பொருளடக்கம் பக்கம் செல்க


நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் (பாடல்கள் 474- 947)
ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை



அன்ன வயற்புதுவை ஆண்டாள் அரங்கற்குப்
பன்னு திருப்பாவைப் பல்பதியம்
இன்னிசையால் பாடிக்கொடுத்தாள் நற்பாமாலை
பூமாலை சூடிக் கொடுத்தாளைச் சொல்லு

சூடிக் கொடுத்தாள் சுடர்க் கொடியே தொல்பாவை
பாடி அருளவல்ல பல்வளையாய்
நாடி நீ வேங்கடவற்கு என்னை விதி ஒன்ற இம்மாற்றம்
நாங்கடவா வண்ணமே நல்கு.

474:
மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர் மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளம் சிங்கம்
கார் மேனி செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்

475:
வையத்து வாழ்வீர்காள் நாமும் நம்பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத் துயின்ற பரமனடி பாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி
உய்யுமாற் எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.

476:
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும் மாரி பெய்து
ஓங்கு பெறும் செந் நெல் ஊடு கயலுகளப்
பூங்குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்பத்
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
வாங்க குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்

477:
ஆழி மழைக் கண்ணா ஒன்று நீ கை கரவேல்
ஆழி உள் புக்கு முகந்து கொடு ஆர்த்து ஏறி
ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்துப்
பாழிய் அம் தோளுடைப் பற்பனாபன் கையில்
ஆழி போல் மின்னி வலம்புரி போல் நின்று அதிர்ந்து
தாழாதே சார்ங்க முதைத்த சர மழை போல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்

478:
மாயனை மன்னு வட மதுரை மைந்தனைத்
தூய பெரு நீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கைத்
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனைத்
தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்.

479:
புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளி சங்கின் பேரரவம் கேட்டிலையோ
பிள்ளாய் எழுந்திராய் பேய் முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரி என்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்

480:
கீசு கீசு என்று எங்கும் ஆனைச் சாத்தான் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணே
காசும் பிறப்பும் கலகலப்பக் கை பேர்த்து
வாச நறும் குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்த தயிரரவம் கேட்டிலையோ
நாயகப் பெண் பிள்ளாய் நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ
தேசமுடையாய் திறவேலோர் எம்பாவாய்

481:
கீழ் வானம் வெள்ளென்று எருமை சிறு வீடு
மேய்வான் பரந்தன காண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரைப் போகாமல் காத்து உன்னைக்
கூவுவான் வந்து நின்றோம் கோதுகலம் உடைய
பாவாய் எழுந்திராய் பாடிப் பறை கொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்
ஆவாவென்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாயாய்

482:
தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரியத்
தூபம் கமழத் துயிலணைமேல் கண் வளரும்
மாமான் மகளே மணிக் கதவம் தாழ் திறவாய்
மாமீர் அவளை எழுப்பீரோ உன் மகள் தான்
ஊமையோ அன்றி செவிடோ அனந்தலோ
ஏமப் பெருந் துயில் மந்திரப் பட்டாளோ
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமன் பலவும் நவின்றேலோர் என்பாவாய்

483:
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்.
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்
நாற்றத் துழாய் முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறை தரும் புண்ணியனால் பண்டு ஒரு நாள்
கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்ப கரணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில் தான் தந்தானோ
ஆற்ற அனந்தல் உடையாய் அருங்கலமே
தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்.

484:
கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து
செற்றார் திறலழியச் சென்று செருச் செய்யும்
குற்றம் ஒன்றில்லாத கோவலர்த்தம் பொற்கொடியே
புற்று அரவு அல்குல் புனமயிலே போதராய்
சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்து நின்
முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர் பாட
சிற்றாதே பேசாதே செல்வ பெண்டாட்டி நீ
எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்

485:
கனைத்து இளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
நினைத்து முலை வழியே நின்று பால் சோர
நனைத்து இல்லம் சேறாக்கும் நற் செல்வன் தங்காய்
பனித் தலை வீழ நின் வாசற் கடை பற்றிச்
சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய் திறவாய்
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேர் உறக்கம்
அனைத்து இல்லத்தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்

486:
புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்தி மை பாடிப் போய்ப்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ. பாவாய். நீ நன் நாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்.

487:
உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுனீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
செங்கற் பொடிக் கூரை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதன்றார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்.

488:
எல்லே. இளம் கிளியே இன்னம் உறங்குதியோ
சில் என்று அழையேன் மின் நங்கையீர் போதருகின்றேன்
வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாய் அறிதும்
வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக
ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்து எண்ணிக்கொள்
வல் ஆனை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்

489:
நாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய
கோயில் காப்பானே. கொடி தோன்றும் தோரண
வாயில் காப்பானே. மணிக் கதவம் தாள் திறவாய்
ஆயர் சிறுமியரோமுக்கு அறை பறை
மாயன் மணி வண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயில் எழப் பாடுவான்
வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா. நீ
நேய நிலைக் கதவம் நீக்கேலோர் எம்பாவாய்

490:
அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும்
எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குல விளக்கே
எம்பெருமாட்டி யசோதாய் அறிவுறாய்
அம்பரம் ஊட அறுத்து ஓங்கி உளகு அளந்த
உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய்
செம் பொற் கழலடிச் செல்வா பலதேவா
உம்பியும் நீயுன் உறங்கேலோர் எம்பாவாய்.

491:
உந்து மத களிற்றன் ஓடாத தோள் வலியன்
நந்தகோபன் மருமகளே நப்பின்னாய்
கந்தம் கமழும் குழலி கடை திறவாய்
வந்து எங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்
பந்தல் மேல் பல் கால் குயிலினங்கள் கூவின காண்
பந்து ஆர் விரலி உன் மைத்துனன் பேர் பாடச்
செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

492:
குத்து விளக்கெரிய கோட்டுக் கால் கட்டில் மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல் ஏறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கை மேல்
வைத்துக் கிடந்த மலர் மார்பா வாய் திறவாய்
மைத் தடம் கண்ணினாய் நீ உன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய் காண்
எத்தனையேலும் பிரிவு ஆற்றகில்லாயால்
தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய்

493:
முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே துயில் எழாய்
செப்பம் உடையாய் திறல் உடையாய் செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா துயில் எழாய்
செப்பென்ன மென் முலைச் செவ்வாய்ச் சிறு மருங்குல்
நப்பின்னை நங்காய் திருவே துயில் எழாய்
உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்

494:
ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய்
ஊற்றம் உடையாய் பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே துயில் எழாய்
மாற்றார் உனக்கு வலி தொலைந்து உன் வாசற் கண்
ஆற்றாது வந்து உன் அடி பணியுமா போலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்

495:
அம் கண் மா ஞாலத்து அரசர் அபிமான
பங்கமாய் வந்து நின் பள்ளிக் கட்டிற் கீழே
சங்கம் இருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம்
கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப் போலே
செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ
திங்களும் ஆதித்தனும் எழுந்தாற் போல்
அம் கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்

496:
மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து
வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா உன்
கோயில் நின்று இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்காசனத்து இருந்து யாம் வந்த
காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்

497:
அன்று இவ் உலகம் அளந்தாய் அடி போற்றி
சென்றங்குத் தென் இலங்கை செற்றாய் திறல் போற்றி
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
கன்று குணில் ஆவெறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி
வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி
என்றென்றும் உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்

498:
ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓர் இரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
தரிக்கிலான் ஆகித் தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே., உன்னை
அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்

499:
மாலே. மணிவண்ணா. மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன
பால் அன்ன வண்ணத்து உன் பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப் பாடுடையனவே
சாலப் பெரும் பறையே பல்லாண்டு இசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலின் இலையாய் அருளேலோர் எம்பாவாய்

500:
கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா உந்தன்னைப்
பாடிப் பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே தோள் வளையே தோடே செவிப் பூவே
பாடகமே என்றனைய பலகலனும் யாம் அணிவோம்
ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற் சோறு
மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக்
கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்

501:
கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம்
அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க் குலத்து உந்தன்னைப்
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம்
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா உந்தன்னோடு
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உந்தன்னை
சிறு பேர் அழைத்தனமும் சீறி அருளாதே
இறைவா நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்

502:
சிற்றம் சிறு காலே வந்து உன்னை சேவித்து உன்
பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்று ஏவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் உன் தன்னோடு
உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்

503:
வங்கக் கடல் கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்து சேய் இழையார் சென்று இறைஞ்சி
அங்கப் பறை கொண்ட ஆற்றை அணி புதுவைப்
பைங்கமலத் தண் தெரியல் பட்டர் பிரான் கோதை-
சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே (-சொன்ன
இங்கு இப்பரிசுரைப்பார் ஈரிரண்டு மால் வரை தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்.

கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழுமூர்
சோதி மணி மாடம் தோன்றும் ஊர்
நீதியால் நல்ல பத்தர் வாழும் ஊர் நான்மறைகள் ஓதுமூர்
வில்லிபுத்தூர் வேதக் கோனூர்
பாதகங்கள் தீர்க்கும் பரமன் அடி காட்டும்
வேதம் அனைத்துக்கும் வித்தாகும் கோதை தமிழ்
ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை
வையம் சுமப்பது வம்பு.

திருவாடிப் பூரத்து செகத்துதித்தாள் வாழியே
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண் பிள்ளை வாழியே
பெரும்புதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே
ஒரு நூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே
உயரரங்கற்கே கண்ணியுகந்தருளிதாள் வாழியே
மருவாரும் திருமல்லி வள நாடி வாழியே
வண்புதுவை நகர்க் கோதை மலர்ப் பதங்கள் வாழியே

ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம். மங்களம்


ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:

நாச்சியார் திருமொழித் தனியன்கள்

திருக்கண்ணமங்கையாண்டான் அருளியது

நேரிசை வெண்பா

அல்லிநாட் டாமரைமே லாரணங்கி னின்துணைவி
மல்லிநா டாண்ட மடமயில் - மெல்லியலாள்,
ஆயர் குலவேந்த னாகத்தாள், தென்புதுவை
வேயர் பயந்த விளக்கு.

கட்டளைக் கலித்துறை

கோலச் சுரிசங்கை மாயஞ்செவ் வாயின் குணம்வினவும்
சீலத் தனள்,தென் திருமல்லி நாடி, செழுங்குழல்மேல்
மாலத் தொடைதென் னரங்கருக் கீயும் மதிப்புடைய
சோலைக் கிளி,அவள் தூயநற் பாதம் துணைநமக்கே.

ஸ்ரீ: ஆண்டாள் அருளிச்செய்த நாச்சியார் திருமொழி


1: தையொரு திங்கள்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

504:
தையொரு திங்களும் தரைவிளக்கித்
தண்மண் டலமிட்டு மாசிமுன்னாள்,
ஐயநுண் மணற்கொண்டு தெருவணிந்து
அழகினுக் கலங்கரித் தனங்கதேவா,
உய்யவு மாங்கொலோ வென்றுசொல்லி
உன்னையு மும்பியை யும்தொழுதேன்,
வெய்யதோர் தழலுமிழ் சக்கரக்கை
வேங்கட வற்கென்னை விதிக்கிற்றியே. (2) 1

505:
வெள்ளைநுண் மணற்கொண்டு தெருவணிந்து
வெள்வரைப் பதன்முன்னம் துறைபடிந்து,
முள்ளுமில் லாச்சுள்ளி யெரிமடுத்து
முயன்றுன்னை நோற்கின்றேன் காமதேவா,
கள்ளவிழ் பூங்கணை தொடுத்துக்கொண்டு
கடல்வண்ண னென்பதோர் பேரெழுதி,
புள்ளினை வாய்பிளந் தானென்பதோர்
இலக்கினில் புகவென்னை யெய்கிற்றியே. 2

506:
மத்தநன் னறுமலர் முருக்கமலர்
கொண்டுமுப் போதுமுன் னடிவணங்கி,
தத்துவ மிலியென்று நெஞ்செரிந்து
வாசகத் தழித்துன்னை வைதிடாமே,
கொத்தலர் பூங்கணை தொடுத்துக்கொண்டு
கோவிந்த னென்பதோர் பேரேழுதி,
வித்தகன் வேங்கட வாணனென்னும்
விளக்கினில் புகவென்னை விதிக்கிற்றியே. 3

507:
சுவரில் புராணநின் பேரேழுதிச்
சுறவநற் கொடிகளும் துரங்கங்களும்,
கவரிப் பிணாக்களும் கருப்புவில்லும்
காட்டித்தந் தேன்கண்டாய் காமதேவா,
அவரைப் பிராயந் தொடங்கிஎன்றும்
ஆதரித் தெழுந்தவென் தடமுலைகள்,
துவரைப் பிரானுக்கே சங்கற்பித்துத்
தொழுதுவைத் தேனொல்லை விதிக்கிற்றியே. 4

508:
வானிடை வாழுமவ் வானவர்க்கு
மறையவர் வேள்வியில் வகுத்தஅவி,
கானிடைத் திரிவதோர் நரிபுகுந்து
கடப்பதும் மோப்பதும் செய்வதொப்ப,
ஊனிடை யாழிசங் குத்தமர்க்கென்று
உன்னித் தெழுந்தவென் தடமுலைகள்,
மானிட வர்க்கென்று பேச்சுப்படில்
வாழகில் லேன்கண்டாய் மன்மதனே. 5

509:
உருவுடை யாரிளை யார்கள்நல்லார்
ஓத்துவல் லார்களைக் கொண்டு,வைகல்
தெருவிடை யெதிர்கொண்டு பங்குனிநாள்
திருந்தவே நோற்கின்றேன் காமதேவா,
கருவுடை முகில்வண்ணன் காயாவண்ணன்
கருவிளை போல்வண்ணன், கமலவண்ணத்
திருவுடை முகத்தினில் திருக்கண்களால்
திருந்தவே நோக்கெனக் கருளுகண்டய். 6

510:
காயுடை நெல்லொடு கரும்பமைத்துக்
கட்டி யரிசி யவலமைத்து,
வாயுடை மறையவர் மந்திரத்தால்
மன்மத னே.உன்னை வணங்குகின்றேன்,
தேயமுன் னளந்தவன் திரிவிக்கிரமன்
திருக்கைக ளாலென்னைத் தீண்டும்வண்ணம்,
சாயுடை வயிறுமென் தடமுலையும்
தரணியில் தலைப்புகழ் தரக்கிற்றியே. 7

511:
மாசுடை யுடம்பொடு தலையுலறி
வாய்ப்புரம் வெளுத்தொரு போதுமுண்டு,
தேசுடை திறலுடைக் காமதேவா.
நோற்கின்ற நோன்பினைக் குறிக்கொள்கண்டாய்,
பேசுவ தொன்றுண்டிங் கெம்பெருமான்
பெண்மையைத் தலையுடைத் தாக்கும்வண்ணம்
கேசவ நம்பியைக் கால்பிடிப்பாள்
என்னுமிப் பேறெனக் கருளுகண்டாய். 8

512:
தொழுதுமுப் போதுமுன் னடிவணங்கித்
தூமலர் தூய்த்தொழு தேத்துகின்றேன்,
பழுதின்றிப் பாற்கடல் வண்ணனுக்கே
பணிசெய்து வாழப் பெறாவிடில்நான்,
அழுதழு தலமந்தம் மாவழங்க
ஆற்றவு மதுவுனக் குறைக்குங்கண்டாய்,
உழுவதோ ரெருத்தினை நுகங்கொடுபாய்ந்து
ஊட்டமின் றித்துரந் தாலொக்குமே. 9

513:
கருப்புவில் மலர்க்கணைக் காமவேளைக்
கழலிணை பணிந்தங்கோர் கரியலற,
மருப்பினை யொசித்துப்புள் வாய்பிளந்த
மணிவண்ணற் கென்னை வகுத்திடென்று,
பொருப்பன்ன மாடம்பொ லிந்துதோன்றும்
புதுவையர் கோன்விட்டு சித்தன்கோதை,
விருப்புடை யின்தமிழ் மாலைவல்லார்
விண்ணவர் கோனடி நண்ணுவரே. (2) 10

2: நாமமாயிரம்

கலி விருத்தம்

514:
நாமமாயிர மேத்தநின்ற
நாராயணாநர னே,உன்னை
மாமிதன்மக னாகப்பெற்றா
லெமக்குவாதை தவிருமே,
காமன்போதரு காலமென்றுபங்
குனிநாள்கடை பாரித்தோம்,
தீமைசெய்யும் சிரீதரா.எங்கள்
சிற்றில்வந்து சிதையேலே. (2) 1

515:
இன்றுமுற்றும் முதுகுநோவ
இருந்திழைத்தஇச் சிற்றிலை,
நன்றும்கண்ணுற நோக்கிநாங்கொளும்
ஆர்வந்தன்னைத் தணிகிடாய்,
அன்றுபாலக னாகியாலிலை
மேல்துயின்றவெம் மாதியாய்,
என்றுமுன்றனக் கெங்கள்மேலிரக்
கம்மெழாததெம் பாவமே. 2

516:
குண்டுநீருறை கோளரீ.மத
யானைகோள்விடுத் தாய்,உன்னைக்
கண்டுமாலுறு வோங்களைக்கடைக்
கண்களாலிட்டு வாதியேல்,
வண்டல்நுண்மணல் தெள்ளியாம்வளைக்
கைகளால்சிர மப்பட்டோ ம்,
தெண்டிரைக்கடற் பள்ளியாய்.எங்கள்
சிற்றில்வந்து சிதையேலே. 3

517:
பெய்யுமாமுகில் போல்வண்ணா.உன்றன்,
பேச்சும்செய்கையும், எங்களை
மையலேற்றி மயக்கவுன்முகம்
மாயமந்திரந் தான்கொலோ,
நொய்யர்பிள்ளைக ளென்பதற்குன்னை
நோவநாங்களு ரைக்கிலோம்,
செய்யதாமரைக் கண்ணினாயெங்கள்
சிற்றில்வந்து சிதையேலே. 4

518:
வெள்ளைநுண்மணல் கொண்டுசிற்றில்
விசித்திரப்பட, வீதிவாய்த்
தெள்ளிநாங்களி ழைத்தகோல
மழித்தியாகிலும், உன்றன்மேல்
உள்ளமோடி யுருகலல்லால்
உரோடமொன்று மிலோங்கண்டாய்,
கள்ளமாதவா. கேசவா.உன்
முகத்தனகண்க ளல்லவே. 5

519:
முற்றிலாதபிள் ளைகளோம்முலை
போந்திலாதோமை, நாடொறும்
சிற்றில்மேலிட்டுக் கொண்டுநீசிறி
துண்டுதிண்ணென நாமது
கற்றிலோம்,கட லையடைத்தரக்-
கர்குலங்களை முற்றவும்
செற்று,இலங்கையைப் பூசலாக்கிய
சேவகா.எம்மை வாதியேல். 6

520:
பேதநன்கறி வார்களோடிவை
பேசினால்பெரி திஞ்சுவை,
யாதுமொன்றறி யாதபிள்ளைக
ளோமைநீநலிந் தென்பயன்,
ஓதமாகடல் வண்ணா.உன்மண
வாட்டிமாரொடு சூழறும்,
சேதுபந்தம் திருத்தினாயெங்கள்
சிற்றில்வந்து சிதையேலே. 7

521:
வட்டவாய்ச்சிறு தூதையோடு
சிறுசுளகும்மண லுங்கொண்டு,
இட்டமாவிளை யாடுவோங்களைச்
சிற்றிலீடழித் தென்பயன்,
தொட்டுதைத்துநலி யேல்கண்டாய்சுடர்ச்
சக்கரம்கையி லேந்தினாய்,
கட்டியும்கைத் தாலின்னாமை
அறிதியேகடல் வண்ணனே. 8

522:
முற்றத்தூடு புகுந்துநின்முகங்
காட்டிப்புன்முறு வல்செய்து,
சிற்றிலோடெங்கள் சிந்தையும்சிதைக்
கக்கடவையோ கோவிந்தா,
முற்றமண்ணிடம் தாவிவிண்ணுற
நீண்டளந்துகொண் டாய்,எம்மைப்-
பற்றிமெய்ப்பிணக் கிட்டக்காலிந்தப்
பக்கம்நின்றவ ரெஞ்சொல்லார்? 9

523:
சீதைவாயமு தமுண்டாய்.எங்கள்
சிற்றில்நீசிதை யேல். என்று,
வீதிவாய்விளை யாடுமாயர்
சிறுமியர்மழ லைச்சொல்லை,
வேதவாய்த்தொழி லார்கள்வாழ்வில்லி
புத்தூர்மன்விட்டு சித்தன்றன்,
கோதைவாய்த்தமிழ் வல்லவர்குறை
வின்றிவைகுந்தம் சேர்வரே. 2 10

3: கோழியழைப்பதன்

524:
கோழி யழைப்பதன் முன்னம்
குடைந்துநீ ராடுவான் போந்தோம்,
ஆழியஞ் செல்வ னெழுந்தான்
அரவணை மேல்பள்ளி கொண்டாய்,
ஏழைமை யாற்றவும் பட்டோ ம்
இனியென்றும் பொய்கைக்கு வாரோம்,
தோழியும் நானும் தொழுதோம்
துகிலைப் பணித்தரு ளாயே. (2) 1

525:
இதுவென் புகுந்ததிங் கந்தோ.
இப்பொய்கைக் கெவ்வாறு வந்தாய்,
மதுவின் துழாய்முடி மாலே.
மாயனே.எங்க ளமுதே,
விதியின்மை யாலது மாட்டோ ம்
வித்தகப் பிள்ளாய். விரையேல்,
குதிகொண் டரவில் நடித்தாய்.
குருந்திடைக் கூறை பணியாய். 2

526:
எல்லே யீதென்ன இளமை
எம்மனை மார்காணி லொட்டார்,
பொல்லாங்கீ தென்று கருதாய்
பூங்குருந் தேறி யிருத்தி,
வில்லாலி லங்கை யழித்தாய்.நீ
வேண்டிய தெல்லாம் தருவோம்,
பல்லாரும் காணாமே போவோம்
பட்டைப் பணித்தரு ளாயே. 3

527:
பரக்க விழித்தெங்கும் நோக்கிப்
பலர்குடைந் தாடும் சுனையில்,
அரக்கநில் லாகண்ண நீர்கள்
அலமரு கின்றவா பாராய்,
இரக்கமே லொன்று மிலாதாய்.
இலங்கை யழித்த பிரானே,
குரக்கர சாவ தறிந்தோம்
குருந்திடைக் கூறை பணியாய். 4

528:
காலைக் கதுவிடு கின்ற
கயலோடு வாளை விரவி,
வேலைப் பிடித்தெந்னை மார்கள்
ஓட்டிலென் னவிளை யாட்டோ ,
கோலச்சிற் றாடை பலவுங்
கொண்டுநீ யேறி யிராதே,
கோலங் கரிய பிரானே.
குருந்திடைக் கூறை பணியாய். 5

529:
தடத்தவிழ் தாமரைப் பொய்கைத்
தாள்களெங் காலைக் கதுவ,
விடத்தே ளெறிந்தாலே போல
வேதனை யற்றவும் பட்டோ ம்
குடத்தை யெடுத்தேற விட்டுக்
கூத்தாட வல்லஎங் கோவே,
படிற்றையெல் லாம்தவிர்ந் தெங்கள்
பட்டைப் பணித்தரு ளாயே. 6

530:
நீரிலே நின்றயர்க் கின்றோம்
நீதியல் லாதன செய்தாய்,
ஊரகம் சாலவும் சேய்த்தால்
ஊழியெல் லாமுணர் வானே,
ஆர்வ முனக்கே யுடையோம்
அம்மனை மார்காணி லொட்டார்,
போர விடாயெங்கள் பட்டைப்
பூங்குருந் தேறியி ராதே. 7

531:
மாமிமார் மக்களே யல்லோம்
மற்றுமிங் கெல்லாரும் போந்தார்,
தூமலர்க் கண்கள் வளரத்
தொல்லையி ராத்துயில் வானே,
சேமமே லன்றிது சாலச்
சிக்கென நாமிது சொன்னோம்,
கோமள ஆயர்கொ ழுந்தே.
குருந்திடைக் கூறை பணியாய். 8

532:
கஞ்சன் வலைவைத்த வன்று
காரிரு ளெல்லில் பிழைத்து,
நெஞ்சுதுக் கம்செய்யப் போந்தாய்
நின்றஇக் கன்னிய ரோமை,
அஞ்ச உரப்பாள் அசோதை
ஆணாட விட்டிட் டிருக்கும்,
வஞ்சகப் பேய்ச்சிபா லுண்ட
மசிமையி லீ.கூறை தாராய். 9

533:
கன்னிய ரோடெங்கள் நம்பி
கரிய பிரான்விளை யாட்டை,
பொன்னியல் மாடங்கள் சூழ்ந்த
புதுவையர் கோன்பட்டன் கோதை,
இன்னிசை யால்சொன்ன மாலை
ஈரைந்தும் வல்லவர் தாம்போய்,
மன்னிய மாதவ னோடு
வைகுந்தம் புக்கிருப் பாரே. 2 10

4: தெள்ளியார் பலர்

கலி விருத்தம்

534:
தெள்ளி யார்பலர் கைதொழும் தேவனார்,
வள்ளல் மாலிருஞ் சோலை மணாளனார்,
பள்ளி கொள்ளு மிடத்தடி கொட்டிட,
கொள்ளு மாகில்நீ கூடிடு கூடலே. 1

535:
காட்டில் வேங்கடம் கண்ண புரநகர்,
வாட்ட மின்றி மகிழ்ந்துறை வாமனன்,
ஓட்ட ராவந்தென் கைப்பற்றி, தன்னோடும்
கூட்டு மாகில்நீ கூடிடு கூடலே. (2) 2

536:
பூம கன்புகழ் வானவர் போற்றுதற்
காம கன்,அணி வாணுதல் தேவகி
மாம கன்,மிகு சீர்வசு தேவர்தம்,
கோம கன்வரில் கூடிடு கூடலே. 3

537:
ஆய்ச்சி மார்களு மாயரு மஞ்சிட,
பூத்த நீள்கடம் பேறிப் புகப்பாய்ந்து,
வாய்த்த காளியன் மேல்நட மாடிய,
கூத்த னார்வரில் கூடிடு கூடலே. 4

538:
மாட மாளிகை சூழ்மது ரைப்பதி
நாடி, நந்தெரு வின்நடு வேவந்திட்டு,
ஓடை மாமத யானை யுதைத்தவன்,
கூடு மாகில்நீ கூடிடு கூடலே. 5

539:
அற்ற வன்மரு தம்முறி யநடை
கற்ற வன்,கஞ் சனைவஞ் சனையினால்
செற்ற வன்,திக ழும்மது ரைப்பதி,
கொற்ற வன்வரில் கூடிடு கூடலே. 6

540:
அன்றின் னாதன செய்சிசு பாலனும்,
நின்ற நீள்மரு தும்மெரு தும்புள்ளும்,
வென்றி வேல்விறற் கஞ்சனும் வீழ,முன்
கொன்ற வன்வரில் கூடிடு கூடலே. 7

541:
ஆவ லன்புட யார்தம் மனத்தன்றி
மேவ லன்,விரை சூழ்துவ ராபதிக்
காவ லன்,கன்று மேய்த்து விளையாடும்,
கோவ லன்வரில் கூடிடு கூடலே. 8

542:
கொண்ட கோலக் குறளுரு வாய்ச்சென்று,
பண்டு மாவலி தன்பெரு வேள்வியில்,
அண்ட மும்நில னும்அடி யொன்றினால்,
கொண்ட வன்வரில் கூடிடு கூடலே. 9

543:
பழகு நான்மறை யின்பொரு ளாய்,மதம்
ஒழுகு வாரண முய்ய வளித்த,எம்
அழக னாரணி யாய்ச்சியர் சிந்தையுள்,
குழக னார்வரில் கூடிடு கூடலே. 10

544:
ஊடல் கூட லுணர்தல் புணர்தலை,
நீடு நின்ற நிறைபுக ழாய்ச்சியர்,
கூட லைக்குழற் கோதைமுன் கூறிய,
பாடல் பத்தும்வல் லார்க்கில்லை பாவமே. (2) 11


5: மன்னு பெரும்புகழ்

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

545:
மன்னு பெரும்புகழ் மாதவன் மாமணி
வண்ணன் மணிமுடி மைந்தன்
தன்னை, உகந்தது காரண மாகஎன்
சங்கிழக் கும்வழக் குண்டே,
புன்னை குருக்கத்தி ஞாழல் செருந்திப்
பொதும்பினில் வாழும் குயிலே,
பன்னியெப் போது மிருந்து விரைந்தென்
பவளவா யன்வரக் கூவாய். (2) 1

546:
வெள்ளை விளிசங் கிடங்கையிற் கொண்ட
விமல னெனக்குருக் காட்டான்,
உள்ளம் புகுந்தென்னை நைவித்து நாளும்
உயிர்பெய்து கூத்தாட்டுக் காணும்,
கள்ளவிழ் செண்பகப் பூமலர் கோதிக்
களித்திசை பாடுங் குயிலே,
மெள்ள விருந்து மிழற்றி மிழற்றாதென்
வேங்கட வன்வரக் கூவாய். 2

547:
மாதலி தேர்முன்பு கோல்கொள்ள மாயன்
இராவணன் மேல்,சர மாரி
தாய்தலை யற்றற்று வீழத் தொடுத்த
தலைவன் வரவெங்குங் காணேன்,
போதலர் காவில் புதுமணம் நாறப்
பொறிவண்டின் காமரங் கேட்டு,உன்
காதலி யோடுடன் வாழ்குயி லே.என்
கருமாணிக் கம்வரக் கூவாய். 3

548:
என்புரு கியின வேல்நெடுங் கண்கள்
இமைபொருந் தாபல நாளும்,
துன்பக் கடல்புக்கு வைகுந்த னென்பதோர்
தோணி பெறாதுழல் கின்றேன்,
அன்புடை யாரைப் பிரிவுறு நோயது
நீயு மறிதி குயிலே,
பொன்புரை மேனிக் கருளக் கொடியுடைப்
புண்ணிய னைவரக் கூவாய். 4

549:
மென்னடை யன்னம் பரந்துவிளையாடும்
வில்லிபுத் தூருறை வான்றன்,
பொன்னடி காண்பதோ ராசயி னாலென்
பொருகயற் கண்ணிணை துஞ்சா,
இன்னடி சிலோடு பாலமு தூட்டி
எடுத்தவென் கோலக் கிளியை,
உன்னொடு தோழமை கொள்வன் குயிலே.
உலகளந் தான்வரக் கூவாய். (2) 5

550:
எத்திசை யுமம ரர்பணிந் தேத்தும்
இருடீகே சன்வலி செய்ய,
முத்தன்ன வெண்முறு வற்செய்ய வாயும்
முலயு மழகழிந் தேன்நான்,
கொத்தலர் காவில் மணித்தடம் கண்படை
கொள்ளு மிளங்குயி லே,என்
தத்துவ னைவரக் கூகிற்றி யாகில்
தலையல்லால் கைம்மாறி லேனே. 6

551:
பொங்கிய பாற்கடல் பள்ளிகொள் வானைப்
புணர்வதோ ராசயி னால்,என்
கொங்கை கிளர்ந்து குமைத்துக் குதுகலித்
தாவியை யாகுலஞ் செய்யும்,
அங்குயி லே.உனக் கென்ன மறைந்துறைவு
ஆழியும் சங்குமொண் தண்டும்,
தங்கிய கையவ னைவரக் கூவில்நீ,
சாலத் தருமம் பெறுதி. 7

552:
சார்ங்கம் வளைய வலிக்கும் தடக்கைச்
சதுரன் பொருத்த முடையன்,
நாங்களெம் மில்லிருந் தொட்டிய கச்சங்கம்
நானு மவனு மறிதும்,
தேங்கனி மாம்பொழில் செந்தளிர் கோதும்
சிறுகுயி லே,திரு மாலை
ஆங்கு விரைந்தொல்லை கூகிற்றி யாகில்
அவனைநான் செய்வன காணே. 8

553:
பைங்கிளி வண்ணன் சிரீதர னென்பதோர்
பாசத் தகப்பட்டி ருந்தேன்,
பொங்கொளி வண்டிரைக் கும்பொழில் வாழ்குயி
லே.குறிக் கொண்டிது நீகேள்,
சங்கொடு சக்கரத் தான்வரக் கூவுதல்
பொன்வளை கொண்டு தருதல்,
இங்குள்ள காவினில் வாழக் கருதில்
இரண்டத்தொன் றேல்திண்ணம் வேண்டும். 9

554:
அன்றுல கம்மளந் தானை யுகந்தடி-
மைக்கண வன்வலி செய்ய,
தென்றலுந் திங்களு மூடறுத் தென்னை
நலியும் முறைமை யறியேன்,
என்றுமிக் காவி லிருந்திருந் தென்னைத்
தகர்த்தாதே நீயும் குயிலே,
இன்றுநா ராயண னைவரக் கூவாயேல்
இங்குத்தை நின்றும் துரப்பன். 10

555:
விண்ணுற நீண்டடி தாவிய மைந்தனை
வேற்கண் மடந்தை விரும்பி,
கண்ணுற வென்கடல் வண்ணனைக் கூவு
கருங்குயி லே. என்ற மாற்றம்,
பண்ணுற நான்மறை யோர்புது வைமன்னன்
பட்டர்பி ரான்கோதை சொன்ன,
நண்ணுறு வாசக மாலைவல் லார்நமோ-
நாராய ணாயவென் பாரே. (2) 11

6:வாரணமாயிரம்

கலி விருத்தம்

556:
வாரண மாயிரம் சூழவ லம்செய்து,
நாரண நம்பி நடக்கின்றா னென்றெதிர்,
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்,
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீநான். (2) 1

557:
நாளைவ துவைம ணமென்று நாளிட்டு,
பாளை கமுகு பரிசுடைப் பந்தற்கீழ்,
கோளரி மாதவன் கோவிந்த னென்பான்,ஓர்
காளைபு குதக்க னாக்கண்டேன் தோழீநான். 2

558:
இந்திர னுள்ளிட்ட தேவர்கு ழாமெல்லாம்,
வந்திருந் தென்னைம கட்பேசி மந்திரித்து,
மந்திரக் கோடியு டுத்திம ணமாலை,
அந்தரி சூட்டக்க னாக்கண்டேன் தோழீநான். 3

559:
நாற்றிசைத் தீர்த்தங்கொ ணர்ந்துந னிநல்கி,
பார்ப்பனச் சிட்டர்கள் பல்லாரெ டுத்தேத்தி,
பூப்புனை கண்ணிப்பு னிதனோ டென்றன்னை,
காப்புநாண் கட்டக்க னாக்கண்டேன் தோழீநான். 4

560:
கதிரொளி தீபம் கலசமு டனேந்தி,
சதிரிள மங்கையர் தாம்வந்தெ திர்கொள்ள,
மதுரையார் மன்ன னடிநிலை தொட்டு,எங்கும்
அதிரப் புகுதக் கனாக்கண்டேன் தோழீநான். 5

561:
மத்தளம் கொட்டவ ரிசங்கம் நின்றூத,
முத்துடைத் தாம நிரைதாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து,என்னைக்
கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீநான். 6

562:
வாய்நல் லார்நல்ல மறையோதி மந்திரத்தால்,
பாசிலை நாணல் படுத்துப் பரிதிவைத்து,
காய்சின மாகளி றன்னானென் கைப்பற்றி,
தீவலம் செய்யக்க னாக்கண்டேன் தோழீநான். 7

563:
இம்மைக்கு மேழேழ் பிறவிக்கும் பற்றாவான்,
நம்மையு டையவன் நாராய ணன்நம்பி,
செம்மை யுடைய திருக்கையால் தாள்பற்றி,
அம்மி மிதிக்கக் கனாக்கண்டேன் தோழீநான். 8

564:
வரிசிலை வாள்முகத் தென்னைமார் தாம்வந்திட்டு
எரிமுகம் பாரித்தென் னைமுன்னே நிறுத்தி,
அரிமுக னச்சுதன் கைம்மேலென் கைவைத்து,
பொரிமுகந் தட்டக் கனாக்கண்டேன் தோழீநான். 9

565:
குங்கும மப்பிக் குளிர்சாந்தம் மட்டித்து,
மங்கல வீதி வலம்செய்து மணநீர்,
அங்கவ னோடு முடஞ்சென்றங் கானைமேல்,
மஞ்சன மாட்டக்க னாக்கண்டேன் தோழீநான். 10

566:
ஆயனுக் காகத்தான் கண்ட கனாவினை,
வேயர் புகழ்வில்லி புத்தூர்க்கோன் கோதைசொல்,
தூய தமிழ்மாலை ஈரைந்தும் வல்லவர்,
வாயுநன் மக்களைப் பெற்று மகிழ்வரே. (2) 11

7: கருப்பூரம் நாறுமோ

கலிவிருத்தம்

567:
கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ,
திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்தி ருக்கும்மோ,
மருப்பொசித்த மாதவன்றன் வாய்ச்சுவையும் நாற்றமும்,
விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே. (2) 1

568:
கடலில் பிறந்து கருதாது, பஞ்சசனன்
உடலில் வளர்ந்துபோ யூழியான் கைத்தலத்
திடரில் குடியேறித் தீய வசுரர்,
நடலைப் படமுழங்கும் தோற்றத்தாய் நற்சங்கே. 2

569:
தடவரை யின்மீதே சரற்கால சந்திரன்,
இடையுவா வில்வந்தெ ழுந்தாலே போல்,நீயும்
வடமதுரை யார்மன்னன் வாசுதே வன்கையில்,
குடியேறி வீற்றிருந்தாய் கோலப்பெ ருஞ்சங்கெ. 3

570:
சந்திர மண்டலம்போல் தாமோத ரன்கையில்,
அந்தர மொன்றின்றி யேறி யவஞ்செவியில்,
மந்திரம் கொள்வாயே போலும் வலம்புரியே,
இந்திரனு முன்னோடு செல்வத்துக் கேலானே. 4

571:
உன்னோ டுடனே யொருகடலில் வாழ்வாரை,
இன்னா ரினையாரென் றெண்ணுவா ரில்லைகாண்,
மன்னாகி நின்ற மதுசூதன் வாயமுதம்,
பன்னாளு முண்கின்றாய் பாஞ்சசன் னியமே. 5

572:
போய்த்தீர்த்த மாடாதே நின்ற புணர்மருதம்,
சாய்த்தீர்த்தான் கைத்தலத்தே யேறிக் குடிகொண்டு
சேய்த்தீர்த மாய்நின்ற செங்கண்மால் தன்னுடய
வாய்த்தீர்த்தம் பாய்ந்தாட வல்லாய் வலம்புரியே.


573:

செங்கமல நாண்மலர்மேல் தேனுகரு மன்னம்போல்
செங்கட் கருமேனி வாசுதே வனுடய,
அங்கைத் தலமேறி அன்ன வசஞ்செய்யும்,
சங்கரையா. உஞ்செல்வம் சாலவ ழகியதே. 7

574:

உண்பது சொல்லி லுலகளந்தான் வாயமுதம்,
கண்படை கொள்ளில் கடல்வண்ணன் கைத்தலத்தே,
பெண்படை யாருன்மேல் பெரும்பூசல் சாற்றுகின்றார்,
பண்பல செய்கின்றாய் பாஞ்சசன் னியமே. 8

575:
பதினாறா மாயிரவர் தேவிமார் பார்த்திருப்ப,
மதுவாயில் கொண்டாற்போல் மாதவன்றன் வாயமுதம்,
பொதுவாக வுண்பதனைப் புக்குநீ யுண்டக்கால்,
சிதையாரோ வுன்னோடு செல்வப்பெ ருஞ்சங்கே. 9

576:
பாஞ்சசன் னியத்தைப் பற்பநா பனோடும்,
வாய்ந்தபெ ருஞ்சுற்ற மாக்கிய வண்புதுவை,
ஏய்ந்தபுகழ்ப் பட்டர்பிரான் கோதைதமி ழீரைந்தும்,
ஆய்ந்தேத்த வல்லா ரவரு மணுக்கரே. (2) 10

8: விண்ணீல மேலாப்பு

தரவு கொச்சகக் கலிப்பா

577:
விண்ணீல மேலாப்பு
விரித்தாற்போல் மேகங்காள்,
தெண்ணீர்பாய் வேங்கடத்தென்
திருமாலும் போந்தானே,
கண்ணீர்கள் முலைக்குவட்டில்
துளிசோரச் சோர்வேனை,
பெண்ணீர்மை யீடழிக்கும்
இதுதமக்கோர் பெருமையே? (2) 1

578:
மாமுத்த நிதிசொரியும்
மாமுகில்காள், வேங்கடத்துச்
சாமத்தின் நிறங்கொண்ட
தாடாளன் வார்த்தையென்னே,
காமத்தீ யுள்புகுந்து
கதுவப்பட்டு இடைக்கங்குல்,
ஏமத்தோர் தென்றலுக்கிங்-
கிலக்காய்நா னிருப்பேனே. 2

579:
ஒளிவண்ணம் வளைசிந்தை
உறக்கத்தோ டிவையெல்லாம்,
எளிமையா லிட்டென்னை
ஈடழியப் போயினவால்,
குளிரருவி வேங்கடத்தென்
கோவிந்தன் குணம்பாடி,
அளியத்த மேகங்காள்.
ஆவிகாத் திருப்பேனே. 3

580:
மின்னாகத் தெழுகின்ற
மேகங்காள், வேங்கடத்துத்
தன்னாகத் திருமங்கை
தங்கியசீர் மார்வற்கு,
என்னாகத் திளங்கொங்கை
விரும்பித்தாம் நாடோ றும்,
பொன்னாகம் புல்குதற்கென்
புரிவுடைமை செப்புமினே. 4

581:
வான்கொண்டு கிளர்ந்தெழுந்த
மாமுகில்காள், வேங்கடத்துத்
தேன்கொண்ட மலர்ச்சிதறத்
திரண்டேறிப் பொழிவீர்காள்,
ஊன்கொண்ட வள்ளுகிரால்
இரணியனை யுடலிடந்தான்,
தான்கொண்ட சரிவளைகள்
தருமாகில் சாற்றுமினே. 5

582:
சலங்கொண்டு கிளர்ந்தெழுந்த
தண்முகில்காள், மாவலியை
நிலங்கொண்டான் வேங்கடத்தே
நிரந்தேறிப் பொழிவீர்காள்,
உலங்குண்ட விளங்கனிபோல்
உள்மெலியப் புகுந்து,என்னை
நலங்கொண்ட நாரணற்கென்
நடலைநோய் செப்புமினே. 6

583:
சங்கமா கடல்கடைந்தான்
தண்முகில்காள், வேங்கடத்துச்
செங்கண்மால் சேவடிக்கீழ்
அடிவீழ்ச்சி விண்ணப்பம்,
கொங்கைமேல் குங்குமத்தின்
குழம்பழியப் புகுந்து,ஒருநாள்
தங்குமே லென்னாவி
தங்குமென் றுரயீரே. (2) 7

584:
கார்காலத் தெழுகின்ற
கார்முகில்காள், வேங்கடத்துப்
போர்காலத் தெழுந்தருளிப்
பொருதவனார் பேர்சொல்லி,
நீர்காலத் தெருக்கிலம்
பழவிலைபோல் வீழ்வேனை,
வார்காலத் தொருநாள்தம்
வாசகம்தந் தருளாரே. 8

585:
மதயானை போலெழுந்த
மாமுகில்காள், வேங்கடத்தைப்
பதியாக வாழ்வீர்காள்.
பாம்பணையான் வார்த்தையென்னே,
கதியென்றும் தானாவான்
கருதாது,ஓர் பெண்கொடியை
வதைசெய்தான். என்னும்சொல்
வையகத்தார் மதியாரே. (2) 9

586:
நாகத்தி னணையானை
நன்னுதலாள் நயந்துரைசெய்,
மேகத்தை வேங்கடக்கோன்
விடுதூதில் விண்ணப்பம்,
போகத்தில் வழுவாத
புதுவையர்கோன் கோதைதமிழ்,
ஆகத்து வைத்துரைப்பார்
அவரடியா ராகுவரே. (2) 10:


9: சிந்தூரச் செம்பொடி

கலிநிலைத்துறை

587:
சிந்துரச் செம்பொடிப்போல்
திருமாலிருஞ் சோலையெங்கும்,
இந்திர கோபங்களே
எழுந்தும்பரந் திட்டனவால்,
மந்தரம் நாட்டியன்று
மதுரக்கொழுஞ் சாறுகொண்ட
சுந்தரத் தோளுடையான்
சுழலையினின் றுய்துங்கொலோ. (2) 1

588:
போர்களி றுபொரும்மா
லிருஞ்சோலையம் பூம்புறவில்,
தார்க்கொடி முல்லைகளும்
தவளநகை காட்டுகின்ற,
கார்க்கொள் படாக்கள்நின்று
கழறிச்சிரிக் கத்தரியேன்,
ஆர்க்கிடு கோதோழி.
அவன்தார்ச்செய்த பூசலையே. 2

589:
கருவிளை யொண்மலர்காள்.
காயாமலர் காள்,திருமால்
உருவொளி காட்டுகின்றீர்
எனக்குய்வழக் கொன்றுரையீர்,
திருவிளை யாடுதிண்டோ ள்
திருமாலிருஞ் சோலைநம்பி,
வரிவளை யில்புகுந்து
வந்திபற்றும் வழ்க்குளதே. 3

590:
பைம்பொழில் வாழ்குயில்காள்.
மயில்காள்.ஒண் கருவிளைகாள்,
வம்பக் களங்கனிகாள்.
வண்ணப்பூவை நறுமலர்காள்,
ஐம்பெரும் பாதகர்காள்.
அணிமாலிருஞ் சோலைநின்ற,
எம்பெரு மானுடைய
நிறமுங்களுக் கெஞ்செய்வதே ? 4

591:
துங்க மலர்ப்பொழில்சூழ்
திருமாலிருஞ் சோலைநின்ற,
செங்கட் கருமுகிலின்
திருவுருப் போல்,மலர்மேல்
தொங்கிய வண்டினங்காள்.
தொகுபூஞ்சுனை காள்,சுனையில்
தங்குசெந் தாமரைகாள்.
எனக்கோர்சரண் சாற்றுமினே. 5

592:
நாறு நறும்பொழில்மா
லிருஞ்சோலை நம்பிக்கு, நான்
நூறு தடாவில்வெண்ணெய்
வாய்நேர்ந்து பராவிவைத்தேன்,
நூறு தடாநிறைந்த
அக்கார வடிசில்சொன்னேன்,
ஏறு திருவுடையான்
இன்றுவந்திவை கொள்ளுங்கொலோ. (2) 6

593:
இன்றுவந் தித்தனையும்
அமுதுசெய் திடப்பெறில்,நான்
ஒன்று நூறாயிரமாக்
கொடுத்துப்பின்னும் ஆளும்செய்வன்,
தென்றல் மணங்கமழும்
திருமாலிருஞ் சோலைதன்னுள்
நின்ற பிரான்,அடியேன்
மனத்தேவந்து நேர்படிலே. 7

594:
காலை யெழுந்திருந்து
கரியகுரு விக்கணங்கள்,
மாலின் வரவுசொல்லி
மருள்பாடுதல் மெய்ம்மைகொலோ,
சோலை மலைப்பெருமான்
துவராபதி யெம்பெருமான்,
ஆலி னிலைப்பெருமான்
அவன் வார்த்தை யுரைக்கின்றதே. 8

595:
கோங்கல ரும்பொழில்மா-
லிருஞ்சோலயில் கொன்றைகள்மேல்
தூங்குபொன் மாலைகளோ-
டுடனாய்நின்று தூங்குகின்றேன்,
பூங்கொள் திருமுகத்து
மடுத்தூதிய சங்கொலியும்,
சார்ங்கவில் நாணொலியும்
தலைப்பெய்வதெஞ் ஞான்றுகொலோ. 9

596:
சந்தொடு காரகிலும்
சுமந்துதடங் கள்பொருது,
வந்திழி யும்சிலம்பா-
றுடைமாலிருஞ் சோலைநின்ற,
சுந்தரனை, சுரும்பார்
குழல்கோதை தொகுத்துரைத்த,
செந்தமிழ் பத்தும்வல்லார்
திருமாலடி சேர்வர்களே. (2) 10


10: கார்க்கோடல் பூக்காள் .

கலிநிலைத்துறை

597:
கார்க்கோடல் பூக்காள். கார்க்கடல்
வண்ணனென் மேல்உம்மைப்
போர்க்கோலம் செய்து போர
விடுத்தவ னெங்குற்றான்,
ஆர்க்கோ இனிநாம் பூச
லிடுவது, அணிதுழாய்த்
தார்க்கோடும் நெஞ்சந் தன்னைப்
படைக்கவல் லேனந்தோ. (2) 1

598:
மேற்றோன்றிப் பூக்காள் மேலுல
கங்களின் மீதுபோய்,
மேற்றோன்றும் சோதி வேத
முதல்வர் வலங்கையில்,
மேற்றோன்று மாழியின் வெஞ்சுடர்
போலச் சுடாது,எம்மை
மாற்றோலைப் பட்டவர் கூட்டத்து
வைத்துகொள் கிற்றிரே. 2

599:
கோவை மணாட்டி. நீயுன்
கொழுங்கனி கொண்டு,எம்மை
ஆவி தொலைவியேல் வாயழ-
கர்தம்மை யஞ்சுதும்
பாவி யேன்தோன்றிப் பாம்பணை-
யார்க்கும்தம் பாம்புபோல்,
நாவு மிரண்டுள வாய்த்து
நாணிலி யேனுக்கே. 3

600:
முல்லைப் பிராட்டி.நீயுன்
முறுவல்கள் கொண்டு,எம்மை
அல்லல் விளைவியே லாழிநங்
காய்.உன்ன டைக்கலம்,
கொல்லை யரக்கியை மூக்கரிந்
திட்ட குமரனார்
சொல்லும் பொய்யானால், நானும்
பிறந்தமை பொய்யன்றே. 4

601:
பாடும் குயில்காள். ஈதென்ன
பாடல்,நல் வேங்கட
நாடர் நமக்கொரு வாழ்வுதந்
தால்வந்து பாடுமின்,
ஆடும் கருளக் கொடியுடை
யார்வந் தருள்செய்து,
கூடுவ ராயிடில் கூவிநும்
பாட்டுகள் கேட்டுமே. 5

602:
கணமா மயில்காள். கண்ணபி
ரான்திருக் கோலம்போன்று,
அணிமா நடம்பயின் றாடுகின்
றீர்க்கடி வீழ்கின்றேன்,
பணமா டரவணைப் பற்பல
காலமும் பள்ளிகொள்,
மணவாளர் நம்மை வைத்த
பரிசிது காண்மினே. 6

603:
நடமாடித் தோகை விரிக்கின்ற
மாமயில் காள்,உம்மை
நடமாட்டங் காணப் பாவியேன்
நானோர் முதலிலேன்,
குடமாடு கூத்தன் கோவிந்தன்
கோமிறை செய்து,எம்மை
உடைமாடு கொண்டா னுங்களுக்
கினியொன்று போதுமே ? 7

604:
மழையே. மழையே. மண்புறம்
பூசியுள் ளாய்நின்ற,
மெழுகூற்றி னாற்போல் ஊற்றுநல்
வேங்கடத் துள்நின்ற,
அழகப் பிரானார் தம்மையென்
நெஞ்சத் தகப்படத்
தழுவநின்று, என்னைத் ததர்த்திக்கொண்
டூற்றவும் வல்லையே? 8

605:
கடலே. கடலே. உன்னைக்
கடைந்து கலக்குறுத்து
உடலுள் புகுந்துநின் றூறல்
அறுத்தவற்கு, என்னையும்
உடலுள் புகுந்துநின் றூறல்
அறுக்கின்ற மாயற்குஎன்
நடலைக ளெல்லாம் நாகணைக்
கேசென்று ரைத்தியே. 9

606:
நல்லஎன் தோழி. நாக
ணைமிசை நம்பரர்,
செல்வர் பெரியர் சிறுமா
னிடவர்நாம் செய்வதென்,
வில்லி புதுவை விட்டுசித்
தர்தங்கள் தேவரை,
வல்ல பரிசு வருவிப்ப
ரேலது காண்டுமே. (2) 10

11: தாமுகக்கும்

தரவு சொச்சகக் கலிப்பா

607:
தாமுகக்கும் தம்கையில் சங்கமே போலாவோ,
யாமுகக்கு மெங்கையில் சங்கமு மேந்திழையீர்,
தீமுகத்து நாகணைமேல் சேரும் திருவரங்கர்,
ஆமுகத்தை நோக்காரால் அம்மனே. அம்மனே. (2) 1

608:
எழிலுடைய வம்மனைமீர். என்னரங்கத் தின்னமுதர்,
குழலழகர் வாயழகர் கண்ணழகர், கொப்பூழில்
எழுகமலப் பூவழக ரெம்மானார், என்னுடைய
கழல்வளையைத் தாமும் கழல்வளையே யாக்கினரே. 2

609:
பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும்,
அங்காதுஞ் சோராமே யாள்கின்ற வெம்பெருமான்,
செங்கோ லுடைய திருவரங்கச் செல்வனார்,
எங்கோல் வளையா லிடர்தீர்வ ராகாதே. (2) 3

610:
மச்சணி மாட மதிளரங்கர் வாமனனார்,
பச்சைப் பசுந்தேவர் தாம்பண்டு நீரேற்ற,
பிச்சைக் குறையாகி யென்னுடைய பெய்வளைமேல்,
இச்சை யுடையரே லித்தெருவே போதாரே ? 4

611:
பொல்லாக் குறளுருவாய்ப் பொற்கையில் நீரேற்று,
எல்லா வுலகு மளந்துகொண்ட வெம்பெருமான்,
நல்லார்கள் வாழும் நளிரரங்க நாகணையான்,
இல்லாதோம் கைப்பொருளு மெய்துவா னொத்துளனே. 5

612:
கைப்பொருள்கள் முன்னமே
கைக்கொண்டார், காவிரிநீர்
செய்ப்புரள வோடும்
திருவரங்கச் செல்வனார்,
எப்பொருட்கும் நின்றார்க்கு
மெய்தாது, நான்மறையின்
சொற்பொருளாய் நின்றாரென்
மெய்ப்பொருளும் கொண்டாரே. 6

613:
உண்ணா துறங்கா தொலிகடலை யூடறுத்து,
பெண்ணாக்கை யாப்புண்டு தாமுற்ற பேதெல்லாம்,
திண்ணார் மதிள்சூழ் திருவரங்கச் செல்வனார்,
எண்ணாதே தம்முடைய நன்மைகளே யெண்ணுவரே. 7

614:
பாசிதூர்த் துக்கிடந்த பார்மகட்கு, பண்டொருநாள்
மாசுடம்பில் நீர்வார மானமிலாப் பன்றியாம்,
தேசுடைய தேவர் திருவரங்கச் செல்வனார்,
பேசி யிருப்பனகள் பேர்க்கவும் பேராவே. (2) 8

615:
கண்ணாலங் கோடித்துக் கன்னிதன்னைக் கைப்பிடிப்பான்,
திண்ணார்ந் திருந்த சிசுபாலன் தேசழிந்து,
அண்ணாந் திருக்கவே யாங்கவளைக் கைப்பிடித்த,
பெண்ணாளன் பேணுமூர் பேரு மரங்கமே. 9

616:
செம்மை யுடைய
திருவரங்கர் தாம்பணித்த,
மெய்ம்மைப் பெருவார்த்தை
விட்டுசித்தர் கேட்டிருப்பர்,
தம்மை யுகப்பாரைத்
தாமுகப்ப ரென்னும்சொல்,
தம்மிடையே பொய்யானால்
சாதிப்பா ராரினியே . (2) 10


12: மற்றிருந்தீர்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

617:
மற்றிருந் தீர்கட் கறியலாகா
மாதவ னென்பதோ ரன்புதன்னை,
உற்றிருந் தேனுக் குரைப்பதெல்லாம்
ஊமைய ரோடு செவிடர்வார்த்தை,
பெற்றிருந் தாளை யொழியவேபோய்ப்
பேர்த்தொரு தாயில் வளர்ந்தநம்பி,
மற்பொருந் தாமற் களமடைந்த
மதுரைப் புறத்தென்னை யுய்த்திடுமின். (2) 1

618:
நாணி யினியோர் கருமமில்லை
நாலய லாரும் அறிந்தொழிந்தார்,
பாணியா தென்னை மருந்து செய்து
பண்டுபண் டாக்க வுறுதிராகில்,
மாணி யுருவா யுலகளந்த
மாயனைக் காணில் தலைமறியும்,
ஆணையால் நீரென்னைக் காக்கவேண்டில்
ஆய்ப்பாடிக் கேயென்னை யுய்த்திடுமின். 2

619:
தந்தையும் தாயுமுற் றாரும்நிற்கத்
தனிவழி போயினாள். என்னும்சொல்லு,
வந்தபின் னைப்பழி காப்பரிது
மாயவன் வந்துருக் காட்டுகின்றான்,
கொந்தள மாக்கிப் பரக்கழித்துக்
குறும்புசெய் வானோர் மகனைப்பெற்ற,
நந்தகோ பாலன் கடைத்தலைக்கே
நள்ளிருட் கணென்னை யுய்த்திடுமின். 3

620:
அங்கைத் தலத்திடை யாழிகொண்டான்
அவன்முகத் தன்றி விழியேனென்று,
செங்கச்சுக் கொண்டுகண் ணாடையார்த்துச்
சிறுமா னிடவரைக் காணில்நாணும்,
கொங்கைத் தலமிவை நோக்கிக்காணீர்
கோவிந்த னுக்கல்லால் வாயில்போகா,
இங்குத்தை வாழ்வை யொழியவேபோய்
யமுனைக் கரைக்கென்னை யுய்த்திடுமின். 4

621:
ஆர்க்குமென் நோயி தறியலாகா
தம்மனை மீர்.துழ திப்படாதே,
கார்க்கடல் வண்ணனென் பானொருவன்
கைகண்ட யோகம் தடவத்தீரும்,
நீர்க்கரை நின்ற கடம்பையேறிக்
காளிய னுச்சியில் நட்டம்பாய்ந்து,
போர்க்கள மாக நிருத்தஞ்செய்த
பொய்கைக் கரைக்கென்னை யுய்த்திடுமின். 5

622:
கார்த்தண் முகிலும் கருவிளையும்
காயா மலரும் கமலப்பூவும்,
ஈர்த்திடு கின்றன வென்னைவந்திட்
டிருடீகே சன்பக்கல் போகேயென்று,
வேர்த்துப் பசித்து வயிறசைந்து
வேண்டடி சிலுண்ணும் போது,ஈதென்று
பார்த்திருந் துநெடு நோக்குக்கொள்ளும்
பத்தவி லோசநத் துய்த்திடுமின். 6

623:
வண்ணம் திரிவும் மனங்குழைவும்
மானமி லாமையும் வாய்வெளுப்பும்,
உண்ண லுறாமையு முள்மெலிவும்
ஓதநீர் வண்ணனென் பானொருவன்,
தண்ணந் துழாயென்னும் மாலைகொண்டு
சூட்டத் தணியும், பிலம்பன்றன்னைப்
பண்ணழி யப்பல தேவன்வென்ற
பாண்டி வடத்தென்னை யுய்த்திடுமின். 7

624:
கற்றினம் மேய்க்கிலும் மேய்க்கப்பெற்றான்
காடுவாழ் சாதியு மாகப்பெற்றான்,
பற்றி யுரலிடை யாப்புமுண்டான்
பாவிகாள். உங்களுக் கேச்சுக்கொலோ,
கற்றன பேசி வசையுணாதே
காலிக ளுய்ய மழைதடுத்து,
கொற்றக் குடையாக வேந்திநின்ற
கோவர்த் தனத்தென்னை யுய்த்திடுமின். 8

625:
கூட்டி லிருந்து கிளியெப்போதும்
கோவிந்தா. கோவிந்தா. என்றழைக்கும்,
ஊட்டுக் கொடாது செறுப்பனாகில்
உலகளந் தான். என் றுயரக்கூவும்,
நாட்டில் தலைப்பழி யெய்தியுங்கள்
நன்மை யிழந்து தலையிடாதே,
சூட்டுயர் மாடங்கள் சூழ்ந்துதோன்றும்
துவரா பதிக்கென்னை யுய்த்திடுமின். 9

626:
மன்னு மதுரை தொடக்கமாக
வண்துவ ராபதி தன்னளவும்,
தன்னைத் தமருய்த்துப் பெய்யவேண்டித்
தாழ்குழ லாள்துணிந் ததுணிவை,
பொன்னியல் மாடம்பொ லிந்துதோன்றும்
புதுவையர் கோன்விட்டு சித்தன்கோதை,
இன்னிசை யால்சொன்ன செஞ்சொல்மாலை
ஏத்தவல் லார்க்கிடம் வைகுந்தமே. (2) 10


13: கண்ணனென்னும்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

627:
கண்ண னென்னும் கருந்தெய்வம்
காட்சி பழகிக் கிடப்பேனை,
புண்ணில் புளிப்பெய் தாற்போலப்
புறநின் றழகு பேசாதே,
பெண்ணின் வருத்த மறியாத
பெருமா னரையில் பீதக
வண்ண ஆடை கொண்டு,என்னை
வாட்டம் தணிய வீசீரே. (2) 1

628:
பாலா லிலையில் துயில்கொண்ட
பரமன் வலைப்பட் டிருந்தேனை,
வேலால் துன்னம் பெய்தாற்போல்
வேண்டிற் றெல்லாம் பேசாதே,
கோலால் நிரைமேய்த் தாயனாய்க்
குடந்தைக் கிடந்த குடமாடி,
நீலார் தண்ணந் துழாய்கொண்டென்
நெறிமேன் குழல்மேல் சூட்டீரே. 2

629:
கஞ்சைக் காய்ந்த கருவல்லி
கடைக்க ணென்னும் சிறைக்கோலால்,
நெஞ்சூ டுருவ வேவுண்டு
நிலையும் தளர்ந்து நைவேனை,
அஞ்சே லென்னா னவனொருவன்
அவன்மார் வணிந்த வனமாலை,
வஞ்சி யாதே தருமாகில்
மார்வில் கொணர்ந்து புரட்டீரே. 3

630:
ஆரே யுலகத் தாற்றுவார்
ஆயர் பாடி கவர்ந்துண்ணும்,
காரே றுழக்க வுழக்குண்டு
தளர்ந்தும் முறிந்தும் கிடப்பேனை,
ஆரா வமுத மனையான்றன்
அமுத வாயி லூறிய,
நீர்தான் கொணர்ந்து புலராமே
பருக்கி யிளைப்பை நீக்கிரே. 4

631:
அழிலும் தொழிலு முருக்காட்டான்
அஞ்சே லென்னா னவனொருவன்,
தழுவி முழுகிப் புகுந்தென்னைச்
சுற்றிச் சுழன்று போகானால்,
தழையின் பொழில்வாய் நிரைப்பின்னே
நெடுமா லூதி வருகின்ற
குழலின் தொளைவாய் நீர்கொண்டு
குளிர முகத்துத் தடவீரே. 5

632:
நடையொன் றில்லா வுலகத்து
நந்த கோபன் மகனென்னும்,
கொடிய கடிய திருமாலால்
குளப்புக் கூறு கொளப்பட்டு,
புடையும் பெயர கில்லேன்நான்
போட்கன் மிதித்த அடிப்பாட்டில்
பொடித்தான் கொணர்ந்து பூசீர்கள்
போகா வுயிரென் னுடம்பையே. 6

633:
வெற்றிக் கருள கொடியான்றன்
மீமீ தாடா வுலகத்து,
வெற்ற வெறிதே பெற்றதாய்
வேம்பே யாக வளர்த்தாளே,
குற்ற மற்ற முலைதன்னைக்
குமரன் கோலப் பணைத்தோளோடு,
அற்ற குற்ற மவைதீர
அணைய வமுக்கிக் கட்டீரே. 7

634:
உள்ளே யுருகி நைவேனை
உளளோ இலளோ வென்னாத,
கொள்ளை கொள்ளிக் குறும்பனைக்
கோவர்த் தனனைக் கண்டக்கால்,
கொள்ளும் பயனொன் றில்லாத
கொங்கை தன்னைக் கிழங்கோடும்
அள்ளிப் பறித்திட் டவன்மார்வில்
எறிந்தென் அழலை தீர்வேனே. 8

635:
கொம்மை முலைக ளிடர்தீரக்
கோவிந் தற்கோர் குற்றேவல்,
இம்மைப் பிறவி செய்யாதே
இனிப்போய்ச் செய்யும் தவந்தானென்,
செம்மை யுடைய திருமார்வில்
சேர்த்தா னேலும் ஒருஞான்று,
மெய்ம்மை சொல்லி முகம்நோக்கி
விடைதான் தருமேல் மிகநன்றே. 9

636:
அல்லல் விளைத்த பெருமானை
ஆயர் பாடிக் கணிவிளக்கை,
வில்லி புதுவை நகர்நம்பி
விட்டு சித்தன் வியன்கோதை,
வில்லைத் தொலைத்த புருவத்தாள்
வேட்கை யுற்று மிகவிரும்பும்,
சொல்லைத் துதிக்க வல்லார்கள்
துன்பக் கடளுள் துவளாரே. (2) 10


14: பட்டி மேய்ந்து

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

637:
பட்டி மேய்ந்தோர் காரேறு
பலதே வற்கோர் கீழ்க்கன்றாய்,
இட்டீ றிட்டு விளையாடி
இங்கே போதக் கண்டீரே?-
இட்ட மான பசுக்களை
இனிது மறித்து நீரூட்டி,
விட்டுக் கொண்டு விளையாட
விருந்தா வனத்தே கண்டோ மே. (2) 1

638:
அனுங்க வென்னைப் பிரிவுசெய்
தாயர் பாடி கவர்ந்துண்ணும்,
குணுங்கு நாறிக் குட்டேற்றைக்
கோவர்த் தனனைக் கண்டீரே?-
கணங்க ளோடு மின்மேகம்
கலந்தாற் போல, வனமாலை
மினுங்க நின்று விளையாட
விருந்தா வனத்தே கண்டோ மே. 2

639:
மாலாய்ப் பிரந்த நம்பியை
மாலே செய்யும் மணாளனை,
ஏலாப் பொய்க ளுரைப்பானை
இங்கே போதக் கண்டீரே?-
மேலால் பரந்த வெயில்காப்பான்
வினதை சிறுவன் சிறகென்னும்,
மேலாப் பின்கீழ் வருவானை
விருந்தா வனத்தே கண்டோ மே. 3

640:
கார்த்தண் கமலக் கண்ணென்னும்
நெடுங்கயி றுபடுத் தி,என்னை
ஈர்த்துக் கொண்டு விளையாடும்
ஈசன் றன்னைக் கண்டீரே?-
போர்த்த முத்தின் குப்பாயப்
புகர்மால் யானைக் கன்றேபோல்,
வேர்த்து நின்று விளையாட
விருந்தா வனத்தே கண்டோ மே. 4

641:
மாத வன்என் மணியினை
வலையில் பிழைத்த பன்றிபோல்,
ஏது மொன்றும் கொளத்தாரா
ஈசன் றன்னைக் கண்டீரே?-
பீதக வாடை யுடைதாழப்
பெருங்கார் மேகக் கன்றேபோல்,
வீதி யார வருவானை
விருந்தா வனத்தே கண்டோ மே. (2) 5

642:
தரும மறியாக் குறும்பனைத்
தங்கைச் சார்ங்க மதுவேபோல்,
புருவ வட்ட மழகிய
பொருத்த மிலியைக் கண்டீரே?-
உருவு கரிதாய் முகம்செய்தாய்
உதயப் பருப்ப தத்தின்மேல்,
விரியும் கதிரே போல்வானை
விருந்தா வனத்தே கண்டோ மே. 6

643:
பொருத்த முடைய நம்பியைப்
புறம்போ லுள்ளும் கரியானை
கருத்தைப் பிழைத்து நின்றஅக்
கருமா முகிலைக் கண்டீரே?-
அருத்தித் தாரா கணங்களால்
ஆரப் பெருகு வானம்போல்,
விருத்தம் பெரிதாய் வருவானை
விருந்தா வனத்தே கண்டோ மே. 7

644:
வெளிய சங்கொன் றுடையானைப்
பீதக வாடை யுடையானை,
அளிநன் குடைய திருமாலை
ஆழி யானைக் கண்டீரே?-
களிவண் டெங்கும் கலந்தாற்போல்
கழம்பூங் குழல்கள் தடந்தோள்மேல்,
மிளிர நின்று விளையாட
விருந்தா வனத்தே கண்டோ மே. 8

645:
நாட்டைப் படையென்று அயன்முதலாத்
தந்த நளிர்மா மலருந்தி,
வீட்டைப் பண்ணி விளையாடும்
விமலன் றன்னைக் கண்டீரே?-
காட்டை நாடித் தேனுகனும்
களிறும் புள்ளு முடன்மடிய,
வேட்டை யாடி வருவானை
விருந்தா வனத்தே கண்டோ மே. 9

646:
பருந்தாட் களிற்றுக் கருள்செய்த
பரமன் றன்னை, பாரின்மேல்
விருந்தா வனத்தே கண்டமை
விட்டு சித்தன் கோதைசொல்,
மருந்தா மென்று தம்மனத்தே
வைத்துக் கொண்டு வாழ்வார்கள்,
பெருந்தா ளுடைய பிரானடிக்கீழ்ப்
பிரியா தென்று மிருப்பாரே. (2) 10

ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்




ஸ்ரீ:

ஸ்ரீமதே ராமாநுஜாய நம:

பெருமாள் திருமொழி தனியன்கள்

உடயவர் அருளிச் செய்தது

நேரிசை வெண்பா

இன்னமுதம் ஊட்டுகேன் இங்கேவா பைங்கிளியே
தென்னரங்கம் பாடவல்ல சீர்ப்பெருமாள் பொன்னஞ்
சிலைசேர் நுதலியர்வேள் சேரலர்கோன் எங்கள்
குலசே கரனென்றே கூறு

மணக்கால் நம்பி அருளியது

கட்டளைக் கலித்துறை

ஆரம் கெடப்பர னன்பர்கொள் ளாரென்று அவர்களுக்கே
வாரங் கொடுகுடப் பாம்பில்கை யிட்டவன் மாற்றலரை
வீரங் கெடுத்தசெங் கோல்கொல்லி காவலன் வில்லவர்கோன்
சேரன் குலசே கரன்முடி வேந்தர் சிகாமணியே

குலசேகரப்பெருமாள் திருவடிகளே சரணம்

ஸ்ரீ: குலசேகரப்பெருமாள் அருளிச்செய்த பெருமாள் திருமொழி


எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

647:
இருளிரியச் சுடர்மணிக ளிமைக்கும் நெற்றி
இனத்துத்தி யணிபணமா யிரங்க ளார்ந்த
அரவரசப் பெருஞ்சோதி யனந்த னென்னும்
அணிவிளங்கு முயர்வெள்ளை யணையை மேவி
திருவரங்கப் பெருநகருள் தெண்ணீர்ப் பொன்னி
திரைக்கையா லடிவருடப் பள்ளி கொள்ளும்
கருமணியைக் கோமளத்தைக் கண்டு கொண்டு என்
கண்ணிணைக ளென்றுகொலோ களிக்கும் நாளே (2) 1.1

648:
வாயோரீ ரைஞ்நுறு துதங்க ளார்ந்த
வளையுடம்பி னழல்நாகம் உமிழ்ந்த செந்தீ
வீயாத மலர்ச்சென்னி விதான மேபோல்
மேன்மேலும் மிகவெங்கும் பரந்த தன்கீழ்
காயாம்பூ மலர்ப்பிறங்க லன்ன மாலைக்
கடியரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும்
மாயோனை மணத்தூணே பற்றி நின்றென்
வாயார என்றுகொலோ வாழ்த்தும் நாளே 1.2

649:
எம்மாண்பின் அயன்நான்கு நாவி னாலும்
எடுத்தேத்தி ஈரிரண்டு முகமுங் கொண்டு
எம்மாடு மெழிற்கண்க ளெட்டி னோடும்
தொழுதேத்தி யினிதிறைஞ்ச நின்ற செம்பொன்
அம்மான்றன் மலர்க்கமலக் கொப்பூழ் தோன்ற
அணியரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும்
அம்மான்ற னடியிணைக்கீ ழலர்க ளிட்டங்
கடியவரோ டென்றுகொலோ அணுகும் நாளே 1.3

650:
மாவினைவாய் பிளந்துகந்த மாலை வேலை
வண்ணணைஎன் கண்ணணைவன் குன்ற மேந்தி
ஆவினையன் றுயக்கொண்ட ஆய ரேற்றை
அமரர்கள்தந் தலைவனைஅந் தமிழி னின்பப்
பாவினைஅவ் வடமொழியைப் பற்றற் றார்கள்
பயிலரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும்
கோவினைநா வுறவழுத்தி என்றன் கைகள்
கொய்ம்மலர்தூய் என்றுகொலோ கூப்பும் நாளே 1.4

651:
இணையில்லா வின்னிசையாழ் கெழுமி யின்பத்
தும்புருவும் நாரதனு மிறைஞ்சி யேத்த
துணியில்லாத் தொன்மறைநூல் தோத்தி ரத்தால்
தொன்மலர்க்க ணயன்வணங்கி யோவா தேத்த
மணிமாட மாளிகைகள் மல்கு செல்வ
மதிளரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும்
மணிவண்ண னம்மானைக் கண்டு கொண்டென்
மலர்சென்னி யென்றுகொலோ வணங்கும் நாளே 1.5

652:
அளிமலர்மே லயனரனிந் திரனோடு ஏனை
அமரர்கள்தம் குழுவுமரம் பையரும் மற்றும்
தெளிமதிசேர் முனிவர்கள்தம் குழுவு முந்தித்
திசைதிசையில் மலர்தூவிச் சென்று சேரும்
களிமலர்சேர் பொழிலரங்கத் துரக மேறிக்
கண்வளரும் கடல்வண்ணர் கமலக் கண்ணும்
ஒளிமதிசேர் திருமுகமும் கண்டு கொண்டென்
உள்ளமிக என்றுகொலோ வுருகும் நாளே 1.6

653:
மறந்திகழு மனமொழித்து வஞ்ச மாற்றி
ஐம்புலன்க ளடக்கியிடர்ப் பாரத் துன்பம்
துறந்து,இருமுப் பொழுதேத்தி யெல்லை யில்லாத்
தொன்னெறிக்கண் நிலைநின்ற தொண்டரான
அறம்திகழும் மனத்தவர்தம் கதியைப் பொன்னி
அணியரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும்
நிறம்திகழும் மாயோனைக் கண்டென் கண்கள்
நீர்மல்க என்றுகொலோ நிற்கும் நாளே 1.7

654:
கோலார்ந்த நெடுஞ்சார்ங்கம் கூனற் சங்கம்
கொலையாழி கொடுந்தண்டு கொற்ற வொள்வாள்
காலார்ந்த கதிக்கருட னென்னும் வென்றிக்
கடும்பறவை யிவையனைத்தும் புறஞ்சூழ் காப்ப
சேலார்ந்த நெடுங்கழனி சோலை சூழ்ந்த
திருவரங்க தரவணையில் பள்ளி கொள்ளும்
மாலோனைக் கண்டின்பக் கலவி யெய்தி
வல்வினையே னென்றுகொலோ வாழும் நாளே 1.8

655:
தூராத மனக்காதல் தொண்டர் தங்கள்
குழாம்குழுமித் திருப்புகழ்கள் பலவும் பாடி
ஆராத மனக்களிப்போ டழுத கண்ணீர்
மழைசோர நினைந்துருகி யேத்தி நாளும்
சீரார்ந்த முழுவோசை பரவை காட்டும்
திருவரங்க தரவணையில் பள்ளி கொள்ளும்
போராழி யம்மானைக் கண்டு துள்ளிப்
பூதலத்தி லென்றுகொலோ புரளும் நாளே 1.9

656:
வன்பெருவா னகமுய்ய அமர ருய்ய
மண்ணுய்ய மண்ணுலகில் மனிச ருய்ய
துன்பமிகு துயரகல அயர்வொன் றில்லாச்
சுகம்வளர அகமகிழுந் தொண்டர் வாழ
அன்பொடுதென் திசைநோக்கிப் பள்ளி கொள்ளும்
அணியரங்கன் திருமுற்றத்து அடியார் தங்கள்
இன்பமிகு பெருங்குழுவு கண்டு யானும்
இசைந்துடனே யென்றுகொலோ விருக்கு நாளே (2) 1.10

657:
திடர்விளங்கு கரைப்பொன்னி நடுவு பாட்டுத்
திருவரங்க தரவணையில் பள்ளி கொள்ளும்
கடல்விளங்கு கருமேனி யம்மான் றன்னைக்
கண்ணாரக் கண்டுகக்கும் காதல் தன்னால்
குடைவிளங்கு விறல்தானைக் கொற்ற வொள்வாள்
கூடலர்கோன் கொடைகுலசே கரன்சொற் செய்த
நடைவிளங்கு தமிழ்மாலை பத்தும் வல்லார்
நலந்திகழ்நா ரணனடிக்கீழ் நண்ணு வாரே (2) 1.11

சந்தக் கலி விருத்தம்

658:
தேட்டரும்திறல் தேனினைத்தென்
னரங்கனைத்திரு மாதுவாழ்
வாட்டமில்வன மாலைமார்வனை
வாழ்த்திமால்கொள்சிந் தையராய்
ஆட்டமேவி யலந்தழைத்தயர்
வெய்தும்மெய்யடி யார்கள்தம்
ஈட்டம்கண்டிடக் கூடுமேலது
காணும்கண்பய னாவதே (2) 2.1

659:
தோடுலாமலர் மங்கைதோளிணை
தேய்ந்ததும்சுடர் வாளியால்
நீடுமாமரம் செற்றதும்நிரை
மேய்த்துமிவை யேநினைந்து
ஆடிப்பாடி அரங்கவோஎன்ற
ழைக்கும்தொண்ட ரடிப்பொடி
ஆடனாம்பெறில் கங்கைநீர்குடைந்
தாடும்வேட்கையென் னாவதே 2.2

660:
ஏறடர்த்ததும் ஏனமாய்நிலம்
கீண்டதும்முன்னி ராமனாய்
மாறடர்த்ததும் மண்ணளந்ததும்
சொல்லிப்பாடிவண் பொன்னிப்பே
ராறுபோல்வரும் கண்ணநீர்கொண்ட
ரங்கன்கோயில் திருமுற்றம்
சேறுசெய்தொண்டர் சேவடிச்செழுஞ்
சேறெஞ்சென்னிக் கணிவனே 2.3

661:
தோய்த்ததண்தயிர் வெண்ணெய்பாலுடன்
உண்டலும்உடன் றாய்ச்சிகண்டு
ஆர்த்ததோளுடை யெம்பிரானென்ன
ரங்கனுக்கடி யார்களாய்
நாத்தழும்பெழ நாரணாவென்ற
ழைத்துமெய்தழும் பத்தொழு
தேத்தி,இன்புறும் தொண்டர்சேவடி
ஏத்திவாழ்த்துமென் நெஞ்சமே 2.4

662:
பொய்சிலைக்குர லேற்றெருத்தமி
றுத்துபோரர வீர்த்தகோன்
செய்சிலைச்சுடர் சூழொளித்திண்ண
மாமதிள்தென்ன ரங்கனாம்
மெய்சிலைக்கரு மேகமொன்றுதம்
நெஞ்சில்நின்று திகழப்போய்
மெய்சிலிர்ப்பவர் தம்மையேநினைந்
தென்மனம்மெய்சி லிர்க்குமே 2.5

663:
ஆதியந்தம னந்தமற்புதம்
ஆனவானவர் தம்பிரான்
பாதமாமலர் சூடும்பத்தியி
லாதபாவிக ளுய்ந்திட
தீதில்நன்னெரி காட்டியெங்கும்
திரிந்தரங்கனெம் மானுக்கே
காதல்செய்தொண்டர்க் கெப்பிறப்பிலும்
காதல்செய்யுமென் னெஞ்சமே 2.6

664:
காரினம்புரை மேனிநல்கதிர்
முத்தவெண்ணகைச் செய்யவாய்
ஆரமார்வ னரங்கனென்னும்
அரும்பெருஞ்சுட ரொன்றினை
சேரும்நெஞ்சின ராகிச்சேர்ந்துக
சிந்திழிந்தகண் ணீர்களால்
வாரநிற்பவர் தாளிணைக்கொரு
வாரமாகுமென் னெஞ்சமே 2.7

665:
மாலையுற்றக டல்கிடந்தவன்
வண்டுகிண்டுந றுந்துழாய்
மாலையுற்றவ ரைப்பெருந்திரு
மார்வனைமலர்க் கண்ணனை
மாலையுற்றெழுந் தடிப்பாடித்தி
ரிந்தரங்கனெம் மானுக்கே
மாலையுற்றிடும் தொண்டர்வாழ்வுக்கு
மாலையுற்றதென் நெஞ்சமே 2.8

666:
மொய்த்துக்கண்பனி சோரமெய்கள்சி
லிர்ப்பஏங்கி யிளைத்துநின்று
எய்த்துக்கும்பிடு நட்டமிட்டெழுந்
தாடிப்பாடியி றைஞ்சி,என்
அத்தனச்ச னரங்கனுக்கடி
யார்களாகி அவனுக்கே
பித்தராமவர் பித்தரல்லர்கள்
மற்றையார்முற்றும் பித்தரே 2.9

667:
அல்லிமாமலர் மங்கைநாதன்
அரங்கன்மெய்யடி யார்கள்தம்
எல்லையிலடி மைத்திறத்தினில்
என்றுமேவு மனத்தனாம்
கொல்லிகாவலன் கூடல்நாயகன்
கோழிக்கோன்குல சேகரன்
சொல்லினின்தமிழ் மாலைவல்லவர்
தொண்டர்தொண்டர்க ளாவரே (2) 2.10

கலி விருத்தம்

668:
மெய்யில் வாழ்க்கையை மெய்யெனக் கொள்ளும்இவ்
வையந் தன்னொடும் கூடுவ தில்லையான்
ஐய னேஅரங் காஎன்ற ழைக்கின்றேன்
மையல் கொண்டாழிந் தேனென்றன் மாலுக்கே (2) 3.1

669:
நூலி னேரிடை யார்திறத் தேநிற்கும்
ஞாலந் தன்னொடும் கூடுவ தில்லையான்
ஆலியா அழையா அரங்கா வென்று
மாலெ ழுந்தொழிந் தேனென்றன் மாலுக்கே 3.2

670:

மார னார்வரி வெஞ்சிலைக் காட்செய்யும்
பாரி னாரொடும் கூடுவ தில்லையான்
ஆர மார்வ னரங்க னனந்தன்நல்
நார ணன்நர காந்தகன் பித்தனே 3.3

671:
உண்டி யேயுடை யேயுகந் தோடும்,இம்
மண்ட லத்தொடும் கூடுவ தில்லையான்
அண்ட வாண னரங்கன்வன் பேய்முலை
உண்ட வாயன்ற னுன்மத்தன் காண்மினே 3.4

672:
தீதில் நன்னெறி நிற்கஅல் லாதுசெய்
நீதி யாரொடும் கூடுவ தில்லையான்
ஆதி ஆய னரங்கன்,அந் தாமரைப்
பேதை மாமண வாளன்றன் பித்தனே 3.5

673:
எம்ப ரத்தரல் லாரொடும் கூடலன்
உம்பர் வாழ்வையொன் றாக கருதிலன்
தம்பி ரானம ரர்க்கு,அரங் கநகர்
எம்பி ரானுக்கெ ழுமையும் பித்தனே 3.6

674:
எத்தி றத்திலும் யாரொடும் கூடும்,அச்
சித்தந் தன்னைத் தவிர்த்தனன் செங்கண்மால்
அத்த னேஅரங் காஎன்ற ழைக்கின்றேன்
பித்த னாயொழிந் தேனெம்பி ரானுக்கே 3.7

675:
பேய ரேயெனக் கியாவரும் யானுமோர்
பேய னேயெவர்க் கும்இது பேசியென்
ஆய னேஅரங் காஎன்ற ழைக்கின்றேன்
பேய னாயொழிந் தேனெம்பி ரானுக்கே 3.8

676:
அங்கை யாழி யரங்க னடியிணை
தங்கு சிந்தைத் தனிப்பெரும் பித்தனாய்
கொங்கர் கோன்குல சேகரன் சொன்னசொல்
இங்கு வல்லவர்க் கேதமொன் றில்லையே (2) 3.9

தாவு கொச்சகக் கலிப்பா

677:
ஊனேறு செல்வத் துடற்பிறவி யான்வேண்டேன்
ஆனேறேழ் வென்றா னடிமைத் திறமல்லால்
கூனேறு சங்க மிடத்தான்தன் வேங்கடத்து
கோனேரி வாழும் குருகாய்ப் பிறப்பேனே (2) 4.1

678:
ஆனாத செல்வத் தரம்பையர்கள் தற்குழ
வானாளும் செல்வமும் மண்ணரசும் யான்வேண்டேன்
தேனார்பூஞ் சோலைத் திருவேங்க டச்சுனையில்
மீனாய்ப் பிறக்கும் விதியுடையே னாவேனே 4.2

679:
பின்னிட்ட சடையானும் பிரமனு மந்திரனும்
துன்னிட்டு புகலரிய வைகுந்த நீள்வாசல்
மின்வட்டச் சுடராழி வேங்கடக்கோன் தானுமிழும்
பொன்வட்டில் பிடித்துடனே புகப்பெறுவே னாவேனே 4.3

680:
ஒண்பவள வேலை யுலவுதண் பாற்கடலுள்
கண்துயிலும் மாயோன் கழலிணைகள் காண்பதற்கு
பண்பகரும் வண்டினங்கள் பண்பாடும் வேங்கடத்து
செண்பகமாய் நிற்கும் திருவுடையே னாவேனே 4.4

681:
கம்பமத யானை கழுத்தகத்தின் மேலிருந்து
இன்பமரும் செல்வமு மிவ்வரசும் யான்வேண்டேன்
எம்பெருமா னீச னெழில்வேங் கடமலைமேல்
தம்பகமாய் நிற்கும் தவமுடையே னாவேனே 4.5

682:
மின்னனைய நுண்ணிடையா ருருப்பசியும் மேனகையும்
அன்னவர்தம் பாடலொடு மாடலவை யாதரியேன்
தென்னவென வண்டினங்கள் பண்பாடும் வேங்கடத்துள்
அன்னனைய பொற்குடவா மருந்தவத்த னானவனே 4.6

683:
வானாளும் மாமதிபோல் வெண்குடைக்கீழ் மன்னவர்தம்
கோனாகி வீற்றிருந்து கொண்டாடும் செல்வறியேன்
தேனார்பூஞ் சோலைத் திருவேங் கடமலைமேல்
கானாறாய்ப் பாயும் கருத்துடையே னாவேனே 4.7

684:
பிறையேறு சடையானும் பிரமனு மிந்திரனும்
முறையாய பெருவேள்விக் குறைமுடிப்பான் மறையானான்
வெறியார்தண் சோலைத் திருவேங் கடமலைமேல்
நெறியாய்க் கிடக்கும் நிலையுடையே னாவேனே 4.8

685:
செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
நெடியானே வேங்கடவா நின்கோயி லின்வாசல்
அடியாரும் வானவரு மரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே (2) 4.9

686:
உம்ப ருலகாண் டொருகுடைக்கீழ் உருப்பசிதன்
அம்பொற் கலையல்குல் பெற்றாலு மாதரியேன்
செம்பவள வாயான் திருவேங் கடமென்னும்
எம்பெருமான் பொன்மலைமே லேதேனு மாவேனே 4.10

687:
மன்னியதண் சாரல் வடவேங் கடத்தான்றன்
பொன்னியலும் சேவடிகள் காண்பான் புரிந்திறைஞ்சி
கொன்னவிலும் கூர்வேல் குலசே கரஞ்சொன்ன
பன்னியநூல் தமிழ்வல்லார் பாங்காய பத்தர்களே (2) 4.11

தரவு கொச்சகக் கலிப்பா

688:
தருதுயரம் தடாயேலுன் சரணல்லால் சரணில்லை
விரைகுழுவு மலர்ப்பொழில்சூழ் விற்றுவக்கோட் டம்மானே
அரிசினத்தா லீன்றதாய் அகற்றிடினும் மற்றவள்தன்
அருள்நினைந்தே யழும்குழவி அதுவேபோன் றிருந்தேனே (2) 5.1

689:
கண்டா ரிகழ்வனவே காதலன்றான் செய்திடினும்
கொண்டானை யல்லா லறியாக் குலமகள்போல்
விண்டோ ய் மதிள்புடைசூழ் விற்றுவக்கோட் டம்மாநீ
கொண்டாளா யாகிலுமுன் குரைகழலே கூறுவனே 5.2

690:
மீன்நோக்கும் நீள்வயல்சூழ் விற்றுவக்கோட் டம்மாஎன்
பால்நோக்கா யாகிலுமுன் பற்றல்லால் பற்றில்லேன்
தான்நோக்கா தெத்துயரம் செய்திடினும் தார்வேந்தன்
கோல்நோக்கி வாழும் குடிபோன்றி ருந்தேனே 5.3

691:
வாளா லறுத்துச் சுடினும் மருத்துவன்பால்
மாளாத காதல்நோ யாளன்போல் மாயத்தால்
மீளாத் துயர்தரினும் விற்றுவக்கோட் டம்மாநீ
ஆளா வுனதருளே பார்ப்ப னடியேனே 5.4

692:
வெங்கண்திண் களிறடர்த்தாய் விற்றுவக்கோட் டம்மானே
எங்குப்போ யுய்கேனுன் னிணையடியே யடையலல்லால்
எங்கும்போய்க் கரைகாணா தெறிகடல்வாய் மீண்டேயும்
வங்கத்தின் கூம்பேறும் மாப்பறவை போன்றேனே 5.5

693:
செந்தழலே வந்தழலைச் செய்திடினும் செங்கமலம்
அந்தரஞ்சேர் வெங்கதிரோற் கல்லா லலராவால்
வெந்துயர்வீட் டாவிடினும் விற்றுவக்கோட் டம்மாஉன்
அந்தமில்சீர்க் கல்லா லகங்குழைய மாட்டேனே 5.6

694:
எத்தனையும் வான்மறந்த காலத்தும் பைங்கூழ்கள்
மைத்தெழுந்த மாமுகிலே பார்த்திருக்கும் மற்றவைப்போல்
மெய்த்துயர்வீட் டாவிடினும் விற்றுவக்கோட் டம்மாஎன்
சித்தம்மிக வுன்போலே வைப்ப னடியேனே 5.7

695:
தொக்கிலங்கி யாறெல்லாம் பரந்தோடி தொடுகடலே
புக்கன்றிப் புறம்நிற்க மாட்டாத மற்றவைபோல்
மிக்கிலங்கு முகில்நிறத்தாய் விற்றுவக்கோட் டம்மாஉன்
புக்கிலங்கு சீரல்லால் புக்கிலன்காண் புண்ணியனே 5.8

696:
நின்னையே தான்வேண்டி நீள்செல்வம் வேண்டாதான்
தன்னையே தான்வேண்டும் செல்வம்போல் மாயத்தால்
மின்னையே சேர்திகிரி விற்றுவக்கோட் டம்மானே
நின்னையே தான்வேண்டி நிற்ப னடியேனே 5.9

697:
விற்றுவக்கோட் டம்மாநீ வேண்டாயே யாயிடினும்
மற்றாரும் பற்றில்லே னென்றுஅவனைத் தாள்நயந்த
கொற்றவேல் தானைக் குலசே கரஞ்சொன்ன
நற்றமிழ்பத் தும்வல்லார் நண்ணார் நரகமே (2) 5.10

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

698:
ஏர்மலர்ப் பூங்குழ லாயர்மாதர்
எனைப்பல் ருள்ளவிவ் வூரில்,உன்றன்
மார்வு தழுவுதற் காசையின்மை
அறிந்தறிந் தேயுன்றன் பொய்யைக்கேட்டு
கூர்மழை போல்பனிக் கூதலெய்திக்
கூசி நடுங்கி யமுனையாற்றில்
வார்மணற் குன்றில் புலரநின்றேன்
வாசுதே வாஉன் வரவுபார்த்தே (2) 6.1

699:
கொண்டையொண் கண்மட வாளொருத்தி
கீழை யகத்துத் தயிர்கடையக்
கண்டுஒல்லை நானும் கடைவனென்று
கள்ள விழிவிழித் துப்புக்கு
வண்டமர் பூங்குழல் தாழ்ந்துலாவ
வாண்முகம் வேர்ப்பச்செவ் வாய்த்துடிப்ப
தண்டயிர் நீகடைந் திட்டவண்ணம்
தாமோத ராமெய் யறிவன்நானே 6.2

700:
கருமலர்க் கூந்த லொருத்திதன்னைக்
கடைக்கணித்து ஆங்கே யொருத்திதன்பால்
மருவி மனம்வைத்து மற்றொருத்திக்
குரைத்தொரு பேதைக்குப் பொய்குறித்து
புரிகுழல் மங்கை யொருத்திதன்னைப்
புணர்தி யவளுக்கும் மெய்யனல்லை
மருதிறுத் தாய்உன் வளர்த்தியூடே
வளர்கின்ற தாலுன்றன் மாயைதானே 6.3

701:
தாய்முலைப் பாலி லமுதிருக்கத்
தவழ்ந்து தளர்நடை யிட்டுச்சென்று
பேய்முலை வாய்வைத்து நஞ்சையுண்டு
பித்தனென் றேபிற ரேசநின்றாய்
ஆய்மிகு காதலோடு யானிருப்ப
யான்விட வந்தவென் தூதியோடே
நீமிகு போகத்தை நன்குகந்தாய்
அதுவுமுன் கோரம்புக் கேற்குமன்றே 6.4

702:
மின்னொத்த நுண்ணிடை யாளைக்கொண்டு
வீங்கிருள் வாயென்றன் வீதியூடே
பொன்னொத்த வாடைகுக் கூடலிட்டுப்
போகின்ற போதுநான் கண்டுநின்றேன்
கண்ணுற் றவளைநீ கண்ணாலிட்டுக்
கைவிளிக் கின்றதும் கண்டேநின்றேன்
என்னுக் கவளைவிட் டிங்குவந்தாய்
இன்னமங் கேநட நம்பிநீயே 6.5

703:
மற்பொரு தோளுடை வாசுதேவா
வல்வினை யேன்துயில் கொண்டவாறே
இற்றை யிரவிடை யேமத்தென்னை
இன்னணை மேலிட்ட கன்றுநீபோய்
அற்றை யிரவுமோர் பிற்றைநாளும்
அரிவைய ரோடும் அணைந்துவந்தாய்
எற்றுக்கு நீயென் மருங்கில்வந்தாய்
எம்பெரு மான்நீ யெழுந்தருளே 6.6

704:
பையர வின்னணைப் பள்ளியினாய்
பண்டையோ மல்லோம்நாம் நீயுகக்கும்
மையரி யொண்கண்ணி னாருமல்லோம்
வைகியெம் சேரி வரவோழிநீ
செய்ய வுடையும் திருமுகமும்
செங்கனி வாயும் குழலும்கண்டு
பொய்யொரு நாள்பட்ட தேயமையும்
புள்ளுவம் பேசாதே போகுநம்பீ 6.7

705:
என்னை வருக வெனக்குறித்திட்
டினமலர் முல்லையின் பந்தர்நீழல்
மன்னி யவளைப் புணரப்புக்கு
மற்றென்னைக் கண்டுழ றாநெகிழ்ந்தாய்
பொன்னிற வாடையைக் கையில்தாங்கிப்
பொய்யச்சங் காட்டிநீ போதியேலும்
இன்னமென் கையகத் தீங்கொருநாள்
வருதியே லெஞ்சினம் தீர்வன்நானே 6.8

706:
மங்கல நல்வன மாலைமார்வில்
இலங்க மயில்தழைப் பீலிசூடி
பொங்கிள வாடை யரையில்சாத்திப்
பூங்கொத்துக் காதிற் புணரப்பெய்து
கொங்கு நறுங்குழ லார்களோடு
குழைந்து குழலினி தூதிவந்தாய்
எங்களுக் கேயொரு நாள்வந்தூத
உன்குழ லின்னிசை போதராதே 6.9

707:
அல்லி மலர்த்திரு மங்கைகேள்வன்
றன்னை நயந்திள வாய்ச்சிமார்கள்
எல்லிப் பொழுதினி லேமத்தூடி
எள்கி யுரைத்த வுரையதனை
கொல்லி நகர்க்கிறை கூடற்கோமான்
குலசே கரனின் னிசையில்மேவி
சொல்லிய இன்தமிழ் மாலைபத்தும்
சொல்லவல் லார்க்கில்லை துன்பந்தானே (2) 6.10

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

708:
ஆலை நீள்கரும் பன்னவன் தாலோ
அம்பு யுத்தடங் கண்ணினன் தாலோ
வேலை நீர்நிறத் தன்னவன் தாலோ
வேழப் போதக மன்னவன் தாலோ
ஏல வார்குழ லென்மகன் தாலோ
என்றென் றுன்னைஎன் வாயிடை நிறைய
தாலொ லித்திடும் திருவினை யில்லாத்
தாய ரில்கடை யாயின தாயே (2) 7.1

709:
வடிக்கொ ளஞ்சன மெழுதுசெம் மலர்க்கண்
மருவி மேலினி தொன்றினை நோக்கி
முடக்கிச் சேவடி மலர்ச்சிறு கருந்தாள்
பொலியு நீர்முகில் குழவியே போல
அடக்கி யாரச்செஞ் சிறுவிர லனைத்தும்
அங்கை யோடணைந் தானையிற் கிடந்த
கிடக்கை கண்டிடப் பெற்றில னந்தோ
கேச வாகெடு வேன்கெடு வேனே 7.2

710:
முந்தை நன்முறை யுன்புடை மகளிர்
முறைமு றைந்தம் குறங்கிடை யிருத்தி
எந்தை யேஎன்றன் குலப்பெருஞ் சுடரே
எழுமு கில்கணத் தெழில்கவ ரேறே
உந்தை யாவன்என் றுரைப்பநின் செங்கேழ்
விரலி னும்கடைக் கண்ணினும் காட்ட
நந்தன் பெற்றனன் நல்வினை யில்லா
நங்கள் கோன்வசு தேவன்பெற் றிலனே 7.3

711:
களிநி லாவெழில் மதிபுரை முகமும்
கண்ண னேதிண்கை மார்வும்திண் டோ ளும்
தளிம லர்க்கருங் குழல்பிறை யதுவும்
தடங்கொள் தாமரைக் கண்களும் பொலிந்த
இளமை யின்பத்தை யின்றென்றன் கண்ணால்
பருகு வேற்கிவள் தாயென நினைந்த
அளவில் பிள்ளைமை யின்பத்தை யிழந்த
பாவி யேனென தாவிநில் லாதே 7.4

712:
மருவு நின்திரு நெற்றியில் சுட்டி
அசைத ரமணி வாயிடை முத்தம்
தருத லும்,உன்றன் தாதையைப் போலும்
வடிவு கண்டுகொண் டுள்ளமுள் குளிர
விரலைச் செஞ்சிறு வாயிடைச் சேர்த்து
வெகுளி யாய்நின்று ரைக்கும்மவ் வுரையும்
திருவி லேனொன்றும் பெற்றிலேன் எல்லாம்
தெய்வ நங்கை யசோதைபெற் றாளே 7.5

713:
தண்ணந் தாமரைக் கண்ணனே கண்ணா
தவழ்ந்தெ ழுந்து தளர்ந்ததோர் நடையால்
மண்ணில் செம்பொடி யாடிவந் தென்றன்
மார்வில் மன்னிடப் பெற்றிலே னந்தோ
வண்ணச் செஞ்சிறு கைவிர லனைத்தும்
வாரி வாய்க்கொண்ட அடிசிலின் மிச்சல்
உண்ணப் பெற்றிலேன் ஓகொடு வினையேன்
என்னை எஞ்செய்யப் பெற்றதெம் மோயே 7.6

714:
குழக னேஎன்றன் கோமளப் பிள்ளாய்
கோவிந் தாஎன் குடங்கையில் மன்னி
ஒழுகு பேரெழி லிளஞ்சிறு தளிர்போல்
ஒருகை யாலொரு முலைமுகம் நெருடா
மழலை மென்னகை யிடையிடை யருளா
வாயி லேமுலை யிருக்கவென் முகத்தே
எழில்கொள் நின்திருக் கண்ணிணை நோக்கந்
தன்னை யுமிழந் தேனிழந் தேனே 7.7

715:
முழுதும் வெண்ணெ யளைந்துதொட் டுண்ணும்
முகிழி ளஞ்சிறுத் தாமரைக் கையும்
எழில்கொள் தாம்புகொண் டடிப்பதற் கெள்கும்
நிலையும் வெண்தயிர் தோய்ந்தசெவ் வாயும்
அழுகை யுமஞ்சி நோக்குமந் நோக்கும்
அணிகொள் செஞ்சிறு வாய்நெளிப் பதுவும்
தொழுகை யுமிவை கண்ட அசோதை
தொல்லை யின்பத் திறுதிகண் டாளே 7.8

716:
குன்றி னால்குடை கவித்ததும் கோலக்
குரவை கோத்த தும்குட மாட்டும்
கன்றி னால்விள வெறிந்ததும் காலால்
காளி யன்தலை மிதித்தது முதலா
வென்றி சேர்பிள்ளை நல்விளை யாட்டம்
அனைத்தி லுமங்கென் னுள்ளமுள் குளிர
ஒன்றும் கண்டிடப் பெற்றிலே னடியேன்
காணு மாறினி யுண்டெனி லருளே 7.9

717:
வஞ்ச மேவிய நெஞ்சுடைப் பேய்ச்சி
வரண்டு நார்நரம் பெழக்கரிந் துக்க
நஞ்ச மார்தரு சுழிமுலை யந்தோ
சுவைத்து நீயருள் செய்து வளர்ந்தாய்
கஞ்சன் நாள்கவர் கருமுகி லெந்தாய்
கடைப்பட் டேன்வெறி தேமுலை சுமந்து
தஞ்ச மேலொன்றி லேனுய்ந்தி ருந்தேன்
தக்க தேநல்ல தாயைப்பெற் றாயே 7.10

718:
மல்லை மாநகர்க் கிறையவன் றன்னை
வாஞ்செ லுத்திவந் தீங்கணை மாயத்து
எல்லை யில்பிள்ளை செய்வன காணாத்
தெய்வத் தேவகி புலம்பிய புலம்பல்
கொல்லி காவலன் மாலடி முடிமேல்
கோல மாம்குல சேகரன் சொன்ன
நல்லி சைத்தமிழ் மாலைவல் லார்கள்
நண்ணு வாரொல்லை நாரண னுலகே (2) 7.11

தரவு கொச்சகக் கலிப்பா

719:
மன்னுபுகழ் கௌசலைதன் மணிவயிறு வாய்த்தவனே
தென்னிலங்கை கோன்முடிகள் சிந்துவித்தாய் செம்பொஞ்சேர்
கன்னிநன்மா மதிள்புடைசூழ் கணபுரத்தென் கருமணியே
என்னுடைய இன்னமுதே இராகவனே தாலேலோ (2) 8.1

720:
புண்டரிக மலரதன்மேல் புவனியெல்லாம் படைத்தவனே
திண்டிறலாள் தாடகைதன் உரமுருவச் சிலைவளைத்தய்
கண்டவர்தம் மனம்வழங்கும் கணபுரத்தென் கருமணியே
எண்டிசையு மாளுடையாய் இராகவனே தாலேலோ 8.2

721:
கொங்குமலி கருங்குழலாள் கோசலைதன் குலமதலாய்
தங்குபெரும் புகழ்ச்சனகன் திருமருகா தாசரதீ
கங்கையிலும் தீர்த்தமலி கணபுரத்தென் கருமணியே
எங்கள்குல தின்னமுதே இராகவனே தாலேலோ 8.3

722:
தாமரைமே லயனவனைப் படைத்தவனே தசரதன்றன்
மாமதலாய் மைதிலிதன் மணவாளா வண்டினங்கள்
காமரங்க ளிசைபாடும் கணபுரத்தென் கருமணியே
ஏமருவும் சிலைவலவா இராகவனே தாலேலோ 8.4

723:
பாராளும் படர்செல்வம் பரதநம்பிக் கேயருளி
ஆராவன் பிளையவனோ டருங்கான மடைந்தவனே
சீராளும் வரைமார்பா திருக்கண்ண புரத்தரசே
தாராளும் நீண்முடியென் தாசரதீ தாலேலோ 8.5

724:
சுற்றமெல்லாம் பின்தொடரத் தொல்கான மடைந்தவனே
அற்றவர்கட் கருமருந்தே அயோத்திநகர்க் கதிபதியே
கற்றவர்கள் தாம்வாழும் கணபுரத்தென் கருமணியே
சிற்றவைதன் சொல்கொண்ட சீராமா தாலேலோ 8.6

725:
ஆலினிலைப் பாலகனா யன்றுலக முண்டவனே
வாலியைகொன் றரசிளைய வானரத்துக் களித்தவனே
காலின்மணி கரையலைக்கும் கணபுரத்தென் கருமணியே
ஆலிநகர்க் கதிபதியே அயோத்திமனே தாலேலோ 8.7

726:
மலையதனா லணைகட்டி மதிளிலங்கை யழித்தவனே
அலைகடலைக் கடைந்தமரர்க் கமுதருளிச் செய்தவனே
கலைவலவர் தாம்வாழும் கணபுரத்தென் கருமணியே
சிலைவலவா சேவகனே சீராம தாலேலோ 8.8

727:
தளையவிழும் நறுங்குஞ்சித் தயரதன்றன் குலமதலாய்
வளையவொரு சிலையதனால் மதிளிலங்கை யழித்தவனே
களைகழுநீர் மருங்கலரும் கணபுரத்தென் கருமணியே
இளையவர்கட் கருளுடையாய் இராகவனே தாலேலோ 8.9

728:
தேவரையு மசுரரையும் திசைகளையும் படைத்தவனே
யாவரும்வந் தடிவணங்க அரங்கநகர்த் துயின்றவனே
காவிரிநல் நதிபாயும் கணபுரத்தென் கருமணியே
ஏவரிவெஞ் சிலைவலவா இராகவனே தாலேலோ (2) 8.10

729:
கன்னிநன்மா மதிள்புடைசூழ் கணபுரத்தென் காகுத்தன்
தன்னடிமேல் தாலேலோ என்றுரைத்த தமிழ்மாலை
கொல்நவிலும் வேல்வலவன் குடைக்குலசே கரஞ்சொன்ன
பன்னியநூல் பத்தும்வல்லார் பாங்காய பத்தர்களே (2) 8.11

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

730:
வன்தாளி னிணைவணங்கி வளநகரம்
தொழுதேத்த மன்ன னாவான்
நின்றாயை அரியணைமே லிருந்தாயை
நெடுங்கானம் படரப் போகு
என்றாள்,எம் இராமாவோ உனைப்பயந்த
கைகேசி தஞ்சொற் கேட்டு
நன்றாக நானிலத்தை யாள்வித்தேன்
நன்மகனே உன்னை நானே (2) 9.1

731:
வெவ்வாயேன் வெவ்வுரைகேட் டிருநிலத்தை
வேண்டாதே விரைந்து வென்றி
மைவாய களிறொழிந்து தேரொழிந்து
மாவொழிந்து வனமே மேவி
நெய்வாய வேல்நெடுங்கண் நேரிழையும்
இளங்கோவும் பின்பு போக
எவ்வாறு நடந்தனையெம் இரமாவோ
எம்பெருமான் எஞ்செய் கேனே 9.2

732:
கொல்லணைவேல் வரிநெடுங்கண் கோசலைதன்
குலமதலாய் குனிவில் லேந்தும்
மல்லணைந்த வரைத்தோளா வல்வினையேன்
மனமுருக்கும் வகையே கற்றாய்
மெல்லணைமேல் முன்துயின்றாய் இன்றினிப்போய்
வியன்கான மரத்தின் நீழல்
கல்லணைமேல் கண்டுயிலக் கற்றனையோ
காகுத்தா கரிய கோவே 9.3

733:
வாபோகு வாஇன்னம் வந்தொருகால்
கண்டுபோ மலராள் கூந்தல்
வேய்போலு மெழில்தோளி தன்பொருட்டா
விடையோன்றன் வில்லைச் செற்றாய்
மாபோகு நெடுங்கானம் வல்வினையேன்
மனமுருக்கும் மகனே இன்று
நீபோக என்னெஞ்ச மிருபிளவாய்ப்
போகாதே நிற்கு மாறே 9.4

734:
பொருந்தார்கை வேல்நுதிபோல் பரல்பாய
மெல்லடிகள் குருதி சோர
விரும்பாத கான்விரும்பி வெயிலுறைப்ப
வெம்பசிநோய் கூர இன்று
பெரும்பாவி யேன்மகனே போகின்றாய்
கேகயர்கோன் மகளாய்ப் பெற்ற
அரும்பாவி சொற்கேட்ட அருவினையேன்
எஞ்செய்கேன் அந்தோ யானே 9.5

735:
அம்மாவென் றுகந்தழைக்கு மார்வச்சொல்
கேளாதே அணிசேர் மார்வம்
என்மார்வத் திடையழுந்தத் தழுவாதே
முழுசாதே மோவா துச்சி
கைம்மாவின் நடையன்ன மென்னடையும்
கமலம்போல் முகமும் காணாது
எம்மானை யென்மகனை யிழந்திட்ட
இழிதகையே னிருக்கின் றேனே 9.6

736:
பூமருவு நறுங்குஞ்சி புஞ்சடையாய்ப்
புனைந்துபூந் துகில்சே ரல்குல்
காமரெழில் விழலுடுத்துக் கலனணியா
தங்கங்க ளழகு மாறி
ஏமருதோ ளென்புதல்வன் யானின்று
செலத்தக்க வனந்தான் சேர்தல்
தூமறையீர் இதுதகவோ சுமந்திரனே
விசிட்டனே சொல்லீர் நீரே 9.7

737:
பொன்பெற்றா ரெழில்வேதப் புதல்வனையும்
தம்பியையும் பூவை போலும்
மின்பற்றா நுண்மருங்குல் மெல்லியலென்
மருகிகையும் வனத்தில் போக்கி
நின்பற்றா நின்மகன்மேல் பழிவிளைத்திட்
டென்னையும்நீள் வானில் போக்க
என்பெற்றாய் கைகேசீ இருநிலத்தில்
இனிதாக விருக்கின் றாயே 9.8

738:
முன்னொருநாள் மழுவாளி சிலைவாங்கி
அவன்தவத்தை முற்றும் செற்றாய்
உன்னையுமுன் னருமையையு முன்மோயின்
வருத்தமுமொன் றாகக் கொள்ளாது
என்னையும்என் மெய்யுரையும் மெய்யாகக்
கொண்டுவனம் புக்க எந்தாய்
நின்னையே மகனாகப் பெறப்பெறுவேன்
ஏழ்பிறப்பும் நெடுந்தோள் வேந்தே 9.9

739:
தேன்நகுமா மலர்க்கூந்தல் கௌசலையும்
சுமித்திரையும் சிந்தை நோவ
கூனுருவில் கொடுந்தொழுத்தை சொற்கேட்ட
கொடியவள்தன் சொற்கொண்டு இன்று
கானகமே மிகவிரும்பி நீதுறந்த
வளநகரைத் துறந்து நானும்
வானகமே மிகவிரும்பிப் போகின்றேன்
மனுகுலத்தார் தங்கள் கோவே 9.10

740:
ஏரார்ந்த கருநெடுமால் இராமனாய்
வனம்புக்க அதனுக் காற்றா
தாரர்ந்த தடவரைத்தோள் தயரதன்றான்
புலம்பியஅப் புலம்பல் தன்னை
கூரார்ந்த வேல்வலவன் கோழியர்கோன்
குடைக்குலசே கரஞ்சொற் செய்த
சீரார்ந்த தமிழ்மாலை யிவைவல்லார்
தீநெறிக்கண் செல்லார் தாமே (2) 9.11

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

741:
அங்கணெடு மதிள்புடைசூ ழயோத்தி யென்னும்
அணிநகரத் துலகனைத்தும் விளக்கும் சோதி
வெங்கதிரோன் குலத்துக்கோர் விளக்காய்த் தோன்றி
விண்முழுது முயக்கொண்ட வீரன் றன்னை,
செங்கணெடுங் கருமுகிலை யிராமன் றன்னைத்
தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்
எங்கள்தனி முதல்வனையெம் பெருமான் றன்னை
என்றுகொலோ கண்குளிரக் காணு நாளே (2) 10.1

742:
வந்தெதிர்ந்த தாடகைதன் உரத்தைக் கீறி
வருகுருதி பொழிதரவன் கணையொன் றேவி
மந்திரங்கொள் மறைமுனிவன் வேள்வி காத்து
வல்லரக்க ருயிருண்ட மைந்தன் காண்மின்
செந்தளிர்வாய் மலர்நகைசேர் செழுந்தண் சோலைத்
தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்
அந்தணர்க ளொருமூவா யிரவ ரேத்த
அணிமணியா சனத்திருந்த வம்மான் றானே 10.2

743:
செல்வரிநற் கருநெடுங்கண் சீதைக் காகிச்
சினவிடையோன் சிலையிறுத்து மழுவா ளேந்தி
வெவ்வரிநற் சிலைவாங்கி வென்றி கொண்டு
வேல்வேந்தர் பகைதடிந்த வீரன் றன்னை
தெவ்வரஞ்ச நெடும்புரிசை யுயர்ந்த பாங்கர்த்
தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்
எவ்வரிவெஞ் சிலைத்தடக்கை யிராமன் றன்னை
இறைஞ்சுவா ரிணையடியே யிறைஞ்சி னேனே 10.3

744:
தொத்தலர்பூஞ் சுரிகுழல்கை கேசி சொல்லால்
தென்னகரந் துரந்துதுறைக் கங்கை தன்னை
பத்தியுடைக் குகன்கடத்த வனம்போய்ப் புக்குப்
பரதனுக்கு பாதுகமு மரசு மீந்து
சித்திரகூ டத்திருந்தான் றன்னை யின்று
தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்
எத்தனையும் கண்குளிரக் காணப் பெற்ற
இருநிலத்தார்க் கிமையவர்நே ரொவ்வார் தாமே 10.4

745:
வலிவணக்கு வரைநெடுந்தோள் விராதைக் கொன்று
வண்டமிழ்மா முனிகொடுத்த வரிவில் வாங்கி
கலைவணக்கு நோக்கரக்கி மூக்கை நீக்கிக்
கரனோடு தூடணன்ற னுயிரை வாங்கி
சிலைவணக்கி மான்மரிய வெய்தான் றன்னைத்
தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்
தலைவணக்கிக் கைகூப்பி யேத்த வல்லார்
திரிதலால் தவமுடைத்தித் தரணி தானே 10.5

746:
தனமருவு வைதேகி பிரிய லுற்றுத்
தளர்வெய்திச் சடாயுவைவை குந்தத் தேற்றி
வனமருவு கவியரசன் காதல் கொண்டு
வாலியைகொன் றிலங்கைநக ரரக்கர் கோமான்
சினமடங்க மாருதியால் சுடுவித் தானைத்
தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்
இனிதமர்ந்த அம்மானை இராமன் றன்னை
ஏத்துவா ரிணையடியே யேத்தி னெனெ 10.6

747:
குரைகடலை யடலம்பால் மறுக வெய்து
குலைகட்டி மறுகரையை யதனா லேரி
எரிநெடுவே லரக்கரொடு மிலங்கை வேந்தன்
இன்னுயிர்கொண் டவன்தம்பிக் கரசு மீந்து
திருமகளோ டினிதமர்ந்த செல்வன் றன்னைத்
தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்
அரசமர்ந்தா னடிசூடு மரசை யல்லால்
அரசாக வெண்ணேன்மற் றரசு தானே 10.7

748:
அம்பொனெடு மணிமாட அயோத்தி யெய்தி
அரசெய்தி அகத்தியன்வாய்த் தான்முன் கொன்றான்
றன்பெருந்தொல் கதைக்கேட்டு மிதிலைச் செல்வி
உலகுய்யத் திருவயிறு வாய்த்த மக்கள்
செம்பவளத் திரள்வாய்த்தன் சரிதை கேட்டான்
தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்
எம்பெருமான் றஞ்சரிதை செவியால் கண்ணால்
பருகுவோ மின்னமுதை மதியோ மின்றே 10.8

749:
செறிதவச்சம் புகன்றன்னைச் சென்று கொன்று
செழுமறையோ னுயிர்மீட்டுத் தவத்தோ னீந்த
நிறைமணிப்பூ ணணியுங்கொண் டிலவணன் றன்னைத்
தம்பியால் வானேற்றி முனிவன் வேண்ட
திறல்விளங்கு மிலக்குமனைப் பிரிந்தான் றன்னைத்
தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்
உறைவானை மறவாத வுள்ளந் தன்னை
உடையோம்மற் றுறுதுயர மடையோ மின்றே 10.9

750:
அன்றுசரா சரங்களைவை குந்தத் தேற்றி
அடலரவப் பகையேறி யசுரர் தம்மை
வென்று,இலங்கு மணிநெடுந்தோள் நான்கும் தோன்ற
விண்முழுது மெதிர்வரத்தன் தாமம் மேவி
சென்றினிது வீற்றிருந்த வம்மான் றன்னைத்
தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்
என்றும்நின்றா னவனிவனென் றேத்தி நாளும்
இன்றைஞ்சுமினோ வெப்பொழுதும் தொண்டீர் நீரே 10.10

751:
தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்
திறல்விளங்கு மாருதியோ டமர்ந்தான் றன்னை
எல்லையில்சீர்த் தயரதன்றன் மகனாய்த் தோன்றிற்
றதுமுதலாத் தன்னுலகம் புக்க தீறா
கொல்லியலும் படைத்தானைக் கொற்ற வொள்வாள்
கோழியர்கோன் குடைக்குலசே கரஞ்சொற் செய்த
நல்லியலின் தமிழ்மாலை பத்தும் வல்லார்
நலந்திகழ்நா ரணனடிக்கீழ் நண்ணு வாரே (2) 10.11

குலசேகரப் பெருமாள் திருவடிகளே சரணம்




ஸ்ரீ:

ஸ்ரீமதே ராமானுஜாய நம:

திருச்சந்த விருத்தத் தனியந்கள்

திருக்கச்சி நம்பிகள் அருளிச்செய்தவை

தரவு கொச்சகக் கலிப்பா

தருச்சந்தப் பொழில்தழுவு தாரணியின் துயர்தீர
திருச்சந்த விருத்தம்செய் திருமழிசைப் பரன்வருமூர்,
கருச்சந்தும் காரகிலும் கமழ்கோங்கும் மணநாறும்,
திருச்சந்தத் துடன்மருவு திருமழிசை வளம்பதியே.

இருவிகற்ப நேரிசை வெண்பா

உலகும் மழிசையு முள்ளுணர்ந்து, தம்மில்
புலவர் புகழ்க்கோலால் தூக்க,- உலகுதன்னை
வைத்தெடுத்த பக்கத்தும், மாநீர் மழிசையே
வைத்தெடுத்த பக்கம் வலிது.

திருமழிசைப்பிரான் அருளிச்செய்த திருச்சந்த விருத்தம்


சந்தக் கலி விருத்தம்

752:
பூநிலாய வைந்துமாய்ப்
புனற்கண்நின்ற நான்குமாய்,
தீநிலாய மூன்றுமாய்ச்
சிறந்தகா லிரண்டுமாய்,
மீநிலாய தொன்றுமாகி
வேறுவேறு தன்மையாய்,
நீநிலாய வண்ணநின்னை
யார்நினைக்க வல்லரே? (2) (1)

753:
ஆறுமாறு மாறுமாயொ
ரைந்துமைந்து மைந்துமாய்,
ஏறுசீரி ரண்டுமூன்று
மேழுமாறு மெட்டுமாய்,
வேறுவேறு ஞானமாகி
மெய்யினொடு பொய்யுமாய்,
ஊறொடோ சை யாயவைந்து
மாய ஆய மாயனே. (2)

753:
ஐந்துமைந்து மைந்துமாகி
யல்லவற்று ளாயுமாய்,
ஐந்துமூன்று மொன்றுமாகி
நின்றவாதி தேவனே,
ஐந்துமைந்து மைந்துமாகி
யந்தரத்த ணைந்துநின்று,
ஐந்துமைந்து மாயநின்னை
யாவர்காண வல்லரே? (3)

755:
மூன்றுமுப்ப தாறினோடொ
ரைந்துமைந்து மைந்துமாய்,
மூன்றுமூர்த்தி யாகிமூன்று
மூன்றுமூன்று மூன்றுமாய,
தோன்றுசோதி மூன்றுமாய்த்
துளக்கமில் விளக்கமாய்,
ஏன்றெனாவி யுள்புகுந்த
தென்கொலோவெம் மீசனே. (4)

756:
நின்றியங்கு மொன்றலாவு
ருக்கடோ றும் ஆவியாய்,
ஒன்றியுள்க லந்துநின்ற
நின்னதன்மை யின்னதென்று,
என்றும்யார்க்கு மெண்ணிறந்த
ஆதியாய்நின் னுந்திவாய்,
அன்றுநான்மு கற்பயந்த
வாதிதேவ னல்லையே? (5)

757:
நாகமேந்து மேருவெற்பை
நாகமேந்து மண்ணினை,
நாகமேந்து மாகமாக
மாகமேந்து வார்புனல்,
மாகமேந்து மங்குல்தீயொர்
வாயுவைந் தமைந்துகாத்து,
ஏகமேந்தி நின்றநீர்மை,
நின்கணேயி யன்றதெ. (6)

758:
ஒன்றிரண்டு மூர்த்தியா
யுறக்கமோடு ணர்ச்சியாய்,
ஒன்றிரண்டு காலமாகி
வேலைஞால மாயினாய்,
ஒன்றிரண்டு தீயுமாகி
யாயனாய மாயனே
ஒன்றிரண்டு கண்ணினுனு
முன்னையேத்த வல்லனே? (7)

759:
ஆதியான வானவர்க்கு
மண்டமாய வப்புறத்து,
ஆதியான வானவர்க்கு
மாதியான வாதிநீ,
ஆதியான வானவாண
ரந்தகாலம் நீயுரைத்தி,
ஆதியான காலநின்னை
யாவர்காண வல்லரே? (8)

760:
தாதுலாவு கொன்றைமாலை
துன்னுசெஞ்ச டைச்சிவன்,
நீதியால்வ ணங்குபாத
நின்மலா.நி லாயசீர்
வேதவாணர் கீதவேள்வி
நீதியான வேள்வியார்,
நீதியால் வணங்குகின்ற
நீர்மைநின்கண் நின்றதே (9)

761:
தன்னுளேதி ரைத்தெழும்
தரங்கவெண்த டங்கடல்
தன்னுளேதி ரைத்தெழுந்
தடங்குகின்ற தன்மைபோல்,
நின்னுளேபி றந்திறந்து
நிற்பவும் திரிபவும்,
நின்னுளேய டங்குகின்ற
நீர்மைநின்கண் நின்றதே. (10)

761:
தன்னுளேதி ரைத்தெழும்
தரங்கவெண்த டங்கடல்
தன்னுளேதி ரைத்தெழுந்
தடங்குகின்ற தன்மைபோல்,
நின்னுளேபி றந்திறந்து
நிற்பவும் திரிபவும்,
நின்னுளேய டங்குகின்ற
நீர்மைநின்கண் நின்றதே (10)

762:
சொல்லினால்தொ டர்ச்சிநீ
சொலப்படும்பொ ருளும்நீ,
சொல்லினால்சொ லப்படாது
தோன்றுகின்ற சோதிநீ,
சொல்லினால்ப டைக்கநீப
டைக்கவந்து தோன்றினார்,
சொல்லினால்சு ருங்கநின்கு
ணங்கள் சொல்ல வல்லரே? (11)

763:
உலகுதன்னை நீபடைத்தி
யுள்ளொடுக்கி வைத்தி, மீண்-
டுலகுதன்னு ளேபிறத்தி
யோரிடத்தை யல்லையால்
உலகுநின்னொ டொன்றிநிற்க
வேறுநிற்றி யாதலால்,
உலகில்நின்னை யுள்ளசூழல்
யாவருள்ளா வல்லரே? (12)

764:
இன்னையென்று சொல்லலாவ
தில்லையாதும் இட்டிடைப்
பின்னைகேள்வ னென்பருன்பி
ணக்குணர்ந்த பெற்றியோர்
பின்னையாய கோலமோடு
பேருமூரு மாதியும்,
நின்னையார் நினைக்கவல்லர்
நீர்மையால்நி னைக்கிலே. (13)

765:
தூய்மையோக மாயினாய்து
ழாயலங்கல் மாலையாய்,
ஆமையாகி யாழ்கடல்து
யின்றவாதி தேவ,நின்
நாமதேய மின்னதென்ன
வல்லமல்ல மாகிலும்,
சாமவேத கீதனாய
சக்ரபாணி யல்லையே? (14)

766:
அங்கமாறும் வேதநான்கு
மாகிநின்ற வற்றுளே,
தங்குகின்ற தன்மையாய்த
டங்கடல்ப ணத்தலை,
செங்கண்நாக ணைக்கிடந்த
செல்வமல்கு சீரினாய்,
சங்கவண்ண மன்னமேனி
சார்ங்கபாணி யல்லையே? (15)

767:
தலைக்கணத்து கள்குழம்பு
சாதிசோதி தோற்றாமாய்,
நிலைக்கணங்கள் காணவந்து
நிற்றியேலும் நீடிருங்,
கலைக்கணங்கள் சொற்பொருள்க
ருத்தினால்நி னைக்கொணா,
மலைக்கணங்கள் போலுணர்த்தும்
மாட்சிநின்றன் மாட்சியே. (16)

768:
ஏகமூர்த்தி மூன்றுமூர்த்தி
நாலுமூர்த்தி நன்மைசேர்,
போகமூர்த்தி புண்ணியத்தின்
மூர்த்தியெண்ணில் மூர்த்தியாய்
நாகமூர்த்தி சயனமாய்ந
லங்கடல்கி டந்து,மேல்
ஆகமூர்த்தி யாயவண்ண
மெங்கொலாதி தேவனே. (17)

769:
விடத்தவாயொ ராயிரமி
ராயிரம்கண் வெந்தழல்,
விடத்துவீழ்வி லாதபோகம்
மிக்கசோதி தொக்கசீர்,
தொடுத்துமேல்வி தானமாய
பௌவநீர ராவணை
படுத்தபாயல் பள்ளிகொள்வ
தென்கொல்வேலை வண்ணாணே. (18)

770:
புள்ளாதாகி வேதநான்கு
மோதினாய்அ தன்றியும்,
புள்ளின்வாய்பி ளந்துபுட்கொ
டிப்பிடித்த பின்னரும்,
புள்ளையூர்தி யாதலால
தென்கொல்மின்கொள் நேமியாய்,
புள்ளின்மெய்ப்ப கைக்கடல்கி
டத்தல்காத லித்ததே. (19)

771:
கூசமொன்று மின்றிமாசு
ணம்படுத்து வேலைநீர்,
பேசநின்ற தேவர்வந்து
பாடமுன்கி டந்ததும்,
பாசம்நின்ற நீரில்வாழு
மாமையான கேசவா,
ஏசவன்று நீகிடந்த
வாறுகூறு தேறவே.

772:
அரங்கனே.த ரங்கநீர்க
லங்கவன்று குன்றுசூழ்,
மரங்கடேய மாநிலம்கு
லுங்கமாசு ணம்சுலாய்,
நெருங்கநீ கடைந்தபோது
நின்றசூர ரெஞ்செய்தார்,
குரங்கையா ளுகந்தவெந்தை.
கூறுதேற வேறிதே. (21)

773:
பண்டுமின்று மேலுமாயொர்
பாலனாகி ஞாலமேழ்,
உண்டுமண்டி யாலிலைத்து
யின்றவாதி தேவனே,
வண்டுகிண்டு தண்டுழாய
லங்கலாய்.க லந்தசீர்ப்,
புண்டரீக பாவைசேரு
மார்ப.பூமி நாதனே. (22)

774:
வானிறத்தொர் சீயமாய்வ
ளைந்தவாளெ யிற்றவன்,
ஊன்நிறத்து கிர்த்தலம
ழுத்தினாய்.உ லாயசீர்,
நால்நிறத்த வேதநாவர்
நல்லயோகி னால்வணங்கு,
பால்நிறக்க டல்கிடந்த
பற்பநாப னல்லையே? (23)

775:
கங்கைநீர்ப யந்தபாத
பங்கயத்தெம் மண்ணலே,
அங்கையாழி சங்குதண்டு
வில்லும்வாளு மேந்தினாய்,
சிங்கமாய தேவதேவ.
தேனுலாவு மென்மலர்,
மங்கைமன்னி வாழுமார்ப.
ஆழிமேனி மாயனே. (24)

776:
வரத்தினில்சி ரத்தைமிக்க
வாளெயிற்று மற்றவன்,
உரத்தினில்க ரத்தைவைத்து
கிர்த்தலத்தை யூன்றினாய்,
இரத்தநீயி தென்னபொய்யி
ரந்தமண்வ யிற்றுளே
கரத்தி,உன்க ருத்தையாவர்
காணவல்லர் கண்ணனே. (25)

777:
ஆணினோடு பெண்ணுமாகி
யல்லவோடு நல்லவாய்,
ஊணொடோ சை யூறுமாகி
யொன்றலாத மாயையாய்,
பூணிபேணு மாயனாகிப்
பொய்யினோடு மெய்யுமாய்,
காணிபேணும் மாணியாய்க்க
ரந்துசென்ற கள்வனே. (26)

778:
விண்கடந்த சோதியாய்வி
ளங்குஞான மூர்த்தியாய்,
பண்கடந்த தேசமேவு
பாவநாச நாதனே,
எண்கடந்த யோகினோடி
ரந்துசென்று மாணியாய்,
மண்கடந்த வண்ணம்நின்னை
யார்மதிக்க வல்லரே? (27)

779:
படைத்தபாரி டந்தளந்த
துண்டுமிழ்ந்து பௌவநீர்,
படைத்தடைத்த திற்கிடந்து
முன்கடைந்த பெற்றியோய்,
மிடைத்தமாலி மாலிமான்வி
லங்குகால னூர்புக,
படைக்கலம் விடுத்தபல்ப
டைத்தடக்கை மாயனே. (28)

780:
பரத்திலும்ப ரத்தையாதி
பௌவநீர ணைக்கிடந்து,
உரத்திலும்மொ ருத்திதன்னை
வைத்துகந்த தன்றியும்,
நரத்திலும்பி றத்திநாத
ஞானமூர்த்தி யாயினாய்,
ஒருத்தரும்நி னாதுதன்மை
யின்னதென்ன வல்லரே. (29)

781:
வானகம்மும் மண்ணாகம்மும்
வெற்புமேழ்க டல்களும்,
போனகம்செய் தாலிலைத்து
யின்றபுண்ட ரீகனே,
தேனகஞ்செய் தண்ணறும்ம
லர்த்துழாய்நன் மாலையாய்,
கூனகம்பு கத்தெறித்த
கொற்றவில்லி யல்லையே? (30)
782:
காலநேமி காலனே.
கணக்கிலாத கீர்த்தியாய்,
ஞாலமேழு முண்டுபண்டோ ர்
பாலனாய பண்பனே,
வேலைவேவ வில்வளைத்த
வெல்சினத்த வீர,நின்
பாலராய பத்தர்சித்தம்
முத்திசெய்யும் மூர்த்தியே. (31)

783:
குரக்கினப்ப டைகொடுகு
ரைகடலின் மீதுபோய்
அரக்கரங்க ரங்கவெஞ்ச
ரந்துரந்த வாதிநீ,
இரக்கமண்கொ டுத்தவற்கி
ரக்கமொன்று மின்றியே,
பரக்கவைத்த ளந்துகொண்ட
பற்பபாத னல்லையே? (32)

784:
மின்னிறத்தெ யிற்றரக்கன்
வீழவெஞ்ச ரம்துரந்து,
பின்னவற்க ருள்புரிந்த
ரசளித்த பெற்றியோய்,
நன்னிறத்தொ ரிஞ்சொலேழை
பின்னைகேள்வ. மன்னுசீர்,
பொன்னிறத்த வண்ணானாய
புண்டரீக னல்லையே? (33)

785:
ஆதியாதி யாதிநீயொ
ரண்டமாதி யாதலால்,
சோதியாத சோதிநீஅ
துண்மையில்வி ளங்கினாய்,
வேதமாகி வேள்வியாகி
விண்ணினோடு மண்ணுமாய்
ஆதியாகி யாயனாய
மாயமென்ன மாயமே? (34)

786:
அம்புலாவு மீனுமாகி
யாமையாகி ஆழியார்,
தம்பிரானு மாகிமிக்க
தன்புமிக்க தன்றியும்
கொம்பராவு நுண்மருங்கு
லாயர்மாதர் பிள்ளையாய்
எம்பிரானு மாயவண்ண
மென்கொலோவெம் மீசனே. (35)

787:
ஆடகத்த பூண்முலைய
சோதையாய்ச்சி பிள்ளையாய்
சாடுதைத்தோர் புள்ளதாவி
கள்ளதாய பேய்மகள்
வீடுவைத்த வெய்யகொங்கை
ஐயபால முதுசெய்து,
ஆடகக்கை மாதர்வா
யமுதமுண்ட தென்கொலோ? (36)

788:
காய்த்தநீள்வி ளங்கனியு
திர்த்தெதிர்ந்த பூங்குருந்தம்
சாய்த்து,மாபி ளந்தகைத்த
லத்தகண்ண னென்பரால்
ஆய்ச்சிபாலை யுண்டுமண்ணை
யுண்டுவெண்ணெ யுண்டு,பின்
பேய்ச்சிபாலை யுண்டுபண்டொ
ரேனமாய வாமனா. (37)

789:
கடங்கலந்த வன்கரிம
ருப்பொசித்துஓர் பொய்கைவாய்,
விடங்கலந்த பாம்பின்மேல்ந
டம்பயின்ற நாதனே
குடங்கலந்த கூத்தனாய
கொண்டல்வண்ண. தண்டுழாய்,
வடங்கலந்த மாலைமார்ப.
காலநேமி காலனே. (38)

790:
வெற்பெடுத்து வேலைநீர்க
லக்கினாய்அ தன்றியும்,
வெற்பெடுத்து வேலைநீர்வ
ரம்புகட்டி வேலைசூழ்,
வெற்பெடுத்த இஞ்சிசூழி
லங்கைகட்ட ழித்தநீ
வெற்பெடுத்து மாரிகாத்த
மேகவண்ண னல்லையே. (39)

791:
ஆனைகாத்தொ ரானைகொன்ற
தன்றியாயர் பிள்ளையாய்,
ஆனைமேய்த்தி யானெயுண்டி
அன்றுகுன்ற மொன்றினால்,
ஆனைகாத்து மையரிக்கண்
மாதரார்தி றத்து,முன்
ஆனையன்று சென்றடர்த்த
மாயமென்ன மாயமே? (40)

792:
ஆயனாகி யாயர்மங்கை
வேயதோள்வி ரும்பினாய்,
ஆய.நின்னை யாவர்வல்ல
ரம்பரத்தொ டிம்பராய்,
மாய.மாய மாயைகொல்அ
தன்றிநீவ குத்தலும்,
மாயமாய மாக்கினாயுன்
மாயமுற்று மாயமே. (41)

793:
வேறிசைந்த செக்கர்மேனி
நீரணிந்த புஞ்சடை,
கீறுதிங்கள் வைத்தவன்கை
வைத்தவன்க பால்மிசை,
ஊறுசெங்கு ருதியால்நி
றைத்தகார ணந்தனை
ஏறுசென்ற டர்த்தவீச.
பேசுகூச மின்றியே. (42)

794:
வெஞ்சினத்த வேழவெண்ம
ருப்பொசித்து உருத்தமா,
கஞ்சனைக்க டிந்துமண்ண
ளந்துகொண்ட காலனே,
வஞ்சனத்து வந்தபேய்ச்சி
யாவிபாலுள் வாங்கினாய்,
அஞ்சனத்த வண்ணானாய
ஆதிதேவ னல்லையே? (43)

795:
பாலினீர்மை செம்பொனீர்மை
பாசியின்ப சும்புறம்,
போலுநீர்மை பொற்புடைத்த
டத்துவண்டு விண்டுலாம்,
நீலநீர்மை யென்றிவைநி
றைந்தகாலம் நான்குமாய்,
மாலினீர்மை வையகம்ம
றைத்ததென்ன நீர்மையே? (44)

796:
மண்ணுளாய்கொல் விண்ணுளாய்கொல்
மண்ணுளேம யங்கிநின்று,
எண்ணுமெண்ண கப்படாய்கொல்
என்னமாயை, நின்தமர்
கண்ணுளாய்கொல் சேயைகொல்அ -
னந்தன்மேல்கி டந்தவெம்
புண்ணியா,பு னந்துழாய
லங்கலம்பு னிதனே. (45)

797:
தோடுபெற்ற தண்டுழாய
லங்கலாடு சென்னியாய்,
கோடுபற்றி ஆழியேந்தி
அஞ்சிறைப்புள் ளூர்தியால்,
நாடுபெற்ற நன்மைநண்ண
மில்லையேனும் நாயினேன்,
வீடுபெற்றி றப்பொடும்பி
றப்பறுக்கு மாசொலே. (46)

798:
காரொடொத்த மேனிநங்கள்
கண்ண. விண்ணிண் நாதனே,
நீரிடத்த ராவணைக்கி
டத்தியென்பர் அன்றியும்
ஓரிடத்தை யல்லையெல்லை
யில்லையென்ப ராதலால்,
சேர்விடத்தை நாயினேன்
தெரிந்திறைஞ்சு மாசொலே. (47)

799:
குன்றில்நின்று வானிருந்து
நீள்கடல்கி டந்து,மண்
ஒன்றுசென்ற தொன்றையுண்ட
தொன்றிடந்து பன்றியாய்,
நன்றுசென்ற நாளவற்றுள்
நல்லுயிர்ப டைத்தவர்க்கு,
அன்றுதேவ மைத்தளித்த
ஆதிதேவ னல்லயே? (48)

780:
கொண்டைகொண்ட கோதைமீது
தேனுலாவு கூனிகூன்,
உண்டைகொண்ட ரங்கவோட்டி
யுள்மகிழ்ந்த நாதனூர்,
நண்டையுண்டு நாரைபேர
வாளைபாய நீலமே,
அண்டைகொண்டு கெண்டைமேயு
மந்தணீர ரங்கமே. (2) (49)

781:
வெண்டிரைக்க ருங்கடல்சி
வந்துவேவ முன்னோர்நாள்,
திண்டிறல்சி லைக்கைவாளி
விட்டவீரர் சேருமூர்,
எண்டிசைக்க ணங்களுமி
றைஞ்சியாடு தீர்த்தநீர்,
வண்டிரைத்த சோலைவேலி
மன்னுசீர ரங்கமே. (50)

802:
சரங்களைத்து ரந்துவில்வ
ளைத்துஇலங்கை மன்னவன்,
சிரங்கள்பத்த றுத்துதிர்த்த
செல்வர்மன்னு பொன்னிடம்,
பரந்துபொன்நி ரந்துநுந்தி
வந்தலைக்கும் வார்புனல்,
அரங்கமென்பர் நான்முகத்
தயன்பணிந்த கோயிலே. (51)

803:
பொற்றையுற்ற முற்றல்யானை
போரெதிர்ந்து வந்ததை,
பற்றியுற்று மற்றதன்
மருப்பொசித்த பாகனூர்,
சிற்றெயிற்று முற்றல்மூங்கில்
மூன்றுதண்ட ரொன்றினர்,
அற்றபற்றர் சுற்றிவாழு
மந்தணீர ரங்கமே. (52)

804:
மோடியோடி லச்சையாய
சாபமெய்தி முக்கணான்,
கூடுசேனை மக்களோடு
கொண்டுமண்டி வெஞ்சமத்
தோட,வாண னாயிரம்
கரங்கழித்த வாதிமால்,
பீடுகோயில் கூடுநீர
ரங்கமென்ற பேரதே. (53)

805:
இலைத்தலைச்ச ரந்துரந்தி
லங்கைகட்ட ழித்தவன்,
மலைத்தலைப்பி றந்திழிந்து
வந்துநுந்து சந்தனம்,
குலைத்தலைத்தி றத்தெறிந்த
குங்குமக்கு ழம்பினோடு,
அலைத்தொழுகு காவிரிய
ரங்கமேய வண்ணலே. (54)

806:
மன்னுமாம லர்க்கிழத்தி
வையமங்கை மைந்தனாய்,
பின்னுமாயர் பின்னைதோள்ம
ணம்புணர்ந்த தன்றியும்,
உன்னபாத மென்னசிந்தை
மன்னவைத்து நல்கினாய்,
பொன்னிசூ ழரங்கமேய
புண்டரீக னல்லையே? (55)

807:
இலங்கைமன்ன னைந்தொடைந்து
பைந்தலைநி லத்துக,
கலங்கவன்று சென்றுகொன்று
வென்றிகொண்ட வீரனே,
விலங்குநூலர் வேதநாவர்
நீதியான கேள்வியார்,
வலங்கொளக்கு டந்தையுள்கி
டந்தமாலு மல்லையே? (56)

808:
சங்குதங்கு முன்கைநங்கை
கொங்கைதங்க லுற்றவன்,
அங்கமங்க வன்றுசென்ற
டர்த்தெறிந்த வாழியான்,
கொங்குதங்கு வார்குழல்ம
டந்தைமார்கு டைந்தநீர்,
பொங்குதண்கு டந்தையுள்கி
டந்தபுண்ட ரீகனே. (57)

809:
மரங்கெடந டந்தடர்த்து
மத்தயானை மத்தகத்து,
உரங்கெடப்பு டைத்தொர்கொம்பொ
சித்துகந்த வுத்தமா,
துரங்கம்வாய்பி ளந்துமண்ண
ளந்தபாத, வேதியர்
வரங்கொளக்கு டந்தையுள்கி
டந்தமாலு மல்லையே? (58)

810:
சாலிவேலி தண்வயல்த
டங்கிடங்கு பூம்பொழில்,
கோலமாட நீடுதண்கு
டந்தைமேய கோவலா,
காலநேமி வக்கரன்க
ரன்முரஞ்சி ரம்மவை,
காலனோடு கூடவில்கு
னித்தவிற்கை வீரனே. (59)

811:
செழுங்கொழும்பெ ரும்பனிபொ
ழிந்திட,உ யர்ந்தவேய்
விழுந்துலர்ந்தெ ழுந்துவிண்பு
டைக்கும்வேங்க டத்துள்நின்று
எழுந்திருந்து தேன்பொருந்து
பூம்பொழில்த ழைக்கொழுஞ்
செழுந்தடங்கு டந்தையுள்கி
டந்தமாலு மல்லையே? (2) (60)

812:
நடந்தகால்கள் நொந்தவோ
நடுங்குஞால மேனமாய்,
இடந்தமெய்கு லுங்கவோவி
லங்குமால்வ ரைச்சுரம்
கடந்தகால்ப ரந்தகாவி
ரிக்கரைக்கு டந்தையுள்,
கிடந்தவாறெ ழுந்திருந்து
பேசுவாழி கேசனே. (2) (61)

813:
கரண்டமாடு பொய்கையுள்க
ரும்பனைப்பெ ரும்பழம்,
புரண்டுவீழ வாளைபாய்கு
றுங்குடிநெ டுந்தகாய்,
திரண்டதோளி ரணியஞ்சி
னங்கொளாக மொன்றையும்,
இரண்டுகூறு செய்துகந்த
சிங்கமென்ப துன்னையே (2) (62)

814:
நன்றிருந்து யோகநீதி
நண்ணுவார்கள் சிந்தையுள்,
சென்றிருந்து தீவினைகள்
தீர்த்ததேவ தேவனே,
குன்றிருந்த மாடநீடு
பாடகத்து மூரகத்தும்,
நின்றிருந்து வெஃகணைக்கி
டந்ததென்ன நீர்மையே? (63)

815:
நின்றதெந்தை யூரகத்தி
ருந்ததெந்தை பாடகத்து,
அன்றுவெஃக ணைக்கிடந்த
தென்னிலாத முன்னெலாம்,
அன்றுநான்பி றந்திலேன்பி
றந்தபின்ம றந்திலேன்,
நின்றதும் மிருந்ததும்கி
டந்ததும்மென் நெஞ்சுளே. (64)

816:
நிற்பதும்மொர் வெற்பகத்தி
ருப்பும்விண்கி டப்பதும்,
நற்பெருந்தி ரைக்கடலுள்
நானிலாத முன்னெலாம்,
அற்புதன னந்தசயன
னாதிபூதன் மாதவன்,
நிற்பதும்மி ருப்பதும்கி
டப்பதும்என் நெஞ்சுளே. (65)

817:
இன்றுசாதல் நின்றுசாத
லன்றியாரும் வையகத்து,
ஒன்றிநின்று வாழ்தலின்மை
கண்டுநீச ரென்கொலோ,
அன்றுபார ளந்தபாத
போதையுன்னி வானின்மேல்,
சென்றுசென்று தேவராயி
ருக்கிலாத வண்ணமே? (66)

818:
சண்டமண்ட லத்தினூடு
சென்றுவீடு பெற்றுமேல்
கண்டுவீடி லாதகாத
லின்பம்நாளு மெய்துவீர்,
புண்டரீக பாதபுண்ய
கீர்த்திநுஞ்செ விமடுத்து
உண்டு,_ம்மு றுவினைத்து
யருள்நீங்கி யுய்ம்மினோ. (67)

819:
முத்திறத்து வாணியத்தி
ரண்டிலொன்று நீசர்கள்,
மத்தராய்ம யங்குகின்ற
திட்டதிலி றந்தபோந்து,
எத்திறத்து முய்வதோரு
பாயமில்லை யுய்குறில்,
தொத்துறத்த தண்டுழாய்நன்
மாலைவாழ்த்தி வாழ்மினோ. (68)

820:
காணிலும்மு ருப்பொலார்செ
விக்கினாத கீர்த்தியார்,
பேணிலும்வ ரந்தரமி
டுக்கிலாத தேவரை,
ஆணமென்ற டைந்துவாழும்
ஆதர்காள்.எம் மாதிபால்,
பேணிநும்பி றப்பெனும்பி
ணக்கறுக்க கிற்றிரே. (69)

821:
குந்தமோடு சூலம்வேல்கள்
தோமரங்கள் தண்டுவாள்,
பந்தமான தேவர்கள்ப
ரந்துவான கம்முற,
வந்தவாண னீரைஞ்நூறு
தோள்களைத்து ணித்தநாள்,
அந்தவந்த வாகுலம
மரரேய றிவரே. (70)

822:
வண்டுலாவு கோதைமாதர்
காரணத்தி னால்வெகுண்டு
இண்டவாண னீரைஞ்_று
தோள்களைத்து ணித்தநாள்,
முண்டனீறன் மக்கள்வெப்பு
மோடியங்கி யோடிடக்,
கண்டு,நாணி வாணனுக்கி
ரங்கினானெம் மாயனே. (71)

823:
போதில்மங்கை பூதலக்கி
ழத்திதேவி யன்றியும்,
போதுதங்கு நான்முகன்ம
கனவன்ம கஞ்சொலில்
மாதுதங்கு கூறன்ஏற
தூர்தியென்று வேதநூல்,
ஓதுகின்ற துண்மையல்ல
தில்லைமற்று ரைக்கிலே (72)

824:
மரம்பொதச் ரந்துரந்து
வாலிவீழ முன்னொர்நாள்,
உரம்பொதச்ச ரந்துரந்த
வும்பராளி யெம்பிரான்,
வரம்குறிப்பில் வைத்தவர்க்க
லாதுவான மாளிலும்,
நிரம்புநீடு போகமெத்தி
றத்ததும்யார்க்கு மில்லையே. (73)

825:
அறிந்தறிந்து வாமனன
டியணைவ ணங்கினால்,
செறிந்தெழுந்த ஞானமோடு
செல்வமும்சி றந்திடும்,
மறிந்தெழுந்த தெண்டிரையுள்
மன்னுமாலை வாழ்த்தினால்,
பறிந்தெழுந்து தீவினைகள்
பற்றறுதல் பான்மையே. (74)

826:
ஒன்றிநின்று நல்தவம்செய்,
தூழியூழி தோறெலாம்,
நின்றுநின்ற வன்குணங்க
ளுள்ளியுள்ளம் தூயராய்,
சென்றுசென்று தேவதேவ
ரும்பரும்ப ரும்பராய்,
அன்றியெங்கள் செங்கண்மாலை
யாவர்காண வல்லரே? (75)

827:
புன்புலவ ழியடைத்த
ரக்கிலச்சி னைசெய்து,
நன்புலவ ழிதிறந்து
ஞானநற்சு டர்கொளீஇ,
என்பிலெள்கி நெஞ்சுருகி
யுள்கனிந்தெ ழுந்ததோர்,
அன்பிலன்றி யாழியானை
யாவர்காண வல்லரே? (76)

828:
எட்டுமெட்டு மெட்டுமாயொ
ரேழுமேழு மேழுமாய்,
எட்டுமூன்று மொன்றுமாகி
நின்றவாதி தேவனை,
எட்டினாய பேதமோடி
றைஞ்சிநின்ற வன்பெயர்,
எட்டெழுத்து மோதுவார்கள்
வல்லர்வான மாளவே. (77)

829:
சோர்விலாத காதலால்தொ
டக்கறாம னத்தராய்,
நீரராவ ணைக்கிடந்த
நின்மலன்ந லங்கழல்,
ஆர்வமோடி றைஞ்சிநின்ற
வன்பெயரெட் டெழுத்தும்,
வாரமாக வோதுவார்கள்
வல்லர்வான மாளவே. (78)

830:
பத்தினோடு பத்துமாயொ
ரேழினோடொ ரொன்பதாய்,
பத்தினால்தி சைக்கணின்ற
நாடுபெற்ற நன்மையாய்,
பத்தினாய தோற்றமோடொ
ராற்றல்மிக்க வாதிபால்,
பத்தராம வர்க்கலாது
முத்திமுற்ற லாகுமே? (79)

831:
வாசியாகி நேசமின்றி
வந்தெதிர்ந்த தேனுகன்,
நாசமாகி நாளுலப்ப
நன்மைசேர்ப னங்கனிக்கு,
வீசமேல்நி மிர்ந்ததோளி
லில்லையாக்கி னாய்,கழற்கு
ஆசையாம வர்க்கலால
மரராக லாகுமே? (80)

832:
கடைந்தபாற்க டல்கிடந்து
காலநேமி யைக்கடிந்து,
உடைந்தவாலி தன்பினுக்கு
தவவந்தி ராமனாய்,
மிடைந்தவேழ்ம ரங்களும
டங்கவெய்து,வேங்கடம்
அடைந்தமால பாதமே
யடைந்துநாளு முய்ம்மினோ (81)

833:
எத்திறத்து மொத்துநின்று
யர்ந்துயர்ந்த பெற்றியோய்,
முத்திறத்து மூரிநீர
ராவணைத்து யின்ற,நின்
பத்துறுத்த சிந்தையோடு
நின்றுபாசம் விட்டவர்க்கு,
எத்திறத்து மின்பமிங்கு
மங்குமெங்கு மாகுமே. (82)

834:
மட்டுலாவு தண்டுழாய
லங்கலாய்.பொ லன்கழல்,
விட்டுவீள்வி லாதபோகம்
விண்ணில்நண்ணி யேறினும்,
எட்டினோடி ரண்டெனும்க
யிற்றினால்ம னந்தனைக்
கட்டி,வீடி லாதுவைத்த
காதலின்ப மாகுமே. (83)

835:
பின்பிறக்க வைத்தனன்கொ
லன்றிநின்று தன்கழற்கு,
அன்புறைக்க வைத்தநாள
றிந்தனன்கொ லாழியான்,
தந்திறத்தொ ரன்பிலாவ
றிவிலாத நாயினேன்,
எந்திறத்தி லென்கொலெம்பி
ரான்குறிப்பில் வைத்ததே? (84)

836:
நச்சராவ ணைக்கிடந்த
நாத.பாத போதினில்,
வைத்தசிந்தை வாங்குவித்து
நீங்குவிக்க நீயினம்,
மெய்த்தன்வல்லை யாதலால
றிந்தனன்நின் மாயமே,
உய்த்துநின்ம யக்கினில்ம
யக்கலென்னை மாயனே. (85)

837:
சாடுசாடு பாதனே.ச
லங்கலந்த பொய்கைவாய்,
ஆடராவின் வன்பிடர்ந
டம்பயின்ற நாதனே,
கோடுநீடு கைய.செய்ய
பாதநாளு முன்னினால்,
வீடனாக மெய்செயாத
வண்ணமென்கொல்? கண்ணனே. (86)

838:
நெற்றிபெற்ற கண்ணன்விண்ணி
னாதனோடு போதின்மேல்,
நற்றவத்து நாதனோடு
மற்றுமுள்ள வானவர்,
கற்றபெற்றி யால்வணங்கு
பாத.நாத. வேத,நின்
பற்றலாலொர் பற்றுமற்ற
துற்றிலேனு ரைக்கிலே. (87)

839:
வெள்ளைவேலை வெற்புநாட்டி
வெள்ளெயிற்ற ராவளாய்,
அள்ளலாக்க டைந்தவன்ற
ருவரைக்கொ ராமையாய்,
உள்ளநோய்கள் தீர்மருந்து
வானவர்க்க ளித்த,எம்
வள்ளலாரை யன்றிமற்றொர்,
தெய்வம்நான்ம திப்பனே? (88)

840:
பார்மிகுத்த பாரமுன்னொ
ழிச்சுவான ருச்சனன்,
தேர்மிகுத்து மாயமாக்கி
நின்றுகொன்று வென்றிசேர்,
மாரதர்க்கு வான்கொடுத்து
வையமைவர் பாலதாம்,
சீர்மிகுத்த நின்னலாலொர்
தெய்வம்நான்ம திப்பனே? (89)

841:
குலங்களாய வீரிரண்டி
லொன்றிலும்பி றந்திலேன்,
நலங்களாய நற்கலைகள்
நாவிலும்ந வின்றிலேன்,
புலன்களைந்தும் வென்றிலேன்பொ
றியிலேன்பு னித,நின்
இலங்குபாத மன்றிமற்றொர்
பற்றிலேனெம் மீசனே. (90)

842:
பண்ணுலாவு மென்மொழிப்ப
டைத்தடங்க ணாள்பொருட்டு
எண்ணிலாவ ரக்கரைநெ
ருப்பினால்நெ ருக்கினாய்,
கண்ணலாலொர் கண்ணிலேன்க
லந்தசுற்றம் மற்றிலேன்,
எண்ணிலாத மாய.நின்னை
யென்னுள்நீக்க லென்றுமே. (91)

843:
விடைக்குலங்க ளேழடர்த்து
வென்றிவேற்கண் மாதரார்,
கடிக்கலந்த தோள்புணர்ந்த
காலியாய. வேலைநீர்,
படைத்தடைத்த திற்கிடந்து
முன்கடைந்து நின்றனக்கு,
அடைக்கலம்பு குந்தவென்னை
யஞ்சலென்ன வேண்டுமே. (92)

844:
சுரும்பரங்கு தண்டுழாய்து
தைந்தலர்ந்த பாதமே,
விரும்பிநின்றி றைஞ்சுவேற்கி
ரங்கரங்க வாணனே,
கரும்பிருந்த கட்டியே.க
டல்கிடந்த கண்ணனே,
இரும்பரங்க வெஞ்சரம்து
ரந்தவில்லி ராமனே. (93)

845:
ஊனின்மேய ஆவிநீஉ
றக்கமோடு ணர்ச்சிநீ,
ஆனில்மேய ஐந்தும்நீஅ
வற்றுள்நின்ற தூய்மைநீ,
வானினோடு மண்ணும்நீவ
ளங்கடற்ப யனும்நீ,
யானும்நீய தன்றியெம்பி
ரானும்நீயி ராமனே. (94)

846:
அடக்கரும்பு லன்கள்ஐந்த
டக்கியாசை யாமவை,
தொடக்கறுத்து வந்துநின்தொ
ழிற்கணின்ற வென்னைநீ,
விடக்கருதி மெய்செயாது
மிக்கொராசை யாக்கிலும்,
கடற்கிடந்த நின்னலாலொர்
கண்ணிலேனெம் மண்ணலே. (95)

847:
வரம்பிலாத மாயைமாய.
வையமேழும் மெய்ம்மையே,
வரம்பிலூழி யேத்திலும்வ
ரம்பிலாத கீர்த்தியாய்,
வரம்பிலாத பல்பிறப்ப
றுத்துவந்து நின்கழல்,
பொருந்துமாதி ருந்தநீவ
ரஞ்செய்புண்ட ரீகனே. (96)

848:
வெய்யவாழி சங்குதண்டு
வில்லும்வாளு மேந்துசீர்க்
கைய,செய்ய போதில்மாது
சேருமார்ப நாதனே,
ஐயிலாய வாக்கைநோய
றுத்துவந்து நின்னடைந்து,
உய்வதோரு பாயம்நீயெ
னக்குநல்க வேண்டுமே. (97)

849:
மறம்துறந்து வஞ்சமாற்றி
யைம்புலன்க ளாசையும்
துறந்து,நின்க ணாசையேதொ
டர்ந்துநின்ற நாயினேன்,
பிறந்திறந்து பேரிடர்ச்சு
ழிக்கணின்று நீங்குமா,
மறந்திடாது மற்றெனெக்கு
மாய.நல்க வெண்டுமே. (98)

850:
காட்டினான்செய் வல்வினைப்ப
யன்றனால்ம னந்தனை,
நாட்டிவைத்து நல்லவல்ல
செய்யவெண்ணி னாரென,
கேட்டதன்றி யென்னதாவி
பின்னைகேள்வ. நின்னொடும்,
பூட்டிவைத்த வென்னைநின்னுள்
நீக்கல்பூவை வண்ணனே. (99)

851:
பிறப்பினோடு பேரிடர்ச்
சுழிக்கண்நின்றும் நீங்குமஃது,
இறப்பவைத்த ஞானநீச
ரைக்கரைக்கொ டேற்றுமா,
பெறற்கரிய நின்னபாத
பத்தியான பாசனம்,
பெறற்கரிய மாயனே.
எனக்குநல்க வேண்டுமே. (100)

852:
இரந்துரைப்ப துண்டுவாழி
ஏமநீர்தி றத்தமா,
வரர்தரும்தி ருக்குறிப்பில்
வைத்ததாகில் மன்னுசீர்,
பரந்தசிந்தை யொன்றிநின்று
நின்னபாத பங்கயம்,
நிரந்தரம்நி னைப்பதாக
நீநினைக்க வேண்டுமே. (101)

853:
விள்விலாத காதலால்
விளங்குபாத போதில்வைத்து,
உள்ளுவேன தூனநோயொ
ழிக்குமாதெ ழிக்குநீர்,
பள்ளிமாய பன்றியாய
வென்றிவீர, குன்றினால்
துள்ளுநீர்வ ரம்புசெய்த
தோன்றலொன்று சொல்லிடே. (102)

854:
திருக்கலந்து சேருமார்ப.
தேவதேவ தேவனே,
இருக்கலந்த வேதநீதி
யாகிநின்ற நின்மலா,
கருக்கலந்த காளமேக
மேனியாய நின்பெயர்,
உருக்கலந்தொ ழிவிலாது
ரைக்குமாறு ரைசெயே. (103)

855:
கடுங்கவந்தன் வக்கரன்க
ரன்முரன்சி ரம்மவை,
இடந்துகூறு செய்தபல்ப
டைத்தடக்கை மாயனே,
கிடந்திருந்து நின்றியங்கு
போதும்நின்ன பொற்கழல்,
தொடர்ந்துவிள்வி லாததோர்தொ
டர்ச்சிநல்க வேண்டுமே. (104)

856:
மண்ணையுண்டு மிழ்ந்துபின்னி
ரந்துகொண்ட ளந்து,மண்
கண்ணுளல்ல தில்லையென்று
வென்றகால மாயினாய்,
பண்ணைவென்ற விஞ்சொல்மங்கை
கொங்கைதங்கு பங்கயக்
கண்ண,நின்ன வண்ணமல்ல
தில்லையெண்ணும் வண்ணமே. (105)

857:
கறுத்தெதிர்ந்த காலநேமி
காலனோடு கூட,அன்
றறுத்தவாழி சங்குதண்டு
வில்லும்வாளு மேந்தினாய்,
தொறுக்கலந்த வூனமஃதொ
ழிக்கவன்று குன்றம்முன்,
பொறுத்தநின்பு கழ்க்கலாலொர்
நேசமில்லை நெஞ்சமே. (106)

858:
காய்சினத்த காசிமன்னன்
வக்கரன்ப வுண்டிரன்,
மாசினத்த மாலிமாஞ்சு
மாலிகேசி தேனுகன்,
நாசமுற்று வீழநாள்க
வர்ந்தநின்க ழற்கலால்,
நேசபாச மெத்திறத்தும்
வைத்திடேனெம் மீசனே. (107)

859:
கேடில்சீர்வ ரத்தனாய்க்கெ
டும்வரத்த யனரன்,
நாடினோடு நாட்டமாயி
ரத்தன்நாடு நண்ணிலும்,
வீடதான போகமெய்தி
வீற்றிருந்த போதிலும்,
கூடுமாசை யல்லதொன்று
கொள்வனோகு றிப்பிலே? (108)

860:
சுருக்குவாரை யின்றியேசு
ருங்கினாய்சு ருங்கியும்,
பெருக்குவாரை யின்றியேபெ
ருக்கமெய்து பெற்றியோய்,
செருக்குவார்கள் தீக்குணங்கள்
தீர்த்ததேவ தேவனென்று,
இருக்குவாய்மு னிக்கணங்க
ளேத்தயானு மேத்தினேன். (109)

861:
தூயனாயு மன்றியும்சு
ரும்புலாவு தண்டுழாய்,
மாய.நின்னை நாயினேன்வ
ணங்கிவாழ்த்து மீதெலாம்,
நீயுநின்கு றிப்பினிற்பொ
றுத்துநல்கு வேலைநீர்ப்,
பாயலோடு பத்தர்சித்தம்
மேயவேலை வண்ணனே. (110)

862:
வைதுநின்னை வல்லவாப
ழித்தவர்க்கும் மாறில்போர்
செய்துநின்னை செற்றதீயில்
வெந்தவர்க்கும் வந்துன்னை
எய்தலாகு மென்பராத
லாலெம்மாய. நாயினேன்,
செய்தகுற்றம் நற்றமாக
வேகொள்ஞால நாதனே. (111)

863:
வாள்களாகி நாள்கள்செல்ல
நோய்மைகுன்றி மூப்பெய்தி,
மாளுநாள தாதலால்வ
ணங்கிவாழ்த்தென் நெஞ்சமே,
ஆளதாகு நன்மையென்று
நன்குணர்ந்த தன்றியும்,
மீள்விலாத போகம்நல்க
வேண்டும்மால பாதமே. (112)

864:
சலங்கலந்த செஞ்சடைக்க
றுத்தகண்டன் வெண்டலைப்
புலன்கலங்க வுண்டபாத
கத்தன்வன்து யர்கெட,
அலங்கல்மார்வில் வாசநீர்கொ
டுத்தவன்ன டுத்தசீர்,
நலங்கொள்மாலை நண்ணும்வண்ண
மெண்ணுவாழி நெஞ்சமே. (113)

865:
ஈனமாய வெட்டுநீக்கி
யேதமின்றி மீதுபோய்,
வானமாள வல்லையேல்வ
ணங்கிவாழ்த்தென் நெஞ்சமே,
ஞானமாகி ஞாயிறாகி
ஞாலமுற்று மோரெயிற்று,
ஏனமாயி டந்தமூர்த்தி
யெந்தைபாத மெண்ணியே. (114)

866:
அத்தனாகி யன்னையாகி
யாளுமெம்பி ரானுமாய்,
ஒத்தொவ்வாத பல்பிறப்பொ
ழித்துநம்மை யாட்கொள்வான்,
முத்தனார்மு குந்தனார்பு
குந்துநம்முள் மேவினார்,
எத்தினாலி டர்க்கடல்கி
டத்தியேழை நெஞ்சமே. (2) (115)

867:
மாறுசெய்த வாளரக்கன்
நாளுலப்ப, அன்றிலங்கை
நீறுசெய்து சென்றுகொன்று
வென்றிகொண்ட வீரனார்,
வேறுசெய்து தம்முளென்னை
வைத்திடாமை யால்,நமன்
கூறுசெய்து கொண்டிறந்த
குற்றமெண்ண வல்லனே. (116)

868:
அச்சம்நோயொ டல்லல்பல்பி
றப்புவாய மூப்பிவை,
வைத்தசிந்தை வைத்தவாக்கை
மாற்றிவானி லேற்றுவான்,
அச்சுதன நந்தகீர்த்தி
யாதியந்த மில்லவன்,
நச்சுநாக ணைக்கிடந்த
நாதன்வேத கீதனே. (117)

869:
சொல்லினும்தொ ழிற்கணும்தொ
டக்கறாத வன்பினும்,
அல்லுநன்ப கலினோடு
மானமாலை காலையும்,
அல்லிநாண்ம லர்க்கிழத்தி
நாத.பாத போதினை,
புல்லியுள்ளம் விள்விலாது
பூண்டுமீண்ட தில்லையே. (118)

870:
பொன்னிசூழ ரங்கமேய
பூவைவண்ண. மாய.கேள்,
என்னதாவி யென்னும்வல்வி
னையினுள்கொ ழுந்தெழுந்து,
உன்னபாத மென்னிநின்ற
வொண்சுடர்க்கொ ழுமலர்,
மன்னவந்து பூண்டுவாட்ட
மின்றுயெங்கும் நின்றதே. (2) (119)

871:
இயக்கறாத பல்பிறப்பி
லென்னைமாற்றி யின்றுவந்து,
உயக்கொள்மேக வண்ணன்நண்ணி
யென்னிலாய தன்னுளே,
மயக்கினான்றன் மன்னுசோதி
யாதலாலென் னாவிதான்,
இயக்கெலாம றுத்தறாத
வின்பவீடு பெற்றதே. (2) (120)

திருமழிசையாழ்வார் திருவடிகளே சரணம்




திருமாலை தனியன்

திருவங்கப்பெருமாளரையர் அருளிச்செய்தது

மற்றொன்றும் வேண்டா மனமே. மதிளரங்கர்,
கற்றினம் மேய்த்த கழலிணைக்கீழ்,- உற்ற
திருமாலை பாடும்சீர்த் தொண்டரடிப்பொடியெம்
பெருமானை, எப்பொழுதும் பேசு.

ஸ்ரீ தொண்டரடிப்பொடியாழ்வார் அருளிச்செய்த திருமாலை


872:
காவலிற் புலனை வைத்துக்
கலிதனைக் கடக்கப் பாய்ந்து,
நாவலிட் டுழிதரு கின்றோம்
நமன்தமர் தலைகள் மீதே,
மூவுல குண்டு மிழ்ந்த
முதல்வ.நின் நாமம் கற்ற,
ஆவலிப் புடைமை கண்டாய்
அரங்கமா நகரு ளானே. (2) (1)

873:
பச்சைமா மலைபோல் மேனி
பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா. அமர ரேறே.
ஆயர்தம் கொழுந்தே. என்னும்,
இச்சுவை தவிர யான்போய்
இந்திர லோக மாளும்,
அச்சுவை பெறினும் வேண்டேன்
அரங்கமா நகரு ளானே. (2) (2)

874:
வேதநூல் பிராயம் நூறு
மனிசர்தாம் புகுவ ரேலும்,
பாதியு முறங்கிப் போகும்
நின்றதில் பதினை யாண்டு,
பேதைபா லகன தாகும்
பிணிபசி மூப்புத் துன்பம்,
ஆதலால் பிறவி வேண்டேன்
அரங்கமா நகரு ளானே. (3)

875:
மொய்த்தவல் வினையுள் நின்று
மூன்றெழுத் துடைய பேரால்,
கத்திர பந்து மன்றே
பராங்கதி கண்டு கொண்டான்,
இத்தனை யடிய ரானார்க்
கிரங்கும்நம் மரங்க னாய
பித்தனைப் பெற்று மந்தோ.
பிறவியுள் பிணங்கு மாறே. (4)

876:
பெண்டிரால் சுகங்க ளுய்ப்பான்
பெரியதோ ரிடும்பை பூண்டு
உண்டிராக் கிடக்கும் போது
உடலுக்கே கரைந்து நைந்து,
தண்டுழாய் மாலை மார்பன்
தமர்களாய்ப் பாடி யாடி,
தொண்டுபூண் டமுத முண்ணாத்
தொழும்பர்சோ றுகக்கு மாறே. (5)

877:
மறம்சுவர் மதிளெ டுத்து
மறுமைக்கே வெறுமை பூண்டு,
புறம்சுவ ரோட்டை மாடம்
புரளும்போ தறிய மாட்டீர்,
அறம்சுவ ராகி நின்ற
அரங்கனார்க் காட்செய் யாதே,
புறம்சுவர் கோலஞ் செய்து
புள்கவ்வக் கிடக்கின் றீரே. (6)

878:
புலையற மாகி நின்ற
புத்தொடு சமண மெல்லாம்,
கலையறக் கற்ற மாந்தர்
காண்பரோ கேட்ப ரோதாம்,
தலையறுப் புண்டும் சாவேன்
சத்தியங் காண்மின் ஐயா,
சிலையினா லிலங்கை செற்ற
தேவனே தேவ னாவான். (7)

879:
வெறுப்பொடு சமணர் முண்டர்
விதியில்சாக் கியர்கள், நின்பால்
பொறுப்பரி யனகள் பேசில்
போவதே நோய தாகி
குறிப்பெனக் கடையு மாகில்
கூடுமேல் தலையை ஆங்கே,
அறுப்பதே கருமங் கண்டாய்
அரங்கமா நகரு ளானே. (8)

880:
மற்றுமோர் தெய்வ முண்டே
மதியிலா மானி டங்காள்,
உற்றபோ தன்றி நீங்கள்
ஒருவனென் றுணர மாட்டீர்,
அற்றமே லொன்ற றீயீர்
அவனல்லால் தெய்வ மில்லை,
கற்றினம் மேய்த்த வெந்தை
கழலிணை பணிமி னீரே. (9)

881:
நாட்டினான் தெய்வ மெங்கும்
நல்லதோ ரருள்தன் னாலே,
காட்டினான் திருவ ரங்கம்
உய்பவர்க் குய்யும் வண்ணம்,
கேட்டிரே நம்பி மீர்காள்.
கெருடவா கனனும் நிற்க,
சேட்டைதன் மடிய கத்துச்
செல்வம்பார்த் திருக்கின் றீரே. (10)
882:
ஒருவில்லா லோங்கு முந்நீர்
அனைத்துல கங்க ளுய்ய,
செருவிலே யரக்கர் கோனைச்
செற்றநம் சேவ கனார்,
மருவிய பெரிய கோயில்
மதிள்திரு வரங்க மென்னா,
கருவிலே திருவி லாதீர்.
காலத்தைக் கழிக்கின் றீரே. (11)

883:
நமனும்முற் கலனும் பேச
நரகில்நின் றார்கள் கேட்க,
நரகமே சுவர்க்க மாகும்
நாமங்க ளுடைய நம்பி,
அவனதூ ரரங்க மென்னாது
அயர்த்துவீழ்ந் தளிய மாந்தர்,
கவலையுள் படுகின் றாரென்
றதனுக்கே கவல்கின் றேனே. (12)

884:
எறியுநீர் வெறிகொள் வேலை
மாநிலத் துயிர்க ளெல்லாம்,
வெறிகொள்பூந் துளவ மாலை
விண்ணவர் கோனை யேத்த,
அறிவிலா மனித ரெல்லாம்
அரங்கமென் றழைப்ப ராகில்,
பொறியில்வாழ் நரக மெல்லாம்
புல்லெழுந் தொழியு மன்றே? (13)

885:
வண்டின முரலும் சோலை
மயிலினம் ஆலும் சோலை,
கொண்டல்மீ தணவும் சோலை
குயிலினம் கூவும் சோலை,
அண்டர்கோ னமரும் சோலை
அணிதிரு வரங்க மென்னா,
மிண்டர்பாய்ந் துண்ணும் சோற்றை
விலக்கிநாய்க் கிடுமி னீரே. (2) (14)

886:
மெய்யர்க்கே மெய்ய னாகும்
விதியிலா வென்னைப் போல,
பொய்யர்க்கே பொய்ய னாகும்
புட்கொடி யுடைய கோமான்,
உய்யப்போ முணர்வி னார்கட்
கொருவனென் றுணர்ந்த பின்னை,
ஐயப்பா டறுத்துத் தோன்றும்
அழகனூ ரரங்க மன்றே? (15)

887:
சூதனாய்க் கள்வ னாகித்
தூர்த்தரோ டிசைந்த காலம்,
மாதரார் கயற்க ணென்னும்
வலையுள்பட் டழுந்து வேனை,
போதரே யென்று சொல்லிப்
புந்தியில் புகுந்து, தன்பால்
ஆதரம் பெருக வைத்த
அழகனூ ரரங்க மன்றே? (16)

888:
விரும்பிநின் றேத்த மாட்டேன்
விதியிலேன் மதியொன் றில்லை,
இரும்புபோல் வலிய நெஞ்சம்
இறையிறை யுருகும் வண்ணம்
சுரும்பமர் சோலை சூழ்ந்த
அரங்கமா கோயில் கொண்ட,
கரும்பினைக் கண்டு கொண்டேன்
கண்ணிணை களிக்கு மாறே. (17)

889:
இனிதிரைத் திவலை மோத
எறியும்தண் பரவை மீதே,
தனிகிடந் தரசு செய்யும்
தாமரைக் கண்ண னெம்மான்,
கனியிருந் தனைய செவ்வாய்க்
கண்ணணைக் கண்ட கண்கள்,
பனியரும் புதிரு மாலோ
எஞ்செய்கேன் பாவி யேனே. (18)

890:
குடதிசை முடியை வைத்துக்
குணதிசை பாதம் நீட்டி,
வடதிசை பின்பு காட்டித்
தென்திசை யிலங்கை நோக்கி,
கடல்நிறக் கடவு ளெந்தை
அரவணைத் துயிலு மாகண்டு,
உடலெனக் குருகு மாலோ
எஞ்செய்கே னுலகத் தீரே. (2) (19)

891:
பாயுநீ ரரங்கந் தன்னுள்
பாம்பணைப் பள்ளி கொண்ட,
மாயனார் திருநன் மார்பும்
மரகத வுருவும் தோளும்,
தூய தாமரைக் கண்களும்
துவரிதழ் பவள வாயும்,
ஆயசீர் முடியும் தேசும்
அடியரோர்க் ககல லாமே? (20)
892:
பணிவினால் மனம தொன்றிப்
பவளவா யரங்க னார்க்கு,
துணிவினால் வாழ மாட்டாத்
தொல்லைநெஞ் சே.நீ சொல்லாய்,
அணியனார் செம்பொ னாய
அருவரை யனைய கோயில்,
மணியனார் கிடந்த வாற்றை
மனத்தினால் நினைக்க லாமே? (21)

893:
பேசிற்றே பேச லல்லால்
பெருமையொன் றுணர லாகாது,
ஆசற்றார் தங்கட் கல்லால்
அறியலா வானு மல்லன்,
மாசற்றார் மனத்து ளானை
வணங்கிநா மிருப்ப தல்லால்,
பேசத்தா னாவ துண்டோ ?
பேதைநெஞ் சே.நீ சொல்லாய். (22)

894:
கங்கயிற் புனித மாய
காவிரி நடுவு பாட்டு,
பொங்குநீர் பரந்து பாயும்
பூம்பொழி லரங்கந் தன்னுள்,
எங்கள்மா லிறைவ னீசன்
கிடந்ததோர் கிடக்கை கண்டும்,
எங்ஙனம் மறந்து வாழ்கேன்
ஏழையே னேழை யேனே. (23)

895:
வெள்ளநீர் பரந்து பாயும்
விரிபொழி லரங்கந் தன்னுள்,
கள்ளனார் கிடந்த வாறும்
கமலநன் முகமும் கண்டு
உள்ளமே. வலியை போலும்
ஒருவனென் றுணர மாட்டாய்,
கள்ளமே காதல் செய்துன்
கள்ளத்தே கழிக்கின் றாயே. (24)

896:
குளித்துமூன் றனலை யோம்பும்
குறிகொளந் தணமை தன்னை,
ஒளித்திட்டே னென்க ணில்லை
நின்கணும் பத்த னல்லேன்,
களிப்பதென் கொண்டு நம்பீ.
கடல்வண்ணா. கதறு கின்றேன்,
அளித்தெனக் கருள்செய் கண்டாய்
அரங்கமா நகரு ளானே. (25)

897:
போதெல்லாம் போது கொண்டுன்
பொன்னடி புனைய மாட்டேன்,
தீதிலா மொழிகள் கொண்டுன்
திருக்குணம் செப்ப மாட்டேன்,
காதலால் நெஞ்ச மன்பு
கலந்திலே னதுதன் னாலே,
ஏதிலே னரங்கர்க்கு எல்லே.
எஞ்செய்வான் தோன்றி னேனே. (26)

898:
குரங்குகள் மலையை தூக்கக்
குளித்துத்தாம் புரண்டிட் டோ டி,
தரங்கநீ ரடைக்க லுற்ற
சலமிலா அணிலம் போலேன்,
மரங்கள்போல் வலிய நெஞ்சம்
வஞ்சனேன் நெஞ்சு தன்னால்,
அரங்கனார்க் காட்செய் யாதே
அளியத்தே னயர்க்கின் றேனே. (27)

899:
உம்பரா லறிய லாகா
ஒளியுளார் ஆனைக் காகி,
செம்புலா லுண்டு வாழும்
முதலைமேல் சீறி வந்தார்,
நம்பர மாய துண்டே?
நாய்களோம் சிறுமை யோரா,
எம்பிராற் காட்செய் யாதே
எஞ்செய்வான் தோன்றி னேனே. (28)

900:
ஊரிலேன் காணி யில்லை
உறவுமற் றொருவ ரில்லை,
பாரில்நின் பாத மூலம்
பற்றிலேன் பரம மூர்த்தி,
காரொளி வண்ண னே.(என்)
கண்ணனே. கதறு கின்றேன்,
ஆருளர்க் களைக் ணம்மா.
அரங்கமா நகரு ளானே. (29)

901:
மனத்திலோர் தூய்மை யில்லை
வாயிலோ ரிஞ்சொ லில்லை,
சினத்தினால் செற்றம் நோக்கித்
தீவிளி விளிவன் வாளா,
புனத்துழாய் மாலை யானே.
பொன்னிசூழ் திருவ ரங்கா,
எனக்கினிக் கதியென் சொல்லாய்
என்னையா ளுடைய கோவே. (30)
902:
தவத்துளார் தம்மி லல்லேன்
தனம்படத் தாரி லல்லேன்,
உவர்த்தநீர் போல வென்றன்
உற்றவர்க் கொன்று மல்லேன்,
துவர்த்தசெவ் வாயி னார்க்கே
துவக்கறத் துரிச னானேன்,
அவத்தமே பிறவி தந்தாய்
அரங்கமா நகரு ளானே. (31)

903:
ஆர்த்துவண் டலம்பும் சோலை
அணிதிரு வரங்கந் தன்னுள்,
கார்த்திர ளனைய மேனிக்
கண்ணனே. உன்னைக் காணும்,
மார்க்கமொ றறிய மாட்டா
மனிசரில் துரிச னாய,
மூர்க்கனேன் வந்து நின்றேன்,
மூர்க்கனேன் மூர்க்க னேனே. (32)

904:
மெய்யெல்லாம் போக விட்டு
விரிகுழ லாரில் பட்டு,
பொய்யெலாம் பொதிந்து கொண்ட
போட்கனேன் வந்து நின்றேன்,
ஐயனே. அரங்க னே.உன்
அருளென்னு மாசை தன்னால்,
பொய்யனேன் வந்து நின்றேன்
பொய்யனேன் பொய்ய னேனே. (33)

905:
உள்ளத்தே யுறையும் மாலை
உள்ளுவா னுணர்வொன் றில்லா,
கள்ளத்தேன் நானும் தொண்டாய்த்
தொண்டுக்கே கோலம் பூண்டேன்,
உள்ளுவா ருள்ளிற் றெல்லாம்
உடனிருந் தறிதி யென்று,
வெள்கிப்போ யென்னுள் ளேநான்
விலவறச் சிரித்திட் டேனே. (34)

906:
தாவியன் றுலக மெல்லாம்
தலைவிளாக் கொண்ட எந்தாய்,
சேவியே னுன்னை யல்லால்
சிக்கெனச் செங்கண் மாலே,
ஆவியே.அமுதே என்றன்
ஆருயி ரனைய எந்தாய்,
பாவியே னுன்னை யல்லால்
பாவியேன் பாவி யேனே. (35)

907:
மழைக்கன்று வரைமு னேந்தும்
மைந்தனே.மதுர வாறே,
உழைக்கன்றே போல நோக்கம்
உடையவர் வலையுள் பட்டு,
உழைக்கின்றேற் கென்னை நோக்கா
தொழிவதே,உன்னை யன்றே
அழைக்கின்றேன் ஆதி மூர்த்தி.
அரங்கமா நகரு ளானே. (36)

908:
தெளிவிலாக் கலங்கல் நீர்சூழ்
திருவரங்கங் கத்துள் ளோங்கும்,
ஒளியுளார் தாமே யன்றே
தந்தையும் தாயு மாவார்,
எளியதோ ரருளு மன்றே
எந்திறத் தெம்பி ரானார்,
அளியன்நம் பையல் என்னார்
அம்மவோ கொடிய வாறே. (37)

909:
மேம்பொருள் போக விட்டு
மெய்ம்மையை மிகவு ணர்ந்து,
ஆம்பரி சறிந்து கொண்டு
ஐம்புல னகத்த டக்கி,
காம்புறத் தலைசி ரைத்துன்
கடைத்தலை யிருந்து,வாழும்
சோம்பரை உகத்தி போலும்
சூழ்புனல் அரங்கத் தானே. (2) (38)

910:
அடிமையில் குடிமை யில்லா
அயல்சதுப் பேதி மாரில்,
குடிமையில் கடைமை பட்ட
குக்கரில் பிறப்ப ரேலும்,
முடியினில் துளபம் வைத்தாய்.
மொய்கழற் கன்பு செய்யும்,
அடியரை யுகத்தி போலும்
அரங்கமா நகரு ளானே. (39)

911:
திருமறு மார்வ.நின்னைச்
சிந்தையுள் திகழ வைத்து,
மருவிய மனத்த ராகில்
மாநிலத் துயிர்க ளெல்லாம்,
வெருவரக் கொன்று சுட்டிட்
டீட்டிய வினைய ரேலும்,
அருவினைப் பயன துய்யார்
அரங்கமா நகரு ளானே. (40)
912:
வானுளா ரறிய லாகா
வானவா. என்ப ராகில்,
தேனுலாந் துளப மாலைச்
சென்னியாய். என்ப ராகில்,
ஊனமா யினகள் செய்யும்
ஊனகா ரகர்க ளேலும்,
போனகம் செய்த சேடம்
தருவரேல் புனித மன்றே? (41)

913:
பழுதிலா வொழுக லாற்றுப்
பலசதுப் பேதி மார்கள்,
இழிகுலத் தவர்க ளேலும்
எம்மடி யார்க ளாகில்,
தொழுமினீர் கொடுமின் கொள்மின்.
என்றுநின் னோடு மொக்க,
வழிபட வருளி னாய்போன்ம்
மதிள்திரு வரங்கத் தானே. (42)

913:
அமரவோ ரங்க மாறும்
வேதமோர் நான்கு மோதி,
தமர்களில் தலைவ ராய
சாதியந் தணர்க ளேலும்,
நுமர்களைப் பழிப்ப ராகில்
நொடிப்பதோ ரளவில், ஆங்கே
அவர்கள்தாம் புலையர் போலும்
அரங்கமா நகரு ளானே. (43)

915:
பெண்ணுலாம் சடையி னானும்
பிரமனு முன்னைக் காண்பான்,
எண்ணிலா வூழி யூழி
தவஞ்செய்தார் வெள்கி நிற்ப,
விண்ணுளார் வியப்ப வந்து
ஆனைக்கன் றருளை யீந்த
கண்ணறா, உன்னை யென்னோ
களைகணாக் கருது மாறே. (2) (44)

916:
வளவெழும் தவள மாட
மதுரைமா நகரந் தன்னுள்,
கவளமால் யானை கொன்ற
கண்ணனை அரங்க மாலை,
துவளத்தொண் டாய தொல்சீர்த்
தொண்டர டிப்பொ டிசொல்,
இளையபுன் கவிதை யேலும்
எம்பிறார் கினிய வாறே. (2) (45)

தொண்டரடிப்பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம்



திருப்பள்ளியெழுச்சி

திருமலையாண்டான் அருளியது

தமேவமத்வா பரவாஸுதேவம்
ரங்கேசயம் ராஜவதர்கணீயம்-
ப்ராபோதகீம் யோக்ருத ஸூக்திமாலாம்
பக்தாங்க்ரி ரேணும் பகவந்த மீடே.

திருவரங்கப்பெருமாளரையர் அருளியது

மண்டங் குடியென்பர் மாமரையோர், மன்னியசீர்த்
தொண்ட, ரடிப்பொடி தொன்னகரம், - வண்டு
திணர்த்தவயல் தென்னரங்கத் தம்மானைப், பள்ளி
உணர்த்தும் பிரானுதித்த வூர்.

ஸ்ரீ தொண்டரடிப்பொடி ஆழ்வார் அருளிச்செய்த திருப்பள்ளியெழுச்சி

917:
கதிரவன் குணதிசைச் சிகரம்வந் தணைந்தான்
கனவிரு ளகன்றது காலையம் பொழுதாய்,
மதுவிரிந் தொழுகின மாமல ரெல்லாம்
வானவ ரரசர்கள் வந்துவந் தீண்டி,
எதிர்திசை நிறைந்தன ரிவரொடும் புகுந்த
இருங்களிற் றீட்டமும் பிடியொடு முரசும்,
அதிர்தலி லலைகடல் போன்றுள தெங்கும்
அரங்கத்தம் மா.பள்ளி யெழுந்தரு ளாயே. (2) (1)

918:
கொழுங்கொடி முல்லையின் கொழுமல ரணவிக்
கூர்ந்தது குணதிசை மாருத மிதுவோ,
எழுந்தன மலரணைப் பள்ளிகொள் ளன்னம்
ஈன்பனி நனைந்தத மிருஞ்சிற குதறி,
விழுங்கிய முதலையின் பிலம்புரை பேழ்வாய்
வெள்ளெயி றுறவதன் விடத்தனுக் கனுங்கி,
அழுங்கிய ஆனையி னருந்துயர் கெடுத்த
அரங்கத்தம் மா.பள்ளி யெழுந்தரு ளாயே. (2)

919:
சுடரொளி பரந்தன சூழ்திசை யெல்லாம்
துன்னிய தாரகை மின்னொளி சுருங்கி,
படரொளி பசுத்தனன் பனிமதி யிவனோ
பாயிறு ளகன்றது பைம்பொழில் கமுகின்,
மடலிடைக் கீறிவண் பாளைகள் நாற
வைகறை கூர்ந்தது மாருத மிதுவோ,
அடலொளி திகழ்தரு திகிரியந் தடக்கை
அரங்கத்தம் மா.பள்ளி யெழுந்தரு ளாயே. (3)

920:
மேட்டிள மேதிகள் தளைவிடு மாயர்கள்
வேய்ங்குழ லோசையும் விடைமணிக் குரலும்,
ஈட்டிய இசைதிசை பரந்தன வயலுள்
இருந்தின சுரும்பினம் இலங்கையர் குலத்தை,
வாட்டிய வரிசிலை வானவ ரேறே.
மாமுனி வேள்வியைக் காத்து,அவ பிரதம்
ஆட்டிய அடுதிறல் அயோத்தியெம் மரசே.
அரங்கத்தம் மா.பள்ளி யெழுந்தரு ளாயே. (4)

921:
புலம்பின புட்களும் பூம்பொழில் களின்வாய்
போயிற்றுக் கங்குல் புகுந்தது புலரி,
கலந்தது குணதிசை கனைகட லரவம்
களிவண்டு மிழற்றிய கலம்பகம் புனைந்த,
அலங்கலந் தொடையல்கொண் டடியிணை பணிவான்
அமரர்கள் புகுந்தன ராதலி லம்மா
இலங்கையர் கோன்வழி பாடுசெய் கோயில்
எம்பெரு மான்.பள்ளி யெழுந்தரு ளாயே. (5)

922:
இரவியர் மணிநெடுந் தேரொடு மிவரோ?
இறையவர் பதினொரு விடையரு மிவரோ?
மருவிய மயிலின னறுமுக னிவனோ?
மருதரும் வசுக்களும் வந்துவந் தீண்டி,
புரவியோ டாடலும் பாடலும் தேரும்
குமரதண் டம்புகுந் தீண்டிய வெள்ளம்,
அருவரை யனையநின் கோயில்முன் னிவரோ?
அரங்கத்தம் மா.பள்ளி யெழுந்தரு ளாயே. (6)

923:
அந்தரத் தமரர்கள் கூட்டங்க ளிவையோ?
அருந்தவ முனிவரும் மருதரு மிவரோ?
இந்திர னானையும் தானும்வந் திவனோ?
எம்பெரு மானுன் கோயிலின் வாசல்,
சுந்தரர் நெருக்கவிச் சாதரர் நூக்க
இயக்கரும் மயங்கினர் திருவடி தொழுவான்,
அந்தரம் பாரிட மில்லைமற் றிதுவோ?
அரங்கத்தம் மா.பள்ளி யெழுந்தரு ளாயே. (7)

924:
வம்பவிழ் வானவர் வாயுறை வழங்க
மாநிதி கபிலையொண் கண்ணாடி முதலா,
எம்பெரு மான்படி மக்கலம் காண்டற்கு
ஏற்பன வாயின கொண்டுநன் முனிவர்,
தும்புரு நாரதர் புகுந்தன ரிவரோ?
தோன்றின னிரவியும் துலங்கொளி பரப்பி,
அம்பர தலத்தில்நின் றகல்கின்ற திருள்போய்
அரங்கத்தம் மா.பள்ளி யெழுந்தரு ளாயே. (8)

925:
ஏதமில் தண்ணுமை யெக்கம்மத் தளியே
யாழ்குழல் முழவமோ டிசைதிசை கெழுமி,
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்
கந்தரு வரவர் கங்குலு ளெல்லாம்,
மாதவர் வானவர் சாரண ரியக்கர்
சித்தரும் மயங்கினர் திருவடி தொழுவான்,
ஆதலி லவர்க்குநா ளோலக்க மருள
அரங்கத்தம் மா.பள்ளி யெழுந்தரு ளாயே. (2) (9)

926:
கடிமலர்க் கமலங்கள் மலர்ந்தன இவையோ?
கதிரவன் கனைகடல் முளைத்தனன் இவனோ?
துடியிடை யார்சுரி குழல்பிழிந் துதறித்
துகிலுடுத் தேறினர் சூழ்புன லரங்கா,
தொடையொத்த துளவமும் கூடையும் பொலிந்து
தோன்றிய தோள்தொண்ட ரடிப்பொடியென்னும்
அடியனை, அளியனென் றருளியுன் னடியார்க்-
காட்படுத் தாய்.பள்ளி எழுந்தரு ளாயே. (2) (10)

தொண்டரடிப்பொடியாழ்வார் திருவடிகளே சரணம்



அமலனாதிபிரான் தனியன்கள்
பெரிய நம்பிகள் அருளியது

ஆபாத சூடமநுபூய ஹரிம்ஸயாநம்
மத்த்யேகவேர துஹிதுர்முதிதாந்தராத்மா
அத்ரஷ்ட்ருதாம் நயநயோர் விஷயாந்தராணாம்
யோநிச்சிகாயமநவைமுநிவாஹநந்தம்.

திருமலை நம்பிகள் அருளியது

காட்டவே கண்ட பாத
கமலம்நல் லாடை யுந்தி,
தேட்டரு முதர பந்தம்
திருமார்பு கண்டம் செவ்வாய்,
வாட்டமில் கண்கள் மேனி
முனியேறித் தனிபு குந்து,
பாட்டினால் கண்டு வாழும்
பாணர்தாள் பரவி னோமே.

திருப்பாணாழ்வார் அருளிச் செய்த அமலனாதிபிரான்


927:
அமல னாதிபிரா னடியார்க்
கென்னை யாட்படுத்த
விமலன், விண்ணவர் கோன்விரை
யார்பொழில் வேங்கடவன்,
நிமலன் நின்மலன் நீதி வானவன்,
நீள்மதி ளரங்கத் தம்மான், திருக்
கமல பாதம்வந் தென்கண்ணி
னுள்ளன வொக்கின்றதே. (2) (1)

928:
உவந்த வுள்ளத்தனா யுலகமளந் தண்டமுற,
நிவந்த நீள்முடியன் அன்று நேர்ந்த நிசாசரரை,
கவர்ந்த வெங்கணைக் காகுத்தன் கடியார்பொழில்
அரங்கத் தம்மான், அரைச்
சிவந்த ஆடையின் மேல்சென்ற
தாமென் சிந்தனையே. (2)

929:
மந்தி பாய்வட வேங்கட மாமலை, வானவர்கள்,
சந்தி செய்ய நின்றா னரங்கத் தரவி னணையான்,
அந்தி போல்நிறத் தாடையு மதன்மேல்
அயனைப் படைத்த தோரெழில்
உந்தி மேலதன் றோஅடி
யேனுள்ளத் தின்னுயிரே. (2) (3)

930:
சதுரமா மதிள்சூழ் ழிலங்கைக்
கிறைவன் தலைபத்து
உதிர வோட்டி,ஓர் வெங்கணை
யுய்த்தவ னோத வண்ணன்
மதுரமா வண்டு பாட மாமயி லாடரங்கத்
தம்மான்,திருவயிற்
றுதரபந் தனமென்
னுள்ளத்துள்நின் றுலாகின்றதே. (4)

931:
பாரமாய பழவினை பற்றறுத்து, என்னைத்தன்
வாரமாக்கி வைத்தான் வைத்ததன்றி
யென்னுள் புகுந்தான்,
கோர மாதவம் செய்தனன்கொ லறியே
னரங்கத் தம்மான்,திரு
வார மார்பதன் றோஅடி
யேனை யாட்கோண்டதே. (5)

932:
துண்ட வெண்பிறை யான்துயர்
தீர்த்தவன், அஞ்சிறைய
வண்டுவாழ் பொழில்சூ ழரங்கநகர் மேய வப்பன்
அண்ட ரண்டபகி ரண்டத்தொரு மாநிலம்
எழுமால்வரை, முற்றும்
உண்ட கண்டங்கண் டீரடி
யேனை யுய்யக்கொண்டதே. (6)

933:
கையி னார்சுரி சங்கன லாழியர், நீள்வரைபோல்
மெய்யனார் துளப விரையார் கமழ்நீள் முடியெம்
ஐயனார், அணியரங்கனா ரரவி
னணைமிசை மேய மாயனார்,
செய்யவா யையோ. என்னைச்
சிந்தை கவர்ந்ததுவே. (7)

934:
பரிய னாகி வந்த அவுண னுடல்கீண்ட, அமரர்க்கு
அரிய ஆதிபிரா னரங்கத் தமலன் முகத்து,
கரிய வாகிப் புடைபரந்து மிளிர்ந்து
செவ்வரி யோடி, நீண்டவப்
பெரிய வாய கண்க
ளென்னைப் பேதைமை செய்தனவே. (8)

935:
ஆலமா மரத்தி னிலைமே லொருபாலகனாய்,
ஞால மேழு முண்டா னரங்கத் தரவி னணையான்,
கோல மாமணி யாரமும் முத்துத் தாமமும்
முடிவில்ல தோரெழில்
நீல மேனி யையோ.
நிறை கொண்டதென் நெஞ்சினையே. (2) (9)

936:
கொண்டல் வண்ணனைக்
கோவல னாய்வெண்ணெய்
உண்ட வாயன்என்னுள்ளம் கவர்ந்தானை,
அண்டர் கோனணி யரங்கன்என் னமுதினைக்
கண்ட கண்கள்,மற் றொன்றினைக் காணாவே. (2) (10)

திருப்பாணாழ்வார் திருவடிகளே சரணம்




கண்ணி நிண்சிறுத்தாம்புத் தனியன்கள்

ஸ்ரீமந் நாதமுனிகள் அருளிச்செய்தவை

அவிதிதவிஷயாந்தரச்சடாரே
ருபநிஷதாமுபகாநமாத்ரபோக:
அபிசகுணவஸாத் ததேகஸேஷீ
மதுரகவிர் ஹ்ருதயே மமாவிரஸ்து.

இருகவிற்ப நேரிசை வெண்பா

வேறொன்றும் நானறியேன் வேதம் தமிழ்செய்த,
மாறன் சடகோபன் வண்குருகூர்- ஏறு,எங்கள்
வாழ்வாமென் றேத்தும் மதுரகவி யார்எம்மை
ஆள்வார் அவரே யரண்.

ஸ்ரீ மதுரகவியாழ்வார் அருளிச்செய்த
கண்ணி நுண்சிறுத்தாம்பு


937:
கண்ணி நுண்சிறுத் தாம்பினால் கட்டுண்ணப்
பண்ணி யபெரு மாயன்,என் னப்பனில்,
நண்ணித் தென்குரு கூர்நம்பி யென்றக்கால்,
அண்ணிக் கும்அமு தூறுமென் நாவுக்கே. (2) (1)

938:
நாவி னால்நவிற் றின்ப மெய்தினேன்,
மேவி னேனவன் பொன்னடி மெய்ம்மையே,
தேவு மற்றறி யேன்குரு கூர்நம்பி,
பாவி னின்னிசை பாடித் திரிவனே. (2)

939:
திரிதந் தாகிலும் தேவ பிரானுடை,
கரிய கோலத் திருவுருக் காண்பன்நான்,
பெரிய வண்குரு கூர்நகர் நம்பிக்காள்
உரிய னாய்,அடி யேன்பெற்ற நன்மையே. (3)

940:
நன்மை யால்மிக்க நான்மறை யாளர்கள்,
புன்மை யாகக் கருதுவ ராதலின்,
அன்னை யாயத்த னாயென்னை யாண்டிடும்
தன்மை யான்,சட கோபனென் நம்பியே. (4)

941:
நம்பி னேன்பிறர் நன்பொருள் தன்னையும்,
நம்பி னேன்மட வாரையும் முன்னெல்லாம்,
செம்பொன் மாடத் திருக்குரு கூர்நம்பிக்
கன்ப னாய்,அடி யேஞ்சதிர்த் தேனின்றே. (5)

942:
இன்று தொட்டு மெழுமையு மெம்பிரான்,
நின்று தன்புக ழேத்த வருளினான்,
குன்ற மாடத் திருக்கு கூர்நம்பி,
என்று மென்னை யிகழ்விலன் காண்மினே. (6)

943:
கண்டு கொண்டென்னைக் காரிமா றப்பிரான்,
பண்டை வல்வினை பாற்றி யருளினான்,
எண்டி சையு மறிய இயம்புகேன்,
ஒண்ட மிழ்ச்சட கோப னருளையே. (7)

944:
அருள்கொண் டாடு மடியவ ரின்புற,
அருளி னானவ் வருமறை யின்பொருள்,
அருள்கொண் டாயிர மின்தமிழ் பாடினான்,
அருள்கண் டீரிவ் வுலகினில் மிக்கதே. (8)

945:
மிக்க வேதியர் வேதத்தி னுட்பொருள்
நிற்கப் பாடியென் நெஞ்சுள் நிறுத்தினான்,
தக்க சீர்ச்சட கோபனென் நம்பிக்கு,ஆட்
புக்க காத லடிமைப் பயனன்றே? (9)

946:
பயனன் றாகிலும் பாங்கல ராகிலும்
செயல்நன் றாகத் திருத்திப் பணிகொள்வான்,
குயில்நின் றார்ப்பொழில் சூழ்குரு கூர்நம்பி,
முயல்கின் றேனுன்றன் மொய்கழற் கன்பையே. (2) (10)

947:
அன்பன் தன்னை யடைந்தவர் கட்கெல்லாம்
அன்பன், தென்குரு கூர்நகர் நம்பிக்கு,
அன்ப னாய்மது ரகவி சொன்னசொல்
நம்பு வார்ப்பதி, வைகுந்தம் காண்மினே. (2) (11)

ஸ்ரீ மதுகவியாழ்வார் திருவடிகளே சரணம்