பொருளடக்கம் பக்கம் செல்க
குமரகுருபரர் அருளிய
மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்
காப்பு
விநாயக வணக்கம்
கார்கொண்ட கவுண்மதக் கடைவெள்ள முங்கட்
கடைக்கடைக் கனலு மெல்லை
கடவாது தடவுக் குழைச்செவி முகந்தெறி
கடைக்கா றிட்ட வெங்கோன்
போர்கொண்ட வெண்டோ ட்பொலன்குவடு பொதியும்வெண்
பொடிதுடி யடித்து வைத்துப்
புழுதியாட் டயராவொ ரயிராவ ணத்துலவு
பொற்களிற் றைத்து திப்பாந்
தார்கொண்ட மதிமுடி யொருத்தன் றிருக்கண்மலர்
சாத்தக் கிளர்ந்து பொங்கித்
தவழுமிள வெயிலுமழ நிலவுமள வளவலாற்
றண்ணென்று வெச்சென்று பொன்
வார்கொண்ட டணிந்தமுலை மலைவல்லி கர்ப்பூர
வல்லியபி ராம வல்லி
மாணிக்க வல்லிமர கதவல்லி யபிடேக
வல்லி சொற் றமிழ் தழையவே.
1-வது காப்புப் பருவம்
திருமால்
மணிகொண்ட நெடுநேமி வலயஞ் சுமந்தாற்று
மாகணச் சூட்டு மோட்டு
மால்களிறு பிடர்வைத்த வளரொளி விமானத்து
வாலுளை மடங்க றாங்கும்
அணிகொண்ட பீடிகையி னம்பொன்முடி முடிவைத்தே
மையனொடு வீற்றி ருக்கு
மங்கயற் கண்ணமுதை மங்கையர்க் கரசியையெ
மம்மனையை யினிது காக்க
கணிகொண்ட தண்டுழாய்க் காடலைத் தோடுதேங்
கழலுழிபாய்ந் தளறு செய்யக்
கழனிபடு நடவையிற் கமலத் தணங்கரசொர்
கையணை முகந்து செல்லப்
பணிகொண்ட துத்திப் படப்பாய்ச் சுருட்டுப்
பணைத்தோ ளெருத்த லைப்பப்
பழமறைகண் முறையிடப் பைந்தமிழ்ப் பின்சென்ற
பச்சைப் பசுங் கொண்டலே. (1)
பரமசிவன்
வேறு
சிகர வடவரை குனிய நிமிர்தரு
செருவி லொருபொரு வில்லெனக்கோட்டினர்
செடிகொள் பறிதலை யமண ரெதிரெதிர்
செலவொர் மதலைசொல் வையையிற் கூட்டினர்
திருவு மிமையவர் தருவு மரவொலி
செயவ லவர்கொள நல்குகைத் தீட்டினர்
சிறிய வென துபுன் மொழியும் வடிதமிழ்
தெரியு மவர்முது சொல்லெனச் சூட்டினர்
பகரு மிசைதிசை பரவ விருவர்கள்
பயிலு மியறெரி வெள்வளைத் தோட்டினர்
பசிய வறுகொடு வெளிய நிலவிரி
பவள வனமடர் பல்சடைக் காட்டினர்
பதும முதல்வனு மெழுத வரியதொர்
பனுவ லெழுதிய வைதிகப் பாட்டினர்
பரசு மிரசத சபையி னடமிடு
பரத பதயுக முள்ளம்வைத் தேத்துந்
தகரமொழுகிய குழலு நிலவுமிழ்
தரள நகையுமெ மையனைப் பார்த்தெதிர்
சருவி யமர்பொரு விழியு மறுகிடை
தளர வளர்வதொர் செவ்விமுற் றாக்கன
தனமு மனனுற வெழுதி யெழுதரு
தமது வடிவையு மெள்ளிமட் டூற்றிய
தவள மலர்வரு மிளமி னொடுசத
தளமின் வழிபடு தையலைத் தூத்திரை
மகர மெறிகட லமுதை யமுதுகு
மழலை பழகிய கிள்ளையைப் பேட்டன
மடவ நடைபயில் பிடியை விரைசெறி
வரைசெய் புயமிசை வையம் வைத்தாற்றிய
வழுதியுடைய கண் மணியொ டுலவு பெண்
மணியை யணிதிகழ் செல்வியைத் தேக்கமழ்
மதுர மொழுகிய தமிழி னியல்பயின்
மதுரை மரகத வல்லியைக் காக்கவே. (2)
சித்தி வினாயகர்
வேறு
கைத்தல மோடிரு கரடக் கரைத்திரை
கைக்குக டாமுடைக் கடலிற் குளித்தெமர்
சித்தம தாமொரு தறியிற் றுவக்குறு
சித்திவி நாயக னிசையைப் பழிச்சுதும்
புத்தமு தோவரு டழையத் தழைத்ததொர்
பொற்கோடி யோவென மதுரித் துவட்டெழு
முத்தமிழ் தேர்தரு மதுரைத் தலத்துறை
முத்தன மேவுபெ ணரசைப் புரக்கவே. (3)
முருகவேள்
வேறு
பகர மடுப்பக் கடாமெடுத் தூற்றுமொர்
பகடு நடத்திப் புலோமசைச் சூற்புயல்
பருகி யிடக்கற் பகாடவிப் பாற்பொலி
பரவை யிடைப் பற் பமாதெனத் தோற்றிய
குமரி யிருக்கக் கலாமயிற் கூத்தயர்
குளிர்புன மொய்த்திட் டசாரலிற் போய்ச்சிறு
குறவர் மகட்குச் சலாமிடற் கேக்கறு
குமரனை முத்துக்குமாரனைப் போற்றுதும்
இமிழ்திரை முற்றத் துமேருமத் தார்த்துமுள்
ளெயிறு நச்சுப் பணாடவித் தாப்பிசைத்
திறுக விறுக்கித் துழாய் முடித் தீர்த்தனொ
டெவரு மதித்துப் பராபவத் தீச்சுட
வமுதுசெய் வித்திட் டபோனகத் தாற்சுட
ரடரு மிருட்டுக் கிரீவமட் டாக்கிய
வழகிய சொக்கற் குமால்செயத் தோட்டிக
லமர்செய் கயற்கட் குமாரியைக் காக்கவே. (4)
நான்முகன்
வேறு
மேகப் பசுங்குழவி வாய்மடுத் துண்ணவும்
விட்புலம் விருந் தயரவும்
வெள்ளமுதம் வீசுங் கருந்திரைப் பைந்துகில்
விரித்துடுத் துத்தி விரியும்
நாகத்து மீச்சுடிகை நடுவட் கிடந்தமட
நங்கையைப் பெற்று மற்றந்
நாகணைத் துஞ்சுதன் றந்தைக்கு வந்துதவு
நளினக் குழந்தை காக்க
பாகத்து மரகதக் குன்றென்றொர் தமனியக்
குன்றொடு கிளைத்து நின்ற
பவளத் தடங்குன் றுளக்கண்ண தென்றப்
பரஞ்சுடர் முடிக்கு முடிமூன்
றாகத் தமைத்துப்பி னொருமுடித் தன்முடிவைத்
தணங்கரசு வீற்றி ருக்கும்
அபிடேக வல்லியை யளிக்குல முழக்குகுழ
லங்கயற் கண்ண முதையே. (5)
தேவேந்திரன்
வேறு
சுழியுங் கருங்கட் குண்டகழி
சுவற்றுஞ் சுடர்வேற் கிரிதிரித்த
தோன்றற் களித்துச் சுறவுயர்த்த
சொக்கப் பெருமான் செக்கர்முடி
பொழியுந் தரங்கக் கங்கைவிரைப்
புனல்கால் பாய்ச்சத் தழைந்துவிரி
புவனந் தனிபூத் தருள்பழுத்த
பொன்னங் கொடியைப் புரக்கவழிந்
திழியுந் துணர்க்கற் பகத்தினற
விதழ்த்தேன் குடித்துக் குமட்டியெதி
ரெடுக்கும் சிறைவண் டுவட்டுறவுண்
டிரைக்கக் கரைக்கு மதக்கலுழிக்
குழியுஞ் சிறுக ணேற்றுருமுக்
குரல்வெண் புயலுங் கரும்புயலுங்
குன்றங் குலைய வுகைத்தேறுங்
குலிசத் தடக்கை புத்தளே. (6)
திருமகள்
வேறு
வெஞ்சூட்டு நெட்டுடல் விரிக்கும் படப்பாயன்
மீமிசைத் துஞ்சு நீல
மேகத்தி னாகத்து விடுசுடர்ப் படலைமணி
மென்பர லுறுத்த நொந்து
பஞ்சூட்டு சீறடி பதைத்துமதன் வெங்கதிர்ப்
படுமிள வெயிற்கு டைந்தும்
பைந்துழாய்க் காடுவிரி தண்ணிழ லொதுந்குமொர்
பசுங்கொடியை யஞ்ச லிப்பா
மஞ்சூட் டகட்டுநெடு வான்முகடு துருவுமொரு
மறையோதி மஞ்ச லிக்க
மறிதிரைச் சிறைவிரியு மாயிர முகக்கடவுண்
மந்தாகி னிப்பெ யர்த்த
செஞ்சூட்டு வெள்ளோ திமங்குடி யிருக்கும்வளர்
செஞ்சடைக் கருமி டற்றுத்
தேவுக்கு முன்னின்ற தெய்வத்தை மும்முலைத்
திருவைப் புரக்க வென்றே. (7)
கலைமகள்
வெள்ளித் தகட்டுநெட் டேடவிழ்த் தின்னிசை
விரும்புஞ் சுரும்பர் பாட
விளைநறவு கக்கும் பொலன் பொகுட் டலர்கமல
வீட்டுக் கொழித் தெடுத்துத்
தெள்ளித் தெளிக்கும் தமிழ்கடலி னன்பினைந்
திணையென வெடுத்த விறைநூற்
றெள்ளமுது கூட்டுணுமொர் வெள்ளோதி மத்தினிரு
சீறடி முடிப்பம் வளர்பைங்
கிள்ளைக்கு மழலைப் பசுங்குதலை யொழுகுதீங்
கிளவியுங் களி மயிற்குக்
கிளரிளஞ் சாயலு நவ்விக்கு நோக்கும்விரி
கிஞ்சுகச் சூட்ட ரசனப்
பிள்ளைக்கு மடநடையு முடனொடு மகளிர்க்கொர்
பேதமையு முதவி முதிராப்
பிள்ளைமையின் வள்ளன்மை கொள்ளுமொரு பாண்டிப்
பிராட்டியைக் காக்க வென்றே. (8)
துர்க்கை
வடிபட்ட முக்குடுமி வடிவே றிரித்திட்டு
வளைகருங் கோட்டு மோட்டு
மகிடங் கவிழ்த்துக் கடாங்கவிழ்க் குஞ்சிறுகண்
மால்யானை வீங்க வாங்குந்
துடிபட்ட கொடிநுண் ணுசுப்பிற் குடைந்தெனச்
சுடுகடைக் கனலி தூண்டுஞ்
சுழல்கண் முடங்குளை மடங்கலை யுகைத்தேறு
சூரரிப் பிணவு காக்க
பிடிபட்ட மடநடைக் கேக்கற்ற கூந்தற்
பிடிக்குழாஞ் சுற்ற வொற்றைப்
பிறைமருப் புடையதொர் களிற்றினைப் பெற்றெந்தை
பிட்டுண்டு கட்டுண்டு நின்
றடிபட்ட திருமேனி குழையக் குழைத்திட்ட
வணிமணிக் கிம்பு ரிக்கோ
டாகத்த தாகக் கடம்பா டவிக்குள் விளை
யாடுமொர் மடப்பிடி யையே. (9)
சத்த மாதர்கள்
வேறு
கடகளி றுதவுக பாய்மிசைப் போர்த்தவள்
கவிகுவி துறுகலின் வாரியைத் தூர்த்தவள்
கடல்வயி றெரியவொள் வேலினைப் பார்த்தவள்
கடிகமழ் தருமலர் தார்முடிச் சேர்த்தவள்
இடியுக வடலரி யேறுகைத் தார்த்தவள்
எழுதரு முழுமறை நூலினிற் கூர்த்தவள்
எயிறுகொ டுழுதெழு பாரினைப் பேர்த்தவள்
எனுமிவ ரெழுவர்க டாண்முடிச் சூட்டுதும்
குடமொடு குடவியர் பாணிகைக் கோத்திடு
குரவையு மலதொர்ப ணாமுடிச் சூட்டருள்
குதிகொள நடமிடு பாடலுக் கேற்பவொர்
குழலிசை பழகளி பாடிடக் கேட்டுடை
மடலவிழ் துளபந றாவெடுத் தூற்றிட
மழகளி றெனவெழு கார்முகச் சூற்புயல்
வரவரு மிளையகு மாரியைக் கோட்டெயின்
மதுரையில் வளர்கவு மாரியைக் காக்கவே. (10)
முப்பத்து மூவர்
வேறு
அமரில் வெந்நிடும வுதியர் பின்னிடுமொ
ரபயர் முன்னிடுவ னத்தொக்க வோடவும்
அளவு மெம்முடைய திறையி தென்னமுடி
யரச ரெண்ணிலரொர் முற்றத்து வாடவும்
அகில மன்னரவர் திசையின் மன்னரிவ
ரமர ரென்னுமுரை திக்கெட்டு மூடவும்
அமுத வெண்மதியின் மரபை யுன்னியுனி
யலரி யண்ணல்முழு வெப்பத்து மூழ்கவும்
குமரி பொன்னிவையை பொருணை நன்னதிகள்
குதிகொள் விண்ணதியின் மிக்குக் குலாவவுங்
குவடு தென்மலையி னிகர தின்மைசுரர்
குடிகொள் பொன்மலைது தித்துப்ப ராவவுங்
குமரர் முன்னிருவ ரமர ரன்னையிவள்
குமரி யின்னமுமெ னச்சித்தர் பாடவுங்
குரவை விம்மவர மகளிர் மண்ணிலெழில்
குலவு கன்னியர்கள் கைக்கொக்க வாடவும்
கமலன் முன்னியிடு மரச வன்னமெழு
கடலி லன்னமுட னட்புக்கை கூடவுங்
கரிய செம்மலொடு மிளைய செம்மல்விடு
கருடன் மஞ்சையொடொர் கட்சிக்கு ளூடவுங்
கடவி விண்ணரசு நடவும் வெம்முனைய
களிறு கைம்மலைசெல் கொப்பத்து வீழவுங்
கனக மன்னுதட நளினி துன்னியிரு
கமல மின்னுமொரு பற்பத்துண் மேவவும்
இமய மென்னமனு முறைகொ டென்னருமெ
மிறையை நன்மருகெ னப்பெற்று வாழவும்
எவர்கொல் பண்ணவர்க ளெவர்கொன் மண்ணவர்க
ளெதுகொல் பொன்னுலகெ னத்தட்டு மாறவும்
எழில்செய் தென்மதுரை தழைய மும்முலையொ
டெழுமெ னம்மனை வனப்புக்கொர் காவலர்
இருவ ரெண்மர்பதி னொருவர் பன்னிருவ
ரெனும் விண்ணவர்கண் முப்பத்து மூவரே. (11)
காப்புப் பருவம் முற்றிற்று
2-வது செங்கீரைப் பருவம்
நீராட்டி யாட்டுபொற் சுண்ணந் திமிர்ந்தள்ளி
நெற்றியிற் றொட்டிட்ட வெண்
ணீற்றினொடு புண்டரக் கீற்றுக்கு மேற்றிடவொர்
நித்திலச் சுட்டி சாத்தித்
தாராட்டு சூழியக் கொண்டையு முடித்துத்
தலைப்பணி திருத்தி முத்தின்
றண்ணொளி ததும்புங் குதம்பையொடு காதுக்கொர்
தமனியக் கொப்பு மிட்டுப்
பாராட்டு பாண்டிப் பெருந்தேவி திருமுலைப்
பாலமுத மூட்டி யொருநின்
பானாறு குமுதங் கனிந்தூறு தேறல்தன்
பட்டாடை மடிந னைப்பச்
சீராட்டி வைத்துமுத் தாடும் பசுங்கிள்ளை
செங்கீரை யாடி யருளே
தென்னற்கு மம்பொன்மலை மன்னற்கு மொருசெல்வி
செங்கீரை யாடி யருளே. (1)
உண்ணிலா வுவகைப் பெருங்களி துளும்பநின்
றுன்றிருத் தாதை நின்னை
யொருமுறை கரம்பொத்தி வருகென வழைத்திடுமு
னோடித் தவழ்ந்து சென்று
தண்ணுலா மழலைப் பசுங்குதலை யமுதினிய
தாய்வயிறு குளிர வூட்டித்
தடமார்ப நிறைகுங் குமச்சே றளைந்துபொற்
றாடோ ய் தடக்கை பற்றிப்
பண்ணுலா வடிதமிழ்ப் பைந்தாமம் விரியும்
பணைத்தோ ளெருத்தமேறிப்
பாசொளிய மரகதத் திருமேனி பச்சைப்
பசுங்கதிர் ததும்ப மணிவாய்த்
தெண்ணிலா விரிய நின்றாடும் பசுந்தோகை
செங்கீரை யாடி யருளே
தென்னற்கு மம்பொன்மலை மன்னற்கு மொருசெல்வி
செங்கீரை யாடி யருளே. (2)
சுற்றுநெடு நேமிச் சுவர்க்கிசைய வெட்டுச்
சுவர்க்கா னிறுத்தி மேருத்
தூணொன்று நடுநட்டு வெளிமுகடு மூடியிரு
சுடர் விளக்கிட்டு முற்ற
எற்றுபுன லிற்கழுவு புவனப் பழங்கல
மெடுத்தடுக் கிப்பு துக்கூ
ழின்னமுத முஞ்சமைத் தன்னை நீபன்முறை
யிழைத்திட வழித்த ழித்தோர்
முற்றவெளி யிற்றிரியு மத்தப் பெரும்பித்தன்
முன்னின்று தொந்தமிடவு
முனியாது வைகலு மெடுத்தடுக் கிப்பெரிய
மூதண்ட கூடமூடுஞ்
சிற்றில்விளை யாடுமொரு பச்சிளம் பெண்பிள்ளை
செங்கீரை யாடி யருளே
தென்னற்கு மம்பொன்மலை மன்னற்கு மொருசெல்வி
செங்கீரை யாடி யருளே. (3)
மங்குல்படு கந்தரச் சுந்தரக் கடவுட்கு
மழகதிர்க் கற்றை சுற்றும்
வாணயன மூன்றுங் குளிர்ந்தமுத கலைதலை
மடுப்பக் கடைக்க ணோக்கும்
பொங்குமதர் நோக்கிற் பிறந்தவா னந்தப்
புதுப்புணரி நீத்த மையன்
புந்தித் தடத்தினை நிரப்பவழி யடியர்பாற்
போகசா கரம டுப்ப
அங்கணொடு ஞாலத்து வித்தின்றி வித்திய
வனைத் துயிர்க ளுந்தளிர்ப்ப
வருண்மடை திறந்துகடை வெள்ளம் பெருக்கெடுத்
தலையெறிந் துகள வுகளுஞ்
செங்கயல் கிடக்குங் கருங்கட் பசுந்தோகை
செங்கீரை யாடி யருளே
தென்னற்கு மம்பொன்மலை மன்னற்கு மொருசெல்வி
செங்கீரை யாடி யருளே. (4)
பண்ணறா வரிமிடற் றறுகாண் மடுப்பப்
பசுந்தேற லாற லைக்கும்
பதுமபீ டிகையுமுது பழமறை விரிந்தொளி
பழுத்தசெந் நாவு மிமையாக்
கண்ணறா மரகதக் கற்றைக் கலாமஞ்ஞை
கண்முகி றதும்ப வேங்குங்
கார்வரையும் வெள்ளெனவொர் கன்னிமா டத்துவளர்
கற்பூர வல்லி கதிர்கால்
விண்ணறா மதிமுயற் கலைகிழிந் திழியமுத
வெள்ளருவி பாய வெடிபோய்
மீளுந் தகட்டகட் டிளவாளை மோதமுகை
விண்டொழுகு முண்ட கப்பூந்
தெண்ணறா வருவிபாய் மதுரைமர கதவல்லி
செங்கீரை யாடி யருளே
தென்னற்கு மம்பொன்மலை மன்னற்கு மொருசெல்வி
செங்கீரை யாடி யருளே. (5)
வேறு
முகமதி யூடெழு நகைநில வாட
முடிச்சூ ழியமாட
முரிபுரு வக்கொடி நுதலிடு சுட்டி
முரிப்பொ டசைந் தாட
இகல்விழி மகரமு மம்மக ரம்பொரு
மிருமக ரமுமாட
விடுநூ புரவடி பெயரக் கிண்கி
ணெனுங்கிண் கிணியாடத்
துகிலொடு சோர்தரு கொடிநுண் மருங்கு
றுவண்டு துவண்டாடத்
தொந்தி சரிந்திட வுந்தி கரந்தொளிர்
சூலுடை யாலிடைமற்
றகில சராசர நிகிலமொ டாடிட
வாடுக செங்கீரை
யவனி தழைந்திட மவுலி புனைந்தவ
ளாடுக செங்கீரை. (6)
தசைந்திடு கொங்கை யிரண்டல தெனவுரை
தருதிரு மார்பாடத்
தாய்வரு கென்பவர் பேதைமை கண்டு
ததும்புபு னகையாடப்
பசைந்திடு ஞால மலர்ந்தமை வெளிறியொர்
பச்சுடல் சொல்லவுமோர்
பைங்கொடி யொல்கவு மொல்கி நுடங்கிய
பண்டி சரிந்தாட
இசைந்திடு தேவை நினைந்தன வென்ன
விரங்கிடு மேகலையோ
டிடுகிடை யாட வியற்கை மணம்பொதி
யிதழ்வழி தேறலினோ
டசைந்தொசி கின்ற பசுங்கொடி யெனவினி
தாடுக செங்கீரை
யவனி தழைந்திட மவுலி புனைந்தவ
ளாடுக செங்கீரை. (7)
பரிமள மூறிய வுச்சியின் முச்சி
பதிந்தா டச்சுடர்பொற்
பட்டமு டன்சிறு சுட்டியும் வெயிலொடு
பனிவெண் ணிலவாடத்
திருநுதன் மீதெழு குறுவெயர் வாடத்
தெய்வம ணங்கமழுந்
திருமேனியின் முழு மரகத வொளியெண்