
1.7.2
67 தண்ணறு மத்தமுங் கூவிளமும்
வெண்டலை மாலையுந் தாங்கியார்க்கும்
நண்ணல் அரியநள் ளாறுடைய
நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்
புண்ணிய வாணரும் மாதவரும்
புகுந்துட னேத்தப் புனையிழையார்
அண்ணலின் பாட லெடுக்குங்கூடல்
ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.
1.7.3
68 பூவினில் வாசம் புனலிற்பொற்பு
புதுவிரைச் சாந்தினின் நாற்றத்தோடு
நாவினிற் பாடநள் ளாறுடைய
நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்
தேவர்கள் தானவர் சித்தர்விச்சா
தரர்கணத் தோடுஞ் சிறந்துபொங்கி
(*)ஆவினில் ஐந்துகந் தாட்டுங்கூடல்
ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.
(*) ஆவினிலைந்து - பஞ்சகவ்வியம்.
1.7.4
69 செம்பொன்செய் மாலையும் வாசிகையுந்
திருந்து புகையு மவியும்பாட்டும்
நம்பும்பெ ருமைநள் ளாறுடைய
நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்
உம்பரும் நாக ருலகந்தானும்
ஒலிகடல் சூழ்ந்த வுலகத்தோரும்
அம்புத நால்களால் நீடுங்கூடல்
ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.
1.7.5
70 பாகமுந் தேவியை வைத்துக்கொண்டு
பைவிரி துத்திப் பரியபேழ்வாய்
நாகமும் பூண்டநள் ளாறுடைய
நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்
போகமும் நின்னை மனத்துவைத்துப்
புண்ணியர் நண்ணும் புணர்வுபூண்ட
ஆகமு டையவர் சேருங்கூடல்
ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.
1.7.6
71 கோவண ஆடையும் நீறுப்பூச்சுங்
கொடுமழு ஏந்தலுஞ் செஞ்சடையும்
நாவணப் பாட்டுநள் ளாறுடைய
நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்
பூவண மேனி இளையமாதர்
பொன்னும் மணியுங் கொழித்தெடுத்து
ஆவண வீதியில் ஆடுங்கூடல்
ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.
1.7.7
72 இலங்கை யிராவணன் வெற்பெடுக்க
எழில்விர லூன்றி யிசைவிரும்பி
நலம்கொளச் சேர்ந்த நள்ளாறுடைய
நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்
புலன்களைச் செற்றுப் பொறியைநீக்கிப்
புந்தியிலு நினைச் சிந்தைசெய்யும்
அலங்கல்நல் லார்கள் அமருங்கூடல்
ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.
1.7.8
73 பணியுடை மாலும் மலரினோனும்
பன்றியும் வென்றிப் பறவையாயும்
நணுகல் அரியநள் ளாறுடைய
நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்
மணியொலி சங்கொலி யோடுமற்றை
மாமுர சின்னொலி என்றும்ஓவா
தணிகிளர் வேந்தர் புகுதுங்கூடல்
ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.
1.7.9
74 தடுக்குடைக் கையருஞ் சாக்கியருஞ்
சாதியின் நீங்கிய வத்தவத்தர்
நடுக்குற நின்றநள் ளாறுடைய
நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்
எடுக்கும் விழவும் நன்னாள்விழவும்
இரும்பலி யின்பினோ டெத்திசையும்
அடுக்கும் பெருமைசேர் மாடக்கூடல்
ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.
1.7.10
75 அன்புடை யானை அரனைக்கூடல்
ஆலவாய் மேவிய தென்கொலென்று
நன்பொனை நாதனை நள்ளாற்றானை
நயம்பெறப் போற்றி நலங்குலாவும்
பொன்புடை சூழ்தரு மாடக்காழிப்
பூசுரன் ஞானசம் பந்தன்சொன்ன
இன்புடைப் பாடல்கள் பத்தும்வல்லார்
இமையவ ரேத்த இருப்பர்தாமே.
1.7.11

இதுவுஞ் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - தெர்ப்பாரணியேசுவரர்;
தேவியார் - போகமார்த்தபூண்முலையம்மை.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

1.8 திருஆவூர்ப்பசுபதீச்சரம்

பண் - நட்டபாடை

76 புண்ணியர் பூதியர் பூதநாதர்
புடைபடு வார்தம் மனத்தார்திங்கட்
கண்ணிய ரென்றென்று காதலாளர்
கைதொழு தேத்த இருந்தவூராம்
விண்ணுயர் மாளிகை மாடவீதி
விரைகமழ் சோலை சுலாவியெங்கும்
பண்ணியல் பாடல றாதஆவூர்ப்
பசுபதி யீச்சரம் பாடுநாவே.
1.8.1
77 முத்தியர் மூப்பில ராப்பினுள்ளார்
முக்கணர் தக்கன்றன் வேள்விசாடும்
அத்திய ரென்றென் றடியரேத்தும்
ஐயன் அணங்கொ டிருந்தவூராம்
தொத்திய லும்பொழில் மாடுவண்டு
துதைந்தெங்கும் தூமதுப் பாயக்கோயிற்
பத்திமைப் பாடல றாதஆவூர்ப்
பசுபதி யீச்சரம் பாடுநாவே.
1.8.2
78 பொங்கி வரும்புனற் சென்னிவைத்தார்
போம்வழி வந்திழி வேற்றமானார்
இங்குயர் ஞானத்தர் வானோரேத்தும்
இறையவ ரென்றுமி ருந்தவூராம்
தெங்குயர் சோலைசே ராலைசாலி
திளைக்கும் விளைவயல் சேரும்பொய்கைப்
பங்கய மங்கை விரும்புமாவூர்ப்
பசுபதி யீச்சரம் பாடுநாவே.
1.8.3
79 தேவியோர் கூறின ரேறதேறுஞ்
செலவினர் நல்குர வென்னைநீக்கும்
ஆவிய ரந்தண ரல்லல்தீர்க்கும்
அப்பனா ரங்கே அமர்ந்தவூராம்
பூவிய லும்பொழில் வாசம்வீசப்
புரிகுழ லார்சுவ டொற்றிமுற்றப்
பாவியல் பாடல றாதஆவூர்ப்
பசுபதி யீச்சரம் பாடுநாவே.
1.8.4
80 இந்தணை யுஞ்சடை யார்விடையார்
இப்பிறப் பென்னை யறுக்கவல்லார்
வந்தணைந் தின்னிசை பாடுவார்பால்
மன்னினர் மன்னி யிருந்தவூராம்
கொந்தணை யுங்குழ லார்விழவில்
கூட்டமி டையிடை சேரும்வீதிப்
பந்தணை யும்விர லார்தம்ஆவூர்ப்
பசுபதி யீச்சரம் பாடுநாவே.
1.8.5
81 குற்ற மறுத்தார் குணத்தினுள்ளார்
கும்பிடு வார்தமக் கன்புசெய்வார்
ஒற்றை விடையினர் நெற்றிக்கண்ணார்
உறைபதி யாகுஞ் செறிகொள்மாடஞ்
சுற்றிய வாசலின் மாதர்விழாச்
சொற்கவி பாடநி தானம்நல்கப்
பற்றிய கையினர் வாழும்ஆவூர்ப்
பசுபதி யீச்சரம் பாடுநாவே.
1.8.6
82 நீறுடை யார்நெடு மால்வணங்கும்
நிமிர்சடை யார்நினை வார்தமுள்ளம்
கூறுடை யாருடை கோவணத்தார்
குவலய மேத்த இருந்தவூராம்
தாறுடை வாழையிற் கூழைமந்தி
தகுகனி யுண்டுமிண் டிட்டினத்தைப்
பாறிடப் பாய்ந்து பயிலும்ஆவூர்ப்
பசுபதி யீச்சரம் பாடுநாவே.
1.8.7
83 வெண்டலை மாலை விரவிப்பூண்ட
மெய்யுடை யார்விறல் ஆரரக்கன்
வண்டமர் பூமுடி செற்றுகந்த
மைந்த ரிடம்வள மோங்கியெங்குங்
கண்டவர் சிந்தைக் கருத்தின்மிக்கார்
கதியரு ளென்றுகை யாரக்கூப்பிப்
பண்டலர் கொண்டு பயிலும்ஆவூர்ப்
பசுபதி யீச்சரம் பாடுநாவே.
1.8.8
84 மாலும் அயனும் வணங்கிநேட
மற்றவ ருக்கெரி யாகிநீண்ட
சீலம் அறிவரி தாகிநின்ற
செம்மையி னாரவர் சேருமூராம்
கோல விழாவி னரங்கதேறிக்
கொடியிடை மாதர்கள் மைந்தரோடும்
பாலென வேமொழிந் தேத்தும்ஆவூர்ப்
பசுபதி யீச்சரம் பாடுநாவே.
1.8.9
85 பின்னிய தாழ்சடை யார்பிதற்றும்
பேதைய ராஞ்சமண் சாக்கியர்கள்
தன்னிய லும்முரை கொள்ளகில்லாச்
சைவரி டந்தள வேறுசோலைத்
துன்னிய மாதரும் மைந்தர்தாமும்
சுனையிடை மூழ்கித் தொடர்ந்தசிந்தைப்
பன்னிய பாடல் பயிலும்ஆவூர்ப்
பசுபதி யீச்சரம் பாடுநாவே.
1.8.10
86 எண்டிசை யாரும் வணங்கியேத்தும்
எம்பெரு மானையெ ழில்கொளாவூர்ப்
பண்டுரி யார்சிலர் தொண்டர்போற்றும்
பசுபதி யீச்சரத் தாதிதன்மேல்
கண்டல்கள் மிண்டிய கானற்காழிக்
கவுணியன் ஞானசம் பந்தன்சொன்ன
கொண்டினி தாயிசை பாடியாடிக்
கூடு மவருடை யார்கள்வானே.
1.8.11

இது சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பசுபதீச்சுரர்,
தேவியார் - மங்களநாயகியம்மை
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

1.9 திருவேணுபுரம்

பண் - நட்டபாடை

87 வண்டார்குழ லரிவையொடும் பிரியாவகை பாகம்
பெண்டான்மிக ஆனான்பிறைச் சென்னிப்பெரு மானூர்
தண்டாமரை மலராளுறை தவளந்நெடு மாடம்
விண்டாங்குவ போலும்மிகு வேணுபுர மதுவே.
1.9.1
80 படைப்பும்நிலை யிறுதிப்பயன் பருமையொடு நேர்மை
கிடைப்பல்கண முடையான்கிறி பூதப்படை யானூர்
(*)புடைப்பாளையின் கமுகின்னொடு புன்னைமலர் நாற்றம்
விடைத்தேவரு தென்றல்மிகு வேணுபுர மதுவே.

(*) குடைப்பாளை என்றும் பாடம்.
1.9.2
89 கடந்தாங்கிய கரியையவர் வெருவவுரி போர்த்துப்
படந்தாங்கிய அரவக்குழைப் பரமேட்டிதன் பழவூர்
நடந்தாங்கிய நடையார்நல பவளத்துவர் வாய்மேல்
விடந்தாங்கிய கண்ணார்பயில் வேணுபுர மதுவே.
1.9.3
90 தக்கன்தன சிரமொன்றினை அரிவித்தவன் தனக்கு
மிக்கவ்வரம் அருள்செய்தஎம் விண்ணோர்பெரு மானூர்
பக்கம்பல மயிலாடிட மேகம்முழ வதிர
மிக்கம்மது வண்டார்பொழில் வேணுபுர மதுவே.
1.9.4
91 நானாவித உருவாய்நமை யாள்வான்நணு காதார்
வானார்திரி புரமூன்றெரி யுண்ணச்சிலை தொட்டான்
தேனார்ந்தெழு கதலிக்கனி யுண்பான்திகழ் மந்தி
மேனோக்கிநின் றிரங்கும்பொழில் வேணுபுர மதுவே.
1.9.5
92 மண்ணோர்களும் விண்ணோர்களும் வெருவிமிக அஞ்சக்
கண்ணார்சலம் மூடிக்கட லோங்கவ்வுயர்ந் தானூர்
தண்ணார்நறுங் கமலம்மலர் சாயவ்விள வாளை
(**)விண்ணோர்துதி கொள்ளும்வியன் வேணுபுர மதுவே.
(**) விண்ணார் குதிகொள்ளும் என்றும் பாடம்.
1.9.6
* இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.1.9.7
93 மலையான்மகள் அஞ்சவ்வரை எடுத்தவ்வலி யரக்கன்
தலைதோளவை நெரியச்சரண் உகிர்வைத்தவன் தன்னூர்
கலையாறொடு சுருதித்தொகை கற்றோர்மிகு கூட்டம்
விலையாயின சொற்றேர்தரு வேணுபுர மதுவே.
1.9.8
94 வயமுண்டவ மாலும்அடி காணாதல மாக்கும்
பயனாகிய பிரமன்படு தலையேந்திய பரனூர்
கயமேவிய சங்கந்தரு கழிவிட்டுயர் செந்நெல்
வியன்மேவிவந் துறங்கும்பொழில் வேணுபுர மதுவே.
1.9.9
95 மாசேறிய உடலாரமண் (*)கழுக்கள்ளொடு தேரர்
தேசேறிய பாதம்வணங் காமைத்தெரி யானூர்
தூசேறிய அல்குல்துடி இடையார்துணை முலையார்
வீசேறிய புருவத்தவர் வேணுபுர மதுவே.
(*) குழுக்கள் என்றும் பாடம்.
1.9.10
96 வேதத்தொலி யானும்மிகு வேணுபுரந் தன்னைப்
பாதத்தினின் மனம்வைத்தெழு பந்தன்தன பாடல்
ஏதத்தினை இல்லா இவை பத்தும்இசை வல்லார்
கேதத்தினை இல்லார்சிவ கெதியைப்பெறு வாரே. 11

வேணுபுரம் என்பது சீகாழிக்கொருபெயர்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

1.10 திரு அண்ணாமலை

பண் - நட்டபாடை

97 உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவன்
பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ
மண்ணார்ந்தன அருவித்திரள் மழலைம்முழ வதிரும்
அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ணம் அறுமே.
1.10.1
98 தேமாங்கனி கடுவன்கொள விடுகொம்பொடு தீண்டித்
தூமாமழை துறுவன்மிசை சிறுநுண்துளி சிதற
ஆமாம்பிணை யணையும்பொழில் அண்ணாமலை யண்ணல்
பூமாங்கழல் புனைசேவடி நினைவார்வினை யிலரே.
1.10.2
99 பீலிம்மயில் பெடையோடுறை பொழில்சூழ் கழைமுத்தஞ்
சூலிம்மணி தரைமேல்நிறை சொரியும்விரி சாரல்
ஆலிம்மழை தவழும்பொழில் அண்ணாமலை அண்ணல்
காலன்வலி தொலைசேவடி தொழுவாரன புகழே.
1.10.3
100 உதிரும்மயி ரிடுவெண்டலை கலனாவுல கெல்லாம்
எதிரும்பலி யுணலாகவும் எருதேறுவ தல்லால்
முதிருஞ்சடை இளவெண்பிறை முடிமேல்கொள அடிமேல்
அதிருங்கழல் அடிகட்கிடம் அண்ணாமலை யதுவே.
1.10.4
101 மரவஞ்சிலை தரளம்மிகு மணியுந்துவெள் ளருவி
அரவஞ்செய முரவம்படும் அண்ணாமலை யண்ணல்
உரவஞ்சடை யுலவும்புனல் உடனாவதும் ஓரார்
குரவங்கமழ் நறுமென்குழல் உமைபுல்குதல் குணமே.
1.10.5
102 பெருகும்புனல் அண்ணாமலை பிறைசேர்கடல் நஞ்சைப்
பருகுந்தனை துணிவார்பொடி அணிவாரது பருகிக்
கருகும்மிட றுடையார்கமழ் சடையார்கழல் பரவி
உருகும்மனம் உடையார்தமக் குறுநோயடை யாவே.
1.10.6
103 கரிகாலன குடர்கொள்வன கழுகாடிய காட்டில்
நரியாடிய நகுவெண்டலை யுதையுண்டவை யுருள
எரியாடிய இறைவர்க்கிடம் இனவண்டிசை முரல
அரியாடிய கண்ணாளொடும் அண்ணாமலை யதுவே.
1.10.7
104 ஒளிறூபுலி அதளாடையன் உமையஞ்சுதல் பொருட்டால்
பிளிறூகுரல் மதவாரணம் வதனம்பிடித் துரித்து
வெளிறூபட விளையாடிய விகிர்தன்னிரா வணனை
அளறூபட அடர்த்தானிடம் அண்ணாமலை யதுவே.
1.10.8
105 விளவார்கனி படநூறிய கடல்வண்ணனும் வேதக்
கிளர்தாமரை மலர்மேலுறை கேடில்புக ழோனும்
அளவாவணம் அழலாகிய அண்ணாமலை யண்ணல்
தளராமுலை முறுவல்உமை தலைவன்னடி சரணே.
1.10.9
106 வேர்வந்துற மாசூர்தர வெயில்நின்றுழல் வாரும்
மார்வம்புதை மலிசீவர மறையாவரு வாரும்
ஆரம்பர்தம் உரைகொள்ளன்மின் அண்ணாமலை யண்ணல்
கூர்வெண்மழுப் படையான்நல கழல்சேர்வது குணமே.
1.10.10
107 வெம்புந்திய கதிரோனொளி விலகும்விரி சாரல்
அம்புந்திமூ வெயிலெய்தவன் அண்ணாமலை யதனைக்
கொம்புந்துவ குயிலாலுவ குளிர்காழியுள் ஞான
சம்பந்தன தமிழ்வல்லவர் அடிபேணுதல் தவமே.
1.10.11

இது நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - அருணாசலேசுவரர்,
தேவியார் - உண்ணாமுலையம்மை
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

1.11 திருவீழிமிழலை

பண் - நட்டபாடை

108 சடையார்புன லுடையானொரு சரிகோவண முடையான்
படையார்மழு வுடையான்பல பூதப்படை யுடையான்
மடமான்விழி யுமைமாதிடம் உடையானெனை யுடையான்
விடையார்கொடி யுடையானிடம் வீழிம்மிழ லையே.
1.11.1
109 ஈறாய்முத லொன்றாயிரு பெண்ணாண்குண மூன்றாய்
மாறாமறை நான்காய்வரு பூதம்மவை ஐந்தாய்
ஆறார்சுவை ஏழோசையொ டெட்டுத்திசை தானாய்
வேறாயுடன் ஆனானிடம் வீழிம்மிழ லையே.
1.11.2
110 வம்மின்னடி யீர்நாண்மல ரிட்டுத்தொழு துய்ய
உம்மன்பினொ டெம்மன்புசெய் தீசன்னுறை கோயில்
மும்மென்றிசை முரல்வண்டுகள் கொண்டித்திசை யெங்கும்
விம்மும்பொழில் சூழ்தண்வயல் வீழிம்மிழ லையே.
1.11.3
111 பண்ணும்பதம் ஏழும்பல வோசைத்தமி ழவையும்
உண்ணின்றதொர் சுவையும்முறு தாளத்தொலி பலவும்
மண்ணும்புனல் உயிரும்வரு காற்றுஞ்சுடர் மூன்றும்
விண்ணும்முழு தானானிடம் வீழிம்மிழ லையே.
1.11.4
112 ஆயாதன சமயம்பல அறியாதவன் நெறியின்
தாயானவன் உயிர்கட்குமுன் தலையானவன் மறைமுத்
தீயானவன் சிவனெம்மிறை செல்வத்திரு வாரூர்
மேயானவன் உறையும்மிடம் வீழிம்மிழ லையே.
1.11.5
113 கல்லால்நிழற் கீழாயிடர் காவாயென வானோர்
எல்லாம்ஒரு தேராயயன் மறைபூட்டிநின் றுய்ப்ப
வல்லாய்எரி காற்றீர்க்கரி கோல்வாசுகி நாண்கல்
வில்லால்எயில் எய்தானிடம் வீழிம்மிழ லையே.
1.11.6
114 கரத்தான்மலி சிரத்தான்கரி யுரித்தாயதொர் படத்தான்
புரத்தார்பொடி படத்தன்னடி பணிமூவர்கட் கோவா
வரத்தான்மிக அளித்தானிடம் வளர்புன்னைமுத் தரும்பி
விரைத்தாதுபொன் மணியீன்றணி வீழிம்மிழ லையே.
1.11.7
115 முன்னிற்பவர் இல்லாமுரண் அரக்கன்வட கயிலை
தன்னைப்பிடித் தெடுத்தான்முடி தடந்தோளிற வூன்றிப்
பின்னைப்பணிந் தேத்தப்பெரு வாள்பேரொடு கொடுத்த
மின்னிற்பொலி சடையானிடம் வீழிம்மிழ லையே.
1.11.8
116 பண்டேழுல குண்டானவை கண்டானுமுன் னறியா
ஒண்டீயுரு வானானுறை கோயில்நிறை பொய்கை
வண்டாமரை மலர்மேல்மட அன்னந்நடை பயில
வெண்டாமரை செந்தாதுதிர் வீழிம்மிழ லையே.
1.11.9
117 மசங்கற்சமண் மண்டைக்கையர் குண்டக்குண மிலிகள்
இசங்கும்பிறப் பறுத்தானிடம் இருந்தேன்களித் திரைத்துப்
பசும்பொற்கிளி களிமஞ்ஞைகள் ஒளிகொண்டெழு பகலோன்
விசும்பைப்பொலி விக்கும்பொழில் வீழிம்மிழ லையே.
1.11.10
118 வீழிம்மிழ லைம்மேவிய விகிர்தன்றனை விரைசேர்
காழிந்நகர்க் கலைஞானசம் பந்தன்தமிழ் பத்தும்
யாழின்னிசை வல்லார்சொலக் கேட்டாரவ ரெல்லாம்
(*)ஊழின்மலி வினைபோயிட உயர்வானடை வாரே.
(*) ஊழின்வலி என்றும் பாடம்.
1.11.11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வீழியழகர்,
தேவியார் - சுந்தரகுசாம்பிகை.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

1.12 திருமுதுகுன்றம்

பண் - நட்டபாடை

119 மத்தாவரை நிறுவிக்கடல் கடைந்தவ்விடம் உண்ட
தொத்தார்தரு மணிநீண்முடிச் சுடர்வண்ணன திடமாங்
கொத்தார்மலர் குளிர்சந்தகில் ஒளிர்குங்குமங் கொண்டு
முத்தாறுவந் தடிவீழ்தரு முதுகுன்றடை வோமே.
1.12.1
120 தழையார்வட வியவீதனில் தவமேபுரி சைவன்
இழையாரிடை மடவாளொடும் இனிதாவுறை விடமாம்
மழைவானிடை முழவவ்வெழில் வளைவாளுகிர் எரிகண்
முழைவாளரி குமிறும்முயர் முதுகுன்றடை வோமே.
1.12.2
121 விளையாததொர் பரிசில்வரு பசுபாசவே தனையொண்
டளையாயின தவிரவ்வருள் தலைவன்னது சார்பாம்
களையார்தரு கதிராயிரம் உடையவ்வவ னோடு
முளைமாமதி தவழும்முயர் முதுகுன்றடை வோமே.
1.12.3
122 சுரர்மாதவர் தொகுகின்னரர் அவரோதொலை வில்லா
நரரானபன் முனிவர்தொழ இருந்தானிடம் நலமார்
அரசார்வர அணிபொற்கல னவைகொண்டுபன் னாளும்
முரசார்வரு மணமொய்ம்புடை முதுகுன்றடை வோமே.
1.12.4
123 அறையார்கழல் அந்தன்றனை அயில்மூவிலை யழகார்
கறையார்நெடு வேலின்மிசை யேற்றானிடங் கருதில்
மறையாயின பலசொல்லியொண் மலர்சாந்தவை கொண்டு
முறையால்மிகு முனிவர்தொழு முதுகுன்றடை வோமே.
1.12.5
124 ஏவார்சிலை எயினன்னுரு வாகியெழில் விசயற்
கோவாதவின் னருள்செய்தஎம் மொருவற்கிடம் உலகில்
சாவாதவர் பிறவாதவர் தவமேமிக வுடையார்
மூவாதபன் முனிவர்தொழு முதுகுன்றடை வோமே.
1.12.6
125 தழல்சேர்தரு திருமேனியர் சசிசேர்சடை (*)முடிய
மழமால்விடை மிகவேறிய மறையோனுறை கோயில்
விழவோடொலி மிகுமங்கையர் தகுமாடக சாலை
முழவோடிசை (**)நடமுஞ்செயும் முதுகுன்றடை வோமே.
(*) முடியர் என்றும் பாடம்.
(**) நடமுன் செயும் என்றும் பாடம்.
1.12.7
127 செதுவாய்மைகள் கருதிவ்வரை யெடுத்ததிற லரக்கன்
கதுவாய்கள்பத் தலறியிடக் கண்டானுறை கோயில்
மதுவாயசெங் காந்தள்மலர் நிறையக்குறை வில்லா (*)
முதுவேய்கள்முத் துதிரும்பொழில் முதுகுன்றடை வோமே.
(*) குறை யில்லா என்றும் பாடம்.
1.12.8
127 இயலாடிய பிரமன்னரி இருவர்க்கறி வரிய
செயலாடிய தீயாருரு வாகியெழு செல்வன்
புயலாடுவண் பொழில்சூழ்புனற் படப்பைத்தடத் தருகே
முயலோடவெண் கயல்பாய்தரு முதுகுன்றடை வோமே.
1.12.9
128 அருகரொடு புத்தரவ ரறியாவரன் மலையான்
மருகன்வரும் இடபக்கொடி யுடையானிடம் மலரார்
கருகுகுழன் மடவார்கடி குறிஞ்சியது பாடி
முருகன்னது பெருமைபகர் முதுகுன்றடை வோமே.
1.12.10
129 முகில்சேர்தரு முதுகுன்றுடை யானைம்மிகு தொல்சீர்ப்
புகலிந்நகர் மறைஞானசம் பந்தன்னுரை செய்த
நிகரில்லன தமிழ்மாலைகள் இசையோடிவை பத்தும்
பகரும்மடி யவர்கட்கிடர் பாவம்மடை யாவே.
1.12.11

இத்தலம் நடுநாட்டிலுள்ளது - இதுவே விருத்தாசலம்.
சுவாமிபெயர் - பழமலைநாதர்;
தேவியார் - பெரியநாயகியம்மை.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

1.13 திருவியலூர்

பண் - நட்டபாடை

130 குரவங்கமழ் நறுமென்குழல் அரிவையவள் வெருவ
பொருவெங்கரி படவென்றதன் உரிவையுடல் அணிவோன்
அரவும்மலை புனலும்மிள மதியுந்நகு தலையும்
விரவுஞ்சடை யடிகட்கிடம் விரிநீர்விய லூரே.
1.13.1
131 ஏறார்தரும் ஒருவன்பல உருவன்னிலை யானான்
ஆறார்தரு சடையன்னன லுருவன்புரி வுடையான்
மாறார்புரம் எரியச்சிலை வளைவித்தவன் மடவாள்
வீறார்தர நின்றானிடம் விரிநீர்விய லூரே.
1.13.2
132 செம்மென்சடை யவைதாழ்வுற மடவார்மனை தோறும்
பெய்ம்மின்பலி எனநின்றிசை பகர்வாரவ ரிடமாம்
உம்மென்றெழும் அருவித்திரள் வரைபற்றிட உறைமேல்
விம்மும்பொழில் கெழுவும்வயல் விரிநீர்விய லூரே.
1.13.3
133 அடைவாகிய அடியார்தொழ அலரோன்றலை யதனில்
மடவாரிடு பலிவந்துண லுடையானவ னிடமாங்
கடையார்தர அகிலார்கழை முத்தம்நிரை சிந்தி
மிடையார்பொழில் புடைசூழ்தரு விரிநீர்விய லூரே.
1.13.4
134 எண்ணார்தரு பயனாயய னவனாய்மிகு கலையாய்ப்
பண்ணார்தரு மறையாயுயர் பொருளாயிறை யவனாய்க்
கண்ணார்தரும் உருவாகிய கடவுள்ளிட மெனலாம்
விண்ணோரொடு மண்ணோர்தொழு விரிநீர்விய லூரே.
1.13.5
135 வசைவிற்கொடு வருவேடுவ னவனாய்நிலை யறிவான்
திசையுற்றவர் காணச்செரு மலைவான்நிலை யவனை
அசையப்பொரு தசையாவணம் அவனுக்குயர் படைகள்
விசையற்கருள் செய்தானிடம் விரிநீர்வியலூரே.
1.13.6
136 மானார்அர வுடையான்இர வுடையான்பகல் நட்டம்
ஊனார்தரும் உயிரானுயர் விசையான்விளை பொருள்கள்
தானாகிய தலைவன்னென நினைவாரவ ரிடமாம்
மேனாடிய விண்ணோர்தொழும் விரிநீர்விய லூரே.
1.13.7
137 பொருவாரெனக் கெதிராரெனப் பொருப்பையெடுத் தான்றன்
கருமால்வரை கரந்தோளுரங் கதிர்நீள்முடி நெரிந்து
சிரமாயின கதறச்செறி கழல்சேர்திரு வடியின்
விரலாலடர் வித்தானிடம் விரிநீர்விய லூரே.
1.13.8
138 வளம்பட்டலர் மலர்மேலயன் மாலும்மொரு வகையால்
அளம்பட்டறி வொண்ணாவகை அழலாகிய அண்ணல்
உளம்பட்டெழு தழல்தூணதன் நடுவேயொரு உருவம்
விளம்பட்டருள் செய்தானிடம் விரிநீர்விய லூரே.
1.13.9
139 தடுக்காலுடல் மறைப்பாரவர் தவர்சீவர மூடிப்
பிடக்கேயுரை செய்வாரொடு பேணார்நமர் பெரியோர்
கடற்சேர்தரு விடமுண்டமு தமரர்க்கருள் செய்த
விடைச்சேர்தரு கொடியானிடம் விரிநீர்விய லூரே.
1.13.10
140 விளங்கும்பிறை சடைமேலுடை விகிர்தன்விய லூரைத்
தளங்கொண்டதொர் புகலித்தகு தமிழ்ஞானசம் பந்தன்
துளங்கில்தமிழ் பரவித்தொழும் அடியாரவர் என்றும்
விளங்கும்புகழ் அதனோடுயர் விண்ணும்முடை யாரே.
1.13.11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - யோகாநந்தேசுவரர்;
தேவியார் - சவுந்தரநாயகியம்மை;
சாந்தநாயகியம்மை என்றும் பாடம்.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

1.14 திருக்கொடுங்குன்றம்
பண் - நட்டபாடை

141 வானிற்பொலி வெய்தும்மழை மேகங்கிழித் தோடிக்
கூனற்பிறை சேருங்குளிர் சாரற்கொடுங் குன்றம்
ஆனிற்பொலி வைந்தும்மமர்ந் தாடியுல கேத்தத்
தேனிற்பொலி மொழியாளொடு மேயான்திரு நகரே.
1.14.1
142 மயில்புல்குதண் பெடையோடுடன் ஆடும்வளர் சாரல்
குயிலின்னிசை பாடுங்குளிர் சோலைக்கொடுங் குன்றம்
அயில்வேல்மலி நெடுவெஞ்சுடர் அனலேந்திநின் றாடி
எயில்முன்பட எய்தானவன் மேயவ்வெழில் நகரே.
1.14.2
143 மிளிரும்மணி பைம்பொன்னொடு விரைமாமல ருந்திக்
குளிரும்புனல் பாயுங்குளிர் சாரற்கொடுங் குன்றம்
கிளர்கங்கையொ டிளவெண்மதி கெழுவுஞ்சடை தன்மேல்
வளர்கொன்றையும் மதமத்தமும் வைத்தான்வள நகரே.
1.14.3
144 பருமாமத கரியோடரி யிழியும்விரி சாரல்
குருமாமணி பொன்னோடிழி யருவிக்கொடுங் குன்றம்
பொருமாஎயில் வரைவிற்றரு கணையிற்பொடி செய்த
பெருமானவன் உமையாளொடு மேவும்பெரு நகரே.
1.14.4
145 மேகத்திடி குரல்வந்தெழ வெருவிவ்வரை யிழியும்
கூகைக்குலம் ஓடித்திரி சாரற்கொடுங் குன்றம்
நாகத்தொடும் இளவெண்பிறை சூடிந்நல மங்கை
பாகத்தவன் இமையோர்தொழ மேவும்பழ நகரே.
1.14.5
146 கைம்மாமத கரியின்னினம் இடியின்குர லதிரக்
கொய்ம்மாமலர்ச் சோலைபுக மண்டுங்கொடுங் குன்றம்
அம்மானென உள்கித்தொழு வார்கட்கருள் செய்யும்
பெம்மானவன் இமையோர்தொழ மேவும்பெரு நகரே.
1.14.6
147 மரவத்தொடு மணமாதவி மௌவல்லது விண்ட
குரவத்தொடு விரவும்பொழில் சூழ்தண்கொடுங் குன்றம்
அரவத்தொடு மிளவெண்பிறை விரவும்மலர்க் கொன்றை
நிரவச்சடை முடிமேலுடன் வைத்தான்நெடு நகரே.
1.14.7
148 முட்டாமுது கரியின்னினம் முதுவேய்களை முனிந்து
குட்டாச்சுனை யவைமண்டிநின் றாடுங்கொடுங் குன்றம்
ஒட்டாவரக் கன்றன்முடி ஒருபஃதவை யுடனே
பிட்டானவன் உமையாளொடு மேவும்பெரு நகரே.
1.14.8
149 அறையும்மரி குரலோசையை அஞ்சியடும் ஆனை
குறையும்மன மாகிம்முழை வைகுங்கொடுங் குன்றம்
மறையும்மவை யுடையானென நெடியானென இவர்கள்
இறையும்மறி வொண்ணாதவன் மேயவ்வெழில் நகரே.
1.14.9
150 மத்தக்களி றாளிவ்வர வஞ்சிம்மலை தன்னைக்
குத்திப்பெரு முழைதன்னிடை வைகுங்கொடுங் குன்றம்
புத்தரொடு பொல்லாமனச் சமணர்புறங் கூறப்
பத்தர்க்கருள் செய்தானவன் மேயபழ நகரே.
1.14.10
151 கூனற்பிறை சடைமேல்மிக வுடையான்கொடுங் குன்றைக்
கானற்கழு மலமாநகர்த் தலைவன்நல கவுணி
ஞானத்துயர் சம்பந்தன நலங்கொள்தமிழ் வல்லார்
ஊனத்தொடு துயர்தீர்ந்துல கேத்தும்மெழி லோரே.
1.14.11

இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - கொடுங்குன்றேசுவரர்; கொடுங்குன்றீசர் என்றும் பாடம்.
தேவியார் - அமுதவல்லியம்மை; குயிலமுதநாயகி என்றும் பாடம்.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

1.15 திருநெய்த்தானம்

பண் - நட்டபாடை

152 மையாடிய கண்டன்மலை மகள்பாகம துடையான்
கையாடியகேடில் கரியுரிமூடிய வொருவன்
செய்யாடிய குவளைம்மலர் நயனத்தவ ளோடும்
நெய்யாடிய பெருமானிடம் நெய்த்தானமெ னீரே.
1.15.1
152 பறையும்பழி பாவம்படு துயரம்பல தீரும்
பிறையும்புனல் அரவும்படு சடையெம்பெருமா னூர்
அறையும்புனல் வருகாவிரி அலைசேர்வட கரைமேல்
நிறையும்புனை மடவார்பயில் நெய்த்தானமெ னீரே.
1.15.2
154 பேயாயின பாடப்பெரு நடமாடிய பெருமான்
வேயாயின தோளிக்கொரு பாகம்மிக வுடையான்
தாயாகிய வுலகங்களை நிலைபேறுசெய் தலைவன்
நேயாடிய பெருமானிடம் நெய்த்தானமெ னீரே.
1.15.3
155 சுடுநீறணி யண்ணல்சுடர் சூலம்மனல் ஏந்தி
நடுநள்ளிருள் நடமாடிய நம்பன்னுறை யிடமாம்
கடுவாளிள அரவாடுமிழ் கடல்நஞ்சம துண்டான்
நெடுவாளைகள் குதிகொள்ளுயர் நெய்த்தானமெ னீரே.
1.15.4
156 நுகராரமொ டேலம்மணி செம்பொன்னுரை யுந்திப்
பகராவரு புனற்காவிரி பரவிப்பணிந் தேத்தும்
நிகரான்மண லிடுதன்கரை(*) நிகழ்வாயநெய்த் தான
நகரானடி யேத்தந்நமை நடலையடை யாவே.
(*) தண்கரை என்றும் பாடம்.
1.15.5
157 விடையார்கொடி யுடையவ்வணல் வீந்தார்வெளை யெலும்பும்
உடையார்நறு மாலைச்சடை யுடையாரவர் மேய
புடையேபுனல் பாயும்வயல் பொழில்சூழ்தணெய்த்(*) தானம்
அடையாதவ ரென்றும்அம ருலகம்மடை யாரே.
(*) சூழ்ந்த நெய்த்தானம் என்றும் பாடம்.
1.15.6
158 நிழலார்வயல் கமழ்சோலைகள் நிறைகின்றநெய்த் தானத்
தழலானவன் அனலங்கையி லேந்தியழ காய
கழலானடி நாளுங்கழ லாதேவிட லின்றித்
தொழலாரவர் நாளுந்துய ரின்றித்தொழு வாரே.
1.15.7
159 அறையார்கட லிலங்கைக்கிறை யணிசேர்கயி லாயம்
இறையாரமுன் எடுத்தான்இரு பதுதோளிற ஊன்றி
நிறையார்புனல் நெய்த்தானன்நன் நிகழ்சேவடி பரவக்
கறையார்கதிர் வாளீந்தவர் கழலேத்துதல் கதியே.
1.15.8
160 கோலம்முடி நெடுமாலொடு கொய்தாமரை யானும்
சீலம்மறி வரிதாயொளி திகழ்வாயநெய்த் தானம்
காலம்பெற மலர்நீரவை தூவித்தொழு தேத்தும்
ஞாலம்புகழ் அடியாருடல் உறுநோய்நலி யாவே.
1.15.9
161 மத்தம்மலி சித்தத்திறை மதியில்லவர் சமணர்
புத்தரவர் சொன்னம்மொழி பொருளாநினை யேன்மின்
நித்தம்பயில் நிமலன்னுறை நெய்த்தானம தேத்தும்
சித்தம்முடை யடியாருடல் செறுநோயடை யாவே.
1.15.10
162 தலம்மல்கிய புனற்காழியுள் தமிழ்ஞானசம் பந்தன்
நிலம்மல்கிய புகழான்மிகு நெய்த்தானனை நிகரில்
பலம்மல்கிய பாடல்லிவை பத்தும்மிக வல்லார்
சிலமல்கிய செல்வன்னடி சேர்வர்சிவ கதியே.
1.15.11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - நெய்யாடியப்பர்,
தேவியார் - வாலாம்பிகையம்மை.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

1.16 திருப்புள்ளமங்கை - திரு ஆலந்துறை

பண் - நட்டபாடை

163 பாலுந்துறு திரளாயின பரமன்பிர மன்தான்
போலுந்திற லவர்வாழ்தரு பொழில்சூழ்புள மங்கைக்
காலன்திற லறச்சாடிய கடவுள்ளிடங் கருதில்
ஆலந்துறை தொழுவார்தமை யடையாவினை தானே.
1.16.1
164 மலையான்மகள் கணவன்மலி கடல்சூழ்தரு தன்மைப்
புலையாயின களைவானிடம் பொழில்சூழ்புள மங்கைக்
கலையால்மலி மறையோரவர் கருதித்தொழு தேத்த
அலையார்புனல் வருகாவிரி ஆலந்துறை அதுவே.
1.16.2
165 கறையார்மிட றுடையான்கமழ் கொன்றைச்சடை முடிமேல்
பொறையார்தரு கங்கைப்புன லுடையான்புள மங்கைச்
சிறையார்தரு களிவண்டறை பொழில்சூழ்திரு வாலந்
துறையானவன் நறையார்கழல் தொழுமின்துதி செய்தே.
1.16.3
166 தணியார்மதி அரவின்னொடு வைத்தானிடம் மொய்த்தெம்
பணியாயவன் அடியார்தொழு தேத்தும்புள மங்கை
மணியார்தரு கனகம்மவை வயிரத்திர ளோடும்
அணியார்மணல் அணைகாவிரி யாலந்துறை யதுவே.
1.16.4
167 மெய்த்தன்னுறும் வினைதீர்வகை தொழுமின்செழு மலரின்
கொத்தின்னொடு சந்தாரகில் கொணர்காவிரிக் கரைமேல்
பொத்தின்னிடை யாந்தைபல பாடும்புள மங்கை
அத்தன்நமை யாள்வானிடம் ஆலந்துறை யதுவே.
1.16.5
168 மன்னானவன் உலகிற்கொரு மழையானவன் பிழையில்
பொன்னானவன் முதலானவன் பொழில்சூழ்புள மங்கை
என்னானவன் இசையானவன் இளஞாயிறின் சோதி
அன்னானவன் உறையும்மிடம் ஆலந்துறை யதுவே.
1.16.6
169 முடியார்தரு சடைமேல்முளை இளவெண்மதி சூடி
பொடியாடிய திருமேனியர் பொழில்சூழ்புள மங்கை
கடியார்மலர் புனல்கொண்டுதன் கழலேதொழு தேத்தும்
அடியார்தமக் கினியானிடம் ஆலந்துறை யதுவே.
1.16.7
170 இலங்கைமன்னன் முடிதோளிற எழிலார்திரு விரலால்
விலங்கல்லிடை அடர்த்தானிடம் வேதம்பயின் றேத்திப்
புலன்கள்தமை வென்றார்புக ழவர்வாழ்புள மங்கை
அலங்கல்மலி சடையானிடம் ஆலந்துறை யதுவே.
1.16.8
171 செறியார்தரு வெள்ளைத்திரு நீற்றின்திரு முண்டப்
பொறியார்தரு புரிநூல்வரை மார்பன்புள மங்கை
வெறியார்தரு கமலத்தயன் மாலுந்தனை நாடி
அறியாவகை நின்றானிடம் ஆலந்துறை யதுவே.
1.16.9
172 நீதியறி யாதாரமண் கையரொடு மண்டைப்
போதியவ ரோதும்முரை கொள்ளார்புள மங்கை
ஆதியவர் கோயில்திரு ஆலந்துறை தொழுமின்
சாதிம்மிகு வானோர்தொழு தன்மைபெற லாமே.
1.16.10
173 பொந்தின்னிடைத் தேனூறிய பொழில்சூழ்புள மங்கை
அந்தண்புனல் வருகாவிரி யாலந்துறை யானைக்
கந்தம்மலி கமழ்காழியுள் கலைஞானசம் பந்தன்
சந்தம்மலி பாடல்சொலி ஆடத்தவ மாமே.
1.16.11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பசுபதிநாயகர்,
தேவியார் - பால்வளைநாயகியம்மை.
பல்வளைநாயகியம்மை என்றும் பாடம்.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

1.17 திருஇடும்பாவனம்

பண் - நட்டபாடை

174 மனமார்தரு மடவாரொடு மகிழ்மைந்தர்கள் மலர்தூய்த்
தனமார்தரு சங்கக்கடல் வங்கத்திர ளுந்திச்
சினமார்தரு திறல்வாளெயிற் றரக்கன்மிகு குன்றில்
இனமாதவர் இறைவர்க்கிடம் இடும்பாவன மிதுவே.
1.17.1
175 மலையார்தரு மடவாளொரு பாகம்மகிழ் வெய்தி
நிலையார்தரு நிமலன்வலி நிலவும்புகழ் ஒளிசேர்
கலையார்தரு புலவோரவர் காவல்மிகு குன்றில்
இலையார்தரு பொழில்சூழ்வரும் இடும்பாவன மிதுவே.
1.17.2
176 சீலம்மிகு சித்தத்தவர் சிந்தித்தெழும் எந்தை
ஞாலம்மிகு கடல்சூழ்தரும் உலகத்தவர் நலமார்
கோலம்மிகு மலர்மென்முலை மடவார்மிகு குன்றில்
ஏலங்கமழ் பொழில்சூழ்தரும் இடும்பாவன மிதுவே.
1.17.3
177 பொழிலார்தரு குலைவாழைகள் எழிலார்திகழ் போழ்தில்
தொழிலான்மிகு தொண்டரவர் தொழுதாடிய முன்றில்
குழலார்தரு மலர்மென்முலை மடவார்மிகு குன்றில்
எழிலார்தரும் இறைவர்க்கிடம் இடும்பாவன மிதுவே.
1.17.4
178 பந்தார்விரல் உமையாளொரு பங்காகங்கை முடிமேல்
செந்தாமரை மலர்மல்கிய செழுநீர்வயற் கரைமேல்
கொந்தார்மலர் புன்னைமகிழ் குரவங்கமழ் குன்றில்
எந்தாயென இருந்தானிடம் இடும்பாவன மிதுவே.
1.17.5
179 நெறிநீர்மையர் நீள்வானவர் நினையுந்நினை வாகி
அறிநீர்மையி லெய்தும்மவர்க் கறியும்மறி வருளிக்
குறிநீர்மையர் (*)குணமார்தரு மணமார்தரு குன்றில்
எறிநீர்வயல் புடைசூழ்தரும் இடும்பாவன மிதுவே.
(*) குளமார்தரும் என்றும் பாடம்.
1.17.6
180 நீறேறிய திருமேனியர் நிலவும்முல கெல்லாம்
பாறேறிய படுவெண்டலை கையிற்பலி வாங்காக்
கூறேறிய மடவாளொரு பாகம்மகிழ் வெய்தி
ஏறேறிய இறைவர்க்கிடம் இடும்பாவன மிதுவே.
1.17.7
181 தேரார்தரு திகழ்வாளெயிற் றரக்கன்சிவன் மலையை
ஓராதெடுத் தார்த்தான்முடி யொருபஃதவை நெரித்துக்
கூரார்தரு கொலைவாளொடு குணநாமமுங் கொடுத்த
ஏரார்தரும் இறைவர்க்கிடம் இடும்பாவன மிதுவே.
1.17.8
182 பொருளார்தரு மறையோர்புகழ் விருத்தர்பொலி மலிசீர்த்
தெருளார்தரு சிந்தையொடு சந்தம்மலர் பலதூய்
மருளார்தரு மாயன்னயன் காணார்மய லெய்த
இருளார்தரு கண்டர்க்கிடம் இடும்பாவன மிதுவே.
1.17.9
183 தடுக்கையுடன் இடுக்கித்தலை பறித்துச்(*)சம ணடப்பர்
உடுக்கைபல துவர்க்கூறைகள் உடம்பிட்டுழல் வாரும்
மடுக்கண்மலர் வயல்சேர்செந்நெல் மலிநீர்மலர்க் கரைமேல்
இடுக்கண்பல களைவானிடம் இடும்பாவன மிதுவே. 10
(*) சமண்டப்பர் என்றும் பாடம்.
1.17.10
184 கொடியார்நெடு மாடக்குன்ற ளூரிற்கரைக் கோல
இடியார்கட லடிவீழ்தரும் இடும்பாவனத் திறையை
அடியாயுமந் தணர்காழியுள் அணிஞானசம் பந்தன்
படியாற்சொன்ன பாடல்சொலப் பறையும்வினை தானே.
1.17.11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சற்குணநாதர்,
தேவியார் - மங்களநாயகியம்மை.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

1.18 திருநின்றியூர்

பண் - நட்டபாடை

185 *சூலம்படை சுண்ணப்பொடி **சாந்தஞ்சுடு நீறு
பாலம்மதி பவளச்சடை முடிமேலது பண்டைக்
காலன்வலி காலின்னொடு போக்கிக்கடி கமழும்
நீலம்மலர்ப் பொய்கைநின்றி யூரின்நிலை யோர்க்கே.
(*) சூலப்படை என்றும் பாடம்.
(**) சாத்துஞ் சுடுநீறு என்றும் பாடம்.
1.18.1
186 அச்சம்மிலர் பாவம்மிலர் கேடும்மில ரடியார்
நிச்சம்முறு நோயும்மிலர் தாமுந்நின்றி யூரில்
நச்சம்மிட றுடையார்நறுங் கொன்றைநயந் தாளும்*
பச்சம்முடை யடிகள்திருப் பாதம்பணி வாரே.
(*) நயந்தானா என்றும் பாடம்.
1.18.2
187 பறையின்னொலி சங்கின்னொலி பாங்காரவு மார
அறையும்மொலி யெங்கும்மவை யறிவாரவர் தன்மை
நிறையும்புனல் சடைமேலுடை யடிகள்நின்றி யூரில்
உறையும்மிறை யல்லதென துள்ளம் முணராதே.
1.18.3
188 பூண்டவ்வரை மார்பிற்புரி நூலன்விரி கொன்றை
ஈண்டவ்வத னோடும்மொரு பாலம்மதி யதனைத்
தீண்டும்பொழில் சூழ்ந்ததிரு நின்றியது தன்னில்
ஆண்டகழல் தொழலல்லது அறியாரவ ரறிவே.
1.18.4
189 குழலின்னிசை வண்டின்னிசை கண்டுகுயில் கூவும்
நிழலின்னெழில் தாழ்ந்தபொழில் சூழ்ந்தநின்றி யூரில்
அழலின்வலன் அங்கையது *ஏந்தியன லாடுங்
கழலின்னோலி ஆடும்புரி கடவுள்களை கண்ணே.
(*) எய்தி என்றும் பாடம்.
1.18.5
190 மூரன்முறு வல்வெண்ணகை யுடையாளொரு பாகம்
சாரல்மதி யதனோடுடன் சலவஞ்சடை வைத்த
வீரன்மலி அழகார்பொழில் மிடையுந்திரு நின்றி
யூரன்கழ லல்லாதென துள்ள முணராதே.
1.18.6
191 பற்றியொரு தலைகையினி லேந்திப்பலி தேரும்
பெற்றியது வாகித்திரி தேவர்பெரு மானார்
சுற்றியொரு வேங்கையத ளோடும்பிறை சூடும்
நெற்றியொரு கண்ணார்நின்றி யூரின்நிலை யாரே.
1.18.7
* இப்பதிகத்தில் 8-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.1.18.8
192 நல்லமலர் மேலானொடு ஞாலம்மது வுண்டான்
அல்லரென ஆவரென நின்றும்மறி வரிய
நெல்லின்பொழில் சூழ்ந்தநின்றி யூரில்நிலை யாரெஞ்
செல்வரடி யல்லாதென சிந்தையுண ராதே.
1.18.9
193 நெறியில்வரு பேராவகை நினையாநினை வொன்றை
அறிவில்சமண் ஆதருரை கேட்டும்மய ராதே
நெறியில்லவர் குறிகள்நினை யாதேநின்றி யூரில்
மறியேந்திய கையானடி வாழ்த்தும்மது வாழ்த்தே.
1.18.10
194 குன்றமது எடுத்தானுடல் தோளுந்நெரி வாக
நின்றங்கொரு விரலாலுற வைத்தான்நின்றி யூரை
நன்றார்தரு புகலித்தமிழ் ஞானம்மிகு பந்தன்
குன்றாத்தமிழ் சொல்லக்குறை வின்றிநிறை புகழே.
1.18.11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - இலட்சுமியீசுவரர்,
தேவியார் - உலகநாயகியம்மை.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

1.19 திருக்கழுமலம் - திருவிராகம்

பண் - நட்டபாடை

195 பிறையணி படர்சடை முடியிடைப்
பெருகிய புனலுடை யவனிறை
இறையணி வளையிணை முலையவ
ளிணைவன தெழிலுடை யிடவகை
கறையணி பொழில்நிறை வயலணி
கழுமலம் அமர்கனல் உருவினன்
நறையணி மலர்நறு விரைபுல்கு
நலம்மலி கழல்தொழன் மருவுமே.
1.19.1
196 பிணிபடு கடல்பிற விகளற
லெளிதுள ததுபெரு கியதிரை
அணிபடு கழுமலம் இனிதம
ரனலுரு வினனவிர் சடைமிசை
தணிபடு கதிர்வள ரிளமதி
புனைவனை உமைதலை வனைநிற
மணிபடு கறைமிட றனைநல
மலிகழ லிணைதொழன் மருவுமே.
1.19.2
197 வரியுறு புலியத ளுடையினன்
வளர்பிறை யொளிகிளர் கதிர்பொதி
விரியுறு சடைவிரை புழைபொழில்
விழவொலி மலிகழு மலம்அமர்
எரியுறு நிறஇறை வனதடி
இரவொடு பகல்பர வுவர்தம
தெரியுறு வினைசெறி கதிர்முனை
இருள்கெட நனிநினை வெய்துமதே.
1.19.3
198 வினைகெட மனநினை வதுமுடி
கெனின்நனி தொழுதெழு குலமதி
புனைகொடி யிடைபொருள் தருபடு
களிறின துரிபுதை யுடலினன்
மனைகுட வயிறுடை யனசில
வருகுறள் படையுடை யவன்மலி
கனைகட லடைகழு மலமமர்
கதிர்மதி யினனதிர் கழல்களே.
1.19.4
199 தலைமதி புனல்விட அரவிவை
தலைமைய தொருசடை யிடையுடன்
நிலைமரு வவொரிட மருளினன்
நிழன்மழு வினொடழல் கணையினன்
மலைமரு வியசிலை தனின்மதி
லெரியுண மனமரு வினன்நல
கலைமரு வியபுற வணிதரு
கழுமலம் இனிதமர் தலைவனே.
1.19.5
200 வரைபொரு திழியரு விகள்பல
பருகொரு கடல்வரி மணலிடை
கரைபொரு திரையொலி கெழுமிய
கழுமலம் அமர்கன லுருவினன்
அரைபொரு புலியதள் உடையினன்
அடியிணை தொழவரு வினையெனும்
உரைபொடி படவுறு துயர்கெட
வுயருல கெய்தலொரு தலைமையே.
1.19.6
201 முதிருறு கதிர்வளர் இளமதி
சடையனை நறநிறை தலைதனில்
உதிருறு மயிர்பிணை தவிர்தசை
யுடைபுலி அதளிடை யிருள்கடி
கதிருறு சுடரொளி கெழுமிய
கழுமலம் அமர்மழு மலிபடை
அதிருறு கழலடி களதடி
தொழுமறி வலதறி வறியமே.
1.19.7
202 கடலென நிறநெடு முடியவ
னடுதிறல் தெறஅடி சரணென
அடல்நிறை படையரு ளியபுக
ழரவரை யினன்அணி கிளர்பிறை
விடம்நிறை மிடறுடை யவன்விரி
சடையவன் விடையுடை யவனுமை
உடனுறை பதிகடல் மறுகுடை
யுயர்கழு மலவியன் நகரதே.
1.19.8
203 கொழுமல ருறைபதி யுடையவன்
நெடியவ னெனவிவர் களுமவன்
விழுமையை யளவறி கிலரிறை
விரைபுணர் பொழிலணி விழவமர்
கழுமலம் அமர்கன லுருவினன்
அடியிணை தொழுமவ ரருவினை
எழுமையு மிலநில வகைதனி
லெளிதிமை யவர்விய னுலகமே.
1.19.9
204 அமைவன துவரிழு கியதுகி
லணியுடை யினர்அமண் உருவர்கள்
சமையமும் ஒருபொரு ளெனுமவை
சலநெறி யனஅற வுரைகளும்
இமையவர் தொழுகழு மலமம
ரிறைவன தடிபர வுவர்தமை
நமையல வினைநல னடைதலி
லுயர்நெறி நனிநணு குவர்களே.
1.19.10
205 பெருகிய தமிழ்விர கினன்மலி
பெயரவ னுறைபிணர் திரையொடு
கருகிய நிறவிரி கடலடை
கழுமல முறைவிட மெனநனி
பெருகிய சிவனடி பரவிய
பிணைமொழி யனவொரு பதுமுடன்
மருவிய மனமுடை யவர்மதி
யுடையவர் விதியுடை யவர்களே.
1.19.11

கழுமலம் என்பது சீகாழிக்கொருபெயர்.
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

1.20 திருவீழிமிழலை - திருவிராகம்

பண் - நட்டபாடை

206 தடநில வியமலை நிறுவியொர்
தழலுமிழ் தருபட அரவுகொ
டடல்அசு ரரொடம ரர்கள்அலை
கடல்கடை வுழியெழு மிகுசின
விடமடை தருமிட றுடையவன்
விடைமிசை வருமவ னுறைபதி
திடமலி தருமறை முறையுணர்
மறையவர் நிறைதிரு மிழலையே.
1.20.1
207 தரையொடு திவிதல நலிதரு
தகுதிற லுறுசல தரனது
வரையன தலைவிசை யொடுவரு
திகிரியை அரிபெற அருளினன்
உரைமலி தருசுர நதிமதி
பொதிசடை யவனுறை பதிமிகு
திரைமலி கடல்மண லணிதரு
பெறுதிடர் வளர்திரு மிழலையே.
1.20.2
208 மலைமகள் தனையிகழ் வதுசெய்த
மதியறு சிறுமன வனதுயர்
தலையினொ டழலுரு வனகரம்
அறமுனி வுசெய்தவ னுறைபதி
கலைநில வியபுல வர்களிடர்
களைதரு கொடைபயில் பவர்மிகு
சிலைமலி மதில்புடை தழுவிய
திகழ்பொழில் வளர்திரு மிழலையே.
1.20.3
209 மருவலர் புரமெரி யினின்மடி
தரவொரு கணைசெல நிறுவிய
பெருவலி யினன்நலம் மலிதரு
கரனுர மிகுபிணம் அமர்வன
இருளிடை யடையுற வொடுநட
விசையுறு பரனினி துறைபதி
தெருவினில் வருபெரு விழவொலி
மலிதர வளர்திரு மிழலையே.
1.20.4
210 அணிபெறு வடமர நிழலினி
லமர்வொடு மடியிணை யிருவர்கள்
பணிதர அறநெறி மறையொடு
மருளிய பரனுறை விடமொளி
மணிபொரு வருமர கதநில
மலிபுன லணைதரு வயலணி
திணிபொழில் தருமணம் மதுநுக
ரறுபத முரல்திரு மிழலையே.
1.20.5
211 வசையறு வலிவன சரவுரு
வதுகொடு நினைவரு தவமுயல்
விசையன திறன்மலை மகளறி
வுறுதிற லமர்மிடல்கொடுசெய்து
அசைவில படையருள் புரிதரு
மவனுறை பதியது மிகுதரு
திசையினின் மலர்குல வியசெறி
பொழின்மலி தருதிரு மிழலையே.
1.20.6
212 நலமலி தருமறை மொழியொடு
நதியுறு புனல்புகை ஒளிமுதல்
மலரவை கொடுவழி படுதிறன்
மறையவ னுயிரது கொளவரு
சலமலி தருமற லிதனுயிர்
கெடவுதை செய்தவர னுறைபதி
(*)திலகமி தெனவுல குகள்புகழ்
தருபொழி லணிதிரு மிழலையே.
(*) திலதமிதென என்றும் பாடம்.
1.20.7
213 அரனுறை தருகயி லையைநிலை
குலைவது செய்ததச முகனது
கரமிரு பதுநெரி தரவிரல்
நிறுவிய கழலடி யுடையவன்
வரன்முறை யுலகவை தருமலர்
வளர்மறை யவன்வழி வழுவிய
சிரமது கொடுபலி திரிதரு
சிவனுறை பதிதிரு மிழலையே.
1.20.8
214 அயனொடும் எழிலமர் மலர்மகள்
மகிழ்கண னளவிட லொழியவொர்
பயமுறு வகைதழல் நிகழ்வதொர்
படியுரு வதுவர வரன்முறை
சயசய வெனமிகு துதிசெய
வெளியுரு வியவவ னுறைபதி
செயநில வியமதில் மதியது
தவழ்தர வுயர்திரு மிழலையே.
1.20.9
215 இகழுரு வொடுபறி தலைகொடு
மிழிதொழில் மலிசமண் விரகினர்
திகழ்துவ ருடையுடல் பொதிபவர்
கெடஅடி யவர்மிக அருளிய
புகழுடை யிறையுறை பதிபுன
லணிகடல் புடைதழு வியபுவி
திகழ்சுரர் தருநிகர் கொடையினர்
செறிவொடு திகழ்திரு மிழலையே.
1.20.10
216 சினமலி கரியுரி செய்தசிவ
னுறைதரு திருமிழ லையைமிகு
தனமனர் சிரபுர நகரிறை
தமிழ்விர கனதுரை யொருபதும்
மனமகிழ் வொடுபயில் பவரெழின்
மலர்மகள் கலைமகள் சயமகள்
இனமலி புகழ்மக ளிசைதர
இருநில னிடையினி தமர்வரே.
1.20.11

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

1.21 திருச்சிவபுரம் - திருவிராகம்

பண் - நட்டபாடை

217 புவம்வளி கனல்புனல் புவி(*)கலை
யுரைமறை திரிகுணம் அமர்நெறி
திவமலி தருசுரர் முதலியர்
திகழ்தரும் உயிரவை யவைதம
பவமலி தொழிலது நினைவொடு
பதுமநன் மலரது மருவிய
சிவனது சிவபுரம் நினைபவர்
செழுநில னினில்நிலை பெறுவரே. 01
(*) கலைபுரை என்றும் பாடம்.
1.21.1
218 மலைபல வளர்தரு புவியிடை
மறைதரு வழிமலி மனிதர்கள்
நிலைமலி சுரர்முதல் உலகுகள்
நிலைபெறு வகைநினை வொடுமிகும்
அலைகடல் நடுவறி துயிலமர்
அரியுரு வியல்பர னுறைபதி
சிலைமலி மதிள்சிவ புரம்நினை
பவர்திரு மகளொடு திகழ்வரே.
1.21.2
219 பழுதில கடல்புடை தழுவிய
படிமுத லியவுல குகள்மலி
குழுவிய சுரர்பிறர் மனிதர்கள்
குலம்மலி தருமுயி ரவையவை
முழுவதும் அழிவகை நினைவொடு
*முதலுரு வியல்பர னுறைபதி
செழுமணி யணிசிவ புரநகர்
தொழுமவர் புகழ்மிகு முலகிலே.
(*) முதலுருவிய வரனுரைபதி என்றும் பாடம்.
1.21.3
220 நறைமலி தருமள றொடுமுகை
நகுமலர் புகைமிகு வளரொளி
நிறைபுனல் கொடுதனை நினைவொடு
நியதமும் வழிபடும் அடியவர்
குறைவில பதமணை தரஅருள்
குணமுடை யிறையுறை வனபதி
சிறைபுன லமர்சிவ புரமது
நினைபவர் செயமகள் தலைவரே.
1.21.4
221 சினமலி யறுபகை மிகுபொறி
சிதைதரு வகைவளி நிறுவிய
மனனுணர் வொடுமலர் மிசையெழு
தருபொருள் நியதமும் உணர்பவர்
தனதெழி லுருவது கொடுஅடை
தகுபர னுறைவது நகர்மதில்
கனமரு வியசிவ புரம்நினை
பவர்கலை மகள்தர நிகழ்வரே.
1.21.5
222 சுருதிகள் பலநல முதல்கலை
துகளறு வகைபயில் வொடுமிகு
உருவிய லுலகவை புகழ்தர
வழியொழு குமெயுறு பொறியொழி
அருதவ முயல்பவர் தனதடி
யடைவகை நினையர னுறைபதி
திருவளர் சிவபுரம் நினைபவர்
திகழ்குலன் நிலனிடை நிகழுமே.
1.21.6
223 கதமிகு கருவுரு வொடு*வுகி
ரிடைவட வரைகண கணவென
மதமிகு நெடுமுக னமர்வளை
மதிதிகழ் எயிறதன் நுதிமிசை
இதமமர் புவியது நிறுவிய
எழிலரி வழிபட அருள்செய்த
பதமுடை யவனமர் சிவபுரம்
நினைபவர் நிலவுவர் படியிலே.
(*) உகிரிடவட என்றும் படம்.
1.21.7
224 அசைவுறு தவமுயல் வினிலயன்
அருளினில் வருவலி கொடுசிவன்
இசைகயி லையையெழு தருவகை
இருபது கரமவை நிறுவிய
நிசிசரன் முடியுடை தரவொரு
விரல்பணி கொளுமவ னுறைபதி
திசைமலி சிவபுரம் நினைபவர்
செழுநில னினில்நிகழ் வுடையரே.
1.21.8
225 அடல்மலி படையரி அயனொடும்
அறிவரி யதொரழல் மலிதரு
சுடருரு வொடுநிகழ் தரவவர்
வெருவொடு துதியது செயவெதிர்
விடமலி களநுத லமர்கண
துடையுரு வெளிபடு மவன்நகர்
திடமலி பொழிலெழில் சிவபுரம்
நினைபவர் வழிபுவி திகழுமே.
1.21.9
226 குணமறி வுகள்நிலை யிலபொரு
ளுரைமரு வியபொருள் களுமில
திணமெனு மவரொடு செதுமதி
மிகுசம ணருமலி தமதுகை
உணலுடை யவருணர் வருபர
னுறைதரு பதியுல கினில்நல
கணமரு வியசிவ புரம்நினை
பவரெழி லுருவுடை யவர்களே.
1.21.10
227 திகழ்சிவ புரநகர் மருவிய
சிவனடி யிணைபணி சிரபுர
நகரிறை தமிழ்விர கனதுரை
நலமலி யொருபதும் நவில்பவர்
நிகழ்குல நிலநிறை திருவுரு
நிகரில கொடைமிகு சயமகள்
புகழ்புவி வளர்வழி யடிமையின்
மிகைபுணர் தரநலம் மிகுவரே.
1.21.11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பிரமபுரிநாயகர், தேவியார் - பெரியநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

1.22 திருமறைக்காடு - திருவிராகம்

பண் - நட்டபாடை

228 சிலைதனை நடுவிடை நிறுவியொர்
சினமலி அரவது கொடுதிவி
தலமலி சுரரசு ரர்களொலி
சலசல கடல்கடை வுழிமிகு
கொலைமலி விடமெழ அவருடல்
குலைதர வதுநுகர் பவனெழில்
மலைமலி மதில்புடை தழுவிய
மறைவனம் அமர்தரு பரமனே.
1.22.1
229 கரமுத லியஅவ யவமவை
கடுவிட அரவது கொடுவரு
வரல்முறை அணிதரு மவனடல்
வலிமிகு புலியத ளுடையினன்
இரவலர் துயர்கெடு வகைநினை
இமையவர் புரமெழில் பெறவளர்
மரநிகர் கொடைமனி தர்கள்பயில்
மறைவனம் அமர்தரு பரமனே.
1.22.2
230 இழைவளர் தருமுலை மலைமக
ளினிதுறை தருமெழி லுருவினன்
முழையினின் மிகுதுயி லுறுமரி
முசிவொடும் எழமுள ரியொடெழு
கழைநுகர் தருகரி யிரிதரு
கயிலையின் மலிபவ னிருளுறும்
மழைதவழ் தருபொழில் நிலவிய
மறைவனம் அமர்தரு பரமனே.
1.22.3
231 நலமிகு திருவித ழியின்மலர்
நகுதலை யொடுகன கியின்முகை
பலசுர நதிபட அரவொடு
மதிபொதி சடைமுடி யினன்மிகு
தலநில வியமனி தர்களொடு
தவமுயல் தருமுனி வர்கள்தம
மலமறு வகைமனம் நினைதரு
மறைவன மமர்தரு பரமனே.
1.22.4
232 கதிமலி களிறது பிளிறிட
வுரிசெய்த அதிகுண னுயர்பசு
பதியதன் மிசைவரு பசுபதி
பலகலை யவைமுறை முறையுணர்
விதியறி தருநெறி யமர்முனி
கணனொடு மிகுதவ முயல்தரும்
அதிநிபு ணர்கள்வழி படவளர்
மறைவனம் அமர்தரு பரமனே.
1.22.5
233 கறைமலி திரிசிகை படையடல்
கனல்மழு வெழுதர வெறிமறி
முறைமுறை யொலிதம ருகமுடை
தலைமுகிழ் மலிகணி வடமுகம்
உறைதரு கரனுல கினிலுய
ரொளிபெறு வகைநினை வொடுமலர்
மறையவன் மறைவழி வழிபடு
மறைவனம் அமர்தரு பரமனே.
1.22.6
234 இருநில னதுபுன லிடைமடி
தரஎரி புகஎரி யதுமிகு
பெருவளி யினிலவி தரவளி
கெடவிய னிடைமுழு வதுகெட
இருவர்க ளுடல்பொறை யொடுதிரி
யெழிலுரு வுடையவன் இனமலர்
மருவிய அறுபதம் இசைமுரல்
மறைவனம் அமர்தரு பரமனே.
1.22.7
235 சனம்வெரு வுறவரு தசமுக
னொருபது முடியொடு மிருபது
கனமரு வியபுயம் நெரிவகை
கழலடி யிலொர்விரல் நிறுவினன்
இனமலி கணநிசி சரன்மகிழ்
வுறவருள் செய்தகரு ணையனென
மனமகிழ் வொடுமறை முறையுணர்
மறைவனம் அமர்தரு பரமனே.
1.22.8
236 அணிமலர் மகள்தலை மகனயன்
அறிவரி யதொர்பரி சினிலெரி
திணிதரு திரளுரு வளர்தர
அவர்வெரு வுறலொடு துதிசெய்து
பணியுற வெளியுரு வியபர
னவனுரை மலிகடல் திரளெழும்
மணிவள ரொளிவெயில் மிகுதரு
மறைவனம் அமர்தரு பரமனே.
1.22.9
237 இயல்வழி தரவிது செலவுற
இனமயி லிறகுறு தழையொடு
செயல்மரு வியசிறு கடமுடி
யடைகையர் தலைபறி செய்துதவம்
முயல்பவர் துவர்படம் உடல்பொதி
பவரறி வருபர னவனணி
வயலினில் வளைவளம் மருவிய
மறைவனம் அமர்தரு பரமனே.
1.22.10
238 வசையறு மலர்மகள் நிலவிய
மறைவனம் அமர்பர மனைநினை
பசையொடு மிகுகலை பலபயில்
புலவர்கள் புகழ்வழி வளர்தரு
இசையமர் கழுமல நகரிறை
தமிழ்விர கனதுரை யியல்வல
இசைமலி தமிழொரு பதும்வல
அவருல கினிலெழில் பெறுவரே.
1.22.11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மறைக்காட்டீசுரர், தேவியார் - யாழைப்பழித்தமொழியம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

1.23 திருக்கோலக்கா

பண் - தக்கராகம்

239 மடையில் வாளை பாய மாதரார்
குடையும் பொய்கைக் கோலக் காவுளான்
சடையும் பிறையுஞ் சாம்பற் பூச்சுங்கீழ்
உடையுங் கொண்ட வுருவ மென்கொலோ.
1.23.1
240 பெண்டான் பாகமாகப் பிறைச் சென்னி
கொண்டான் கோலக் காவு கோயிலாக்
கண்டான் பாதங் கையாற் கூப்பவே
உண்டான் நஞ்சை உலக முய்யவே.
1.23.2
241 பூணற் பொறிகொள் அரவம் புன்சடைக்
கோணற் பிறையன் குழகன் கோலக்கா
மாணப் பாடி மறைவல் லானையே
பேணப் பறையும் பிணிக ளானவே.
1.23.3
242 தழுக்கொள் பாவந் தளர வேண்டுவீர்
மழுக்கொள் செல்வன் மறிசே ரங்கையான்
குழுக்கொள் பூதப் படையான் கோலக்கா
இழுக்கா வண்ணம் ஏத்தி வாழ்மினே.
1.23.4
243 மயிலார் சாயல் மாதோர் பாகமா
எயிலார் சாய எரித்த எந்தைதன்
குயிலார் சோலைக் கோலக் காவையே
பயிலா நிற்கப் பறையும் பாவமே.
1.23.5
244 வெடிகொள் வினையை வீட்ட வேண்டுவீர்
கடிகொள் கொன்றை கலந்த சென்னியான்
கொடிகொள் விழவார் கோலக் காவுளெம்
அடிகள் பாதம் அடைந்து வாழ்மினே.
1.23.6
245 நிழலார் சோலை நீல வண்டினங்
குழலார் பண்செய் கோலக் காவுளான்
கழலால் மொய்த்த பாதங் கைகளாற்
தொழலார் பக்கல் துயர மில்லையே.
1.23.7
246 எறியார் கடல்சூழ் இலங்கைக் கோன்றனை
முறியார் தடக்கை யடர்த்த மூர்த்திதன்
குறியார் பண்செய் கோலக் காவையே
நெறியால் தொழுவார் வினைகள் நீங்குமே.
1.23.8
247 நாற்ற மலர்மேல் அயனும் நாகத்தில்
ஆற்ற லணைமே லவனுங் காண்கிலாக்
கூற்ற முதைத்த குழகன் கோலக்கா
ஏற்றான் பாதம் ஏத்தி வாழ்மினே.
1.23.9
248 பெற்ற மாசு பிறக்குஞ் சமணரும்
உற்ற துவர்தோ யுருவி லாளருங்
குற்ற நெறியார் கொள்ளார் கோலக்காப்
பற்றிப் பரவப் பறையும் பாவமே.
1.23.10
249 நலங்கொள் காழி ஞான சம்பந்தன்
குலங்கொள் கோலக் காவு ளானையே
வலங்கொள் பாடல் வல்ல வாய்மையார்
உலங்கொள் வினைபோய் ஓங்கி வாழ்வரே.
1.23.11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சத்தபுரீசர், தேவியார் - ஓசைகொடுத்தநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

1.24 சீகாழி

பண் - தக்கராகம்

250 பூவார் கொன்றைப் புரிபுன் சடையீசா
காவா யெனநின் றேத்துங் காழியார்
மேவார் புரம்மூன் றட்டா ரவர்போலாம்
பாவா ரின்சொற் பயிலும் பரமரே.
1.24.1
251 எந்தை யென்றங் கிமையோர் புகுந்தீண்டிக்
கந்த மாலை கொடுசேர் காழியார்
வெந்த நீற்றர் விமல ரவர்போலாம்
அந்தி நட்டம் ஆடும் அடிகளே.
1.24.2
252 தேனை வென்ற மொழியா ளொருபாகங்
கான மான்கைக் கொண்ட காழியார்
வான மோங்கு கோயி லவர்போலாம்
ஆன இன்பம் ஆடும் அடிகளே.
1.24.3
253 மாணா வென்றிக் காலன் மடியவே
காணா மாணிக் களித்த காழியார்
நாணார் வாளி தொட்டா ரவர்போலாம்
பேணார் புரங்கள் அட்ட பெருமானே.
1.24.4
254 மாடே ஓதம் எறிய வயற்செந்நெல்
காடே றிச்சங் கீனுங் காழியார்
வாடா மலராள் பங்க ரவர்போலாம்
ஏடார் புரமூன் றெரித்த இறைவரே.
1.24.5
255 கொங்கு செருந்தி கொன்றை மலர்கூடக்
கங்கை புனைந்த சடையார் காழியார்
அங்கண் அரவம் ஆட்டும் அவர்போலாஞ்
செங்கண் அரக்கர் புரத்தை யெரித்தாரே.
1.24.6
256 கொல்லை விடைமுன் பூதங் குனித்தாடுங்
கல்ல வடத்தை யுகப்பார் காழியார்
அல்ல விடத்து நடந்தா ரவர்போலாம்
பல்ல விடத்தும் பயிலும் பரமரே.
1.24.7
257 எடுத்த அரக்கன் நெரிய விரலூன்றிக்
கடுத்து முரிய அடர்த்தார் காழியார்
எடுத்த பாடற் கிரங்கு மவர்போலாம்
பொடிக்கொள் நீறு பூசும் புனிதரே.
1.24.8
258 ஆற்ற லுடைய அரியும் பிரமனுந்
தோற்றங் காணா வென்றிக் காழியார்
ஏற்ற மேறங் கேறு மவர்போலாங்
கூற்ற மறுகக் குமைத்த குழகரே.
1.24.9
259 பெருக்கப் பிதற்றுஞ் சமணர் சாக்கியர்
கரக்கும் உரையை விட்டார் காழியார்
இருக்கின் மலிந்த இறைவ ரவர்போலாம்
அருப்பின் முலையாள் பங்கத் தையரே.
1.24.10
260 காரார் வயல்சூழ் காழிக் கோன்றனைச்
சீரார் ஞான சம்பந் தன்சொன்ன
பாரார் புகழப் பரவ வல்லவர்
ஏரார் வானத் தினிதா இருப்பரே.
1.24.11

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

1.25 திருச்செம்பொன்பள்ளி

பண் - தக்கராகம்

261 மருவார் குழலி மாதோர் பாகமாய்த்
திருவார் செம்பொன் பள்ளி மேவிய
கருவார் கண்டத் தீசன் கழல்களை
மருவா தவர்மேல் மன்னும் பாவமே.
1.25.1
262 வாரார் கொங்கை மாதோர் பாகமாய்ச்
சீரார் செம்பொன் பள்ளி மேவிய
ஏரார் புரிபுன் சடையெம் ஈசனைச்
சேரா தவர்மேற் சேரும் வினைகளே.
1.25.2
263 வரையார் சந்தோ டகிலும் வருபொன்னித்
திரையார் செம்பொன் பள்ளி மேவிய
நரையார் விடையொன் றூரும் நம்பனை
உரையா தவர்மே லொழியா வூனமே.
1.25.3
264 மழுவா ளேந்தி மாதோர் பாகமாய்ச்
செழுவார் செம்பொன் பள்ளி மேவிய
எழிலார் புரிபுன் சடையெம் மிறைவனைத்
தொழுவார் தம்மேல் துயர மில்லையே.
1.25.4
265 மலையான் மகளோ டுடனாய் மதிலெய்த
சிலையார் செம்பொன் பள்ளி யானையே
இலையார் மலர்கொண் டெல்லி நண்பகல்
நிலையா வணங்க நில்லா வினைகளே.
1.25.5
266 அறையார் புனலோ டகிலும் வருபொன்னிச்
சிறையார் செம்பொன் பள்ளி மேவிய
கறையார் கண்டத் தீசன் கழல்களை
நிறையால் வணங்க நில்லா வினைகளே.
1.25.6
267 பையார் அரவே ரல்கு லாளொடுஞ்
செய்யார் செம்பொன் பள்ளி மேவிய
கையார் சூல மேந்து கடவுளை
மெய்யால் வணங்க மேவா வினைகளே.
1.25.7
268 வானார் திங்கள் வளர்புன் சடைவைத்துத்
தேனார் செம்பொன் பள்ளி மேவிய
ஊனார் தலையிற் பலிகொண் டுழல்வாழ்க்கை
ஆனான் கழலே அடைந்து வாழ்மினே.
1.25.8
269 காரார் வண்ணன் கனகம் அனையானுந்
தேரார் செம்பொன் பள்ளி மேவிய
நீரார் நிமிர்புன் சடையெந் நிமலனை
ஓரா தவர்மே லொழியா வூனமே.
1.25.9
270 மாசா ருடம்பர் மண்டைத் தேரரும்
பேசா வண்ணம் பேசித் திரியவே
தேசார் செம்பொன் பள்ளி மேவிய
ஈசா என்ன நில்லா இடர்களே.
1.25.10
271 நறவார் புகலி ஞான சம்பந்தன்
செறுவார் செம்பொன் பள்ளி மேயானைப்
பெறுமா றிசையாற் பாட லிவைபத்தும்
உறுமா சொல்ல வோங்கி வாழ்வரே.
1.25.11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சொர்னபுரீசர், தேவியார் - சுகந்தவனநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

1.26 திருப்புத்தூர்

பண் - தக்கராகம்

272 வெங்கள் விம்மு வெறியார் பொழிற்சோலைத்
திங்க ளோடு திளைக்குந் திருப்புத்தூர்க்
கங்கை தங்கு முடியா ரவர்போலும்
எங்கள் உச்சி உறையும் இறையாரே.
1.26.1
273 வேனல் விம்மு வெறியார் பொழிற்சோலைத்
தேனும் வண்டுந் திளைக்குந் திருப்புத்தூர்
ஊனம் இன்றி யுறைவா ரவர்போலும்
ஏன முள்ளும் எயிறும் புனைவாரே.
1.26.2
274 பாங்கு நல்ல வரிவண் டிசைபாடத்
தேங்கொள் கொன்றை திளைக்குந் திருப்புத்தூர்
ஓங்கு கோயில் உறைவா ரவர்போலுந்
தாங்கு திங்கள் தவழ்புன் சடையாரே.
1.26.3
275 நாற விண்ட நறுமா மலர்கவ்வித்
தேறல் வண்டு திளைக்குந் திருப்புத்தூர்
ஊறல் வாழ்க்கை யுடையா ரவர்போலும்
ஏறு கொண்ட கொடியெம் இறையாரே.
1.26.4
276 இசை விளங்கும் எழில்சூழ்ந் தியல்பாகத்
திசை விளங்கும் பொழில்சூழ் திருப்புத்தூர்
பசை விளங்கப் படித்தா ரவர்போலும்
வசை விளங்கும் வடிசேர் நுதலாரே.
1.26.5
277 வெண்ணி றத்த விரையோ டலருந்தித்
தெண்ணி றத்த புனல்பாய் திருப்புத்தூர்
ஒண்ணி றத்த ஒளியா ரவர்போலும்
வெண்ணி றத்த விடைசேர் கொடியாரே.
1.26.6
278 நெய்த லாம்பல் கழுநீர் மலர்ந்தெங்குஞ்
செய்கண் மல்கு சிவனார் திருப்புத்தூர்த்
தையல் பாகம் மகிழ்ந்தா ரவர்போலும்
மையுண் நஞ்சம் மருவும் மிடற்றாரே.
1.26.7
279 கருக்கம் எல்லாங் கமழும் பொழிற்சோலைத்
திருக்கொள் செம்மை விழவார் திருப்புத்தூர்
இருக்க வல்ல இறைவ ரவர்போலும்
அரக்கன் ஒல்க விரலால் அடர்த்தாரே.
1.26.8
280 மருவி யெங்கும் வளரும் மடமஞ்ஞை
தெருவு தோறுந் திளைக்குந் திருப்புத்தூர்ப்
பெருகி வாழும் பெருமா னவன்போலும்
பிரமன் மாலும் அறியாப் பெரியோனே.
1.26.9
281 கூறை போர்க்குந் தொழிலா ரமண்கூறல்
தேறல் வேண்டா தெளிமின் திருப்புத்தூர்
ஆறும் நான்கும் அமர்ந்தா ரவர்போலும்
ஏறு கொண்ட கொடியெம் இறையாரே.
1.26.10
282 நல்ல கேள்வி ஞான சம்பந்தன்
செல்வர் சேடர் உறையுந் திருப்புத்தூர்ச்
சொல்லல் பாடல் வல்லார் தமக்கென்றும்
அல்லல் தீரும் அவலம் அடையாவே.
1.26.11

இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - புத்தூரீசர், தேவியார் - சிவகாமியம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

1.27 திருப்புன்கூர்

பண் - தக்கராகம்

283 முந்தி நின்ற வினைக ளவைபோகச்
சிந்தி நெஞ்சே சிவனார் திருப்புன்கூர்
அந்தம் இல்லா அடிக ளவர்போலுங்
கந்த மல்கு கமழ்புன் சடையாரே.
1.27.1
284 மூவ ராய முதல்வர் முறையாலே
தேவ ரெல்லாம் வணங்குந் திருப்புன்கூர்
ஆவ ரென்னும் அடிக ளவர்போலும்
ஏவின் அல்லார் எயில்மூன் றெரித்தாரே.
1.27.2
285 பங்க யங்கள் மலரும் பழனத்துச்
செங்க யல்கள் திளைக்குந் திருப்புன்கூர்க்
கங்கை தங்கு சடையா ரவர்போலும்
எங்கள் உச்சி உறையும் மிறையாரே.
1.27.3
286 கரையு லாவு கதிர்மா மணிமுத்தம்
திரையு லாவு வயல்சூழ் திருப்புன்கூர்
உரையின் நல்ல பெருமா னவர்போலும்
விரையின் நல்ல மலர்ச்சே வடியாரே.
1.27.4
287 பவழ வண்ணப் பரிசார் திருமேனி
திகழும் வண்ணம் உறையுந் திருப்புன்கூர்
அழக ரென்னும் அடிக ளவர்போலும்
புகழ நின்ற புரிபுன் சடையாரே.
1.27.5
288 தெரிந்தி லங்கு கழுநீர் வயற்செந்நெல்
திருந்த நின்ற வயல்சூழ் திருப்புன்கூர்ப்
பொருந்தி நின்ற அடிக ளவர்போலும்
விரிந்தி லங்கு சடைவெண் பிறையாரே.
1.27.6
289 பாரும் விண்ணும் பரவித் தொழுதேத்தும்
தேர்கொள் வீதி விழவார் திருப்புன்கூர்
ஆர நின்ற அடிக ளவர்போலுங்
கூர நின்ற எயில்மூன் றெரித்தாரே.
1.27.7
290 மலையத னாருடை யமதில் மூன்றுஞ்
சிலையத னாலெரித் தார்திருப் புன்கூர்த்
தலைவர் வல்ல அரக்கன் தருக்கினை
மலையத னாலடர்த் துமகிழ்ந் தாரே.
1.27.8
291 நாட வல்ல மலரான் மாலுமாய்த்
தேட நின்றா ருறையுந் திருப்புன்கூர்
ஆட வல்ல அடிக ளவர்போலும்
பாட லாடல் பயிலும் பரமரே.
1.27.9
292 குண்டு முற்றிக் கூறை யின்றியே
பிண்ட முண்ணும் பிராந்தர் சொற்கொளேல்
வண்டு பாட மலரார் திருப்புன்கூர்க்
கண்டு தொழுமின் கபாலி வேடமே.
1.27.10
293 மாட மல்கு மதில்சூழ் காழிமன்
சேடர் செல்வ ருறையுந் திருப்புன்கூர்
நாட வல்ல ஞான சம்பந்தன்
பாடல் பத்தும் பரவி வாழ்மினே.
1.27.11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சிவலோகநாதர், தேவியார் - சொக்கநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

1.28 திருச்சோற்றுத்துறை

பண் - தக்கராகம்

294 செப்ப நெஞ்சே நெறிகொள் சிற்றின்பம்
துப்ப னென்னா தருளே துணையாக
ஒப்ப ரொப்பர் பெருமான் ஒளிவெண்ணீற்
றப்பர் சோற்றுத் துறைசென் றடைவோமே.
1.28.1
295 பாலும் நெய்யுந் தயிரும் பயின்றாடித்
தோலும் நூலுந் துதைந்த வரைமார்பர்
மாலுஞ் சோலை புடைசூழ் மடமஞ்ஞை
ஆலுஞ் சோற்றுத் துறைசென் றடைவோமே.
1.28.2
296 செய்யர் செய்ய சடையர் விடையூர்வர்
கைகொள் வேலர் கழலர் கரிகாடர்
தைய லாளொர் பாக மாயஎம்
ஐயர் சோற்றுத் துறைசென் றடைவோமே.
1.28.3
297 பிணிகொ ளாக்கை யொழியப் பிறப்புளீர்
துணிகொள் போரார் துளங்கு மழுவாளர்
மணிகொள் கண்டர் மேய வார்பொழில்
அணிகொள் சோற்றுத் துறைசென் றடைவோமே.
1.28.4
298 பிறையும் அரவும் புனலுஞ் சடைவைத்து
மறையும் ஓதி மயானம் இடமாக
உறையுஞ் செல்வம் உடையார் காவிரி
அறையும் சோற்றுத் துறைசென் றடைவோமே.
1.28.5
299 துடிக ளோடு முழவம் விம்மவே
பொடிகள் பூசிப் புறங்கா டரங்காகப்
படிகொள் பாணி பாடல் பயின்றாடும்
அடிகள் சோற்றுத் துறைசென் றடைவோமே.
1.28.6
300 சாடிக் காலன் மாளத் தலைமாலை
சூடி மிக்குச் சுவண்டாய் வருவார்தாம்
பாடி ஆடிப் பரவு வாருள்ளத்
தாடி சோற்றுத் துறைசென் றடைவோமே.
1.28.7
301 பெண்ணோர் பாகம் உடையார் பிறைச்சென்னிக்
கண்ணோர் பாகங் கலந்த நுதலினார்
எண்ணா தரக்கன் எடுக்க வூன்றிய
அண்ணல் சோற்றுத் துறைசென் றடைவோமே.
1.28.8
302 தொழுவா ரிருவர் துயரம் நீங்கவே
அழலா யோங்கி அருள்கள் செய்தவன்
விழவார் மறுகில் விதியால் மிக்கஎம்
எழிலார் சோற்றுத் துறைசென் றடைவோமே.
1.28.9
303 (*)கோது சாற்றித் திரிவார் அமண்குண்டர்
ஓதும் ஓத்தை யுணரா தெழுநெஞ்சே
நீதி நின்று நினைவார் வேடமாம்
ஆதி சோற்றுத் துறைசென் றடைவோமே.
(*) போதுசாற்றி என்றும் பாடம்.
1.28.10
304 அந்தண் சோற்றுத் துறையெம் மாதியைச்
சிந்தை செய்ம்மின் அடியீ ராயினீர்
சந்தம் பரவு ஞான சம்பந்தன்
வந்த வாறே புனைதல் வழிபாடே.
1.28.11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - தொலையாச்செல்வர், தேவியார் - ஒப்பிலாம்பிகையம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

1.29 திருநறையூர்ச்சித்தீச்சரம்

பண் - தக்கராகம்

305 ஊரு லாவு பலிகொண் டுலகேத்த
நீரு லாவு நிமிர்புன் சடையண்ணல்
சீரு லாவு மறையோர் நறையூரிற்
சேருஞ் சித்தீச் சரஞ்சென் றடைநெஞ்சே.
1.29.1
306 காடு நாடுங் கலக்கப் பலிநண்ணி
ஓடு கங்கை ஒளிர்புன் சடைதாழ
வீடு மாக மறையோர் நறையூரில்
நீடுஞ் சித்தீச் சரமே நினைநெஞ்சே.
1.29.2
307 கல்வி யாளர் கனக மழல்மேனி
புல்கு கங்கை புரிபுன் சடையானூர்
மல்கு திங்கள் பொழில்சூழ் நறையூரிற்
செல்வர் சித்தீச் சரஞ்சென் றடைநெஞ்சே.
1.29.3
308 நீட வல்ல நிமிர்புன் சடைதாழ
ஆட வல்ல அடிக ளிடமாகும்
பாடல் வண்டு பயிலும் நறையூரிற்
சேடர் சித்தீச் சரமே தெளிநெஞ்சே.
1.29.4
309 உம்ப ராலும் உலகின் னவராலும்
தம்பெ ருமைய ளத்தற் கரியானூர்
நண்பு லாவு மறையோர் நறையூரிற்
செம்பொன் சித்தீச் சரமே தெளிநெஞ்சே.
1.29.5
310 கூரு லாவு படையான் விடையேறிப்
போரு லாவு மழுவான் அனலாடி
பேரு லாவு பெருமான் நறையூரிற்
சேருஞ் சித்தீச் சரமே யிடமாமே.
1.29.6
311 *அன்றி நின்ற அவுணர் புரமெய்த
வென்றி வில்லி விமலன் விரும்புமூர்
மன்றில் வாச மணமார் நறையூரிற்
சென்று சித்தீச் சரமே தெளிநெஞ்சே.
(*) அன்றி நின்ற - பகைத்து நின்ற
1.29.7
312 அரக்கன் ஆண்மை யழிய வரைதன்னால்
நெருக்க வூன்றும் விரலான் விரும்புமூர்
பரக்குங் கீர்த்தி யுடையார் நறையூரிற்
திருக்கொள் சித்தீச் சரமே தெளிநெஞ்சே.
1.29.8
313 ஆழி யானும் அலரின் உறைவானும்
ஊழி நாடி உணரார் திரிந்துமேல்
சூழு நேட எரியாம் ஒருவன்சீர்
நீழல் சித்தீச் சரமே நினைநெஞ்சே.
1.29.9
314 மெய்யின் மாசர் விரிநுண் துகிலிலார்
கையி லுண்டு கழறும் உரைகொள்ளேல்
உய்ய வேண்டில் இறைவன் நறையூரிற்
செய்யுஞ் சித்தீச் சரமே தவமாமே.
1.29.10
315 மெய்த்து லாவு மறையோர் நறையூரிற்
சித்தன் சித்தீச் சரத்தை உயர்காழி
அத்தன் பாதம் அணிஞான சம்பந்தன்
பத்தும் பாடப் பறையும் பாவமே.
1.29.11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சித்தநாதேசர், தேவியார் - அழகாம்பிகையம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

1.30 திருப்புகலி

பண் - தக்கராகம்

316 விதியாய் விளைவாய் விளைவின் பயனாகிக்
கொதியா வருகூற் றையுதைத் தவர்சேரும்
பதியா வதுபங் கயநின் றலரத்தேன்
பொதியார் பொழில்சூழ் புகலிந் நகர்தானே.
1.30.1
317 ஒன்னார்புர மூன்று மெரித்த ஒருவன்
மின்னாரிடை யாளொடுங் கூடிய வேடந்
தன்னாலுறை வாவது தண்கடல் சூழ்ந்த
பொன்னார் வயற்பூம் புகலிந் நகர்தானே.
1.30.2
318 வலியின்மதி செஞ்சடை வைத்தம ணாளன்
புலியின்னதள் கொண்டரை யார்த்த புனிதன்
மலியும்பதி மாமறை யோர்நிறைந் தீண்டிப்
பொலியும்புனற் பூம்புக லிந்நகர் தானே.
1.30.3
319 கயலார்தடங் கண்ணி யொடும்மெரு தேறி
அயலார்கடை யிற்பலி கொண்ட அழகன்
இயலாலுறை யும்மிடம் எண்டிசை யோர்க்கும்
புயலார்கடற் பூம்புக லிந்நகர் தானே.
1.30.4
320 காதார்கன பொற்குழை தோட திலங்கத்
தாதார்மலர் தண்சடை யேற முடித்து
(*)நாதான்உறை யும்மிட மாவது நாளும்
போதார்பொழிற் பூம்புக லிந்நகர் தானே.
(*) நாதன் - நாதான் என நீண்டது.
1.30.5
321 வலமார்படை மான்மழு ஏந்திய மைந்தன்
கலமார்கடல் நஞ்சமு துண்ட கருத்தன்
குலமார்பதி கொன்றைகள் பொன்சொரி யத்தேன்
புலமார்வயற் பூம்புக லிந்நகர் தானே.
1.30.6
322 கறுத்தான்கன லால்மதில் மூன்றையும் வேவச்
செறுத்தான்திக ழுங்கடல் நஞ்சமு தாக
அறுத்தான்அயன் தன்சிரம் ஐந்திலும் ஒன்றைப்
பொறுத்தானிடம் பூம்புக லிந்நகர் தானே.
1.30.7
323 தொழிலால்மிகு தொண்டர்கள் தோத்திரஞ் சொல்ல
எழிலார்வரை யாலன் றரக்கனைச் செற்ற
கழலானுறை யும்மிடங் கண்டல்கள் மிண்டி
பொழிலால்மலி பூம்புக லிந்நகர் தானே.
1.30.8
324 மாண்டார்சுட லைப்பொடி பூசி மயானத்
தீண்டாநட மாடிய வேந்தன்றன் மேனி
நீண்டானிரு வர்க்கெரி யாய்அர வாரம்
பூண்டான்நகர் பூம்புக லிந்நகர் தானே.
1.30.9
325 உடையார்துகில் போர்த்துழல் வார்சமண் கையர்
அடையாதன சொல்லுவர் ஆதர்கள் ஓத்தைக்
கிடையாதவன் றன்னகர் நன்மலி பூகம்
புடையார்தரு பூம்புக லிந்நகர் தானே.
1.30.10
326 இரைக்கும்புனல் செஞ்சடை வைத்தஎம் மான்றன்
புரைக்கும்பொழில் பூம்புக லிந்நகர் தன்மேல்
உரைக்குந்தமிழ் ஞானசம் பந்தனொண் மாலை
வரைக்குந்தொழில் வல்லவர் நல்லவர் தாமே.
1.30.11

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

1.31 திருக்குரங்கணின்முட்டம்

பண் - தக்கராகம்

327 விழுநீர்மழு வாள்படை அண்ணல் விளங்குங்
கழுநீர்குவ ளைம்மல ரக்கயல் பாயுங்
கொழுநீர்வயல் சூழ்ந்த குரங்கணின் முட்டந்
தொழுநீர்மையர் தீதுறு துன்ப மிலரே.
1.31.1
328 விடைசேர்கொடி அண்ணல் விளங்குயர் மாடக்
கடைசேர்கரு மென்குளத் தோங்கிய காட்டில்
குடையார்புனல் மல்கு குரங்கணின் முட்டம்
உடையானெனை யாளுடை யெந்தை பிரானே.
1.31.2
329 சூலப்படை யான்விடை யான்சுடு நீற்றான்
காலன்றனை ஆருயிர் வவ்விய காலன்
கோலப்பொழில் சூழ்ந்த குரங்கணின் முட்டத்
தேலங்கமழ் புன்சடை யெந்தை பிரானே.
1.31.3
330 வாடாவிரி கொன்றை வலத்தொரு காதில்
தோடார்குழை யான்நல பாலன நோக்கிக்
கூடாதன செய்த குரங்கணின் முட்டம்
ஆடாவரு வாரவ ரன்புடை யாரே.
1.31.4
331 இறையார்வளை யாளையொர் பாகத் தடக்கிக்
கறையார்மிடற் றான்கரி கீறிய கையான்
குறையார்மதி சூடி குரங்கணின் முட்டத்
துறைவானெமை யாளுடை யொண்சுட ரானே.
1.31.5
332 பலவும்பய னுள்ளன பற்றும் ஒழிந்தோங்
கலவம்மயில் காமுறு பேடையொ டாடிக்
குலவும்பொழில் சூழ்ந்த குரங்கணின் முட்டம்
நிலவும்பெரு மானடி நித்தல் நினைந்தே.
1.31.6
333 மாடார்மலர்க் கொன்றை வளர்சடை வைத்துத்
தோடார்குழை தானொரு காதில் இலங்கக்
கூடார்மதி லெய்து குரங்கணின் முட்டத்
தாடாரர வம்மரை யார்த்தமர் வானே.
1.31.7
334 மையார்நிற மேனி யரக்கர்தங் கோனை
உய்யாவகை யாலடர்த் தின்னருள் செய்த
கொய்யாமலர் சூடி குரங்கணின் முட்டங்
கையால்தொழு வார்வினை காண்ட லரிதே.
1.31.8
335 வெறியார்மலர்த் தாமரை யானொடு மாலும்
அறியாதசைந் தேத்தவோர் ஆரழ லாகுங்
குறியால்நிமிர்ந் தான்றன் குரங்கணின் முட்டம்
நெறியால்தொழு வார்வினை நிற்ககி லாவே.
1.31.9
336 கழுவார்துவ ராடை கலந்துமெய் போர்க்கும்
வழுவாச்சமண் சாக்கியர் வாக்கவை கொள்ளேல்
குழுமின்சடை யண்ணல் குரங்கணின் முட்டத்
தெழில்வெண்பிறை யானடி சேர்வ தியல்பே.
1.31.10
337 கல்லார்மதிற் காழியுள் ஞானசம் பந்தன்
கொல்லார்மழு வேந்தி குரங்கணில் முட்டஞ்
சொல்லார்தமிழ் மாலை செவிக்கினி தாக
வல்லார்க்கெளி தாம்பிற வாவகை வீடே.
1.31.11

இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வாலீசுவரர், தேவியார் - இறையார்வளையம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

1.32 திருவிடைமருதூர்

பண் - தக்கராகம்

338 ஓடேகலன் உண்பதும் ஊரிடு பிச்சை
காடேயிட மாவது கல்லால் நிழற்கீழ்
வாடாமுலை மங்கையுந் தானும் மகிழ்ந்
தீடாவுறை கின்ற இடைமரு தீதோ.
1.32.1
339 தடம்கொண்டதொர் தாமரைப் பொன்முடி தன்மேல்
குடங்கொண்டடி யார்குளிர் நீர்சுமந் தாட்டப்
படங்கொண்டதொர் பாம்பரை யார்த்த பரமன்
இடங்கொண்டிருந் தான்றன் இடைமரு தீதோ.
1.32.2
340 வெண்கோவணங் கொண்டொரு வெண்டலை யேந்தி
அங்கோல்வளை யாளையொர் பாகம் அமர்ந்து
பொங்காவரு காவிரிக் கோலக் கரைமேல்
எங்கோ னுறைகின்ற இடைமரு தீதோ.
1.32.3
341 அந்தம்மறி யாத அருங்கல முந்திக்
கந்தங்கமழ் காவிரிக் கோலக் கரைமேல்
வெந்தபொடிப் பூசிய வேத முதல்வன்
எந்தையுறை கின்ற இடைமரு தீதோ.
1.32.4
342 வாசங்கமழ் மாமலர்ச் சோலையில் வண்டே
தேசம்புகுந் தீண்டியொர் செம்மை யுடைத்தாய்
பூசம்புகுந் தாடிப் பொலிந்தழ காய
ஈசனுறை கின்ற இடைமரு தீதோ.
1.32.5
343 வன்புற்றிள நாகம் அசைத் தழகாக
என்பிற்பல மாலையும் பூண்டெரு தேறி
அன்பிற்பிரி யாதவ ளோடு முடனாய்
இன்புற்றிருந் தான்றன் இடைமரு தீதோ.
1.32.6
344 தேக்குந்திமி லும்பல வுஞ்சுமந் துந்திப்
போக்கிப்புறம் பூச லடிப்ப வருமால்
ஆர்க்குந்திரைக் காவிரிக் கோலக் கரைமேல்
ஏற்கஇருந் தான்றன் இடைமரு தீதோ.
1.32.7
345 பூவார்குழ லாரகில் கொண்டு புகைப்ப
ஓவாதடி யாரடி யுள்குளிர்ந் தேத்த
ஆவாஅரக் கன்றனை ஆற்ற லழித்த
ஏவார்சிலை யான்றன் இடைமரு தீதோ.
1.32.8
346 முற்றாததொர் பால்மதி சூடு முதல்வன்
நற்றாமரை யானொடு மால்நயந் தேத்தப்
பொற்றோளியுந் தானும் பொலிந்தழ காக
எற்றேயுறை கின்ற இடைமரு தீதோ.
1.32.9
347 சிறுதேரரும் சில்சம ணும்புறங் கூற
நெறியேபல பத்தர்கள் கைதொழு தேத்த
வெறியாவரு காவிரிக் கோலக் கரைமேல்
எறியார்மழு வாளன் இடைமரு தீதோ.
1.32.10
348 கண்ணார்கமழ் காழியுள் ஞானசம் பந்தன்
எண்ணார்புக ழெந்தை யிடைமரு தின்மேல்
பண்ணோடிசை பாடிய பத்தும்வல் லார்கள்
விண்ணோருல கத்தினில் வீற்றிருப் பாரே.
1.32.11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மருதீசர், தேவியார் - நலமுலைநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

1.33 திரு அன்பிலாலந்துறை

பண் - தக்கராகம்

349 கணைநீடெரி மாலர வம்வரை வில்லா
இணையாஎயில் மூன்றும் எரித்த இறைவர்
பிணைமாமயி லுங்குயில் சேர்மட அன்னம்
அணையும்பொழி லன்பி லாலந் துறையாரே.
1.33.1
350 சடையார்சது ரன்முதி ராமதி சூடி
விடையார்கொடி யொன்றுடை யெந்தை விமலன்
கிடையாரொலி ஓத்தர வத்திசை கிள்ளை
அடையார்பொழில் அன்பி லாலந்துறை யாரே.
1.33.2
352 ஊரும்மர வஞ்சடை மேலுற வைத்துப்
பாரும்பலி கொண்டொலி பாடும் பரமர்
நீருண்கய லும்வயல் வாளை வராலோ
டாரும்புனல் அன்பி லாலந்துறை யாரே.
1.33.3
353 பிறையும்மர வும்முற வைத்த முடிமேல்
நறையுண்டெழு வன்னியு மன்னு சடையார்
மறையும்பல வேதிய ரோத ஒலிசென்
றறையும்புனல் அன்பி லாலந்துறை யாரே.
1.33.4
354 நீடும்புனற் கங்கையுந் தங்க முடிமேல்
கூடும்மலை யாளொரு பாகம் அமர்ந்தார்
மாடும்முழ வம்மதி ரம்மட மாதர்
ஆடும்பதி அன்பி லாலந்துறை யாரே.
1.33.5
355 நீறார்திரு மேனிய ரூனமி லார்பால்
ஊறார்சுவை யாகிய உம்பர் பெருமான்
வேறாரகி லும்மிகு சந்தனம் உந்தி
ஆறார்வயல் அன்பி லாலந்துறை யாரே.
1.33.6
356 செடியார்தலை யிற்பலி கொண்டினி துண்ட
படியார்பர மன்பர மேட்டிதன் சீரைக்
கடியார்மல ரும்புனல் தூவிநின் றேத்தும்
அடியார்தொழும் அன்பி லாலந்துறை யாரே.
1.33.7
357 விடத்தார் திகழும்மிட றன்நட மாடி
படத்தாரர வம்விர வுஞ்சடை ஆதி
கொடித்தேரிலங் கைக்குலக் கோன்வரை யார
அடர்த்தாரருள் அன்பி லாலந்துறை யாரே.
1.33.8
358 வணங்கிம்மலர் மேலய னும்நெடு மாலும்
பிணங்கியறி கின்றிலர் மற்றும் பெருமை
சுணங்குமுகத் தம்முலை யாளொரு பாகம்
அணங்குந்திக ழன்பி லாலந்துறை யாரே.
1.33.9
359 தறியார்துகில் போர்த்துழல் வார்சமண் கையர்
நெறியாஉண ராநிலை கேடினர் நித்தல்
வெறியார்மலர் கொண்டடி வீழு மவரை
அறிவாரவர் அன்பி லாலந்துறை யாரே.
1.33.10
360 அரவார்புனல் அன்பி லாலந்துறை தன்மேல்
கரவாதவர் காழியுள் ஞானசம் பந்தன்
பரவார்தமிழ் பத்திசை பாடவல் லார்போய்
விரவாகுவர் வானிடை வீடெளி தாமே.
1.33.11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
அன்பில் என வழங்கப்பெறும்.
சுவாமிபெயர் - சத்திவாகீசர், தேவியார் - சவுந்தரநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

1.34 சீகாழி

பண் - தக்கராகம்

360 அடலே றமருங் கொடியண்ணல்
மடலார் குழலா ளொடுமன்னுங்
கடலார் புடைசூழ் தருகாழி
தொடர்வா ரவர்தூ நெறியாரே.
1.34.1
361 திரையார் புனல்சூ டியசெல்வன்
வரையார் மகளோ டுமகிழ்ந்தான்
கரையார் புனல்சூழ் தருகாழி
நிரையார் மலர்தூ வுமினின்றே.
1.34.2
362 இடியார் குரலே றுடையெந்தை
துடியா ரிடையா ளொடுதுன்னுங்
கடியார் பொழில்சூழ் தருகாழி
அடியார் அறியார் அவலம்மே.
1.34.3
363 ஒளியார் விடமுண் டவொருவன்
அளியார் குழல்மங் கையொடன்பாய்
களியார் பொழில்சூழ் தருகாழி
எளிதாம் அதுகண் டவரின்பே.
1.34.4
364 பனியார் மலரார் தருபாதன்
முனிதா னுமையோ டுமுயங்கி
கனியார் பொழில்சூழ் தருகாழி
இனிதாம் அதுகண் டவரீடே.
1.34.5
365 கொலையார் தருகூற் றமுதைத்து
மலையான் மகளோ டுமகிழ்ந்தான்
கலையார் தொழுதேத் தியகாழி
தலையால் தொழுவார் தலையாரே.
1.34.6
366 திருவார் சிலையால் எயிலெய்து
உருவார் உமையோ டுடனானான்
கருவார் பொழில்சூழ் தருகாழி
மருவா தவர்வான் மருவாரே.
1.34.7
367 அரக்கன் வலியொல் கஅடர்த்து
வரைக்கு மகளோ டுமகிழ்ந்தான்
சுரக்கும் புனல்சூழ் தருகாழி
நிரக்கும் மலர்தூ வுநினைந்தே.
1.34.8
368 இருவர்க் கெரியா கிநிமிர்ந்தான்
உருவிற் பெரியா ளொடுசேருங்
கருநற் பரவை கமழ்காழி
மருவப் பிரியும் வினைமாய்ந்தே.
1.34.9
369 சமண்சாக் கியர்தாம் அலர்தூற்ற
அமைந்தான் உமையோ டுடனன்பாய்க்
கமழ்ந்தார் பொழில்சூழ் தருகாழி
சுமந்தார் மலர்தூ வுதல்தொண்டே.
1.34.10
370 நலமா கியஞான சம்பந்தன்
கலமார் கடல்சூழ் தருகாழி
நிலையா கநினைந் தவர்பாடல்
வலரா னவர்வான் அடைவாரே.
1.34.11

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

1.35 திருவீழிமிழலை

பண் - தக்கராகம்

371 அரையார் விரிகோ வணஆடை
நரையார் விடையூர் திநயந்தான்
விரையார் பொழில்வீ ழிம்மிழலை
உரையால் உணர்வார் உயர்வாரே.
1.35.1
372 புனைதல் புரிபுன் சடைதன்மேல்
கனைதல் லொருகங் கைகரந்தான்
வினையில் லவர்வீ ழிம்மிழலை
நினைவில் லவர்நெஞ் சமும்நெஞ்சே.
1.35.2
373 அழவல் லவரா டியும்பாடி
எழவல் லவரெந் தையடிமேல்
விழவல் லவர்வீ ழிம்மிழலை
தொழவல் லவர்நல் லவர்தொண்டே.
1.35.3
374 உரவம் புரிபுன் சடைதன்மேல்
அரவம் மரையார்த் தஅழகன்
விரவும் பொழில்வீ ழிம்மிழலை
பரவும் மடியார் அடியாரே.
1.35.4
375 கரிதா கியநஞ் சணிகண்டன்
வரிதா கியவண் டறைகொன்றை
விரிதார் பொழில்வீ ழிம்மிழலை
உரிதா நினைவார் உயர்வாரே.
1.35.5
376 சடையார் பிறையான் சரிபூதப்
படையான் கொடிமே லதொர்பைங்கண்
விடையான் உறைவீ ழிம்மிழலை
அடைவார் அடியார் அவர்தாமே.
1.35.6
377 செறியார் கழலுஞ் சிலம்பார்க்க
நெறியார் குழலா ளொடுநின்றான்
வெறியார் பொழில்வீ ழிம்மிழலை
அறிவார் அவலம் அறியாரே.
1.35.7
378 உளையா வலியொல் கஅரக்கன்
வளையா விரலூன் றியமைந்தன்
விளையார் வயல்வீ ழிம்மிழலை
அளையா வருவா ரடியாரே.
1.35.8
379 மருள்செய் திருவர் மயலாக
அருள்செய் தவனார் அழலாகி
வெருள்செய் தவன்வீ ழிம்மிழலை
தெருள்செய் தவர்தீ வினைதேய்வே.
1.35.9
380 துளங்குந் நெறியா ரவர்தொன்மை
வளங்கொள் ளன்மின்புல் லமண்தேரை
விளங்கும் பொழில்வீ ழிம்மிழலை
உளங்கொள் பவர்தம் வினையோய்வே.
1.35.10
381 நளிர்கா ழியுள்ஞான சம்பந்தன்
குளிரார் சடையான் அடிகூற
மிளிரார் பொழில்வீ ழிம்மிழலை
கிளர்பா டல்வல்லார்க் கிலைகேடே.
1.35.11

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

1.36 திரு ஐயாறு

பண் - தக்கராகம்

382 கலையார் மதியோ டுரநீரும்
நிலையார் சடையா ரிடமாகும்
மலையா ரமுமா மணிசந்தோ
டலையார் புனல்சே ருமையாறே.
1.36.1
383 மதியொன் றியகொன் றைவடத்தன்
மதியொன் றவுதைத் தவர்வாழ்வும்
மதியின் னொடுசேர் கொடிமாடம்
மதியம் பயில்கின் றவையாறே.
1.36.2
384 கொக்கின் னிறகின் னொடுவன்னி
புக்க சடையார்க் கிடமாகுந்
திக்கின் னிசைதே வர்வணங்கும்
அக்கின் னரையா ரதையாறே.
1.36.3
385 சிறைகொண் டபுரம் மவைசிந்தக்
கறைகொண் டவர்கா தல்செய்கோயில்
மறைகொண் டநல்வா னவர்தம்மில்
அறையும் மொலிசே ருமையாறே.
1.36.4
386 உமையா ளொருபா கமதாகச்
சமைவார் அவர்சார் விடமாகும்
அமையா ருடல்சோர் தரமுத்தம்
அமையா வருமந் தணையாறே.
1.36.5
387 தலையின் தொடைமா லையணிந்து
கலைகொண் டதொர்கை யினர்சேர்வாம்
நிலைகொண் டமனத் தவர்நித்தம்
மலர்கொண் டுவணங் குமையாறே.
1.36.6
388 வரமொன் றியமா மலரோன்றன்
சிரமொன் றையறுத் தவர்சேர்வாம்
வரைநின் றிழிவார் தருபொன்னி
அரவங் கொடுசே ருமையாறே.
1.36.7
389 வரையொன் றதெடுத் தஅரக்கன்
சிரமங் கநெரித் தவர்சேர்வாம்
விரையின் மலர்மே தகுபொன்னித்
திரைதன் னொடுசே ருமையாறே.
1.36.8
390 (*)சங்கக் கயனும் மறியாமைப்
பொங்குஞ் சுடரா னவர்கோயில்
கொங்கிற் பொலியும் புனல்கொண்டு
அங்கிக் கெதிர்காட் டுமையாறே.
(*) சங்கத்தயனும் என்றும் பாடம்.
1.36.9
391 துவரா டையர்தோ லுடையார்கள்
கவர்வாய் மொழிகா தல்செய்யாதே
தவரா சர்கள்தா மரையானோ
டவர்தா மணையந் தணையாறே.
1.36.10
392 கலையார் கலிக்கா ழியர்மன்னன்
நலமார் தருஞான சம்பந்தன்
அலையார் புனல்சூ ழுமையாற்றைச்
சொலுமா லைவல்லார் துயர்வீடே.
1.36.11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - செம்பொன்சோதீசுரர், தேவியார் - அறம்வளர்த்தநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

1.37 திருப்பனையூர்

பண் - தக்கராகம்

393 அரவச் சடைமேல் மதிமத்தம்
விரவிப் பொலிகின் றவனூராம்
நிரவிப் பலதொண் டர்கள்நாளும்
பரவிப் பொலியும் பனையூரே.
1.37.1
394 எண்ணொன் றிநினைந் தவர்தம்பால்
உண்ணின் றுமகிழ்ந் தவனூராம்
கண்ணின் றெழுசோ லையில்வண்டு
பண்ணின் றொலிசெய் பனையூரே.
1.37.2
395 அலரும் மெறிசெஞ் சடைதன்மேல்
மலரும் பிறையொன் றுடையானூர்
சிலரென் றுமிருந் தடிபேணப்
பலரும் பரவும் பனையூரே.
1.37.3
396 இடியார் கடல்நஞ் சமுதுண்டு
பொடியா டியமே னியினானூர்
அடியார் தொழமன் னவரேத்தப்
படியார் பணியும் பனையூரே.
1.37.4
397 அறையார் கழல்மே லரவாட
இறையார் பலிதேர்ந் தவனூராம்
பொறையார் மிகுசீர் விழமல்கப்
பறையா ரொலிசெய் பனையூரே.
1.37.5
398 அணியார் தொழவல் லவரேத்த
மணியார் மிடறொன் றுடையானூர்
தணியார் மலர்கொண் டிருபோதும்
பணிவார் பயிலும் பனையூரே.
1.37.6
399 அடையா தவர்மூ வெயில்சீறும்
விடையான் விறலார் கரியின்தோல்
(*)உடையா னவனெண் பலபூதப்
படையா னவனூர் பனையூரே.
(*) உடையா னவனொண் பலபூத என்றும் பாடம்.
1.37.7
400 இலகும் முடிபத் துடையானை
அலல்கண் டருள்செய் தவெம்மண்ணல்
உலகில் லுயிர்நீர் நிலமற்றும்
பலகண் டவனூர் பனையூரே.
1.37.8
401 வரமுன் னிமகிழ்ந் தெழுவீர்காள்
சிரமுன் னடிதா ழவணங்கும்
பிரமன் னொடுமா லறியாத
பரமன் னுறையும் பனையூரே.
1.37.9
402 *அழிவல் லமண ரொடுதேரர்
மொழிவல் லனசொல் லியபோதும்
இழிவில் லதொர்செம் மையினானூர்
பழியில் லவர்சேர் பனையூரே.
(*) அழிவில் லமணஃ தொடுதேரர் என்றும் பாடம்.
1.37.10
403 பாரார் *விடையான் பனையூர்மேல்
சீரார் தமிழ்ஞா னசம்பந்தன்
ஆரா தசொன்மா லைகள்பத்தும்
ஊரூர் நினைவா ருயர்வாரே.
(*) விடையார் என்றும் பாடம்.
1.37.11
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சவுந்தரேசர், தேவியார் - பெரியநாயகியம்மை

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

1.38 திருமயிலாடுதுறை

பண் - தக்கராகம்

404 கரவின் றிநன்மா மலர்கொண்டே
இரவும் பகலுந் தொழுவார்கள்
சிரமொன் றியசெஞ் சடையான்வாழ்
வரமா மயிலா டுதுறையே.
1.38.1
405 உரவெங் கரியின் னுரிபோர்த்த
பரமன் னுறையும் பதியென்பர்
குரவஞ் சுரபுன் னையும்வன்னி
மருவும் மயிலா டுதுறையே.
1.38.2
406 ஊனத் திருள்நீங் கிடவேண்டில்
ஞானப் பொருள்கொண் டடிபேணுந்
தேனொத் தினியா னமருஞ்சேர்
வானம் மயிலா டுதுறையே.
1.38.3
407 அஞ்சொண் புலனும் மவைசெற்ற
மஞ்சன் மயிலா டுதுறையை
நெஞ்சொன் றிநினைந் தெழுவார்மேல்
துஞ்சும் பிணியா யினதானே.
1.38.4
408 (*)தணியார் மதிசெஞ் சடையான்றன்
அணியார்ந் தவருக் கருளென்றும்
பிணியா யினதீர்த் தருள்செய்யும்
மணியான் மயிலா டுதுறையே.
(*) கணியார் என்றும் பாடம்.
1.38.5
409 தொண்ட ரிசைபா டியுங்கூடிக்
கண்டு துதிசெய் பவனூராம்
பண்டும் பலவே தியரோத
வண்டார் மயிலா டுதுறையே.
1.38.6
410 அணங்கோ டொருபா கமமர்ந்து
இணங்கி யருள்செய் தவனூராம்
நுணங்கும் புரிநூ லர்கள்கூடி
வணங்கும் மயிலா டுதுறையே.
1.38.7
411 சிரங்கை யினிலேந் தியிரந்த
பரங்கொள் பரமேட் டிவரையால்
அரங்கவ் வரக்கன் வலிசெற்ற
வரங்கொள் மயிலா டுதுறையே.
1.38.8
412 ஞாலத் தைநுகர்ந் தவன்றானுங்
கோலத் தயனும் மறியாத
சீலத் தவனூர் சிலர்கூடி
மாலைத் தீர்மயிலா டுதுறையே.
1.38.9
413 நின்றுண் சமணும் நெடுந்தேரர்
ஒன்றும் மறியா மையுயர்ந்த
வென்றி யருளா னவனூராம்
மன்றன் மயிலா டுதுறையே.
1.38.10
414 நயர்கா ழியுள்ஞா னசம்பந்தன்
மயல்தீர் மயிலா டுதுறைமேல்
செயலா லுரைசெய் தனபத்தும்
உயர்வாம் இவையுற் றுணர்வார்க்கே.
1.38.11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மாயூரநாதர், தேவியார் - அஞ்சநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

1.39 திருவேட்களம்

பண் - தக்கராகம்

415 அந்தமும் ஆதியு மாகிய வண்ணல்
ஆரழ லங்கை அமர்ந்திலங்க
மந்த முழவம் இயம்ப
மலைமகள் காண நின்றாடிச்
சந்த மிலங்கு நகுதலை கங்கை
தண்மதியம் மயலே ததும்ப
வெந்தவெண் ணீறு மெய்பூசும்
வேட்கள நன்னக ராரே.
1.39.1
415 சடைதனைத் தாழ்தலும் ஏற முடித்துச்
சங்கவெண் டோ டு சரிந்திலங்கப்
புடைதனிற் பாரிடஞ் சூழப்
போதரு மாறிவர் போல்வார்
உடைதனில் நால்விரற் கோவண ஆடை
உண்பது மூரிடு பிச்சைவெள்ளை
விடைதனை ஊர்தி நயந்தார்
வேட்கள நன்னக ராரே.
1.39.2
416 பூதமும் பல்கண மும்புடை சூழப்
பூமியும் விண்ணும் உடன்பொருந்தச்
சீதமும் வெம்மையு மாகிச்
சீரொடு நின்றவெஞ் செல்வர்
ஓதமுங் கானலுஞ் சூழ்தரு வேலை
உள்ளங் கலந்திசை யாலெழுந்த
வேதமும் வேள்வியும் ஓவா
வேட்கள நன்னக ராரே.
1.39.3
418 அரைபுல்கும் ஐந்தலை யாட லரவம்
அமையவெண் கோவணத் தோடசைத்து
வரைபுல்கு மார்பி லோராமை
வாங்கி யணிந் தவர்தாந்
திரைபுல்கு தெண்கடல் தண்கழி யோதந்
தேனலங் கானலில் வண்டுபண்செய்ய
விரைபுல்கு பைம்பொழில் சூழ்ந்த
வேட்கள நன்னக ராரே.
1.39.4
419 பண்ணுறு வண்டறை கொன்றை யலங்கல்
பால்புரை நீறுவெண் ணூல்கிடந்த
பெண்ணுறு மார்பினர் பேணார்
மும்மதில் எய்த பெருமான்
கண்ணுறு நெற்றி கலந்த வெண்திங்கட்
கண்ணியர் விண்ணவர் கைதொழுதேத்தும்
வெண்ணிற மால்விடை அண்ணல்
வேட்கள நன்னக ராரே.
1.39.5
420 கறிவளர் குன்ற மெடுத்தவன் காதற்
கண்கவ ரைங்கணை யோனுடலம்
பொறிவளர் ஆரழ லுண்ணப்
பொங்கிய பூத புராணர்
மறிவள ரங்கையர் மங்கையொர் பங்கர்
மைஞ்ஞிற மானுரி தோலுடையாடை
வெறிவளர் கொன்றையந் தாரார்
வேட்கள நன்னக ராரே.
1.39.6
421 மண்பொடிக் கொண்டெரித் தோர் சுடலை
மாமலை வேந்தன் மகள்மகிழ
நுண்பொடிச் சேர நின்றாடி
நொய்யன செய்யல் உகந்தார்
கண்பொடி வெண்டலை யோடுகை யேந்திக்
காலனைக் காலாற் கடிந்துகந்தார்
வெண்பொடிச் சேர்திரு மார்பர்
வேட்கள நன்னக ராரே.
1.39.7
422 ஆழ்தரு மால்கடல் நஞ்சினை யுண்டார்
அமுத மமரர்க் கருளி
சூழ்தரு பாம்பரை யார்த்துச்
சூலமோ டொண்மழு வேந்தித்
தாழ்தரு புன்சடை யொன்றினை வாங்கித்
தண்மதி யம்மய லேததும்ப
வீழ்தரு கங்கை கரந்தார்
வேட்கள நன்னக ராரே.
1.39.8
423 திருவொளி காணிய பேதுறு கின்ற
திசைமுக னுந்திசை மேலளந்த
கருவரை யேந்திய மாலுங்
கைதொழ நின்றது மல்லால்
அருவரை யொல்க எடுத்த வரக்கன்
ஆடெழிற் றோள்களா ழத்தழுந்த
வெருவுற வூன்றிய பெம்மான்
வேட்கள நன்னக ராரே.
1.39.9
424 அத்தமண் டோ ய்துவ ராரமண் குண்டர்
யாதுமல் லாவுரை யேயுரைத்துப்
பொய்த்தவம் பேசுவ தல்லால்
புறனுரை யாதொன்றுங் கொள்ளேல்
முத்தன வெண்முறு வல்லுமை யஞ்ச
மூரிவல் லானையின் ஈருரி போர்த்த
வித்தகர் வேத முதல்வர்
வேட்கள நன்னக ராரே.
1.39.10
425 விண்ணியன் மாடம் விளங்கொளி வீதி
வெண்கொடி யெங்கும் விரிந்திலங்க
நண்ணிய சீர்வளர் காழி
நற்றமிழ் ஞானசம் பந்தன்
பெண்ணின்நல் லாளொரு பாகம மர்ந்து
பேணிய வேட்கள மேல்மொழிந்த
பண்ணியல் பாடல் வல்லார்கள்
பழியொடு பாவமி லாரே.
1.39.11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பாசுபதேசுவரர், தேவியார் - நல்லநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

1.40 திருவாழ்கொளிபுத்தூர் (*)

பண் - தக்கராகம்

(*) திருவாளொளிபுற்றூர் என்றும் பாடம்.

426 பொடியுடை மார்பினர் போர்விடை யேறிப்
பூதகணம் புடை சூழக்
கொடியுடை யூர்திரிந் தையங்
கொண்டு பலபல கூறி
வடிவுடை வாள்நெடுங் கண்ணுமை பாகம்
ஆயவன் வாழ்கொளி புத்தூர்க்
கடிகமழ் மாமல ரிட்டுக்
கறைமிடற் றானடி காண்போம்.
1.40.1
427 அரைகெழு கோவண ஆடையின் மேலோர்
ஆடரவம் அசைத் தையம்
புரைகெழு வெண்டலை யேந்திப்
போர்விடை யேறிப் புகழ
வரைகெழு மங்கைய தாகமொர் பாகம்
ஆயவன் வாழ்கொளி புத்தூர்
விரைகெழு மாமலர் தூவி
விரிசடை யானடி சேர்வோம்.
1.40.2
428 பூண்நெடு நாகம் அசைத்தன லாடிப்
புன்றலை யங்கையி லேந்தி
ஊணிடு பிச்சையூ ரையம்
உண்டி யென்று பலகூறி
வாணெடுங் கண்ணுமை மங்கையொர் பாகம்
ஆயவன் வாழ்கொளி புத்தூர்
தாணெடு மாமல ரிட்டுத்
தலைவன தாள்நிழல் சார்வோம்.
1.40.3
429 தாரிடு கொன்றையொர் வெண்மதி கங்கை
தாழ்சடை மேலவை சூடி
ஊரிடு பிச்சை கொள்செல்வம்
உண்டி யென்று பலகூறி
வாரிடு மென்முலை மாதொரு பாகம்
ஆயவன் வாழ்கொளி புத்தூர்க்
காரிடு மாமலர் தூவி
கறைமிடற் றானடி காண்போம்.
1.40.4
430 கனமலர்க் கொன்றை அலங்கல் இலங்கக்
காதிலொர் வெண்குழை யோடு
புனமலர் மாலை புனைந்தூர்
புகுதி யென்றே பலகூறி
வனமுலை மாமலை மங்கையொர் பாகம்
ஆயவன் வாழ்கொளி புத்தூர்
இனமல ரேய்ந்தன தூவி
எம்பெரு மானடி சேர்வோம்.
1.40.5
431 431
அளைவளர் நாகம் அசைத்தன லாடி
அலர்மிசை அந்தணன் உச்சிக்
களைதலை யிற்பலி கொள்ளுங்
கருத்தனே கள்வனே யென்னா
(*)வளைபொலி முன்கை மடந்தையொர் பாகம்
ஆயவன் வாழ்கொளி புத்தூர்த்
தளையவிழ் மாமலர் தூவித்
தலைவன தாளிணை சார்வோம்.
(*) வளையொலி என்றும் பாடம்.
1.40.6
432 அடர்செவி வேழத்தின் ஈருரி போர்த்து
வழிதலை யங்கையி லேந்தி
உடலிடு பிச்சை யோடைய
முண்டி யென்று பலகூறி
மடல்நெடு மாமலர்க் கண்ணியொர் பாகம்
ஆயவன் வாழ்கொளி புத்தூர்த்
தடமல ராயின தூவி
தலைவன தாள்நிழல் சார்வோம்.
1.40.7
433 உயர்வரை யொல்க எடுத்த அரக்கன்
ஒளிர்கட கக்கை யடர்த்து
அயலிடு பிச்சை யோடையம்
ஆர்தலை யென்றடி போற்றி
வயல்விரி நீல நெடுங்கணி பாகம்
ஆயவன் வாழ்கொளி புத்தூர்ச்
சயவிரி மாமலர் தூவி
தாழ்சடை யானடி சார்வோம்.
1.40.8
434 கரியவன் நான்முகன் கைதொழு தேத்த
காணலுஞ் சாரலு மாகா
எரியுரு வாகி யூரையம்
இடுபலி யுண்ணி யென்றேத்தி
வரியர வல்குல் மடந்தையொர் பாகம்
ஆயவன் வாழ்கொளி புத்தூர்
விரிமல ராயின தூவி
விகிர்தன சேவடி சேர்வோம்.
1.40.9
435 குண்டம ணர்துவர்க் கூறைகள் மெய்யில்
கொள்கை யினார் புறங்கூற
வெண்டலை யிற்பலி கொண்டல்
விரும்பினை யென்று விளம்பி
வண்டமர் பூங்குழல் மங்கையொர் பாகம்
ஆயவன் வாழ்கொளி புத்தூர்த்
தொண்டர்கள் மாமலர் தூவத்
தோன்றி நின்றான் அடிசேர்வோம்.
1.40.10
436 கல்லுயர் மாக்கடல் நின்று முழங்குங்
கரைபொரு காழிய மூதூர்
நல்லுயர் நான்மறை நாவின்
நற்றமிழ் ஞானசம் பந்தன்
வல்லுயர் சூலமும் வெண்மழு வாளும்
வல்லவன் வாழ்கொளி புத்தூர்ச்
சொல்லிய பாடல்கள் வல்லார்
துயர்கெடு தல்எளி தாமே.
1.40.11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மாணிக்கவண்ணவீசுரர், தேவியார் - வண்டார்பூங்குழலம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

1.41 திருப்பாம்புரம்

பண் - தக்கராகம்

437 சீரணி திகழ்திரு மார்பில் வெண்ணூலர்
திரிபுர மெரிசெய்த செல்வர்
வாரணி வனமுலை மங்கையோர் பங்கர்
மான்மறி யேந்திய மைந்தர்
காரணி மணிதிகழ் மிடறுடை யண்ணல்
கண்ணுதல் விண்ணவ ரேத்தும்
பாரணி திகழ்தரு நான்மறை யாளர்
பாம்புர நன்னக ராரே.
1.41.1
438 கொக்கிற கோடு கூவிள மத்தங்
கொன்றையொ டெருக்கணி சடையர்
அக்கினொ டாமை பூண்டழ காக
அனலது ஆடுமெம் மடிகள்
மிக்கநல் வேத வேள்வியு ளெங்கும்
விண்ணவர் விரைமலர் தூவப்
பக்கம்பல் பூதம் பாடிட வருவார்
பாம்புர நன்னக ராரே.
1.41.2
439 துன்னலி னாடை யுடுத்ததன் மேலோர்
சூறைநல் லரவது சுற்றிப்
பின்னுவார் சடைகள் தாழவிட் டாடிப்
பித்தராய்த் திரியுமெம் பெருமான்
மன்னுமா மலர்கள் தூவிட நாளும்
மாமலை யாட்டியுந் தாமும்
பன்னுநான் மறைகள் பாடிட வருவார்
பாம்புர நன்னக ராரே.
1.41.3
440 துஞ்சுநாள் துறந்து தோற்றமு மில்லாச்
சுடர்விடு சோதியெம் பெருமான்
நஞ்சுசேர் கண்ட முடையவென் நாதர்
நள்ளிருள் நடஞ்செயும் நம்பர்
மஞ்சுதோய் சோலை மாமயி லாட
மாடமா ளிகைதன்மே லேறி
பஞ்சுசேர் மெல்லடிப் பாவையர் பயிலும்
பாம்புர நன்னக ராரே.
1.41.4
441 நதியத னயலே நகுதலை மாலை
நாண்மதி சடைமிசை யணிந்து
கதியது வாகக் காளிமுன் காணக்
கானிடை நடஞ்செய்த கருத்தர்
விதியது வழுவா வேதியர் வேள்வி
செய்தவர் ஓத்தொலி ஓவாப்
பதியது வாகப் பாவையுந் தாமும்
பாம்புர நன்னக ராரே.
1.41.5
442 ஓதிநன் குணர்வார்க் குணர்வுடை யொருவர்
ஒளிதிகழ் உருவஞ் சேரொருவர்
மாதினை யிடமா வைத்தவெம் வள்ளல்
மான்மறி யேந்திய மைந்தர்
ஆதிநீ யருளென் றமரர்கள் பணிய
அலைகடல் கடையவன் றெழுந்த
பாதிவெண் பிறைசடை வைத்தவெம் பரமர்
பாம்புர நன்னக ராரே.
1.41.6
443 மாலினுக் கன்று சக்கர மீந்து
மலரவற் கொருமுக மொழித்து
ஆலின்கீ ழறமோர் நால்வருக் கருளி
அனலது ஆடுமெம் மடிகள்
காலனைக் காய்ந்து தங்கழ லடியாற்
காமனைப் பொடிபட நோக்கிப்
பாலனுக் கருள்கள் செய்தவெம் மடிகள்
பாம்புர நன்னக ராரே.
1.41.7
444 விடைத்தவல் லரக்கன் வெற்பினை யெடுக்க
மெல்லிய திருவிர லூன்றி
அடர்த்தவன் றனக்கன் றருள்செய்த வடிகள்
அனலது ஆடுமெம் மண்ணல்
மடக்கொடி யவர்கள் வருபுன லாட
வந்திழி அரிசிலின் கரைமேற்
படப்பையிற் கொணர்ந்து பருமணி சிதறும்
பாம்புர நன்னக ராரே.
1.41.8
445 கடிபடு கமலத் தயனொடு மாலுங்
காதலோ டடிமுடி தேடச்
செடிபடு வினைகள் தீர்த்தருள் செய்யுந்
தீவணர் எம்முடைச் செல்வர்
முடியுடையமரர் முனிகணத் தவர்கள்
முறைமுறை யடிபணிந் தேத்தப்
படியது வாகப் பாவையுந் தாமும்
பாம்புர நன்னக ராரே.
1.41.9
446 குண்டர்சாக் கியருங் குணமிலா தாருங்
குற்றுவிட் டுடுக்கையர் தாமுங்
கண்டவா றுரைத்துக் கால்நிமிர்த் துண்ணுங்
கையர்தாம் உள்ளவா றறியார்
வண்டுசேர் குழலி மலைமகள் நடுங்க
வாரணம் உரிசெய்து போர்த்தார்
பண்டுநாம் செய்த பாவங்கள் தீர்ப்பார்
பாம்புர நன்னக ராரே.
1.41.10
447 பார்மலிந் தோங்கிப் பருமதில் சூழ்ந்த
பாம்புர நன்னக ராரைக்
கார்மலிந் தழகார் கழனிசூழ் மாடக்
கழுமல முதுபதிக் கவுணி
நார்மலிந் தோங்கும் நால்மறை ஞான
சம்பந்தன் செந்தமிழ் வல்லார்
சீர்மலிந் தழகார் செல்வம தோங்கிச்
சிவனடி நண்ணுவர் தாமே.
1.41.11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - பாம்புரேசர்,
பாம்புரநாதர் என்றும் பாடம். தேவியார் - வண்டமர்பூங்குழலம்மை,
வண்டார்பூங்குழலி என்றும் பாடம்.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

1.42 திருப்பேணுபெருந்துறை

பண் - தக்கராகம்

448 பைம்மா நாகம் பன்மலர்க் கொன்றை
பன்றிவெண் கொம்பொன்று பூண்டு
செம்மாந் தையம் பெய்கென்று சொல்லிச்
செய்தொழில் பேணியோர் செல்வர்
அம்மா னோக்கிய அந்தளிர் மேனி
அரிவையோர் பாக மமர்ந்த
பெம்மான் நல்கிய தொல்புக ழாளர்
பேணு பெருந்துறை யாரே.
1.42.1
449 மூவரு மாகி இருவரு மாகி
முதல்வனு மாய்நின்ற மூர்த்தி
பாவங்கள் தீர்தர நல்வினை நல்கி
பல்கணம் நின்று பணியச்
சாவம தாகிய மால்வரை கொண்டு
தண்மதில் மூன்று மெரித்த
தேவர்கள் தேவர் எம்பெரு மானார்
தீதில் பெருந்துறை யாரே.
1.42.2
450 செய்பூங் கொன்றை கூவிள மாலை
சென்னியுட் சேர்புனல் சேர்த்திக்
கொய்பூங் கோதை மாதுமை பாகங்
கூடியோர் பீடுடை வேடர்
கைபோ னான்ற கனிகுலை வாழை
காய்குலை யிற்கமு கீனப்
பெய்பூம் பாளை பாய்ந்திழி தேறல்
பில்கு பெருந்துறை யாரே.
1.42.3
451 நிலனொடு வானும் நீரொடு தீயும்
வாயுவு மாகியோ ரைந்து
புலனொடு வென்று பொய்ம்மைகள் தீர்ந்த
புண்ணியர் வெண்பொடிப் பூசி
நலனொடு தீங்குந் தானல தின்றி
நன்கெழு சிந்தைய ராகி
மலனொடு மாசும் இல்லவர் வாழும்
மல்கு பெருந்துறை யாரே.
1.42.4
452 பணிவா யுள்ள நன்கெழு நாவின்
பத்தர்கள் பத்திமை செய்யத்
துணியார் தங்கள் உள்ள மிலாத
சுமடர்கள் சோதிப் பரியார்
அணியார் நீல மாகிய கண்டர்
அரிசி லுரிஞ்சு கரைமேல்
மணிவாய் நீலம் வாய்கமழ் தேறல்
மல்கு பெருந்துறை யாரே.
1.42.5
453 எண்ணார் தங்கள் மும்மதில் வேவ
ஏவலங் காட்டிய எந்தை
விண்ணோர் சாரத் தன்னருள் செய்த
வித்தகர் வேத முதல்வர்
பண்ணார் பாடல் ஆடல றாத
பசுபதி ஈசனோர் பாகம்
பெண்ணாண் ஆய வார்சடை யண்ணல்
பேணு பெருந்துறை யாரே.
1.42.6
454 விழையா ருள்ளம் நன்கெழு நாவில்
வினைகெட வேதமா றங்கம்
பிழையா வண்ணம் பண்ணிய வாற்றல்
பெரியோ ரேத்தும் பெருமான்
தழையார் மாவின் தாழ்கனி யுந்தித்
தண்(*)அரி சில்புடை சூழ்ந்த
குழையார் சோலை மென்னடை யன்னங்
கூடு பெருந்துறை யாரே.

(*) அரிசில் என்பது ஒரு நதி. அது அரிசொல்ல வந்ததினால்
அரிசொல் நதியென்று கும்பகோணப் புராணத்திற் சொல்லப்படுகின்றது.
1.42.7
455 பொன்னங் கானல் வெண்டிரை சூழ்ந்த
பொருகடல் வேலி இலங்கை
மன்ன னொல்க மால்வரை யூன்றி
மாமுரண் ஆகமுந் தோளும்
முன்னவை வாட்டிப் பின்னருள் செய்த
மூவிலை வேலுடை மூர்த்தி
அன்னங் கன்னிப் பேடையொ டாடி
அணவு பெருந்துறை யாரே.
1.42.8
456 புள்வாய் போழ்ந்து மாநிலங் கீண்ட
பொருகடல் வண்ணனும் பூவின்
உள்வா யல்லி மேலுறை வானும்
உணர்வரி யான்உமை கேள்வன்
முள்வாய் தாளில் தாமரை மொட்டின்
முகம்மல ரக்கயல் பாயக்
கள்வாய் நீலம் கண்மல ரேய்க்குங்
காமர் பெருந்துறை யாரே.
1.42.9
457 குண்டுந் தேருங் கூறை களைந்துங்
கூப்பிலர் செப்பில ராகி
மிண்டும் மிண்டர் மிண்டவை கண்டு
மிண்டு செயாது விரும்பும்
தண்டும் பாம்பும் வெண்டலை சூலந்
தாங்கிய தேவர் தலைவர்
வண்டுந் தேனும் வாழ்பொழிற் சோலை
மல்கு பெருந்துறை யாரே.
1.42.10
458 கடையார் மாடம் நன்கெழு வீதிக்
கழுமல வூரன் கலந்து
நடையா ரின்சொல் ஞானசம் பந்தன்
நல்ல பெருந்துறை மேய
படையார் சூலம் வல்லவன் பாதம்
பரவிய பத்திவை வல்லார்
உடையா ராகி உள்ளமு மொன்றி
உலகினில் மன்னுவர் தாமே.
1.42.11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சிவாநந்தநாதர், தேவியார் - மலையரசியம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

1.43 திருக்கற்குடி

பண் - தக்கராகம்

459 வடந்திகழ் மென்முலை யாளைப் பாகம தாக மதித்துத்
தடந்திரை சேர்புனல் மாதைத் தாழ்சடை வைத்த சதுரர்
இடந்திகழ் முப்புரி நூலர் துன்பமொ டின்பம தெல்லாங்
கடந்தவர் காதலில் வாழுங் கற்குடி மாமலை யாரே.
1.43.1
460 அங்கமொ ராறுடை வேள்வி யான அருமறை நான்கும்
பங்கமில் பாடலோ டாடல் பாணி பயின்ற படிறர்
சங்கம தார்குற மாதர் தங்கையின் மைந்தர்கள் தாவிக்
கங்குலின் மாமதி பற்றுங் கற்குடி மாமலை யாரே.
1.43.2
461 நீரக லந்தரு சென்னி நீடிய மத்தமும் வைத்துத்
தாரகை யின்னொளி சூழ்ந்த தண்மதி சூடிய சைவர்
போரக லந்தரு வேடர் புனத்திடை யிட்ட விறகில்
காரகி லின்புகை விம்முங் கற்குடி மாமலை யாரே.
1.43.3
462 ஒருங்களி நீயிறை வாவென் றும்பர்கள் ஓல மிடக்கண்
டிருங்கள மார விடத்தை இன்னமு துன்னிய ஈசர்
மருங்களி யார்பிடி வாயில் வாழ்வெதி ரின்முளை வாரிக்
கருங்களி யானை கொடுக்குங் கற்குடி மாமலை யாரே.
1.43.4
463 போர்மலி திண்சிலை கொண்டு பூதக ணம்புடை சூழப்
பார்மலி வேடுரு வாகிப் பண்டொரு வர்க்கருள் செய்தார்
ஏர்மலி கேழல் கிளைத்த இன்னொளி மாமணி யெங்குங்
கார்மலி வேடர் குவிக்குங் கற்குடி மாமலை யாரே.
1.43.5
464 உலந்தவ ரென்ப தணிந்தே ஊரிடு பிச்சைய ராகி
விலங்கல்வில் வெங்கன லாலே மூவெயில் வேவ முனிந்தார்
நலந்தரு சிந்தைய ராகி நாமலி மாலையி னாலே
கலந்தவர் காதலில் வாழுங் கற்குடி மாமலை யாரே.
1.43.6
465 மானிட மார்தரு கையர் மாமழு வாரும் வலத்தார்
ஊனிடை யார்தலை யோட்டில் உண்கல னாக வுகந்தார்
தேனிடை யார்தரு சந்தின் திண்சிறை யால்தினை வித்திக்
கானிடை வேடர் விளைக்குங் கற்குடி மாமலை யாரே.
1.43.7
466 வாளமர் வீரம் நினைந்த இராவணன் மாமலை யின்கீழ்த்
தோளமர் வன்றலை குன்றத் தொல்விர லூன்று துணைவர்
தாளமர் வேய்தலைப் பற்றித் தாழ்கரி விட்ட விசைபோய்க்
காளம தார்முகில் கீறுங் கற்குடி மாமலை யாரே.
1.43.8
467 தண்டமர் தாமரை யானுந் தாவியிம் மண்ணை அளந்து
கொண்டவ னும்மறி வொண்ணாக் கொள்கையர் வெள்விடை யூர்வர்
வண்டிசை யாயின பாட நீடிய வார்பொழில் நீழல்
கண்டமர் மாமயி லாடுங் கற்குடி மாமலை யாரே.
1.43.9
468 மூத்துவ ராடையி னாரும் (*)மூசு கருப்பொடி யாரும்
நாத்துவர் பொய்ம்மொழி யார்கள் நயமி லராமதி வைத்தார்
ஏத்துயர் பத்தர்கள் சித்தர் இறைஞ்ச அவரிட ரெல்லாங்
காத்தவர் காமரு சோலைக் கற்குடி மாமலை யாரே.

(*) மூசு கடுப்பொடி என்றும் பாடம்.
1.43.10
469 காமரு வார்பொழில் சூழுங் கற்குடி மாமலை யாரை
நாமரு வண்புகழ்க் காழி நலந்திகழ் ஞானசம் பந்தன்
பாமரு செந்தமிழ் மாலை பத்திவை பாடவல் லார்கள்
பூமலி வானவ ரோடும் பொன்னுல கிற்பொலி வாரே.
1.43.11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - முத்தீசர், தேவியார் - அஞ்சனாட்சியம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

1.44 திருப்பாச்சிலாச்சிராமம் - முயலகன் தீர்த்தது.

பண் - தக்கராகம்

470 துணிவளர் திங்கள் துளங்கி விளங்கச்
சுடர்ச்சடை சுற்றி முடித்துப்
பணிவளர் கொள்கையர் பாரிடஞ் சூழ
வாரிடமும் பலி தேர்வர்
அணிவளர் கோல மெலாஞ்செய்து பாச்சி
லாச்சிரா மத்துறை கின்ற
மணிவளர் கண்டரோ மங்கையை வாட
மயல்செய்வ தோயிவர் மாண்பே.
1.44.1
471 கலைபுனை மானுரி தோலுடை யாடை
கனல்சுட ராலிவர் கண்கள்
தலையணி சென்னியர் தாரணி மார்பர்
தம்மடி கள்ளிவ ரென்ன
அலைபுனல் பூம்பொழில் சூழ்ந்தமர் பாச்சி
லாச்சிரா மத்துறை கின்ற
இலைபுனை வேலரோ ஏழையை வாட
இடர்செய்வ தோயிவ ரீடே.
1.44.2
472 வெஞ்சுட ராடுவர் துஞ்சிருள் மாலை
வேண்டுவர் பூண்பது வெண்ணூல்
நஞ்சடை கண்டர் நெஞ்சிட மாக
நண்ணுவர் நம்மை நயந்து
மஞ்சடை மாளிகை சூழ்தரு பாச்சி
லாச்சிரா மத்துறை கின்ற
செஞ்சுடர் வண்ணரோ பைந்தொடி வாடச்
சிதைசெய்வ தோவிவர் சீரே.
1.44.3
473 கனமலர்க் கொன்றை யலங்க லிலங்கக்
கனல்தரு தூமதிக் கண்ணி
புனமலர் மாலை யணிந் தழகாய
புனிதர் கொலாமிவ ரென்ன
வனமலி வண்பொழில் சூழ்தரு பாச்சி
லாச்சிரா மத்துறை கின்ற
மனமலி மைந்தரோ மங்கையை வாட
மயல்செய்வ தோவிவர் மாண்பே.
1.44.4
474 மாந்தர்தம் பால்நறு நெய்மகிழ்ந் தாடி
வளர்சடை மேற்புனல் வைத்து
மோந்தை முழாக்குழல் தாளமோர் வீணை
முதிரவோர் வாய்மூரி பாடி
ஆந்தை விழிச்சிறு பூதத்தர் பாச்சி
லாச்சிரா மத்துறை கின்ற
சாந்தணி மார்பரோ தையலை வாடச்
சதுர்செய்வ தோவிவர் சார்வே.
1.44.5
475 நீறுமெய்பூசி நிறைசடை தாழ
நெற்றிக்கண் ணாலுற்று நோக்கி
ஆறது சூடி ஆடர வாட்டி
யைவிரற் கோவண ஆடை
பாறரு மேனியர் பூதத்தர் பாச்சி
லாச்சிரா மத்துறை கின்ற
ஏறது ஏறியர் ஏழையை வாட
இடர்செய்வ தோவிவ ரீடே.
1.44.6
476 பொங்கிள நாகமொ ரேகவ டத்தோ
டாமைவெண் ணூல்புனை கொன்றை
கொங்கிள மாலை புனைந் தழகாய
குழகர்கொ லாமிவ ரென்ன
அங்கிள மங்கையோர் பங்கினர் பாச்சி
லாச்சிரா மத்துறை கின்ற
சங்கொளி வண்ணரோ தாழ்குழல் வாடச்
சதிர்செய்வ தோவிவர் சார்வே.
1.44.7
477 ஏவலத் தால்விச யற்கருள் செய்து
இராவண னையீ டழித்து
மூவரி லும்முத லாய்நடு வாய
மூர்த்தியை யன்றி மொழியாள்
யாவர் களும்பர வும்மெழிற் பாச்சி
லாச்சிரா மத்துறை கின்ற
தேவர்கள் தேவரோ சேயிழை வாடச்
சிதைசெய்வ தோவிவர் சேர்வே.
1.44.8
478 மேலது நான்முக னெய்திய தில்லை
கீழது சேவடி தன்னை
நீலது வண்ணனு மெய்திய தில்லை
எனவிவர் நின்றது மல்லால்
ஆலது மாமதி தோய்பொழிற் பாச்சி
லாச்சிரா மத்துறை கின்ற
பாலது வண்ணரோ பைந்தொடி வாடப்
பழிசெய்வ தோவிவர் பண்பே.
1.44.9
479 நாணொடு கூடிய சாயின ரேனும்
நகுவ ரவரிரு போதும்
ஊணொடு கூடிய உட்குந் தகையார்
உரைக ளவைகொள வேண்டா
ஆணொடு பெண்வடி வாயினர் பாச்சி
லாச்சிரா மத்துறை கின்ற
பூணெடு மார்பரோ பூங்கொடி வாடப்
புனைசெய்வ தோவிவர் பொற்பே.
1.44.10
480 அகமலி அன்பொடு தொண்டர் வணங்க
ஆச்சிரா மத்துறை கின்ற
புகைமலி மாலை புனைந் தழகாய
புனிதர்கொ லாமிவ ரென்ன
நகைமலி தண்பொழில் சூழ்தரு காழி
நற்றமிழ் ஞானசம் பந்தன்
தகைமலி தண்டமிழ் கொண்டிவை யேத்தச்
சாரகி லாவினை தானே.
1.44.11

முயலகன் என்பது ஒருவித வலிநோய். இது கொல்லி மழவனின்
மகளுக்குக் கண்டிருந்து இந்தத் திருப்பதிகம் ஓதியருளினவளவில் தீர்ந்தது.

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மாற்றறிவரதர், தேவியார் - பாலசுந்தரநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

1.45 திருப்பழையனூர்-திரு ஆலங்காடு

பண் - தக்கராகம்

481 துஞ்ச வருவாருந் தொழுவிப்பாரும் வழுவிப்போய்
நெஞ்சம் புகுந்தென்னை நினைவிப்பாரும் முனைநட்பாய்
வஞ்சப் படுத்தொருத்தி வாழ்நாள்கொள்ளும் வகைகேட்
டஞ்சும் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே.
1.45.1
482 கேடும் பிறவியும் ஆக்கினாருங் கேடிலா
வீடு மாநெறி விளம்பினாரெம் விகிர்தனார்
காடுஞ் சுடலையும் கைக்கொண்டெல்லிக் கணப்பேயோ
டாடும் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே.
1.45.2
483 கந்தங் கமழ்கொன்றைக் கண்ணிசூடி கனலாடி
வெந்த பொடிநீற்றை விளங்கப்பூசும் விகிர்தனார்
கொந்தண் பொழிற்சோலை யரவின்தோன்றிக் கோடல்பூத்
தந்தண் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே.
1.45.3
484 பால மதிசென்னி படரச்சூடி பழியோராக்
கால னுயிர்செற்ற காலனாய கருத்தனார்
கோலம் பொழிற்சோலைப் பெடையோடாடி மடமஞ்ஞை
ஆலும் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே.
1.45.4
485 ஈர்க்கும் புனல்சூடி இளவெண்டிங்கள் முதிரவே
பார்க்கு மரவம்பூண் டாடிவேடம் பயின்றாருங்
கார்க்கொள் கொடிமுல்லை குருந்தமேறிக் கருந்தேன்மொய்த்
தார்க்கும் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே.
1.45.5
486 பறையுஞ் சிறுகுழலும் யாழும்பூதம் பயிற்றவே
மறையும் பலபாடி மயானத்துறையும் மைந்தனார்
பிறையும் பெரும்புனல்சேர் சடையினாரும் பேடைவண்
டறையும் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே.
1.45.6
487 நுணங்கு மறைபாடி யாடிவேடம் பயின்றாரும்
இணங்கு மலைமகளோ டிருகூறொன்றாய் இசைந்தாரும்
வணங்குஞ் சிறுத்தொண்டர் வைகலேத்தும் வாழ்த்துங்கேட்
டணங்கும் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே.
1.45.7
488 கணையும் வரிசிலையும் எரியுங்கூடிக் கவர்ந்துண்ண
இணையில் எயின்மூன்றும் எரித்திட்டாரெம் இறைவனார்
பிணையுஞ் சிறுமறியுங் கலையுமெல்லாங் கங்குல்சேர்ந்
தணையும் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே.
1.45.8
489 489
கவிழ மலைதரளக் கடகக்கையால் எடுத்தான்றோள்
பவழ நுனைவிரலாற் பையவூன்றிப் பரிந்தாரும்
தவழுங் கொடிமுல்லை புறவஞ்சேர நறவம்பூத்
தவிழும் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே.
1.45.9
490 பகலும் இரவுஞ்சேர் பண்பினாரும் நண்போரா
திகலும் இருவர்க்கும் எரியாய்த்தோன்றி நிமிர்ந்தாரும்
புகலும் வழிபாடு வல்லார்க்கென்றுந் தீயபோய்
அகலும் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே.
1.45.10
491 போழம் பலபேசிப் போதுசாற்றித் திரிவாரும்
வேழம் வருமளவும் வெயிலேதுற்றித் திரிவாரும்
கேழல் வினைபோகக் கேட்பிப்பாரும் கேடிலா
ஆழ்வர் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே.
1.45.11
492 சாந்தங் கமழ்மறுகிற் சண்பைஞான சம்பந்தன்
ஆந்தண் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளை
வேந்த னருளாலே விரித்தபாடல் இவைவல்லார்
சேர்ந்த விடமெல்லாந் தீர்த்தமாகச் சேர்வாரே.
1.45.12

இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - ஊர்த்ததாண்டவேசுரர், தேவியார் - வண்டார்குழலியம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

1.46 திரு அதிகைவீரட்டானம்

பண் - தக்கராகம்

493 குண்டைக் குறட்பூதங் குழும அனலேந்திக்
கெண்டைப் பிறழ்தெண்ணீர்க் கெடில வடபக்கம்
வண்டு மருள்பாட வளர்பொன் விரிகொன்றை
விண்ட தொடையலா னாடும்வீரட் டானத்தே.
1.46.1
493 அரும்புங் குரும்பையு மலைத்த மென்கொங்கைக்
கரும்பின் மொழியாளோ டுடன்கை அனல்வீசிச்
சுரும்புண் விரிகொன்றைச் சுடர்பொற் சடைதாழ
விரும்பு மதிகையு ளாடும்வீரட் டானத்தே.
1.46.2
494 ஆடல் அழல்நாக மரைக்கிட் டசைத்தாடப்
பாடல் மறைவல்லான் படுதம்பலி பெயர்வான்
மாட முகட்டின்மேல் மதிதோய் அதிகையுள்
வேடம் பலவல்லா னாடும்வீரட் டானத்தே.
1.46.3
496 எண்ணார் எயிலெய்தான் இறைவன் அனலேந்தி
மண்ணார் முழவதிர முதிரா மதிசூடிப்
பண்ணார் மறைபாடப் பரமன் அதிகையுள்
விண்ணோர் பரவநின் றாடும்வீரட் டானத்தே.
1.46.4
497 கரிபுன் புறமாய கழிந்தார் இடுகாட்டில்
திருநின் றொருகையால் திருவாம் அதிகையுள்
எரியேந் தியபெருமான் எரிபுன் சடைதாழ
விரியும் புனல்சூடி யாடும்வீரட் டானத்தே.
1.46.5
498 துளங்குஞ் சுடரங்கைத் துதைய விளையாடி
இளங்கொம் பனசாயல் உமையோ டிசைபாடி
வளங்கொள் புனல்சூழ்ந்த வயலா ரதிகையுள்
விளங்கும் பிறைசூடி யாடும்வீரட் டானத்தே.
1.46.6
499 பாதம் பலரேத்தப் பரமன் பரமேட்டி
பூதம் புடைசூழப் புலித்தோ லுடையாகக்
கீதம் உமைபாடக் கெடில வடபக்கம்
வேத முதல்வன்நின் றாடும்வீரட் டானத்தே.
1.46.7
500 கல்லார் வரையரக்கன் தடந்தோள் கவின்வாட
ஒல்லை யடர்த்தவனுக் கருள்செய் ததிகையுள்
பல்லார் பகுவாய நகுவெண் டலைசூடி
வில்லால் எயிலெய்தான் ஆடும்வீரட் டானத்தே.
1.46.8
501 நெடியான் நான்முகனும் நிமிர்ந்தானைக் காண்கிலார்
பொடியாடு மார்பானைப் புரிநூ லுடையானைக்
கடியார் கழுநீலம் மலரு மதிகையுள்
வெடியார் தலையேந்தி யாடும்வீரட் டானத்தே.
1.46.9
511 அரையோ டலர்பிண்டி மருவிக் குண்டிகை
சுரையோ டுடனேந்தி உடைவிட் டுழல்வார்கள்
உரையோ டுரையொவ்வா துமையோ டுடனாகி
விரைதோ யலர்தாரான் ஆடும்வீரட் டானத்தே.
1.46.10
512 ஞாழல் கமழ்காழி யுள்ஞான சம்பந்தன்
வேழம் பொருதெண்ணீர் அதிகைவீரட் டானத்துச்
சூழுங் கழலானைச் சொன்ன தமிழ்மாலை
வாழுந் துணையாக நினைவார் வினையிலாரே.
1.46.11

இத்தலம் நடுநாட்டில் கெடிலநதிக்கு வடபாலுள்ளது.
சுவாமிபெயர் - அதிகைநாதர், வீரட்டானேசுவரர்;
தேவியார் - திருவதிகைநாயகி.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

1.47 திருச்சிரபுரம்

பண் - பழந்தக்கராகம்

504 பல்லடைந்த வெண்டலையிற் பலிகொள்வ தன்றியும்போய்
வில்லடைந்த புருவநல்லாள் மேனியில் வைத்தலென்னே
சொல்லடைந்த தொல்மறையோ டங்கங் கலைகளெல்லாஞ்
செல்லடைந்த செல்வர்வாழுஞ் சிரபுரம் மேயவனே.
1.47.1
505 கொல்லைமுல்லை நகையினாளோர் கூறது வன்றியும்போய்
அல்லல்வாழ்க்கைப் பலிகொண்டுண்ணும் ஆதர வென்னைகொலாஞ்
சொல்லநீண்ட பெருமையாளர் தொல்கலை கற்றுவல்லார்
செல்லநீண்ட செல்வமல்கு சிரபுரம் மேயவனே.
1.47.2
506 நீரடைந்த சடையின்மேலோர் நிகழ்மதி யன்றியும்போய்
ஊரடைந்த ஏறதேறி யுண்பலி கொள்வதென்னே
காரடைந்த சோலைசூழ்ந்து காமரம் வண்டிசைப்பச்
சீரடைந்த செல்வமோங்கு சிரபுரம் மேயவனே.
1.47.3
507 கையடைந்த மானினோடு காரர வன்றியும்போய்
மெய்யடைந்த வேட்கையோடு மெல்லியல் வைத்ததென்னே
கையடைந்த களைகளாகச் செங்கழு நீர்மலர்கள்
செய்யடைந்த வயல்கள்சூழ்ந்த சிரபுரம் மேயவனே.
1.47.4
508 புரமெரித்த பெற்றியோடும் போர்மத யானை தன்னைக்
கரமெடுத்துத் தோலுரித்த காரணம் ஆவதென்னே
மரமுரித்த தோலுடுத்த மாதவர் தேவரோடுஞ்
சிரமெடுத்த கைகள்கூப்புஞ் சிரபுரம் மேயவனே.
1.47.5
509 கண்ணுமூன்றும் உடையதன்றிக் கையினில் வெண்மழுவும்
பண்ணுமூன்று வீணையோடு பாம்புடன் வைத்ததென்னே
எண்ணுமூன்று கனலுமோம்பி எழுமையும் விழுமியராய்த்
திண்ணமூன்று வேள்வியாளர் சிரபுரம் மேயவனே.
1.47.6
510 குறைபடாத வேட்கையோடு கோல்வளை யாளொருபாற்
பொறைபடாத இன்பமோடு புணர்தரு மெய்ம்மையென்னே
இறைபடாத மென்முலையார் மாளிகை மேலிருந்து
சிறைபடாத பாடலோங்கு சிரபுரம் மேயவனே.
1.47.7
511 மலையெடுத்த வாளரக்கன் அஞ்ச ஒருவிரலால்
நிலையெடுத்த கொள்கையானே நின்மல னேநினைவார்
துலையெடுத்த சொற்பயில்வார் மேதகு வீதிதோறுஞ்
சிலையெடுத்த தோளினானே சிரபுரம் மேயவனே.
1.47.8
512 மாலினோடு மலரினானும் வந்தவர் காணாது
சாலுமஞ்சப் பண்ணிநீண்ட தத்துவ மேயதென்னே
நாலுவேதம் ஓதலார்கள் நந்துணை யென்றிறைஞ்சச்
சேலுமேயுங் கழனிசூழ்ந்த சிரபுரம் மேயவனே.
1.47.9
513 புத்தரோடு சமணர்சொற்கள் புறனுரை யென்றிருக்கும்
பத்தர்வந்து பணியவைத்த பான்மைய தென்னைகொலாம்
மத்தயானை யுரியும்போர்த்து மங்கையொ டும்முடனே
சித்தர்வந்து பணியுஞ்செல்வச் சிரபுரம் மேயவனே.
1.47.10
514 தெங்குநீண்ட சோலைசூழ்ந்த சிரபுரம் மேயவனை
அங்கம்நீண்ட மறைகள்வல்ல அணிகொள்சம் பந்தனுரை
பங்கம்நீங்கப் பாடவல்ல பத்தர்கள் பாரிதன்மேற்
சங்கமோடு நீடிவாழ்வர் தன்மையி னாலவரே.
1.47.11

சிரபுரமென்பதும் சீகாழிக்கொருபெயர்.
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

1.48 திருச்சேய்ஞலூர்

பண் - பழந்தக்கராகம்

515 நூலடைந்த கொள்கையாலே நுன்னடி கூடுதற்கு
மாலடைந்த நால்வர்கேட்க நல்கிய நல்லறத்தை
ஆலடைந்த நீழல்மேவி யருமறை சொன்னதென்னே
சேலடைந்த தண்கழனிச் சேய்ஞலூர் மேயவனே.
1.48.1
516 நீறடைந்த மேனியின்கண் நேரிழையா ளொருபால்
கூறடைந்த கொள்கையன்றிக் கோலவளர் சடைமேல்
ஆறடைந்த திங்கள்சூடி யரவம் அணிந்ததென்னே
சேறடைந்த தண்கழனிச் சேய்ஞலூர் மேயவனே.
1.48.2
517 ஊனடைந்த வெண்டலையி னோடுபலி திரிந்து
கானடைந்த பேய்களோடு பூதங் கலந்துடனே
மானடைந்த நோக்கிகாண மகிழ்ந்தெரி யாடலென்னே
தேனடைந்த சோலைமல்கு சேய்ஞலூர் மேயவனே.
1.48.3
518 வீணடைந்த மும்மதிலும் வில்மலை யாவரவின்
நாணடைந்த வெஞ்சரத்தால் நல்லெரி யூட்டலென்னே
பாணடைந்த வண்டுபாடும் பைம்பொழில் சூழ்ந்தழகார்
சேணடைந்த மாடம்மல்கு சேய்ஞலூர் மேயவனே.
1.48.4
519 பேயடைந்த காடிடமாப் பேணுவ தன்றியும்போய்
வேயடைந்த தோளியஞ்ச வேழம் உரித்ததென்னே
வாயடைந்த நான்மறையா றங்கமோ டைவேள்வித்
தீயடைந்த செங்கையாளர் சேய்ஞலூர் மேயவனே.
1.48.5
520 காடடைந்த ஏனமொன்றின் காரண மாகிவந்து
வேடடைந்த வேடனாகி விசயனொ டெய்ததென்னே
கோடடைந்த மால்களிற்றுக் கோச்செங்க ணாற்கருள்செய்
சேடடைந்த செல்வர்வாழுஞ் சேய்ஞலூர் மேயவனே.
1.48.6
521 பீரடைந்த பாலதாட்டப் பேணா தவன்தாதை
வேரடைந்து பாய்ந்ததாளை வேர்த்தடிந் தான்றனக்குத்
தாரடைந்த மாலைசூட்டித் தலைமை வகுத்ததென்னே
சீரடைந்த கோயில்மல்கு சேய்ஞலூர் மேயவனே.
1.48.7
522 மாவடைந்த தேரரக்கன் வலிதொலை வித்தவன்றன்
நாவடைந்த பாடல்கேட்டு நயந்தருள் செய்ததென்னே
பூவடைந்த நான்முகன்போற் பூசுரர் போற்றிசெய்யுஞ்
சேவடைந்த ஊர்தியானே சேய்ஞலூர் மேயவனே.
1.48.8
523 காரடைந்த வண்ணனோடு கனக மனையானும்
பாரிடந்தும் விண்பறந்தும் பாத முடிகாணார்
சீரடைந்து வந்துபோற்றச் சென்றருள் செய்ததென்னே
தேரடைந்த மாமறுகிற் சேய்ஞலூர் மேயவனே.
1.48.9
524 மாசடைந்த மேனியாரும் மனந்திரி யாதகஞ்சி
நேசடைந்த ஊணினாரும் நேசமி லாததென்னே
வீசடைந்த தோகையாட விரைகமழும் பொழில்வாய்த்
தேசடைந்த வண்டுபாடுஞ் சேய்ஞலூர் மேயவனே.
1.48.10
525 சேயடைந்த சேய்ஞலூரிற் செல்வன சீர்பரவித்
தோயடைந்த தண்வயல்சூழ் தோணி புரத்தலைவன்
சாயடைந்த ஞானமல்கு சம்பந்தன் இன்னுரைகள்
வாயடைந்து பாடவல்லார் வானுல காள்பவரே.
1.48.11

சோழநாட்டில் சுப்பிரமணியசுவாமியினா லுண்டான தலம்.
சுவாமிபெயர் - சத்தகிரீசுவரர், தேவியார் - சகிதேவிநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

1.49 திருநள்ளாறு

பண் - பழந்தக்கராகம்

பச்சைத்திருப்பதிகம்
இது சமணர்கள் வாதின்பொருட்டுத் தீயிலிட்டபோது
வேகாதிருந்தது.

526 போகமார்த்த பூண்முலையாள் தன்னோடும் பொன்னகலம்
பாகமார்த்த பைங்கண்வெள் ளேற்றண்ணல் பரமேட்டி
ஆகமார்த்த தோலுடையன் கோவண ஆடையின்மேல்
நாகமார்த்த நம்பெருமான் மேயது நள்ளாறே.
1.49.1
527 தோடுடைய காதுடையன் தோலுடை யன்தொலையாப்
பீடுடைய போர்விடையன் பெண்ணுமோர் பாலுடையன்
ஏடுடைய மேலுலகோ டேழ்கடலுஞ் சூழ்ந்த
நாடுடைய நம்பெருமான் மேயது நள்ளாறே.
1.49.2
528 ஆன்முறையா லாற்றவெண்ணீ றாடி அணியிழையோர்
பான்முறையால் வைத்தபாதம் பத்தர் பணிந்தேத்த
மான்மறியும் வெண்மழுவுஞ் சூலமும் பற்றியகை
நான்மறையான் நம்பெருமான் மேயது நள்ளாறே.
1.49.3
529 புல்கவல்ல வார்சடைமேல் பூம்புனல் பெய்தயலே
மல்கவல்ல கொன்றைமாலை மதியோ டுடன்சூடிப்
பல்கவல்ல தொண்டர்தம்பொற் பாத நிழல்சேர
நல்கவல்ல நம்பெருமான் மேயது நள்ளாறே.
1.49.4
530 ஏறுதாங்கி யூர்திபேணி யேர்கொள் இளமதியம்
ஆறுதாங்குஞ் சென்னிமேலோர் ஆடர வஞ்சூடி
நீறுதாங்கி நூல்கிடந்த மார்பில் நிரைகொன்றை
நாறுதாங்கு நம்பெருமான் மேயது நள்ளாறே.
1.49.5
531 திங்களுச்சி மேல்விளங்குந் தேவன் இமையோர்கள்
எங்களுச்சி யெம்மிறைவன் என்றடி யேயிறைஞ்சத்
தங்களுச்சி யால்வணங்குந் தன்னடி யார்கட்கெல்லாம்
நங்களுச்சி நம்பெருமான் மேயது நள்ளாறே.
1.49.6
532 வெஞ்சுடர்த்தீ யங்கையேந்தி விண்கொள் முழவதிர
அஞ்சிடத்தோர் ஆடல்பாடல் பேணுவ தன்றியும்போய்ச்
செஞ்சடைக்கோர் திங்கள்சூடித் திகழ்தரு கண்டத்துள்ளே
நஞ்சடைத்த நம்பெருமான் மேயது நள்ளாறே.
1.49.7
533 சிட்டமார்ந்த மும்மதிலுஞ் சிலைவரைத் தீயம்பினால்
சுட்டுமாட்டிச் சுண்ணவெண்ணீ றாடுவ தன்றியும்போய்ப்
பட்டமார்ந்த சென்னிமேலோர் பால்மதி யஞ்சூடி
நட்டமாடும் நம்பெருமான் மேயது நள்ளாறே.
1.49.8
534 உண்ணலாகா நஞ்சுகண்டத் துண்டுட னேயொடுக்கி
அண்ணலாகா வண்ணல்நீழ லாரழல் போலுருவம்
எண்ணலாகா வுள்வினையென் றெள்க வலித்திருவர்
நண்ணலாகா நம்பெருமான் மேயது நள்ளாறே.
1.49.9
535 மாசுமெய்யர் மண்டைத்தேரர் குண்டர் குணமிலிகள்
பேசும்பேச்சை மெய்யென்றெண்ணி அந்நெறி செல்லன்மின்
மூசுவண்டார் கொன்றைசூடி மும்மதி லும்முடனே
நாசஞ்செய்த நம்பெருமான் மேயது நள்ளாறே.
1.49.10
536 தண்புனலும் வெண்பிறையுந் தாங்கிய தாழ்சடையன்
நண்புநல்லார் மல்குகாழி ஞானசம் பந்தன்நல்ல
பண்புநள்ளா றேத்துபாடல் பத்தும் இவைவல்லார்
உண்புநீங்கி வானவரோ டுலகி லுறைவாரே.
1.49.11

இத்தலம் சோழநாட்டிலுள்ள சப்த தியாகர் தலங்களிலொன்று.
சுவாமிபெயர் - தெர்ப்பாரணியர்,
தேவியார் - போகமார்த்தபூண்முலையம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

1.50 திருவலிவலம்

பண் - பழந்தக்கராகம்

537 ஒல்லையாறி உள்ளமொன்றிக் கள்ளம்ஒழிந் துவெய்ய
சொல்லையாறித் தூய்மைசெய்து காமவினை யகற்றி
நல்லவாறே உன்றன்நாமம் நாவில்நவின் றேத்த
வல்லவாறே வந்துநல்காய் வலிவலமே யவனே.
1.50.1
538 இயங்குகின்ற இரவிதிங்கள் மற்றுநற் றேவரெல்லாம்
பயங்களாலே பற்றிநின்பால் சித்தந்தெளி கின்றிலர்
தயங்குசோதி சாமவேதா காமனைக்காய்ந் தவனே
மயங்குகின்றேன் வந்துநல்காய் வலிவல மேயவனே.
1.50.2
539 பெண்டிர்மக்கள் சுற்றமென்னும் பேதைப் பெருங்கடலை
விண்டுபண்டே வாழமாட்டேன் வேதனை நோய்நலியக்
கண்டுகண்டே யுன்றன்நாமங் காதலிக் கின்றதுள்ளம்
வண்டுகிண்டிப் பாடுஞ்சோலை வலிவல மேயவனே.
1.50.3
540 மெய்யராகிப் பொய்யைநீக்கி வேதனை யைத்துறந்து
செய்யரானார் சிந்தையானே தேவர் குலக்கொழுந்தே
நைவன்நாயேன் உன்றன்நாமம் நாளும் நவிற்றுகின்றேன்
வையம்முன்னே வந்துநல்காய் வலிவல மேயவனே.
1.50.4
541 துஞ்சும்போதுந் துற்றும்போதுஞ் சொல்லுவ னுன்றிறமே
தஞ்சமில்லாத் தேவர்வந்துன் தாளிணைக் கீழ்ப்பணிய
நஞ்சையுண்டாய்க் கென்செய்கேனோ நாளும் நினைந்தடியேன்
வஞ்சமுண்டென் றஞ்சுகின்றேன் வலிவல மேயவனே.
1.50.5
542 புரிசடையாய் புண்ணியனே நண்ணலார் மூவெயிலும்
எரியஎய்தாய் எம்பெருமான் என்றிமை யோர்பரவும்
கரியுரியாய் காலகாலா நீலமணி மிடற்று
வரியரவா வந்துநல்காய் வலிவல மேயவனே.
1.50.6
543 தாயுநீயே தந்தைநீயே சங்கர னேயடியேன்
ஆயுநின்பால் அன்புசெய்வான் ஆதரிக் கின்றதுள்ளம்
ஆயமாய காயந்தன்னுள் ஐவர்நின் றொன்றலொட்டார்
மாயமேயென் றஞ்சுகின்றேன் வலிவல மேயவனே.
1.50.7
544 நீரொடுங்குஞ் செஞ்சடையாய் நின்னுடைய பொன்மலையை
வேரொடும்பீழ்ந் தேந்தலுற்ற வேந்தனி ராவணனைத்
தேரொடும்போய் வீழ்ந்தலறத் திருவிர லால்அடர்த்த
வாரொடுங்கும் கொங்கைபங்கா வலிவல மேயவனே.
1.50.8
545 ஆதியாய நான்முகனு மாலு மறிவரிய
சோதியானே நீதியில்லேன் சொல்லுவன் நின்றிறமே
ஓதிநாளும் உன்னையேத்தும் என்னை வினைஅவலம்
வாதியாமே வந்துநல்காய் வலிவல மேயவனே.
1.50.9
546 *பொதியிலானே பூவணத்தாய் பொன்திக ழுங்கயிலைப்
பதியிலானே பத்தர்சித்தம் பற்றுவி டாதவனே
விதியிலாதார் வெஞ்சமணர் சாக்கிய ரென்றிவர்கள்
மதியிலாதார் என்செய்வாரோ வலிவல மேயவனே.

(*)பொதியில் என்பது பொதிகைமலை. அது வைப்புத்தலங்களிலொன்று.
1.50.10
547 வன்னிகொன்றை மத்தஞ்சூடும் வலிவல மேயவனைப்
பொன்னிநாடன் புகலிவேந்தன் ஞானசம் பந்தன்சொன்ன
பன்னுபாடல் பத்தும்வல்லார் மெய்த்தவத் தோர்விரும்பும்
மன்னுசோதி ஈசனோடே மன்னி யிருப்பாரே.
1.50.11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மனத்துணைநாதர், தேவியார் - வாளையங்கண்ணியம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

1.51 திருச்சோபுரம்

பண் - பழந்தக்கராகம்

548 வெங்கண்ஆனை யீருரிவை போர்த்து விளங்குமொழி
மங்கைபாகம் வைத்துகந்த மாண்பது வென்னைகொலாங்
கங்கையோடு திங்கள்சூடிக் கடிகம ழுங்கொன்றைத்
தொங்கலானே தூயநீற்றாய் சோபுர மேயவனே.
1.51.1
549 விடையமர்ந்து வெண்மழுவொன் றேந்திவி ரிந்திலங்கு
சடையொடுங்கத் தண்புனலைத் தாங்கிய தென்னைகொலாங்
கடையுயர்ந்த மும்மதிலுங் காய்ந்தன லுள்ளழுந்தத்
தொடைநெகிழ்ந்த வெஞ்சிலையாய் சோபுர மேயவனே.
1.51.2
550 தீயராய வல்லரக்கர் செந்தழ லுள்ளழுந்தச்
சாயவெய்து வானவரைத் தாங்கிய தென்னைகாலாம்
பாயும்வெள்ளை ஏற்றையேறிப் பாய்புலித் தோலுடுத்த
தூயவெள்ளை நீற்றினானே சோபுர மேயவனே.
1.513
551 பல்லிலோடு கையிலேந்திப் பல்கடை யும்பலிதேர்ந்
தல்லல்வாழ்க்கை மேலதான ஆதர வென்னைகொலாம்
வில்லைவென்ற நுண்புருவ வேல்நெடுங் கண்ணியொடுந்
தொல்லையூழி யாகிநின்றாய் சோபுர மேயவனே.
1.51.4
552 நாற்றமிக்க கொன்றைதுன்று செஞ்சடை மேல்மதியம்
ஏற்றமாக வைத்துகந்த காரண மென்னைகொலாம்
ஊற்றமிக்க காலன்றன்னை ஒல்க வுதைத்தருளித்
தோற்றமீறு மாகிநின்றாய் சோபுர மேயவனே.
1.51.5
553 கொன்னவின்ற மூவிலைவேல் கூர்மழு வாட்படையன்
பொன்னைவென்ற கொன்றைமாலை சூடும்பொற் பென்னைகொலாம்
அன்னமன்ன மென்னடையாள் பாக மமர்ந்தரைசேர்
துன்னவண்ண ஆடையினாய் சோபுர மேயவனே.
1.51.6
554 குற்றமின்மை யுண்மைநீயென் றுன்னடி யார்பணிவார்
கற்றல்கேள்வி ஞானமான காரண மென்னைகொலாம்
வற்றலாமை வாளரவம் பூண்டயன் வெண்டலையில்
துற்றலான கொள்கையானே சோபுர மேயவனே.
1.51.7
555 விலங்கலொன்று வெஞ்சிலையாக் கொண்டு விறலரக்கர்
குலங்கள்வாழும் ஊரெரித்த கொள்கையி தென்னைகொலாம்
இலங்கைமன்னு வாளவுணர் கோனை யெழில்விரலால்
துலங்கவூன்றி வைத்துகந்தாய் சோபுர மேயவனே.
1.51.8
556 விடங்கொள்நாக மால்வரையைச் சுற்றி விரிதிரைநீர்
கடைந்தநஞ்சை யுண்டுகந்த காரண மென்னைகொலாம்
இடந்துமண்ணை யுண்டமாலு மின்மலர் மேலயனுந்
தொடர்ந்துமுன்னங் காணமாட்டாச் சோபுர மேயவனே.
1.51.9
557 புத்தரோடு புன்சமணர் பொய்யுரை யேரைத்துப்
பித்தராகக் கண்டுகந்த பெற்றிமை யென்னைகொலாம்
மத்தயானை யீருரிவை போர்த்து வளர்சடைமேல்
துத்திநாகஞ் சூடினானே சோபுர மேயவனே.
1.51.10
558 சோலைமிக்க தண்வயல்சூழ் சோபுர மேயவனைச்
சீலமிக்க தொல்புகழார் சிரபுரக் கோன்நலத்தான்
ஞாலம்மிக்க தண்டமிழான் ஞானசம் பந்தன்சொன்ன
கோலம்மிக்க மாலைவல்லார் கூடுவர் வானுலகே.
1.51.11

இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சோபுரநாதர், தேவியார் - சோபுரநாயகியம்மை

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

1.52 திருநெடுங்களம்

பண் - பழந்தக்கராகம்

559 மறையுடையாய் தோலுடையாய் வார்சடை மேல்வளரும்
பிறையுடையாய் பிஞ்ஞகனே யென்றுனைப் பேசினல்லால்
குறையுடையார் குற்றமோராய் கொள்கையி னாலுயர்ந்த
நிறையுடையார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.
1.52.1
560 கனைத்தெழுந்த வெண்டிரைசூழ் கடலிடை நஞ்சுதன்னைத்
தினைத்தனையா மிடற்றில்வைத்த திருந்திய தேவநின்னை
மனத்தகத்தோர் பாடலாடல் பேணி யிராப்பகலும்
நினைத்தெழுவார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.
1.52.2
561 நின்னடியே வழிபடுவான் நிமலா நினைக்கருத
என்னடியான் உயிரைவவ்வேல் என்றடல் கூற்றுதைத்த
பொன்னடியே பரவிநாளும் பூவொடு நீர்சுமக்கும்
நின்னடியார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.
1.52.3
562 மலைபுரிந்த மன்னவன்றன் மகளையோர் பால்மகிழ்ந்தாய்
அலைபுரிந்த கங்கைதங்கும் அவிர்சடை ஆரூரா
தலைபுரிந்த பலிமகிழ்வாய் தலைவநின் றாள்நிழற்கீழ்
நிலைபுரிந்தார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.
1.52.4
563 பாங்கினல்லார் படிமஞ்செய்வார் பாரிட மும்பலிசேர்
தூங்கிநல்லார் பாடலோடு தொழுகழ லேவணங்கித்
தாங்கிநில்லா அன்பினோடுந் தலைவநின் றாள்நிழற்கீழ்
நீங்கிநில்லார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.
1.52.5
564 விருத்தனாகிப் பாலனாகி வேதமோர் நான்குணர்ந்து
கருத்தனாகிக் கங்கையாளைக் கமழ்சடை மேற்கரந்தாய்
அருத்தனாய ஆதிதேவன் அடியிணை யேபரவும்
நிருத்தர்கீதர் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.
1.52.6
565 கூறுகொண்டாய் மூன்றுமொன்றாக் கூட்டியோர் வெங்கணையால்
மாறுகொண்டார் புரமெரித்த மன்னவ னேகொடிமேல்
ஏறுகொண்டாய் சாந்தமீதென் றெம்பெரு மானணிந்த
நீறுகொண்டார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.
1.52.7
566 குன்றினுச்சி மேல்விளங்குங் கொடிமதிற் சூழிலங்கை
அன்றிநின்ற அரக்கர்கோனை அருவரைக் கீழடர்த்தாய்
என்றுநல்ல வாய்மொழியால் ஏத்தியி ராப்பகலும்
நின்றுநைவா ரிடர்களையாய் நெடுங்கள மேயவனே.
1.52.8
567 வேழவெண்கொம் பொசித்தமாலும் விளங்கிய நான்முகனுஞ்
சூழவெங்கும் நேடவாங்கோர் சோதியு ளாகிநின்றாய்
கேழல்வெண்கொம் பணிந்தபெம்மான் கேடிலாப் பொன்னடியின்
நீழல்வாழ்வா ரிடர்களையாய் நெடுங்கள மேயவனே.
1.52.9
568 வெஞ்சொல்தஞ்சொல் லாக்கிநின்ற வேடமி லாச்சமணுந்
தஞ்சமில்லாச் சாக்கியருந் தத்துவ மொன்றறியார்
துஞ்சலில்லா வாய்மொழியால் தோத்திரம் நின்னடியே
நெஞ்சில்வைப்பார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.
1.52.10
569 நீடவல்ல வார்சடையான் மேயநெ டுங்களத்தைச்
சேடர்வாழும் மாமறுகிற் சிரபுரக் கோன்நலத்தால்
நாடவல்ல பனுவல்மாலை ஞானசம் பந்தன்சொன்ன
பாடல்பத்தும் பாடவல்லார் பாவம் பறையுமே.
1.52.11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - நித்தியசுந்தரர், தேவியார் - ஒப்பிலாநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

1.53 திருமுதுகுன்றம்

பண் - பழந்தக்கராகம்

570 தேவராயும் அசுரராயுஞ் சித்தர் செழுமறைசேர்
நாவராயும் நண்ணுபாரும் விண்ணெரி கால்நீரும்
மேவராய விரைமலரோன் செங்கண்மால் ஈசனென்னும்
மூவராய முதலொருவன் மேயது முதுகுன்றே.
1.53.1
571 பற்றுமாகி வானுளோர்க்குப் பல்கதி ரோன்மதிபார்
எற்றுநீர்தீக் காலுமேலை விண்ணிய மானனொடு
மற்றுமாதோர் பல்லுயிராய் மாலய னும்மறைகள்
முற்றுமாகி வேறுமானான் மேயது முதுகுன்றே.
1.53.2
572 வாரிமாகம் வைகுதிங்கள் வாளர வஞ்சூடி
நாரிபாகம் நயந்துபூமேல் நான்முகன் றன்றலையில்
சீரிதாகப் பலிகொள்செல்வன் செற்றலுந் தோன்றியதோர்
மூரிநாகத் துரிவைபோர்த்தான் மேயது முதுகுன்றே.
1.53.3
573 பாடுவாருக் கருளுமெந்தை பனிமுது பௌவமுந்நீர்
நீடுபாரும் முழுதுமோடி அண்டர் நிலைகெடலும்
நாடுதானும் ஊடுமோடி ஞாலமும் நான்முகனும்
ஊடுகாண மூடும்வெள்ளத் துயர்ந்தது முதுகுன்றே.
1.53.4
574 வழங்குதிங்கள் வன்னிமத்தம் மாசுணம் மீசணவிச்
செழுங்கல்வேந்தன் செல்விகாணத் தேவர் திசைவணங்கத்
தழங்குமொந்தை தக்கைமிக்க பேய்க்கணம் பூதஞ்சூழ
முழங்குசெந்தீ யேந்தியாடி மேயது முதுகுன்றே.
1.53.5
575 சுழிந்தகங்கை தோய்ந்ததிங்கள் தொல்லரா நல்லிதழி
சழிந்தசென்னி சைவவேடந் தானினைத் தைம்புலனும்
அழிந்தசிந்தை அந்தணாளர்க் கறம்பொரு ளின்பம்வீடு
மொழிந்தவாயான் முக்கணாதி மேயது முதுகுன்றே.
1.53.5
*இப்பதிகத்தின் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.1.53.6
576 மயங்குமாயம் வல்லராகி வானி னொடுநீரும்
இயங்குவோருக் கிறைவனாய இராவணன் தோள்நெரித்த
புயங்கராக மாநடத்தன் புணர்முலை மாதுமையாள்
முயங்குமார்பன் முனிவரேத்த மேயது முதுகுன்றே.
1.53.8
577 ஞாலமுண்ட மாலுமற்றை நான்முக னும்மறியாக்
கோலமண்டர் சிந்தைகொள்ளா ராயினுங் கொய்மலரால்
ஏலஇண்டை கட்டிநாமம் இசையஎப் போதுமேத்தும்
மூலமுண்ட நீற்றர்வாயான் மேயது முதுகுன்றே.
1.53.9
578 உறிகொள்கையர் சீவரத்தர் உண்டுழல் மிண்டர்சொல்லை
நெறிகளென்ன நினைவுறாதே நித்தலுங் கைதொழுமின்
மறிகொள்கையன் வங்கமுந்நீர் பொங்கு விடத்தையுண்ட
முறிகொள்மேனி மங்கைபங்கன் மேயது முதுகுன்றே.
1.53.10
579 மொய்த்துவானோர் பல்கணங்கள் வணங்கும் முதுகுன்றை
பித்தர்வேடம் பெருமையென்னும் பிரமபுரத் தலைவன்
.... .... .... .... .... .... .... ....
.... .... .... .... .... .... .... ....
1.53.11
(*) 11-ம் செய்யுளின் பின்னிரண்டடிகள் சிதைந்து போயின.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

1.54 திருஓத்தூர்

பண் - பழந்தக்கராகம்

580 பூத்தேர்ந் தாயன கொண்டுநின் பொன்னடி
ஏத்தா தாரில்லை யெண்ணுங்கால்
ஓத்தூர் மேய வொளிமழு வாள்அங்கைக்
கூத்தீ ரும்ம குணங்களே.
1.54.1
581 இடையீர் போகா இளமுலை யாளையோர்
புடையீ ரேபுள்ளி மானுரி
உடையீ ரேயும்மை யேத்துதும் ஓத்தூர்ச்
சடையீ ரேயும தாளே.
1.54.2
582 உள்வேர் போல நொடிமையி னார்திறம்
கொள்வீ ரல்குலோர் கோவணம்
ஒள்வா ழைக்கனி தேன்சொரி யோத்தூர்க்
கள்வீ ரேயும காதலே.
1.54.3
583 தோட்டீ ரேதுத்தி யைந்தலை நாகத்தை
ஆட்டீ ரேயடி யார்வினை
ஓட்டீ ரேயும்மை யேத்துதும் ஓத்தூர்
நாட்டீ ரேயருள் நல்குமே.
1.54.4
584 குழையார் காதீர் கொடுமழு வாட்படை
உழையாள் வீர்திரு வோத்தூர்
பிழையா வண்ணங்கள் பாடிநின் றாடுவார்
அழையா மேயருள் நல்குமே.
1.54.5
585 மிக்கார் வந்து விரும்பிப் பலியிடத்
தக்கார் தம்மக்க ளீரென்
றுட்கா தாருள ரோதிரு வோத்தூர்
நக்கீ ரேயருள் நல்குமே.
1.54.6
586 தாதார் கொன்றை தயங்கு முடியுடை
நாதா என்று நலம்புகழ்ந்
தோதா தாருள ரோதிரு வோத்தூர்
ஆதீ ரேயருள் நல்குமே.
1.54.7
587 என்றா னிம்மலை யென்ற அரக்கனை
வென்றார் போலும் விரலினால்
ஒன்றார் மும்மதி லெய்தவ னோத்தூர்
என்றார் மேல்வினை யேகுமே.
1.54.8
588 நன்றா நால்மறை யானொடு மாலுமாய்ச்
சென்றார் போலுந் திசையெலாம்
ஒன்றா யொள்ளெரி யாய்மிக வோத்தூர்
நின்றீ ரேயுமை நேடியே.
1.54.9
589 கார மண்கலிங் கத்துவ ராடையர்
தேரர் சொல்லவை தேறன்மின்
ஓரம் பாலெயி லெய்தவ னோத்தூர்ச்
சீர வன்கழல் சேர்மினே.
1.54.10
590 குரும்பை யாண்பனை யின்குலை யோத்தூர்
அரும்பு கொன்றை யடிகளைப்
பெரும்பு கலியுள் ஞானசம் பந்தன்சொல்
விரும்பு வார்வினை வீடே.
1.54.11

இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வேதநாதர், தேவியார் - இளமுலைநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

1.55 திருமாற்பேறு

பண் - பழந்தக்கராகம்

591 ஊறி யார்தரு நஞ்சினை யுண்டுமை
நீறு சேர்திரு மேனியர்
சேறு சேர்வயல் தென்திரு மாற்பேற்றின்
மாறி லாமணி கண்டரே.
1.55.1
592 தொடையார் மாமலர் கொண்டிரு போதும்மை
அடைவா ராமடி கள்ளென
மடையார் நீர்மல்கு மன்னிய மாற்பே
றுடையீ ரேயுமை யுள்கியே.
1.55.2
593 பையா ரும்மர வங்கொடு வாட்டிய
கையா னென்று வணங்குவர்
மையார் நஞ்சுண்டு மாற்பேற் றிருக்கின்ற
ஐயா நின்னடி யார்களே.
1.55.3
594 சால மாமலர் கொண்டு சரணென்று
மேலை யார்கள் விரும்புவர்
மாலி னார்வழி பாடுசெய் மாற்பேற்று
நீல மார்கண்ட நின்னையே.
1.55.4
595 மாறி லாமணி யேயென்று வானவர்
ஏற வேமிக ஏத்துவர்
கூற னேகுல வுந்திரு மாற்பேற்றின்
நீற னேயென்று நின்னையே.
1.55.5
596 உரையா தாரில்லை யொன்றுநின் தன்மையைப்
பரவா தாரில்லை நாள்களும்
திரையார் பாலியின் தென்கரை மாற்பேற்
றரையா னேயருள் நல்கிடே.
1.55.6
(*) இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் மறைந்து போயிற்று. 1.55.7
597 அரச ளிக்கும் அரக்கன் அவன்றனை
உரைகெ டுத்தவன் ஒல்கிட
வரமி குத்தவெம் மாற்பேற் றடிகளைப்
பரவி டக்கெடும் பாவமே.
1.55.8
598 இருவர் தேவருந் தேடித் திரிந்தினி
ஒருவ ராலறி வொண்ணிலன்
மருவு நீள்கழல் மாற்பேற் றடிகளைப்
பரவு வார்வினை பாறுமே.
1.55.9
599 தூசு போர்த்துழல் வார்கையில் துற்றுணும்
நீசர் தம்முரை கொள்ளெலுந்
தேசம் மல்கிய தென்திரு மாற்பேற்றின்
ஈச னென்றெடுத் தேத்துமே.
1.55.10
600 மன்னி மாலொடு சோமன் பணிசெயும்
மன்னும் மாற்பேற் றடிகளை
மன்னு காழியுள் ஞானசம் பந்தன்சொல்
பன்ன வேவினை பாறுமே.
1.55.11

இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மால்வணங்குமீசர், தேவியார் - கருணைநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

1.56 திருப்பாற்றுறை

பண் - பழந்தக்கராகம்

601 காரார் கொன்றை கலந்த முடியினர்
சீரார் சிந்தை செலச்செய்தார்
பாரார் நாளும் பரவிய பாற்றுறை
ஆரா ராதி முதல்வரே.
1.56.1
602 நல்லா ரும்மவர் தீய ரெனப்படுஞ்
சொல்லார் நன்மலர் சூடினார்
பல்லார் வெண்டலைச் செல்வரெம் பாற்றுறை
எல்லா ருந்தொழும் ஈசரே.
1.56.2
603 விண்ணார் திங்கள் விளங்கு நுதலினர்
எண்ணார் வந்தென் எழில் கொண்டார்
பண்ணார் வண்டினம் பாடல்செய் பாற்றுறை
யுண்ணா ணாளும் உறைவரே.
1.56.3
604 பூவுந் திங்கள் புனைந்த முடியினர்
ஏவின் அல்லா ரெயிலெய்தார்
பாவந் தீர்புனல் மல்கிய பாற்றுறை
ஓவென் சிந்தை யொருவரே.
1.56.4
605 மாகந் தோய்மதி சூடிமகிழ்ந் தென
தாகம் பொன்னிற மாக்கினார்
பாகம் பெண்ணும் உடையவர் பாற்றுறை
நாகம் பூண்ட நயவரே.
1.56.5
606 போது பொன்றிகழ் கொன்றை புனைமுடி
நாதர் வந்தென் நலங்கொண்டார்
பாதந் தொண்டர் பரவிய பாற்றுறை
வேத மோதும் விகிர்தரே.
1.56.6
607 வாடல் வெண்டலை சூடினர் மால்விடை
கோடல் செய்த குறிப்பினார்
பாடல் வண்டினம் பண்செயும் பாற்றுறை
ஆடல் நாகம் அசைத்தாரே.
1.56.7
608 வெவ்வ மேனிய ராய்வெள்ளை நீற்றினர்
எவ்வஞ் செய்தென் எழில்கொண்டார்
பவ்வம் நஞ்சடை கண்டரெம் பாற்றுறை
மவ்வல் சூடிய மைந்தரே.
1.56.8
608 ஏனம் அன்னமும் ஆனவ ருக்கெரி
ஆன வண்ணத்தெம் அண்ணலார்
பான லம்மலர் விம்மிய பாற்றுறை
வான வெண்பிறை மைந்தரே.
1.56.9
610 வெந்த நீற்றினர் வேலினர் நூலினர்
வந்தென் நன்னலம் வௌவினார்
பைந்தண் மாதவி சூழ்தரு பாற்றுறை
மைந்தர் தாமோர் மணாளரே.
1.56.10
611 பத்தர் மன்னிய பாற்றுறை மேவிய
பத்து நூறு பெயரானைப்
பத்தன் ஞானசம் பந்தன தின்றமிழ்
பத்தும் பாடிப் பரவுமே.
1.56.11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - திருமூலநாதர், தேவியார் - மோகாம்பிகையம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

1.57 திருவேற்காடு

பண் - பழந்தக்கராகம்

612 ஒள்ளி துள்ளக் கதிக்கா மிவனொளி
வெள்ளி யானுறை வேற்காடு
உள்ளி யாருயர்ந் தாரிவ் வுலகினில்
தெள்ளி யாரவர் தேவரே.
1.57.1
613 ஆடல் நாகம் அசைத்தள வில்லதோர்
வேடங் கொண்டவன் வேற்காடு
பாடி யும்பணிந் தாரிவ் வுலகினில்
சேட ராகிய செல்வரே.
1.57.2
614 பூதம் பாடப் புறங்காட் டிடையாடி
வேத வித்தகன் வேற்காடு
போதுஞ் சாந்தும் புகையுங் கொடுத்தவர்க்
கேதம் எய்துத லில்லையே.
1.57.3
615 ஆழ்க டலெனக் கங்கை கரந்தவன்
வீழ்ச டையினன் வேற்காடு
தாழ்வு டைமனத் தாற்பணிந் தேத்திட
பாழ்ப டும்மவர் பாவமே.
1.57.4
616 காட்டி னாலும் அயர்த்திடக் காலனை
வீட்டி னானுறை வேற்காடு
பாட்டி னாற்பணிந் தேத்திட வல்லவர்
ஓட்டி னார்வினை ஒல்லையே.
1.57.5
617 தோலி னாலுடை மேவவல் லான்சுடர்
வேலி னானுறை வேற்காடு
நூலி னாற்பணிந் தேத்திட வல்லவர்
மாலி னார்வினை மாயுமே.
1.57.6
618 மல்லல் மும்மதில் மாய்தர எய்ததோர்
வில்லி னானுறை வேற்காடு
சொல்ல வல்ல சுருங்கா மனத்தவர்
செல்ல வல்லவர் தீர்க்கமே.
1.57.8
619 மூரல் வெண்மதி சூடு முடியுடை
வீரன் மேவிய வேற்காடு
வார மாய்வழி பாடு நினைந்தவர்
சேர்வர் செய்கழல் திண்ணமே.
1.57.8
620 பரக்கி னார்படு வெண்டலை யிற்பலி
விரக்கி னானுறை வேற்காட்டூர்
அரக்கன் ஆண்மை யடரப் பட்டானிறை
நெருக்கி னானை நினைமினே.
1.57.9
621 மாறி லாமல ரானொடு மாலவன்
வேற லானுறை வேற்காடு
ஈறி லாமொழி யேமொழி யாயெழில்
கூறி னார்க்கில்லை குற்றமே.
1.57.10
622 விண்ட மாம்பொழில் சூழ்திரு வேற்காடு
கண்டு நம்பன் கழல்பேணிச்
சண்பை ஞானசம் பந்தன செந்தமிழ்
கொண்டு பாடக் குணமாமே.
1.57.11

இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வேற்காட்டீசுவரர், தேவியார் - வேற்கண்ணியம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

1.58 திருக்கரவீரம்

பண் - பழந்தக்கராகம்

623 அரியும் நம்வினை யுள்ளன ஆசற
வரிகொள் மாமணி போற்கண்டங்
கரிய வன்றிக ழுங்கர வீரத்தெம்
பெரிய வன்கழல் பேணவே.
1.58.1
624 தங்கு மோவினை தாழ்சடை மேலவன்
திங்க ளோடுடன் சூடிய
கங்கை யான்றிக ழுங்கர வீரத்தெம்
சங்க ரன்கழல் சாரவே.
1.58.2
625 ஏதம் வந்தடை யாவினி நல்லன
பூதம் பல்படை யாக்கிய
காத லான்திக ழுங்கர வீரத்தெம்
நாதன் பாதம் நணுகவே.
1.58.3
626 பறையும் நம்வினை யுள்ளன பாழ்பட
மறையும் மாமணி போற்கண்டங்
கறைய வன்றிக ழுங்கர வீரத்தெம்
இறைய வன்கழல் ஏத்தவே.
1.58.4
627 பண்ணி னார்மறை பாடலன் ஆடலன்
விண்ணி னார்மதி லெய்தமுக்
கண்ணி னானுறை யுங்கர வீரத்தை
நண்ணு வார்வினை நாசமே.
1.58.5
628 நிழலி னார்மதி சூடிய நீள்சடை
அழலி னாரன லேந்திய
கழலி னாருறை யுங்கர வீரத்தைத்
தொழவல் லார்க்கில்லை துக்கமே.
1.58.6
629 வண்டர் மும்மதில் மாய்தர எய்தவன்
அண்டன் ஆரழல் போலொளிர்
கண்ட னாருறை யுங்கர வீரத்துத்
தொண்டர் மேற்றுயர் தூரமே.
1.58.7
630 புனலி லங்கையர் கோன்முடி பத்திறச்
சினவ லாண்மை செகுத்தவன்
கனல வனுறை கின்ற கரவீரம்
எனவல் லார்க்கிட ரில்லையே.
1.58.8
631 வெள்ளத் தாமரை யானொடு மாலுமாய்த்
தெள்ளத் தீத்திர ளாகிய
கள்ளத் தானுறை யுங்கர வீரத்தை
உள்ளத் தான்வினை ஓயுமே.
1.58.9
632 செடிய மண்ணொடு சீவரத் தாரவர்
கொடிய வெவ்வுரை கொள்ளன்மின்
கடிய வன்னுறை கின்ற கரவீரத்
தடிய வர்க்கில்லை யல்லலே.
1.58.10
633 வீடி லான்விளங் குங்கர வீரத்தெம்
சேடன் மேற்கசி வாற்றமிழ்
நாடு ஞானசம் பந்தன சொல்லிவை
பாடு வார்க்கில்லை பாவமே.
1.58.11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - கரவீரேசுவரர், தேவியார் - பிரத்தியட்சமின்னாளம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

1.59 திருத்தூங்கானைமாடம்

பண் - பழந்தக்கராகம்

634 ஒடுங்கும் பிணிபிறவி கேடென்றிவை
யுடைத்தாய வாழ்க்கை யொழியத்தவம்
அடங்கு மிடங்கருதி நின்றீரெல்லாம்
அடிக ளடிநிழற்கீ ழாளாம்வண்ணங்
கிடங்கும் மதிலுஞ் சுலாவியெங்குங்
கெழுமனைகள் தோறும்ம றையின்னொலி
தொடங்குங் கடந்தைத் தடங்கோயில்சேர்
தூங்கானை மாடந் தொழுமின்களே.
1.59.1
635 பிணிநீர சாதல் பிறத்தலிவை
பிரியப் பிரியாத பேரின்பத்தோ
டணிநீர மேலுலகம் எய்தலுறில்
அறிமின் குறைவில்லை ஆனேறுடை
மணிநீல கண்ட முடையபிரான்
மலைமகளுந் தானும் மகிழ்ந்துவாழுந்
துணிநீர்க் கடந்தைத் தடங்கோயில்சேர்
தூங்கானை மாடந் தொழுமின்களே.
1.59.2
636 சாநாளும் வாழ்நாளுந் தோற்றமிவை
சலிப்பாய வாழ்க்கை யொழியத்தவம்
ஆமா றறியா தலமந்துநீர்
அயர்ந்துங் குறைவில்லை ஆனேறுடைப்
பூமாண் அலங்கல் இலங்குகொன்றை
புனல்பொதிந்த புன்சடையி னானுறையுந்
தூமாண் கடந்தைத் தடங்கோயில்சேர்
தூங்கானை மாடந் தொழுமின்களே.
1.59.3
637 ஊன்றும் பிணிபிறவி கேடென்றிவை
உடைத்தாய வாழ்க்கை யொழியத்தவம்
மான்று மனங்கருதி நின்றீரெல்லாம்
மனந்திரிந்து மண்ணில் மயங்காதுநீர்
மூன்று மதிலெய்த மூவாச்சிலை
முதல்வர்க் கிடம்போலும் முகில்தோய்கொடி
தோன்றுங் கடந்தைத் தடங்கோயில்சேர்
தூங்கானை மாடந் தொழுமின்களே.
1.59.4
638 மயல்தீர்மை யில்லாத தோற்றம்மிவை
மரணத்தொ டொத்தழியு மாறாதலால்
வியல்தீர மேலுக மெய்தலுறின்
மிக்கொன்றும் வேண்டா விமலனிடம்
உயர்தீர வோங்கிய நாமங்களா
லோவாது நாளும் அடிபரவல்செய்
துயர்தீர் கடந்தைத் தடங்கோயில்சேர்
தூங்கானை மாடந் தொழுமின்களே.
1.59.5
639 பன்னீர்மை குன்றிச் செவிகேட்பிலா
படர்நோக் கின்கண் பவளந்நிற
நன்னீர்மை குன்றித் திரைதோலொடு
நரைதோன்றுங் காலம் நமக்காதல்முன்
பொன்னீர்மை துன்றப் புறந்தோன்றுநற்
புனல்பொதிந்த புன்சடையி னானுறையுந்
தொன்னீர்க் கடந்தைத் தடங்கோயில்சேர்
தூங்கானை மாடந் தொழுமின்களே.
1.59.6
640 இறையூண் துகளோ டிடுக்கணெய்தி
யிழிப்பாய வாழ்க்கை யொழியத்தவம்
நிறையூண் நெறிகருதி நின்றீரெல்லாம்
நீள்கழ லேநாளும் நினைமின்சென்னிப்
பிறைசூ ழலங்கல் இலங்குகொன்றைப்
பிணையும் பெருமான் பிரியாதநீர்த்
துறைசூழ் கடந்தைத் தடங்கோயில்சேர்
தூங்கானை மாடந் தொழுமின்களே.
1.59.7
641 பல்வீழ்ந்து நாத்தளர்ந்து மெய்யில்வாடிப்
பழிப்பாய வாழ்க்கை ஒழியத்தவம்
இல்சூ ழிடங்கருதி நின்றீரெல்லாம்
இறையே பிரியா தெழுந்துபோதுங்
கல்சூ ழரக்கன் கதறச்செய்தான்
காதலியுந் தானுங் கருதிவாழுந்
தொல்சீர்க் கடந்தைத் தடங்கோயில்சேர்
தூங்கானை மாடந் தொழுமின்களே.
1.59.8
642 நோயும் பிணியும் அருந்துயரமும்
நுகருடைய வாழ்க்கை யொழியத்தவம்
வாயும் மனங்கருதி நின்றீரெல்லாம்
மலர்மிசைய நான்முகனும் மண்ணும்விண்ணும்
தாய அடியளந்தான் காணமாட்டாத்
தலைவர்க் கிடம்போலுந் தண்சோலைவிண்
டோ யும் கடந்தைத் தடங்கோயில்சேர்
தூங்கானை மாடந் தொழுமின்களே.
1.59.9
643 பகடூர் பசிநலிய நோய்வருதலாற்
பழிப்பாய வாழ்க்கை ஒழியத்தவம்
முகடூர் மயிர்கடிந்த செய்கையாரும்
மூடுதுவ ராடையாரும் நாடிச்சொன்ன
திகழ்தீர்ந்த பொய்ம்மொழிகள் தேறவேண்டா
திருந்திழை யுந்தானும் பொருந்திவாழுந்
துகள்தீர் கடந்தைத் தடங்கோயில்சேர்
தூங்கானை மாடந் தொழுமின்களே.
1.59.10
644 மண்ணார் முழவதிரும் மாடவீதி
வயல்காழி ஞானசம் பந்தன்நல்ல
பெண்ணா கடத்துப் பெருங்கோயில்சேர்
பிறையுரிஞ்சுந் தூங்கானை மாடமேயான்
கண்ணார் கழல்பரவு பாடல்பத்துங்
கருத்துணரக் கற்றாருங் கேட்டாரும்போய்
விண்ணோ ருலகத்து மேவிவாழும்
விதியது வேயாகும் வினைமாயுமே.
1.59.11

இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சுடர்க்கொழுந்தீசர், தேவியார் - கடந்தைநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

1.60 திருத்தோணிபுரம்

பண் - பழந்தக்கராகம்

645 வண்டரங்கப் புனற்கமல மதுமாந்திப் பெடையினொடும்
ஒண்டரங்க இசைபாடும் அளிஅரசே ஒளிமதியத்
துண்டரங்கப் பூண்மார்பர் திருத்தோணி புரத்துறையும்
பண்டரங்கர்க் கென்நிலைமை பரிந்தொருகால் பகராயே.
1.60.1
646 எறிசுறவங் கழிக்கானல் இளங்குருகே என்பயலை
அறிவுறா தொழிவதுவும் அருவினையேன் பயனன்றே
செறிசிறார் பதமோதுந் திருத்தோணி புரத்துறையும்
வெறிநிறார் மலர்க்கண்ணி வேதியர்க்கு விளம்பாயே.
1.60.2
647 பண்பழனக் கோட்டகத்து வாட்டமிலாச் செஞ்சூட்டுக்
கண்பகத்தின் வாரணமே கடுவினையேன் உறுபயலை
செண்பகஞ்சேர் பொழில்புடைசூழ் திருத்தோணி புரத்துறையும்
பண்பனுக்கென் பரிசுரைத்தால் பழியாமோ மொழியாயே.
1.60.3
648 காண்டகைய செங்காலொண் கழிநாராய் காதலாற்
பூண்டகைய முலைமெலிந்து பொன்பயந்தா ளென்றுவளர்
சேண்டகைய மணிமாடத் திருத்தோணி புரத்துறையும்
ஆண்டகையாற் கின்றேசென் றடியறிய உணர்த்தாயே.
1.60.4
649 பாராரே யெனையொருகால் தொழுகின்றேன் பாங்கமைந்த
காராரும் செழுநிறத்துப் பவளக்கால் கபோதகங்காள்
தேராரும் நெடுவீதித் திருத்தோணி புரத்துறையும்
நீராருஞ் சடையாருக் கென்நிலைமை நிகழ்த்தீரே.
1.60.5
650 சேற்றெழுந்த மலர்க்கமலச் செஞ்சாலிக் கதிர்வீச
வீற்றிருந்த அன்னங்காள் விண்ணோடு மண்மறைகள்
தோற்றுவித்த திருத்தோணி புரத்தீசன் துளங்காத
கூற்றுதைத்த திருவடியே கூடுமா கூறீரே.
1.60.6
651 முன்றில்வாய் மடல்பெண்ணைக் குரம்பைவாழ் முயங்குசிறை
அன்றில்காள் பிரிவுறும்நோய் அறியாதீர் மிகவல்லீர்
தென்றலார் புகுந்துலவுந் திருத்தோணி புரத்துறையுங்
கொன்றைவார் சடையார்க்கென் கூர்பயலை கூறீரே.
1.60.7
652 பானாறு மலர்ச்சூதப் பல்லவங்க ளவைகோதி
ஏனோர்க்கும் இனிதாக மொழியுமெழில் இளங்குயிலே
தேனாரும் பொழில்புடைசூழ் திருத்தோணி புரத்தமரர்
கோனாரை என்னிடத்தே வரவொருகாற் கூவாயே.
1.60.8
653 நற்பதங்கள் மிகஅறிவாய் நானுன்னை வேண்டுகின்றேன்
பொற்பமைந்த வாயலகின் பூவைநல்லாய் போற்றுகின்றேன்
சொற்பதஞ்சேர் மறையாளர் திருத்தோணி புரத்துறையும்
விற்பொலிதோள் விகிர்தனுக்கென் மெய்ப்பயலை விளம்பாயே.
1.60.9
654 சிறையாரும் மடக்கிளியே இங்கேவா தேனொடுபால்
முறையாலே உணத்தருவேன் மொய்பவளத் தொடுதரளந்
துறையாருங் கடற்றோணி புரத்தீசன் துளங்குமிளம்
பிறையாளன் திருநாமம் எனக்கொருகாற் பேசாயே.
1.60.10
655 போர்மிகுத்த வயற்றோணி புரத்துறையும் புரிசடையெங்
கார்மிகுத்த கறைக்கண்டத் திறையவனை வண்கமலத்
தார்மிகுத்த வரைமார்பன் சம்பந்தன் உரைசெய்த
சீர்மிகுத்த தமிழ்வல்லார் சிவலோகஞ் சேர்வாரே.
1.60.11

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

1.61 திருச்செங்காட்டங்குடி

பண் - பழந்தக்கராகம்

656 நறைகொண்ட மலர்தூவி விரையளிப்ப நாடோ றும்
முறைகொண்டு நின்றடியார் முட்டாமே பணிசெய்யச்
சிறைகொண்ட வண்டறையுஞ் செங்காட்டங் குடியதனுள்
கறைகொண்ட கண்டத்தான் கணபதீச் சரத்தானே.
1.61.1
657 வாரேற்ற பறையொலியுஞ் சங்கொலியும் வந்தியம்ப
ஊரேற்ற செல்வத்தோ டோ ங்கியசீர் விழவோவாச்
சீரேற்ற முடைத்தாய செங்காட்டங் குடியதனுள்
காரேற்ற கொன்றையான் கணபதீச் சரத்தானே.
1.61.2
658 வரந்தையான் சோபுரத்தான் மந்திரத்தான் தந்திரத்தான்
கிரந்தையான் கோவணத்தான் கிண்கிணியான் கையதோர்
சிரந்தையான் செங்காட்டங் குடியான்செஞ் சடைசேருங்
கரந்தையான் வெண்ணீற்றான் கணபதீச் சரத்தானே.
1.61.3
659 தொங்கலுங் கமழ்சாந்தும் அகிற்புகையுந் தொண்டர்கொண்
டங்கையால் தொழுதேத்த அருச்சுனற்கன் றருள்செய்தான்
செங்கயல்பாய் வயலுடுத்த செங்காட்டங் குடியதனுள்
கங்கைசேர் வார்சடையான் கணபதீச் சரத்தானே.
1.61.4
660 பாலினால் நறுநெய்யாற் பழத்தினாற் பயின்றாட்டி
நூலினால் மணமாலை கொணர்ந்தடியார் புரிந்தேத்தச்
சேலினார் வயல்புடைசூழ் செங்காட்டங் குடியதனுள்
காலினாற் கூற்றுதைத்தான் கணபதீச் சரத்தானே.
1.61.5
661 நுண்ணியான் மிகப்பெரியான் ஓவுளார் வாயுளான்
தண்ணியான் வெய்யான்நந் தலைமேலான் மனத்துளான்
திண்ணியான் செங்காட்டங் குடியான்செஞ் சடைமதியக்
கண்ணியான் கண்ணுதலான் கணபதீச் சரத்தானே.
1.61.6
662 மையினார் மலர்நெடுங்கண் மலைமகளோர் பாகமாம்
மெய்யினான் பையரவம் அரைக்கசைத்தான் மீன்பிறழச்
செய்யினார் தண்கழனிச் செங்காட்டங் குடியதனுள்
கையினார் கூரெரியான் கணபதீச் சரத்தானே.
1.61.7
663 தோடுடையான் குழையுடையான் அரக்கன்றன் தோளடர்த்த
பீடுடையான் போர்விடையான் பெண்பாகம் மிகப்பெரியான்
சேடுடையான் செங்காட்டாங் குடியுடையான் சேர்ந்தாடுங்
காடுடையான் நாடுடையான் கணபதீச் சரத்தானே.
1.61.8
664 ஆனூரா வுழிதருவான் அன்றிருவர் தேர்ந்துணரா
வானூரான் வையகத்தான் வாழ்த்துவார் மனத்துளான்
தேனூரான் செங்காட்டாங் குடியான்சிற் றம்பலத்தான்
கானூரான் கழுமலத்தான் கணபதீச் சரத்தானே.
1.61.9
665 செடிநுகருஞ் சமணர்களுஞ் சீவரத்த சாக்கியரும்
படிநுகரா தயருழப்பார்க் கருளாத பண்பினான்
பொடிநுகருஞ் சிறுத்தொண்டர்க் கருள்செய்யும் பொருட்டாகக்
கடிநகராய் வீற்றிருந்தான் கணபதீச் சரத்தானே.
1.61.10
666 கறையிலங்கு மலர்க்குவளை கண்காட்டக் கடிபொழிலின்
நறையிலங்கு வயல்காழித் தமிழ்ஞான சம்பந்தன்
சிறையிலங்கு புனற்படப்பைச் செங்காட்டங் குடிசேர்த்தும்
மறையிலங்கு தமிழ்வல்லார் வானுலகத் திருப்பாரே.
1.61.11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - கணபதீசுவரர், தேவியார் - திருக்குழல்மாதம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

1.62 திருக்கோளிலி

பண் - பழந்தக்கராகம்

667 நாளாய போகாமே நஞ்சணியுங் கண்டனுக்கே
ஆளாய அன்புசெய்வோம் மடநெஞ்சே அரன்நாமங்
கேளாய்நங் கிளைகிளைக்குங் கேடுபடாத் திறமருளிக்
கோளாய நீக்குமவன் கோளிலியெம் பெருமானே.
1.62.1
668 ஆடரவத் தழகாமை அணிகேழற் கொம்பார்த்த
தோடரவத் தொருகாதன் துணைமலர்நற் சேவடிக்கே
பாடரவத் திசைபயின்று பணிந்தெழுவார் தம்மனத்தில்
கோடரவந் தீர்க்குமவன் கோளிலியெம் பெருமானே.
1.62.2
669 நன்றுநகு நாண்மலரால் நல்லிருக்கு மந்திரங்கொண்
டொன்றிவழி பாடுசெய லுற்றவன்றன் ஓங்குயிர்மேல்
கன்றிவரு காலனுயிர் கண்டவனுக் கன்றளித்தான்
கொன்றைமலர் பொன்றிகழுங் கோளிலியெம் பெருமானே.
1.62.3
670 வந்தமண லாலிலிங்கம் மண்ணியின்கட் பாலாட்டுஞ்
சிந்தைசெய்வோன் தன்கருமந் தேர்ந்துசிதைப் பான்வருமத்
தந்தைதனைச் சாடுதலுஞ் சண்டீச னென்றருளிக்
கொந்தணவு மலர்கொடுத்தான் கோளிலியெம் பெருமானே.
1.62.4
671 வஞ்சமனத் தஞ்சொடுக்கி வைகலும்நற் பூசனையால்
நஞ்சமுது செய்தருளும் நம்பியென வேநினையும்
பஞ்சவரிற் பார்த்தனுக்குப் பாசுபதம் ஈந்துகந்தான்
கொஞ்சுகிளி மஞ்சணவுங் கோளிலியெம் பெருமானே.
1.62.5
672 தாவியவ னுடனிருந்துங் காணாத தற்பரனை
ஆவிதனி லஞ்சொடுக்கி அங்கணனென் றாதரிக்கும்
நாவியல்சீர் நமிநந்தி யடிகளுக்கு நல்குமவன்
கோவியலும் பூவெழுகோற் கோளிலியெம் பெருமானே.
1.62.6
673 கன்னவிலும் மால்வரையான் கார்திகழும் மாமிடற்றான்
சொன்னவிலும் மாமறையான் தோத்திரஞ்செய் வாயினுளான்
மின்னவிலுஞ் செஞ்சடையான் வெண்பொடியான் அங்கையினிற்
கொன்னவிலும் சூலத்தான் கோளிலியெம் பெருமானே.
1.62.7
674 அந்தரத்தில் தேரூரும் அரக்கன்மலை அன்றெடுப்பச்
சுந்தரத்தன் திருவிரலால் ஊன்றஅவன் உடல்நெரிந்து
மந்திரத்த மறைபாட வாளவனுக் கீந்தானுங்
கொந்தரத்த மதிச்சென்னிக் கோளிலியெம் பெருமானே.
1.62.8
675 நாணமுடை வேதியனும் நாரணனும் நண்ணவொணாத்
தாணுவெனை ஆளுடையான் தன்னடியார்க் கன்புடைமை
பாணனிசை பத்திமையாற் பாடுதலும் பரிந்தளித்தான்
கோணலிளம் பிறைச்சென்னிக் கோளிலியெம் பெருமானே.
1.62.9
676 தடுக்கமருஞ் சமணரொடு தர்க்கசாத் திரத்தவர்சொல்
இடுக்கண்வரு மொழிகேளா தீசனையே ஏத்துமின்கள்
நடுக்கமிலா அமருலகம் நண்ணலுமாம் அண்ணல்கழல்
கொடுக்ககிலா வரங்கொடுக்குங் கோளிலியெம் பெருமானே.
1.62.10
677 நம்பனைநல் லடியார்கள் நாமுடைமா டென்றிருக்குங்
கொம்பனையாள் பாகனெழிற் கோளிலியெம் பெருமானை
வம்பமருந் தண்காழிச் சம்பந்தன் வண்டமிழ்கொண்
டின்பமர வல்லார்க ளெய்துவர்கள் ஈசனையே.
1.62.11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - கோளிலியப்பர், தேவியார் - வண்டமர்பூங்குழலம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

1.63 திருப்பிரமபுரம் - பல்பெயர்ப்பத்து

பண் - தக்கேசி

678 எரியார்மழுவொன் றேந்தியங்கை இடுதலையேகலனா
வரியார்வளையா ரையம்வவ்வாய் மாநலம்வவ்வுதியே
சரியாநாவின் வேதகீதன் தாமரைநான்முகத்தன்
பெரியான்பிரமன் பேணியாண்ட பிரமபுரத்தானே.
1.63.1
679 பெயலார்சடைக்கோர் திங்கள்சூடிப் பெய்பலிக்கென்றயலே
கயலார்தடங்கண் அஞ்சொல்நல்லார் கண்டுயில்வவ்வுதியே
இயலால்நடாவி இன்பமெய்தி இந்திரனாள்மண்மேல்
வியலார்முரச மோங்குசெம்மை வேணுபுரத்தானே.
1.63.2
680 நகலார்தலையும் வெண்பிறையும் நளிர்சடைமாட்டயலே
பகலாப்பலிதேர்ந் தையம்வவ்வாய் பாய்கலைவவ்வுதியே
அகலாதுறையும் மாநிலத்தில் அயலின்மையாலமரர்
புகலால்மலிந்த பூம்புகலி மேவியபுண்ணியனே.
1.63.3
681 சங்கோடிலங்கத் தோடுபெய்து காதிலோர்தாழ்குழையன்
அங்கோல்வளையார் ஐயம்வவ்வா யால்நலம்வவ்வுதியே
செங்கோல்நடாவிப் பல்லுயிர்க்குஞ் செய்வினைமெய்தெரிய
வெங்கோத்தருமன் மேவியாண்ட வெங்குருமேயவனே.
1.63.4
682 தணிநீர்மதியஞ் சூடிநீடு தாங்கியதாழ்சடையன்
பிணிநீர்மடவார் ஐயம்வவ்வாய் பெய்கலைவவ்வுதியே
அணிநீருலக மாகியெங்கும் ஆழ்கடலாலழுங்கத்
துணிநீர்பணியத் தான்மிதந்த தோணிபுரத்தானே.
1.63.5
683 கவர்பூம்புனலுந் தண்மதியுங் கமழ்சடைமாட்டயலே
அவர்பூம்பலியோ டையம்வவ்வா யால்நலம்வவ்வுதியே
அவர்பூணரையர்க் காதியாயவள்தன் மன்னனாள்மண்மேற்
தவர்பூம்பதிகள் எங்குமெங்குந் தங்குதராயவனே.
1.63.6
684 முலையாழ்கெழும மொந்தைகொட்ட முன்கடைமாட்டயலே
நிலையாப்பலிதேர்ந் தையம்வவ்வாய் நீநலம்வவ்வுதியே
தலையாய்க்கிடந்திவ் வையமெல்லாந் தன்னதோராணைநடாய்ச்
சிலையால்மலிந்த சீர்ச்சிலம்பன் சிரபுரமேயவனே.
1.63.7
685 எருதேகொணர்கென் றேறியங்கை இடுதலையேகலனாக்
கருதேர்மடவார் ஐயம்வவ்வாய் கண்டுயில்வவ்வுதியே
ஒருதேர்கடாவி ஆரமரு ளொருபதுதோள்தொலையப்
பொருதேர்வலவன் மேவியாண்ட புறவமர்புண்ணியனே.
1.63.8
686 துவர்சேர்கலிங்கப் போர்வையாருந் தூய்மையிலாச்சமணுங்
கவர்செய்துழலக் கண்டவண்ணங் காரிகைவார்குழலார்
அவர்பூம்பலியோ டையம்வவ்வா யால்நலம்வவ்வுதியே
தவர்செய்நெடுவேற் சண்டனாளச் சண்பையமர்ந்தவனே.
1.63.9
687 நிழலால்மலிந்த கொன்றைசூடி நீறுமெய்பூசிநல்ல
குழலார்மடவா ரையம்வவ்வாய் கோல்வளைவவ்வுதியே
அழலாயுலகங் கவ்வைதீர ஐந்தலைநீண்முடிய
கழல்நாகரையன் காவலாகக் காழியமர்ந்தவனே.
1.63.10
688 கட்டார்துழாயன் தாமரையான் என்றிவர்காண்பரிய
சிட்டார்பலிதேர்ந் தையம்வவ்வாய் செய்கலைவவ்வுதியே
நட்டார்நடுவே நந்தனாள நல்வினையாலுயர்ந்த
கொட்டாறுடுத்த தண்வயல்சூழ் கொச்சையமர்ந்தவனே.
1.63.11
689 கடையார்கொடிநன் மாடவீதிக் கழுமலவூர்க்கவுணி
நடையார்பனுவல் மாலையாக ஞானசம்பந்தன்நல்ல
படையார்மழுவன் றன்மேல்மொழிந்த பல்பெயர்ப்பத்தும்வல்லார்க்
கடையாவினைகள் உலகில்நாளும் அமருலகாள்பவரே.
1.63.12

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

1.64 திருப்பூவணம்

பண் - தக்கேசி

690 அறையார்புனலு மாமலரும் ஆடரவார்சடைமேல்
குறையார்மதியஞ் சூடிமாதோர் கூறுடையானிடமாம்
முறையால்முடிசேர் தென்னர்சேரர் சோழர்கள்தாம்வணங்குந்
திறையாரொளிசேர் செம்மையோங்குந் தென்திருப்பூவணமே.
1.64.1
691 மருவார்மதில்மூன் றொன்றவெய்து மாமலையான்மடந்தை
ஒருபால்பாக மாகச்செய்த உம்பர்பிரானவனூர்
கருவார்சாலி ஆலைமல்கிக் கழல்மன்னர்காத்தளித்த
திருவால்மலிந்த சேடர்வாழுந் தென்திருப்பூவணமே.
1.64.2
692 போரார்மதமா உரிவைபோர்த்துப் பொடியணிமேனியனாய்க்
காரார்கடலில் நஞ்சமுண்ட கண்ணுதல்விண்ணவனூர்
பாரார்வைகைப் புனல்வாய்பரப்பிப் பன்மணிபொன்கொழித்துச்
சீரார்வாரி சேரநின்ற தென்திருப்பூவணமே.
1.64.3
693 கடியாரலங்கல் கொன்றைசூடிக் காதிலோர்வார்குழையன்
கொடியார்வெள்ளை ஏறுகந்த கோவணவன்னிடமாம்
படியார்கூடி நீடியோங்கும் பல்புகழாற்பரவச்
செடியார்வைகை சூழநின்ற தென்திருப்பூவணமே.
1.64.4
694 கூரார்வாளி சிலையிற்கோத்துக் கொடிமதிற்கூட்டழித்த
போரார்வில்லி மெல்லியலாளோர் பால்மகிழ்ந்தானிடமாம்
ஆராவன்பில் தென்னர்சேரர் சோழர்கள்போற்றிசைப்பத்
தேரார்வீதி மாடம்நீடுந் தென்திருப்பூவணமே.
1.64.5
695 நன்றுதீதென் றொன்றிலாத நான்மறையோன்கழலே
சென்றுபேணி யேத்தநின்ற தேவர்பிரானிடமாங்
குன்றிலொன்றி ஓங்கமல்கு குளிர்பொழில்சூழ்மலர்மேல்
தென்றலொன்றி முன்றிலாருந் தென்திருப்பூவணமே.
1.64.6
696 பைவாயரவம் அரையிற்சாத்திப் பாரிடம்போற்றிசைப்ப
மெய்வாய்மேனி நீறுபூசி ஏறுகந்தானிடமாம்
கைவாழ்வளையார் மைந்தரோடுங் கலவியினால்நெருங்கிச்
செய்வார்தொழிலின் பாடலோவாத் தென்திருப்பூவணமே.
1.64.7
697 மாடவீதி மன்னிலங்கை மன்னனைமாண்பழித்துக்
கூடவென்றி வாள்கொடுத்தாள் கொள்கையினார்க்கிடமாம்
பாடலோடும் ஆடலோங்கிப் பன்மணிபொன்கொழித்து
ஓடநீரால் வைகைசூழும் உயர்திருப்பூவணமே.
1.64.8
698 பொய்யாவேத நாவினானும் பூமகள்காதலனுங்
கையாற்றொழுது கழல்கள்போற்றக் கனலெரியானவனூர்
மையார்பொழிலின் வண்டுபாட வைகைமணிகொழித்துச்
செய்யார்கமலந் தேனரும்புந் தென்திருப்பூவணமே.
1.64.9
699 அலையார்புனலை நீத்தவருந் தேரருமன்புசெய்யா
நிலையாவண்ணம் மாயம்வைத்த நின்மலன்றன்னிடமாம்
மலைபோல்துன்னி வென்றியோங்கும் மாளிகைசூழ்ந்தயலே
சிலையார்புரிசை பரிசுபண்ணுந் தென்திருப்பூவணமே.
1.64.10
700 திண்ணார்புரிசை மாடமோங்குந் தென்திருப்பூவணத்துப்
பெண்ணார்மேனி எம்மிறையைப் பேரியல்இன்றமிழால்
நண்ணார்உட்கக் காழிமல்கும் ஞானசம்பந்தன்சொன்ன
பண்ணார்பாடல் பத்தும்வல்லார் பயில்வதுவானிடையே.
1.64.11

இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பூவணநாதர், தேவியார் - மின்னாம்பிகையம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

1.65 காவிரிப்பூம்பட்டினத்துப்பல்லவனீச்சரம்

பண் - தக்கேசி

701 அடையார்தம் புரங்கள்மூன்றும் ஆரழலில்லழுந்த
விடையார்மேனிய ராய்ச்சீறும் வித்தகர்மேயவிடம்
கடையார்மாடம் நீடியெங்குங் கங்குல்புறந்தடவப்
படையார்புரிசைப் பட்டினஞ்சேர் பல்லவனீச்சரமே.
1.65.1
702 எண்ணாரெயில்கள் மூன்றுஞ்சீறும் எந்தைபிரானிமையோர்
கண்ணாயுலகங் காக்கநின்ற கண்ணுதல்நண்ணுமிடம்
மண்ணார்சோலைக் கோலவண்டு வைகலுந்தேனருந்திப்
பண்ணார்செய்யும் பட்டினத்துப் பல்லவனீச்சரமே.
1.65.2
703 மங்கையங்கோர் பாகமாக வாள்நிலவார்சடைமேல்
கங்கையங்கே வாழவைத்த கள்வனிருந்தவிடம்
பொங்கயஞ்சேர் புணரியோத மீதுயர்பொய்கையின்மேற்
பங்கயஞ்சேர் பட்டினத்துப் பல்லவனீச்சரமே.
1.65.3
704 தாரார்கொன்றை பொன்றயங்கச் சாத்தியமார்பகலம்
நீரார்நீறு சாந்தம்வைத்த நின்மலன்மன்னுமிடம்
போரார்வேற்கண் மாதர்மைந்தர் புக்கிசைபாடலினாற்
பாரார்கின்ற பட்டினத்துப் பல்லவனீச்சரமே.
1.65.4
705 மைசேர்கண்டர் அண்டவாணர் வானவருந்துதிப்ப
மெய்சேர்பொடியர் அடியாரேத்த மேவியிருந்தவிடங்
கைசேர்வளையார் விழைவினோடு காதன்மையாற்கழலே
பைசேரரவார் அல்குலார்சேர் பல்லவனீச்சரமே.
1.65.5
706 குழலினோசை வீணைமொந்தை கொட்டமுழவதிரக்
கழலினோசை யார்க்கஆடுங் கடவுளிருந்தவிடஞ்
சுழியிலாருங் கடலிலோதந் தெண்டிரை மொண்டெறியப்
பழியிலார்கள் பயில்புகாரிற் பல்லவனீச்சரமே.
1.65.6
707 வெந்தலாய வேந்தன்வேள்வி வேரறச்சாடிவிண்ணோர்
வந்தெலாமுன் பேணநின்ற மைந்தன்மகிழ்ந்தவிடம்
மந்தலாய மல்லிகையும் புன்னைவளர்குரவின்
பந்தலாரும் பட்டினத்துப் பல்லவனீச்சரமே.
1.65.7
708 தேரரக்கன் மால்வரையைத் தெற்றியெடுக்கஅவன்
தாரரக்குந் திண்முடிகள் ஊன்றியசங்கரனூர்
காரரக்குங் கடல்கிளர்ந்த காலமெலாமுணரப்
பாரரக்கம் பயில்புகாரில் பல்லவனீச்சரமே.
1.65.8
709 அங்கமாறும் வேதநான்கும் ஓதும்அயன்நெடுமால்
தங்கணாலும் நேடநின்ற சங்கரன்தங்குமிடம்
வங்கமாரும் முத்தம்இப்பி வார்கடலூடலைப்பப்
பங்கமில்லார் பயில்புகாரிற் பல்லவனீச்சரமே.
1.65.9
710 உண்டுடுக்கை யின்றியேநின் றூர்நகவேதிரிவார்
கண்டுடுக்கை மெய்யிற்போர்த்தார் கண்டறியாதவிடந்
தண்டுடுக்கை தாளந்தக்கை சாரநடம்பயில்வார்
பண்டிடுக்கண் தீரநல்கும் பல்லவனீச்சரமே.
1.65.10
711 பத்தரேத்தும் பட்டினத்துப் பல்லவனீச்சரத்தெம்
அத்தன்தன்னை அணிகொள்காழி ஞானசம்பந்தன்சொல்
சித்தஞ்சேரச் செப்புமாந்தர் தீவினைநோயிலராய்
ஒத்தமைந்த உம்பர்வானில் உயர்வினொடோ ங்குவரே.
1.65.11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பல்லவனேசர், தேவியார் - சவுந்தராம்பிகையம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

1.66 திருச்சண்பைநகர்

பண் - தக்கேசி

712 பங்மேறு மதிசேர்சடையார் விடையார்பலவேதம்
அங்கமாறும் மறைநான்கவையு மானார்மீனாரும்
வங்கமேவு கடல்வாழ்பரதர் மனைக்கேநுனைமூக்கின்
சங்கமேறி முத்தமீனுஞ் சண்பைநகராரே.
1.66.1
713 சூதகஞ்சேர் கொங்கையாளோர் பங்கர்சுடர்க்கமலப்
போதகஞ்சேர் புண்ணியனார் பூதகணநாதர்
மேதகஞ்சேர் மேகமந்தண் சோலையில்விண்ணார்ந்த
சாதகஞ்சேர் பாளைநீர்சேர் சண்பைநகராரே.
1.66.2
714 மகரத்தாடு கொடியோனுடலம் பொடிசெய்தவனுடைய
நிகரொப்பில்லாத் தேவிக்கருள்செய் நீலகண்டனார்
பகரத்தாரா வன்னம்பகன்றில் பாதம்பணிந்தேத்தத்
தகரப்புன்னை தாழைப்பொழில்சேர் சண்பைநகராரே.
1.66.3
715 மொய்வல்லசுரர் தேவர்கடைந்த முழுநஞ்சதுவுண்ட
தெய்வர்செய்ய வுருவர்கரிய கண்டர்திகழ்சுத்திக்
கையர்கட்டங் கத்தர்கரியின் உரியர்காதலாற்
சைவர்பாசு பதர்கள்வணங்குஞ் சண்பைநகராரே.
1.66.4
716 கலமார்கடலுள் விடமுண்டமரர்க் கமுதம்அருள்செய்த
குலமார்கயிலைக் குன்றதுடைய கொல்லையெருதேறி
நலமார்வெள்ளை நாளிகேரம் விரியார்நறும்பாளை
சலமார்கரியின் மருப்புக்காட்டுஞ் சண்பைநகராரே.
1.66.5
717 மாகரஞ்சேர் அத்தியின்தோல் போர்த்துமெய்ம்மாலான்
சூகரஞ்சேர் எயிறுபூண்ட சோதியன்மேதக்க
ஆகரஞ்சேர் இப்பிமுத்தை அந்தண்வயலுக்கே
சாகரஞ்சேர் திரைகளுந்துஞ் சண்பைநகராரே.
1.66.6
(*) இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 1.66.7
718 இருளைப்புரையும் நிறத்திலரக்கன்ன்றனையீடழிவித்து
அருளைச்செய்யும் அம்மானேரா ரந்தண்கந்தத்தின்
மருளைச்சுரும்பு பாடியளக்கர் வரையார்திரைக்கையால்
தரளத்தோடு பவளமீனுஞ் சண்பைநகராரே.
1.66.8
719 மண்டான்முழுதும் உண்டமாலும் மலர்மிசைமேலயனும்
எண்டானறியா வண்ணம்நின்ற இறைவன்மறையோதி
தண்டார்குவளைக் கள்ளருந்தித் தாமரைத்தாதின்மேற்
பண்டான்கொண்டு வண்டுபாடுஞ் சண்பைநகராரே.
1.66.9
720 போதியாரும் பிண்டியாரும் புகழலசொன்னாலும்
நீதியாகக் கொண்டங்கருளும் நிமலனிருநான்கின்
மாதிசித்தர் மாமறையின் மன்னியதொன்னூலர்
சாதிகீத வர்த்தமானர் சண்பைநகராரே.
1.66.10
721 வந்தியோடு பூசையல்லாப் போழ்தில்மறைபேசிச்
சந்திபோதிற் சமாதிசெய்யுஞ் சண்பைநகர்மேய
அந்திவண்ணன் தன்னையழகார் ஞானசம்பந்தன்சொல்
சிந்தைசெய்து பாடவல்லார் சிவகதிசேர்வாரே.
1.66.11

திருச்சிற்றம்பலம்

தேவாரப் பதிகங்கள் முதல் திருமுறை முதல் பகுதி முற்றும்.